கானல் நீரோ?? காதல் தேரோ??
அத்தியாயம் 1
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
எனும் பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்த பிரம்மாண்டமான பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு தீபாராதனை காட்டி கடவுளை தொழுது முடித்துவிட்டு வெளியில் வந்த சௌந்தரிக்கு வயது நாற்பத்தைந்து..
ஆனால் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக, சாதாரண கைத்தறி புடவையும் தலையில் ஒரு கொண்டையுமாக எளிய தோற்றத்துடன் வலம் வருவார்.. தினமும் காலையில் எழுந்து பூஜை செய்வது அவரின் சிறுவயது முதல் வந்த பழக்கம்.. அந்த வீட்டில் கடவுள் பக்தி உள்ள ஒரே ஜீவன் என்றுகூட சொல்லலாம்..
நேராக சமையலறைக்கு சென்றவரின் வரவில் புன்னகைத்த வேலைக்காரர்களுக்கு புன்னகையுடன் தலையாட்டியவர்,
“சமையல் எல்லாம் தயாரா மாலதி??” என கேட்டார்..
“எல்லாம் ரெடியா இருக்குமா.. சின்ன தம்பி இன்னிக்கு ஸ்னாக்ஸ் மாதிரி கட்டி தர சொன்னார்.. அதுவும் தனியா ரெடி பண்ணிட்டோம்” என சொன்ன மாலதி, அந்த வீட்டில் சமையல் வேலை செய்பவள்.. அவளுக்கு துணையாக அவளின் தங்கை அமுதா.. கிளீனிங்கும் அவர்களே பார்ப்பதனால் வெளி வேலைக்கு ஒரு ஆண் மற்றும் பகல், இரவு காவலுக்கு இரு வாட்ச்மேன்கள் என அங்கு வேலை செய்பவர்கள் மொத்தமாகவே ஐந்து பேர் தான்.. நிறைய வேலைக்காரர்கள் சுற்றிக்கொண்டிருந்தால் சுதந்திரமாக இருக்க முடியாது என்பது அவர்களின் எண்ணம்..
அதுமட்டும் அல்லாமல் கிடைக்கும் நேரங்களில் சௌந்தரியோ மங்கையோ சமையல் செய்வதும் உண்டு.. அதிலும் ஞாயிறுகளில் மினி விருந்தே சமைத்து ஹோம் தியேட்டர் முன்னால் எல்லாவற்றையும் பரப்பி நிலத்தில் அமர்ந்து ஒருவரை ஒருவர் கேலி, கிண்டல் செய்து இடையிடையே டிவியில் ஓடும் படத்தை பார்த்தபடி உண்டு முடிப்பர்.. வாரம் முழுவதும் ஓடும் மங்கைக்கு அந்த நேரம் அவளின் மூளையின் சூட்டை விரட்டி அடிக்கும்.. அதை எண்ணிப்பார்த்தவர்,
“சரி.. அவங்க மூணு பேருக்கும் காபி கொண்டு போயாச்சா??” எனக் கேட்டார்..
“போய்டுச்சுமா”
“ஓகே.. டைம் ஆகுது, டிபனை டைனிங் டேபிளுக்கு எடுத்துட்டு போங்க” என அவர் சொன்னதும் ஹாட் பாக்ஸில் தயாராக வைத்திருந்த உணவுகளை எடுத்துக்கொண்டு அக்காவும் தங்கையும் சமையலறையை விட்டு வெளியேறி சற்று தள்ளி இருந்த டைனிங் டேபிளில் வைக்கவும் அவர்களின் பின்னால் வந்த சௌந்தரி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்..
“இன்னிக்கு உங்க பெரியய்யா முதன்முறையா ஆபீசுக்கு போறான்.. சுவீட் பண்ணினீங்களா??” என கேட்க, அவருக்கு அருகில் நின்றிருந்த அமுதா மேசையில் இருந்த செல்லோவை திறந்து காட்டி,
“அதை சீக்கிரமாவே பண்ணிட்டேன்மா.. அப்போதான் நீங்க சாப்பிடும்போது கரெக்டா இருக்கும்” எனவும் ஜீராவில் முக்குளித்த ரசகுல்லாவை திருப்தியுடன் பார்த்து தலையசைத்தவர், மாடிப்பக்கம் கேட்ட காலடி ஓசைகளில் முகம் மலர திரும்பினார்..
அங்கு பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் முதலில் வர, அவனை தொடர்ந்து இருபத்தொன்பது வயது மிக்க மங்கை ஒருத்தியும் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.. அவ்விருவரும் தன் வாழ்வில் வந்தபின்பு கிடைத்த எண்ணிலடங்கா சந்தோசத்தை எண்ணி பார்த்த சௌந்தரி, தன்னருகில் வந்த அவ்விருவரிடம்,
“வழக்கம் போல எந்திரிக்க லேட்டா அந்த சோம்பேறி??” என மகனை பற்றி கேட்க, இடுப்பில் கை வைத்து முறைத்த புவியரசு,
“மாம்ஸை எதுவும் சொல்லலைன்னா உங்களுக்கு பொழுது விடியாதா கிரானி??” என புருவம் உயர்த்தி கேட்டவனது பாவனையில் இதழ்களில் தானாக தோன்றிய புன்னகையுடன் நின்றிருந்த மகளை பார்த்த சௌந்தரி,
“பார்த்தியா மங்கை, அவனோட மாமனை நான் எதுவும் சொல்லக்கூடாதாம்.. அப்படி சொன்னால் துரை என்னை நிற்க வைத்து கேள்வி கேட்பாராம்” என புகார் வாசிக்க,
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எதுக்கு இப்போ அம்மாகிட்ட குற்றப்பத்திரிகை வாசிக்கிறீங்க??” என புவியரசு கேட்டதற்கு மகளிடம் கண்ணை காட்டிவிட்டு,
“என்ன பண்ண, வயதில் பெரியவளா இருந்தும் பெத்த பிள்ளையை கண்டிக்க முடியாத மனக்குறையை உங்க அம்மாகிட்ட புலம்பி தீர்த்துக்கிறேன்” என பெருமூச்சு விட்டபடி சொன்னவரை ஏகத்திற்கும் முறைத்த புவியரசு,
“உங்க நடிப்பை ஸ்டாப் பண்ணுங்க, மாம்ஸ் இப்போ வந்துடுவார்” என சொல்லிவிட்டு இருக்கையில் அமர,
“என்னாது நடிப்பா??” என நெஞ்சில் கை வைத்து முகத்தினில் அதிர்ச்சியை காட்டி கேட்டவரை புவி அழுத்தமாக ஒரு பார்வை பார்க்கவும் நெஞ்சிலிருந்து கையை எடுத்ததோடு அத்தனை பல்லையும் காட்டி இளித்தவரின் செயலில் தனது தலையில் தட்டி கொண்டவன்,
“டிபன் வையுங்க அமுதாக்கா, அப்படியே மாம்ஸ்க்கும் பரிமாறுங்க” எனவும் அவர்கள் மூவருக்கும் இன்னொரு தட்டும் வைத்து மாலதியும் அமுதாவும் பரிமாற்ற, அவர்களின் பேச்சுக்கு காரணமான அர்ஜூன், ஷூவின் அழுத்தமான காலடி ஓசையுடன் அணிந்திருந்த சர்ட்டின் கைகளை மடித்து விட்டபடி அங்கு வந்து அனைவருக்கும் காலை வணக்கம் சொன்னபடி புவியின் அருகில் அமர்ந்தான்..
“இதோ மாம்ஸ் வந்துட்டார்.. இப்போ பேசுங்க கிரானி” என்ற புவியை கேள்வியாக நோக்கிய அர்ஜூன்,
“என்ன பேசணும், ஏதாவது முக்கிய விஷயமா அம்மா??” என உண்டபடி கேட்க, ‘இப்படி கோர்த்து விட்டுட்டியே பரட்டை’ என மனதுக்குள் முனகினாலும் முகத்தை சாதாரணமாக வைத்தபடி,
“அது ஒண்ணும் இல்லைடா.. ஆபீசுக்கு கிளம்ப டைம் ஆகுதே, இன்னும் உன்னை காணோமேன்னு கேட்டேன்” என சொல்ல,
“முக்கியமான கால்.. பேசிட்டு வரேன்” என சொன்ன அர்ஜூனை சுரண்டிய புவி,
“ஈவ்னிங் பார்ட்டி உண்டு தானே??” என கேட்க,
“ஹா ஹா.. எது எப்படியோ நீ கேட்டது நடக்கணும்.. போகலாம்டா.. ஆபீஸ் முடிஞ்சு வந்ததும் எல்லோரும் போகலாம்” என சொல்ல, அதுவரை அவர்களின் பேச்சை உள்வாங்கியபடி உண்டு கொண்டிருந்த மங்கை எனும் மங்கயற்கரசி,
“பர்ஸ்ட் டே ஆபீஸ் வர, வேலை எப்போ முடியுமோ.. நாளைக்கு போகலாமே??” என கேட்க,
“நம்ம ஆபீஸ் தானேக்கா, எந்த நேரம்னாலும் வந்துடலாமே??” என தமக்கையின் முகத்தை பார்த்து கேட்டவனை கண்டிப்புடன் நோக்கிய மங்கை,
“நம்ம ஆபீசுன்னாலும் அதில் நாமளும் வொர்க்கஸ் தான் அஜ்ஜூ.. அந்த நாளுக்குரிய வேலையை அன்னிக்கே முடிக்கணும்.. அப்போதான் தொழிலில் நாம் உயரத்திற்கு போகமுடியும்” என கண்டிப்பும் கராருமாக சொன்னவளை தொடர்ந்து,
“மம்மி சொல்லுறது கரெக்ட் தான் மாம்ஸ்.. நாம நாளைக்கு போகலாம்” என்ற புவி, கை கழுவ எழுந்து செல்ல,
“சரிக்கா, நீ சொன்ன மாதிரியே பண்ணுறேன்” என மாற்றுக்கருத்து இன்றி உடனேயே ஒத்துக்கொண்டான்..
“இப்போதானே தொழிலுக்குள் காலை வைக்கிற.. ஓரளவுக்கு அதில் உள்ள நெளிவு சுழிவு புரிஞ்சுடிச்சுன்னா எப்போ எதை பண்ணலாம் என்ற முடிவை உன்னாலும் எடுக்க முடியும்” என தம்பிக்கு தட்டி கொடுப்பது போல் சொன்னவளை பாசத்துடன் நோக்கிய அர்ஜூன்,
“உன்கிட்ட நான் நிறைய கத்துக்கணும்க்கா” என சொல்லிவிட்டு எழுந்து சென்றவனை தாயிடம் காட்டி சிரித்த மங்கை,
“மதியம் எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடுத்து விடுங்கம்மா” என சொல்லிவிட்டு எழுந்த மங்கை, கையை கழுவிவிட்டு கீழ் தளத்தில் உள்ள ஆபீஸ் அறைக்குள் நுழைந்து தேவையான கோப்புகள், லாப்டாப் முதலியவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் வர, புவி தனது பள்ளி உபகரணங்களோடும் அர்ஜூன் கார் சாவியுடனும் இவளுக்காக காத்திருந்தனர்..
மூவரும் சௌந்தரியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தவர்கள், போர்ட்டிக்கோவில் நின்ற காரின் டிரைவர் சீட்டில் அர்ஜூனும் அவனருகில் மங்கையும் பின் சீட்டில் புவியும் அமர, வண்டியை எடுத்தான் அவன்..
முதலில் புவியை அவனது ஸ்கூலில் இறக்கி விட்டவர்கள், நேராக தங்கள் ஆபீஸ் வந்து சேர்ந்தனர்..
அந்த பிரம்மாண்டமான ஐந்து அடுக்கு கட்டடத்தின் முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கிய அர்ஜுனை தொடர்ந்து இறங்கிய மங்கையின் உடல் மொழியில் ஒரு நிமிர்வும் முகத்தில் அழுத்தமும் வந்திருந்தது..
தமக்கையின் அந்த மாற்றத்தை கண்ணுற்ற அர்ஜூனுக்கு வியப்பாக இருந்தது.. வீட்டில் அவள் காட்டும் முகம் அவனுக்கு தெரியும்.. ஆனால் வெளியிடங்களில் முக்கியமாக, தங்கள் தொழிலை மேற்கொள்ளும் இடங்களில் அவள் காட்டும் இந்த முகத்தை பற்றி அவன் எங்கே அறிந்து வைத்திருந்தான்..
இதுநாள்வரை விளையாட்டு பிள்ளையாக, அப்பாவின் சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் இருக்கிறது.. அதனை திறம்பட நடத்த அக்கா இருக்கிறாள் எனும் மிதப்பில் ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக இருந்தவனுக்கு தங்களின் ஆரம்ப நிலை நன்கு தெரியும்..
அதன்பின்பு மங்கை தொழிலை கையில் எடுத்த அடுத்த சில வருடங்களில் சொத்து மதிப்பு அதிகரித்ததும் தெரியும்.. ஆனால் அதற்கான அவளது உழைப்பு, முயற்சி, கஷ்டங்கள் எவ்வளவு என்பதை அவன் உணராமல் இன்னும் சொல்லப்போனால் அதனை புரிந்து கொள்ள முயலாமல் இருந்திருக்கிறான் என்பதை எண்ணியவனுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது..
அதேவேளை தங்களின் நலனுக்காக இரவு, பகல் பாராது கஷ்டங்களை சொல்லிக் காட்டாது உழைத்த தமக்கையின் பாசத்தில் நெகிழ்ந்து போனவனுக்கு இனியாவது அவளுக்கு சற்று ஓய்வு கொடுப்பதோடு அவளின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரவேண்டும் என்ற உத்வேகம் தோன்றியதில் தன்னாலேயே அவனின் உடலிலும் மனதிலும் ஒரு நிமிர்வு வந்து ஒட்டிக்கொள்ள, ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ச்சியாக பார்த்தபடி மங்கை அழைத்து சென்ற பக்கம் நடந்தவன், வழியில் தென்பட்டு காலை வணக்கம் சொன்ன ஊழியர்களுக்கு தமக்கையை தொடர்ந்து தானும் காலை வணக்கம் சொன்னவன், மங்கையுடன் எம்டி என பெயர் பலகை பொருத்தியிருந்த கதவை திறந்து உள்ளே சென்ற அர்ஜூன், அங்கு கண்ட காட்சியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்..
இருக்கைக்கு அருகில் சென்றதும் தான் தன் பின்னே அர்ஜூன் வராததையும் முகம் கலங்க நின்றிருப்பதையும் கண்டு கொண்ட மங்கை, கையில் இருந்தவற்றை அப்படியே மேசையில் போட்டுவிட்டு விரைந்து அவனருகில் சென்று தோளில் கை வைத்தவள்,
“என்னாச்சு அஜ்ஜூ??” என பதறிப்போய் கேட்டதில் தன்னிலைக்கு வந்த அர்ஜூன்,
”என்னக்கா இதெல்லாம்??” என குரல் கரகரக்க கேட்க, முகத்தினில் குழப்ப ரேகைகள் தோன்ற,
“எதை சொல்லுற??” என கேட்டாள் மங்கை.. அதற்கு மேசை பக்கம் கையை காட்டி,
“இத்தனை வருஷம் இந்த கம்பெனியை பார்த்து டாப் லெவலுக்கு கொண்டு வந்தது நீ.. அப்படிப்பட்ட உனக்கு ஆக்டிங் எம்டி பதவி, இந்த கம்பெனிக்காக ஒரு துரும்பைக்கூட எடுத்து போடாத நான் எம்டியா?? இதெல்லாம் அநியாயம்க்கா” என மேசைமேல் இருந்த நேம் போர்ட்டுக்கள் மட்டும் அல்லாமல் எம்டிக்குரிய சீட்டில் அதற்கான ஆள் இல்லை என்பதை அறிவுறுத்தும் வகையில் துண்டு போடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி அழுவாரம் போல சொன்னவன், அவளின் கண்களுக்கு குழந்தையாகவே தெரிந்தான்..
“இதுல பீல் பண்ண என்ன இருக்கு அஜ்ஜூ?? இந்த கம்பெனி உனக்குரியது.. நீ வரும் வரை நான் பார்த்துக்கிட்டேன்; அவ்வளவு தான்” என தன்மையாக சொன்ன மங்கையை அறியாத சிறுவன் போல நோக்கி,
“இருந்தாலும்.......” என இழுக்கவும் நேரமாவதை உணர்ந்த மங்கை,
“நான் எம்டியா இருக்கலைன்னாலும் இத்தனை வருஷம் நான் தானே முடிவுகளை எடுத்தேன்.. அப்புறம் நமக்கு இன்னும் நிறைய தொழில் இருக்குங்கிறதை மறக்காதே..!! அவை எல்லாவற்றுக்கும் நான் தானே எம்டி” என கண்டிப்புடன் எடுத்து சொன்னவள்,
“அதனால உன் பீலிங்கை தூக்கி கிடப்பில் போட்டுட்டு வந்த வேலையை பார்க்குறியா?? இது ஆபீஸ்.. இங்கே நம் சொந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க கூடாது.. அப்படி கொடுத்தோம்னு வச்சுக்கோ அடுத்தவங்க நம்மளை ஏறி மிதிச்சுட்டு போயிடுவாங்க.. அதனால் முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க பழகிக்கோ தம்பி பையா” என கூறி முடிக்க, சற்று தெளிந்த மனதுடன் முகத்தை சாதாரணமாக வைத்தபடி,
“இப்போ என்ன பண்ணணும்க்கா??” என கேட்டான்.. அவன் முகத்தை வைத்தே தான் சொன்னவற்றை சரியான விதத்தில் புரிந்து கொண்டான் என்பதை உணர்ந்தவளாக,
“குட்.. நேற்று உன் மெயிலுக்கு அனுப்பின டீடெயில்ஸ் படிச்சு பார்த்துட்டியா??” என கேட்டவாறே அவனை எம்டி சீட்டில் அமர வைத்தவள், அடுத்த இருக்கையில் தானும் அமர்ந்து கொண்டாள்..
“படிச்சுட்டேன்க்கா”
“அதில் ஏதாவது டவுட் இருக்கா??”
“இல்லக்கா.. ஒவ்வொரு சின்ன விஷயத்தைக்கூட தெளிவா புரியும்படியா கொடுத்திருக்க.. அன்ட் உன் ஒவ்வொரு ஐடியாவும் மார்வலஸ்” என வியந்து கூறியவனின் பாராட்டை சிறு புன்னகையுடனான தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவள், தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த சில கோப்புக்களை அவன் பக்கம் நகர்த்தி,
“இதையும் கொஞ்சம் பார்த்துடு.. பத்து மணி போல் மீட்டிங் இருக்கு.. அப்போ உன் பக்க கருத்தை சொல்ல ஈசியா இருக்கும்” என சொல்ல, “சரிக்கா” என்றவாறே அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து படிக்க ஆரம்பித்தவனை புன்னகையுடன் பார்த்துவிட்டு மேசையின் ஒரு ஓரமாக இருந்த இன்டர்காமில் சில எண்களை தட்டி அதன் ரிசீவரை காதில் வைத்தாள்.. எதிர்ப்பக்கம் அழைப்பை ஏற்றதும் “என் கபினுக்கு வாங்க அசோக்” என கூறிவிட்டு வைத்தவள், லாப்டாப்பை எடுத்து அன்றைய ஏற்றுமதி விபரங்களை பார்த்து குறிப்பெடுக்க தொடங்கினாள்..
சில நிமிடங்களில் காபின் கதவை தட்டி, “மே ஐ கமின் மேம்” என்ற விழிப்பில் வேலையை நிறுத்தி, “உள்ளே வாங்க அசோக்” என குரல் கொடுத்தாள் மங்கை.. அதில் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த அசோக்,
“குட் மார்னிங் மேம்.. குட் மார்னிங் சார்” என சொன்னவனுக்கு தாங்களும் காலை வணக்கத்தை உரைத்ததும்,
“மீட்டிங் அரேன்ஞ் பண்ணிட்டிங்களா அசோக்??” என கேட்டாள் மங்கை..
“பண்ணிட்டேன் மேம்”
“ஓகே.. இன்னிக்கு அனுப்பவேண்டிய லோடிங் எந்த நிலையில் இருக்கு??” என கேட்டதற்கு அசோக்கிடம் இருந்து பதில் வராமல் போனதில் கூர்மையுடன் அவனை நோக்கிய மங்கை,
“என்ன பதிலை காணலை.. பதில் தெரியலையா??” என அழுத்தமாக கேட்க,
“அது.. வந்து மேம்..” என அவன் தடுமாற,
“இழுக்காமல் பதில் சொல்லுங்க அசோக்.. வொர்க்கர்ஸ் பிரச்சனை பண்ணுறாங்களா??” என சரியாக கேட்ட மங்கையை வியந்து பார்த்தவனுக்கு தன் எஜமானி மீதான மரியாதையும் பிரமிப்பும் அதிகரிக்க,
“ஆமாம் மேம்.. இந்த மாதம் வொர்க் அதிகம் என்றதால சம்பளத்தை கூட்ட சொல்லி நிக்கிறாங்க மேம்.. அதில் சிலர் வேலை பார்க்காமல் உட்கார்ந்து இருக்காங்க” என சொல்லவும் அவளின் முகத்தினில் கடுமை தோன்ற, கையில் இருந்த வாட்ச்சில் நேரத்தை பார்த்தவள்,
“மீட்டிங்குக்கு டைம் ஆகிடிச்சு அசோக்.. ஜூனியன் லீடரையும் அங்கே வர சொல்லுங்க.. அத்தோடு இந்த வருஷத்திற்குரிய ஏற்றுமதி, தொழிலாளர்களுக்குரிய சம்பள பட்டியல் டீடெயிலை பைலா ரெடி பண்ணி கொண்டு வாங்க.. கம் பாஸ்ட்” என உத்தரவிட்டு அனுப்பியவள், சில ஃபைல்களை கையில் எடுத்து கொண்டு இருக்கையை விட்டு எழ, அர்ஜூனும் நேர அவகாசத்தை உணர்ந்தவனாக தமக்கை சொல்லும் முன்பே எழுந்து கொண்டான்..
இருவரும் மீட்டிங் நடக்கும் ஹாலுக்குள் நுழைய, அந்த கம்பெனியின் முக்கிய பதவி வகிப்பவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய, “சிட்” என உரைத்தவாறே தனக்குரிய இருக்கையில் அமர்ந்து தனக்கு அருகில் அர்ஜூனையும் அமர வைத்தவள், கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஜூனியன் லீடரை ஆராய்சி பார்வை பார்த்தவாறு அசோக்கிடமிருந்து பைலை வாங்கி பிரித்து கண்களை ஒட்டியவள், கைகளை மேசை மேல் வைத்துவிட்டு,
“உட்காருங்க மிஸ்டர் அய்யாச்சாமி” என சொல்ல, அவரும் அதனை ஏற்று இருக்கையில் அமர்ந்து கொண்டார்..
“என்ன பிரச்சனை??” என குத்தீட்டியாக வந்த கேள்வியில் இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தவரால் சட்டென்று பதில் கூற முடியவில்லை.. ஏனெனில் தொழிலாளர்களை தூண்டிவிட்டு தனக்கு ஆதாயம் பார்க்க நினைத்தவரே அவர்தான் என்பதனை அசோக் கொடுத்த பைலில் அவன் வைத்திருந்த துண்டு சீட்டின் மூலம் அறிந்ததில் அவ்வாறு கேட்டிருந்தாள்.. நேரம் சிறிது கடந்தும் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தவரை வேடிக்கை பார்த்த மங்கை,
“சோ உங்க கிட்ட இதற்கான பதில் இல்லை.. அப்படித்தானே??” என கேட்க,
“இருக்கு மேடம்.. வொர்க்கர்ஸ் சம்பளத்தை அதிகரிக்க சொல்லி கேட்கிறாங்க” எங்கே தன் அமைதியை வைத்து எதனையும் செய்யாமல் விட்டிடுவார்களோ என அவசரமாக பதில் சொன்னவரை உறுத்து விழித்தவள்,
“வொர்க்கர்சா கேட்கிறாங்களா இல்லை உங்க ஆசைக்காக அவங்க கேட்கிறாங்களா??” என அழுத்தமாய் வந்த கேள்வியில் அதிர்ந்து நோக்கியவரை கண்டிப்புடன் நோக்கிய மங்கை,
“தொழிலாளிங்க ஒற்றுமையா இருந்தால் தான் முதலாளிங்க வளரமுடியும்.. அப்போதான் தொழிலாளிங்களுக்கான ஊதியத்தை கை நிறைய கொடுக்க முடியும்.. உங்க ஆசையால் நியாய உள்ளம் கொண்டவங்க கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க.. இது பெரிய பிரச்சனையா மாறினால் யாருக்கு நஷ்டம்??” என காரமாகவே கேட்டவள்,
“அக்டோபர் மாதம் எத்தனை லோட் போனதுன்னு சொல்லுங்க??” என கேட்க, அதற்கான பதிலை அவர் சொன்னதும் தீர்க்கமாக நோக்கியவள்,
“சோ இந்த மாதம் போன லோடில் கால்வாசிகூட இல்லை.. அப்படித்தானே??” என கேட்க, அவரும் ஆமோதிப்பாக தலையசைத்தார்..
“அப்போ அந்த மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினீங்க??” என கேட்கவும் மங்கையின் இத்தனை கேள்விகள் எதற்காக என்பது புரிய தலை குனிந்து கொண்டவருக்கு பேச்சே வரவில்லை..
“நீங்க இந்த ஒரு மாதத்தை வைத்து அதற்கு கூலி கேட்கறீங்க.. ஆனால் எல்லா மாதமும் இப்படி இருக்கும்ன்னு எந்த உத்தரவாதமும் கிடையாது.. அப்படி இருக்கும்போது மாதாமாதம் லோட் கணக்கை வைத்து கூலி கொடுக்கிறதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. உங்களுக்கு தான் அதனால் கஷ்டம்.. யோசிச்சு முடிவு சொல்லுங்க” என அவள் சொல்லி முடிக்க,
“மன்னிச்சுக்கோங்க மேடம்.. இனிமேல் இந்த தப்பு நடக்காது” என குற்றவுணர்வுடன் சொன்னவரை அழுத்தமாக நோக்கி,
“ஜாதி, மதம் பார்க்காமல் வருஷத்தில் வரும் எந்த பண்டிகைன்னாலும் போனஸ் கிடைக்குது.. அப்புறம் ஏன் இந்த வேலை?? தனிப்பட்ட பிரச்சனை ஏதும் இருந்தால் எங்கிட்ட சொன்னால் அதற்கான தீர்வு உங்களுக்கு கிடைக்கும்” என வாக்கு கொடுத்து அனுப்பியவிட்டு எழுந்து நின்று பேச ஆரம்பித்தாள்..
“ஹாய் பிரெண்ட்ஸ், இனிமேல் உங்க எம்டி என் தம்பி மிஸ்டர் அர்ஜூன் தான்.. புதிதாக கம்பனிக்கு வேலைக்கு வரவங்களுக்கு அந்தந்த ஸ்டேஜூக்கு ஏற்றமாதிரி டிரெயினிங் கொடுக்கிற மாதிரி, எம்டியா இவர் பதவி ஏற்பதற்கு முன்னாடி ஒரு ஆறு மாதம் அவருக்கான டிரெயினிங்கில் இருப்பார்.. அதில் உங்களின் பங்கு அதிகமாக தேவைப்படும்.. சோ கால நேரம் பார்க்காமல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும்ன்னு கேட்டுக்கிறேன்” என சொல்லி முடிக்கவும் எல்லோரும் அர்ஜூனுக்கு வாழ்த்து சொல்லி தங்களால் முடிந்ததை செய்கிறோம் என உறுதி கூறவும் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு சில அடுத்த கட்ட வேலைகளுக்கான முடிவுகளை அவர்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கு அவர்களின் கருத்துக்களை கேட்டு மேலும் சில நிமிடங்கள் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து அன்றைய நாளில் அர்ஜூனுக்கு தேவையான தகவல்களை கொடுப்பதும் அன்றைய நாளுக்கான வேலைகளை பார்ப்பதுமென நேரம் கடந்தது..
**************
முதலில் எடுத்த முடிவின்படி அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாதலால் மதியமளவில் புகழ்பெற்ற ஹோட்டலுக்கு சென்று செலிபிரேட் செய்தவர்கள், பின் சில பொருட்கள் வாங்கவேண்டும் என மங்கை சொன்னதன்பேரில் அருகில் இருந்த மாலுக்கு சென்றனர்..
அங்கு ஒரு பக்கமாக இருந்த பெண்களுக்குரிய பொருட்களை பார்வையிட்டு கொண்டிருந்த மங்கை, “நீயா??” என்ற கேள்வியில் அக்குரலை இனங்கண்டு கொண்டவளின் உடல் நாணென நிமிர்ந்து இறுக, முகத்திலும் எந்த உணர்வையும் காட்டாது மெல்ல திரும்பினாள்..
தொடரும்...