அத்தியாயம் : 2
சர்வேஸ்வரன் தன்னையே உற்று பார்த்து கொண்டிருப்பதைக் கண்டு உதயரேகாவின் இதயம் பயத்தில் படபடவெனத் துடித்தது. 'என்ன தப்பு செஞ்சோம்ன்னு தெரியலையே? பிரின்ஸ் கோபமா பார்க்கிறாரே.' அவள் மனதிற்குள் தவித்தபடி அவனைப் பார்த்தாள். அவளது விழிகள் இரண்டும் அவளது தவிப்பினை அவனிடம் அப்பட்டமாய் எடுத்துரைத்தது. அது அவனுக்குப் புரிந்தாலும் அவன் பேசாது அவளையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
"பிரின்ஸ், நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா? அப்படிப் பண்ணியிருந்தால் மன்னிச்சுக்கோங்க." அவன் சண்டையை ஆரம்பிக்கும் முன்னே அவள் சமாதான உடன்படிக்கைக்குத் தயாரானாள்.
"ஓஹோ, என்ன தப்பு பண்ணுனோம்ன்னு கூடப் பப்ளிமாசுக்கு தெரியலையா? அந்தளவுக்கு நீ நிறையத் தப்புப் பண்ணியிருக்க. அப்படித்தானே? நான் இல்லாத நேரம் அப்படி என்னென்ன தப்பு பண்ணினடி சொல்லு?" அவனது குரல் உயர்ந்தது.
"ஐயோ பிரின்ஸ், நான் எந்தத் தப்பும் செய்யலை." அவளது விழிகளில் கண்ணீர் துளிர்த்தது. யார் திட்டினாலும் கண்டு கொள்ளாது இருப்பவளுக்குச் சர்வேஸ்வரன் திட்டினால் மட்டும் முணுக்கென்று கண்ணீர் வந்துவிடும். அவனது கடுமையும் அப்படித்தான் இருக்கும்.
"நீ தப்பு பண்ணலையா? நீ பண்ணின தப்பை நான் சொல்லவா?" அவன் கேட்கவும் அவள் மௌனமாகத் தலையாட்டினாள்.
"முதல் தப்பு இப்போ குட்நைட்டும் இல்லை, குட்ஈவினிங்கும் இல்லை. இப்போ குட்மார்னிங்." அவன் சொல்லவும்... அவள் திரும்பி ஜன்னல் வெளியே தெரிந்த இருண்ட வானை பார்த்தவள் பின்பு மீண்டும் அவனைக் கண்டு,
"வெளிய இருட்டி இருக்கு. இன்னும் வெளிச்சம் வரலையே." அவள் தயக்கத்துடன் அப்பாவியாய் உரைக்க...
"மண்டு, மண்டு... பனிரெண்டு மணிக்கு மேல் மறுநாள் கணக்கு. இப்போ மணி இரண்டு. அப்போ இது மார்னிங் தான். என்ன புரிஞ்சதா? எங்கே குட்மார்னிங் சொல்லு."
"குட்மார்னிங் பிரின்ஸ்." வலக்கையை நெற்றியில் வைத்து காலை வணக்கம் சொன்ன அவளைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் பொங்கி வந்த சிரிப்பினை வாய்க்குள் வைத்து அடக்கி கொண்டான்.
"குட்..." என்று அவளை மெச்சியவன், "அடுத்தத் தப்பு..." அவன் ஆரம்பிக்கும் முன்,
'போச்சு, என்ன பண்ணினோம்ன்னு தெரியலையே.' அவளது மனதிற்குள் அலறியபடி வெளியில் அவனைப் பாவமாகப் பார்த்திருந்தாள்.
"நேத்து என்னோட பால்கனியில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணி ஊத்துனியா?" அவன் கேட்டதும் தான் அவளுக்குமே அது ஞாபகம் வந்தது. இங்கே நடக்கும் விசயம் அங்கே இருக்கும் அவனுக்கு எப்படித் தெரியும்? அவள் புரியாது குழம்பி போனாள்.
"பிரின்ஸ், நேத்து மழை பெஞ்சது. அதான் தண்ணி ஊத்தலை. இன்னைக்குத் தண்ணி ஊத்திர்றேன். மன்னிச்சுக்கோங்க." அவள் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க...
"முதல்ல தப்பு பண்ணாம இரு. அதுக்குப் பிறகு மன்னிப்பு கேளு." அவன் அதட்டலாய்ச் சொன்னதும் அவள் சரியென்று நாலாப்புறமும் தலையை ஆட்டினாள்.
அப்போது சர்வேஸ்வரன் முன்பு தீபாராதனை தட்டு நீட்டப்பட்டது. அவன் நிமிர்ந்து பார்க்க... அங்கே அவனது பாட்டி மீனம்மாள் நின்றிருந்தார். அவர் தட்டில் இருந்து திருநீறை எடுத்து பேரன் நெற்றியில் வைத்து விட்டவர், "போகிற காரியம் வெற்றிகரமா, நல்லபடியா முடியணும்." என்று பேரனை வாழ்த்தியவர், "கற்பூரத்தை தொட்டு கும்பிடு." என்க... அவனும் நல்ல பிள்ளையாய் அவர் சொன்னதைச் செய்தான்.
"யார் கிட்ட வம்பிழுத்துக்கிட்டு இருக்கச் சர்வா?" மீனம்மாள் பேரனிடம் கேட்டவர் அலைப்பேசி முன் எட்டிப்பார்த்தார். திரையில் தோன்றிய உதயரேகாவை கண்டதும் அவரது முகம் மலர்ந்தது.
"பெரியம்மா, எப்படி இருக்கீங்க?" உதயரேகா பெரியவரை கண்டதும் உற்சாகமாய்க் கேட்க...
"நான் நல்லாயிருக்கேன் ரேகா. பட்டு எப்படி இருக்கிறாள்?" மீனம்மாள் நலன் விசாரிக்க ஆரம்பித்தார். பட்டம்மாள் அவருக்கு ஒரு நல்ல தோழி. ஒரே ஊரும் கூட...
"ஆரம்பிச்சாச்சா மீனுக்குட்டி? ரொம்ப நல்லது... நான் கிளம்பி வர்றதுக்குள் பேசி முடிச்சிருக்கணும்." பேரன் பாட்டியை செல்லமாய் மிரட்டி விட்டுச் சென்றான்.
உதயரேகா சர்வேஸ்வரனை பயத்துடன் பார்ப்பதை கண்ட மீனம்மாள், "என்ன, சர்வா உன்னை மிரட்டினானா? அவன் கிடக்கிறான் விடு." என்று ஆறுதல் கூற... அதில் அவளது முகம் தெளிந்தது.
"அப்புறம் அங்கே வேறென்ன விசேசம்?" மீனம்மாள் பேச்சை ஆரம்பிக்க...
"எப்போதும் போலப் போகுது பெரியம்மா." என்று சொன்ன உதயரேகா எந்தவித தயக்கமுமின்றித் தனது பேச்சை தொடர்ந்தாள்.
"நீங்க எப்போ ஊருக்கு வர்றீங்க?" உதயரேகா கேட்க... மீனம்மாள் பதில் சொல்லும் முன் அலைப்பேசியைப் பாட்டியின் கையிலிருந்து பறித்த சர்வேஸ்வரன்,
"நாளை மறுநாள் அங்கே வர்றோம். நாங்க வர லேட் நைட் ஆகிவிடும்." என்று கூற... அடுத்து அவன் என்ன கூற வருவான்? என்று தெரிந்தவளாய்,
"எந்த ராத்திரியானாலும் நான் தூங்காம காத்திருப்பேன் பிரின்ஸ்." என்று அவள் முந்தி கொண்டு சொல்ல...
"காத்திருக்கணும்." அவன் அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
"யாரும்மா ஃபோனில்?" பேச்சுச் சத்தத்தில் உறக்கம் கலைந்த பட்டம்மாள் பேத்தியிடம் கேள்வி கேட்க...
"பெரியம்மாவும், பிரின்சும் பேசுனாங்க."
"நல்லாயிருக்காங்களா?"
"நல்லாயிருக்காங்க பாட்டி. நீங்க தூங்குங்க." என்ற உதயரேகா படுக்கையில் படுத்தாள்.
உணவு மேசையில் அமர்ந்திருந்த பேரன் தட்டில் தோசையை வைத்து சட்னி ஊற்றிய மீனம்மாள் அவன் அருகே அமர்ந்தார். பேரனை கண்டவருக்கு உள்ளுக்குள் பெருமிதம் பொங்கியது. ஆணழகன் தான் அவரது பேரன் சர்வேஸ்வரன். நான்கு பேரக்குழந்தைகளில் இவனிடத்தில் மட்டும் தனி அன்பு அவருக்கு... சிறு வயதிலிருந்தே அவன் அவருடன் ஒட்டி கொண்டு இருப்பதால் கூட இருக்கலாம். மற்ற மூவரும் மந்தாகினி சொல் பேச்சு கேட்டு நல்ல பிள்ளையாக நடப்பர். ஆனால் சர்வேஸ்வரன் மட்டும் யார் பேச்சையும் கேட்காது வால்த்தனம் செய்து அன்னையிடம் மாட்டி கொள்வான். அதனாலேயே மந்தாகினி அவனைச் சமாளிக்க முடியாது அவனை வளர்க்கும் பொறுப்பினை மாமியாரிடம் கொடுத்து விட்டார். அந்த விதத்தில் மந்தாகினி அவனுக்கு நல்லது தான் செய்து இருக்கிறார்.
இதோ வெளிநாடு வந்தும் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட போகும் போதும் நெற்றி நிறையத் திருநீறு இட்டுக் கொண்டு செல்லும் அவன் பாட்டியின் வளர்ப்பு என்பதைச் சொல்லாது சொல்கின்றான். அது மட்டுமா பேரக்குழந்தைகள் மூவரில் இவன் ஒருவனே புத்திசாலி, பேச்சுத் திறமை உள்ளவன். மீனம்மாளின் கணவர் சேர்த்த சொத்துகள் ஏழு தலைமுறைக்குப் போதும். ஆனாலும் அதை அழிந்து விடாது காப்பாற்ற வேண்டியது அடுத்தத் தலைமுறையின் கடமை அல்லவா.
சர்வேஸ்வரன் பதினெட்டு வயதில் இருந்தே தந்தையோடு இணைந்து தொழில் நிர்வாகத்தையும் நடத்தி வருகின்றான். அவன் படித்த பொறியியல் படிப்பு கூடச் சும்மா பேருக்கு தான். யாரும் அவனைப் படிக்கவில்லை என்று கூறிவிடக் கூடாதே என்பதற்காக... ஆகாஷ் படித்து முடித்து இருபத்தியைந்து வயதில் தொழிலுக்கு வந்த போது சர்வேஸ்வரன் அண்ணனுக்குத் தொழிலில் மூத்தவனாக, ஆசானாக இருந்தான். அதனால் தான் என்னவோ தொழிலும் சரி, வீட்டிலும் சரி சர்வேஸ்வரன் வைத்தது தான் சட்டம். இதோ இன்று வரை அது தொடர்கிறது.
"மீனுக்குட்டி, கண்ணு வைக்காதே. எனக்கு வயிறு வலிக்கும்." சர்வேஸ்வரன் கடைசித் தோசை துண்டை வாயில் வைத்தபடி கூற...
"ஆமா, ஆமா... நான் கண்ணு வச்சு தான் உனக்கு வயிறு வலிக்கப் போகுதா?" என்று நொடித்துக் கொண்ட மீனம்மாள், "எதுக்குடா ரேகாவை மிரட்டிக்கிட்டே இருக்க? அதுவும் இப்படி அர்த்த ராத்திரியில் எழுப்பி..." என்று பேரனை கடிய...
"ராத்திரி இல்லை... விடியற்காலை." பேரன் பாட்டியை திருத்தினான்.
"என்னைய என்ன ரேகான்னு நினைச்சியா? நீ என்ன சொன்னாலும் தலையை ஆட்டுறதுக்கு?" அவர் சொன்னதைக் கேட்டு அவனது உதடுகளில் புன்னகை அரும்பியது.
"சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா வெயிட் போட்டு இருக்கிறாள் பப்ளிமாஸ். கொஞ்சம் வேலை செய்யட்டும். அப்படியாவது உடம்பு குறையுதான்னு பார்ப்போம்." அவன் வரவேற்பறை சோபாவில் வந்தமர்ந்து கொண்டு கையிலிருந்த கோப்பை புரட்ட துவங்கினான்.
"ரேகாவா வேலை செய்யாமல் சும்மா இருக்கிறாள்? வீட்டிலுள்ள அத்தனை வேலையும் அவள் ஒருத்தி தான் செய்கிறாள். அது அவளோட உடல்வாகுடா." உதயரேகாவை தாங்கி பேசியவர் பிறகு யோசித்தவராய், "நீ எதுவும் அவளை விரும்புறியா சர்வா?" என்று கேட்க...
"ச்சீ, ச்சீ என்ன நினைப்பு இது? போயும் போயும் வேலைக்காரி கூடப் போய் என்னை... உங்க புத்தி ஏன் இப்படிப் போகுது?" அவன் நொடி நேரம் கூடத் தாமதியாது பாட்டியை கடிய... அவனது வார்த்தைகள் கேட்டு பாட்டிக்கு தான் திகைப்பாய் இருந்தது.
"அப்போ நீ ஏன் அந்த மிரண்டாவுக்கு ஓகே சொல்லலை." பாட்டி அவனுக்குக் கிடுக்கிப்பிடி போட...
"அவள் பெயர் மிரண்டா இல்லை. மிலிண்டா..." பேரன் அவரது வார்த்தையைத் திருத்த...
"ஏதோ ஒண்ணு... நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு."
"அவளோட லவ் எல்லாம் டேட்டிங் போக மட்டும் தான் சரிவரும் மீனுக்குட்டி. கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த கிடையாது. அந்த மாதிரி லவ் எல்லாம் எனக்குச் செட்டாகாது." அவன் தோள்களைக் குலுக்கினான்.
"அப்போ லவ் பண்ணி கல்யாணம் பண்ண மாட்டியா?"
"தெரியலை மீனுக்குட்டி... எனக்குப் பிடிச்சவளை சந்திக்கும் போது மனசு மாறலாம்." என்றவன், "ஓகே மீனுக்குட்டி, எனக்கு டைம் ஆகுது. சீக்கிரம் அக்ரிமெண்ட்டில் சைன் போட்டுட்டு வந்திர்றேன். நாம ஷாப்பிங் போகலாம்." என்று கிளம்ப ஆயத்தமாக...
"நான் எதுக்குடா? நீ வேணா போயிட்டு வா."
"தாத்தா எங்களுக்காக ஓடி ஓடி உழைச்சு உங்களைக் கண்டுக்காம விட்டுட்டார். அந்த வருத்தம் இப்பவும் உங்களுக்கு இருக்குல்ல. அதான் அப்போ போகாத உலக நாடுகளுக்கு இப்போ உங்க பேரன் நான் உங்களைக் கூட்டிட்டு போறேன். நீங்க கட்டாயம் வந்தே ஆகணும் மீனுக்குட்டி." பேரன் பாட்டியின் கன்னத்தைத் தட்டி புன்னகைக்க...
"அடப்போடா, பொண்டாட்டி கூட ஹனிமூன் போறதை விட்டுட்டு... என் கூட ஊரை சுத்துறானாம்." அவர் அலுத்துக் கொள்ள...
"ஹனிக்கும் மூனுக்கும் இருக்கும் தொடர்பை விட... பாட்டிக்கும், நிலவுக்கும் இருக்கும் தொடர்பு தான் அதிகம். கிராண்ட்மாமூன் தான் பெஸ்ட்." என்றவன் அவரது நெற்றியில் விளையாட்டாய் முட்டி விட்டு கிளம்பி சென்று விட்டான்.
திருமணம் என்றால் காத தூரம் ஓடும் பேரனை கண்டு வருத்தம் இருந்தாலும் அவனது பண்பு, ஒழுக்கம் கண்டு அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்தக் காலத்தில் இளைஞர்கள் எப்படி எப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கும் போது... தனது பேரன் மனதாலும் ராமனே என்று அவருக்கு அத்தனை பெருமிதம்...
சர்வேஸ்வரன் வெற்றிகரமாக ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு முடித்தவன் சந்தோசமாக உணர்ந்தான். அவனுக்குத் தெரியும், அவனுக்குத் தான் வெற்றி என்று... அவனது மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. உடனே அவன் தனது அலைப்பேசியை எடுத்துச் சிசிடிவி கேமிராவை பார்க்கலானான். அதிலும் குறிப்பாக அவர்களது வீட்டினை. இப்போது இந்தியாவில் அதிகாலை நேரம். அந்தக் காலை நேரத்திலும் உதயரேகா பூஜையறையில் பூஜை செய்வது கேமிராவில் நன்கு தெரிந்தது. அப்படித் தெரிய வேண்டும் என்று தான் கோணம் பார்த்து கேமிரா மாட்டப்பட்டு இருந்ததோ!
உதயரேகா பூஜை செய்வது கண்டு அவனது உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. நிச்சயம் அவளது பிரார்த்தனையில் அவனது நலன் அடங்கி இருக்கும் என்று அவனுக்கு உறுதியாகத் தெரியும். பூஜையை முடித்த உதயரேகா நேரே சர்வேஸ்வரன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவன் உடனே அவனது அறை கேமிராவை காண வேண்டி அதை எடுத்துப் பார்த்தான். அவனது அறைக்குள் நுழைந்த உதயரேகா நேரே பால்கனி சென்று செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, அந்தப் பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவன் அவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான். அவள் திடீரென்று அங்கிருந்த ஏணியில் ஏறி கேமிரா பக்கம் வர... திடுமெனக் கேமிராவில் தோன்றிய அவளது முகத்தைக் கண்டு அவன் திகைத்து போனவனாய் தனது தலையைப் பின்னால் நகர்த்தினான். என்னமோ அவள் எதிரே நிற்பது போன்று ஒரு தோற்றம். அவளோ அது கேமிரா என்று அறியாது சுத்தம் செய்யத் துவங்கினாள். அவளது செய்கையில் அவனது புன்னகை விரிந்தது.
உதயரேகா மனித மனங்களைப் புரிந்து கொள்வதில் கில்லாடி. ஆனால் அவளுக்கு விஞ்ஞான அறிவு, வெளி உலக அறிவு என்பது சுத்தமாய்க் கிடையாது. பத்து வருடங்களாகச் செக்கு மாடு போல் வீட்டு வேலை செய்து கொண்டு நாலு சுவற்றுக்குள் இருப்பதாலோ என்னவோ... அவளது நிலை இப்படியாகி போனது. அது பற்றி அவள் சிறிதும் அலட்டி கொண்டது இல்லை.
உதயரேகா அறையை விட்டுச் சென்றதும் சர்வேஸ்வரன் ஏதேச்சையாக நேற்றையை நிகழ்வினை கேமிராவில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது குடும்பத்தினர் உணவு மேசையில் நடத்திய உரையாடல் அனைத்தையும் கேட்டு விட்டான். தனக்குப் போட்டி போட்டுக் கொண்டு பெண் தேடும் உடன்பிறப்புகளைக் கண்டு அவனது புன்னகை உறைந்து போனது. ஏனெனில் அவர்கள் பார்த்திருக்கும் பெண்கள் அப்படிப்பட்டவர்கள். ஒருத்தி ஒப்பனை பைத்தியம், ஒருத்தி கொணட்டி, ஒருத்தி அலட்டி... இதில் அவன் யாரை திருமணம் செய்தாலும் அவனது நிம்மதி போகப் போவது உறுதி. அவன் காவி கட்டி கொண்டு சந்நியாசம் போகப் போவதும் உறுதி. அவன் ஆயாசத்துடன் விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.
யாரின் மனதையும் நோகாது அவன் இதிலிருந்து வெளியில் வர வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்று அவன் யோசித்தான். அந்த நொடி அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. இங்கேயே இருந்தால் தேவையில்லாத யோசனைகள் எழும் என்று நினைத்தவன் வீட்டிற்குக் கிளம்பி சென்றான்.
**************************