All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 16

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
16

அடுத்த நாள் காலை சித்தார்த், வர்ணா கொடுத்த ஷர்ட்டை போட்டு கொண்டு தன் தாய் தனக்கு பரிசாக தந்த வாட்ச்சையும் கட்டிக்கொண்டு கல்லூரிக்கு செல்கிறான்.

தான் தந்த உடையில் இன்று சித்தார்த் வருகிறானா? என்று ஆர்வமாக வாயிலையே பார்த்தவாறு அமர்ந்திருந்த வர்ணா, தான் கொடுத்த உடையில் மிகவும் வசீகரமாகவும் கம்பீரமாகவும் நடந்துவரும் சித்தார்த்தை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு நிலாவுடன் பேச தொடங்கினாள்.

அன்று சித்தார்த்தின் பிறந்தநாள் என்பதால் மாலை அனைவருக்கும் சித்தார்த் ட்ரீட் கொடுக்க. மாணவர்கள் அனைவரும் அந்த கேன்டீனை ஒரு வழியாக்கிவிட்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

சித்தார்த்தும் தன் வீட்டிற்கு செல்ல திரும்பும் போது, நிலா அவனருகில் வந்து ஒரு பார்ஸலை நீட்டி, “ஹாப்பி பர்த்டே சித்தார்த் அண்ட் ஐ லவ் யூ”என்று கூறி ப்ரபோஸ் செய்கிறாள்.

சித்தார்த், “எப்படி இவள் மனம் புண் படாதவாறு அவளின் ப்ரொபோஸலை நிராகரிக்கலாம்?” என்று யோசித்தவாறு நிமிர்ந்து பார்ப்பதற்குள் “பளார்” என்ற சத்தத்துடன் நிலாவை ஓங்கி அறைந்திருந்தால் வர்ணா. அனைவரும் சுதாரித்து அவளை கேள்வி கேட்பதற்குள் அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டாள்.

சித்தார்த், அதிர்ந்து நின்றிருந்த நிலாவிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு வர்ணாவை சாந்த படுத்த அங்கிருந்து வேகமாக வெளியில் வந்து சுற்று முற்றும் பார்க்க, அதற்குள் அங்கிருந்து சென்றிருந்தாள் வர்ணா.

கோபமாக வீடு வந்த வர்ணா தன் செருப்பை மூலைக்கு ஒன்றாக கழட்டி வீச, சத்தம் கேட்டு வெளியில் வந்த பிரேம், “என்னடி ஆச்சு? ஏன் கோவமா இருக்க?” என்று கேட்டான். அவன் கேட்டதை சிறிதும் கண்டுகொள்ளாமல் வேகமாக அவ்விடத்தை விட்டு தன் அறைக்கு சென்றுவிடுகிறாள்.

சிறிது நேரம் கழித்து வந்த வெங்கட், வீட்டில் வர்ணா இருப்பதற்கான அறிகுறி தெரியாததால் பிரேமிடம் சென்று, “வர்ணா எங்க டா?” என்று கேட்கிறார்.

பிரேம், “உள்ள தான் இருக்கா. ஆனா ரொம்ப கோவமா இருக்கா. ஏன் என்று தெரியவில்லை.” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிடுகிறான்.

வெங்கட் தன்னை தூய்மை செய்து கொண்டு தேநீர் தயாரித்து எடுத்துக்கொண்டு வர்ணாவின் அறைக்குள் நுழைகிறார். அவள் அமைதியாக கண் மூடி படுத்திருப்பதை பார்த்து தேநீரை அருகில் உள்ள மேசையின் மேல் வைத்துவிட்டு மெதுவாக அவளின் தலையை கோதி, “என்ன டா? ஏதாவது பிரச்சனையா? இல்லை சித்தார்த் கூட சண்டையா?” என்று பாசமாக கேட்கிறார்.

வர்ணா, “அதெல்லாம் ஒன்றும் இல்லை பா. கொஞ்சம் தலைவலிக்குது.” என்று கூறி அவர் கொண்டு வந்த தேநீரை பருக தொடங்கினாள். சிறிது நேரத்தில் அவளே சரி ஆகிவிடுவாள் என்று தோன்ற, “சரி டீ குடித்து விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு.” என்று கூறி அவள் குடித்துவிட்டு வைத்த டம்பளரை எடுத்துக்கொண்டு வெளியேறினார் வெங்கட்.

வர்ணாவின் அறையில் இருந்து வெளியில் வந்தவர் அங்கு வந்து கொண்டிருந்த சித்தார்த்தை பார்த்து, “நீ தான் அவ கோவத்துக்கு காரணமா? சரி போ, போய் அவளை சமாதான படுத்து. இன்னும் சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருக்காங்க.” என்று புலம்பியவாறே சமயலறைக்குள் சென்றுவிட்டார்.

சித்தார்த் வர்ணாவின் அறை கதவை ஒரு முறை தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான். கதவை தட்டும் சத்தம் கேட்டதுமே அது அவன் தான் என்பது தெரிந்தும் எழாமல் கண் மூடி படுத்திருந்தாள் வர்ணா. (வேறு யாரும் கதவை தட்டி அறிவித்து விட்டு அவள் அறைக்குள் நுழைவதில்லை.)

சித்தார்த் அவள் படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளுடைய கையை மெதுவாக எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, “பிறந்தநாள் அதுவுமா இன்னும் கோவிலுக்கு கூட போகல வரு”என்று பாவமாக கூறுகிறான்.

இதை கேட்டு விருட்டென்று எழுந்து அமர்ந்த வர்ணா, “ஆமாம் இல்லை நானும் ஏதோ நினைப்புல மறந்துட்டேன். ஒரு அஞ்சி நிமிஷம் ஹால்ல வெயிட் பண்ணு நான் ரெடி ஆகி வந்துடுறேன்.” என்று கூறி அவனை அனுப்பிவிட்டு வேக வேகமாக தயாராக தொடங்கினாள்.

சித்தார்த்தும் சிரித்துக்கொண்டே வெளியில் வந்து ஷோபாவில் அமர்ந்துகொண்டு அவளுக்காக காத்திருந்தான். அவள் கூறியது போல் ஐந்து நிமிடத்தில் தயாராகி வர இருவரும் கோவிலுக்கு சென்றனர்.

நாகாத்தம்மன் கோவில். அய்யரிடம் அர்ச்சனை பொருட்களை தந்துவிட்டு இருவரும் தங்களின் மனதிற்குள் தன் காதல் கை கூடவேண்டும், யாரும் தங்கள் காதலின் இடையில் வரக்கூடாது என்று மற்றவருக்கு தெரியாமல் நாகாத்தம்மன் தாயை மனமுருகி வேண்டிமுடித்து மெதுவாக கண் திறந்து பார்த்து இருவரும் சிரித்து கொண்டனர். பின் அய்யர் அர்ச்சனை செய்து தந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு இருவரும் பிரகாரத்தை சுற்றி நடக்க தொடங்கினர்.

இருவரும் எதுவும் பேசாமல் மனதிற்குள் இறைவியை பிராத்தித்தவாறே நடந்து கொண்டிருந்தனர். அப்போது சித்தார்த் வழியில் இருந்த தேங்காய் சில்லை கவனிக்காமல் கால் வைத்துவிட்டான். அதன் கூரிய முனை அவனின் காலை லேசாக கிழித்துவிட்டது.

திடீரென்று ஏற்பட்ட வலியால் சித்தார்த் “ஆ” என்று கத்திவிட்டு, பின் தன் காலில் சிறு கோடாக ரத்தம் வழிவதை பார்த்து அருகில் உள்ள படிக்கட்டில் அமர்ந்தான்.

என்ன ஆனது என்று பார்ப்பதற்காக வர்ணாவும் குனிந்து அவனின் காலை ஆராய்ந்தாள். அவன் காலில் இருந்து வரும் ரத்தத்தை பார்த்ததும் லேசாக தலை சுற்ற, அவள் கண்ணை மூடி மூடி திறந்து சமாளிக்க முயல்வதை பார்த்து சித்தார்த் அவளை திசை திருப்புவதற்காக அவளின் இரு கன்னத்திலும் கை வைத்து தன்னை பார்க்க செய்தான்.

வர்ணா அவனின் திடீர் தொடுகையில் அமைதியாகி அவனையே பார்க்கிறாள். சித்தார்த் அவளின் கண்ணுக்குள் தெரியும் தன்னை பார்த்துக்கொண்டே, “என் பர்ஸ்ல பேண்ட்எயிட்(Band-Aid) இருக்கும் எடுத்து போட்டு விடு.” என்று கூறுகிறான்.

வர்ணா, “நானா?” என்று சிறு அதிர்ச்சியோடு கேட்கிறாள்.

சித்தார்த், “ஆமாம். என் பக்கத்தில் நீ தான இருக்க. வேற யார் எனக்கு போட்டு விடுவாங்க?” என்று சிறு கோபத்தோடு கேட்கிறான்.

வர்ணாவும் ஒரு நிமிடம் அமைதியாகி, பின் எந்த சலனமும் இல்லாமல் அவன் காலை கோவில் குழாயில் வந்த தண்ணீரால் கழுவி பின் தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டு பேண்ட் எயிட் போட்டு விட்டால். பின் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வர்ணா சித்தார்த்தின் வீட்டிற்குள் வந்து அவனை அமர சொல்லிவிட்டு பூஜை அறைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்த அர்ச்சனை பிரசாதத்தை வைத்துவிட்டு ஒருநிமிடம் திரும்பவும் வேண்டிக்கொண்டு ஹாலுக்கு வந்து சித்தார்த் அருகில் நின்றாள்.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “வீட்டில் யாரும் இல்லையா?” என்று கேட்கிறாள்.

சித்தார்த், “இல்லை. அம்மாவும் அப்பாவும் ஒரு பர்த்டே பங்க்ஷனுக்கு போய் இருக்காங்க.” என்று கூறினான்.

வர்ணா, “சரி ஓகே. ஒரு நிமிடம் வெயிட் பண்ணு வரேன்.” என்று கூறி வேகமாக தன் வீட்டிற்கு சென்று அவனுக்காக வாங்கிய கேக்கை எடுத்து வந்தாள். கேக் வெட்டுவதற்கு தோதாக அருகில் இருந்த ஸ்டூலை நகர்த்தி அதில் அழகான சால்வை ஒன்றை விரித்து பின் கேக் வைத்து காண்டிலை ஏற்றிவிட்டு கேக்கை வெட்டுவதற்காக அவனை அருகில் அழைக்கிறாள்.

அவளின் அருகில் வந்த சித்தார்த் கேக் பக்கம் திரும்பாமல் அவளின் புறம் வந்து தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பரிசு பொருளை எடுத்து அவளிடம் நீட்டுகிறான்.

வர்ணா, “பர்த்டே பாய்க்கு நான் தான் டா கிபிட் தரணும். நீ என்னடான்னா எனக்கு கிபிட் தர!” என்று ஆச்சிரியமாக கேட்கிறாள்.

சித்தார்த், “நானும் கிபிட் தான் டி கேக்கறேன். அதை ஓபன் பண்ணி பார்த்துட்டு எனக்கான கிப்ட்ட கொடு.” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு தன் கையில் இருந்த பரிசை அவளுக்கு கொடுக்கிறான்.
 
Top