All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நான் உங்கள் வடிவேல்... என்ன மறந்திருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்... இதை கேக்கறதுக்கு காரணம் அவ்வளவு மெதுவா பதிவுகளை குடுக்கறேன்.. நான் கதை எழுதறதே உங்களுக்காகத்தான்.. அதனால உங்களை காக்க வைக்கனும்னு எனக்கு எந்த எந்த எண்ணமும் இல்லை மக்களே... எனது வேலை பளு அந்த மாதிரி இருக்கு.. எனது தாமத்திலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிச்சுகறேன்..
எனக்கு இந்த வாய்ப்பை தந்து எஸ்.எம்.எஸ் குழுமத்தில் என்னை எழுத்தாளராக அறிமுகப்படுத்தி, எனக்கொரு அடையாளத்தை உருவாக்கி தந்த கலா மேமிற்கும், எனக்கு ஊக்கமளித்து எனது குறை நிறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டு கருத்துக்கள் மூலமாக
உற்சாகப்படுத்திய எனது அருமை நட்புகளுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
விதியோடு மோதி விளையாடு..! எனக்கு ரொம்ப முக்கியமான கதை. உங்களுக்கும் பிடிச்ச மாதிரி சுவாரஸ்யம் குறையாம குடுக்க முயற்சி பண்ணறேன் நட்புகளே... இந்த கதையோட தலைப்பிலேயே கதையை உங்களால் யூகிக்க முடியும். இருந்தாலும் என்பங்கிற்காக கதையின் கருவை பற்றி சிலவரிகள் கூறுகிறேன்... கற்பனையான அதேசமயம் சில உண்மை நிகழ்வுகளோடு இந்த கதையை எழுதவுள்ளேன்...
நான் நானாக இருந்த போதிலும் நான் நானில்லை...
என்றாலும் கூட நான் நான்தான்...
என்னை எனக்காக ஏற்றுக் கொள்ளாத என் உறவுகள்
என்நிலை மாறும்பொழுது...?
இந்த கதையில் இரண்டு நாயகன்கள்... ஒருவன் தமிழகத்தின் பெரும் செல்வந்தரின் வாரிசு... இன்னொருவனை பற்றி கதையில் தெரிந்து கொள்ளலாம்...
இந்த கதையின் கரு மூட நம்பிக்கையை பற்றியது... இரவில் கண்மூடி காலையில் விழித்தெழுவோம் என்ற நம்பிக்கையில் தான் நாம் நமது நிகழ்காலத்தை நிறைவு செய்கிறோம் . எதிர்காலத்தையும் முடிவு செய்கிறோம்.. இறை நம்பிக்கையாகட்டும், அல்லது தன்னம்பிக்கையாகட்டும்.. நம்பிக்கையே வாழ்க்கையின் ஆணிவேர்... ஆகையால் நம்பிக்கையை குறை சொல்லப் போவதில்லை. அதேசமயம் மூட நம்பிக்கையை விட்டுவைக்கப் போவதுமில்லை...
ஒருவரின் வாழ்வை தீர்மானிப்பது விதியா..? அல்லது மதியா..? ஜாதகம், ஜோசியம், நாள் நட்சத்திரம்... இன்னும் என்னென்ன உள்ளதோ அவையெல்லாம் ஓரிடத்தில் வந்து போகும்.
மூடநம்பிக்கையால் அழிய இருந்த ஒருவனது வாழ்க்கையை, தனது மதியால் அவனது விதியை வென்றானா..? அல்லது வீழ்ந்தானா..? தெரிந்து கொள்ள காத்திருங்கள் நண்பர்களே...
நான் மெதுவாக நடப்பவனாக இருக்கலாம் ஆனால் ஒருபோதும் பின்வாங்கியதில்லை..
"போதும் நிறுத்துடா! இதுக்கு மேல என் பேரன பத்தி ஏதாவது பேசுன, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று இத்தனை காலமாய் உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த அக்கினியை, தன் மகனின் மீது பொழிந்து கொண்டிருந்தார் கமலம்.
“அம்மா! உங்க கண் முன்னாடியே என்ன செஞ்சானு தெரிஞ்சிருந்தும், அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதிங்க” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, இடது கையால் தன் கழுத்தை தடவிய படியே தன் தாயிடம் எதிர்வாதம் செய்து கொண்டிருந்தார் சரவணன்.
ச்சீய்!! யாருடா? உனக்கு அம்மா?. உன்ன மாதிரி ஒருத்தன பெத்ததுக்கு நான் மலடியாவே இருந்திருக்கலாம். இனிமேல் என்ன அம்மான்னு கூப்பிடாத. என் மூஞ்சிலையும் முழிக்காத” என்று தன் மகனிடம் சீறிக்கொண்டிருக்க,
“அத்தை...!!”
இதுநாள் வரை அதிர்ந்து கூட பேசாத தனது மாமியார், இன்று எரிமலையாக வெடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அங்கிருந்தவர்கள் வாயடைத்து நிற்க, தனது கணவருக்கு ஆதரவாக பேசுவதற்கு வாய் திறந்தார் அம்சவேணி
“ ஏண்டி! நீயும் ஒரு பொம்பளை தான.. உன் உடம்பிலையும் ரத்தமும் சதையும் தான இருக்கு... இதுங்க ரெண்டையும் பெத்த மாதிரிதான அவனையும் பத்து மாசம் உன் வயித்துல சுமந்த, அப்பறம் எப்படி உனக்கு கூட நெஞ்சுல ஈரம் இல்லாம போச்சு?. நீயெல்லாம் பெண் வர்கத்துக்கே அவமானம். இனி இந்த வீட்டுல யாருமே என்கிட்ட பேசக்கூடாது. உங்க கைல பச்சை தண்ணி குடிச்சாலும் அது மூத்திரத்தை குடிக்கறதுக்கு சமம்.. எனக்கு என்ன தேவையோ அத நானே பார்த்துக்கறேன். இல்லைனா என் பேரன் என்ன பார்த்துக்குவான். என் பேரனுக்கு எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படித்தான் அவன் இருப்பான். அதுக்கு சம்மதம்னா இங்க இருங்க. இல்லைனா இப்பவே இந்த வீட்ட விட்டு எல்லாரும் வெளிய போங்க..” என்று தன் உள்ள குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் கமலம்
“ஹேய்!! தாய் கிழவி கூல் டவுன் கூல் டவுன். எதுக்கு இப்ப இவ்வளவு எமோஷன் ஆகுற. அந்த நாய் செஞ்சதுக்கு, மம்மி டாடிய ஏன் திட்டற? அவன் கத்தி எடுத்து டாடிய குத்த வரான், அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசற. உனக்கு ஏதாவது புத்தி கித்தி கெட்டுப் போச்சா?, அவன் கொலை பண்ண வந்தா அவன அடிச்சு போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ணாம? அவன் கையால எங்கள சாக சொல்லறியா?” என்று தனது பாட்டியிடம் எதிர்வாதம் செய்துவிட்டு, அவரை சாந்தப் படுத்தும் விதமாக அவரை தோளோடு அணைத்துக் கொண்டு, ஒரு கையால் தலையை நீவியவாறே அர்ஜுன் இருக்க
“எடுறா கைய” என வெடுக்கென்று அவனது கைகளை தட்டிவிட்டவர், அருகில் இருந்த சொம்பில் இருந்து தண்ணீரை மட மடவென குடித்தும் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த அக்கினியை குளிர்விக்க முடியவில்லை. அதே வேகத்தில் திரும்பி அர்ஜுனை கூர்மையான நேர்ப் பார்வையால் துளைத்தவர், தலையை திருப்பி மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் அர்ஜுன் புறம் திரும்பி
“ஏன்டா அர்ஜுன்? நீ வாசல்ல கட்டி வச்சுருக்கையே ஒரு நாய். அத விட என் பேரன் எந்த விதத்துல தரம் கெட்டுப் போயிட்டான்”
“ தாய் கிழவி! அந்த நாயை என் ஜாக்கியோட கம்பேர் பண்ணாத” என்று தனது பாட்டியை பார்த்து கோபமாக முறைத்தவாறே கூறினான்
“ நீயும் இனிமேல் என் பேரன அப்படி சொல்லாத”
“ஆமா ஆமா, அவன நாய்ன்னு சொல்ல கூடாது. ஏன்னா நாய்க்கு நன்றி இருக்கு. இருந்தாலும் நாய விட கேவலமான வார்த்தை எனக்கு தமிழ் ல தெரியாது அதனால அந்த நாயை, நாய்ன்னு தான் சொல்லுவேன்.” என்று வழக்கம் போல் பாட்டியை சீண்டும் விதமாக கூற, இம்முறை ஆத்திரத்தின் உட்சத்திற்கே சென்றவர்,
“இனிமேல் அப்படி பேசின்னா யாரா இருந்தாலும் செருப்பாலையே அடிப்பேன் அர்ஜுன்” என்று கோபத்தில் கமலம் வார்த்தையை விட, அர்ஜுன் மட்டும் இல்லாமல் அங்கிருந்த அனைவருமே வாயடைத்து நின்றனர்
அர்ஜுனுக்கோ , அச்சு என்று பாசமாக அழைக்கும் தனது பாட்டியா இப்படி பேசியது என்று நம்ப முடியாமல், அவமானத்தில் முகம் சிறுத்துப் போய் அவரை பார்த்த படியே நின்று கொண்டிருந்தான்..
கமலத்திற்கும் அவசர பட்டு பேசிவிட்டோம் என்று தெரிந்தாலும், இன்று தன் உள்ள குமுறலை வெளிப்படுத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்தவராய் அந்த வீட்டின் கடை குட்டி ஜனனியிடம் திரும்பினார்
ஜனனியியும் கூட தன் பாட்டியிடம் இப்படி ஒரு ஆவேசத்தை எதிர் பார்க்கவில்லை. அவள் புறம் திரும்பவும் ஒருவித பீதியுடனே, தன் அண்ணனை திட்டியதால் கண்களில் குளமாக தேங்கியிருந்த கண்ணீருடன், மூக்கை விசும்பிய படியே அவரை ஏறிட்டு பார்க்க
“ ஏன் ஜனனி! உன் ரெண்டாவது அண்ணன ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு உனக்கு இப்ப அழுகை வருதே, இதே அழுகை ஏன் உன் மூத்த அண்ணனுக்காக வரல?” என்று பொறுமையாக கேள்வியெழுப்பினார்..
“ அந்த பிச்சைக்காரன் ஒன்னும் எனக்கு அண்ணன் இல்ல. அச்சு மட்டும் தான் எனக்கு அண்ணன்” என்று முகம் சிவக்க, கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை கன்னங்களில் வழிய விட்டவாறே ஓடிச்சென்று அர்ஜுனை கட்டிக்க கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அந்த வீட்டின் இளவரசி அழுதது கமலத்திற்கும் கூட வலித்தது. பெற்றவர்களே தன் பிள்ளையை ஏற்றுக்கொள்ளமால் எத்தனையோ கொடுமை படுத்தியிருக்கும் பொழுது, உடன்பிறந்தவர்கள் மட்டும் விதிவிலக்கா என்று மனதிற்குள் எண்ணியவர், நேராக ஜனனியை நோக்கிச் சென்று அவளை அழைத்து வந்து, அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து அவளை மடியில் படுக்க வைத்து
“ஜானுமா! அப்படி சொல்ல கூடாதுடா. அவன் பிச்சைக்காரன் இல்லடா. அவன் போட்ட பிச்சைல தாண்டா நீயும் உன் அண்ணனும் வாழ்ந்துட்டு இருக்கறீங்க..” என்று கூறியதும் முதல் முறையாக தன் பாட்டி என்ன சொல்கிறார் என்று இருவருமே கவனிக்க ஆரம்பித்தனர்.. இதற்கு முன்பும் பலமுறை எடுத்து சொல்ல கமலம் முயற்சிதாலும் ஏய் கிழவி உன் எஃப் எம்ம கொஞ்ச நேரம் ஆப் பண்ணு என்று இருவரும் ஒரே கோரஸாக மறுத்துவிடுவார்கள். ஆனால் இன்று நடந்த களேபரம் அவர்களை கவனிக்க வைத்திருந்தது. அர்ஜுனையும் கைநீட்டி அழைத்தவர், அவனையும் தன் அருகே அமர்த்திக் கொண்டு, அர்ஜுனிடம் பேச்சைத் தொடர்ந்தார்
“ ஏன் அர்ஜுன்? இன்னைக்கு இந்த சின்ன வயசுலையே வெளிநாட்டு கார வாங்கி விக்கற கம்பெனி ஆரம்பிச்சு கோடி கோடியா சம்பாதிக்கற, உன் தங்கச்சியும் டாக்டர் படிப்ப முடிச்சுட்டானா அவளும் லட்ச கணக்குல சம்பாதிப்பா. எனக்கு சந்தோஷம்தான். ஆனா இது முழுக்க முழுக்க உங்க உழைப்புன்னு உங்களால சொல்ல முடியுமா.?” என்று கேட்டுவிட்டு இருவரையும் மாறி மாறி பார்த்தார்..
இருவருமே இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தனர்
“ஆனா உங்க அண்ணன் கிட்ட ஒத்த ரூபா இருந்தாலும், அது அவன் ரத்தத்த வேர்வையா சிந்தி சம்பாரிச்சது. இன்னைக்கு வரைக்கும் தன் தேவைன்னு எதுக்காவது உங்க கிட்ட வந்திருக்கானா?, இல்ல தான, அப்பறம் ஏன் அவன அவ்வளவு கேவலமா நினைக்கறீங்க”
“ நாங்க நல்லா படிச்சோம். அதனால டாடி எங்கள படிக்க வச்சார். அவன் ஒரு மக்கு அதனால அவன் படிக்கல. அதுக்கு நாங்க என்ன செய்யறது. நாங்க ரெண்டு பேரும் அவன்கிட்ட இதுவரைக்கும் ஏதாவது கேட்டுருக்கமா” என்று ஜனனி விட்டு கொடுக்க மனமில்லாமல் எதிர்வாதம் செய்தாள்.
தன் பேத்தி கூறியதை கேட்டு ஒரு நொடி அவளை கூர்மையாய் பார்த்துவிட்டு
“உங்களுக்கு கிடைச்சது அவனுக்கும் கிடைச்சிருந்தா இந்நேரம் இந்த உலகத்தையே அவன் விலை பேசிறுப்பான். உங்க அப்பா அம்மாதான் அந்த காலத்து ஆளுங்க. ஏதோ காரணத்துக்காக உங்க அண்ணன வெறுக்கறாங்க. நீங்க ரெண்டு பேரும் இந்த காலத்து பிள்ளைங்கதான, அவன அண்ணனா ஏத்துக்க முடியலைனாலும், ஒரு பிரெண்டாவாவது ஏத்துக்கலாம்ல” என்று பேசிக் கொண்டிருக்க
“ அம்மா! அந்த நா.... “என்று சொல்ல வாயெடுத்த தன் மகனை பார்வையாலே அடக்கியவர்
“ ஏற்கனவே ரெட்ட உசுர ஒத்த உசுராக்கி நீயும் உன் அப்பனும் பெரிய பாவத்த செஞ்சுடீங்க சரவணா. அதுபோதாதுன்னு இத்தன வருஷம் அந்த பையன என்னெல்லாம் சித்தரவதை செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சுட்ட. அந்த பாவமே உன் ஆயுசுக்கும் தீராம எங்க இந்த பிள்ளைங்களையம் சேர்த்து பாதிச்சுறுமோன்னு நான் பயந்துட்டு இருக்கேன். இதுக்குமேலையும் நீ மாறாம இப்படியே இருந்தா ???
வணக்கம் நண்பர்களே.. நான் உங்கள் வடிவேல். விதியோடு மோதி விளையாடு கதையின் ஒரு அத்தியாயம் பதிவு பண்ணிருக்கேன். இது வெறும் டீசர் தான் கதையின் எதிர்காலத்தை சொல்லிருக்கேன்.. கைல அடி பட்டதால என்னால டைப் பண்ண முடியல. அதனால தான் இடைவெளி அதிகமாயிடுச்சு.. இப்ப கொஞ்சம் பரவால்ல... இப்பவும் கம்ப்யூட்டர் ல டைப் பண்ண முடியல மொபைல்ல இருந்துதான் பதிவு பண்ணறேன். இந்த கதையோடு சேர்த்து மத்த கதைகளையும் தொடர்ந்து குடுக்கறேன். இந்த கதை ஐம்பது சதம் உண்மை. மீதி என் கற்பனை.. சில இடங்களில் உணர்ச்சி பூர்வமான வரிகள் வரலாம். அதை யாரும் தனியாக பொருள் கொள்ள வேண்டாம். கதையோடு சேர்த்து படிங்க. கதையை தாமதமாக பதிவிடறதுக்கு காரணம், முதல்ல எனது வேலை பளு, அடுத்தது எனக்கு ஏற்பட்ட சிறிய விபத்து.. இனி எந்த காரணமும் சொல்லாம கதையை தொடர்ந்து குடுக்கறேன்
ஐ ஹேட் யூ.. பட்... ல நிறைய பேர் சொன்னது சில காட்சிகள் நாங்களே அங்க இருக்கற மாதிரி உணர்ந்தோம்னு சொன்னாங்க.. அதே மாதிரி இந்த கதைலையும் எனக்கு ஒரு இலக்கு இருக்கு அது நிறைவேறுமா? இல்லையா அப்படின்னு உங்க கருத்துக்கள் மூலமாக தான் நான் தெரிஞ்சுக்க முடியும். நான் முதல்லையே சொன்னது போல இது மூட நம்பிக்கைக்கு எதிரான கதை.. இது மாதிரி இந்த உலகத்துல எங்கயாவது நடந்திருக்கலாம். இல்லைனா என் கற்பனையாகவே இருக்கலாம். கதைல எல்லா உணர்வுகளும் கலந்து வரும். அதில் காதலும் சேர்ந்து வரும் . காதல் மட்டுமே என் இலக்கு இல்லை.. பொறுமையா படிங்க உங்களை அழ வைக்க, சிரிக்க வைக்க, ரசிக்க வைக்க நான் ரெடி
இருளும் விடியலும் காதல் கொள்ளும் அதிகாலைப் பொழுது. மணி மூன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், டெல்லி நகரம் முழுவதும் நித்திரையில் ஆழ்ந்திருந்தது.
ரேஸ் கோர்ஸில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் அனைத்து வீட்டின் விளக்குகளும் உயிரற்று இருந்து நிலையில், ஆதி குருஃப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் தலைவர் தட்சணாமூர்த்தியின் இல்லம் மட்டும் பலவண்ண அலங்கார மின்விளக்குகளால் உயிர் பெற்றிருந்தது..
வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, வீட்டை சுற்றிலும் உறவினர்கள் நண்பர்கள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், காவல் துறையை சேர்ந்தவர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அனைவரது கைகளையும் ஏதோவொரு பரிசு பொருள் ஆக்கிரமித்திருக்க
‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்யா’ என்ற வாசகம் பொன் எழுத்துக்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் வீட்டிலுள்ள வேலையாட்டகள் உட்பட, அனைவரது முகங்களும் சோகத்தை சுமந்து கொண்டிருக்க, பூஜையறையில் சிதைந்த ஓவியமாக அமர்ந்திருந்தார் ராணி..
இரு கண்கள் மூடியிருந்த நிலையிலும் கண்ணீர் வழிந்தது கொண்டிருக்க, உதடுகள் மட்டும் ஏதோவொன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.I
ஆதிகேசவன் மீனாட்சி தம்பதியரின் மூத்த மகன் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி ராணி தம்பதியரின் இரண்டாவது மகன், அந்த வீட்டின் இளவரசன் பதினான்கு வயதான ஆதித்யா! காணாமல் போய் இன்றோடு ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இதுவரை எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவனை பற்றிய சிறிய தகவல் கூட கிடைக்கவில்லை. காவல் துறையினர் உதவியுடன் டெல்லியை சல்லடையாக சலித்தும் ஆதித்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆதித்யாவுக்காக வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்கள் ஒருபுறம் மலைபோல் குவிந்திருக்க, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள், தட்சணாமூர்த்திக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர்.
ஆதித்யா வீட்டை விட்டு சென்றதிலிருந்து ராணி நடை பிணமாகவே மாறி போனார். அன்றிலிருந்து அவருக்கு பூஜையறையே கதியென்று ஆகிப் போனது.
ஆதித்யா இல்லையென்றாலும் ஒன்றரை வருடங்களாக அங்கு எதுவும் மாறவில்லை. மாறவில்லை என்பதைவிட, ராணி எதையும் மாற்ற அனுமதிக்க வில்லை. ஆதித்யா இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்களோ அதைவிட அதிகமாகவே செய்து கொண்டிருந்தார் ராணி...
காணாமல் போன தன் பேரனை நினைத்து கவலை கொள்வதா?, அல்லது மனநோயாளியாக மாறிக்கொண்டிருக்கும் தனது மருமகளை எண்ணி கவலை கொள்வதா? என்று புரியாமல் தொழிலில் சக்கரவர்த்தி என்று பெயரெடுத்த ஆதிகேசவன் கூட கலங்கிப் போனார்..
வந்திருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டிருக்க,
“ மம்மி! பிளீஸ்.. இந்த தண்ணியாவது குடிங்க” என்று கண்களில் கண்ணீரோடு தன் அன்னையின் அருகில் நின்று கொண்டிருந்தாள் ஜான்வி..
தலையை நிமிர்த்தி கண்ணீரோடு நின்றிருந்த தன் மகளை நோக்கியவர், ‘வேண்டாம்’ என்பதைப்போல மறுப்பாய் தலையசைத்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்..
கைகளில் தண்ணீர் குவளையுடன் அழுது கொண்டிருந்த தன் மகளை அணைத்தபடியே, அவளது கைகளில் இருந்து கோப்பையை வாங்கிய தட்சிணாமூர்த்தி,
“ராணிம்மா!! நீ இப்படி பட்டினியா இருந்து உன்ன வருத்திக்கறதுனால காணாம போன ஆதி கிடைச்சுருவானா?.. நீ இப்படியே இருந்தா உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு.. ஆதிக்கு எதுவும் ஆகாது. சீக்கிரமே நம்ம பையன் கிடைச்சுருவான். பிளீஸ் இந்த தண்ணியாவது குடி “ என்று கூறிய படியே தன் மனைவியின் தோளை தொட, விருட்டென்று எழுந்து அவரது கைகளில் இருந்த தண்ணீர் குவளையை தட்டிவிட்டுவிட்டு, கண்களில் அக்கினியை தேக்கி தன் கணவரை முறைத்தவர்
“எனக்கு என் பையன் வேணும்... எல்லாமே உங்களாலதான்.. அவன் வீட்டைவிட்டு போனதுக்கு நீங்கதான் காரணம்..” என்று கோபத்தில் வெடித்தவர்...
“ஆதி! எங்கடா கண்ணா நீ இருக்க.. மம்மிகிட்ட வந்துருடா “ என்று தான் மகனின் புகைப்படத்தை மார்போடு அணைத்து கதறிய படியே மயங்கிச் சரிய, ஓடிச்சென்று தன் மனைவியை கீழே விழாமல் தாங்கிய தட்சிணாமூர்த்தி..
“ராணி..! ராணி..!” என்று அவரது கன்னங்களில் மெதுவாக தட்டிக் கெண்டே அமர்ந்தார்..
உடனடியாக அங்கிருந்த செவிலியர் ஒரு மருந்தை ஊசி வழியாக அவரது உடம்பில் செலுத்த, சிவிநாடிகளில் சுயஉணர்வை அடைந்தவர், கண்ணீரோடு தன்னை மடிதங்கியிருந்த கணவனை கண்டவர்
“ஏங்க அப்படி செஞ்சீங்க. எனக்கு நம்ம பையன் வேணுங்க. எம் பையன்...ஆ..தி...ஆ...தி..” என்று உளறிய படியே கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு செல்ல, அவரை தூக்கிக்கொண்டு தனது அறைக்கு சென்றார்...
ஆனைமலை, பொள்ளாச்சி..
“ஜனனி ..! ஓடாத நில்லு.. ஆத்தா கூப்பிடறாங்க..” என்று கத்தியபடியே தன் தங்கையை துரத்த, அர்ஜுனிடம் சிக்காமல் வீட்டை சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள் ஜனனி. ஒவ்வொரு வாரமும் இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். வாரத்தின் இறுதி நாளில் வயிற்றை சுத்தம் செய்வதற்காக அந்த வீட்டிலுள்ள அனைவரும் வேப்பந்தலைய அரைத்து உண்பது வழக்கம். ஆனால் ஜனனிக்கோ வேப்பந்தலைய பார்த்தாலே கசப்பெடுக்க ஆரம்பித்துவிடும். அதற்கு பயந்துதான் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறாள்.
தனது பேத்தியை துரத்தி துரத்தி கால்கள் வழியெடுக்க, திண்ணையில் அமர்ந்த கமலம், தனது பேரனிடம் ஜனனியை பிடிக்கும் வேலையை ஒப்படைத்திருந்தார்.. முழுதாக வீட்டை ஐந்து சுற்று சுற்றி போக்கு காட்டியவளால் அதற்கு மேல் ஓட முடியாமல் அங்கேயே மண்டியிட்டு அமர, பின்னாலேயே துரத்தி வந்த அர்ஜுன், ‘மாட்டிகிட்டயா’ என்பதைப்போல ஒரு பார்வையில், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, இடுப்பில் கை வைத்தபடியே தன் தங்கையை பார்த்து புன்னகைக்க..
“அச்சு.. பிளீஸ் அச்சு... எனக்கு வேண்டாம்.. நீ நல்ல அண்ணன் தான.. எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா?” என்று முகத்தை பாவமாக வைத்து கெஞ்சிக் கொண்டிருக்க, அதை சட்டை செய்யாமல்
“ஆத்தா.... ஜனனி மட்டிக்கிட்டா என்று பெருங்குரலில் கத்த ஆரம்பித்தான்.
அர்ஜுன் தங்கையை இறுக்கி பிடித்துக் கொள்ள, கமலம் தன் கையிலிருந்த உருண்டையை அவளது வாயை திறந்து உள்ளே அடைத்து சிறிது தண்ணீரையும் ஊற்றி, அவள் துப்பிவிடாதவாறு பிடித்துக் கொள்ள மூச்சுவிட முடியாமல் கல்லை விழுங்குவதை போல கடினப்பட்டு விழுங்கினாள்.. விழுங்கி இரண்டு வினாடிகள் கூட ஆகியிருக்காது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு ஓ.ஓ..ஓ.. வென ஓங்கரித்தவள், காலையில் குடித்த பால் முதற்கொண்டு வெளியே தள்ள
“அடிக்... கழுதை.. எல்லாத்தையும் துப்பிட்டையா.. கொஞ்சூண்டு வேப்பந்தலைய முழுங்கருதுல உனக்கு என்னடி கஷ்டம்.” என்றவாறு அவளது தலையில் கொட்ட,
“ஹேய்!.. கிழவி.. நான் உன்கிட்ட கேட்டேனா?. நான்தான் வேண்டாமுன்னு சொல்லறேன்ல். அப்புறம் ஏன் எல்லாரும் சேர்ந்து என்ன டார்ச்சர் பண்ணறீங்க... இதுக்கெல்லாம் ஒருநாள் நீங்க பதில் சொல்லியே ஆகணும்..” என்று மிரட்டிக் கொண்டிருந்தாள்.
“ஜனனி.. ஆத்தா கிட்ட இப்படி பேசக்கூடாது னு உன்கிட்ட எத்தன தடவை சொல்லறது..”என்று சக்கரை டப்பாவை தன் பின்னால் மறைத்துக் கொண்டு தன் மகளை போலியாக மிரட்டிய படியே வந்தார் சரவணன்.
“ஆமாடா... நீயும் உன் மகள மிரட்டிருவ, அவளும் அப்படியே பயந்துபோய் நீ சொல்லறத கேட்டுருவா.. நீ இப்படி செல்லம் குடுத்தே அவள கெடுத்து வச்சுருக்க.. எக்கேடோ கெட்டப் போங்க.. எனக்கென்ன?” என்று சலித்தவாறு அர்ஜுனை அழைத்துக் கொண்டு வீட்டினுள்ளே சென்றார்..
சரவணனிடமிருந்து சக்கரை டப்பாவை வாங்கி மடியில் வைத்துக் கொண்டவள், அதிலிருந்த ஸ்பூனில் சக்கரையை அள்ளி வாயில் நிறைத்தவாறே
“தாதி.. என்ன தாக்தருக்கு பதிக்க வைங்க” என்று ஜனனி கூற, என்ன சொல்லுகிறாள் என்று புரியாமல் முழித்தவர், பின்பு புரிந்ததும் இப்பொழுது எதற்காக இதை கூறுகிறாள் என்று குழம்பியபடியே விநோதமான பார்வையில் தன் மகளை ஏறிட,
“என்ன டாடி அப்படி பாக்கறீங்க...? நான் டாக்டர் ஆனாத்தான இந்த கிழவிக்கும் அச்சுக்கும் ஊசி போட முடியும். நான் வேண்டாமுன்னு சொல்ல சொல்ல எப்படி என்ன கொடுமை படுத்தறங்களோ, அதே மாதிரி அவங்க வலிக்குதுனு சொன்னாலும் விடாம பெரிய பெரிய ஊசியா ரெண்டு பேருக்கும் போடணும். அதுக்கு நான் டாக்டர் ஆகணும்” என்று தனது லட்சியத்தை தெரிவிக்க,
“ஹா ஹா ஹா ஹா” என்று சத்தமாக சிரித்தவர்,
“சரிம்மா.. டாடி உன்ன டாக்டருக்கு படிக்க வைக்கிறேன்.. ஆனா கலெக்டர் ஆகணுங்கிற உன்னோட பழைய லட்சியம் என்னாகறது.”
“முதல்ல டாக்டர் ஆகிட்டு, அப்பறம் கலெக்டர் ஆகிக்கறேன்” என்று சக்கரை டப்பாவை காலி செய்தபடியே கூறினாள்.
“ சரிம்மா உனக்கு என்ன படிக்கணும் னு விருப்பமோ டாடி அத படிக்க வைக்கறேன். இப்ப போய் குளிச்சுட்டு வேற துணி மாத்து டிரெஸ் எல்லாம் வாந்தியா இருக்கு பாரு.” என்று கூறிவிட்டு சரவணனும் உள்ளே செல்ல, தந்தையை தொடர்ந்து உள்ளே செல்ல எழுந்தவளை ஏதோ ஒரு உணர்வு உந்தித்தள்ள வீட்டின் வாயிற் கதவை திரும்பிப் பார்த்தவள், அங்கே நின்றிருந்தவனை கண்டு ஒருநொடி திகைத்தாள். தனக்கு பரிச்சயமான முகம் போலத் தோன்ற அவனை நோக்கி முன்னேறியவள் அவனை நெருங்க நெருங்க யார்ரென்று கண்டுகொண்டதும், ஒருவித பயம் தொற்றிக் கொள்ள அப்படியே அசையாமல் நின்றிருக்க,
“ஜனனி.. நான்..” என்று அவன் வாய்திறக்கவும்
“டாடிஈ ஈ ஈ.... அந்த பிச்சைக்காரன் மறுபடியும் வந்துட்டான்” என்று அலறிக் கொண்டே கைகளில் வைத்திருந்த சக்கரை டப்பாவை கீழே போட்டுவிட்டு வீட்டினுள்ளே ஓட, ஜனனியின் அலறல் கேட்டு சரவணன் வெளியே வர, தயங்கிய படியே தனது வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் வேலு என்கிற கனகவேல்..
தயங்கித் தயங்கி வீட்டினுள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவன் தன் தந்தை சினம் கொண்டு தன்னை முறைப்பதைக் கண்டு,அசையாமல் கைகளை பிசைந்த படியே நின்றிருந்தான். கனகவேல் வீட்டை விட்டுச் சென்றதும், தன்னை பிடித்த சனியின் ஒழிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டவர், அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்க்க வில்லை. மேலிருந்து கீழாக அவனை அளவெடுத்தவருக்கு, அவனது அழுக்கு படிந்த உருவமும், கிழிந்து போன உடையும், ஒட்டிய வயிறும், ஒடுங்கிய கன்னமும், குழிவிழுந்த கண்களும் அவன் பட்ட துயரை வார்த்தை இல்லாமல் பறைசாற்றியது. லேசாக தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டவர், அவனது கூறிய கண்களை நேர் பார்வை பார்க்க, அவனது கண்களில் இருந்த கம்பீரம் சரவணனுக்கு புதிதாக தெரிந்தது.
அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவரின் சிந்தனையை கனகவேலின் “அப்பா” என்ற அழைப்பு கலைக்க சுயஉணர்வுக்கு வந்த சரவணன், நேராக மாட்டு கொட்டறைக்குள் சென்று வண்டி இழுக்கும் எருதுகளை அடிக்க பயன்படுத்தும் சாட்டையை எடுத்து கொண்டு அவனை நோக்கி வந்தார்.
தந்தையின் கையிலிருந்த சாட்டை கம்பை கண்டும் கனகவேல் நின்ற இடத்திலிருந்து இம்மியளவும் அசையவில்லை. அவனது இந்த திடீர் துணிச்சல் சரவணனுக்குள் நெருப்பை பற்ற வைக்க, சற்றும் யோசிக்காமல் சாட்டை கம்பால் அவனை விளாச ஆரம்பித்தார்.
“அப்பஆ ஆ... வலிக்குதுப்பாஆஆ.. இனி இப்படி போக மாட்டேன்... ஐயோ..! ஆத்தா... ஆத்தா... அடிக்காதீங்க..ப்பா..” என்று வலி தாங்க முடியாமல் கதறினாலும் நின்ற இடத்தைவிட்டு ஒரு அடிகூட நகரவில்லை.
அதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்த அம்சவேணியும் அர்ஜுனும் சரவணன் அடிப்பது கனகவேலை தான் என்று தெரிந்தாலும், அவரது தாயுள்ளம் பதறவில்லை.. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அடிவாங்குவது தங்களது உடன் பிறந்தவன் என்று தெரிந்தாலும் சிறுவர்கள் இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.. வீட்டின் முற்றத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் மட்டும் நிறுத்தாமல் குறைத்துக் கொண்டே இருந்தது.
ஆத்தா என்ற அலறலில் தனது பேரன் வந்துவிட்டான் என்று கண்டு கொண்ட கமலம், அவனை காப்பாற்ற ஓடி வருவதற்கும், அடி தாங்காமல் கனகவேல் மயங்கி சரிவதற்கும் சரியாக இருந்தது.. தன் பேரனின் நிலையை கண் முன்னே கண்டவரின் உள்ளம் பதற
“ஐயா... என்னபெத்த ராசா... என் குலசாமி... என்று கூக்குரலிட்ட படியே தன் பேரனை நெருங்கி அவனை தூக்கி தன் மடியில் கிடத்தியவர்,
“டேய்... முனியா, கணேசா... யாராவது தண்ணி கொண்டு வாங்கடா... என்று கதறியபடியே
“ ஐயா .. வேலு... என்சாமி... எந்திரியா... கண்ண திறந்து இந்த ஆத்தாள பாருயா..” என்று அரற்றி கொண்டிருந்தார்..
கமலம் சத்தம் குடுத்ததும் வேகமாக ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்த கணேசன், கனகவேலின் முகத்தில் தெளித்ததும் லேசாக கண்களை திறந்தவன் தனது பாட்டியை கண்டதும்
“ஆத்தா... “என்று கேவிய படியே அவரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
“ அம்மா... இப்ப எதுக்கு இந்த சனியன மடில தூக்கி வச்சுட்டு ஒப்பாரி வைக்கிற. அவனவிடு, இந்த சனியன அடிச்சு கொன்னாதான் எனக்கு நிம்மதி” என்று கனகவேலின் காலை பிடித்து தரதரவென இழுக்க, தனது மகனிடமிருந்து பேரனை காப்பாற்ற மகனின் காலில் விழுந்தவர்
“என் பேரன விட்டுரு சரவணா.. அவன் தாங்க மாட்டான்.. இனிமேல் அவன் எங்கையும் போகமாட்டான்..” என்று மன்றாட, அவனது கால்களை விடுவித்தார்
“சரிம்மா.. ஆனா இந்த சனியன் நான் இருக்கறப்ப இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது. என் பார்வைலையும் படக் கூடாது. இனிமேல் எங்கயாவது போகணும்னு நினைச்சாலும் சரி , ரெண்டு துண்டா வெட்டி புதைச்சுடுவேன்” என்று கூறிவிட்டு வீட்டினுள்ளே சென்றுவிட, தன் மகனின் முகத்தை கூட பார்க்காமல் அம்சவேணியும் கணவரின் பின்னே வீட்டினுள் சென்றார்..
அர்ஜுனும் ஜனனியும் ஓரமாக நின்று நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த வீட்டின் இன்னொரு வேலையாள் முனியனும் வந்துவிட இருவரும் சேர்ந்து அவனை தூக்கிக் கொண்டுபோய் திண்ணையில் கிடத்தி, அவன் அணிந்திருந்த சட்டையை கழற்றியதும், சாட்டை கம்பின் தடங்கள் வரி வரியாக குறுக்கும் நெடுக்குமாக அவனது பொன்னிற உடலில் தன் தடையத்தை பதித்திருந்தது. முகத்தில் அங்கங்கே குருதி கொப்பளிக்க கண்கள் லேசாக வீங்க ஆரம்பித்திருந்தது.
தன் நிலையை எண்ணி கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்த தனது பாட்டியின் கண்களை துடைத்துவிட்டவன், அவரது கண்களை நோக்கி ...
“ஆத்தா... பசிக்குது” என்று கூறியதுதான் தாமதம்.. நேராக வீட்டிற்குள் செல்ல இரண்டடி எடுத்து வைத்தவர். பின் கணேசனிடம் திரும்பி..
“டேய்.. கணேசா.. சீக்கிரம் போய் உன் வீட்டுல சாப்பிட ஏதாவது இருந்தா எடுத்துட்டு வாடா” என்று கண்ணீரோடு கூற, வேகமாக தனது குடிசையை நோக்கிச் சென்றவன் அங்கிருந்த பழைய சோற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்து வந்து கனகவேலின் முன்னால் வைத்ததும்,
நடுங்கும் கைகளால் அந்த பாத்திரத்தை பற்றியவன், பசி ருசியறியாது என்பதை போல அவசர அவசரமாக விழுங்க ஆரம்பித்தான்.
அவன் சாப்பிடும் வேகத்திலேயே பல நாட்களாக பட்டினி என்று கமலத்திற்கு புரிந்து போனது, தனது பேரனின் நிலையையும், எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையையும் எண்ணி மனதிற்குள் மருகியவர், அவன் சாப்பிட்டு முடித்ததும் தோப்பிலிருந்த கிணற்றடிக்கு அழைத்து சென்று முனியன் முடியை வெட்டி குளிப்பாட்டிவிட, உடலில் உள்ள காயங்களுக்கு மருந்திட குப்பைமேனி இலையை பறித்து வருமாறு கணேசனிடம் கூறிவிட்டு, மாற்று உடை எடுக்க தனது அறைக்கு சென்றார்.
தன் பேரன் குளித்து முடித்ததும் அரைத்து வைத்திருந்த மூலிகையை காயம் பட்ட இடங்களில் கமலம் தடவி விட, மூலிகையின் எரிச்சலால் நெளிய ஆரம்பித்தான்
“ கொஞ்சம் பொறுத்துக்க வேலு... சீக்கிரமே எரிச்சல் நின்னுரும் “என்று கண்ணீரோடு கூறிய தன் பாட்டியை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தவன், பின் ஏதோ சொல்ல வாயெடுத்து ஒன்றும் சொல்லாமல் அமைதியாகி போனான்.
கனகவேலின் இந்த புன்னகை கமலத்திற்கும் கூட புதிதாக, புதிராக தோன்றியது. அவனது ஒரு நொடி புன்னகையில் ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருப்பதாக எடுத்துக்காட்ட, எதையும் சட்டை செய்யாமல் அவனுக்கு மருந்திட்டுவிட்டு, வீட்டின்பின்புறமாக இருந்த சிறிய அறையை சுத்தம் செய்து அவன் தங்குவதற்கு எதுவாக மாற்றி, ஒரு பாயை விரித்து அதில் அவனை படுக்க வைத்துவிட்டு, பக்கத்தில் அமர்ந்து விசிறி விட ஆரம்பித்தார்..
“ஆத்தா...”என்று கண்களை மூடிய படியே கனகவேல் அழைக்க,
“சொல்லு ராசா...” என்று வாஞ்சையாக தலையை தடவிய படியே விசாரித்தார்...
“ஏன் ஆத்தா... நிஜமாவே இவங்கதான் என் அம்மா அப்பாவா??” என்று எழுந்து அமர்ந்தவாறே கேள்வியெழுப்ப.. ஆம் என்பதை போல் தலையசைத்தார்..
“அப்பறம் ஏன் என்ன மட்டும் அவங்க யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது... நான் என்ன ஆத்தா தப்பு செஞ்சேன்”
“நீ எந்த தப்பும் செய்யல ராசா... எல்லாம் விதி.. உன்னோட இந்த நிலை தெரிஞ்சுருந்தும் எதுவும் செய்ய முடியாத பாவி ஆகிட்டேன்.. ஆத்தா கிட்ட இப்ப எதையும் கேக்காத ராசா. என்னைக்காவது ஒருநாள் நானே உனக்கு எல்லாத்தையும் சொல்லறேன். இப்ப நீ நிம்மதியா தூங்குயா..” என்று கண்ணீரோடு கூற, தனது பாட்டியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாய் மேற்கொண்டு எதையும் கேட்காமல் நித்திரையை தழுவ ஆரம்பித்தான்...
ஆதித்யாவின் பிறந்தநாள் முடிந்து அன்றைய தினம் கழிந்திருந்த நிலையில், தூக்க மருந்தின் உதவியால் நன்றாக உறங்கிய ராணி, மெதுவாக எழுந்து குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு தனது அறையில் இருந்து வெளிப்பட்டார்.
ஆத்தியா காணாமல் போனதிலிருந்து ராணி எதிலும் கலந்து கொள்வதில்லை, ஜான்வியை தவிர்த்து யாரிடமும் பேசுவதுமில்லை.. அப்படியே பேசினாலும் அது ஆதியை பற்றியே இருக்கும்.
கம்பீரமாக வேலையாட்களுக்கு கட்டளையிட்ட படியே மகாராணியாக வலம் வரும் தனது மருமகள், இன்று மகனோடு சேர்த்து தன் சுயத்தையும் துலைத்துவிட்டு சோக சித்திரமாக நடமாடுவதை ஆதிகேசவனால் கண்கொண்டு காண முடியவில்லை.. தனக்கு எதிரே தலையை சோபாவில் சாய்த்து அமர்ந்தவரை ஏறிட்டு நோக்கியவர், இன்று பேசியே தீரவேண்டும் என்று முடிவெடுத்து
“ராணி..!” என்று அழைத்தார்... தன் மாமனாரின் குரலில் தன்நிலை அடைந்தவர்
“சொல்லுங்க மாமா..” என்று சுரத்தில்லாமல் கூறினார்
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற ராணி.. உன்ன இப்படி பார்க்க முடியல ராணிம்மா.. நீ பழைய நிலைக்கு மாறனும். ஆதி ஒன்னும் உலகம் தெரியாது குழந்தை கிடையாது. என் பேரனுக்கு எதையும் சந்திக்கற சமாளிக்கற துணிச்சல் இருக்கு. அவன் திரும்பி வரப்ப உன்ன இப்படி பார்த்தா சந்தோச படுவானா.. சொல்லு... அவன் இத்தனை நாள் வராம இருக்கானா நிச்சியம் ஏதாவது காரணம் இருக்கும். ஆதி இல்லாது உனக்கு மட்டும்தான் இழப்புன்னு நினைக்குறையா..? உன் அளவு வலியும் வேதனையும் எங்களுக்கும் இருக்கு. ஆனா அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா..? நாளைல இருந்து நீ கம்பெனிக்கு போற”என்று கூறிக் கொண்டிருக்க
“ஜான்வி ஸ்கூல்க்கு போயிட்டாளா??” என்று கேள்வியெழுப்பிய தன் மருமகளை விசித்திரமாக பார்த்தவர்..
“ராணி... மணி இப்ப பதினொன்னு ஆகுது.. ஜான்வி காலைல ஏழு மணிக்கே போய்ட்டா... எப்பவும் ஆதிய பத்தியே யோசிக்கறையே, இந்த ஒன்றரை வருஷத்துல ஜான்விய பத்தி என்னைக்காவது யோசிச்சிருக்கியா..?? ஒரு பெண் குழந்தைக்கு இந்த கால கட்டத்துல தயோட தேவை எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சும் எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது.. “ என்று வரிசையாக ஆதிகேசவன் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க , எதுவும் சொல்லாமல் மவுனமாக அமர்ந்திருந்தார்... ராணியின் இந்த அமைதி ஒருவித எரிச்சலை தோற்றுவிக்க, அடுத்த வார்த்தை பேச வாயெடுக்கும்முன்...
“டிரிங் டிரிங்... டிரிங் டிரிங்..” என தொலை பேசி அழைக்க, பேசுவதை விட்டு விட்டு தொலைப்பேசியை எடுத்து காதில் பொருத்தி..
“ஹலோ... ஆதிகேசவன் ஹியர்...” என்று தொண்டையை செருமி கொண்டு கூற,
“நான் ஆதி பேசறேன்” என்று எதிர்புறமிருந்து கணீர் குரலில் பதில் வந்தது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.