தொடாதீர்
பசுமை சூழ்ந்த இரு மலைகள் அதன் நடுவில் இருந்து தன் பொன் மஞ்சள் நிறக் கதிர்கள் மெல்ல வெளிவரத் துவங்கியிருக்க அதன் கீழ் கட்டம் கட்டமாய் சிறு வீடுகளும், தெருக்களின் ஒரு பக்கம் நீலநிறமும், மற்றொரு பக்கம் சிவப்பு நிற வண்ணம் தற்போதுதான் கொடுத்துக் கொண்டிருந்தேன்...
என் தந்தை எனக்கு வாங்கி கொடுத்த கலர் கிரையான்ஸ் கொண்டு பெருமையுடன் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தேன்...
என் பெயர் ஆருத்ரா... இரண்டாம் வகுப்பு ஆ பிரிவு....
என்னுடைய கமலா மிஸ் வீட்டுப் பாடமாக இயற்கை அழகை படம் வரைந்து வர சொல்ல என் தந்தை கூறியதை வைத்து என் கற்பனையில் வரைந்து கொண்டிருந்தேன்...
என் பெற்றோர்கள் பணிநிமித்தம் வெளியில் சென்றிருக்க என் மாமாவும் அத்தையும் என்னுடன் இருந்தனர் ...
அத்தை வெளியில் துணி துவைத்து கொண்டிருந்தார்... அவருடைய பையன் என் மாமவிற்கு சற்று உடல் நிலை சரியில்லாததால் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான்.. நான் வரவேற்பு அறையில் படம் வரைந்து கொண்டிருந்தேன்...
"அம்மா... அம்மா.. என்ன பண்ற ... கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுமா" என மாமா சத்தமிட
என் அத்தை வெளியில் இருந்து என்னிடம் "ஆருமா மாமாக்கு தண்ணீர் எடுத்துக் கொடுடா... அத்தை கொஞ்சம் வேலையா இருக்கேன்"... என்றதும்
நானும் "சரிங்க அத்தை " என்று தண்ணீர் கொண்டு சென்றேன்... அங்கு கட்டிலில் தலைமுதல் கால் வரை போர்வை போர்த்தி சுருண்டு படுத்திருந்தார்...
கல்லூரி படிப்பதாக அத்தை அப்பாவிடம் சொல்லிக் கேள்வி பட்டிருக்கிறேன்...
விடுமுறை விட்டால் இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள்... வரும் போதெல்லாம் கட்டாயம் மாமா எனக்கு திண்பண்டம் வாங்கி வருவார்... எனக்கு ரொம்ப பிடிக்கும்...
நான் போர்வையில் கை வைத்து "மாமா மாமா தண்ணீ கேட்டிங்கலே... இந்தாங்க" என்றேன்.. அவரும் போர்வையை விலக்கி எழுந்து
"உங்க அத்தை எங்க.. அவங்களதான கேட்டேன்"
"அத்த வெளில துணி துவைக்கறாங்க அதான் என்ன கொடுக்க சொன்னாங்க மாமா" என்றேன்... என்னிடம் வாங்கி குடித்து கொண்டே என்னை அமர சொன்னார்...
மேல் சட்டையின்றி வெறும் கைலி மட்டும் அணிந்து இருந்தார்.. நீர் அருந்தி விட்டு டம்ளரை அருகில் உள்ள டேபிளில் வைத்து விட்டு வாசல் கதவை பார்த்தார் பின் என்னிடம் " குட்டிமா மாமா க்கு காய்ச்சல் குறைஞ்சுருச்சானு பாருடாமா" நானும் சரி மாமா என்று கட்டிலில் அவரின் முகம் பார்ப்பது போல் திரும்பினேன் அவரின் வெற்று மார்பில் பாதி வரை போர்வை போர்த்தி இருந்தார்...
என் தந்தைக்கு காய்ச்சல் வந்தால் பார்ப்பது போல் என் புறங்கையால் நெற்றியில் வைக்க மிதமான சூட்டையே உணர்ந்தேன்.. அதை அவரிடமும் கூறினேன்...
மாமாவோ "இப்பிடிப் பார்க்க கூடாது செல்லம்" என்றவர் என் கைமீது கையை வைத்து என் உள்ளங்கை அவரின் கன்னத்தில் பதிவது போல் வைத்து பார்த்து "இப்போ" என்க நானும் கொஞ்சம் சூடாக இருப்பதாய் கூறினேன்...
அவரோ என் பிஞ்சு கைகளை விடாமல் அவரின் கழுத்தில் வைத்து "இப்போ" என்க... எனக்கு அவரின் பிடியில் கைகள் வலிக்க துவங்க " மாமா கை வலிக்குது " என்ற என் வார்த்தைகள் அவரின் செவியை அடைந்ததாகவே தெரியவில்லை ...
கண்கள் மூடியிருக்க என் கையை இறுக பற்றி மெல்ல கீழிறக்கி அவரின் நெஞ்சில் வைத்து "இப்போ" என்க ... நான் ஏதோ அசூசையாய் உணர்ந்தேன்....
என் பிஞ்சு கைகளை வைத்து மெல்ல மெல்ல அவரின் உடல் முழுதும் தடவ செய்தார்.... கட்டிலிலிருந்து கீழிறங்க முயல அந்தோ பரிதாபம் கட்டில் சற்று உயரமாக இருந்தது அமரும் போது குதித்து ஏறினேன்....
எப்போதும் அப்படி தான் என் தந்தையுடன் உறங்கும் போது குதித்து ஏறுவேன் கீழே வர என் தந்தை தான் இறக்கிவிடுவார் ....இறங்குவதில் எப்போதும் எனக்கு சிறுபயம்...
ஏதோ தவறாய் உணர்ந்து என் கைகளை உறுவ முயல " மாமா விடுங்க... கை வலிக்குது " என்க அவரோ என் கையை அவரை நோக்கி இழுத்து சட்டென்று அவரின் போர்வையால் மூட கத்த வாயெடுக்க அவரின் மற்றொரு கையால் என் வாயினை பொத்தியிருந்து...
மூச்சு முட்டுவது போல் உணர "நோ ........" என்று கத்தியபடி எழுந்தேன்.. என் உடல் முழுவதும் வேர்வையால் குளித்திருக்க....
உடல் நடுங்க ஆரம்பித்தது....
கைகள் நடுங்க அறை விளக்கை போட்டு அருகில் மேசையில் இருந்த நீரை எடுத்து வேக வேகமாக குடிக்க அருகில்
"குட்டிமா... மாமாக்கு காய்ச்சல் அடிக்குது .. கை வச்சு பாருடா " என்ற குரல் ஒலிக்க தானாய் பயத்துடன் அறை முழுக்க பார்க்க வெற்று அறையே காட்சியளித்தது.... " இப்போ" " இங்க தொடுடா " " நல்லா ... கிட்ட வாமா" என குரல்கள் மட்டும் அசிரிரீயாய் ஒலிக்க என் இருகாதுகளையும் கையால் அடைத்துக் கொண்டு நோ... நோ.... என் கத்தியிருந்தேன்..
நான் வீட்டைப் பகிர்ந்து கொள்ளும் என் தோழி அந்த நள்ளிரவில் வந்து என்னை உலுக்கவே சமநிலை அடைந்தேன்... அவள் என்னை தேற்றினாள்....
"என்னடி இன்னும் இந்த பயம் உன்னை விட்டு போகலையா.... ஆறு வயசுல நடந்தத நெனச்சு இன்னும் தூக்கம் இல்லாம இருக்க ... உனக்கு இப்படி ஒரு நிலமை உருவாக்குனவன் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட சந்தோசமா இருக்கான் ... எந்த குற்றவுணர்வும் இல்லாம... ஆனா நீ 27 வயசாகுது... இன்னும் அத நினைச்சுட்டு வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்கு போகாம இருக்க" என ஆதங்கத்தை வெளிப்படுத்த...
"கல்யாணமா ....அது எல்லாம் சரிபட்டு வராதுடி.எங்க ஏதாவது ஒருநொடில என்னவன் என்னை தொடும் அந்த சந்தர்ப்பத்தில நான் அந்த அயோக்கியனோட தொடுகை என் ஞாபகத்துல வந்துட்டாலும் அந்த செகண்ட் நாங்க வாழ்க்கைல தோத்துருவோம் டி .....அது என்ன மட்டும் இல்லாமல் அவரையும் பாதிக்கும்....
தெரியலடி ... நான் ஏன் இப்படி இருக்கேன்னு.... நான் ஒரு பொண்ணுங்கறத அவன் ஆறு வயசுலயே எனக்கு உணர்த்திட்டான்...." என்க... " அதான் இப்போ ஒரு டாம்பாய் (ஆண் போல் உடை உடுத்தி காட்சியளிப்பது) போல மாறி இருக்கியா" என என் புது கழுத்து வர வெட்டிய ஹேர் ஸ்டெயிலைப் பார்த்துக் கொண்டே என்னை இலகுவாக்க கூற நானும் சிரத்துக கொண்டே தொடர்ந்தேன் "இருக்கலாம்.. அந்த பலவீனமான பெண்மையை நான் வெறுக்கிறேன்....
அவன்கிட்ட இருந்து சில உடற் கீறல்களுடன் நான் தப்புச்சுட்டாலும் ... அவனோட ஒவ்வொரு தொடுகையும் இன்னும் என்னோட உடம்புல கம்பிளிபூச்சி ஊறுற போல இருந்துட்டே இருக்கே... அதுமட்டுமல்ல அந்த இன்சிடன்ட் அப்புறம் விவரம் தெரியற வரை யாரையும் என்னை டச் பண்ண விடாம ஒரு கோபக்காறியா திமிர் பிடிச்சவங்கற முகமூடிய மாட்டுனேன் அதுல நான் என் அப்பாவ கூட என்னை தொட விடாம அவரோட அரவணைப்பு இல்லாம வளர்ந்தேன்...
திருவிழா னா என்னை தோளில் தூக்கிக்கிறது,அதீத சந்தோசமான சமயத்துல என்னைத் தூக்கி சுத்துறது, தூக்கம் வரலனா என் அப்பாவோட கையணைவுல நெஞ்சில தூங்குறதுலாம் சொர்க்கம் டி .. ஒரு குறிப்பிட்ட வயசு வரை தான் பெண் குழந்தைகளுக்கு அந்த சொர்க்கம் கிடைக்கும் அதையே நான் இழந்தேன்..என்னோட குணத்தால எங்க வீட்டுலயும் மொதல்ல வருத்தப்பட்டாங்க அப்புறம் விட்டுட்டாங்க.."என என் குழந்தை பருவத்தை எண்ணி பாழும் பெருமூச்சு ஒன்று என்னிடம் வெளிப்பட்டது...
என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த என் தோழி "சரி எப்போ ஊருக்கு போக போற... காலேஜ் படிக்க இங்க வந்தது ... அப்போ கூட லீவ்க்கு ஊருக்கு போவ .. ஆனா வேலைக்கு போன இந்த ஐந்து வருசத்தில அவங்க வந்துதான் பார்க்குறாங்க... உன் அத்தை பையன் பண்ண தப்புக்கு அவங்க என்னடி பண்ணுவாங்க...."என்றாள்...
என் இதழில் விரக்தியான சிரிப்பு " அவனோட நகக்கீறல் என் உடம்புல இருந்தும் நான் விளையாடி கீழ் விழுந்ததா என் அத்தையும் அந்தாளும் சொன்னத நம்புனவங்க நான் சொன்னத கேக்குற நிலமையை அவங்க இல்லை.. என்னோட ஒதுக்கத்த வச்சு இரண்டு மாசம் கழிச்சு கேக்குறாங்க ... அதான் நா எதுவும் சொல்லாம ... ஒதுங்கியே வளர்ந்தேன்... " என்று கூறிவிட்டு குளிக்க சென்றேன்....
குளித்து வந்ததும் அந்த ஆறு வயது ஆருத்ரா என்னில் காணாமல் போயிருக்க... குழந்தைகளுக்கான என்ஜிஓ ஆரம்பிக்கும் என் கனவை நிறைவேற்றும் படிக்கல்லாக...
இதோ...
பயணப் பொதிகளை எடுத்து வைக்க.... என் அருகில் வந்து என் தோளைத் தொட்டு " இந்த முறை எத்தனை நாள் டி" என்றாள் புன்னகையுடன்..
முன்பிருந்த சோகம் ரௌத்திரம் என்னைவிட்டு நீங்கியிருக்க சிறுபுன்னகையுடன் " தெரியல டி ...எப்பவும் போல என் மனசு ஆறுற வரை.... ஆனா இந்த முறை என்னையே நான் மறக்குற வரை... ஆபிஸ்ல மெடிக்கல் லீவ் சொல்லிருடி..." என்று என் முதுகில் பயண பொதி மூட்டையும் கையில் தலைகவசமும் என வெளியில் வர செட்டில் நான் விரும்பி வாங்கிய ராயல் என்ஃபில்டு எனக்காக காத்துக் கொண்டிருந்தது....
இன்னும் புலராத அந்த இளங்காலைப் பொழுதில் என் தோழி பல பத்திரங்கள் கூறி என்னை வழியனுப்ப .....
புது வைராக்கியத்துடனான விடியலைத் தேடிய என் பயணம் இனிதுடன்...
"குழந்தை பருவம் என்பது வாழ்க்கையில் அற்புதமான பக்கங்கள்.... தயவு செய்து உங்கள் இச்சைக்காக அதனை கருப்பு பக்கங்களாக மாற்றி விடாதீர்கள்"
"குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்"
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே
'குட்டி ஸ்டோரி' - கருத்து திரி
www.srikalatamilnovel.com