சாம் அடுத்து வந்த பத்துத் தினங்கள் அலைந்து திரிந்து கருத்து கணிப்புகளைச் சேகரித்துக் கொண்டு வந்தான். எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மதியழகனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாய் இருந்தது. ஏனெனில் அவர் அதிக ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்குக் கொடுத்து இருந்தார். அதைக் கண்டு அவனுக்குத் திகைப்பு தான். அவன் உடனே ஜெகனை தொடர்பு கொண்டு,
"சீஃப் கிட்ட பேசணும்." என்று சொல்ல...
"அவர் கொஞ்சம் பிசி சக்..." என்று அவனது முழுப்பெயரை சொல்ல போனவன் பின்பு சுதாரித்துக் கொண்டு, "சாம்..." என்று புன்னகையுடன் முடித்தான்.
"என்ன விசயம் சாம்?"
"நாம எதிர்பார்த்த மாதிரி வேணுகோபாலனுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மதியழகனுக்குத் தான் மக்கள் ஆதரவு அதிகம் இருக்கு. இப்போ என்ன பண்ணன்னு தெரியலை?"
"உனக்கு நான் சொல்லி தெரியணுமா சாம்? உனக்கே இதுக்கான பதில் தெரிஞ்சு இருக்கும்."
"எதுக்கும் சீஃப் கிட்ட..." சாம் தயக்கத்துடன் இழுத்தான்.
"முன்பு இது மாதிரி ரிசல்ட் வந்தப்போ என்ன செஞ்சோமோ அதையே இப்பவும் செய்." ஜெகன் கூலாகச் சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
எப்போதும் செய்வது போல் சாம் கருத்துக் கணிப்பு முடிவினை மாற்றி அமைத்தான். அவர்களது எண்ணம் நிறைவேற அதைச் செயல்படுத்தினால் தான் முடியும். அவர்களது நோக்கம் முடியாதது எதுவும் இல்லை என்பதே! அதன்படி சாம் தேர்தல் வரும் முன்பே தேர்தல் கருத்துக் கணிப்பினை மாற்றி வெளியிட்டான்.
அதைக் கண்டு வேணுகோபாலன், வருண் மஹாராஜ்க்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மதியழகன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் எந்த இடத்தில் சறுக்கினோம்? என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.
தேர்தல் நடக்கும் முன்பே வேணுகோபாலன் தான் வெற்றி பெற போகின்றார் என்று சொல்லி மக்கள் மனதில் அவரது பிம்பத்தினை ஆழமாய்ப் பதிய வைத்து விட்டனர். இதுவும் ஒரு உளவியல் ரீதியான தேர்தல் யுக்தி தான்.
***********************
முடிந்தது எல்லாம் முடிந்தது. உறவுகள் ஆடி, பாடி, கூடி களித்த வீடு இன்று நிசப்தமாக இருந்தது. அன்பு, அன்பு, அன்பு என்று அன்பு மட்டுமே நிறைந்த வீடு இன்று துன்பத்தோடு காட்சி அளித்தது. வரவேற்பறையில் பெரிய பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்த உறவுகளின் சட்டமிட்ட புகைப்படங்களைப் பத்மவிலாசினி மென்மையாய் வருடி கொடுத்தாள். அவள் முதலில் வருடி கொடுத்தது அவளது அண்ணனின் மகன் கிருஷ்ணா ஒரு வயது குழந்தையின் புகைப்படத்தை... துறுதுறுவென்று எப்போதும் புன்னகையுடனேயே இருப்பான். அவன் அழுது பார்ப்பது அரிது. அவன் பிறந்த போது பகவான் கிருஷ்ணனே வந்து பிறந்திருப்பதாய் எல்லோரும் குதூகலித்தனர். அதனால் தான் அவனுக்குக் கிருஷ்ணன் என்று பெயரிட்டனர்.
"த்தே..." அவன் அழைக்கும் குரல் அவளது காதுகளில் ஒலித்தது.
"க்ருஷ் எங்கேடா இருக்க?" அவள் விழிகள் கலங்க சுற்றும் முற்றும் தேடினாள்.
"அம்முலு..." அவளது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று அனைவரும் அவளை அழைக்கும் குரல்கள் மாறி மாறி கேட்க...
அவள் தனது காதுகளை மூடியபடி கண்களில் கண்ணீர் வழிய உடல் நடுங்க அமர்ந்து இருந்தாள். இனிமேல் அவள் அவர்களைக் காண முடியாது, அவர்களது குரல்களைக் கேட்க முடியாது. அவர்களது ஞாபகங்கள் மட்டுமே அவளது மனதில் எச்சங்களாய் மிச்சமாய்...
"ஏன் என்னை மட்டும் தனியா விட்டுட்டு போனீங்க? என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாமே? ஏன் இப்படிப் பண்ணினீங்க? நீங்க எல்லோரும் இல்லாம நான் எப்படி வாழ போறேன்?" என்று அழுது அரற்றியவளின் தோளின் மீது ஒரு கரம் ஆதரவாய் விழுந்தது.
அவள் யாரென்று திரும்பி பார்க்க... அவர்களது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யும் தாத்தா நின்று இருந்தார்.
"தாத்தா, என்ன தான் நடந்துச்சு? ரெண்டு நாள் முன்ன கூட என் கிட்ட நல்லா தானே பேசுனாங்க... திடீர்ன்னு என்னாச்சு?" அவள் அழுகையுடன் கேட்க...
"அதை எப்படிம்மா என் வாயால் சொல்வேன்?" அந்தக் கிழவன் துண்டால் வாயை பொத்தி கொண்டு அழுதார்.
"ப்ளீஸ் சொல்லுங்க தாத்தா..." அவள் மன்றாடி கேட்க...
"நீ முதல்ல இங்கிருந்து கிளம்பி போயிரும்மா... இல்லை உன்னையும் கொன்னுருவாங்க..."
"வாட்? தாத்தா என்ன சொல்றீங்க?" அவள் திகைப்புடன் கேட்டாள்.
"ஆமாம்மா, நம்ம வீட்டாளுங்க தற்கொலை செஞ்சுக்கலை... கொலை செய்யப்பட்டு இருக்காங்க..."
அவர் சொன்னது கேட்டு அவள் அதிர்ந்து போனாள்.
"நம்ம வீட்டில் எல்லோரும் படுக்கப் போகும் முன் பால் குடிப்பது வழக்கம். அதைத் தெரிஞ்சிட்டுப் பாலில் விசத்தைக் கலக்கி கொடுத்து கொன்னுட்டு தற்கொலை மாதிரி மூடி மறைச்சிட்டாங்க... ஆனா இதைச் செஞ்சது நம்ம வேலு... அதைத் தான் என்னால் தாங்கிக்க முடியலைம்மா... எத்தனை வருசமா இங்கே சமையல் வேலை பார்த்துட்டு இருந்தான். கடைசியில் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படிப் பண்ணிட்டானே."
அவளுக்கு எல்லாமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. தங்களது வீட்டில் ஒருவனாக வளைய வந்த வேலுவா இப்படி? என்று அவளால் நம்ப முடியவில்லை.
"இப்போ வேலு எங்கே?"
"இவ்வளவு செஞ்சவன் இவ்வளவு நேரம் இங்கேயா இருக்கப் போறான்? எப்பவோ ஓடி போயிட்டான்." என்றவரை கண்ணீரோடு பார்த்தவள்,
"உங்களுக்கு எப்படித் தெரியும் தாத்தா?" என்று கேட்க...
"இறந்த வீட்டில் அவங்க பேசிக்கிட்டதைக் கேட்டேன். இந்தக் கிழவனால் என்ன பண்ண முடியும்? நீ வர்ற வரைக்கும் உசிரை தாக்கு பிடிச்சுக்கணுமேன்னு எதையும் கண்டுக்காம வளைய வந்துட்டு இருந்தேன்."
"முதல்ல போலீசில் கம்ப்ளையிண்ட் கொடுக்கணும் தாத்தா..." என்று அவள் வீராவேசத்துடன் எழுந்தாள்.
"அம்மாடி, போலீசுக்கு போயும் பிரயோஜனம் இல்லைம்மா... ஏன்னா போலீசே அவங்க கைக்குள்..."
"என்ன சொல்றீங்க தாத்தா? யார் அவங்க?" அவள் திகைப்பு மாறாது கேட்டாள்.
"இப்போ எலெக்சனில் ஜெயிச்சுப் பதவியில் இருப்பவங்க... அவங்க பதவிக்கு வந்ததும் செஞ்ச முதல் வேலை நல்லா வசதியானவங்களா பார்த்து நெருக்கடி கொடுத்து அவங்க சொத்துகளை, தொழில்களை எழுதி வாங்குறது தான். அதில் நாமளும் ஒண்ணு... நம்ம தொழில், சொத்துகள் எல்லாத்தையும் எழுதி கேட்டாங்க... அப்பா முடியாதுன்னு மறுத்தார். நம்ம தம்பி போலீசில் கம்ப்ளையிண்ட் கொடுத்தாரு. அதுக்குப் பிறகு தான் அவங்க நம்மளுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாங்க... தண்ணி, மின்சாரம், பால் இப்படி எதுவும் கொடுக்கலை. கடைசியில் மிரட்டி பணிய வைக்க முடியாததால் விசத்தைக் கொடுத்து கொன்னுட்டாங்க..." என்று பெரியவர் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
அவள் திக்பிரம்மை பிடித்தார் போன்று நின்றிருந்தாள். அவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்கள். பரம்பரை பரம்பரையாக வைர வியாபாரம் செய்து வருபவர்கள். செல்வம் கொட்டி கிடந்தது. அவர்களாலேயே எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால்... சாமானியர்களால் எப்படி எதிர்த்து நிற்க முடியும்?
"அம்மாடி, நீ முதல்ல இங்கிருந்து கிளம்பி போயிரும்மா... படுபாவிங்க இங்கே வந்தால் உன்னையும் ஏதாவது பண்ணிருவாங்க. இந்நேரம் நீ இங்கே வந்தது அவங்களுக்குத் தெரிஞ்சு இருக்கலாம்." அவர் அவளை அவசரப்படுத்தினார்.
பத்மவிலாசினிக்கு என்ன செய்வது? என்று புரியவில்லை. அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டும். அதற்கு அவள் உயிரோடு இருக்க வேண்டும். அதனால் அவள் பெரியவர் சொன்னதைக் கேட்டாள். எப்படி வந்தாளோ அப்படியே திருப்பிச் சென்றாள். கூடவே அவளது குடும்பப் புகைப்படம் ஒன்றை எடுத்து சென்றாள்.
"தாத்தா, நீங்க என்ன பண்ண போறீங்க?"
"கிராமத்துக்குப் போய்ப் பொழச்சிக்குவேன்." என்றவர் கையில் தான் கொண்டு வந்திருந்த பணத்தை அள்ளி கொடுத்துவிட்டு அவள் தான் வாழ்ந்த வீட்டை விட்டு அநாதையாய் வெளியேறினாள்.
அடுத்து யார் வீட்டிற்குச் செல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் யார் வீட்டிற்குச் சென்றாலும் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் தீவிரமாக யோசித்தவள் அவர்கள் உதவி செய்து வரும் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் செல்ல நினைத்து அங்கே சென்றாள். இல்லத்து நிர்வாகி வேங்கடநாதன் ஏற்கெனவே விசயம் கேள்விப்பட்டு இருந்தார். அதனால் அவர் அவளை அன்போடு அரவணைத்துக் கொண்டார்.
"எத்தனை நாள் வேண்டுமானாலும் இங்கே இரு பத்மா... இங்கு யாரும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டாங்க." அவர் சொல்லவும் அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"உன் குடும்பத்துக்கு நிகழ்ந்த கொடூரம் யாருக்கும் நடக்கக் கூடாது." என்று வருத்தபட்ட வேங்கடநாதன், "இந்தக் கட்சி ஜெயிச்சு இருக்காது. போன முறை ஆட்சியில் அத்தனை அராஜகம் பண்ணினாங்க. அப்படித்தான் நாங்க எல்லோரும் நினைச்சிட்டு இருந்தோம். ஆனா ஒருத்தன் வந்து ஒட்டுமொத்த தலையெழுத்தையும் மாத்தி எழுதிட்டான்."
"அப்படி எல்லாம் செய்ய முடியுமா?" அவள் திகைப்புடன் கேட்டாள்.
"அவன் ஒரு மான்ஸ்டர்... அவனால் முடியும்... அவன் நினைச்சதை அடையாமல் இருந்தது இல்லை. நிழல் மறைவில் எல்லோரையும் ஆட்டுவிக்கும் அவன் ஒரு கிங் மேக்கர்... அரசியல் சாணக்கியன்... அவனது தேர்தல் வியூகம் அவ்வளவு துல்லியமாக இருக்கும். இந்திய அரசியலில் அவன் வைத்தது தான் சட்டம். அவன் பின்னிருந்து இயக்கும் கட்சி தான் தேர்தலில் வெற்றி பெறும்... அதுக்காக அவன் எதையும் செய்வான்."
"யாரவன்?" அவள் திகைப்பு மாறாது கேட்டாள்.
வேங்கடநாதன் அவனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அதேநேரம் டெல்லியில் முக்கிய இடத்தில் இருந்த பங்களா சத்தம் இல்லாது மௌனமாய் இயங்கி கொண்டு இருந்தது. வேலைக்காரர்கள் எந்தவித பேச்சுமின்றி அமைதியாய் வேலை செய்து கொண்டு இருந்தனர். அங்கிருந்த மீன் தொட்டியில் மீன்களும் அமைதியாக நீந்தி கொண்டு இருந்தது. அதன் அருகே இருந்த பறவை கூட்டில் இருந்த பறவைகள் கூடச் சத்தம் இல்லாது தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தது. மொத்ததில் அங்கு அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.
அந்த வீட்டின் மாடியில் இருந்த ஒரு அறையில் அவன் அமர்ந்து இருந்தான். நெடுநெடுவென்ற உயரத்தில், மாநிறத்தில், முகத்தில் வடுக்களுடன், முகம் கொள்ளா தாடியுடன், ஆண்களுக்கே உரிய கம்பீரத்துடன் அமர்ந்து இருந்தவனின் உதடுகளில் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. அவன் வாயில் இருந்த சிகரெட்டை எடுத்து விட்டு அலட்சியமாகப் புகையை ஊதினான். அவனது விழிகள் எதிரே இருந்த 'தமிழ்நாடு பப்பட் ஷோ' என்று எழுதப்பட்டு இருந்த பொம்மலாட்ட மேடையினைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
அந்த மேடையில் வேணுகோபாலன், வருண் மஹாராஜ், வசுந்தரா தேவி, மதியழகன், வெற்றி வேந்தன், நாகராஜன், கார்த்திகாயினி, பிரியதர்சினி என்று அனைவரும் பொம்மைகளாக உருமாறி இருந்தனர். அவன் எழுந்து அந்தப் பொம்மைகளின் அருகே சென்றான். பொம்மைகளின் நுனியில் கட்டியிருந்த நூலினை எடுத்து அவன் தனது விருப்பத்திற்கு ஏற்றார் போன்று ஆட்டுவிக்க ஆரம்பித்தான். அடுத்தவர்களைத் தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று... அப்போது அவன் தன்னைக் கடவுளாக நினைத்து கொள்வான். அது அவனுக்கு அத்தனை போதையைத் தரும். எந்தப் போதை மருந்துகளும் கொடுக்காத போதை அது. அதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.
தமிழ்நாட்டின் தலையெழுத்தை சின்னப் பொம்மலாட்டத்தில் மூலம் நிர்ணயித்தவன் பின்பு வாய்விட்டுச் சிரித்தான். அவனது சிரிப்புச் சத்தம் அந்த அறையின் சுவர்களில் பயங்கரமாய் எதிரொலித்தது.
"ஐயம் அ கிங் மேக்கர்... மை நேம் இஸ் ஆல்சோ சக்ரவர்த்தி, சிபி சக்ரவர்த்தி..." என்று மமதையுடன் கூறியிவனின் முகத்தில் அப்படியொரு குரூர திருப்தி நிலவியது.
"உருவாக்குபவன் கடவுள் என்றால்,
ஆட்டுவிப்பவன் கடவுள் என்றால்,
ஆம், நானும் கடவுள் தான், அந்த
கடவுளுக்கும் மேலானவன் தான்!!!"
உயிர் கொல்லும்...!!!