6
ஜீவாவின் நினைவு இங்கே இல்லை என்பதை உணர்ந்து வேதவள்ளி அமைதியாக இருக்க, ஜீவா அந்த அமைதியில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு மீண்டும் பேசினான்.
"சின்னதா ஒரு பிரச்சினை பாட்டி ஆபஸ்ல.. ஒரே மூட்-ஆஃப்.. அதான் உங்க கிட்ட பேசலாம்னு வந்தேன்"
"என்னடா பிரச்சினை?" என்று வேதவள்ளி கேட்க, ஜீவா விழித்தான்.
'பாட்டி கிட்டப் போய் அவளைத் திட்டினது ஒரு மாதிரியா இருக்குனு சொன்னா நாளைக்கே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வா அது இதுனு சொல்லிடுவாங்களே .. '
"என்னடா யோசனையெல்லாம் பலமா இருக்குது?"
"அதை உங்களுக்குப் புரியுற மாதிரி எப்படிச் சொல்றதுனு தான்
யோசிச்சிட்டு இருந்தேன்.. சொல்லத் தெரியல பாட்டி.. விடுங்க.. அதை
நான் பார்த்துக்கிறேன்"
"இதுக்குத் தான் நான் சீக்கிரம் ஒரு கல்யாணம் செய்துக்கோனு சொல்றேன்.. எனக்குப் புரியாதது அவளுக்குப் புரியும் இல்லையா? எனக்கும் ஒரு துணையா இருக்கும்.. இவ்வளவு பெரிய வீட்ல மொட்டு
மொட்டுனு நான் மட்டும் இருக்கேனே.. எனக்காக பாவம் பார்த்து
கல்யாணம் செய்துக்க கூடாதா?"
'ஆரம்பிச்சுட்டாங்க'
"ஏன் பாட்டி பொய் பேசுறீங்க? தோட்டக்காரர் கருப்பையா இருக்காரு..
வாட்ச்மேன் நல்லசிவம் இருக்காரு.. சமையலுக்கு சரோஜாக்கா இருக்காங்க... ராணி மாதிரி அவர்களை வேலை வாங்கிக்கிட்டு ஜாலியா இருக்க வேண்டிதானே பாட்டி? உங்க பேரனின் சிண்டைப் பிடிக்க ஒருத்தியை அவ்வளவு சீக்கிரம் கொண்டு வந்து என்ன செய்யப்
போறீங்க?"
"அடப் போடா கூறுகெட்டவனே.. வேலையாட்களை வைக்க வேண்டிய
இடத்தில் வைக்கணும்... அவங்களுக்குச் சரியாகப் பேசினா வீணாகப் பிரச்சினை தான். . இதுவே உன் பொண்டாட்டி வந்துட்டா அவகிட்ட நான் பேசலாம் இல்லையா?"
"நீங்க பேசுறதுக்கு ஒரு ஆள் வேணும்னு நான் என் தலையை இன்னொருத்தி கிட்ட கொடுக்க முடியாது பாட்டி" என்று
விளையாட்டாகக் கூறியவனை மறுத்துப் பேச வேதவள்ளி வாய் திறப்பதற்குள் ஜீவா சிட்டாகப் பறந்துவிட்டான்.
தன் அறைக்கு வந்தவன் குளித்து முடித்துவிட்டு மெத்தையில் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ நினைவு வந்தவனாக அவனது லேப்டாப்பை ஆன் செய்தவன் ஈமெயில் வந்திருப்பதாகச் செய்தி வரவும் அதைத் திறந்து பார்த்தான். பவித்ரா அனுப்பியிருந்த மெயில் முதலில் இருக்கவும் யோசனையோடு அதை திறந்து பார்த்தான். அவள் அனுப்பியிருந்த மெயிலைப் பார்த்ததும் அவசரமாக மெயில் வந்திருந்த நேரத்தைப் பார்த்தான்.. கணினியின் திரை ஏழு ஐம்பது எனக் காட்டவும் அவனது அலுவலக வாட்ச்மேனிற்கு போன் செய்து விவரம் கேட்டான். அவன் பவித்ராவின் தந்தை வந்து அவளை அழைத்துக் கொண்டு
போனதாகச் சொல்லவும் போனை வைத்துவிட்டான்.
' அந்தத் திமிர் இன்னும் குறையல. இவ்வளவு நேரம் தனியா
இருந்து வேலை பார்த்து ஒரே நாளில் முடிச்சுக் கொடுத்துட்டாளே.. வேலைக்குச் சேர்ந்த ரெண்டு வாரத்துல இவ்வளவு
நேரம் வேலை வாங்குறாங்கனு அவங்க வீட்ல நினைச்சிருப்பாங்க. . அவ்வளவு அவசரம் என்ன? இவளை ஒரு வார்த்தை சொல்லிவிடக் கூடாது.. அந்த சேகர் பேசினதைக் கேட்டுட்டு வேறு எப்படித்தான் நான் ரியாக்ட் செய்வது? '
அவளை மனதிற்குள் திட்டியபடியே அவள் அனுப்பியிருந்த டிசைனைப்
பார்த்தவனின் கண்களில் பாராட்டு தோன்றியது. அவசரத்தில் செய்த
வேலையென்று சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக இருந்தது அது. அப்போதே அப்ரூவ் செய்துவிட்டான் அவன்.
அடுத்த நாள் காலை எப்போதும் போல் பவித்ரா அவளது சீட்டில் அமர, அவள் எதிர்பார்த்தபடியே வாசு அவளை எம். டி
அழைப்பதாகக் கூறிச் சென்றான் . அனுமதி கேட்டு வெளியே
நின்றவளை ஜீவா உள்ளே அழைத்தான்.
"உங்களுக்கு ஆஃபீஸ் டைமிங் தெரியுமா தெரியாதா?" என்று ஜீவா அமர்ந்த
குரலில் கேட்க பவித்ரா 'தெரியும்' என்றாள் முணுமுணுப்பாக.
"நேத்து அவ்வளவு நேரம் இருந்து யார் உங்களை வேலை பார்க்கச்
சொன்னது?"
"நான் வேலை பார்க்கத் தானே சார் சம்பளம் வாங்குறேன். சும்மா
உட்கார்ந்திருந்து சம்பளம் வாங்குறது எனக்குக் கூடப் பிடிக்காது சார் .. " என்று பவித்ரா அமைதியான குரலில் சொல்ல, ஜீவா பல்லைக் கடித்தான்.
'சொல்லிக் காட்டுறா'
"இந்த அறிவு முதல்லயே இருந்திருக்கணும் மிஸ் பவித்ரா. . ஒரே
நாளில் உட்கார்ந்து இப்படி ஓவர் டைம் செய்யத் தேவையில்லை" என்று
அவனும் சுள்ளென்று பேச, பவித்ரா உதட்டைக் கடித்துக்கொண்டு
அமைதியானாள்.
'இதுக்கு என்ன பதில் சொல்வது? சொன்னால் பிரச்சனை வளவளனு இழுக்கும் '
''சாரி சார்.. அது என் மிஸ்டேக் தான். அதைச் சரிசெய்ய தான் நேத்து ஓவர்
டைம் சார்" என்று பவித்ரா பணிவாகச் சொல்ல, ஜீவா அதற்கு மேல்
அவளை எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவள் கிளம்பிய பிறகுதான்
இனிமேல் தானும் கிளம்ப வேண்டுமென்று மனதில்
சொல்லிக்கொண்டான்.
சேகரை அழைத்து அந்த டிசைனை ஃபைனலைஸ் செய்து வேலையைத் தொடங்கச்சொன்னான். அது பவித்ராவின் டிசைன்
என்பதை அறிந்தபோது சேகர் சுதாரித்தான். இனி வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி அவளை ஓடச் செய்ய முடியாது என்பதை அறிந்து அவளை வேறுவகையில் ஓட வைக்க முடிவு செய்தான். அதன்படி,
அனைவரது வேலையும் சேர்த்து பவித்ரா செய்யும்படி ஆனது . அவளும் முகம் சுளிக்காமல் அனைத்தையும் செய்தாள். அந்த நேரத்தில் தான் அவளது வீட்டில் சந்தியாவிற்கு திருமணம் நிச்சயம் செய்தார்கள்.
மனோஜ் ஐ.டி யில் வேலை செய்பவன்.. வீட்டிற்கு ஒரே பையன். . அப்பா ராமநாதன். அம்மா சாவித்திரி குடும்பத்தலைவி. ஒரு தங்கை காவ்யா.. அவள் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். குடும்பமும்
நல்ல குடும்பமாக இருக்கவும் பத்மாவிற்கும் சிவகுருவிற்கும் வெகுவான திருப்தி. சந்தியாவிற்கு மனோஜின் புகைப்படத்தைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. உயரமாக சிவந்த நிறத்துடன் வடக்கத்திய நாயகன்
போலிருந்தவன் சந்தியாவின் மனதில் நன்கு பொருந்தி விட்டான். வெளியே எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல காட்டிக்கொண்டு கல்யாணக் கனவுகளில் அவள் மிதக்க ஆரம்பிக்க, பவித்ரா அவளை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டாள்.
"அக்கா ஆண்கள் சிவப்பா இருந்தால் நல்லா இருக்காதுனு நீதானே சொல்லுவ? மாப்பிள்ளை
என்னக்கா இப்படி மைதா மாவு கலரில் இருக்காரு? உனக்குப் பிடிக்கலனு அம்மாகிட்ட சொல்லிவிடவா?" என்று வேண்டுமென்றே சீண்டுவாள் பவித்ரா.
"நிறத்தில் என்னடி இருக்கிறது? அப்போ ஏதோ அறியா பருவத்தில்
சொல்லியிருப்பேன். . அழகுன்றது மனசில் தானே இருக்கு" என்று சந்தியா
சொல்ல, பவித்ரா 'ஓஹோஹோ' என்றாள்.
இன்னொரு முறை திடீரென்று, "அக்கா இந்த மாப்பிள்ளையை
வேணாம்னு சொல்லிடுக்கா" என்றவளை, 'அய்யோ இப்போ என்ன சொல்லப் போறாளோ' என்ற ரீதியில்
பார்த்து வைத்தாள் சந்தியா.
"என்னக்கா பார்க்கிற? மாப்பிள்ளைக்கு ஒரே தங்கையாம்.. எனக்கு கம்பெனிக்கு ஒரு தம்பி இருந்திருந்தால் நல்லா
இருந்திருக்கும்" என்று கண்ணடித்தவளைப் பார்த்து
தலைமீது கை வைத்தாள் சந்தியா.
"பவி.. சோதிக்காதே என்னை.. உப்புச் சப்பில்லாத ரீசனெல்லாம் சொல்லி எப்படி வேணாம்னு சொல்றது?"
"அக்கா உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்ச மாதிரியே தெரியல.. அதான்
நான் யோசிச்சு யோசிச்சு உனக்கு அம்மா கிட்ட சொல்றதுக்கு ரீசன்ஸ்
சொல்லிக் கொடுக்கிறேன்.. நீ என்னடான்னா இப்படி சொல்ற?"
"அம்மாவும் அப்பாவும் இந்த இடம் அமைஞ்சா நல்லா இருக்கும்னு
நினைக்கிறாங்க பவி.. அவங்களுக்குத் தெரியாத நல்லது கெட்டதா
நமக்குத் தெரிஞ்சுடப் போகுது? அவங்க இஷ்டப்படி நடக்கட்டும் விடு"
என்று சந்தியா சொல்ல, அதை நல்ல பிள்ளையாய் அமைதியாகக்
கேட்டுவிட்டு இரவு உணவுண்ணும் போது பத்மாவிடம் வத்தி வைத்துவிட்டாள் அவள்.
சிவகுரு, பவித்ரா, சந்தியா மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,
பத்மா அவர்களுக்கு உணவு பரிமாறியபடியே சிவகுருவிடம் பேச்சை
வளர்த்தாள்.
"மாப்பிள்ளை வீட்ல இருந்து எதாவது தகவல் வந்துச்சா? எப்போ பெண் பார்க்க வரப் போறதா சொன்னாங்க?"
"ம்மா. . இது கொஞ்சம் கூட நல்ல இல்ல " என்று பவித்ரா சொல்ல, பத்மா எதுவென்று கேட்டார்.
"அக்காவிற்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கானு கேட்காமல்
நீங்களா முடிவு செய்றீங்க.. கல்யாணம் அக்காவுக்கா இல்லை உங்களுக்கா?" என்று பவித்ரா கேட்க சிவகுருவும் பத்மாவும் பீதியோடு ஒருவரையொருவர் பார்த்தனர். சந்தியாவும் அதே பார்வையோடு பவித்ராவை பார்த்தாள்.
"என்னடி வயித்துல புளியைக் கரைக்கிற?"
"நான் எதையும் கரைக்கல .. அக்காவுக்கு
மாப்பிள்ளையை பிடிக்கலையாம் .. உங்களுக்கு நல்லது கெட்டது அவளை விட அதிகமாகத் தெரியுமாம். அதனால் தான் சரினு சொல்லியிருக்கா" என்று சந்தியா சொன்னதை அப்படியே கிளிப்பிள்ளையாய் அவள் சொல்ல பத்மா சந்தியாவைக் கலக்கமாகப் பார்த்தாள்.
"என்னடி சொல்றா இவள்?"
"தியா.. உனக்குப் பிடிக்கலைனா சொல்லிடுமா. . தரகர் கிட்ட சொல்லி வேற இடம் பார்க்கச் சொல்லலாம். எங்களுக்காகப் பார்க்காதே" என்று சிவகுரு சொல்ல சந்தியாவிற்கு புரையேறியது. அதைப் பார்த்து பவித்ரா மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
"சொல்லுடி.. அப்பா சொன்னது மாதிரி தரகர் கிட்ட வேற இடம் பார்க்கச்
சொல்லலாமா?" என்று பத்மாவும் கேட்க, சந்தியா சிரித்துக் கொண்டிருந்த
தங்கையைக் கோபமாகப் பார்த்தாள்.
"ம்மா... எனக்குப் பிடிச்சிருக்கும்மா. . பவி சும்மா என்னைக் கேலி செய்றா" என்று சந்தியா சொல்ல பவித்ரா சிரித்தாள்.
"ஏன்டி அறிவிருக்கா உனக்கு? எதில் விளையாடுறதுனு இல்லையா?"
என்று பத்மா பவித்ராவின் தலையில் குட்டு வைக்க, அவள் தலையைத்
தேய்த்துக்கொண்டே பதில் சொன்னாள்.
"ம்மா.. மாப்பிள்ளையின் போட்டோவை மேடம் போனில் வாங்கி வைச்சுட்டு, வாயைத் திறந்து பிடிச்சுருக்குனு சொல்லாமல் ஆட்டம் காட்டிட்டு இருந்தாங்க.. அதனால் தான் சும்மா விளையாடிப் பார்த்தேன்" என்று பவித்ரா சொல்ல சந்தியாவின் முகம் சிவந்து விட்டது.
அதற்கும் பவித்ரா ' பாருடா வெக்கத்தை' என்று கிண்டல் செய்ய, பத்மாவும்
சிவகுருவும் சிரிக்க, சந்தியா பவித்ராவை பாவமாகப் பார்த்தாள். பவித்ரா பெரிய மனது பண்ணி அத்தோடு விட்டுவிட பத்மாவும் சிவகுருவும் சந்தியாவின் திருமணத்தைப் பற்றி மேற்கொண்டு பேசினார்கள் .
அடுத்து வந்த நல்ல நாள் ஒன்றில் மனோஜின் வீட்டிலிருந்து வந்து சந்தியாவைப் பெண் பார்த்து போனார்கள். அவர்களுக்கும் சந்தியாவைப் பிடித்துப் போக ஒரு மாதம் கழித்து திருமணம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. சந்தியா அடிக்கடி கனவுகளில் மூழ்கினாள். கனவுகளில் மூழ்கியவளைக் காதலிலும் மூழ்க வைத்தான் மனோஜ் .வாரம் ஒரு முறை வெளியே அழைத்துச் சென்றான். திடீரென அவள் வேலை பார்க்கும் பள்ளிக்கே வந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பான். அவனோடு வாழப்போகும் வாழ்க்கையை ஆவலோடு எதிர்பார்க்கலானாள் சந்தியா.
சந்தியாவின் சந்தோஷம் பவித்ராவையும் சந்தோஷப்படுத்தியது. அலுவலகத்தில் கூட சேகர் கொஞ்சம் இணக்கமாக நடந்து கொள்ள
ஆரம்பித்தான். சைட் விசிட்டிற்கு அவ்வப்போது சேகரோடு பவித்ரா
சென்று வந்தாள். சேகரிடம் தெரிந்த மாற்றத்தில் பவித்ரா கொஞ்சம் நிம்மதியானாள். கௌதம் கூட சேகரின் மாற்றத்தை எண்ணி பவித்ராவிடம் வியந்தான்.
இடையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு
கட்டுவதற்கு சென்னையில் ஒரு
முக்கியப்புள்ளி ஜீவாவின் கம்பெனியை நாடியிருந்தார். அந்தப் பணி
கௌதம் டீமிற்குத் தரப்பட்டிருந்தது.
அன்று சாப்பிடும் நேரம் தாண்டியும் கௌதம் வராமல் இருக்கவும் பவித்ரா
கௌதமைத் தேடிச் சென்றாள். கௌதமுடன் ஜீவா நின்று
பேசிக்கொண்டிருக்கவும் அவள் இரண்டடி தள்ளியே நின்றுவிட்டாள்.
பவித்ரா வரும்போதே கௌதம் அவளைப் பார்த்துவிட்டதால் ஜீவா
அறியாமல் அவளிடம் 'என்ன' என்று சைகை செய்தான். அவள்
சாப்பிடுவது போல சைகை செய்து காட்ட, கண்களால் மன்னிப்பை
வேண்டியபடி ஜீவாவைப் பார்த்தான். அவன் எதுவும் பேசாமல் கௌதமைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னாச்சு கௌதம்? பேயைப் பார்த்தது மாதிரி இப்படி முழிக்குறீங்க?"
என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்த்தவன் அங்கே பவித்ரா நிற்கவும்,
"பேயைத் தான் பார்த்திருக்கான்" என்று தனக்குள் சன்னமாக முனகினான்.
ஜீவாவின் வாய் அசைவும் முனகலும் கௌதமிற்குத் தெளிவில்லாத குரலில் கேட்க, அவன் ஜீவாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.