All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

‘அரக்கனே! என் அரசனே!!’ கதையை தொடர்ந்து கொடுக்க முடியாதபடி விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இந்த கதையை மே மாதத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். இப்போது வேறு ஒரு கதையுடன் வந்துவிட்டேன். இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல? எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான். ஆனால் என்னுடைய பாணியில் சற்று வித்தியாசமாய்!! நாளை முதல் நம் வழக்கமான நேரத்தில் சந்திக்கலாம். என்னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்,
ஶ்ரீகலா :)

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’


IMG_9397.jpeg
IMG_9396.jpeg
 

ஶ்ரீகலா

Administrator
அமேசான் கேடிபியில் ‘ராதைக்கேற்ற ராவணன்’ கதை நாளை மதியம் 1.30 முதல் ஞாயிறு மதியம் 1.29 வரை இலசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள் பிரெண்ட்ஸ். நன்றி 🙏

ராதைக்கேற்ற ராவணன் :
India Link :

US Link :

My Author Page in Amazon Kindle :

 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 1

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"

பூஜையறையில் அமர்ந்திருந்த உதயரேகா தனது இனிய குரலால் பெருமாளுக்குப் பள்ளியெழுச்சி பாடி கொண்டிருந்தாள். கண்ணாடியாலும், வண்ண வண்ண மின்விளக்குகளாலும் சொர்க்கலோகம் போல் ஒளிர்ந்த அந்தப் பணக்கார வீட்டுப் பூஜையறையில் கடவுளும் அநாதையாக மாறிப் போனார். வீட்டு உறுப்பினர்களால் கேட்பாரற்று கிடந்த கடவுளுக்கு மறுவாழ்வு இந்த உதயரேகா மூலம் தான் கிடைத்து இருக்கிறது. அவள் இந்த வீட்டிற்கு வேலைக்கு வந்து பத்து வருடங்களாகிறது. இந்தப் பத்து வருடங்களாகத் தான் கடவுளுக்குக் கூடச் சிறிது அன்பு கிடைக்கின்றது அவள் மூலமாக...

'கிணிங் கிணிங்' மணியோசையுடன் உதயரேகா கடவுளுக்குத் தீபாராதனையைக் காட்டினாள். பிறகு அவள் பூஜையை முடித்து விட்டு நெற்றியில் குங்குமம், திருநீறு இட்டவள் பூஜையறையை விட்டு வெளியில் வந்தாள். அவளின் பார்வை வட்டத்தில் வரவேற்பறையிலிருந்த அந்த ஒற்றைச் சோபா விழுந்தது. அதைக் கண்டதும் அவளது மேனி சிலிர்த்தது. இனிய நினைவில் சிலிர்க்கவில்லை. மாறாகப் பயத்தில் சிலிர்த்தது.

"காலையிலேயே ஆரம்பித்து விட்டாயா? எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. போய் எலுமிச்சை பழ ஜூஸ் எடுத்துட்டு வா." அந்த வீட்டின் எஜமானி மந்தாகினி அவளிடம் கூறிவிட்டு தனது தலையைப் பிடித்துக் கொண்டார். நேற்று அவர் கலந்து கொண்ட கேளிக்கை விருந்தில் அருந்திய மது அதன் வேலையைக் காட்டியிருந்தது.

மந்தாகினியின் குரலில் நன்னுணர்வு அடைந்த உதயரேகா அமைதியாகச் சமையலறை நோக்கி நடந்தாள். சிறிது நேரத்தில் அவள் அவர் சொன்னது போல் எலுமிச்சை பழச்சாறை தயார் செய்து கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குச் சென்றாள். அங்கு அவளது பாட்டி பட்டம்மாள் காலை உணவுக்குத் தேவையானதை தயார் செய்து கொண்டிருந்தார்.

"பாட்டி, நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல. நீங்க எதுக்குக் கஷ்டப்பட்டு வேலை பார்த்துக்கிட்டு இருக்கீங்க. நீங்க உட்காருங்க." என்றவள் அவரை வலுக்கட்டாயமாக அமர வைத்து விட்டு தனது வேலையைப் பார்க்கலானாள்.

பட்டம்மாள் தனது பேத்தியை பார்த்தபடி அமர்ந்திருந்தவரின் விழிகள் இரண்டும் பனித்தது. உதயரேகாவுக்கு இருபத்தியேழு வயதாகி விட்டது. இன்னமும் திருமணம் நடைபெறவில்லை. காலாகாலத்தில் பேத்தியை ஒருவன் கரங்களில் பிடித்துக் கொடுத்து விட்டால் அவர் நிம்மதியாக மரணத்தை ஏற்றுக் கொள்வார். ஆனால் பேத்திக்கு ஒரு வரனும் தகையாது தள்ளி கொண்டே போகிறது.

ஒவ்வொரு வரனும் ஏதாவது ஒரு குறையைக் கூறி அவளைத் தட்டி கழிக்கின்றனர். வரதட்சணை போதாது, பெண் மாநிறமாக இருக்கிறாள், பெண் படிக்கவில்லை, வயது அதிகம்... இப்படி ஏதாவது ஒரு குறையைக் கூறி அவளை நிராகரித்து விடுகின்றனர். உதயரேகா அதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை. ஆனால் பட்டமாளுக்குத் தான் மனம் பொறுக்கவில்லை. தனது இறுதி மூச்சு முடிவதற்குள் தனது பேத்திக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் துடியாய்த் துடிக்கின்றார்.

பட்டம்மாள் தனக்குள் உழன்று கொண்டிருக்கும் போதே உதயரேகா காலை உணவுகளைச் சமைத்து உணவு மேசையில் தயாராக எடுத்து வைத்து விட்டாள். பெரியவர்களுக்கு இட்லி, தோசை... இளம் வயதினருக்கு பூரி, சப்பாத்தி... குட்டீஸ்களுக்கு நூடில்ஸ்... எல்லா உணவு வகைகளும் அதற்குரிய வெஞ்சனங்களுடன் அமர்க்களமாகத் தயாராகி உணவு மேசையை அலங்கரித்தது. உதயரேகா உணவை எடுத்து வைத்த ஐந்தாவது நிமிடம் அனைத்து உறுப்பினர்களும் அங்கே கூடி விட்டனர்.

வீட்டின் தலைவர் தாமோதரன், அவரது மனைவி மந்தாகினி இருவரும் உணவு மேசையில் நடுநாயகமாக அமர்ந்திருக்க... அவர்களது வலப்பக்கம் அவர்களது மூத்த மகள் மஞ்சரி, அவளது கணவன் செல்வம், மகன் கரண் அமர்ந்து இருந்தனர். இடப்பக்கம் மூன்றாவது மகள் அமலா, அவளது கணவன் சந்துரு, மகள் ரக்சி அமர்ந்து இருந்தனர். இவர்களுக்கு எதிரே இவர்களுக்கு இடையில் இரண்டாவதாகப் பிறந்த மகன் ஆகாஷும், அவனது மனைவி வித்யாவும் அமர்ந்து இருந்தனர். இவர்களுக்கு இன்னமும் குழந்தை இல்லை. வித்யாவும் இவர்களைப் போன்றே வசதியான வீட்டுப் பெண். இவர்களைப் போன்றே மேல்தட்டுக் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுபவள், பிரதிபலிப்பவள்.

எல்லோரும் உணவினை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க... வித்யா மட்டும் நாசுக்காக ரொட்டி துண்டை எடுத்து அதில் ஜாமை தடவி கொண்டிருந்தாள். கேட்டால், டயட் என்பாள்.

"சர்வா எப்போ வருகிறான்?" மஞ்சரி அன்னையிடம் ஆர்வமாகக் கேட்டாள்.

"வர்றதா சொன்னான். ஆனால் எப்போன்னு தெரியலை." மந்தாகினி சொல்லி கொண்டே அருகில் நின்ற உதயரேகாவை கண்டு, "மசமசன்னு பராக்கு பார்த்துட்டு நிற்காதே. யார் தட்டில் என்ன குறையுதுன்னு பார்த்து பரிமாறு. அப்படியே எனக்குச் சாம்பாரை ஊத்து." என்று அதிகாரம் பண்ண... உதயரேகா சாம்பாரை கரண்டியில் எடுத்து அவரது தட்டில் ஊற்ற போக... அதைத் தடுத்தவர், "ஹேய், உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? வெறும் தட்டில் யாராவது சாம்பாரை ஊத்துவாங்களா? ஒரு தோசையை எடுத்து வையி." என்று சொல்ல... உதயரேகா அவர் சொன்னதைச் செய்தாள்.

"என்ன விசயம் மஞ்சரி?" என்று அவர் மகளிடம் கேட்க...

"என் நாத்தனார் நிலாவுக்குச் சர்வாவை கேட்கலாம்ன்னு என் மாமியார் பிரியப்படுறாங்க." மஞ்சரி தனது எண்ணத்தை மாமியாரின் எண்ணமாக மாற்றிக் கூற...

"ஆமா அத்தை... சர்வாவுக்கு நிலா தான் பொருத்தமாக இருப்பாள்." செல்வம் முந்தி கொண்டு சொன்னான்.

"ம்மா, சர்வாவுக்கு என்னோட நாத்தனார் கவிதாவை தான் முடிக்கணும். அப்போ தான் என் மாமியார் வீட்டில் எனக்கு மரியாதை இருக்கும்." அமலா அக்காவை போன்று சுற்றி வளைத்து கூறாது நேரிடையாகத் தனது எண்ணத்தை அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள்.

"அத்தை, என்னோட தங்கை ரஞ்சனி இப்போ தான் ஃபாரின்ல போய்ப் படிப்பு முடிச்சிட்டு வந்திருக்கிறாள். சர்வாவுக்கு ரஞ்சனி தான் பொருத்தமான ஜோடி." வித்யா தனது பங்கிற்குப் பேசினாள். ஒரே வீட்டில் அக்கா, தங்கை இருவரும் இருந்தால் சாம்ராஜ்ஜியம் மொத்தமும் அவர்களது கைகளுக்கு வந்துவிடும் அல்லவா! அந்த யோசனை அவளுக்கு...

"சர்வா கிட்ட பேசுவோம். அவனுக்கு யாரை பிடிக்கிறதுன்னு பார்க்கலாம். ஒருவேளை அவனுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால்... மற்றவர்கள் அமைதியாக ஒதுங்கி கொள்ள வேண்டும். என்ன ஓகேவா?" தாமோதரன் தனது மனதில் உள்ளதை சொன்னார். ஏனெனில் அவருக்குத் தனது மகனை பற்றி நன்கு தெரியும். அவன் காட்டாறு போன்றவன்... அவனைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது.

"ஓகேப்பா... நீங்க சொன்னதை ஏத்துக்கிறோம். எதுவாக இருந்தாலும் சர்வா முடிவுக்குக் கட்டுப்படுகிறோம்." என்றனர் எல்லோரும் ஒருமித்த குரலில்...

முதலில் ஆகாஷூம், வித்யாவும் உணவு உண்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் இருவரும் அகன்றதும் சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பிறகு இருவரும் ஒருமித்த குரலில் தங்களது பெற்றோரிடம்,

"சர்வாவுக்கு எங்க ரெண்டு பேருடைய நாத்தனார்களில் யாரையாவது ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும். மறந்தும் உங்க மருமக தங்கச்சியைச் சர்வாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிராதீங்க. அப்புறம் நாம இந்த வீட்டில் நமக்கான உரிமையை இழக்க வேண்டியது வரும். சொல்றதை சொல்லிட்டோம்." என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.

"ஏன்டி இப்படிச் சொல்றீங்க?" மந்தாகினி புரியாது பார்த்தார்.

"இப்பவே உங்க மருமக அலட்டல் தாங்க முடியலை. என்னமோ இது அவளோட ராஜ்ஜியம் மாதிரி அலட்டிக்கிறாள். இந்த லட்சணத்தில் அவளோட தங்கச்சியும் இங்கே மருமகளா வந்திட்டால்... அவ்வளவு தான். ரெண்டு பேரும் சேர்ந்து நம்மளை எல்லாம் மூலையில் உட்கார வச்சிருவாங்க." அமலா கடுப்புடன் சொன்னாள்.

"ஆமாம்மா, போன வாரம் ஆகாஷ் எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கிட்டு வந்தான். அவன் அதை எனக்குத் தான் வாங்கிட்டு வந்திருக்கிறான்னு தெரிஞ்சும்... வித்யா சாதூர்யமா பேசி அவளுக்கு எடுத்துக்கிட்டாள். நடிப்புன்னா நடிப்பு அப்படி ஒரு நடிப்பு. இந்தச் சாமர்த்தியம் எல்லாம் எனக்குக் கிடையாது. அப்படி இருந்திருந்தால் எனக்கு ஏன் இந்த நிலைமை?" மஞ்சரி தனது கணவன் செல்வத்தை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

"இப்போ என்னவாகி போச்சு செல்லம்?" செல்வம் மஞ்சரி தோளில் கையைப் போட்டு வழிய...

"என்னவாகலை? தனிக்குடித்தனம் போகலாம்ன்னு நான் சொல்லி எத்தனை வருசமாச்சு? அதுக்கான சின்ன முயற்சியாவது நீங்க எடுத்து இருக்கீங்களா? அப்போ எனக்குச் சாமர்த்தியம் பத்தலை தானே?" என்று மஞ்சரி எரிந்து விழுந்தாள்.
 

ஶ்ரீகலா

Administrator
"நீ உன் தம்பி பொண்டாட்டி மாதிரி இல்லை. நீ ரொம்ப நல்லவள் செல்லம்." செல்வம் அவளுக்கு ஐஸ் வைத்து பேச... மஞ்சரியின் முகம் மலர்ந்து போனது.

"நீங்க சொன்னால் சரி தான்." கணவனது பேச்சில் மஞ்சரி மயங்கியே விட்டாள்.

"ப்ச், இப்போ நாம பேசிக்கிட்டு இருக்கிற விசயத்துக்கு வருவோமா?" அமலா சிடுசிடுக்கவும்... இருவரும் அவளைத் திரும்பி பார்த்தனர்.

"அப்பா, உங்க முடிவு என்ன?" அமலா நேரிடையாகத் தந்தையைக் கண்டு கேட்க...

"நீங்க சொல்றதும் சரி தான். யோசிக்கிறேன்." தாமோதரன் கூற...

"ரொம்ப யோசிக்க வேண்டாம்ப்பா. நம்ம நல்லதுக்குத் தான் சொல்றேன்." மஞ்சரி சொல்லவும்... பெற்றோர் இருவரும் ஆமோதிப்பது போல் தலையசைத்தனர்.

அங்கே வித்யாவோ கணவனிடம் கறாராய் தனது கருத்தினைக் கூறிக் கொண்டு இருந்தாள்.

"பார்த்தீங்களா, உங்க அக்கா, தங்கச்சி சாமர்த்தியத்தை. இந்தச் சாமர்த்தியம் எல்லாம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது." வித்யா படபடவெனப் பொரிய... ஆகாஷ் எப்போதும் போல் வாயை மூடி கொண்டு மௌனமாக இருந்தான்.

இருவரும் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டனர். காதலிக்கும் போது பணம், படிப்பு, அந்தஸ்து மட்டுமே பெரிதாகத் தெரிந்தது ஆகாஷுக்கு... ஆனால் திருமணத்திற்கு இது எல்லாம் தேவையில்லை என்று இப்போது தான் புரிகிறது. இனி புரிந்து என்ன பயன்? தலையைக் கொடுத்தாயிற்று, சேதாரம் இல்லாது தப்பிக்க வேண்டும். மீதமுள்ள வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இப்படித்தான் ஆகாஷ் எண்ணம் இருந்தது.

"ஆகாஷ், என்னோட தங்கை தான் உங்க தம்பி மனைவியா வரணும். அதுக்கு என்ன பண்ண முடியுமோ அதை நீங்க பண்ணணும்." வித்யா கண்டிப்பான குரலில் கூற...

"இங்கே பார் வித்தி, சர்வா ஒண்ணும் சின்னப் பிள்ளை இல்லை. அவன் கல்யாணத்தை நாம முடிவு பண்ணுறதுக்கு. அவன் வாழ்க்கையை அவன் தான் முடிவு பண்ணுவான். நாம யாரும், அதாவது எங்க அப்பா, அம்மாவையும் சேர்த்து தான் சொல்றேன். யாரையும் அவன் வாழ்க்கையில் தலையிட விரும்ப மாட்டான். அதனால நாம டிஸ்டென்ஸ் மெயின்டையின் பண்றது நமக்கு நல்லது." ஆகாஷ் உறுதியான குரலில் மறுத்தான். அவனுக்குத் தான் தனது தம்பியை பற்றி நன்கு தெரியுமே.

"அதுக்குன்னு சர்வா கல்யாணமே பண்ணிக்காம இருக்கப் போறாரா?"

"நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பான் தான். ஒருவேளை அவன் யாரையாவது காதலித்தால்?" ஆகாஷ் கேள்வியோடு நிறுத்தினான்.

"அது எப்படி?" வித்யா வேகமாக ஏதோ சொல்ல வர... ஆகாஷ் கையமர்த்தி அதைத் தடுத்தவன்,

"நாமளும் லவ் மேரேஜ் தான் என்பதை அப்பப்போ மறந்து போயிர வித்தி." ஆகாஷ் அழுத்தி சொன்னான்.

"சர்வா காதலித்தால் காதலித்து விட்டு போகட்டும். ஆனால் அவரோட கல்யாணம் என் தங்கை கூடத் தான்." வித்யா சொன்னதைக் கேட்டு ஆகாஷுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். அவன் அறையில் இருக்கப் பிடிக்காது வெளியேறி விட்டான்.

வரவேற்பறை சோபாவில் கண்மூடி அமர்ந்து இருந்தான் ஆகாஷ். தலைவலி விண்விண்ணென்று வலித்து உயிர் போனது. இப்போது எல்லாம் அடிக்கடி தலைவலி வருகிறது. ஏனென்றும் அவனுக்குத் தெரியும். வெறுமையான வாழ்க்கை தான் அதற்குக் காரணம்.

"பை ஆகாஷ்." மனைவியின் குரலில் அவன் கண் திறந்தான். அதற்குள் அவன் மனைவி வாயிலுக்குச் சென்று இருந்தாள். கணவன் தலைவலியோடு அமர்ந்து இருக்கின்றானே... அவனுக்கு என்னவானது என்று கூடக் கேட்க நேரமில்லாது போனது அவனது மனைவிக்கு. அவனுள் விரக்தி எழுந்தது.

"சார் காபி." திடுமெனக் கேட்ட குரலில் ஆகாஷ் திரும்பி பார்த்தான். அங்குக் கையில் காபியோடு உதயரேகா நின்றிருந்தாள்.

"தேங்க்ஸ்..." என்றவன் காபியை வாங்கிக் கொண்டான்.

"சார், மாத்திரை கொண்டு வரவா?" என்றவளை அவன் கேள்வியாய் பார்த்தான்.

"உங்களுக்குத் தலைவலி..." அவள் இழுக்கும் போதே அவனுக்குப் புரிந்து விட்டது.

"மாத்திரை எல்லாம் தேவையில்லை. உன்னோட ஸ்ட்ராங் காபி போதும்." என்றவன் காபியை பருக தொடங்கினான். உதயரேகா அவன் காபி பருகும் வரை அங்கேயே இருந்து அதன் பிறகு காலி காபி கோப்பையை வாங்கிக் கொண்டு சென்றாள்.

பிறகு உதயரேகா உணவு மேசையில் இருந்த உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு வந்தாள். அங்குப் பட்டம்மாள் தரையில் அமர்ந்து மதிய சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை வெட்டி கொண்டிருந்தார்.

"முதல்ல சாப்பிடுங்க பாட்டி. பிறகு காய் வெட்டிக்கலாம்." என்ற உதயரேகா ஒரு தட்டில் இட்லிகளை எடுத்து வைத்து பாட்டிக்கு கொடுத்தாள்.

"நீயும் சாப்பிடு... வா." பட்டம்மாள் அவளை அழைத்ததும் அவளும் தனது உணவினை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

பெரிய மண்பானையிலிருந்த பழைய சோற்றில் வெறும் நீர், உப்பு போட்டு கரைத்து அதனோடு நார்த்தங்காய் ஊறுகாய் சிறிதும் வைத்திருந்தாள். உதயரேகா பசியில் அதை வேக வேகமாக உண்ண தொடங்கினாள்.

"இப்படிச் சோத்தை திங்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது ரேகாம்மா. உடம்பில் ஊளை சதை போடும்." என்ற பட்டம்மாள் பேத்தியின் பூசிய தேகத்தைக் கண்டு கடிந்தார்.

"பாட்டி, இவ்வளவு வேலைகளைச் செய்ய உடல்ல வலு வேண்டாமா? இத்துணுன்டு சாப்பிட்டால் நான் மயங்கி தான் விழணும்." என்றவள் பாட்டி பேச்சை கேட்காது தனது உணவினை உண்டாள்.

"நீ இப்படி இருந்தால் யார் உன்னைக் கல்யாணம் பண்ணுவாங்க?" பட்டம்மாள் பட்டென்று கேட்டு விட...

"எதுக்குக் கல்யாணம் பண்ணணும் பாட்டி? இப்படியே இருந்துட்டு போறேனே." உதயரேகா புன்னகையுடன் கூற... பட்டம்மாள் விழிகளில் கண்ணீர் திரண்டது. அதைப் பேத்திக்குத் தெரியாது துடைத்துக் கொண்டார்.

"உனக்கு மத்தவங்க மாதிரி புருசன் வேணும், குழந்தைங்க வேணும்ன்னு தோணலையா?"

"புருசன் எதுக்குப் பாட்டி? ஆனா குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்."

"புருசன் இல்லாம எப்படிடி குழந்தை வரும்? இந்தப் பெண்ணை வச்சிக்கிட்டு..." பட்டம்மாள் தலையில் அடித்துக் கொள்ள...

"உலகத்துல எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் இருக்காங்க பாட்டி. அதில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டால் போச்சு." உதயரேகா மிகப் பெரிய விசயத்தைச் சாதாரணமாகச் சொல்ல...

"அப்படியே அறைஞ்சேன்னா பாரு. இத்தனை வருசங்களா நாம அநாதையா இருக்கிறது போதாதா? ஒழுங்கா கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டுக் குடும்பம், குழந்தைன்னு வாழும் வழியைப் பாரு." பட்டம்மாள் கோபத்தோடு பேத்தியை திட்டினார்.

"அதுக்கு முதல்ல கல்யாணம்ன்னு ஒண்ணு நடக்கணும் பாட்டி." என்று சொன்ன உதயரேகா அசட்டையாகத் தோள்களைக் குலுக்கி கொண்டு சாப்பிட தொடங்கினாள். பாட்டி வருத்தத்துடன் பேத்தியை பார்த்து பெருமூச்சு விட்டார்.

காலை உணவு முடிந்ததும் உதயரேகா தேனீ போன்று சுறுசுறுப்பாய் மதிய சமையல் வேலையைப் பார்க்கலானாள். வீட்டினருக்குத் தனிச் சமையல், பணியாளர்களுக்குத் தனிச் சமையல் என்று இரு விதமாகச் சமையல் செய்ய வேண்டும். அதையும் அவள் சளைக்காது செய்தாள். உணவினை சமைத்து முடித்து, அதை அலுவலகம் சென்ற ஆண்களுக்கு அடுக்குப் பாத்திரத்தில் வைத்து கொடுத்து அனுப்பினாள். அதன் பின்னர் அவள் சமையலறையைச் சுத்தம் செய்து முடிக்கும் போது இரண்டு மணியாகி இருந்தது. அவள் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்க முடியாதபடி வீட்டில் இருந்தவர்கள் அப்போது உணவு உண்ண வந்து விட்டனர். அவர்களுக்குப் பரிமாறி அவர்கள் உண்டு முடித்த பிறகு பணியாளர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி விட்டு, அப்படியே பாட்டியையும் உண்ண சொன்னாள். பிறகு எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு வந்தவளுக்குப் பசி என்பதே மறந்து போயிருந்தது. ஒரு சொம்பு நிறையத் தண்ணீரை பிடித்துக் குடித்தாள்.

"ரேகாம்மா, நான் சொன்னதுக்காகவா சாப்பிடாம பட்டினி கிடக்க? தப்பு தான், வயசாகிட்டா புத்தி பேதலிச்சு போயிரும் போல. என்னைய மன்னிச்சிரும்மா." பட்டம்மாள் வருத்தத்துடன் சொல்ல...

"ஐயோ, பாட்டி... உண்மையா எனக்குப் பசிக்கலை." உதயரேகா சொன்னதும் பாட்டி அமைதியாகி விட்டார். அவளுக்குப் பொய் பேச வராது என்று அவருக்குத் தான் தெரியுமே.

உதயரேகாவின் வேலை இரவு வரை தொடர்ந்தது. இரவும் அதே போல் சமையல் முடித்து, உணவினை பரிமாறி, பாத்திரங்களைச் சுத்தம் செய்து என்று அவள் எல்லா வேலைகளையும் முடித்து உறங்க வரும் போது மணி பனிரெண்டை தாண்டி இருந்தது. அவள் பாட்டியின் அருகே பாயை விரித்துத் தானும் உறங்கலானாள். வேலைப்பளுவினால் எழுந்த உடல்வலியில் அவள் அடுத்த நொடி அயர்ந்து தூங்கி விட்டாள். அவள் நிம்மதியாக உறங்குவது அங்கே வெளிநாட்டில் இருந்தவனுக்குப் பிடிக்கவில்லையோ! சரியாக அதிகாலை இரண்டு மணிக்கு அவன் அவளை அலைப்பேசியில் அழைத்தான். உதயரேகா என்ன தான் அயர்ந்து உறங்கினாலும் அவளது அலைப்பேசி ஒலியில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அப்படி எழுவதற்குக் காரணம் அவன் மட்டுமே... அவனைத் தவிர வேறு யார் அவளுக்கு அழைக்கப் போகிறார்கள்! நொடி பொழுதில் அழைப்பை உயிர்ப்பித்தவள் திரையில் தெரிந்தவனைக் கண்டு அவன் பேசும் முன் விரைப்பாக,

"குட் நைட்... இல்லை இல்லை குட் ஈவினிங் பிரின்ஸ்..." என்று தூக்க கலக்கத்தில் உளறி கொட்டினாள்.

உதயரேகாவால் 'பிரின்ஸ்' என்றழைக்கப்பட்ட சர்வேஸ்வரன் அவளையே இமைக்காது பார்த்திருந்தான். உறக்க கலக்கத்தில் அமர்ந்து இருந்தவளின் புடவை மாராப்பு அபாயகரமாக விலகி இருந்தது. ஆணவன் அதைச் சிறிதும் கண்டு கொள்ளவில்லை. ஆணவனின் பார்வை முழுவதும் அவளது அழகிய வதனத்தில் மட்டுமே பதிந்து இருந்தது. அவனது பார்வையின் அர்த்தம் யாருக்குமே தெரியாது. அவனைத் தவிர...

தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 2

சர்வேஸ்வரன் தன்னையே உற்று பார்த்து கொண்டிருப்பதைக் கண்டு உதயரேகாவின் இதயம் பயத்தில் படபடவெனத் துடித்தது. 'என்ன தப்பு செஞ்சோம்ன்னு தெரியலையே? பிரின்ஸ் கோபமா பார்க்கிறாரே.' அவள் மனதிற்குள் தவித்தபடி அவனைப் பார்த்தாள். அவளது விழிகள் இரண்டும் அவளது தவிப்பினை அவனிடம் அப்பட்டமாய் எடுத்துரைத்தது. அது அவனுக்குப் புரிந்தாலும் அவன் பேசாது அவளையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"பிரின்ஸ், நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா? அப்படிப் பண்ணியிருந்தால் மன்னிச்சுக்கோங்க." அவன் சண்டையை ஆரம்பிக்கும் முன்னே அவள் சமாதான உடன்படிக்கைக்குத் தயாரானாள்.

"ஓஹோ, என்ன தப்பு பண்ணுனோம்ன்னு கூடப் பப்ளிமாசுக்கு தெரியலையா? அந்தளவுக்கு நீ நிறையத் தப்புப் பண்ணியிருக்க. அப்படித்தானே? நான் இல்லாத நேரம் அப்படி என்னென்ன தப்பு பண்ணினடி சொல்லு?" அவனது குரல் உயர்ந்தது.

"ஐயோ பிரின்ஸ், நான் எந்தத் தப்பும் செய்யலை." அவளது விழிகளில் கண்ணீர் துளிர்த்தது. யார் திட்டினாலும் கண்டு கொள்ளாது இருப்பவளுக்குச் சர்வேஸ்வரன் திட்டினால் மட்டும் முணுக்கென்று கண்ணீர் வந்துவிடும். அவனது கடுமையும் அப்படித்தான் இருக்கும்.

"நீ தப்பு பண்ணலையா? நீ பண்ணின தப்பை நான் சொல்லவா?" அவன் கேட்கவும் அவள் மௌனமாகத் தலையாட்டினாள்.

"முதல் தப்பு இப்போ குட்நைட்டும் இல்லை, குட்ஈவினிங்கும் இல்லை. இப்போ குட்மார்னிங்." அவன் சொல்லவும்... அவள் திரும்பி ஜன்னல் வெளியே தெரிந்த இருண்ட வானை பார்த்தவள் பின்பு மீண்டும் அவனைக் கண்டு,

"வெளிய இருட்டி இருக்கு. இன்னும் வெளிச்சம் வரலையே." அவள் தயக்கத்துடன் அப்பாவியாய் உரைக்க...

"மண்டு, மண்டு... பனிரெண்டு மணிக்கு மேல் மறுநாள் கணக்கு. இப்போ மணி இரண்டு. அப்போ இது மார்னிங் தான். என்ன புரிஞ்சதா? எங்கே குட்மார்னிங் சொல்லு."

"குட்மார்னிங் பிரின்ஸ்." வலக்கையை நெற்றியில் வைத்து காலை வணக்கம் சொன்ன அவளைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் பொங்கி வந்த சிரிப்பினை வாய்க்குள் வைத்து அடக்கி கொண்டான்.

"குட்..." என்று அவளை மெச்சியவன், "அடுத்தத் தப்பு..." அவன் ஆரம்பிக்கும் முன்,

'போச்சு, என்ன பண்ணினோம்ன்னு தெரியலையே.' அவளது மனதிற்குள் அலறியபடி வெளியில் அவனைப் பாவமாகப் பார்த்திருந்தாள்.

"நேத்து என்னோட பால்கனியில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணி ஊத்துனியா?" அவன் கேட்டதும் தான் அவளுக்குமே அது ஞாபகம் வந்தது. இங்கே நடக்கும் விசயம் அங்கே இருக்கும் அவனுக்கு எப்படித் தெரியும்? அவள் புரியாது குழம்பி போனாள்.

"பிரின்ஸ், நேத்து மழை பெஞ்சது. அதான் தண்ணி ஊத்தலை. இன்னைக்குத் தண்ணி ஊத்திர்றேன். மன்னிச்சுக்கோங்க." அவள் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க...

"முதல்ல தப்பு பண்ணாம இரு. அதுக்குப் பிறகு மன்னிப்பு கேளு." அவன் அதட்டலாய்ச் சொன்னதும் அவள் சரியென்று நாலாப்புறமும் தலையை ஆட்டினாள்.

அப்போது சர்வேஸ்வரன் முன்பு தீபாராதனை தட்டு நீட்டப்பட்டது. அவன் நிமிர்ந்து பார்க்க... அங்கே அவனது பாட்டி மீனம்மாள் நின்றிருந்தார். அவர் தட்டில் இருந்து திருநீறை எடுத்து பேரன் நெற்றியில் வைத்து விட்டவர், "போகிற காரியம் வெற்றிகரமா, நல்லபடியா முடியணும்." என்று பேரனை வாழ்த்தியவர், "கற்பூரத்தை தொட்டு கும்பிடு." என்க... அவனும் நல்ல பிள்ளையாய் அவர் சொன்னதைச் செய்தான்.

"யார் கிட்ட வம்பிழுத்துக்கிட்டு இருக்கச் சர்வா?" மீனம்மாள் பேரனிடம் கேட்டவர் அலைப்பேசி முன் எட்டிப்பார்த்தார். திரையில் தோன்றிய உதயரேகாவை கண்டதும் அவரது முகம் மலர்ந்தது.

"பெரியம்மா, எப்படி இருக்கீங்க?" உதயரேகா பெரியவரை கண்டதும் உற்சாகமாய்க் கேட்க...

"நான் நல்லாயிருக்கேன் ரேகா. பட்டு எப்படி இருக்கிறாள்?" மீனம்மாள் நலன் விசாரிக்க ஆரம்பித்தார். பட்டம்மாள் அவருக்கு ஒரு நல்ல தோழி. ஒரே ஊரும் கூட...

"ஆரம்பிச்சாச்சா மீனுக்குட்டி? ரொம்ப நல்லது... நான் கிளம்பி வர்றதுக்குள் பேசி முடிச்சிருக்கணும்." பேரன் பாட்டியை செல்லமாய் மிரட்டி விட்டுச் சென்றான்.

உதயரேகா சர்வேஸ்வரனை பயத்துடன் பார்ப்பதை கண்ட மீனம்மாள், "என்ன, சர்வா உன்னை மிரட்டினானா? அவன் கிடக்கிறான் விடு." என்று ஆறுதல் கூற... அதில் அவளது முகம் தெளிந்தது.

"அப்புறம் அங்கே வேறென்ன விசேசம்?" மீனம்மாள் பேச்சை ஆரம்பிக்க...

"எப்போதும் போலப் போகுது பெரியம்மா." என்று சொன்ன உதயரேகா எந்தவித தயக்கமுமின்றித் தனது பேச்சை தொடர்ந்தாள்.

"நீங்க எப்போ ஊருக்கு வர்றீங்க?" உதயரேகா கேட்க... மீனம்மாள் பதில் சொல்லும் முன் அலைப்பேசியைப் பாட்டியின் கையிலிருந்து பறித்த சர்வேஸ்வரன்,

"நாளை மறுநாள் அங்கே வர்றோம். நாங்க வர லேட் நைட் ஆகிவிடும்." என்று கூற... அடுத்து அவன் என்ன கூற வருவான்? என்று தெரிந்தவளாய்,

"எந்த ராத்திரியானாலும் நான் தூங்காம காத்திருப்பேன் பிரின்ஸ்." என்று அவள் முந்தி கொண்டு சொல்ல...

"காத்திருக்கணும்." அவன் அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

"யாரும்மா ஃபோனில்?" பேச்சுச் சத்தத்தில் உறக்கம் கலைந்த பட்டம்மாள் பேத்தியிடம் கேள்வி கேட்க...

"பெரியம்மாவும், பிரின்சும் பேசுனாங்க."

"நல்லாயிருக்காங்களா?"

"நல்லாயிருக்காங்க பாட்டி. நீங்க தூங்குங்க." என்ற உதயரேகா படுக்கையில் படுத்தாள்.

உணவு மேசையில் அமர்ந்திருந்த பேரன் தட்டில் தோசையை வைத்து சட்னி ஊற்றிய மீனம்மாள் அவன் அருகே அமர்ந்தார். பேரனை கண்டவருக்கு உள்ளுக்குள் பெருமிதம் பொங்கியது. ஆணழகன் தான் அவரது பேரன் சர்வேஸ்வரன். நான்கு பேரக்குழந்தைகளில் இவனிடத்தில் மட்டும் தனி அன்பு அவருக்கு... சிறு வயதிலிருந்தே அவன் அவருடன் ஒட்டி கொண்டு இருப்பதால் கூட இருக்கலாம். மற்ற மூவரும் மந்தாகினி சொல் பேச்சு கேட்டு நல்ல பிள்ளையாக நடப்பர். ஆனால் சர்வேஸ்வரன் மட்டும் யார் பேச்சையும் கேட்காது வால்த்தனம் செய்து அன்னையிடம் மாட்டி கொள்வான். அதனாலேயே மந்தாகினி அவனைச் சமாளிக்க முடியாது அவனை வளர்க்கும் பொறுப்பினை மாமியாரிடம் கொடுத்து விட்டார். அந்த விதத்தில் மந்தாகினி அவனுக்கு நல்லது தான் செய்து இருக்கிறார்.

இதோ வெளிநாடு வந்தும் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட போகும் போதும் நெற்றி நிறையத் திருநீறு இட்டுக் கொண்டு செல்லும் அவன் பாட்டியின் வளர்ப்பு என்பதைச் சொல்லாது சொல்கின்றான். அது மட்டுமா பேரக்குழந்தைகள் மூவரில் இவன் ஒருவனே புத்திசாலி, பேச்சுத் திறமை உள்ளவன். மீனம்மாளின் கணவர் சேர்த்த சொத்துகள் ஏழு தலைமுறைக்குப் போதும். ஆனாலும் அதை அழிந்து விடாது காப்பாற்ற வேண்டியது அடுத்தத் தலைமுறையின் கடமை அல்லவா.

சர்வேஸ்வரன் பதினெட்டு வயதில் இருந்தே தந்தையோடு இணைந்து தொழில் நிர்வாகத்தையும் நடத்தி வருகின்றான். அவன் படித்த பொறியியல் படிப்பு கூடச் சும்மா பேருக்கு தான். யாரும் அவனைப் படிக்கவில்லை என்று கூறிவிடக் கூடாதே என்பதற்காக... ஆகாஷ் படித்து முடித்து இருபத்தியைந்து வயதில் தொழிலுக்கு வந்த போது சர்வேஸ்வரன் அண்ணனுக்குத் தொழிலில் மூத்தவனாக, ஆசானாக இருந்தான். அதனால் தான் என்னவோ தொழிலும் சரி, வீட்டிலும் சரி சர்வேஸ்வரன் வைத்தது தான் சட்டம். இதோ இன்று வரை அது தொடர்கிறது.

"மீனுக்குட்டி, கண்ணு வைக்காதே. எனக்கு வயிறு வலிக்கும்." சர்வேஸ்வரன் கடைசித் தோசை துண்டை வாயில் வைத்தபடி கூற...

"ஆமா, ஆமா... நான் கண்ணு வச்சு தான் உனக்கு வயிறு வலிக்கப் போகுதா?" என்று நொடித்துக் கொண்ட மீனம்மாள், "எதுக்குடா ரேகாவை மிரட்டிக்கிட்டே இருக்க? அதுவும் இப்படி அர்த்த ராத்திரியில் எழுப்பி..." என்று பேரனை கடிய...

"ராத்திரி இல்லை... விடியற்காலை." பேரன் பாட்டியை திருத்தினான்.

"என்னைய என்ன ரேகான்னு நினைச்சியா? நீ என்ன சொன்னாலும் தலையை ஆட்டுறதுக்கு?" அவர் சொன்னதைக் கேட்டு அவனது உதடுகளில் புன்னகை அரும்பியது.

"சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா வெயிட் போட்டு இருக்கிறாள் பப்ளிமாஸ். கொஞ்சம் வேலை செய்யட்டும். அப்படியாவது உடம்பு குறையுதான்னு பார்ப்போம்." அவன் வரவேற்பறை சோபாவில் வந்தமர்ந்து கொண்டு கையிலிருந்த கோப்பை புரட்ட துவங்கினான்.

"ரேகாவா வேலை செய்யாமல் சும்மா இருக்கிறாள்? வீட்டிலுள்ள அத்தனை வேலையும் அவள் ஒருத்தி தான் செய்கிறாள். அது அவளோட உடல்வாகுடா." உதயரேகாவை தாங்கி பேசியவர் பிறகு யோசித்தவராய், "நீ எதுவும் அவளை விரும்புறியா சர்வா?" என்று கேட்க...

"ச்சீ, ச்சீ என்ன நினைப்பு இது? போயும் போயும் வேலைக்காரி கூடப் போய் என்னை... உங்க புத்தி ஏன் இப்படிப் போகுது?" அவன் நொடி நேரம் கூடத் தாமதியாது பாட்டியை கடிய... அவனது வார்த்தைகள் கேட்டு பாட்டிக்கு தான் திகைப்பாய் இருந்தது.

"அப்போ நீ ஏன் அந்த மிரண்டாவுக்கு ஓகே சொல்லலை." பாட்டி அவனுக்குக் கிடுக்கிப்பிடி போட...

"அவள் பெயர் மிரண்டா இல்லை. மிலிண்டா..." பேரன் அவரது வார்த்தையைத் திருத்த...

"ஏதோ ஒண்ணு... நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு."

"அவளோட லவ் எல்லாம் டேட்டிங் போக மட்டும் தான் சரிவரும் மீனுக்குட்டி. கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த கிடையாது. அந்த மாதிரி லவ் எல்லாம் எனக்குச் செட்டாகாது." அவன் தோள்களைக் குலுக்கினான்.

"அப்போ லவ் பண்ணி கல்யாணம் பண்ண மாட்டியா?"

"தெரியலை மீனுக்குட்டி... எனக்குப் பிடிச்சவளை சந்திக்கும் போது மனசு மாறலாம்." என்றவன், "ஓகே மீனுக்குட்டி, எனக்கு டைம் ஆகுது. சீக்கிரம் அக்ரிமெண்ட்டில் சைன் போட்டுட்டு வந்திர்றேன். நாம ஷாப்பிங் போகலாம்." என்று கிளம்ப ஆயத்தமாக...

"நான் எதுக்குடா? நீ வேணா போயிட்டு வா."

"தாத்தா எங்களுக்காக ஓடி ஓடி உழைச்சு உங்களைக் கண்டுக்காம விட்டுட்டார். அந்த வருத்தம் இப்பவும் உங்களுக்கு இருக்குல்ல. அதான் அப்போ போகாத உலக நாடுகளுக்கு இப்போ உங்க பேரன் நான் உங்களைக் கூட்டிட்டு போறேன். நீங்க கட்டாயம் வந்தே ஆகணும் மீனுக்குட்டி." பேரன் பாட்டியின் கன்னத்தைத் தட்டி புன்னகைக்க...

"அடப்போடா, பொண்டாட்டி கூட ஹனிமூன் போறதை விட்டுட்டு... என் கூட ஊரை சுத்துறானாம்." அவர் அலுத்துக் கொள்ள...

"ஹனிக்கும் மூனுக்கும் இருக்கும் தொடர்பை விட... பாட்டிக்கும், நிலவுக்கும் இருக்கும் தொடர்பு தான் அதிகம். கிராண்ட்மாமூன் தான் பெஸ்ட்." என்றவன் அவரது நெற்றியில் விளையாட்டாய் முட்டி விட்டு கிளம்பி சென்று விட்டான்.

திருமணம் என்றால் காத தூரம் ஓடும் பேரனை கண்டு வருத்தம் இருந்தாலும் அவனது பண்பு, ஒழுக்கம் கண்டு அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்தக் காலத்தில் இளைஞர்கள் எப்படி எப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கும் போது... தனது பேரன் மனதாலும் ராமனே என்று அவருக்கு அத்தனை பெருமிதம்...

சர்வேஸ்வரன் வெற்றிகரமாக ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு முடித்தவன் சந்தோசமாக உணர்ந்தான். அவனுக்குத் தெரியும், அவனுக்குத் தான் வெற்றி என்று... அவனது மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. உடனே அவன் தனது அலைப்பேசியை எடுத்துச் சிசிடிவி கேமிராவை பார்க்கலானான். அதிலும் குறிப்பாக அவர்களது வீட்டினை. இப்போது இந்தியாவில் அதிகாலை நேரம். அந்தக் காலை நேரத்திலும் உதயரேகா பூஜையறையில் பூஜை செய்வது கேமிராவில் நன்கு தெரிந்தது. அப்படித் தெரிய வேண்டும் என்று தான் கோணம் பார்த்து கேமிரா மாட்டப்பட்டு இருந்ததோ!

உதயரேகா பூஜை செய்வது கண்டு அவனது உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. நிச்சயம் அவளது பிரார்த்தனையில் அவனது நலன் அடங்கி இருக்கும் என்று அவனுக்கு உறுதியாகத் தெரியும். பூஜையை முடித்த உதயரேகா நேரே சர்வேஸ்வரன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவன் உடனே அவனது அறை கேமிராவை காண வேண்டி அதை எடுத்துப் பார்த்தான். அவனது அறைக்குள் நுழைந்த உதயரேகா நேரே பால்கனி சென்று செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, அந்தப் பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவன் அவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான். அவள் திடீரென்று அங்கிருந்த ஏணியில் ஏறி கேமிரா பக்கம் வர... திடுமெனக் கேமிராவில் தோன்றிய அவளது முகத்தைக் கண்டு அவன் திகைத்து போனவனாய் தனது தலையைப் பின்னால் நகர்த்தினான். என்னமோ அவள் எதிரே நிற்பது போன்று ஒரு தோற்றம். அவளோ அது கேமிரா என்று அறியாது சுத்தம் செய்யத் துவங்கினாள். அவளது செய்கையில் அவனது புன்னகை விரிந்தது.

உதயரேகா மனித மனங்களைப் புரிந்து கொள்வதில் கில்லாடி. ஆனால் அவளுக்கு விஞ்ஞான அறிவு, வெளி உலக அறிவு என்பது சுத்தமாய்க் கிடையாது. பத்து வருடங்களாகச் செக்கு மாடு போல் வீட்டு வேலை செய்து கொண்டு நாலு சுவற்றுக்குள் இருப்பதாலோ என்னவோ... அவளது நிலை இப்படியாகி போனது. அது பற்றி அவள் சிறிதும் அலட்டி கொண்டது இல்லை.

உதயரேகா அறையை விட்டுச் சென்றதும் சர்வேஸ்வரன் ஏதேச்சையாக நேற்றையை நிகழ்வினை கேமிராவில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது குடும்பத்தினர் உணவு மேசையில் நடத்திய உரையாடல் அனைத்தையும் கேட்டு விட்டான். தனக்குப் போட்டி போட்டுக் கொண்டு பெண் தேடும் உடன்பிறப்புகளைக் கண்டு அவனது புன்னகை உறைந்து போனது. ஏனெனில் அவர்கள் பார்த்திருக்கும் பெண்கள் அப்படிப்பட்டவர்கள். ஒருத்தி ஒப்பனை பைத்தியம், ஒருத்தி கொணட்டி, ஒருத்தி அலட்டி... இதில் அவன் யாரை திருமணம் செய்தாலும் அவனது நிம்மதி போகப் போவது உறுதி. அவன் காவி கட்டி கொண்டு சந்நியாசம் போகப் போவதும் உறுதி. அவன் ஆயாசத்துடன் விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.

யாரின் மனதையும் நோகாது அவன் இதிலிருந்து வெளியில் வர வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்று அவன் யோசித்தான். அந்த நொடி அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. இங்கேயே இருந்தால் தேவையில்லாத யோசனைகள் எழும் என்று நினைத்தவன் வீட்டிற்குக் கிளம்பி சென்றான்.

**************************
 

ஶ்ரீகலா

Administrator
சர்வேஸ்வரன் நேற்று தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தான். அவன் சொன்னபடி உதயரேகா விழித்திருந்து பாட்டி, பேரன் இருவரையும் வரவேற்றாள். அதைக் கண்டு அவனுக்கு மிகுந்த திருப்தியே. அந்தத் திருப்தியோடு உறங்கியவன் காலையில் நேரத்தோடு எழுந்து விட்டான். அவன் உடற்பயிற்சி முடித்து, குளித்துத் தயாராகிக் கீழே வந்தான். அவனது எண்ணத்தைப் பொய்யாக்காது உதயரேகா பூஜையறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்த்தபடி அங்கிருந்த ஒற்றைச் சோபாவில் வந்தமர்ந்தான்.

அதேநேரம் அவளும் பூஜையை முடித்து விட்டுத் தீபாராதனை தட்டோடு திரும்பி வரவேற்பறையைப் பார்த்தாள். அவள் நினைத்தது போல் அவன் அங்குத் தான் அமர்ந்து இருந்தான். அலைப்பேசியைப் பார்த்து கொண்டிருந்தவனை நோக்கி அவள் மெல்லமாய் அன்னநடை நடந்து சென்றாள். எவ்வளவு தூரம் மெல்ல நடக்க முடியும்? அவன் முன் வந்து நின்றவள் அவன் முன்னே தீபாராதனை தட்டை நீட்டியபடி,

"பிரின்ஸ்..." என்றழைக்க...

"அதான் வேலையா இருக்கேன்னு தெரியுதுல்ல." அவன் எரிச்சலோடு கத்த...

"மன்னிச்சுக்கோங்க பிரின்ஸ்." என்று பயத்துடன் சொன்னவள் அவனது நெற்றியில் திருநீறை பூசிவிட்டு அடுத்த நொடி அங்கிருந்து ஓடி விட்டாள்.

குடும்பத்தினர் அனைவரும் இதைப் பார்த்தபடி இருந்தனர். அன்றாடம் நடக்கும் நிகழ்வு என்பதால் யாரும் இதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. பத்து வருடங்களாக நடக்கும் நிகழ்வு இது... முதலில் மந்தாகினி கூட மகனை சந்தேகமாகத் தான் பார்த்தார். ஆனால் மகன் உதயரேகாவை பணிப்பெண் என்றளவில் தள்ளி நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டு நிம்மதி கொண்டவராய் அவர் இப்போது எல்லாம் இதைக் கண்டு கொள்வது இல்லை.

மீனம்மாளுக்கு மட்டும் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்று அவர் அமைதி காத்தார். உதயரேகாவும் அவருக்குப் பேத்தி போன்றவள் தான். அவளது வாழ்வில் பேரன் மூலம் ஒரு நல்லது நடந்தால் முதலில் மகிழ்வது அவர் தான்.

மீனம்மாள் வந்து விட்டதால் உதயரேகாவுக்கு வேலைப்பளு குறைந்தது. ஆம், மீனம்மாள் எல்லோருக்கும் பொதுவாய் ஒரே உணவாகச் சமைக்கச் சொல்லி விடுவார். அவளுக்கு விதவிதமாய்ச் சமைக்கும் சிரமம் இல்லை. அதனால் அவளது வேலைகள் சீக்கிரமே முடிந்தது.

அன்று மாலை சர்வேஸ்வரன் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டான். எப்போதும் அவன் வந்ததும் காபி, சிற்றுண்டி எடுத்துக் கொண்டு வரும் உதயரேகாவை காணாது அவன் விழிகளைச் சுருக்கினான். அவன் சிறிது நேரம் வரவேற்பறையில் அமர்ந்து காத்திருந்து பார்த்தான். அவள் வரவில்லை. அவளைப் பற்றி யாரிடம் கேட்க பிடிக்காது அவன் கோபத்தோடு தனது அறையை நோக்கி சென்றான். நேரே பால்கனிக்கு வந்தவன் அங்கிருந்து அவுட்ஹவுசை பார்த்தான். அதில் தான் அவள் தங்கி இருக்கிறாள்.

உதயரேகாவின் வீட்டின் முன் சில ஜோடி செருப்புகள் கிடப்பதை கண்டு அவன் யோசனையாய் நின்றிருந்தான். சில நிமிடங்களில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்தனர். நடுத்தர வயதில் ஆண், பெண் என்று இருவர், இளைஞன் ஒருவன் மற்றும் கல்லூரி படிக்கும் வயதில் ஒரு இளம்பெண் என நால்வரும் முகம் மலர சந்தோசமாய் விடைபெற்று சென்றனர். அவர்களைத் தொடர்ந்து மீனம்மாள் வெளியில் வந்தார். என்ன விசயம்? என்று அவனுக்கு ஓரளவிற்குப் பிடிபட்டது. எப்படியும் மீனம்மாள் வந்து அவனிடம் விசயத்தைக் கூறத்தான் போகின்றார். அப்போது என்னவென்று உறுதியாகி விடும் என்று நினைத்தவன் அப்படியே நின்றிருந்தான். எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ!

"பிரின்ஸ்..." என்றழைப்பில் அவன் வேகமாகத் திரும்பி பார்த்தான். அவன் நினைத்தது போல் உதயரேகா தான் நின்று கொண்டிருந்தாள். சாதாரணப் புடவை தான். ஆனால் அவள் எப்போதும் உடுத்தும் புடவை போல் இல்லாது இது நல்லதாய் இருந்தது. மற்றபடி ஒப்பனை என்று பெரிதாக இல்லை. அவள் மிகவும் சாதாரணமாக இருந்தாள்.

சர்வேஸ்வரன் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தவளாய் அவள், "காபி..." என்று சொல்ல...

"நான் வந்து எவ்வளவு நேரமாகுது? இப்போ தான் உனக்குக் காபி கொடுக்கணும்ன்னு தோணுச்சா?" அவனது குரல் கடினத்துடன் வந்தது. அவன் காபி கோப்பையை வாங்காது கைகளைக் கட்டி கொண்டு நின்றிருந்தான்.

"இல்லை பிரின்ஸ்... அது வந்து..." அவள் என்னவென்று சொல்லுவாள்.

"என்ன வந்தது?" அவன் கூர்மையுடன் அவளைப் பார்த்தான்.

"பெண் பார்க்க வந்தாங்க." அவளது இருபதாவது வயதில் ஆரம்பித்த நிகழ்வு இன்று வரை தொடர்கிறது. அதனால் அதைப் பற்றி ஆணவனிடம் பேச அவளுக்கு மிகவும் சங்கடமாய் இருந்தது. அவளது சங்கடத்தை அவன் வெட்கம் என்று நினைத்துக் கொண்டான்.

"ஓ... பிடித்துக்கிறதாமா?" அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க...

"தெரியலை... வீட்டுக்கு போயிட்டு கலந்து பேசிட்டு முடிவை சொல்றதா சொல்லியிருக்காங்க." அவள் அவனை நிமிர்ந்து பாராது தலையைக் குனிந்து கொண்டு பதில் சொன்னாள். வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் தலைநிமிர்ந்து பேசும் அவளால் அவனிடம் மட்டும் அப்படிப் பேச முடிவதில்லை.

"உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா?" அவன் கேட்டதும் அவள் வெடுக்கென்று தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். இருவரது பார்வையும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டது.

"பிடிச்சிருக்கான்னு கேட்டேன்." அவன் மீண்டும் கேட்க...

"முடிவு தெரியறதுக்கு முன்னாடி நான் எந்த ஆசையையும் வளர்த்துக்கிறது இல்லை." அவளது பதிலில் அவனுள் பெருத்த நிம்மதி நிலவியது.

"பையன் என்ன பண்றான்?"

"உங்க கம்பெனியில் தான் வேலை பார்க்கிறாராம். பெரியம்மா தான் ஏற்பாடு பண்ணினாங்க." அவள் சொன்னது கேட்டு அவன் அந்த இளைஞனின் முகத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தான். அந்த இளைஞனை பார்த்தது போல் அவனுக்கு ஞாபகம் இல்லை.

'மீனுக்குட்டி, என் கிட்ட இருந்து மறைச்சிட்டீங்கல்ல.' அவன் பாட்டியை மனதிற்குள் கடிந்து கொண்டான்.

"என்ன வேலை பார்க்கிறான்?" சர்வேஸ்வரன் தாடையை வருடியபடி கேட்க...

"எலெக்ட்ரிசியனா இருக்காங்களாம்."

"ஓ..." என்றவன் மேலே எதுவும் பேசவில்லை.

"பிரின்ஸ், காபி..." அவள் மீண்டும் ஞாபகப்படுத்த...

"ஏற்கெனவே குடிச்சிட்டேன். வேண்டாம்." என்றவன் திரும்பி நின்று கொண்டான்.

உதயரேகா ஒன்றும் பேசாது சென்று விட்டாள். அந்த நேரம் அவள் அவனது முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். அத்தனை கோபம் அவனது முகத்தில்... அத்தனை ஆத்திரம் அவனது மனதில்...

"என்னை மீறி எவன் உன் கழுத்தில் தாலி கட்டுறான்னு நானும் பார்க்கிறேன்." அவன் ஆத்திரத்துடன் சொல்லி கொண்டான்.

ஆம், இத்தனை வருடங்களாக உதயரேகாவுக்கு வரும் வரன்களை எல்லாம் அவன் தான் கலைத்து விட்டுக் கொண்டிருக்கின்றான். அதுவும் யாரும் அறியாது. அவனது இருபத்திமூன்றாவது வயதில் ஆரம்பித்த வேலை இதோ அவனது முப்பதாவது வயதிலும் தொடர்கிறது. அவனுக்கு என்ன தான் வேண்டுமாம்? அவளைக் காதலிக்கின்றானா? என்று கேட்டால்... 'ச்சீய், வேலைக்காரி' என்று அருவருப்பான். பிறகு ஏன் இந்தக் கொலைவெறி???

'நீ காலம் முழுவதும் எனக்குச் சேவை செய்யும் அடிமைடி. இங்கு அடிமை விற்பனைக்கல்ல. சர்வ வல்லமை படைத்த சர்வேஸ்வரனுக்கு மட்டுமே.' சர்வேஸ்வரன் தனக்குள் உறுதியாய் சொல்லி கொண்டான்.

இரவோடு இரவாக அந்த வரனை கலைத்து விட்டான் சர்வேஸ்வரன். பணம் பத்தும் செய்யும் என்பதற்கு ஏற்றார் போன்று அவனது பணம் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தது. அதன் பிறகே அவன் நிம்மதியாய் உறங்கினான்.

மறுநாள் சர்வேஸ்வரனின் விடியல் உதயரேகாவின் அழகிய வதனத்தில் அழகாய் விடிந்தது. எப்போதும் போல் பூஜையை முடித்து விட்டு அவள் தீபாராதனை தட்டினை அவன் முன் நீட்ட...

"ஒவ்வொரு நாளும் சொல்லணுமா? பத்து வருசமா தினமும் சொல்றேன். உன் புத்திக்கு புரியலையா?" அவன் எப்போதும் போல் அவளிடம் காய்ந்தான்.

அவனது கோபத்தினைக் கண்டு பயந்து போனவளாய் அவள் அவன் சொன்னதைச் செய்தாள். தனது நெற்றியில் திருநீறு வைத்துவிட்டவளை கண்டவன்,

"நேத்து பார்த்துட்டு போனவன் உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டானாமே." என்று அவளது மனதினை ஆழம் பார்க்க கேட்டான்.

"ஆமா பிரின்ஸ்." என்றவளை உற்று நோக்கியபடி,

"அதில் உனக்கு ரொம்ப வருத்தமோ?" என்று அவன் நக்கலாய் கேட்டான்.

"இல்லை... தெரிந்த விசயம் தானே." என்று புன்னகையோடு கூறியவளின் வார்த்தையில் இருந்த மென்சோகம் அந்த அரக்கனுக்குப் புரியவில்லையோ!

"ஓ... வருத்தப்படாதே. அடுத்த வரன் நல்லபடியா அமையும்." என்று வெளியில் சொன்னவன், 'எத்தனை வரன் வந்தாலும் அத்தனையும் தடுப்பேன்.' என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான்.

"வருத்தம் எல்லாம் இல்லை. பழகி போயிருச்சு." என்றவளை கண்டு அவன் அமைதியாகக் காட்டி கொண்டான்.

"பிரின்ஸ், நான் ஒண்ணு சொன்னால் தப்பா நினைக்க மாட்டீங்களே." அவள் தயக்கத்துடன் அவனது முகத்தைப் பார்த்தாள்.

மற்ற நேரமாக இருந்திருந்தால், 'நீ என்ன சொல்றது? நான் என்ன கேட்பது?' என்று அவன் ஆங்காரமாய்க் கத்தி இருப்பான்.

"சொல்லு..." ஏனோ இன்று அவன் அமைதியாக அவளைக் கண்டு ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

"நீங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோங்க பிரின்ஸ். உங்க குழந்தைகளை நான் வளர்க்கிறதுக்கு நீங்க அனுமதி கொடுக்கணும். எனக்கு அது மட்டும் போதும். வாழ்க்கை முழுவதுக்கும்..." என்றவளை கண்டு அவன் பேச்சற்று அமர்ந்திருக்க... அவனது அமைதியை கண்டு அவள் வேறு மாதிரியாக எடுத்து கொண்டாள். அதிக்கப்படியாய் பேசிவிட்டோமோ என்று அவள் பயத்துடன் அங்கிருந்து நழுவினாள்.

சிறிது நேரம் பேச்சற்று அமர்ந்திருந்தவன் பிறகு சுதாரித்துக் கொண்டவனாய் தன்னிலை மீட்டுக் கொண்டான்.

'ம், இதுவும் நல்லா தான் இருக்கு. இதுக்காகவே சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கணும் போலையே!' அவனது உதடுகள் அலட்சியமாய்ப் புன்னகைத்துக் கொண்டது.

நன்மையை மட்டுமே நினைக்கும் அவள்... தீமையை மட்டுமே நினைக்கும் அவன்... இரண்டும் இரண்டு கரைகள். இணைவது என்பது சாத்தியமோ!

தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 3

"பட்டு, எதுக்கு இதெல்லாம்? முதல்ல எழுந்திரு." மீனம்மாள் தனது காலில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த பட்டம்மாளை கண்டு கடிந்து கொண்டார்.

மாலை மயங்கி இருள் கவிழும் வேளையில் இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர். மீனம்மாள் நாற்காலியில் அமர்ந்திருக்க... பட்டம்மாள் புல் தரையில் அமர்ந்து மீனம்மாளின் கால்களில் எண்ணெய் தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்.

"இதில் என்ன இருக்கு மீனாம்மா? உங்களுக்கு மூட்டு வலி இருக்குல்ல." என்றபடி பட்டம்மாள் தனது வேலையைத் தொடர்ந்து செய்தார்.

"ஏன் உனக்கு மட்டும் வயது திரும்புகிறதா? உனக்கும் தான் மூட்டு வலி, கால் வலின்னு எல்லாம் இருக்கு. அந்த எண்ணெயை இப்படிக் கொடு... நான் உனக்கு எண்ணெய் தேய்ச்சு விடறேன்." மீனம்மாள் எண்ணெய் கிண்ணத்தைப் பிடுங்க வர...

"நான் வேலைக்காரி... நீங்க முதலாளி. நீங்க இதை எல்லாம் செய்யக் கூடாது மீனாம்மா." பட்டம்மாள் எண்ணெய் கிண்ணத்தைத் தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டார்.

"எனக்கு நீ வேலைக்காரியா? நான் உன்னை அப்படித்தான் நடத்துகிறேனா?" மீனம்மாள் வருத்தத்துடன் கேட்க...

"ஐயோ, அப்படிச் சொன்னால் என் நாக்கு அழுகி போயிரும். நீங்க என்னையும், என் பேத்தியையும் ரொம்ப நல்லவிதமா பார்த்துக்கிறீங்க." பட்டம்மாள் சொன்னதும் மீனம்மாள் முகத்தில் கவலை படர்ந்தது.

"ரேகாவை நான் என்னோட சொந்த பேத்தியா தான் நினைக்கிறேன். நான் கண்ணை மூடுறதுக்குள்ள அவளுக்கு ஒரு நல்லது பண்ணணும்ன்னு நினைக்கிறேன். ஆனா நடக்க மாட்டேங்குதே." மீனம்மாள் சோகத்துடன் சொல்ல...

"அதான் மீனாம்மா எனக்கும் கவலையா இருக்கு. இந்தப் பொண்ணுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?" பட்டம்மாள் பேத்தியை நினைத்து கவலை கொண்டார்.

"நீ கவலைப்படாதே பட்டு. சிலருக்குத் தாமதக் கல்யாண யோகம் இருக்கலாம். ரேகா இப்போ இப்படிக் கஷ்டப்படுறதுக்குப் பின்னாடி அவள் ரொம்ப அமோகமா வாழ்வாள் பாரு. என் வார்த்தை பலிக்கும்." மீனம்மாள் சொன்னது கேட்டு பட்டம்மாள் மகிழ்ந்தார்.

"உங்க வார்த்தை பலித்தால் சந்தோசப்படுற முதல் ஆள் நான் தான்ம்மா."

"ஏன் நான் இல்லையா? அவள் எனக்கும் பேத்தி தான்." மீனம்மாள் போலி மிரட்டலாய் சொல்ல... பட்டம்மாள் வாய்விட்டு சிரித்தார்.

அப்போது சர்வேஸ்வரனின் கார் உள்ளே நுழைந்தது. இருவரும் பேச்சை நிறுத்தி விட்டுக் காரினை பார்த்திருந்தனர். சர்வேஸ்வரன் காரிலிருந்து இறங்கியவன் தோட்டத்தில் அமர்ந்திருந்த பாட்டியை கண்டதும் நேரே அவரை நோக்கி வந்தான். மீனம்மாளின் முகம் பேரனை கண்டதும் மலர்ந்தது.

"மீனுக்குட்டி, இங்கே என்ன பண்ணுற? உன்னோட பேவரைட் அழுகாச்சி காவியங்களைப் பார்க்கலையா?" சர்வேஸ்வரன் பாட்டியை கேலி செய்தபடி அவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"அந்தக் காவியங்களைப் பார்த்து பார்த்து கண்ணுல இருந்த கண்ணீர் எல்லாம் வத்தி போச்சு பேராண்டி. அதான் காத்தோட்டமா இங்கே வந்து உட்கார்ந்துட்டேன்." மீனம்மாள் அதே கேலி குரலில் பதில் அளித்தார்.

"உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? சரண்டர்..." அவன் இரு கரங்களையும் உயர்த்தியபடி சரணடைய... மூதாட்டி இருவரும் அதைக் கண்டு நகைத்தனர்.

"அப்புறம் பட்டு பாட்டி, ரொம்பப் பிசி போல... ஆளையே பார்க்க முடியறது இல்லை." அவன் பட்டம்மாளிடமும் பேச்சுக் கொடுத்தான்.

"பிசி எல்லாம் ஒண்ணும் இல்லை சின்னய்யா. ரேகா என்னைய வேலை பார்க்க விடாம முழு ஓய்வு கொடுத்துருச்சு. அதான் நான் அடுப்படியோடு ஒதுங்கிட்டேன்." பட்டம்மாள் பெருமையோடு சொன்னார். பேத்தியின் அன்பு கண்டு அவருக்கு அத்தனை பெருமிதம். அவன் அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டான்.

"நீ இரு சர்வா. உனக்குக் காபி எடுத்துட்டு வர்றேன்." மீனம்மாள் எழ போக...

"மீனாம்மா, நீங்க இருங்க. நான் போறேன்." என்ற பட்டம்மாள் எழுந்து நிற்க...

"ரெண்டு பேரும் உட்காருங்க. இப்போ காபி வரும்." அவன் உறுதியான குரலில் கூற...

"எப்படி?" இருவரும் அவனைப் பார்க்க...

"அப்படி..." அங்கே வீட்டினுள் இருந்து காபி, சிற்றுண்டி அடங்கிய தட்டை கையில் வைத்தபடி வந்து கொண்டிருந்த உதயரேகாவை அவன் கை காட்டினான்.

"அதானே பார்த்தேன். என்னடா இன்னமும் ரேகா வரலையேன்னு... உன் கார் சத்தம் மட்டும் அவளுக்குத் தனியே கேட்குது பாரேன்." மீனம்மாள் வியப்புடன் இருவரையும் பார்த்தார்.

"இத்தனை வருச வழக்கம் மீனாம்மா. அவளுக்கு மறந்து போகாது." பட்டம்மாள் புன்னகையுடன் பேத்தியை பார்த்தார்.

உதயரேகா காபி, சிற்றுண்டி அடங்கிய தட்டை சர்வேஸ்வரன் கையில் கொடுத்தாள். அவனும் அவளது முகத்தைப் பார்த்தபடி அதை வாங்கிக் கொண்டான். பட்டம்மாள் மீனம்மாளின் கால்களில் எண்ணெய் தேய்ப்பதை கண்ட உதயரேகா,

"நான் தேய்ச்சு விடுறேன் பாட்டி. நீங்க எழுந்திருங்க." என்று சொல்ல...

"பட்டுவையே வேண்டாம்ன்னு தான் சொல்றேன். ஆனா கேட்க மாட்டேங்கிறாள். இதில் நீயுமா? ஒண்ணும் வேண்டாம் ரேகா." மீனம்மாள் தடுத்து விட்டார்.

"இப்போ கால் வலி எப்படி இருக்கு பெரியம்மா? முன்ன மாதிரி இருக்கா?" உதயரேகா மீனம்மாளை கண்டு அக்கறையுடன் கேட்க...

"முன்ன மாதிரி வலி அதிகம் இல்லை. நீ வந்த பிறகு என்னோட வலி எல்லாம் குறைஞ்சிட்டு... என்னோட வலி மட்டுமா... இங்கே உள்ள கடவுளோட வலியும். என்னால மூட்டு வலியோட கீழே உட்கார்ந்து பூஜை பண்ண முடியலை. எனக்கு அடுத்து மருமக பண்ணுவாள்ன்னு பார்த்தேன். எங்கே?" மீனம்மாள் வருந்தி அமைதியாக... சர்வேஸ்வரனுக்குப் பாட்டி சொல்வதன் அர்த்தம் புரிந்தது.

"நீ வந்த பிறகு என்னோட கவலை தீர்ந்தது ரேகா." மீனம்மாள் தனது மனக்கவலையை ஒதுக்கி விட்டு புன்னகைத்தார்.

"சரி பெரியம்மா, நான் வர்றேன்." அவள் விடைபெற்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பெரியவர்கள் இருவரும் அவளைக் கண்டு பெருமூச்சு விட்டனர். மீனம்மாள் பேரன் காபி குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார். சர்வேஸ்வரன் தனது அறைக்குச் செல்ல எத்தனிக்கும் போது அவர் அவனை அமர சொன்னார்.

"என்ன விசயம் பாட்டி?"

"முதல்ல நீ ராஜாவை வேலையில் இருந்து நீக்கு." மீனம்மாள் உத்தரவு போல் சொன்னார்.

"சரி, நீக்கிவிடுறேன்... ஆனா அந்த ராஜா யாரு?" அவன் புரியாது வலக்கை ஆள்காட்டி விரலால் நெற்றியை நீவினான். உண்மையில் அவனுக்கு ராஜா யார் என்றே தெரியவில்லை.

"அந்தப் பரதேசி நம்ம பேக்டரியில் தான் எலெக்ட்ரிசியனா வேலை பார்க்கிறான்." மீனம்மாள் கோபத்தில் வெடித்தார்.

"நீங்க கோப்படுற அளவுக்கு அவன் என்ன செஞ்சான்?" இப்போதும் சர்வேஸ்வரனுக்கு எதுவும் புரியவில்லை.

"என்ன செஞ்சானா? என்ன செய்யலை? நேத்து நம்ம ரேகாவை பொண்ணு பார்த்துட்டு போனானே... அவனோட பெயர் தான் ராஜா." மீனம்மாள் கோபமாய்ப் படபடப்புடன் கூற... அப்போது தான் அவனுக்குமே நேற்று வந்தவனின் பெயர் தெரிந்தது. அவன் தான் தனக்குக் கீழே வேலை செய்யும் ஒருவனை வைத்துச் சத்தம் இல்லாது காரியத்தை நடத்தி விட்டானே!

"இந்த விசயத்தை நீங்க என் கிட்ட சொல்லவே இல்லையே." என்று அவன் ஒரு மாதிரி குரலில் வினவ...

"பொண்ணு தானே பார்க்க வந்தாங்க. எல்லாம் தகைஞ்சு வந்த பிறகு சொல்லலாம்ன்னு இருந்தேன்."

"சரி, அதுக்கு என்ன இப்போ?" அவன் அறியா பிள்ளை போல் கேட்டான்.

"அதுக்கு என்ன இப்போவா? அவங்க வீட்டுல நம்ம ரேகாவை பார்த்து ராசி இல்லாதவள்ன்னு சொல்லி அவளை வேண்டாம்ன்னு மறுத்து இருக்காங்க."

"ஓ..." அவன் மேலே பேசாது அமைதியாக இருந்தான்.

"முதல்ல அவனை வேலையை விட்டு தூக்கு சர்வா. அப்படிப்பட்டவன் நமக்குத் தேவை இல்லை."

"அவன் நம்மளோட எந்தப் பிரான்சில் வேலை பார்க்கின்றான்?" சர்வேஸ்வரன் ஒன்றும் தெரியாதது போல் கேட்டான்.

"அம்பத்தூர் பிரான்ச்சில்..." மீனம்மாள் வெறுப்புடன் சொன்னார். பட்டம்மாள் அமைதியாக நின்றிருந்தார். அவருக்கும் ராஜா மீது நிரம்ப வருத்தம் இருந்தது.

"இருங்க... என்னன்னு விசாரிக்கிறேன்." என்றவன் தனது அலைப்பேசியை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி சென்று பேசலானான். இல்லை இல்லை பேசுவது போல் நடித்தான்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, "அவங்க சொன்னது உண்மை தான் மீனுக்குட்டி. அந்த ராஜாவுக்கு ஆக்சிடென்ட்டாகி ஹாஸ்பிட்டலில் இருக்கிறானாம். அதுவும் நம்ம பேக்டரியில் வைத்து தான் இந்த விபத்து நடந்திருக்கு. அவன் பார்த்த எலெக்ட்ரிக் வேலையில் எதிர்பாராதவிதமா தீ பற்றி இருக்கிறது. அதில் இருந்து தெறித்த தீப்பொறி ராஜாவோட வலக்கண்ணில் விழுந்து இருக்கு. இப்போ அவனை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க. பார்வை தான் திரும்ப வருமான்னு தெரியலை." ஏற்ற இறக்கத்தோடு அவன் சொல்லி முடித்தான்.

"அச்சோ..." பெரியவர்கள் இருவரும் திகைத்து போயினர்.

"ராஜா வீட்டில் சொன்னதில் என்ன தப்பிருக்கு? ரேகாவும் இதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்ல." அவன் சொல்லி முடிக்கும் முன்,

"சர்வா..." மீனம்மாள் ஆட்சேபத்துடன் பேரனை பார்த்தார்.

"இப்படி எல்லாம் சொல்லாதீங்க சின்னய்யா. என் பேத்தி அப்படி எல்லாம் இல்லை. அவள் ரொம்ப நல்லவள். யாருக்கும் தீங்கு நினைக்காத வெகுளி பெண். நீங்க இன்னொரு தடவை இப்படிச் சொல்லாதீங்க." பட்டம்மாள் மிகவும் நொந்து போனார். அவரது பேச்சை கேட்டு அவன் அமைதியாக இருந்தான்.

பட்டம்மாள் அவன் முன் வந்தவர் அவனது கரங்களைப் பற்றிக் கொண்டு, "இதை உங்க காலா நினைச்சுக் கேட்கிறேன் சின்னய்யா. என் பேத்தி வாழ்க்கையை நல்லபடியா அமைச்சு கொடுங்க. நான் உங்களையும், மீனம்மாவையும் தான் மலை போல் நம்பியிருக்கிறேன். அநாதையான எங்களுக்கு நீங்க மட்டும் தான் சொந்தம்." பட்டம்மாளின் விழிகள் கலங்கி இருந்தது. மீனம்மாள் எழுந்து வந்து பட்டம்மாளை அணைத்துக் கொண்டார்.

"நல்லதே நடக்கும் பட்டு. நீ வா." மீனம்மாள் பட்டம்மாளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

சர்வேஸ்வரன் தனது கரத்தில் மீது படிந்திருந்த பட்டம்மாளின் கண்ணீர் துளியை கண்டு உடல் இறுக நின்றிருந்தான்.

இரவு உணவின் போது சர்வேஸ்வரனால் உதயரேகாவின் முகத்தை நிமிர்ந்து காண முடியவில்லை. இத்தனை வருடங்களாக அவன் செய்த காரியம் பட்டம்மாளின் கண்ணீரால் பாவமாக மாறிப் போனது போல் ஒரு எண்ணம் அவனுள்...

"பிரின்ஸ், இன்னும் ஒரு சப்பாத்தி வைக்கவா?" உதயரேகாவின் குரலில் அவன் மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்தான். என்றும் அவள் முகத்தில் இருக்கும் அதே வாடா புன்னகையுடன் அவள் அவனைப் பார்த்திருந்தாள். அந்தப் புன்னகையைக் கண்டதும் அவனது எண்ணம் எல்லாம் மாறிப் போனது. அந்தக் கணம் அவனது தவறும் சரியாகி போனது.

"ம், வை..." என்று சொன்னவனின் குரலில் உற்சாகம் திரும்பியிருந்தது. உதயரேகா அவனது தட்டில் சப்பாத்தியை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவனது பார்வை யாரும் அறியாது அவளையே தொடர்ந்தது.

எல்லோரும் உறங்க சென்ற பின்னர்ச் சர்வேஸ்வரன் தனது அறையில் இருந்து வெளியில் வந்தான். மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன் நேரே சமையலறைக்குச் சென்றான். அவன் நினைத்தது போல் உதயரேகா அங்கே தான் வேலை செய்து கொண்டிருந்தாள். இன்னமும் அவள் சாப்பிடவில்லை. சமையல் மேடையின் ஓரமாய் அவளுக்கான உணவு மூடப்பட்டு இருந்தது.

"பப்ளிமாஸ்..." அவன் மெதுவே அவளை அழைக்க...

"ஆங், பிரின்ஸ்..." அவள் பதட்டத்துடன் திரும்பி பார்த்தாள். இதுநாள் வரை அவன் இந்த நேரத்தில் இங்கு வந்தது இல்லை.

"என்ன பிரின்ஸ்? உடம்பு சரியில்லையா? குடிக்க வெந்நீ வேணுமா? ஏதாச்சும் மருந்து செஞ்சு தரணுமா?" அவள் அவனைக் கண்டு பதற்றத்துடன் கேட்க...

"அதெல்லாம் வேண்டாம். எனக்கு ஒண்ணும் இல்லை." அவன் சொன்னதும் தான் அவளது பதற்றம் தணிந்தது.

"சொல்லுங்க பிரின்ஸ்." என்றவள் தனது ஈரக்கைகளைப் புடவை முந்தானையில் துடைத்தாள்.

"இந்தா..." என்றவன் அவள் முன்னே ஒரு சாக்லேட் பெட்டியை நீட்டினான்.

"எதுக்கு?"

"ஃபாரின்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வந்தது. உனக்குக் கொடுக்கணும்ன்னு எடுத்து வச்சேன். கொடுக்க மறந்துட்டேன்." என்றவனைப் பார்த்தவள்,

"தேங்க்ஸ்..." என்றபடி சாக்லேட்டை வாங்கிக் கொண்டாள். பின்பு எதையோ நினைத்து முகம் சுருங்கியவளாய் அவள் சாக்லேட் பெட்டியை மீண்டும் அவனிடமே நீட்டினாள்.

"என்னவாச்சு?" அவன் புரியாது அவளைப் பார்த்தான்.

"எனக்கு வேண்டாம்."

"அதான் ஏன்னு கேட்கிறேன்?" அவன் குரலை உயர்த்திக் கடுமையுடன் கேட்க...

"இப்பவே பாட்டி குண்டா இருக்கேன்னு சொல்லி திட்டுறாங்க. இப்போ இந்தச் சாக்லேட்டை கொண்டு போய்ச் சாப்பிட்டால் இன்னும் திட்டுவாங்க. எனக்கு வேண்டாம்." அவள் சொன்னது கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.

"பாட்டி திட்டுவாங்கன்னு பாட்டிக்காக வேண்டாம்ன்னு சொல்ற, ஓகே... அப்போ உனக்காக வாங்கிட்டு வந்த எனக்காக நீ என்ன செய்யப் போற?" அவன் இரு கரங்களையும் கட்டி கொண்டு தனது புருவங்களை உயர்த்தியபடி அவளைக் கண்டு கேட்க...

"அதை மறந்துட்டேனே பிரின்ஸ். உங்களுக்காக இதை நானே வச்சுக்கிறேன். பாட்டி திட்டினால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுர்றேன்." புன்னகையோடு சொன்னவள் சாக்லேட் பெட்டியையும், தனது உணவினையும் எடுத்துக் கொண்டு அவனுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு தனது வீட்டினை நோக்கி சென்றாள்.

சர்வேஸ்வரன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவன் துள்ளலோடு மாடிப்படியேறி தனது அறைக்குச் சென்றான். அவளுக்குக் கசப்பும் அவன் தான். தித்திப்பும் அவன் தான்.

******************************
 

ஶ்ரீகலா

Administrator
அன்று ஞாயிறு என்பதால் சர்வேஸ்வரன் இன்னமும் படுக்கையில் தான் படுத்து இருந்தான். படுக்கையில் குப்புற படுத்துக் கொண்டு எழவா? வேண்டாமா? என்று ஒற்றையா? இரட்டையா? போட்டு கொண்டிருந்தவனின் காதுகளில் அறைக்கதவு மென்மையாகத் தட்டும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் அவனையும் அறியாது அவனது உதடுகளில் புன்னகை தோன்றியது.

"எஸ், கம்மின்..." அவனது கம்பீரமான குரல் உற்சாகத்துடன் ஒலித்தது.

அவன் அழைத்ததும் கதவு திறக்கும் ஒலி கேட்டது. அதனைத் தொடர்ந்து அவனுக்கு மட்டுமே கேட்கும் மென்பாதங்களின் ஒலி கேட்டது. அவனது பக்கவாட்டிற்கு வந்ததும் அந்த ஒலி நின்றது. அனைத்தையும் அவன் விழிகளைத் திறக்காது உணர்ந்து கொண்டிருந்தான்.

"குட்மார்னிங் பிரின்ஸ்." உதயரேகா குரலில் புன்னகையோடு எழுந்தமர்ந்தவன் பதிலுக்கு,

"குட்மார்னிங்..." என்று அழகாய் புன்னகைத்தபடி அவளது கரத்தில் இருந்த காபி கோப்பையை வாங்கிக் கொண்டான்.

"பிரின்ஸ், இன்னைக்கு உங்களுக்குப் பிடிச்ச சந்தகை பண்ணி இருக்கேன். சூடா இருக்கும் போதே சாப்பிட வாங்க." அவள் சொல்லவும்...

"ஏன் நான் சாப்பிட வரும் வேளையில் சூடா செஞ்சு பரிமாற மாட்டியா பப்ளிமாஸ்?" அவன் அதிகார குரலில் கேட்க...

இரண்டும் ஒன்று தானே? என்று அவள் புரியாது விழித்தாள். அவன் உண்ணும் நேரம் அவளுக்குத் தெரியாதா என்ன!

"என்ன சத்தத்தைக் காணோம்?"

"நீங்க வரும் போது சூடா செஞ்சு தர்றேன்." அதற்கு மேல் அங்கு நின்று தர்க்கம் செய்ய விரும்பாது அவள் அங்கிருந்து ஓடி விட்டாள். அவளது செய்கையில் தனக்குள் சிரித்துக் கொண்டவன் காபியை பருகலானான்.

உதயரேகா மாடிப்படியில் இருந்து இறங்கி வருவதைக் கண்ட மஞ்சரி, அமலா இருவரும் தங்களது அன்னையை நோக்கி விழிகளைக் காட்டினர். மந்தாகினி என்னவென்று புரியாது மகள்களைப் பார்த்தார்.

"உங்களுக்கு ஒண்ணுமே புரியாதும்மா. புரிஞ்சிருந்தா நீங்க இப்படி அமைதியா இருப்பீங்களா?" மஞ்சரி கச்சேரியை ஆரம்பித்து வைத்தாள். அதற்குள் உதயரேகா அவர்களைத் தாண்டி சமையலறைக்குச் சென்று விட்டாள்.

"புரிஞ்சாலும் புரியாத மாதிரி இருப்பாங்க." அமலா நொடித்துக் கொண்டாள்.

"ரெண்டு பேரும் புரியாத மாதிரி பேசுறதை முதல்ல நிறுத்துங்க. எதுவாக இருந்தாலும் நேரிடையா சொல்லுங்க." மந்தாகினி மகள்களைக் கண்டு சத்தம் போட்டார்.

"சரி நேரா விசயத்துக்கு வர்றேன். இந்த வேலைக்காரி என்ன சர்வாவோட பொண்டாட்டியா?" மஞ்சரி கோபத்தோடு கேட்டாள்.

"ஏய், என்னடி பேசிக்கிட்டு இருக்க?" மந்தாகினி பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்.

"அக்கா, பேசுறதில் என்ன தப்பு இருக்கு? அவள் சர்வா ரூமுக்குப் போறதும், கூத்தடிக்கிறதும் பார்க்கிறதுக்கு நல்லாவா இருக்கு? இதை எல்லாம் விடத் தினமும் காலையில் அவள் கையால் திருநீறு பூசிக்கிறதும்... எனக்கு என்னமோ சரியாப்படலை. பிறகு அப்பா போச்சு, அம்மா போச்சுன்னு அலறி எந்தப் பிரயோஜனமும் இல்லை." அமலா அன்னைக்கு விளக்கம் கொடுத்தாள்.

மந்தாகினி மகள்கள் சொன்னதைக் கேட்டுக் கலவரம் அடைந்தார். அவரது மனக்கண்ணில் ஆளை அசரடிக்கும் அழகில் கம்பீரமான ஆண்மகனான தனது மகனோடு, பூசணிக்காய் போன்று இருக்கும் உதயரேகாவின் சாதாரணத் தோற்றத்தினை ஒப்பிட்டு பார்த்தார். அந்த நினைவே அவருக்குக் கசந்தது.

"ரெண்டு பேரும் உங்க கற்பனையை நிப்பாட்டுங்க. சர்வா ஸ்டேட்டஸ் பார்க்கிறவன். அப்படி எல்லாம் வேலைக்காரியை வீட்டுக்காரியா நினைக்க மாட்டான். உங்க எல்லோரையும் விட என் மகனை பத்தி எனக்கு நல்லா தெரியும்." மந்தாகினிக்குக் கோபம் வந்துவிட்டது. பின்னே மகள்களாக இருந்தாலும் மகனை பற்றிக் குறை கூறினால் சும்மாயிருக்க முடியுமா?

"உங்களை மாதிரி தான் நாங்களும் நினைச்சோம். ஆனா நேத்து ராத்திரி அவன் தனியே போய் அவளுக்குச் சாக்லேட் கொடுத்துட்டு வர்றான். மனசுல ஒண்ணும் இல்லைன்னா... எல்லார் முன்னாடியும் கொடுத்து இருக்க வேண்டியது தானே." அமலா தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

"என்னடி இப்படிச் சொல்லுற?" மந்தாகினிக்கு உள்ளுக்குள் திகில் பரவியது.

"அவன் ஊருக்கு வந்து எத்தனை நாளாகுது. நீங்க சீக்கிரமே நிலா, கவிதா பத்தி அவன் கிட்ட சொல்லுங்க. இரண்டில் ஒரு முடிவு எடுக்கச் சொல்லுங்க. அதுவும் நல்ல முடிவா எடுக்கச் சொல்லுங்க." மஞ்சரி அன்னையை முடுக்கி விட...

"நீங்க ஏன் இன்னமும் சர்வா கல்யாணத்தைப் பத்தி அவன் கிட்ட பேசாம இருக்கீங்க?" அமலா வேறு தனது பங்கிற்குக் கேள்வி கேட்டு அன்னையை வதைத்தாள்.

"அவன் என்ன ஆகாஷா? நினைச்சதை நினைச்ச நேரம் போய்ப் பேசுறதுக்கு... சர்வா கிட்ட பார்த்து தான் பேசணும். எப்ப பாரு உங்க பாட்டி அவன் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கு. சர்வா இப்படி ஆளுமையோடு வருவான்னு நான் கனவிலும் நினைக்கலையே. இல்லைன்னா அவனை அந்தக் கிழவி கிட்ட வளர்க்க தள்ளியிருப்பேனா. நானே வளர்த்து இருக்க மாட்டேன். எல்லாம் என் தலையெழுத்து. இப்போ அவன் என் பேச்சை விட அந்தக் கிழவி பேச்சை தான் கேட்கிறான்." மந்தாகினி எரிச்சலுடன் அலுத்துக் கொண்டார்.

"கல்யாண விசயத்தில் சர்வா உங்க பேச்சை கேட்கிற மாதிரி பண்ண வேண்டியது உங்க சாமர்த்தியம்." மகள்கள் இருவரும் ஒரு சேர கூறிவிட்டு எழுந்து சென்று விட்டனர். மந்தகினி என்ன செய்வது என்று தெரியாது தலையில் கை வைத்துக் கொண்டார்.

சர்வேஸ்வரன் உண்ண வரும் போது அவனது மருமக்கமார் இருவரும் அவனோடு இணைந்து கொண்டனர். இன்று ஞாயிறு என்பதால் மாமன் கூட ஊரை சுற்றலாம் என்ற எண்ணத்தில் இரண்டு வாண்டுகளும் அவனைச் சுற்றி வந்தது.

"மாமா, மால் போகலாம்..." ரக்சி ஆசையோடு கேட்க...

"மாமா, சினிமா போகலாம்." கரண் தனது எண்ணத்தைக் கூற...

"மால் போயிட்டு, சினிமா போயிட்டு, ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வரலாம்." அவன் இருவரையும் சமாதானப்படுத்தினான்.

சர்வேஸ்வரன் உணவு மேசையில் வந்தமர்ந்ததும் உதயரேகா சூடாகச் சந்தகையைக் கொண்டு வந்து வைத்தாள். ஒரு கிண்ணத்தில் தேங்காய் பாலில் வெல்லம் கலந்த இனிப்புச் சந்தகை இருந்தது. மற்றொன்றில் தக்காளி சந்தகை இருந்தது. இரண்டுமே அவனுக்குப் பிடிக்கும். அவன் அதை ஆர்வத்துடன் உண்ண போனான்.

"ரேகா, அது என்ன சர்வாவுக்கு மட்டும் ஸ்பெசல் கவனிப்பு? எங்களுக்கு எல்லாம் இல்லையா?" மஞ்சரி உதயரேகாவை கண்டு குத்தலாகக் கேட்டாள். அன்னையை நம்பி பிரயோஜனம் இல்லை என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது போலும். அதனால் அவள் நேரிடையாகக் களத்தில் குதித்து விட்டாள்.

"அதானே, ஏம்மா ரேகா... எங்களைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரியுது?" அமலா அக்காவோடு சேர்ந்து கொண்டாள்.

தாமோதரன் மகள்களை முறைத்து பார்த்தார். சின்ன மகனை பற்றித் தான் அவருக்கு நன்கு தெரியுமே. மந்தாகினி கலவரத்துடன் சின்ன மகனை பார்த்தார். வித்யா நாத்தனார்களின் கேள்விகளை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தாள். ஆகாஷ் எரிச்சலுடன் உடன்பிறந்தவர்களைப் பார்த்தான். அவன் பேச போனால் பிரச்சினையாகும்.

"மஞ்சரி..." ஏதோ சொல்ல போன மீனம்மாளை கை நீட்டி தடுத்த சர்வேஸ்வரன் சகோதரிகள் இருவரையும் பார்த்து,

"உங்களுக்குப் பிடித்த பதார்த்தங்கள் தானே உங்க தட்டில் இருக்கிறது. அதே போல் எனக்குப் பிடித்தது என் தட்டில் இருக்கிறது. நீங்க ரெண்டு பேரும் இதில் என்ன விசேச கவனிப்பை கண்டீங்க?" என்று அவன் கண்டிப்புடன் கேட்க...

சகோதரிகள் இருவரும் பதில் கூற இயலாது விழித்தனர்.

"எனக்கு ஆஃப் பாயில் வேணும்." கரண் உதயரேகாவிடம் கூற...

"எனக்கு ஆரஞ்சு ஜூஸ்." ரக்சி தனக்கு வேண்டியதை சொன்னாள்.

"இதோ எடுத்துட்டு வர்றேன்." உதயரேகா அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

எல்லோரும் அமைதியாக உணவினை உண்டனர். சில நிமிடங்களில் உதயரேகா சின்னவர்கள் இருவருக்கும் வேண்டியதை கொண்டு வந்து கொடுத்தாள். கரண் தனது உணவினை அமைதியாக உண்ண... ரக்சி ஒரு வாய் பழச்சாறை குடித்தவள் தூவென்று துப்பினாள். எல்லோரும் அவளைப் புரியாது பார்க்க... அடுத்த நொடி ரக்சி அந்தப் பழச்சாறை உதயரேகா மீது ஊற்றி இருந்தாள்.

"ரக்சி..." அக்கா மகளின் இந்தச் செய்கையைக் கண்டு சர்வேஸ்வரன் கோபம் கொண்டு கத்தினான்.

"ரக்சி, முதல்ல ரேகா கிட்ட மன்னிப்பு கேளு. வேலை செய்றவங்களா இருந்தாலும் அவங்களை மரியாதையா நடத்தணும். ரேகா உன்னை விட வயதில் பெரியவளும் கூட... நீ இப்படித்தான் நடந்து கொள்வதா?" மீனம்மாள் கண்டிப்புடன் ரக்சியைப் பார்த்தார். மீனம்மாளை எதிர்த்து யாரும் பேச முடியுமோ! அனைவரும் அமைதி காத்தனர்.

"சாரி..." ரக்சி தலையைக் குனிந்து கொண்டு மன்னிப்பு கேட்டாள்.

"இருக்கட்டும் பெரியம்மா." உதயரேகா மீனம்மாளிடம் சொன்னவள் சின்னவள் புறம் திரும்பி, "ஏன் உங்களுக்கு ஜூஸ் பிடிக்கலை?" என்று தன்மையோடு கேட்டாள். சிறு குழந்தைகளின் செயல்களுக்கு அர்த்தம் கிடையாதே!

"எனக்குச் சுகர் பத்தலை." ரக்சி நிமிர்ந்து பாராது சொல்ல...

"அவ்வளவு தானே... சர்க்கரை அதிகம் போட்டு வேற ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்." என்றவள் உள்ளே செல்ல...

"வளர்ப்பு சரியில்லை." சர்வேஸ்வரன் சகோதரிகள் இருவரையும் பார்த்துக் கொண்டு வார்த்தைகளைக் கடித்துத் துப்ப...

"அது எப்படி நீ எங்களைச் சொல்லலாம்?" மஞ்சரி, அமலா இருவரும் அவனிடம் வரிந்து கட்டி கொண்டு சண்டைக்குச் செல்ல...

"ப்ச், பேசாம இருங்க." தாமோதரன் மகள்களை அடக்க முயன்றார்.

"நான் உங்களைச் சொல்லலை. அம்மாவை சொன்னேன்." சர்வேஸ்வரன் அன்னையை அழுத்தமாய்ப் பார்த்தபடி உரைத்தான். மந்தாகினி மகனது பேச்சில் திருதிருவென விழித்தார்.

"அம்மா, அவன் என்ன சொல்லுறான்னு பாருங்க." அமலா கத்த...

"பேசாம இரு அமலா. நாம பேச பேச... பதிலுக்கு அவனும் பேசுவான். அதுவும் வண்டை வண்டையா பச்சையா பேசுவான். தேவையா நமக்கு? சாப்பிட்டு முடிந்தால் இடத்தைக் காலி செய்." மந்தாகினி அடிக்குரலில் மகளை எச்சரித்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.

சர்வேஸ்வரனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் உண்ணாது கை விரல்களைத் தட்டில் அலைய விட்டுக் கொண்டிருந்தான்.

"சர்வா, யோசிக்காம சாப்பிடு." மீனம்மாள் குரலில் அவன் தன்னை மீட்டு கொண்டவன் உண்ண ஆரம்பித்தான்.

**************************

சகோதரிகள் மகன், மகளுடன் ஊரை சுற்றி விட்டு இரவு தான் சர்வேஸ்வரன் வீடு திரும்பினான். வீட்டில் யாரும் இல்லை. ஞாயிறு என்பதால் எல்லோரும் கேளிக்கை விருந்திற்குச் சென்றிருந்தனர். மீனம்மாள் மட்டுமே வீட்டில் இருந்தார். அவரோடு பட்டம்மாள், உதயரேகா இருவரும் கதை பேசி கொண்டிருந்தனர்.

"இவங்க ரெண்டு பேரையும் தூங்க வை." கரண், ரக்சியை உதயரேகா வசம் ஒப்படைத்தவன் பாட்டி அருகில் சென்று அமர்ந்தான்.

பட்டம்மாள் இருவரிடமும் விடைபெற்று சென்று விட்டார். உதயரேகாவும் சின்னவர்களை உறங்க வைத்து விட்டு தனது வீட்டிற்குச் சென்று விட்டாள். மீதம் இருந்தது பாட்டியும், பேரனும் தான்.

"நீங்க வேணா தூங்க போங்க மீனுக்குட்டி."

"மதியம் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதான் தூக்கம் வரலை." என்றவர் பேரனோடு பழைய கதைகளைப் பேசி கொண்டிருந்தார். அவனுக்கு இது போன்று கதைகள் கேட்க மிகவும் பிடிக்கும்.

எவ்வளவு நேரம் சென்றதோ! இருவரும் சுவாரசியமாகப் பேசி கொண்டிருந்தனர். அப்போது கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து எல்லோரும் இறங்கி உள்ளே வரும் சத்தமும் கேட்டது. இருவரும் வீட்டின் வாயிலை நோக்கினர். உள்ளே வந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே மது போதையில் இருப்பதை அவர்களது தள்ளாடிய நடையே காட்டி கொடுத்தது. மேல்தட்டு மக்களின் நவநாகரீக பகட்டு வாழ்க்கையின் விளைவு இது. அவர்கள் யாரும் இவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாது தங்களது அறைகளை நோக்கி சென்றனர்.

சர்வேஸ்வரன் வெறுப்புடன் அவர்களைப் பார்த்திருந்தான். மீனம்மாள் வேதனையுடன் இதனைப் பார்த்திருந்தார். கோவிலாக இருந்த வீடு பாராக மாறி போனதை நினைத்து அவருக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

"இதை எல்லாம் பார்த்த பிறகும் நீங்க என்னைக் கல்யாணம் பண்ண சொல்லி கேட்கிறீங்களே." சர்வேஸ்வரன் விரக்தியான குரலில் கேட்டான்.

"சர்வா, அது வந்து..." மீனம்மாள் என்னவென்று பதில் கூறுவார்.

"சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த அம்மாவே இப்படி இருக்கும் போது... ப்ச், யாரின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை."

"அதெல்லாம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாது உன்னை மாதிரி நல்லவங்களும் இருக்காங்க." மீனம்மாள் அவனுக்கு எடுத்து சொல்ல முற்பட...

'நான் நல்லவனா?' அவன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான். அதற்கு மேல் பாட்டியின் முகத்தினைக் காண அவனால் முடியவில்லை.

"குட்நைட் மீனுக்குட்டி." என்றவன் விறுவிறுவெனத் தனது அறையை நோக்கி நடந்தான்.

பேரனின் இன்னொரு முகம் தெரியாது மீனம்மாள் அவனுக்காக வருத்தப்பட்டார்.

தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 4

"பெரியம்மா..." உதயரேகாவின் குரலில் தனது நினைவுகளைக் கலைந்து திரும்பி பார்த்தார் மீனம்மாள்.

"என்ன ரேகா, எதுவும் மறந்துட்டு போயிட்டியா?" அவர் வாஞ்சையுடன் அவளைக் கண்டு கேட்க...

"ஆமா, பெரியம்மா... உங்களுக்குச் சுடுதண்ணி வைக்க மறந்துட்டேன்." என்றவள் தனது கரங்களில் இருந்த பிளாஸ்க்கினை கொண்டு போய் அவரது அறையில் வைக்கப் போனாள். அவளின் பின்னேயே அவரும் அறைக்குள் வந்தார்.

"படுங்க பெரியம்மா..." அவள் சொன்னது கேட்டு அவர் படுக்கையில் படுத்தார். அவள் அவருக்குப் போர்வையைப் போர்த்தி விட்டாள். பின்பு இரவு விளக்கினை ஒளிர செய்துவிட்டு அறைக்கதவை மூடி விட்டு வெளியில் வந்தாள்.

உதயரேகா தங்களது குடியிருப்புக்கு வந்த போது அவளது பாட்டி நன்கு உறக்கத்தில் இருந்தார். அவள் உறங்காது படுக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அங்கிருந்து பார்த்தால் சர்வேஸ்வரன் அறையின் பால்கனி தெரியும். அங்கே அவன் உறங்காது இருளை வெறித்தபடி நின்றிருந்தது தோட்டத்து விளக்கு ஒளியில் கோட்டுச் சித்திரம் போல் அழகாகத் தெரிந்தது. அவனைக் கண்டதும் அவளது விழிகள் கலங்கி போனது. அவன் மீனம்மாளிடம் பேசியதை அவள் கேட்டு விட்டாள். இப்படிப்பட்ட குடும்பத்தில் தப்பிப் பிறந்த அவனைக் கண்டு அவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது. எத்தனை பணம் இருந்தும் அவனுக்கு நிம்மதி இல்லையே.

அவளுக்கு அந்த வீட்டிலேயே அவனை மட்டும் தான் பிடிக்கும். மற்ற வீட்டு உறுப்பினர்கள் போன்று பந்தா காட்டாது அவன் அவளிடமும், பாட்டியிடமும் தன்மையாய் இருப்பான். முக்கியமாக அவர்களிடத்தில் பாகுபாடு பார்க்க மாட்டான். சந்தோசமோ, கோபமோ எதுவாக இருந்தாலும் அவன் மொத்தமாய் இறக்கி வைக்கும் ஒரே இடம் அவள் மட்டும் தான். அவன் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அவள் தாங்கி கொள்வாள். ஏனென்றால் அவனும் அவளும் ஒன்று தான்... இருவருக்குமே பாட்டி மட்டுமே உறவு. அன்பு செலுத்த அவர்களுக்கு வேறு யாரும் கிடையாது. மீனம்மாள் மட்டும் இல்லை என்றால் சர்வேஸ்வரன் எல்லாம் இருந்தும் அநாதை தான்.

உதயரேகாவுக்கு அவனை முதன்முதலில் சந்தித்த நினைவு வந்து இப்போதும் சிரிப்பு வந்தது.

அவள் இங்குப் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பிறகு அன்று தான் அவள் அவனை முதன்முதலில் பார்க்கிறாள். அவனோ அவளைக் கண்டு கொள்ளாது பரபரப்பாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். மீனம்மாள் வேறு பேரனிடம்,

"பரீட்சை நல்லா பண்ணுவ சர்வா. வா, வந்து சாப்பிடு." என்று அழைத்தார். அவர் சொன்னது கேட்டு அவனது பரபரப்பு பரீட்சைக்கானது என்று அவளுக்குத் தெரிந்தது.

"ரேகா, சர்வாவுக்குச் சாப்பாடு எடுத்து வை." என்று அவளுக்கு உத்தரவிட்ட மீனம்மாள் அங்கிருந்து சென்றுவிட...

உதயரேகா அவனுக்கு உணவு எடுத்து வைத்தாள். சர்வேஸ்வரன் அவளது முகத்தைக் கூடப் பார்க்காது உணவினை உண்டு கொண்டு இருந்தான். அவன் உண்டு முடித்துக் கையைக் கழுவி விட்டுச் செல்லும் போது அவள் அவனை நோக்கி,

"சர்வா, பரீட்சை நல்லா பண்ணு." என்றாள் புன்னகையுடன்... அதைக் கேட்டு அவனது முகம் இறுகி போனது. அவனுக்குப் பட்டம்மாளின் பேத்தி புதிதாய் வேலைக்கு வந்திருப்பது தெரியும். அத்தோடு அவளது வயதும் அவனுக்குத் தெரியும். அவனை விடச் சின்னவள், அதுவும் பணிப்பெண் தனது பெயரை சொல்லி கூப்பிடுவதா? என்று அவனுக்குக் கோபம் வந்தது.

"ஏய், என்னைய பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? பெயர் சொல்லி கூப்பிடுற?" அவன் அதிகாரமாய்க் கேட்க...

வாட்டச்சாட்டமாய் இருந்த உதயரேகாவின் தோற்றத்தின் முன் ஒல்லியாய் இருந்த அவன் இளையவனாகத் தான் காட்சி அளித்தான். அதனால் தான் அவள் அப்படி நினைத்து விட்டாள்.

"என்னை விடச் சின்னவங்கன்னு நினைச்சு..." அவள் இழுக்கும் போதே...

"சின்னவங்களா இருந்தாலும் நீங்க, வாங்கன்னு தான் சொல்லணும். நீ எங்க கிட்ட சம்பளம் வாங்கிற வேலைக்காரி." அவன் சுள்ளென்று சொல்ல... அவளது பூ முகம் வாடி போனது. அவள் சரியென்று தலையசைத்தபடி அங்கிருந்து செல்ல போக...

"நான் உன்னை விட மூணு வயசு பெரியவன். இனி இப்படி வா, போன்னு சொன்ன?" என்று மிரட்டியவன், "இனிமேல் நீ என்னைய பிரின்ஸ்ன்னு தான் கூப்பிடணும்." என்று உத்தரவு வேறு போட்டான் அந்த வீட்டின் இளவல்.

அன்றிலிருந்து சர்வேஸ்வரன் அவளுக்குப் பிரின்ஸ் தான். அப்போதிருந்து அவள் அவனுக்கு எல்லாமுமாகி போனாள். காலையில் எழுவதில் இருந்து இரவு உறங்க போகும் வரை அவன் வீட்டில் இருக்கும் சமயம் எல்லாம் அவள் தான் அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவளுக்குமே அவன் சொல்வதைக் கேட்டுச் செய்வது மிகவும் பிடித்து இருந்தது. காலையில் அவன் முகத்தில் விழித்து ஆரம்பிக்கும் அவளது நாள் இரவில் அவன் முகத்தைக் காண்பதோடு முடியும். ஒருநாள் அவனைக் காணவில்லை என்றாலும் அவளுக்கு அந்த நாள் ஓடுமா? என்பது சந்தேகமே. ஆனால் அப்படியான ஒரு நாள் கூட இதுவரை விடிந்தது இல்லை. அவளுக்கு விடியலே அவனது முகத்தில் தான். அந்தளவிற்கு அவனுக்கும், அவளுக்குமான பந்தம் இருந்தது.

அந்தப் பந்தம் காதல், நட்பு என்று குறுகிய வட்டத்திற்குள் வைக்க அவள் விரும்பவில்லை. அவன் மலை, அவள் மடு... அவன் உயரம் என்னவென்று அவளுக்குத் தெரியும். அவனுக்கும், அவளுக்குமான பிணைப்பு... கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் இருக்கும் அழகான பந்தத்தினைப் போன்றது. கடவுளை பக்தி கொண்டு ஆராதிக்க முடியும். தொட்டு ஸ்பரிசிக்க முடியாது. அது கூடவும் கூடாது. தவறும் கூட... அதில் அவள் தெளிவாக இருந்தாள்.

உதயரேகா தனது வாழ்க்கையைப் பற்றிக் கூடக் கவலை கொள்ளவில்லை. அவளது திருமணத்தைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் சர்வேஸ்வரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவன் மனைவியுடன் சந்தோசமாக வாழ வேண்டும். அவனது குழந்தைகளை எடுத்து தான் கொஞ்ச வேண்டும். அவன் குழந்தைகளை அவள் வளர்க்க வேண்டும். இது மட்டுமே அவளது நினைவாக இருந்தது. இதோ இப்போது அவன் தனது வாழ்க்கையை எண்ணி வருந்துவதைக் கண்டு அவளுக்குமே வருத்தமாக இருந்தது.

அவள் திரும்பி அவனது அறை பால்கனியை பார்க்க... அங்கே அவனைக் காணவில்லை. உறங்க சென்று இருப்பான் போலும். அதன் பின்னரே அவள் படுக்கையில் படுத்தாள்.

படுக்கையில் படுத்திருந்த சர்வேஸ்வரன் அம்மா, அக்காள்களின் மீது கடும் கோபத்தில் இருந்தான். இப்படி ஒரு கலாச்சாரச் சீரழிவை எங்கே இருந்து தான் கற்று கொண்டார்களோ! இந்த லட்சணத்தில் இவர்கள் பார்க்கும் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். விளங்கிவிடும்... அவன் கோபத்தோடு உறங்க முற்பட்டான். சிறிது நேரத்தில் அவன் அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.

'ச்சே, என்ன கண்றாவி கனவிது?' அவன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

ஆம், அவனது கனவில் உதயரேகா வந்து அவனது நெற்றியில் முத்தமிட்டு 'எல்லாம் சரியாகும்' என்று ஆறுதல் அளித்தாள். அதைக் கண்டு தான் அவன் அலறியடித்துக் கொண்டு எழுந்தது.

"ச்சே, போயும் போயும் அந்தப் பப்ளிமாஸ் தான் என் கனவில் வரணுமா? ஐயோ..." அவன் இரு கரங்களால் தலையைப் பிடித்துக் கொண்டான்.

அவனது தினசரி நாள் காலையில் அவளது முகத்தில் விழிப்பதில் இருந்து இரவில் அவளது முகத்தினைக் காண்பதோடு முடியும். அவனுக்கு அவள் எப்போதும் வேண்டும். அதற்கு அவன் எந்த விலையும் கொடுக்கத் தயங்க மாட்டான். அவளுக்கு வரும் வரனை கலைத்து விடுவது போல்... எது வேண்டுமென்றாலும் அவளுக்காகச் செய்வான். அதைத் தாண்டி அவன் அவளை நெருங்க விருப்பம் கொள்ளவில்லை. அவளின் இடம் அவனிடத்தில் எது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவள் விசயத்தில் மட்டும் அவன் சற்றுச் சுயநலவாதியாக இருந்தான்.

அன்பும், அக்கறையும் காதல் என்ற வட்டத்திற்குள் அடங்காது என்று அவளும்... சுயநலம் எல்லாம் காதல் என்ற வட்டத்தில் அடங்கவே அடங்காது என்று அவனும் உறுதியாய் நம்பினர். அவர்கள் இருவரும் தங்களது நிலையில் தெளிவாக இருந்தனர். அன்பும், அக்கறையும் காதலில் ஒரு பகுதி என்று அவள் அறியவில்லை. பெண் மீதான சுயநலம் தான் காதலில் முதன்மை நிலை என்பதை அவனும் அறியவில்லை.

***********************************

மறுநாள் எப்போதும் போல் உதயரேகா சர்வேஸ்வரனின் நெற்றியில் திருநீறை வைத்து விட்டு அவனையே பார்த்து இருந்தாள். எப்போதும் சென்று விடுபவள் இன்று தன்னையே பார்ப்பதை கண்டு அவன் கேள்வியாய் அவளைப் பார்த்தான்.

"எல்லாம் சரியாகும் பிரின்ஸ்." அவள் அவனைக் கண்டு சொல்ல... நேற்று கனவில் முத்தமிட்டு சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னவளை கண்டு அவனுக்குப் புரையேறியது. அவள் சட்டென்று அவனது தலையில் அடிக்க... அவன் அவளது கரத்தினைப் பற்றியபடி,

"எத்தனை நாள் ஆசை இது?" என்று அவளை உறுத்து விழித்துக் கேட்க...

"ஐயோ, அப்படி எல்லாம் இல்லை. புரையேறிச்சுன்னு தான்." அவள் பயத்தில் விழித்தாள்.

"போகுது போ... மன்னிச்சு விடுறேன்." என்றபடி அவளது கையை விடுவித்தவன், "என்ன எல்லாம் சரியாகும்?" என்று கேள்வி கேட்க...

"உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி அழகான பிரின்சஸ் வருவாங்க. நீங்க அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழ்வீங்க." அவள் கனவில் மிதந்தபடி கூற... அவன் அவளது பாவனையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"நேத்து நான் பேசியதை ஒட்டு கேட்டியா?" அவன் தன்னை மீட்டுக் கொண்டு கேட்க...

"அப்படி எல்லாம் இல்லை. பெரியம்மாவுக்குச் சுடுதண்ணி வைக்க மறந்து போயிட்டேன். அதான் திரும்ப வந்த போது தான்..."

"நீ எல்லாம் பேசும் அளவுக்கு என் நிலை இருக்கு." என்று எரிச்சலோடு சொன்னவன் எழுந்து தனது அறையை நோக்கி சென்றான்.

அவனது வார்த்தைகளில் வலி இருந்ததுவோ! அவள் திரும்பப் பூஜையறைக்குள் ஓடி சென்று அவனுக்காகக் கடவுளை வேண்ட ஆரம்பித்தாள். மாடிப்படி வளைவில் நின்று திரும்பி பார்த்தவன் அவள் பூஜையறையில் கண்மூடி வேண்டியபடி நின்றிருப்பதைக் கண்டான். அதைக் கண்டதும் அவனது முகத்தில் மகிழ்ச்சி நிலவியது.
 

ஶ்ரீகலா

Administrator
அங்கே அறைக்குள் தாமோதரன் தனது மகள்கள் இருவரையும் பிடித்துத் திட்டி கொண்டிருந்தார். கணவரின் கோபம் கண்டு மந்தாகினியால் ஒன்றும் பேச முடியவில்லை. மஞ்சரி, அமலா இருவரும் தங்களது கோபத்தை வெளிக்காட்ட முடியாது நின்றிருந்தனர்.

"நீங்க இங்கேயே இருந்தால் சர்வாவுக்கு அந்த வேலைக்காரி கூடக் கல்யாணத்தை நடத்தி வச்சிட்டு தான் போவீங்க. நீங்க ரெண்டு பேரும் முதல்ல உங்க வீட்டுக்கு கிளம்புங்க." என்று அவர் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார்.

"அப்பா..." அமலா ஏதோ சொல்ல வர...

"எதுவும் சொல்ல வேண்டாம். அவங்க ரெண்டு பேருக்கு இடையில் இப்போதைக்கு எதுவும் இல்லை." அவர் சொன்னதும் எல்லோரும் நிம்மதி அடைந்தனர்.

"ஆனா நீங்க ஒவ்வொரு விசயத்துக்கும் அவளைச் சர்வாவோடு சேர்த்து வச்சு பேசி, பேசி அவன் பார்வையை அவள் பக்கம் திரும்ப வச்சிருவீங்க. அதுக்குப் பிறகு யார் நினைச்சாலும் சர்வாவை தடுக்க முடியாது. அவனைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியும்ல. தெரிஞ்சிருந்தும் நீங்க ரெண்டு பேரும் பண்ணுறது சரியா?"

"அப்பா, சாரிப்பா..." இருவரும் மன்னிப்பு கேட்க...

"இப்போதைக்கு இந்தப் பேச்சு எதுவும் வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் உங்க புகுந்த வீட்டுக்கு கிளம்புங்க. நான் எப்படிப் பேசணுமோ அப்படிப் பேசி அவனை நம்ம வழிக்குக் கொண்டு வர்றேன். அதுவரைக்கும் யாரும் அவன் கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேச கூடாது." தாமோதரன் முடிவாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

"அம்மா, அப்பா சொல்றதை பார்த்தால் நாம நினைக்கிறது நடக்காது போலிருக்கு. எதுக்கும் நீங்க இந்த விசயத்தை அவன் காதில் போட்டு பாருங்க. இங்கே எப்போ என்ன நடக்கும்ன்னு தெரியலை." மகள்கள் இருவரும் அன்னையை உசுப்பேத்தி விட்டு சென்றனர்.

மந்தாகினி நேரே மகனது அறைக்குச் சென்றார். சர்வேஸ்வரன் நிறுவனத்திற்குக் கிளம்பி கொண்டிருந்தான். அன்னையைக் கண்டதும் 'வாங்க' என்றழைத்து புன்னகைக்காது, என்ன என்பது போல் அவன் பார்த்து வைத்தான். அதைக் கண்டு அவர் மனதிற்குள் நொந்து போனார். ஆனால் வெளியில் அதைக் காட்டி கொள்ளாது,

"சர்வா, உன் கல்யாண விசயமா பேச வந்தேன்." அவர் நேரே விசயத்திற்கு வர... அவனுக்குத் தான் விசயம் தெரியுமே! அதனால் அவன் அமைதியாக இருந்தான்.

"நம்ம மஞ்சரி, அமலா ரெண்டு பேரோட நாத்தனார்களை உனக்குப் பேசி முடிக்கலாம்ன்னு..."

"ஒரே நேரத்தில் ரெண்டு பேரை நான் கல்யாணம் பண்ணினால் என்னை ஜெயிலில் தூக்கி போட்டுருவாங்கம்மா." மகன் காலம் நேரம் தெரியாது காமெடி பண்ணினான்.

"ப்ச், அப்படிச் சொல்லலை. அவங்க ரெண்டு பேரில் யாரையாவது ஒருத்தரை..." மந்தாகினி தயக்கத்துடன் மகனை பார்த்தார்.

"சரி, மஞ்சரிக்கா நாத்தனாருக்கு நான் ஓகே சொல்றேன்னு வையிங்க." என்றவனைக் கண்டு அவரது முகம் மலர்ந்தது.

"இதோ இப்பவே மஞ்சரி கிட்ட சொல்லுறேன்." என்றவர் அலைப்பேசியை எடுக்க...

"இந்த விசயம் கேள்விப்பட்டு அமலாக்கா வீட்டில் கோச்சுக்க மாட்டாங்களா?" மகன் சொன்னதும் தான் அன்னைக்கு இந்த விசயம் உறைத்தது.

"இதே தான் அமலாக்கா நாத்தனாருக்கு ஓகே சொன்னாலும் நடக்கும். இவங்க ரெண்டு பேரில் யாரையாவது நான் கல்யாணம் பண்ணினால்... நிச்சயம் ஏதோ ஒரு அக்காவை நாம மறந்துவிட வேண்டியது தான். எனக்கு ரெண்டு அக்காவும் வேணும்." அவன் அழகாக நைச்சியமாகப் பேசினான்.

"நீ சொல்றது தான் சரி. அவங்க நாத்தனார் வேண்டாம். வித்தி தங்கை..." என்று மேலே பேச முயன்ற அன்னையைக் கையமர்த்தித் தடுத்தவன்,

"இன்னும் நிலைமை மோசமாகும். ரெண்டு அக்காவும் கோச்சுக்கிட்டு இங்கே வர மாட்டாங்க. இது தேவையா?" மகன் சொன்னது கேட்டு மந்தாகினி தலையில் கை வைத்தார்.

"நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லலை. ஆனா இந்த மூணு பொண்ணும் வேண்டாம். வேற நல்ல பொண்ணா பாருங்க. எனக்குச் சம்மதம்." மகன் சொன்னது கேட்டு அவர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து செல்ல முனைய...

"ஒரு நிமிசம்..." என்று அன்னையை நிறுத்தியவன், "பார்ட்டி, பஃப் போகாத... முக்கியமா சோசியல் ட்ரிக்ஸ்ங்கிற பெயரில் குடிச்சிட்டு சலம்புற குடிகாரியை பார்க்காதீங்க." என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொல்ல... அதைக் கேட்டு மந்தாகினியின் முகம் கருத்துப் போனது. அவர் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறி சென்று விட்டார். அவனோ தோள்களைக் குலுக்கியபடி கண்ணாடி முன் நின்று கொண்டு தலைவார ஆரம்பித்தான்.

"ரேகா, இங்கே வா..." ஆகாஷ் உதயரேகாவை அழைத்தான்.

"சொல்லுங்க சார்..." என்றபடி அங்கே வந்தாள் உதயரேகா.

"இவன் பெயர் பரணி. என்னோட கார் டிரைவரா ஜாயிண் பண்ணியிருக்கான். இவனுக்கு வேண்டிய சாப்பாடு, டீ, காபி எல்லாம் இனி நீ தான் நேரத்துக்குப் பார்த்து கொடுக்கணும். பார்த்துக்கோ." என்றுவிட்டு ஆகாஷ் சென்றுவிட...

"வாங்கண்ணா..." உதயரேகா பரணியை அழைத்தாள்.

"அழகான பெண் அண்ணான்னு சொன்னால் மனசு கேட்கலை. நீ என்னைப் பரணின்னே கூப்பிடு." பரணி குறும்பாய் சொல்ல...

"பெயர் சொல்லி கூப்பிட ஒரு மாதிரி இருக்கு. வேணும்ன்னா பரணி சார்ன்னு கூப்பிடவா?"

"அண்ணாக்கு இது பரவாயில்லை." என்ற பரணி சிரித்தான்.

இருவரும் பேசி கொண்டிருக்கும் போது சர்வேஸ்வரன் வீட்டினுள் இருந்து வெளியில் வந்தான். வந்தவன் விழிகளில் இருவரும் பேசி கொண்டிருப்பது விழுந்து விட்டது. அவன் உதயரேகாவை பார்த்தபடி நின்றிருக்க... அவனது பார்வையின் மொழி தெரிந்தவளாய் உதயரேகா அவனை நோக்கி வந்தவள்,

"இவர் பரணி சார். ஆகாஷ் சார்க்கு டிரைவரா வந்திருக்கார்." என்று விளக்கம் கொடுக்க...

சர்வேஸ்வரன் பதில் பேசாது இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விட்டான். உதயரேகா பரணிக்கு உணவு கொடுப்பதற்காக அவனை அழைத்துக் கொண்டு பின்கட்டிற்குச் சென்றாள்.

********************************

அன்று நிறுவனத்திற்குச் சென்ற சர்வேஸ்வரன் ஏதோ ஒரு வேலையாக மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அவன் வீடு இருக்கும் தெருமுனையில் அவனது கார் திரும்பிய போது தான் அவன் அந்தக் காட்சியைக் கண்டான். அந்தப் பகுதியில் இருந்த காலி மனையில் உதயரேகா, பரணி இருவரும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தெருநாய்களும், பூனைகளும் தரையில் இருந்த உணவினை உண்டு கொண்டிருந்தது. இருவரும் இணைந்து தான் உணவு கொடுத்திருப்பார்கள் போலும். உதயரேகா முகத்தில் இருந்த மகிழ்ச்சியே அவளுக்கு இந்தச் செயல் மிகவும் விருப்பமானது என்று தெரிந்தது. அவளைப் பற்றி அவன் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றதோ!

அவனது விழிகள் பரணி மீது படிந்தது. அவன் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகி இருக்குமா! அதற்குள் இருவரும் ஒன்றாக வெளியில் வரும் அளவிற்குப் பழக்கமா? அவனுக்குப் புசுபுசுவென்று கோபம் வந்தது. அவன் காரை நிறுத்திவிட்டு ஹார்னை ஓங்கி ஒலிக்கச் செய்தான். அவனது பார்வை முழுவதும் உதயரேகா மீது மட்டுமே. ஹார்ன் சத்தத்தில் திரும்பி பார்த்த உதயரேகா காரில் அமர்ந்திருந்த சர்வேஸ்வரனை கண்டு ஓடி வந்தாள்.

"பிரின்ஸ்..." அவள் பதட்டத்துடன் அவனது முகத்தைப் பார்த்தாள். பின்னே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் அவன் இருந்தால் பயம் வராது போகுமா!

"இங்கே என்ன பண்ணுற?"

"வீட்டில் மீதமான சாப்பாட்டை வீணாக்காம தெருநாய், பூனைகளுக்குக் கொடுப்பேன். அதான் இன்னைக்கும் வந்தேன்." அவள் விளக்கம் கொடுக்க...

"மீதமாகாம சமைக்கப் பழகு." அவன் அவளுக்கு வார்த்தையால் ஒரு கொட்டு வைக்க... அவள் சரியென்று தலையாட்டினாள்.

"அது சரி... அவன் எதுக்குத் துணைக்கா?" அவனது பார்வை பரணியை வெறித்தது.

"நான் கூப்பிடலை. அவரா தான் வந்தார். ஆகாஷ் சார் வீட்டில் இருப்பதால்... பரணி சார் எங்க கூட வந்தார்."

"வா, வந்து காரிலேறு." அவன் உறும...

"இல்லை பிரின்ஸ். நான் பரணி சாரோட நடந்து வர்றேன். இந்தா நாலு எட்டு எடுத்து வச்சா நம்ம வீடு வந்திருமே." என்று அவள் சொல்ல...

சர்வேஸ்வரன் கோபமாய் அவளை உறுத்து விழித்தவன் விருட்டென்று காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

"சார், ரொம்பக் கோபக்க்காரரா?" பரணி சர்வேஸ்வரனை கண்டு கேட்டான்.

"ச்சேச்சே, அப்படி எல்லாம் இல்லை. ரொம்பத் தங்கமான மனுசன்." அவள் சர்வேஸ்வரனை தாங்கி பேசினாள். இருவரும் இணைந்து வீட்டை நோக்கி நடந்தனர்.

"பார்த்தால் அப்படித் தெரியலையே. எப்போ பார்த்தாலும் உன் கிட்ட கோபமா தான் பேசுகிறார்." அவனும் இந்த ஒரு மாதமாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான்.

"அந்த வீட்டிலேயே அவர் தான் ரொம்ப நல்லவர்."

"எங்க ஆகாஷ் சாரை விடவா?"

"நிச்சயமாய்... ஆகாஷ் சார் என்ன தான் நம்ம கிட்ட நல்ல மாதிரியா பழகினாலும்... அவரோட காரில் எல்லாம் நம்மைச் சரி சமமா அழைச்சிக்கிட்டு போக மாட்டார்." என்றவளை இடைமறித்து,

"நான் போகலையா?" என்று பரணி கேட்டான்.

"நீங்க டிரைவர். அதைக் கணக்கில் சேர்க்க முடியாது. ஆனால் பிரின்ஸ் அப்படி இல்லை. இப்போ கூடப் பாருங்க... அவரோட கார் வெளிநாட்டுக் கார், அதுவும் கோடி ரூபாய் பெருமானம் உடையது. அதில் என்னை ஏற சொன்னார் பார்த்தீங்களா? அந்த மனசு யாருக்கும் வராது." அவள் சர்வேஸ்வரனை விட்டு கொடுக்காது பேசினாள்.

"ஆனாலும் நீ அவரைக் கண்டு ரொம்பத்தான் பயப்படுற."

"அதுக்குப் பெயர் பயம் இல்லை. பக்தி." என்று கூறி சிரித்தவளை பரணி இமைக்காது பார்த்தான். இந்த வெகுளி பெண்ணைப் பிடிக்காது இருந்தால் தான் ஆச்சிரியமே!

இருவரும் பேசி கொண்டே வீட்டு வாயிலினுள் நுழைந்தனர். காரை விட்டு இறங்கி இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த சர்வேஸ்வரன் விழிகளில் தவறாது இந்தக் காட்சி தென்பட்டது. அவனுள் கோபம் சுர்ரென்று ஏறியது. உதயரேகாவோ பரணியுடன் பேசியபடி சென்றவள் சர்வேஸ்வரனை கவனிக்கவில்லை. அதைக் கண்டு அவனது கோபம் உச்சத்தினைத் தொட்டது. அவன் கோபத்தோடு அருகில் இருந்த பூந்தொட்டினை காலால் எட்டி உதைத்தான். கராத்தே கற்று இருந்தவனின் கால் பலத்தின் முன் தொட்டி பலமிழந்து இரண்டாகப் பிளந்தது. அவன் தன்னை எட்டி உதைத்த ஆத்திரத்தில் தொட்டி அவனது வலக்கால் கட்டை விரலை நன்கு பதம் பார்த்து பழிவாங்கி விட்டது. அவனது வலக்கால் கட்டை விரலில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

தொட்டி உடைந்த சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பி பார்த்த உதயரேகா அங்குச் சர்வேஸ்வரன் காலில் இருந்து இரத்தம் வருவதைக் கண்டு பதறி போய் ஓடி வந்தாள். அவள் வருவதை அறிந்து கொண்ட அவன் வேண்டுமென்றே வலியில் ஆவெனக் கத்தினான்.

"ஐயோ, எவ்வளவு ரத்தம்! பார்த்து வர கூடாதா பிரின்ஸ்?" அவள் பதட்டத்துடன் கேட்டபடி அவன் காலருகே மண்டியிட்டு அமர்ந்தவள் தனது புடவை முந்தானையைக் கிழித்து அவனது கால் கட்டை விரலில் சுற்றி இறுக கட்டினாள்.

அவளது குனிந்த தலையைப் பார்த்து கொண்டவனின் விழிகள் இரண்டும் சாதித்து விட்ட சந்தோசத்தில் பளபளத்தது. அவனது முகத்தில் பெரும் திருப்தி நிலவியது.

தொடரும்...!!!
 
Status
Not open for further replies.
Top