"இதோ வந்துட்டேன்ங்க" தன் அத்தையின் மூட்டு வலி குறைய அவரின் காலில் எண்ணெயை தேய்த்துக் கொண்டிருந்தவள் அவனழைப்புக்கு மறுபதில் கூறி அந்த எண்ணெய் கையுடனே அவன் முன் போய் நின்றாள்.
"என் லேப்டாப் சார்ஜர் எங்க?? உன்ன யாரு எல்லாத்தையும் இடம் மாத்தி வைக்க சொன்னது. காலைலருந்து எல்லாத்தையும் என்னை தேட வச்சிட்டிருக்க நீ" எனக் கோபமாய் அவளை பார்த்து உரைத்தான்.
"இதோ இங்க தான்ங்க எடுத்து வச்சேன்" என்றவள் தன் கை எண்ணெயாய் இருப்பதை மறந்து அவனின் வெள்ளை சட்டைக்கு அடியில் கிடந்த அந்த சார்ஜரை தன் கையால் எடுத்து கொடுக்க, அவனின் வெள்ளை சட்டையில் எண்ணெய் சற்றாய் ஒட்டிக்கொண்டது.
இதை கண்டவனின் கோபம் சிகரத்தை தொட, "அறிவிருக்காடி உனக்கு?" என்றவன் திட்ட தொடங்க,
"ஆமா எப்ப பார்த்தாலும் அறிவு இருக்கானே கேட்கிறது... இவர்கிட்ட நிறைய இருந்தா எனக்கு ஷேர் செய்ய வேண்டி தானே" என மனதிற்குள் அவனுக்கு கௌண்டர் கொடுத்துக் கொண்டு திட்டு வாங்கும் பிள்ளையின் முக பாவனையில் அமைதியாய் நின்றிருந்தாள்.
"அய்யோ என் ஃபேவரட் ஷர்ட்டி. இப்படி பண்ணிட்டியே... என் கண்ணு முன்னாடி நிக்காத... போ இங்கிருந்து... இல்லனா உன்ன என்ன செய்வேனே தெரியாது" என கர்ஜித்தான்.
உயிரற்ற பொருளுக்காக உயிருள்ள ஜீவனை கடுஞ்சொற்களால் காயப்படுத்தும் கோபம். அந்நொடி கோபத்தை அடக்கி நிதானம் வரும் வரை அமைதிக் காத்தால் பிறரை காயப்படுத்தும் நம் செயலை தவிற்கலாமே.
ஏதும் கூறாது அமைதியாய் சென்றுவிட்டாள் கண்மணி. தன் அத்தையிடம் விட்ட வேலையை தொடர்ந்தவள் , அவருக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து அவரின் வலியை வெகுவாய் குறைக்கச் செய்து உறங்க வைத்தவள், ஏனோ மீண்டும் அந்த அறைக்கு போக மனம் வராமல் தன் மனதை திசை திருப்பும் பொருட்டு சமயலறை சென்றாள்.
வீட்டில் அனைத்து வேலைக்கும் வேலையாள் வைத்திருந்தான் சிவா. சிவகாமி வீட்டின் பராமரிப்பை கவனித்துக் கொண்டிருந்தார்.
கண்மணி வந்ததும் அவளிடம் ஒப்படைத்து விட்டார் அவ்வேலையை.
தனதறையில் தன் தொழில் வேலையில் மூழ்கியிருந்தவன் மனமோ கண்மணியையே சுற்றி வந்தது.
தொழில் வேலை என்று வந்து விட்டால் தன்னை சுற்றி எது நடந்தாலும் அவனின் கவனம் அவ்வேலையில் மட்டுமே இருக்கும். அவன் வேலை நிமித்தமாய் கோபம் கொண்டு பலரையும் பல நேரம் கடிந்துக் கொண்டிருக்கிறான். திட்டிவிட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்கி போவான். இதுவரை எவரையும் திட்டியதற்காக வருந்தியதில்லை அவன்.
ஆனால் அந்த முதலிரவிலிருந்து கண்மணியை கோபத்தில் திட்டும் போதெல்லாம் இவன் மனமும் காயப்பட்டு தான் போனது.
இன்று அவ்வலியை வெகுவாகவே உணர்ந்தானவன். மனம் பாரமாய் உணர்ந்தான்.
ஆயினும் டில்லியின் புது அலுவலக வேலை அவனின் கழுத்தை நெறிக்க, அவ்வேலைகள் அவனை உள்ளிழுத்துக் கொள்ள, அதில் மூழ்கிப் போனான்.
பசி என்ற உணர்வு அவன் வயிற்றில் தோன்றிய நேரம் தன் வேலையை விட்டு நிகழ் உலகத்திற்கு வந்தவன் கடிகாரம் பார்க்க, மணி மதியம் ஒன்று என காண்பிக்கவும் முகப்பறைக்கு வந்தான்.
சிவகாமி அப்பொழுது தான் உறக்கம் கலைந்து வந்தார்.
"அம்மா பசிக்குதுமா" என்றுரைத்து உணவு மேஜையில் அமர்ந்து கண்மணி எங்கே என சுற்றும் முற்றும் பார்த்தான்.
உணவு பாத்திரங்களை சமையலறையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தாள் கண்மணி.
மேஜையில் அடுக்கத் தொடங்கிய கண்மணி, "அத்தை சாப்பாடு ரெடி. நீங்க பரிமாறுங்க. நான் எடுத்து வந்து வைக்கிறேன்" எனக் கூறி அவள் செல்ல பார்க்க,
பாத்திரம் அடுக்கி வைக்கும் அவளையே இமை சிமிட்டாது பார்த்திருந்த சிவாவை கண்ட சிவகாமி, "கண்மணி நீ பரிமாறும்மா... வசந்தாவ எடுத்துட்டு வர சொல்லு. நீ ஏன் இங்கயும் அங்கயும் அலஞ்சிட்டிருக்க" எனக் கூறி அவளை பரிமாற வைத்தாரவர்.
வசந்தா அவர்களின் வீட்டில் சமையல் வேலை செய்பவர்.
அவளின் வாடிய முகம் அவன் மனதை வாட்ட, அவளை சமாதானம் செய்ய எண்ணியவன் அவள் முகத்தையே பார்த்திருக்க, அவளோ அவன் முகத்தை சற்றும் காணாது பரிமாறிக் கொண்டிருந்தாள்.
"நீயும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடும்மா" என்றவர் கூற,
"இல்லத்தை எனக்கு பசிக்கலை. நான் அப்புறமா சாப்பிடுறேன்" எனக் கூறி அவர்களை உண்ண வைத்தாள்.
அவளை சாப்பிட கூறவென அவன் வாயெடுத்த வேளை அவன் கைபேசி அழைக்க, அவளிடம் கவனம் செலுத்த இயலாது அவன் வேலை தடுத்திழுக்க, கைபேசியில் பேசிக் கொண்டே உணவு உண்டவன் தன் வேலையில் மூழ்கிப்போனான்.
அவன் நெட்டி முறித்து தன் வேலையை முடித்திருந்த சமயம், மணி நான்கை தொட்டிருக்க, மெத்தையின் மறு ஓரத்தில் படுத்து உறங்கியிருந்த கண்மணியை கண்டானவன்.
"இவ எப்ப உள்ள வந்தா?? இதை கூட கவனிக்காமலா வேலை பார்த்துட்டு இருந்திருக்கோம்" என்றெண்ணிக் கொண்டவன் அவளருகே சென்று பார்க்க, அழுகையின் விசும்பலுடன் உறங்கியிருந்தாளவள்.
அவளின் விசும்பலில் இவனின் தொண்டை துக்கத்தில் அடைத்தது.
"ம்ப்ச் கண்டிப்பா சாப்டிருக்க மாட்ட... அப்படி என்ன தான் எனக்கு கோபம் வருதோ" என எண்ணிக் கொண்டவன்,
சில நிமிடங்களில் சமையலறை சென்று கையில் உணவு தட்டுடன் வந்தவன் கண்மணியை எழுப்பினான்.
அவள் தூக்க கலக்கத்தில் பேந்த பேந்த விழிக்க, அவளை முகம் கழுவி வர செய்தவன், அவளுக்கு ஊட்டிவிட தொடங்கினான்.
இமைக்க மறந்து அவனளித்த உணவை வாயில் வாங்கி கொண்டிருந்தாளவள்.
அவளை மீறி அவள் கண்களில் வழிந்த நீரில் இவனின் மனம் வலிக்க,
கையிலிருந்த தட்டை அருகிலிருந்த மேஜையில் வைத்தவன், தன் இடக்கையால் அவளின் கண்ணீரை துடைத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன், "வெரி சாரிடா கண்மணி" என்றதும் விசும்பல் அதிகமாக உதடு துடிக்க அழுதாளவள்.
அவள் முகத்தை தன் தோளில் சாய்த்து தலையை வருடியவன், "உன் மேல தப்பே இருந்தாலும் நான் அப்படி திட்டிருக்க கூடாது. சத்தியமா இனி உன்கிட்ட என் கோபத்தை குறைச்சிக்கிறேன். நீ அழுதா என் மனசு தாங்க மாட்டேங்குது கருப்பட்டி பொண்ணு. ப்ளீஸ் அழாதேடா... உன் புருஷனை இந்த ஒரு தடவை மன்னிக்க கூடாதா??" என கண்ணை சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவன் கேட்கவும்,
அவளின் இதழ் மெலிதாய் விரிய, "ஹ்ம்ம் தட்ஸ் மை கேர்ள்" என்றவன் உணவு ஊட்ட தொடங்கினான்.
"உன்கிட்ட கொஞ்சம் பேசனும் கண்மணி. நேத்து வேற பேச வந்து எங்கேயோ டைவர்ட் ஆகி எப்படியோ போய்டுச்சு. நீ சாப்பிட்டு முடிச்சதும் பேசலாம்" என்று கூறிக் கொண்டே ஊட்டினான் அவளுக்கு.
அவளுக்கு ஊட்டி முடித்ததும் அவளிடம் தண்ணீர் கோப்பை நீட்டி அவள் முகம் பார்த்தவன், அவள் கோப்பையை கையில் வாங்க நீட்டிய நேரம் ஒரு நிமிடம் என கூறியவன், அவளின் இதழோரத்திலிருந்த இரு பருக்கையை தன் இதழால் எடுத்திருந்தான். அவனின் எதிர்பாரா இச்செயலில் சற்றாய் அதிர்ந்து அடங்கியது அவளின் மனமும் உடலும்.
அவனோ இயல்பாய் கோப்பையை கொடுத்து, "இப்ப குடி" என கண்ணில் சிரிப்பு மின்ன குறும்பு சிரிப்புடன் கூறி கை கழுவ சென்றான்.
கை கழுவி வந்தவன், கட்டிலில் முதுகு சாய்த்து கால் நீட்டி அமர்ந்தவன் தன் வலக்கையை நீட்டி அவளை அருகே அழைக்க, அவள் கை பிடித்ததும் தனக்கு முன் அவளை அமர வைத்து தன் கையை அவளின் இடையோடு கோர்த்து தன்னுடன் இணைத்தவன், "இப்ப பேசலாமா என் கருப்பட்டி அழகி" என அவள் தோளில் முகம் வைத்து அவன் கேட்க,
அவளுக்கு தான் உள்ளும் புறமும் அனைத்தும் வெலவெலத்த உணர்வு. ஆயினும் வெகுவாய் ரசித்தாள் அவனின் அண்மையை இந்நொடியை.
"ஹ்ம்ம்" காத்து தான் வருது என்ற நிலையில் அவள் ம்ம்ம் சொல்லி வைக்க, அவளின் இந்த ஹஸ்கி வாய்ஸில் மதி மயங்கியவன் அவளின் காதோரம் தன் மீசையை உராய்ந்து குறுகுறுக்க செய்து, அவள் கன்னத்தில் இதழை இறக்க,
அதிர்ந்த குழைந்த தன் உடலை ஒரு நிலைக்குள் கொண்டு வந்து பிரயத்தனப்பட்டு தன் குரலை சரி செய்தவள், "ஏதோ பேசனும்னு சொன்னீங்க?" அவனை கலைத்தாள்.
தலையை உலுக்கி தன்னிலை வந்தவன்,
"அய்யோ நீ என் கிட்ட வந்தாலே எல்லாத்தையும் மறந்திடுறேனே" என புலம்பியவன், அவளை தன்னருகில் சற்று தள்ளி அமர செய்தவன், "இப்படியே இருந்து கேளு. நான் ஃபுல்லா சொல்லி முடிச்சிடுறேன்" என கூறி பேச ஆரம்பித்தான்.
"சின்ன வயசுலருந்தே என்னோட லட்சியம் பிசினஸ் செய்றது. இந்த லட்சியம் உருவானது அப்பா இறந்த பிறகு. எங்களுக்காக நிறைய சேவிங்க்ஸ்லாம் அப்பா வச்சிட்டு போயிருந்தாலும், வீட்டுல சம்பாத்தியம் ஒன்னு இருக்கனும்னு அக்கவுண்டண்ட்டா அம்மா வேலைக்கு போய்டு இருந்தாங்க. நான் காலேஜ் போய் பார்ட் டைம் வேலை பார்க்க ஆரம்பிக்கவும் அடம் பிடிச்சி அம்மாவ வேலைக்கு போகவிடாம செஞ்சேன். காலை காலேஜ் ஈவ்னிங் வர்க்னு சுத்தினதால எனக்கு ஃப்ரண்ட்ஸ் னு சுத்தமா கிடையாது. அம்மா அப்பா லவ் மேரேஜ்ங்கிறனால சொந்தம்னும் யாரும் எங்க கூட ஒட்டல. சோ என் லைஃப் நான் என் அம்மா என் பிசினஸ் இதுக்குள்ள மட்டும் தான் உழண்டுட்டு இருந்துச்சு. என் லைஃப்ல மேரேஜ்னு ஒன்னு நான் நினைச்சிக் கூட பார்த்தது இல்ல. எனக்கு என் பிசினஸ் விரிவாக்கனும் உழைக்கனும் அம்மாவ ஹேப்பியா வச்சிக்கிடனும் அது மட்டும் தான் முக்கியம்னு இருந்துட்டேன்.
பிசினஸ் மேனேஜ்மெண்ட்ல கண்டிப்பு ரொம்ப முக்கியம். அதுவுமில்லாமல் நான் ஓவர் பர்ஃபெக்ஷனிஸ்ட் (perfectionist)... அதுல தான் இந்த கோபம் வர ஆரம்பிச்சிது... உனக்கு தெரியும்ல நம்ம மேரேஜ் ஃபிக்ஸ் ஆனப்ப நான் டெல்லில இருந்தேனு. நம்ம மேரேஜ்க்கு முந்தின வாரம் தான் அங்க ஆபிஸ் ஓபனிங் செரிமனி நடந்துச்சு. அந்த ஆபிஸ் ஃபர்ஸ்ட் ப்ராஜக்ட் இப்ப போய்ட்டு இருக்கு. அதை சக்ஸஸ்புல்லா முடிச்சிட்டா டெல்லில நம்ம கம்பெனிக்கு நல்ல பேர் வரும். அந்த வர்க்னால தான் என்னால வேற எதுலயும் கான்சன்டிரேட் பண்ண முடியலை" என தன்னை பற்றி தன்னிலை விளக்கம் அவன் கூற,
"உங்க அப்பா அம்மா லவ் மேரேஜ்னு சொன்னீங்களே... நீங்க ஏன் லவ் மேரேஜ் பண்ணிக்கலை" என்றவள் அவன் கூறிய மற்றதையெல்லாம் விட்டுவிட்டு முக்கியமாய் இக்கேள்வியை கேட்க,
"அடியேய் நான் எவ்ளோ விஷயம் சொன்னேன். இதெல்லாம் விட்டுட்டு இது தான் உனக்கு பெரிய சந்தேகமா??" என்றவன் சிரித்துக் கொண்டே கேட்க,
"ஆமா... சொல்லுங்க... நீங்க யாரையும் லவ் பண்ணலயா??" என தீவிரமாய் அக்கேள்வியே அவள் மீண்டும் கேட்க,
"நான் லவ் பண்ணேன்னு சொன்னா என்ன செய்வ?? பண்ணலனு சொன்னா என்ன செய்வ??" எனக் குறும்பாய் சிவா அவளைக் கேட்க,
"லவ் செஞ்சிருந்தீங்கனா உங்களோட லாஸ்ட் லவ் நானா தான் இருக்கனும்னு கடவுள்ட்ட வேண்டிக்குவேன். அப்படி நீங்க என் லவ்வை மட்டுமே வாழ்நாள் முழுமைக்கும் உங்க மனசுல நிக்குறமாறி நடந்துக்குவேன். லவ் செய்யலைனா உங்களுடைய ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் நானா தான் இருக்கனும்னு வேண்டிக்குவேன். என்னோட லவ் எவ்ளோ ப்ரிசியஸ்னு உங்களுக்கு புரிய வைப்பேன்" என்றவள் கண்கள் மின்ன பேசிக்கொண்டிருக்க,
அவளின் கூற்றில் அதிசய ஆச்சரியம் அடைத்தவன் அவளை அள்ளி தன் மடியில் அமர்த்தியிருந்தான். அவள் கன்னத்தில் இதழ் பதித்திருந்தான்.
அவளுக்கு தான் இன்ப அவஸ்தையாகி போனது அவனின் இந்த அதிரடிச் செயலில்.
மடியில் அமர்ந்திருந்தவளின் இடையை பற்றி அவளை தன் முகம் நோக்கி திருப்பியவன், "உனக்கு கோபமே வராதா என் கருப்பட்டி பொண்ணு?" என்று கேட்டான்.
"ஹ்ம்ம் வருமே!!! அது நான் எக்ஸ்ட்ரீமா ஹர்ட் ஆனா வரும். அப்போவும் மோஸ்ட்லி திரும்ப எனக்கு ஹர்ட் செய்ய மனசு வராது. சண்டை போட பிடிக்காது. சோ சைலண்ட் ஆயிடுவேன். நான் ரொம்ப ஹர்ட் ஆயிட்டேங்கிறதை என்னோட சைலண்ட் வச்சி தெரிஞ்சிக்கலாம். என் கோபத்தை நான் காமிக்கிற விதம் அது தான்" என்றாளவள்.
"ஹோ எப்படி இன்னிக்கு மேடம் ரூமிற்கே வராம என்கிட்ட மூஞ்சு கொடுத்து கூட பேசாம போனீங்க. அப்படி" என்றவன்,
"என்னோட எக்ஸ்ட்ரீம் ஆப்போசிட் கேரக்டர்டா நீ" அவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டினான்.
"பாரு பேசிட்டே டாபிக் டைவர்ட் ஆயிடுச்சு. உன் கூட இருந்தாலே நான் எல்லாத்தையும் மறந்துடுறேன்" என்றவன் உரைத்ததும்,
அவன் மடியை விட்டு அவள் இறங்க முற்பட, அவள் இடையை பற்றி மீண்டும் மடியில் அமர்த்தியவன், அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு, தன் முகம் காணுமாறு திருப்பி அமர்த்திக் கொண்டு,
"அதெல்லாம் ஒன்னும் நீ இறங்க வேண்டாம். இப்படி உட்கார்ந்துட்டே பேசுவோம்" என்றவன்,
"நான் சொல்ல வந்தது என்னன்னா என்னைய நீ நிறைய அட்ஜஸ்ட் செஞ்சிக்க வேண்டி இருக்கும். இந்த மூனு நாளைக்குள்ளயே உன்னைய நான் ரொம்ப படுத்திட்ட ஃபீல். நாளைக்கு வேற நான் கண்டிப்பா டெல்லி போயாகனும். அங்கு அந்த ப்ராஜக்ட் முடியற வரை என்னால இங்க வர முடியாது" என்றதும்,
"நாளைக்கேவா" என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க,
அவளின் சோக முகத்தைப் பார்த்தவன், "என்னைய அவ்ளோ பிடிக்குமா கண்மணி உனக்கு? நான் உன்கிட்ட முதல் சந்திப்புல சண்டை தான் போட்டிருக்கேன். உன்கிட்ட நேத்து வரை சரியாக் கூட பேசலை.
அப்புறம் எப்படி இப்படி ஒரு காதல் என் மேல" என அவன் ஆச்சரியமாய் கேட்க,
அவன் கழுத்தில் மாலையாய் தன் கைகளை கோர்த்து தோளில் சாய்ந்தவள்,
"எனக்கு ஆஞ்சநேயரை ரொம்ப பிடிக்கும்" என்றாள் தீவிரமாய்,
"சோ" என கேள்வியாய் அவளை அவன் நோக்க,
"அவருக்கு யாரை பிடிக்குதோ அவங்களை எனக்கும் பிடிக்கும். அவருக்கு உங்களை பிடிக்கும். அதனால எனக்கும் உங்களை பிடிச்சிடுச்சு" என்றவள் பூரிப்பாய் கூற,
"லூசா இவ? " என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன்,
"அவருக்கு என்னைய பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?" என்றவன் குழப்பமாய் கேட்க,
"அது வந்து.... அது வந்து" என ராகம் இழுத்தவள், "சொல்ல முடியாது... கன்ஃபூசன்லயே சுத்துங்க" எனச் சொல்லி சிரித்தாள்.
அவள் கன்னக்குழியில் இவன் மனம் தடுமாற பதித்திருந்தான் தன் இதழை அவளின் கன்னத்தில்.
மீண்டும் அவள் முகம் சோகமாய் மாற, "நானும் உங்க கூட டெல்லிக்கு வரவா??"
என்று கேட்டாளவள்.
"நான் அங்க ஒரு இடத்துல இருக்க மாட்டேன்டா. எப்ப நைட் ரூம்க்கு வருவேன் தூங்குவேன்னே தெரியாது? நீ வந்தா கஷ்டம் தான். அதுவுமில்லாமல் ஐ ஹேவ் டு மேனேஜ் சென்னை அண்ட் பெங்களுர் பிராண்ச் ஆபிஸ் ஆல்சோ"
"இது எல்லாம் சேர்ந்து ஸ்டெரஸ் ஆகி கோபத்தை உன் கிட்ட காமிச்சிடுவேனோங்கிற பயமும் கூட இருக்கு. ஒன்லி டூ வீக்ஸ் அதுக்குள்ள ப்ராஜக்ட் முடிச்சிடுவோம். உடனே நான் வந்திடுவேன்" என்றானவன்.
"ஹ்ம்ம்" என வெறுமையாய் தலை அசைத்தவள், அவன் மடியிலிருந்து இறங்க போக,
அவளை இறங்க விடாமல் இடையை பற்றிக் கொண்டவள், "என்ன மேடமுக்கு என் மேல கோபம்?" என அவள் காதோரம் உரசி அவன் கேட்கவும்,
"இல்லை" என வாடிய முகத்துடன் கூறி அவள் இறங்க முற்பட, அவளை சிரிக்க வைக்க எண்ணியவன் அவளுக்கு கிச்சி கிச்சி மூட்ட துள்ளிக் குதித்து அவன் மேலேயே விழுந்தாள்.
"அய்யோ விடுங்க" அவஸ்தையாய் நெளிந்து அவனிடமிருந்து அவள் விலக போராட,
"கண்மணிம்மா " அவள் அத்தை அழைக்க,
"இதோ வரேன் அத்தை" விட்டால் போதுமென அவ்விடத்தை விட்டு ஓடினாளவள்.
சிவாவின் சிரிப்பு சத்தம் அவளை தொடர்ந்து கரைந்தது.
சிவாவிற்கு அவளின் மீதான நேசம் எல்லையை கடந்து காட்டாறாய் ஓடிக் கொண்டிருந்தது இப்பொழுது.
அவளின் சிந்தனை மட்டுமே அவனை சூழ்ந்திருந்தது.
தன்னை தன் மனைவி காதலிக்கும் அளவை எண்ணி வியந்து பூரித்து என இன்ப உலகில் பயணித்து கொண்டிருந்தானவன்.
கண்மணி இரவுணவு உண்ண அழைக்க வரும் வரை ஒரு வித மோனநிலையில் இருந்தானவன்.
உண்டு முடித்து இருவரும் அவர்களின் அறைக்கு வந்து சேர, " இன்னிக்கு ஃபுல்லா உன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு கண்மணி. நீ என் பக்கத்துலயே இருக்கனும்னு ஆசையா இருக்கு கருப்பட்டி பொண்ணு" என்றானவன்.
"என் சிடுமூஞ்சு மச்சான் ரொமேன்ஸ் மச்சானா மாறிட்டீங்க போலயே!! " என கண் சிமிட்டி அவள் கூற,
"என்னது சிடுமூஞ்சா... அடிப்பாவி... இப்படியா எனக்கு பேரு வச்சிருக்க" என சிரித்தானவன்.
ஏனோ அன்றைய நாளின் பலவித உணர்வுகளில் அவளுக்கு தூக்கம் கண்ணை இழுக்க, "எனக்கு ரொம்ப தூக்கமா வருதுங்க. நீங்க என்கிட்ட பேசிட்டே இருங்க நான் அப்படியே தூங்கிடுறேன்" என படுத்தவள், அவன் பேசுவதை கேட்டுக் கொண்டே உறங்கியும் விட்டாள்.
அவன் தூங்காது அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இடையில் விழிப்பு வந்து அவள் கண்ணை திறந்துப் பார்க்க, தன்னையே இமைக்காது பார்த்திருக்கும் கணவனை தான் கண்டாளவள்.
தன் இரு கைகளையும் விரித்து அவனை நோக்கி நீட்ட, அழகாய் சிரித்தான், அவளின் கைகளுக்குள் பாந்தமாய் நுழைந்தவன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"என் லவ் புரிஞ்சிடுச்சா கருப்பட்டி பொண்ணு" என ஆர்வமாய் அவள் காதுக்குள் அவன் கேட்க,
"இல்லை" என வேகமாய் தலை ஆட்டியவள்,
"ஆனா உங்களை ஏங்க வைக்க மனசு வரல" என்றவள் கூறியதும்,
அவளை விட்டு விலகியவன், நீ ஒன்னும் பரிதாபப்பட்டு கரிசனம் காட்டி என் கூட சேர வேண்டாம் என கோபத்தில் கத்தினானவன்.
அவனின் கோபத்தில் அவளின் தூக்கம் முழுவதுமாய் கரைய, பயமாய் அவனை பார்த்திருந்தாளவள்.
அவளின் பயத்தை கண்டவன், தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர போராடி தன்னை சமன் செய்தவன்,
"இன்னும் டூ வீக்ஸ் டில்லி பிராஜக்ட் முடிஞ்சு என் மைண்ட் ரிலாக்ஸ் ஆனதும் எல்லாத்தையும் பார்த்துக்கலாம். இப்ப தூங்குடா கண்மணி" என்றவளை தன் கைவளைக்குள் கொண்டு வந்து தலை வருடிவிட்டானவன்.
அவன் கை வளைக்குள் இருந்து மார்பில் முகம் புதைத்து படுத்திருந்தவள், தன் முகம் நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, என்ன என்பது போல் பார்த்தான் சிவா.
"உங்கட்ட ஒன்னு கேட்கனும்" என தயங்கி தயங்கி அவள் கூற,
"எதுனாலும் நீ என்கிட்ட பேசலாம். பயப்படாம கேளு" என ஊக்கினானவன்.
"அன்னிக்கு உங்க கிட்ட லவ் சொன்னேன்ல அதுலருந்து மனசு உறுத்திட்டே இருக்கு" என்றவள் கூறியதும்,
"ஏன் அவன் கிட்ட லவ் சொன்னோம்னு மனசு உறுத்துதா" என சிரித்துக் கொண்டே சிவா கேட்க,
"ம்ப்ச் விளையாடாதீங்க. நான் சீரியஸா பேசுறேன்" என்றவள் சிணுங்க,
"சொல்லுங்க மேடம் என்னது உங்க மனசை உறுத்திட்டு இருக்கு?" என்றவன் கேட்க,
"அன்னிக்கு நான் லவ் சொன்னது உங்களுக்கு என்னை..." என நிறுத்தி எவ்வாறு கூறுவதென தெரியாது அவள் தடுமாறி நிற்க,
"ஹ்ம்ம சொல்லுடா... எதுக்கு இவ்ளோ தயக்கம்?" என்றவன் கூற,
"இல்ல நான் அப்படி லவ் சொன்னதுல நீங்க என்னை எதுவும் தப்பா நினைக்கலையா?? இப்ப கூட ஏதோ உங்களை ஏங்க வைக்கிற ஃபீல் வரவும் கையை விரிச்சிட்டேன்.
என்னடா நம்மகிட்ட பேசி பழகுறதே இந்த மூனு நாளா தான் அதுக்குள்ள இப்படி பேசுறாளேனு என்னை" என அவள் கூற வருவதற்குள், அவளை விலக்கியவன் கோபம் தலைக்கேற படுக்கையை விட்டு எழுந்திருந்தான்.
"அறிவிருக்காடி உனக்கு. நான் உன்னை தப்பா நினைப்பேனு எப்படிடி நினைச்ச... புருஷன் பெண்டாட்டிக்கு இரண்டு பேருக்கும் முதல்ல இருக்க வேண்டியது பரஸ்பர நம்பிக்கை தான். ஏன் ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே நமக்குள்ள எல்லாமும் நடந்திருந்தா என்னை நீ தப்பா நினைச்சிருப்பியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுகள் ஒன்னு தான் கண்மணி. திருமணம் ஆனதும் பசங்க உடனே கிஸ் பண்ணலாம் ஹக் செய்யலாம். ஆனா பொண்ணு செய்யக் கூடாதோ?? இதென்ன அநியாயம். என்னிக்கும் நான் உன்னை தப்பா நினைப்பேனு மட்டும் கனவுல கூட நினைக்காத கண்மணி. அது என் கேரக்டர தப்பா சொல்றது போல இருக்குது" என மன வலியுடன் அவன் கூற,
"வெரி சாரிப்பா. ப்ளீஸ் ஃபீல் செய்யாதீங்கப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றவள் அவனை அணைத்துக் கொள்ள,
இரண்டு நாளில், தான் வெகுவாய் மாறி விட்டது புரிந்தது சிவாவிற்கு. துளியளவும் அவளிடம் கோபம் காண்பிக்க மனம் வரவில்லை அவனுக்கு. மாறாய் அக்கோபத்தை கட்டுப்படுத்தவே முயற்சி செய்தான். அதையும் மீறி கோபம் கொண்டாலும் அவளின் சோக முகத்தை காண சகிக்காது உடனேயே அவளை சமாதானம் செய்ய விழையும் அவனின் மனம்.
அவளின் அணைப்பில் நீர் பட்ட தீயாய் மட்டுபட்ட கோபத்தை எண்ணி சிரித்துக் கொண்டவன், "சரி வா கண்மணி தூங்கலாம்" என்று கூறி அவளை தன் தோள் வளைக்குள் வைத்து உறங்க வைத்தவன் தானும் உறங்கிப் போனான்.