All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இது நான் முதன் முதலாய் கவிதையாய் அல்லாது கதையாய் எழுதிய முழு நீளக் காதல் சிறுகதை. நிறைய குட்டி குட்டி கவிதை சிறுகதை எழுதிய பிறகு தான் என்னைக் களவாடிய காவலனே எழுதினேன். அந்த கவிதை சிறுகதை எல்லாம் இனி வரும் நாட்களில் ஒவ்வொன்றாய் பதிவிடுகிறேன்.
காதல் மலர்ந்தத் தருணம்
எனக்கு கதை எழுத வருமா னு தெரிஞ்சிக்க நான் எழுதிய சிறு கதை இது. லவ் அண்ட் லவ் ஒன்லி தான். படிச்சு பாருங்க மக்களே.. உங்கள் கருத்துக்களையும் மறக்காம பகிர்ந்துக்கோங்க.
இப்பொழுது நாம் பார்க்கப் போவது மதுரஞ்சனி மற்றும் மதியரசனின் காதல் கதை....
மது மற்றும் மதியின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கபட்டு நடந்தேறிய அக்மார்க் அரேஞ்ச் மேரேஜ்.... திருமணமாகி மூன்று மாதமேயான புதுமணத் தம்பதியர்கள் அவர்கள்...
பின் எப்படி இது காதல் கதை என்று நீங்க யோசிக்கி்றீர்கள் தானே... வாங்க கதைக்குள்ள போகலாம்...
அன்று காலை உணவு உண்டபின் தங்களின் அறையில் அமர்ந்திருந்தான் மதி.அவன் மடியை தலையணையாக்கி இடையைக் கட்டிக்கொண்டுப் படுத்திருந்தாள் மது.அவனிடம் எப்பொழுதும் கேட்கும் அதே கேள்வியை இப்பொழுதும் கேட்டு வைத்தாள் மது…
மடியில் இருந்தவாறே தன் தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
"என் மேல எப்ப மதிப்பா, உங்களுக்கு லவ் வந்துச்சு??"
"விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது...
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது... முழு காதல் என்று வந்தது தெரியாதே.. அது தெரியாதே"
என்று வழக்கம் போல் பாடினான் அவன்....
அந்த காதல் நிறைந்த காந்தக் குரலுக்கு அவள் மனம் மயங்கி அவனிடம் சென்றாலும், இன்று அறிந்தேயாக வேண்டுமென்ற உந்துதலில் மனதை தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள் அவள்.
" விளையாடாதீங்க மதிப்பா..." சிணுங்கிக் கொண்டே கேட்டாள்.
"காதல் நீங்க ஃபீல் செஞ்ச நேரம்.. நம்ம கல்யாணம் அரேஞ்ச் மேரேஜ்ங்கிறனால குறிப்பிட்ட நாள்னு சொல்ல முடியாதுனு தெரியும்.. இருந்தாலும் நீங்க உணர்ந்த தருணம்னு இருக்கும்ல மதிப்பா... அதை சொல்லுங்களேன்"...
அவளின் பேசும் விழியை பார்த்து அழகாய் இதழ் விரிய சிரித்தான் அவன்..
" ஹம்ம்ம் சொல்றேன்டா... நான் உன்னை முதல எங்க பார்த்தேனு தெரியுமா மது???"
" என்னை பொண்ணு பார்க்க வந்தன்னிக்கி தானே.. இல்ல அதுக்கு முன்னாடி போட்டோல பாத்திருப்பீங்க"
இதற்கும் அவள் மேல் காதல் பார்வை வீசி அழகாய் சிரித்தான்...
" என்னங்க நீங்க சும்மா சும்மா ரொமேன்டிக் லுக் விட்டுட்டு இருக்கீங்க.... அப்படி என்ன மர்மம் அடங்கி இருக்கு "
கண்கள் சுருக்கி அவனை நோக்கி அழகாய் கேட்டுக்கொண்டே மடியில் தலையணை வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்...
"நான் உன்னை முதன் முதல பாரத்தது நம்ம காலேஜ்ல..."
அவளின் வழி வியப்பில் விரிந்து அவனை நோக்கியது...
" நான் ரெக்கார்ட் சைன் வாங்க உங்க பில்டிங்ல இருக்க எங்க சாரே பார்க்க வந்தேன்.... அப்ப லேப் முன்னாடி ஒரு குட்டிப் பொண்ணு துறுதுறு கண்ணுல தண்ணியோட நகத்தை கடிச்சிக்கிட்டு நின்னுட்டு இருந்துச்சு... அந்த லேப் சார், கோட் இல்லாம ஏன் வந்தனு திட்டிட்டு போனதை பார்த்தேன்...
அந்த பொண்ணோட வாட்டமான முகம் என் மனசை என்னமோ பண்ணுச்சு... அதனால என் ப்ரண்டுக்கு கால் பண்ணி உடனே ஒரு கோட் அரேஜ் பண்ணி உன் கிளாஸ் பசங்க மூலமா அந்த பொண்ணுகிட்ட கொடுக்க வைச்சேன்... அப்ப அந்த பொண்ணு சிரிச்ச சிரிப்பிருக்கே.. அந்த கண்ணும் சேர்ந்து சிரிச்சிது... அவ கண்ணு அவ்ளோ அழகு.... "
புசு புசு வென மூச்சு வாங்க அதே அழகிய கண்களால் அவனை முறைத்து கேட்டாள் " யாரந்த பொண்ணு???" ...
"அடியே என் மக்கு பொண்டாட்டி!!
அது நீ தான்டி என் செல்லக்குட்டி "
சிதறிய சிரிப்பினூடே கூறினான் அவன்...
"அப்பலாம் அது லவ் கிடையாது.. ஜஸ்ட் ஒரு குட்டிப்பொண்ணு பீல் செய்றத பார்க்க முடியாம செஞ்ச ஹெல்ப்.. அவ்ளோ தான்..."
"நான் படிப்புலாம் முடிச்சி வேலைக்கு போய்ட்டு இருந்த டைம்... பொதுவா எனக்கு ஒரு பழக்கம் உண்டு... படிக்கிற காலத்துல வார கடைசி நாட்கள் தவறாம முதியோர் இல்லம் போவேன்.. அங்கிருக்கிற பெரியவங்க கிட்ட ஜாலியா பேசிட்டு அவங்க தேவைய கவனிச்சிக்கிட்டு வருவேன்...
என்னை பொறுத்த வரைக்கும் முதியோருக்கு தேவை பணமோ ஆடம்பரமோ இல்ல... அவங்க கூட அன்பா ஆதவரா இருந்து பேச ஒரு துணை போதும்... அது யாரா வேனா இருக்கலாம்... மனைவியா, மகனா, மகளா,பேரனா,பேத்தியா யாராவேனா இருக்கலாம்.... அப்படி அன்பு செலுத்த ஒரு ஆள் அவங்களுக்காக இருக்காங்கனு தெரிஞ்சாலே அவங்களுக்கு மலையளவு நிம்மதி வரும்.... அத தான் நான் அவங்களுக்கு கொடுத்துட்டு இருந்தேன்.... "
"வேலைக்கு போனதுக்கு பின்னாடி நேரம் கிடைக்கும் போது போவேன்... அப்படி ஒரு நாள் உன்னை அங்கே பார்த்தேன்.... "
"ஒரு தாத்தா கிட்ட கைகளை ஆட்டி ஆட்டி கதை சொல்லிட்டு இருந்த... அந்த அழகிய துறு துறு கண்களும் கதை சொன்னிச்சு உன்னோட சேர்ந்து... நான் அந்த கண்களை தான் இமைக்காம தூரத்துல இருந்து பாத்துட்டு இருந்தேன்.."
"அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன் நீயும் என்னை போல அங்க ஒரு மெம்பர்னு... அப்பவும் காதல் வரலே..
உன்னை போல சேவை மனப்பான்மை உள்ள ஒரு பொண்ணை கட்டிக்கிடனும்னு ஆசை வந்துச்சு...."
அதே அழகிய விழிகளால் இமைக்காது தன்னவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவள்...
இவனும் தன்னை போல தான் என்கின்ற இனிய பரவசத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்...
" எனக்கு பெண் பார்க்கலாமானு அம்மா கேட்டதும் என் கண் முன்னாடி மின்னலென வந்து போனது உன் முகம் தான்... ஆனால் வீட்டில பார்க்கும் பெண்ணை தான் மணம் செய்வேனு குறிக்கோளோட வாழ்ந்துட்டு இருக்கிறவன் நான்... என் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் எல்லாமே என் மனைவிக்கு மட்டும் தான்கிற வைராக்கியம் எனக்கு எப்பவுமே உண்டு... அதனால அம்மாகிட்டயே உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண்ணை பார்த்துட்டு சொல்லுங்க.. நான் முடிவு சொல்றேனு சொல்லிருந்தேன்... "
"அப்ப அம்மா ஜாதகம் குடும்பம் எல்லாமே ஒத்துபோகுதுப்பா...
நீ தான் பார்த்துட்டு சொல்லனும்னு ஒரு போட்டோ கொடுத்தாங்க..."
"எனக்காக பார்த்திருக்க முதல் பொண்ணு எனக்கு பிடித்த மாதிரி இருக்கனும் கடவுளேனு வேண்டிக்கிட்டே போட்டோ வெளிய எடுத்தேன்...."
"அதே அழகான துறு துறு கண்களால் என்னிடம் கவிதை பேசும் லுக் ல அந்த குட்டிப்பொண்ணு... அந்த செகண்ட் அவள் கண்கள் என் பார்வையில் ஊடுருவி என் நெஞ்சை நிறச்ச பீல்... என் மனசு புல்லா ஆக்குபை செஞ்சுட்டா.... அந்த கணம் அவ மேலே இருந்த என் பார்வை காதல் பார்வையா மாறிச்சு.. இந்த ஜென்மத்துல இவ தான் என் பொண்டாட்டினு தீர்மானிச்ச தருணம்.. எனக்குள் காதல் மலர்ந்த தருணம் அதுதான்...."
என்று கூறி அவளை பார்த்து கண் சிமிட்டினான்....
அடுத்த நொடி தன்னுள் உணர்வு வெள்ளம் பீறிட்டு எழும்ப அவனை தாவி அணைத்திருந்தாள் அவள்...
அந்த துறு துறு விழிகளில் ஆனந்த நீர் கண்ணை மறைக்க.. தன் இதழால் அதற்கு அணையிட்டு தன்னுள் விழுங்கினான் அவன்... அவள் விழிகளில் ஒற்றி எடுத்தான் தன் இதழை....
"சரி என் மதுகுட்டிக்கு எப்ப என் மேல லவ் வந்துச்சாம்...."
அவளை தன் கை அணைப்பிற்குள்ளேயே வைத்து கேட்டான் அவன்...
" இதை ஏன் முன்னாடியே என் கிட்ட கேட்கலை..."
அவன் முகம் நோக்கி தன் விழிபார்வையை வீசி உற் என முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் அவள்...
" ஹா ஹா ஹா.... என் செல்லகுட்டிக்கு எவ்ளோ கோபம் வருது.." அதையும் ரசித்தான் அவன்...
அவளின் கோப பார்வையை தன் விழுங்கும் பார்வையால் நாணப் பார்வையாய் மாற்றினான் அவன்...
" பேச்ச மாத்தாதீங்க மதிப்பா"
தன் நாண முகத்தை அவனுள்ளேயே மறைத்து வினவினாள் அவள்....
அவளை தன் மடியில் அமர வைத்து அவள் இடையை சுற்றி கைகோர்க்க..
அவள் தன் முகத்தை அவன் மார்பினில் சாய்திருக்க... தொடர்ந்தான் அவன்....
" நீ என்னை லவ் பண்றியாங்கறது தான் முக்கியம்டா மதுக்குட்டி... அது தான் உன் துறு துறு கண்ணுல டண் டண்ணா வழியுதே...
அப்பறம் எதுக்கு காதல் வந்த நேரம் காலம் லாம் கேட்டுக்கிட்டு...."
" பொதுவாகவே ஆண்கள் அப்படி தான்டா.... தன் மேல அவங்க விரும்புற பொண்ணுக்கு காதல் வந்தா போதும் அவங்களுக்கு...
பொண்ணுங்க மாதிரி அலசி ஆராய்சிட்டு இருக்க மாட்டாங்க..."
" சரி... உங்களுக்கு தான் தெரிஞ்சிக்கிற ஆர்வம் இல்லல அப்பறம் நான் ஏன் சொல்லனும்"
"அடியேய், இதெல்லாம் டூ மச்... சும்மா இருக்கவனே சீண்டி விட்டுட்டு இப்ப சொல்ல மாட்டேனா என்ன அர்த்தம்..
இப்ப சொல்லல உன்னை இங்கிருந்து நகர விடமாட்டேன்"
" அப்படி வாங்க வழிக்கு... இந்த ஆர்வம்.. இந்த ஆர்வம் தான் வேணும் எனக்கு" என கூறி குலுங்கி சிரித்தாள் அவள்....
" எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கல்யாண பெருமாள் கோயிலுக்கு என்னை கூட்டிட்டு போனாங்க அம்மா... அன்னிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்திட்டு இருந்துச்சு... ரொம்ப கூட்டம் கோவில்ல... அதனால கடைசியா சுவர் ஒட்டி நின்னுட்டு கல்யாணத்தை பார்த்துட்டு இருந்தேன்... அப்ப அம்மா கண்ணை மூடி வேண்டிக்கோமானு சொன்னாங்க..."
" நானும் கண்ணை மூடி என்னை அப்பா மாதிரியே அன்பாய் பாத்துக்கிற புருசன் வேணும்னு வேண்டிக்கிட்டு கண் முழிச்சா , வேஷ்டி சட்டைல கைல பாவாடை சட்டை போட்ட குட்டிப் பாப்பா தூக்கிக்கிட்டு
"செல்லக்குட்டி அழ கூடாது, மாமா உங்களுக்கு நிறைய சாக்கி வாங்கி தருவேனாம்னு"
சொல்லிக்கிட்டே என்னை கிராஸ் செஞ்சி போனீங்க..."
" அந்த செல்லக்குட்டிங்கிற வார்த்தை தான் என் கவனத்தை ஈர்த்தது.... ஏன்னா என் அப்பா என்னை அப்படி தான் கொஞ்சுவாங்க...."
"இப்ப கூட எப்பலாம் நீங்க என்னை செல்லக்குட்டினு கூப்பிடுறீங்களோ, அப்பலாம் அப்படியே ஒரு பாதுகாப்பான கைக்குள்ள இருக்க பீல் வரும்... உங்க தோள் சாஞ்சிகனும்னு தோணும்..."
பாசமாய் பார்வை வீசி இதம் தரும் காற்றாய் அவன் மனதை வசப்படுத்திக் கொண்டிருந்தாள் தன் வார்த்தைகளால்...
"நானும் உங்களை போல வீட்டில பார்க்கிற பையன் தான் கல்யாணம் செய்யனும்... கணவனுக்கு மட்டும் தான் என் மொத்த காதலும்னு இருந்த பொண்ணு தான்... அதனால மாப்பிள்ளை பார்க்கிறது உங்கள் விருப்பம்னு விட்டுட்டேன்...."
" நீங்க பொண்ணு பார்க்க வந்தனிக்கி தான் பார்த்தேன்.. அப்படியே ஷாக்காயிட்டேன்... ஹே இது அவர்லனு தோணுச்சு...."
அப்ப என் மனசுல உதிச்சது...
"கடவுள் அமைத்து வைத்த மேடை..
இணைக்கும் கல்யாண மாலை..
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.."
"ஆனாலும் ஃபிக்ஸ் செய்ற வரைக்கும் மனசை அலை பாய விடக் கூடாதுனு எதையும் யோசிக்கலை..."
"நம்ம கல்யாணம் நிச்சயமாகி நாம பேச ஆரம்பிச்ச நாள்ல இருந்து கொஞ்ச கொஞ்சமா என் மனசுல நுழஞ்சி சேர் போட்டு உட்கார்ந்துட்டீங்க..."
காதல் பார்வை அவன் மீது வீசி குழைவாய் கூறிக் கொண்டிருந்தாள்...
"அது முழு காதலா மாறின நேரம்... நான் உணர்ந்த தருணம்னா....
நம்ம மேரேஜ் நிச்சயமான அப்பறம் நம்ம டெய்லி கால் பேசிட்டுருந்த நேரம்... உங்க ஆபிஸ் டூர்னு இரண்டு நாள் கேரளா போனீங்களே... சிக்னல் இருக்காது போன் பண்ண முடியாதுனு வேற சொல்லிட்டீங்க..."
" என்னமோ ஒரு வெறுமை பீல்ங்க மனசுல அப்ப... உங்க குரல் கேக்காம பேசாம இருக்கவே முடியல... மனசுல அப்படி ஒரு வலி.... ஆனா அந்த சமயத்துலயும் நான் உங்கள தேடுவேனு சொல்லி உங்க ரூம்ல இருந்து ரெண்டு கிமீ நடந்து வந்து எனக்கு கால் பண்ணி பேசினீங்களே..."
" அப்படியே மனசுகுள்ள தேன்மழை சாரல் அப்ப... கண்ணுல ஆனந்த கண்ணீர்.. அப்ப தோணுச்சு இனி நீங்க இல்லாத ஒரு வாழ்க்கை என்னால நினைச்சிக் கூட பாக்க முடியாதுனு..."
"எனக்கு நீங்க எல்லாமே மதிப்பா..உங்க அன்பு , பாசம் ,அரவணைப்பு, பாதுகாப்பு எல்லாத்துக்கும் நான் அடிமை மதிப்பா"
ஐ லவ் யூ சோ மச் மதிப்பா!!!
அவள் பேச்சில் கட்டுண்டவன் போல் அமர்ந்திருந்தவன், தன் இரு கைகளையும் விரித்து அவளை நோக்கி தன் பார்வை செலுத்தி தன் தலை மேலும் கீழுமாய் அசைக்க...
தாயை அடையும் கன்றுக்குட்டி போல் ,அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள் அவள்....
அவள் காதில் மென்மையாய் உரைத்தான் , " என் மனம் கவர்ந்த ஸ்வீட் செல்லக்குட்டிடா நீ " என்று.....
தன் அணைப்பை இறுக்கி அவன் வார்த்தைக்கு செய்கையால் பதிலுரைத்தாள் இவள்....
இதே அன்போடும் சந்தோசத்தோடும் காலம் முழுக்க இன்பமாய் வாழட்டுமென வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்....
அன்று நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன் நான்...
அன்று சென்னை தினமென்று சிறப்புப் பதிப்பாக சென்னைப் பற்றிய தகவல்களை பதிப்பித்திருந்தனர்...
என் எண்ணங்கள் சென்னைக்கும் எனக்குமான தொடர்பை ஏற்படுத்திய நாளுக்குள் நுழைந்து பல நினைவுகளை கிளர்த்தெழச் செய்ய, முதிர்ந்த வயதில் என் கடைசி காலத்தை பேரன் பேத்தியுடன் மகிழ்வாய் கழித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், என் நினைவுகளை மனதின் எண்ணங்களை எழுத்து வடிவத்தில் சேமிக்க வேண்டுமென்ற எண்ணத்தின் உந்துதலால் இந்நினைவுகளையும் எழுத்துருவமாக்க விழைந்தது மனது.
அது முன் எண்பதுகளின் காலம், என் இளமை காலம்...
இளங்கலை பட்டப்படிப்புப் படிக்க, எனக்கு கிடைத்தக் கல்வி உதவித் தொகையை வைத்துக் கொண்டு மெட்ராஸூக்கு வந்தேன்.
ஆம் அப்போது சென்னையின் பெயர் மெட்ராஸ் தான்.
பட்டணத்துக்கு போகிறான் என்றுதான் ஊரில் பேசிக்கொள்வார்கள்.
அப்பொழுது இங்கு எனக்கென சொந்தம் எவருமில்லாதக் காரணத்தால் கல்லூரி சேர்ந்த அன்றே என் நண்பனாய் மாறிப் போன முத்துவுடன் சேர்ந்து அறையெடுத்து தங்கிக்கொண்டேன்.
நாட்கள் வேகமாய் செல்ல நான் முத்து மற்றும் செல்வம் நண்பர் குழுவாய் இணைந்து மூவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம்.
செல்வத்தின் குடும்பம் மிகப் பெரிய செல்வந்தர்கள்... அவன் குடும்பம் சென்னையில் வணிகம் செய்து வாழ்ந்து வந்தது... அவனும் என் ஊரு தானென பின் பழகிய நாட்களில் தெரிய வந்தது...
செல்வம் என்னையும் முத்துவையும் அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வான்.. நாங்கள் வீட்டை விட்டு அறையில் தங்கியிருப்பதால் செல்வத்தின் வீட்டிற்கு செல்லும் வேளைகளில் எங்களை நன்றாக உணவளித்து கவனித்துக் கொள்வார் அவனின் அன்னை...
அங்கு அவனுடன் சேர்ந்து படிக்கவென நாங்களும் அவனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவோம்... இவ்வாறாக இரண்டு வருடப் படிப்பை முடித்து மூன்றாமாண்டு காலடி வைத்த வேளையில் எனக்கு வந்தது அந்தப் பொல்லாக் காதல்....
இல்லையில்லை மாற்றிக் கூற வேண்டும் என்னவளுக்கு வந்தது அந்தக் காதல். நான் இல்லையென்றால் சாகவும் துணிந்த அவளின் காதல்....
அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், முத்து அவனின் தந்தை உடம்புக்கு சரியில்லையென ஊருக்கு சென்றிருந்தான்.. அறையில் தனித்திருந்து சலிப்பாகியதால் செல்வத்தை அழைத்துக் கொண்டு வெளியே சென்று வரலாமென எண்ணிக்கொண்டு அவனின் இல்லத்திற்கு சென்றேன் நான்....
அவனின் வீட்டிற்குள் நுழைந்த நொடி, வீட்டிற்குள் ஒரு பெண் ஓடும் கொலுசொலி பின் வாசலில் கேட்டது..
அவனின் அன்னை தவிர பெண் பிள்ளைகள் எவரையும் அவ்வீட்டில் கண்டிராத நிலையில், யாரது புதிதாகவென காணும் ஆவலில் பின் வாசல் சென்றேன் நான்...
தாவணி உடுத்தி காலில் கொலுசுடன் காதில் ஜிமிக்கி கம்மலுடன் கண்ணாடி வளையலுடன் நீளமான கூந்தலுடன் மானைப் போல் துள்ளி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாளவள்....
என்னை பார்த்ததும் பயந்து கதவினருகில் மறைந்து நின்று தன் முகத்தை மட்டும் வெளியே நீட்டி என் முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தாளவள்...
நானும் அதை தான் செய்துக் கொண்டிருந்தேன்...
மாநிறத்திற்கும் குறைவான நிறம், களையான முகம், பெரிய விழிகள், செவ்விதழ்கள்.. இருவரும் வெகு நேரமாய் கண் சிமிட்டாது மற்றவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்... பின்னாளில் இவள் தான் என் வாழ்வை மாற்றப்போகும் என்னவள் என்பதை உணராது அழகாயிருக்கிறாளென ரசித்துக் கொண்டிருந்தேன்.
எங்களின் இந்நிலையை கலைத்தது என் நண்பனே... அவளின் பெயர் பானு எனவும், தன் மாமன் மகள் எனவும் விடுமுறையைக் கழிப்பதற்காக இங்கு வந்திருப்பதாகவும் உரைத்தானவன்.
அடுத்து ஒரு வாரம் என் நினைவில் அவள் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்... எங்கு கொலுசொலி வளையொலி கேட்டாலும், நீண்ட கருங்கூந்தல் கண்டாலும் கண் முன் அவளின் முகமே வந்து என்னைக் கொல்ல, அவள் போகும் வரை அவனின் வீட்டிற்கு செல்வதில்லையென முடிவெடுத்திருந்தேன் நான்...
ஆனால் என் காதலை நானே உணரும் காலமும் வந்தது என் நண்பனின் மூலமாகவே...
அன்றைய வாரக்கடைசியில் எங்களின் அறைக்கு வந்தான் செல்வம்... எப்பொழுதும் போல் எங்கள் சம்பாஷனை நடைபெற்றுக் கொண்டிருந்தச் சமயம் தீடிரென்று,"நீ நிறமாய் அழகாய் இருக்கிறாயே, நீ கட்டிக்கொள்ளும் பெண் எவ்வாறு இருக்க வேண்டுமென ஆசை உனக்கு" என்னிடம் கேட்டானவன்.. எனக்கு அச்சமயம் பானு மீதுள்ளது ஈர்ப்பா காதலாயென நானே அறியாத அந்நிலையில் அவனுக்கு எவ்வாறு தெரிந்ததென்று என் மனம் அதிர்ந்தது அப்போது அவன் கேட்டக் கேள்வியில்..
நாம் ஓர் குற்றயுணர்வில் இருக்கும் போது சாதாரணமாய் கேட்கப்படும் கேள்விக்கும் நம் மனசாட்சி குற்றயுணர்வுடன் ஒப்பிட்டு நம் தவறை நாமே வாக்குமூலமாய் உரைக்க வைத்து விடும்...
அவ்வாறு தான் அன்று என் மனம் யோசித்தது அவனின் கேள்வியில்....
எனினும் முகத்தில் எப்பாவனையும் காட்டாது என்னை அன்பாய் நேசிக்கும் பெண் போதும், அழகு முக்கியமில்லையென நானுரைத்தேன்... அவன் நம்ப முடியாத பாவனைக் காட்டி நிரூபிக்க முடியுமாவென என்னிடம் கேட்டான்..
நான் மணம் செய்யும் போது என் பொணடாட்டியை பார்த்து தெரிந்துக் கொள்ளென நானுரைத்ததும், இப்பவே நான் ஒரு பெண்ணை காண்பிப்பேன் அவளைப் போல் இருந்தாலும் மணம் செய்துக்கொள்வாயாயென அவன் கேட்க, என் மனம் அவன் பானு பற்றித் தான் கூறுகிறானோயென துள்ளிக்குதிக்க தயார் நிலையிலிருந்தாலும் உணர்ச்சியற்ற பாவனையில் யாரென்று கேட்டேன் நான்...
என் மாமன் மகள் பானு தானென அவனுரைத்த தருணம் மனம் இறகில்லாமல் பறந்தாலும், எல்லாம் அறிந்துக் கொண்டு என்னை ஆராய இவ்வாறு கேட்கிறானோயென என் மூளை ஆராய்ச்சியில் இறங்கியது அப்போது...
அவள் உன் முறைப்பெண்,அவளைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாயென மறுகேள்வி கேட்டேன் நான்..
பானு போன்றப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்வாயா மாட்டாயாயென மீண்டும் அவன் கேள்விக் கேட்க,
"ஏன் பானு மாதிரி என ஏதோ குறையுள்ள பெண் போலவே அவளைப் பேசிக் கொண்டிருக்கிறாய்.... கருப்பாக இருப்பது தான் இந்த ஊரில் குறையென கூறுவீர்களா?? நான் நிறமாக இருந்தால் கருப்பாகயுள்ள பெண்ணை திருமண செய்துக் கொள்ளக் கூடாதா??"
கறுப்பு நிற பெண்களுக்கு ஆதரவாய் பேசுவதுப் போல் என் பானுவிற்காய் பேசிக் கொண்டிருந்தேன் நான்... ஆம் அவன் கேட்ட கேள்வியில் என் பானுவாய் மாறியிருந்தாள் என் மனதில்... என் பானுவை எவ்வாறவன் குறைக் கூறலாமென கொந்தளித்தது மனது அப்போது.. அதன் பொருட்டே அவ்வாறு கருப்பு நிறத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தேன் நான்...
கண்டுக்கொண்டான் என் நண்பனும்..
ஓர் கடிதமளித்தான் என்னிடம்.. நான் புரியாது அவனை பார்த்தேன்... பானு உன்னிடம் கொடுக்கச் சொன்ன கடிதமென அவனுரைக்க,என் மனம் இரயில் வண்டியைப் போல் தடதடக்கச் செய்தது... ஒரு வாரமாக அவள் சரியாக உண்ணவில்லையாம் உறங்கவில்லையாம் நிறைய அழுதுமிருக்கிறாள்... காரணம் நான்... என்னை பார்த்ததும் பிடித்து விட்டதாம் அவளுக்கு... என்னை போலவே என் நினைவாய் சுற்றியிருக்கிறாள் அந்த வாரம் முழுதும்....நிறத்தை வைத்து தகுதி நிர்ணயம் செய்யும் அக்காலகட்டத்தில் நிறமாயிருக்கும் என்னை மணம் செய்துக் கொள்ள, தான் தகுதியற்றவளென எண்ணி அழுதுமிருக்கிறாள்...
அவளின் போக்கு சரியில்லையென என் நண்பன் தான் அவளிடம் பேச்சுக்கொடுத்து இவ்விஷயத்தை வாங்கியிருக்கிறான்..
அவன் தான் அவளிடம் எனக்காக கடிதமும் எழுதச் சொல்லி வாங்கி வந்து என்னிடம் கொடுத்து விட்டு பதிலிற்காய் என் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தானவன், அதற்கு மேல் நான் அவளைத் தவிர்த்தாள் அவளின் தாழ்வு மனப்பான்மை அதிகரிக்குமென எண்ணி அவளைக் காண வேண்டுமெனக் கூறி அடுத்த நாளே கடற்கரையில் சந்தித்து என் காதலை நான் கூற, அழுதேவிட்டாள் என் கண்மணி..
அவளின் தாழ்வு மனப்பான்மையால் நான் தியாகியாய் தெரிவதாய் கூறினாள்... என் பெயர் தியாகியில்லை, கலையரசன்.. இனி இந்த பானுவின் கலையரசன் என்றுக் கூறி நான் கண் சிமிட்ட, அழகாய் வெட்கப்பட்டாளவள்....
இருவரும் சக மனிதர்கள் குறைகளற்ற மனிதர்கள் இதில் எவரும் தியாகியில்லையென உரைத்து அவளின் கைகளை பிடித்து கடற்கரை மணலில் கால் புதைய நடந்து எங்களின் காதல் கதைகளை பேசித் திரிந்தோம் நாங்கள்..
அந்த ஒரு மாதமும் காதல் பறவைகளானோம்...
நாங்கள் பயணித்த பேருந்து, பார்த்த சினிமா படம், கேட்ட இளையராஜா பாடல்கள் என அனைத்தையும் எங்கள் காதலின் பயணத்தில் நினைவுகளாய் இணைத்துக் கொண்டிருந்தோம்.
அவளின் வீடும் சென்னையில் தான்,கல்லூரி விடுமுறை நாளென்பதால் செல்வம் வீட்டில் தங்க வந்திருந்தாள்...
விடுமுறை முடிந்து அவளின் வீட்டிற்கு அவள் செல்ல, வாரம் ஒரு முறையென அவளின் கல்லூரிக்கு சென்று சந்தித்து எங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தேன் நான்...
இவ்வாறாக ஒரு வருடம் சென்றிருந்தப் போது, என் பட்டப்படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த நிலையில், எங்களின் காதல் அவளின் வீட்டினருக்கு தெரிய வந்தது..
அவளை வீட்டுச்சிறையில் வைத்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர்...
என் நண்பனின் மூலம் இவ்விஷயத்தை அறிந்த நான்,அவளின் தந்தையிடம் நேரடியாய் பெண் கேட்கவென அவளின் வீட்டிற்குச் சென்றேன்....
என்னைக் கண்டதும் சிறு மலர்ச்சி அவளின் தந்தை முகத்தில்... தன் மகள் காதலிக்கிறாளென அறிந்ததும் யாரைக் காதலிக்கிறாளென கூட அறிய விரும்பாதவராக என்னைப் பற்றிய விவரம் கேளாமல் வேறு மாப்பிள்ளை பார்க்கவாரம்பித்திருக்கிறார் அவர்... என்னைக் கண்டதும் என் நிறமும் அழகும் அவருக்குள் என் மீதான நன்மதிப்பை அளிக்க,ஆம் நிறமும் அழகும் வைத்து மட்டுமே ஒருவனின் நன்மதிப்பை கணித்தனர் அப்போது....
இவ்வெண்ணத்தால் தன் பெண்ணை எனக்கு மணம் செய்து வைக்க ஒத்துக்கொண்டாரவர் ஆனால் ஓர் நிபந்தனையுடன்....
அவரின் வீட்டோடு மாப்பிள்ளையாக வேண்டுமென உரைத்தாரவர்... எனக்கு வேலையில்லை என்றும்,தன் மகள் செல்வப்செழிப்பில் பிறந்தவளென்றும் வீட்டோடு மாப்பிள்ளையானால் அவர்களின் வணிகத்தை கவனித்துக் கொண்டு நிம்மதியாய் வாழலாமென உரைத்தாரவர்.... ஏதும் கூறாது உங்கள் பெண்ணிடம் பேச அனுமதி வேண்டுமென உரைத்தேன் நான்....
அவரின் முன்னாடியே பேசிக்கொள்ளலாமெனக் கூறி அந்த அறைக்கே அவளை அழைத்தாரவர்... அவ்வறையின் ஓரத்தில் தள்ளி நின்றுக்கொண்டோம் நாங்கள் பேசுவதற்காக...
என்னைப் பார்த்ததும் அவளின் கண்ணில் நீர் ஆறாய் பெருகியது... ஓர் அலைப்புறுதல் அவள் கண்ணில் கண்டேன் நான்... என்னை விட்டு விட மாட்டாயே என்கின்ற கேள்வி... இப்பொழுதே என்னை உன்னிடம் அழைத்து சென்று விட மாட்டாயா என்கின்ற ஏக்கம் என அவள் மனதின் அனைத்து எண்ணங்களையும் அவள் விழிகளில் தேக்கி வைத்து என்னை இமை மூடாது கண்களுக்குள் பொதிந்து வைத்துக் கொள்பவள் போல், அன்று தான் என்னை அவள் இறுதியாய் பார்க்கப்போவதுப் போல் பார்த்துக் கொண்டு நின்றாள் என் பானு.... அவளின் கண்ணீர் என் மனதை ரணமாய் வதைத்தது...
ஏதும் செய்யயிலாத கையறு நிலையில் இருந்தேன் நான்... அவளிடம் நான் கேட்ட முதல் கேள்வி நான் வேண்டுமா??? உன் தந்தை வேண்டுமா?? என்பது தான்..
உங்களுக்காக தந்தையை பகைத்துக்கொள்ள முடியாது... தந்தைக்காக உங்களை வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க செய்யவும் என்னாலியலாது என்றுக் கூறி கதறினாவள்.... என் தந்தையை காயம் செய்யாது நீங்களெடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேனென உறுதியளித்தாளவள்...
"ஒன்றை மட்டும் மறவாதே, என் தாய் தந்தைக்குப் பின் இந்த கலையரசன் என்றும் பானுவிற்கு மட்டுமே சொந்தம்" என்று உறுதியளித்தேன் நான்....
அவளை காணாது இருக்க முடியாது என்பதனால் தான், பேசும் சாக்கில் அவளைக் காண அவளின் தந்தையிடம் அனுமதி வாங்கினேன்...
ஊரில் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் என் தாய் தந்தைக்கு ஒரே மகன் நான் என்றும் வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க அவர்களை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க எனக்கு ஆறு மாதம் கால அவகாசம் தேவையெனவும் அவளின் தந்தையிடம் இறஞ்சி நின்றேன் நான்....
மிகுந்த வாக்குவாதங்களுக்குப் பிறகு ஒத்துக்கொண்டாரவர்... ஆறு மாதத்திற்குள் நான் வரவில்லையென்றால் தன் பெண்ணிற்கு வேறு மாப்பிள்ளை பாத்துவிடுவேனென்றும், அந்த ஆறு மாத காலம் நாங்கள் சந்தித்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறி ஒரு வழியாய் சம்மதித்தாரவர்....
அவளின் மதிமுகத்தை என் நீர் நிறைந்த விழிகளுக்குள் சேமித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன் நான்....
ஏதேனும் செய்து ஆறு மாதத்திற்காவது இவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை ஒத்தி வைக்க வேண்டுமென்று தான் அவ்வாறு அனைத்துக்கும் தலை ஆட்டிவிட்டு வந்தேன் நான்....
நான் என்ன செய்ய வேண்டுமென திட்டமிடத் துவங்கினேன்... ஆறு மாதக்காலத்திற்குள் சம்பாதித்து மெட்ராஸிலேயே ஓர் வீடு வாங்க வேண்டும், நிலையான வருமானத்திற்கு வழி வகுக்க வேண்டுமென முடிவு செய்தேன்...
அப்போது தான் என் வாழ்வில் சந்தித்தேன் அவரை... என் வாழ்க்கை பயணத்தை மாற்றியமைத்தவர்...
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் முன்னேற உந்துசக்தியாய் ஒருவர் இருப்பர்... பானு அப்படி என் உந்து சக்தியென்றால் இவர் என் இலக்கை அடைய உதவிய ஏணியானவர்...
அவர் பெயர் பாலன்... அவரை பெரியவர் என்றே அழைப்பர் அனைவரும்....அமைதியின் திருவுருவமவர்... தன் வாழ்நாளில் எண்ணிலடங்கா மக்களுக்கு உதவியவர்.... எவரேனும் பிழைக்க வேண்டுமென்று சென்னை வந்து வேலையில்லாது பட்டினியாய் கிடப்பதாய் அறிந்தால், உடனே அவருக்கு தன் கம்பெனியில் வேலை கொடுத்து மூன்று நேரம் உணவளித்து, பின் அவர்களுக்கென வியாபாரம் அமைத்து தனியாய் தொழில் துவங்க உதவி செய்து என நிறைய வியாபாரிகளை உருவாக்கியவர்... பல ஊர்காரர்கள் சென்னைக்கு அன்று ஏதோ ஓர் காரணத்திற்காய் ஊரை விட்டு ஓடி வந்தப்போது இவர்களை போன்ற மேன்மையாளர்களால் தான் வந்தாரை வாழ வைக்கும் சென்னையாய் இது பரிணாமம் பெற்றது... அப்படி அவரால் பயன் பெற்றவனில் நானும் ஒருவன்...
பானு வீட்டிலிருந்து வந்தப்பிறகு நடந்ததை என் நண்பர்களிடம் கூறி உடனே வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும், நான் ஓர் நிலைமைக்கு வந்ததும் என்னை அவர் வீட்டோடு மாப்பிள்ளையாயிருக்க கேட்க மாட்டாரல்லவா என்ற என் எண்ணத்தை நண்பர்களிடம் கூறினேன்... அப்போது செல்வம் தான் என்னை அந்த பெரியவரிடம் அறிமுகம் செய்து வைத்து, அவர் கம்பெனியின் கணக்காளராய் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தான்.
மூன்று மாத காலம் முடிவுற்ற நிலையில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி.... என் பானு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாளென்ற செய்தி....
என் காதில் அச்செய்தி விழுந்த மறுநிமிடம் கம்பெனியிலிருந்து பெரியவரிடம் கூடக் கூறாமல் நண்பனுடன் அவனது மிதிவண்டியில் என் மனதின் வலியை காலின் மிதியில் கூட்டி மருத்துவமனை சென்றேன்... அவளின் குடும்பமனைத்தும் அங்கே இருக்க, அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாது நேரே அவளின் அறைக்கு செல்லயெத்தனிக்க என்னை மறித்து நின்றார் அவளின் தந்தை...
என் மேல் நம்பிக்கை இல்லாது விட்டுப்பிடிப்பதாய் கூறி மூன்று மாதம் அவளிடம் திருமணம் பற்றியேதும் பேசாமல் இருந்து விட்டு, திடீரென மாப்பிள்ளை வீட்டினர் முன் அவளை நிற்க வைத்து விட்டனர் அவளின் பெற்றோர்... என் மேல் கொண்ட காதலுடன் வேறொருவரை மணக்கயிலாதென மருந்து குடித்து விட்டாள் சாவதற்காக....
அவளின் தந்தையும் அண்ணனும் என்னை அவளை காணவிடாது அடித்துத் துரத்தினர் மருத்துவமனையை விட்டு.. எனக்காய் பரிந்து பேசிய செல்வத்தையும் அடித்துவிட்டனர் அவர்கள்...
கன்னத்தில் கைத்தடம் இருக்க, வாய் கிழிந்து ரத்தமாய் இருந்தப்போதும் அவளை காணாது அவ்விடத்தை விட்டு நகரமாட்டேனென மருத்துவமனை வாசலிலேயே உட்கார்ந்து விட்டேன்... உடல்வலியை விட என்னவளை எண்ணி மனம் ரணமாய் வலித்தது... அவளில்லாது நான் எவ்வாறு வாழ்வேனென நினைத்தாளவளென குமுறியது மனம்...பானு பானு என்றே பிதற்றிக்கொண்டது மனது.. அவள் பிழைக்க வேண்டுமென பிரார்தித்துக் கொண்டிருந்தது... அவள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாய் உரைத்தான் என் நண்பன்...
நான் பதறியோடி வந்ததை கண்ட பெரியவர் அதன் காரணம் அறிந்துக் கொண்டு மருத்துவமனை வந்திருந்தார்..
என் ரத்தம் கொண்ட முகத்தைக் கண்டு பதறியவர், என்னை உள்ளே அழைத்துச் சென்று அவளின் தந்தை முன் நிறுத்தினார்...
"இந்த தம்பி உன் மகளை பார்த்துட்டு வரட்டும் உள்ளே அனுப்பு" என்று அவருரைத்த நொடி, ஆகட்டுங்கய்யா என்றவர் என்னை உள்ளே சென்று காணுமாறு கண்ணசைத்தார்...
பெரியவரின் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பாயென்ற ஆச்சரியத்துடனே உள்ளே சென்றேன் என் பானுவை பார்க்க....
துவண்ட கொடியாய் கண் மூடிப் படுத்திருந்தாளவள்... அவள் கையை நான் தீண்டியதும் முழித்து விட்டாள்.. பதட்டத்துடன் எழுந்தவள் என் காயம் பட்ட முகத்தை அவளின் கைகளால் வருடி கண்ணீர் உகுத்தாள்..
"என்னை இப்பொழுதே உங்களுடன் அழைத்து செல்லுங்கள்... உங்களை விட்டு என்னால் வாழயிலாது... வேறொருவரை கணவராய் என்னால் நினைத்துக் கூட பார்க்கயிலாதென" என் கைகளுக்குள் முகத்தை புதைத்து வெடித்துச் சிதறியழுதாளவள்....
துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீருடன், "பானு இல்லாமல் இந்த கலையரசன் இருப்பானென்று எவ்வாறு நினைத்தாயடி??? நீயில்லாது இந்த உயிர் என்னுடலில் என்றும் இருக்காது...நீ போன மறுநொடி நானும் உன்னுடன் மறித்திருப்பேன்டி... வாழ்வில் மனைவி என்றால் அது நீ மட்டும் தான் பானு.. உன்னை விட்டு எங்கும் போகமாட்டேனென சத்தியம் செய்து" அவளை தேற்றி உறங்கச் செய்து வெளியே வந்தேன் நான்....
அதற்குள்ளாகவே எனக்காய் அவளின் தந்தையிடம் பேசி எங்கள் திருமணத்திற்கு ஒட்டு மொத்த குடும்பத்திடமும் ஒப்புதல் வாங்கியிருந்தார் பெரியவர்...
பெரியவர் தான் அக்குடும்பத்தின் ஆசானாம்... அக்குடும்பம் செல்வந்தராய் இருப்பதற்கு காரணமே பெரியவர் தானாம்...பானுவின் தந்தைக்கும் அக்குடும்பத்திற்கும் நிறைய உதவி செய்திருக்கிறார் அவர்கள் சென்னை வந்த புதிதில்.. ஆகையால் அவரின் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது பானுவின் குடும்பத்தில் என்று கூறினான் செல்வம்..
அந்த மூன்று மாதத்தில் பெரியவருக்கு என் மேல் ஏற்பட்ட நல்லெண்ணமும் அபிப்ராயமுமே எனக்காக அவர்களிடம் பெண் கேட்க வைத்ததென பின்னாளில் உரைத்தார் பெரியவர் என்னிடம்...
அவரே என் பெற்றோரிமும் பேசி ஒரு மாதத்திலேயே எங்கள் திருமணத்தை சீறும் சிறப்புமாய் நிகழச்செய்தார்....
மரணத்தில் தான் எங்கள் காதல் இணையுமோவென கலக்கத்தில் இருந்த எங்களுக்கு கடவுளைப் போல் நொடியில் அற்புதம் நிகழ்த்தி என் வாழ்வின் பயணத்தை இனிமையாக்கியவரவர்..
எங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றியவரவர்.. இன்றும் அப்பெரியவரின் குடும்பம் பல குடும்பத்திற்கு ஒளி விளக்காய் வெளிச்சத்தை அளித்துக் கொண்டுதானிருக்கிறது..
நாளை எனக்கும் பானுவிற்கும் அறுபதாம் திருமண நாள்....
அதற்கான ஏற்பாடுகளில் மும்முறமாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் என் மகனும் மகளும்... நிறைய மேடு பள்ளங்கள் இன்ப துன்பங்கள் நிறைந்த என் வாழ்வில் என்றும் எனக்கு தூணாயிருந்து முன்னேற உதவிப் புரிந்தவள் என் பானு... இன்றும் அவளிடம் அம்மருத்துவமனையில் கொடுத்த வாக்கு நினைவிலிருக்கிறது, நிச்சயமாய் அவளில்லாது இந்த உயிர் என்னுடலில் இருக்காது...என்றும் பானுவின் கலையரசனாய் இருக்கவே ஆசைப்படுகிறேன்...
நான் பிறந்த கிராமம் என் சொந்த தாய் வீடென்றால், சென்னை எனக்கு புகுந்த வீடு… எல்லோருக்கும் புகுந்த வீடு நல்லவிதமாய் அமைந்து விடாது.. ஆனால் அப்படி அமையப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளே...அவ்வகையில் உயிராய் காதலையும் உணர்வாய் சொந்தங்களையும், நிம்மதியான உத்யோகமும் அதனால் பெரும் செல்வநிலையுமளித்த சென்னை, எனக்கு புகுந்த வீடாய் நிறைவான வாழ்வளித்த சொர்க்கம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.