அத்தியாயம் மூன்று:
"எதுக்காக அம்மாச்சி என்னை ஏமாத்துனீங்க..? இதுவரைக்கும் உங்க மனசு நோகும்படி இந்த வீட்ல நான் ஏதாவது செஞ்சு இருக்கேனா..! ஆனா இந்த வீட்ல இருக்க எல்லாரும் சேர்ந்து என்னை உயிரோடு கொன்னு புதைக்க முடிவு எடுத்துட்டீங்களா..?"என்று குரலை சிறிதும் உயர்த்தாமல் அதே நேரத்தில் வார்த்தைகளில் கடுமையை கொடுக்காமல் ஆனால் வார்த்தைகளால் அனைவரையும் சவுக்கால் அடித்தது போல் துடிக்க வைத்தாள் நிஷாந்தி.
"ஏம்மா இப்படி எல்லாம் பேசுற..?"என்று கண்ணம்மா பேத்தி பக்கத்தில் வர, ஒரு அடி பின்னால் நகர்ந்து சென்றாள் நிஷாந்தி.
அவளது விலகலில் கண்ணம்மா துடி துடித்து போய்விட்டார்.
"அம்மாடி நிஷாந்தி.."என்று அடுத்தபடியாக வித்யா அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க, ஒரு கையை உயர்த்தி அவரை பேச வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியவள் கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிய ஆரம்பித்தது.
"இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமான விஷயம் எது தெரியுமா..? நம்ம மனசார ஒருத்தரை நம்பும்போது அவங்க ஏமாத்துறது தான் இந்த உலகத்திலேயே ரொம்ப கொடுமையான செயல்.. நான் ஏற்கனவே என்னோட மாமாவை இழந்துட்டேன் இப்ப என்னோட குடும்பத்தையும் இழந்துட்டேன்.."என்றவள் தீர்க்கமாக அனைவரையும் பார்க்க, அவள் சொன்னதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
"நாளைக்கு காலையில கார்த்திக் அத்தான் வந்துடுவார் அவரே என்னை இங்கிருந்து கண்டிப்பா கூட்டிட்டு போயிடுவார்.. கார்த்திக் அத்தான் கெட்டவரா இருந்தாலும் யாரையும் இப்படி நம்ப வச்சு முதுகுல குத்துற ஆள் கிடையாது.."என்று சொன்னவள் அங்கிருந்த யாரையும் பார்க்க பிடிக்காமல் அவளறைக்கு சென்று விட்டாள்.
தனதறைக்கு வந்தவள் கதவை சாத்திவிட்டு அதன் மீதே சாய்ந்து நிற்க, மனதில் தீட்சண்யன் நினைவுகள் அதிகமாக வந்து கொண்டிருந்தது.
'அதோ அந்தக் கட்டிலில் தான் படுத்துக்கொண்டு எப்பொழுதும் அவளை வம்பிழுத்துக் கொண்டிருப்பான்..அதோ அங்கிருக்கே பால்கனி அதன் அருகில் நின்று கொண்டு தான் போன் பேசுவான் அப்படி போன் பேசும் தருணங்களில் எல்லாம் இவள் மேலே வந்து விட்டால் போதும் போனை வைத்துவிட்டு மனைவியிடம் இதழ்கள் கொண்டு பேச ஆரம்பித்து விடுவான்..'என அங்கிருந்த ஒவ்வொரு இடங்களை பார்க்கும் பொழுதும் அவளுக்கு தீட்சண்யன் நினைவுகள் மட்டும் தான்.
போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க அவள் அழுகை இன்னும் அதிகமானது.
"உங்களால எப்படி மாமா இப்படி என்னை தனியா தவிக்க விட்டு போக முடிஞ்சது..? இங்கே இருக்க எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க.. அநியாயமா வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. வித்தியாத்தையும் என்னோட அம்மாவும் எப்படி எனக்கு ஏமாற்றி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்கன்னு அவங்க பேசும்போது எனக்கு கேட்டுருச்சு.. எப்படி மாமா அவங்களால இப்படி எனக்கு ஒரு பெரிய துரோகத்தை பண்ண முடிஞ்சது.. நான் மனசார நம்புன என்னோட அம்மா கூட எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க.. உங்களோட இடத்துல இனிமேல் கார்த்திக் அத்தான்.."என்று பேசிக் கொண்டிருந்தவள் வார்த்தைகள் தடைபட்டு நின்றது.
'அவர் நாளைக்கு வந்துடுவார்..'என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டவள் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தொய்ந்து அமர்ந்துவிட்டாள்.
"எல்லாம் ரெடியா இருக்கா கிளம்பலாமா?"
"எனக்கு இங்கிருந்து எடுக்குறதுக்கு எதுவும் இல்லை.."என சன்னமான குரலில் கூறிய நிஷாந்தி கைகளில்
தீட்சண்யன் புகைப்படம் மட்டுமே இருந்தது.
கார்த்திகேயன் அதை கண்டும் காணாதது போல் முன்னே நடந்து செல்ல,நிஷாந்தி அவள் குடும்பத்தில் இருக்கும் யாரையும் பார்க்க பிடிக்காமல் அவன் பின்னே குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்ல, அதைப் பார்த்த அனைவருக்கும் குற்ற உணர்வு மனதை குதற ஆரம்பித்தது.
அவளுக்கு உண்மை தெரிய வரும் பொழுது நிச்சயம் தங்களை மன்னிக்க மாட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் இப்படி தங்களை யாரோ ஒரு மூன்றாவது மனிதர் போல் ஒரு நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு சென்று விடுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் அனைத்து விஷயங்களுக்கும் கோபப்படும் கார்த்திகேயனோடு எப்படி தனியாக இருக்க போகிறாள் அதுவும் வயிற்றில் குழந்தையுடன் என்பதை நினைத்து நினைத்து அனைவரும் மனதளவில் வெந்து போனார்கள்.
யாரையும் திரும்பி பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே வந்த நிஷாந்தி கார்த்திகேயனின் காரில் ஏறுவதற்கு முன்பாக தான் வாழ்ந்த வீட்டை ஒரு நொடி திரும்பி பார்க்க, அங்கு அவள் கண்களுக்குத் தெரிந்தது எல்லாம்
தீட்சண்யன் ஒருவனின் பிம்பம் மட்டுமே.
அவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடிகளும் அவள் கண் முன் வந்து போக, காரில் ஏறாமல் அப்படியே நின்று விட்டாள்.
காரில் ஏறி அமர்ந்த கார்த்திகேயனும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, நொடிகள் கடந்து நிமிடங்கள் தாண்ட ஆரம்பிக்க அப்பொழுதும் அவள் அப்படியே நிற்பதைக் கண்டு அவன் பிறவி குணமான கோபம் தலை தூக்க ஆரம்பித்தது.
சடாரென காரில் இருந்து இறங்கியவன் கார்க கதவை அடித்து சாத்த, அவன் அடித்து சாத்திய வேகத்தில் கார் ஒரு முறை குலுங்கி நின்றது.
அதில் நினைவுக்குத் திரும்பிய நிஷாந்தி கண்களில் பயம் கலந்த கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவளை திட்டுவதற்காக வாயை திறந்தவன் அவள் பார்வையில் எதை உணர்ந்தானோ? சொல்ல வந்த வார்த்தைகளை தனக்குள்ளே புதைத்து கொண்டு மீண்டும் காரில் உள்ளே அமர, அவனைப் பற்றி தெரிந்தவள் மேலும் எதுவும் யோசிக்காமல் காரில் ஏறி அமர்ந்தாள்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருக்க காரை ஓட்டிக் கொண்டிருந்த கார்த்திகேயன் தான் முதலில் பேச்சை துவங்கினான்.
சாலையில் கவனத்தை பதித்த படி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளிடம்"இப்ப எப்படி பீல் பண்ற..?"என்று சாலையில் கவனத்தை பதித்த படி நிஷாந்தியிடம் கேள்வி கேட்க, அவன் தன்னிடம் தான் இப்படி எல்லாம் பேசுகிறானா? என்று ஆச்சரியமாக பார்த்த நிஷாந்தி "என்ன மாதிரி உணர்கிறேன் என்று எனக்கே தெரியல.."என்றவள் குரல் தாழ்ந்து ஒலிக்க, ஒரு நொடி அவளை திரும்பி பார்த்தவன் எதுவும் பேசாமல் சாலையில் கவனத்தை பதித்தான்.
அதன் பிறகு அவளை எந்த கேள்வியும் கேட்டு தொந்தரவு செய்யாமல் வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தவனை சிக்னல் தடை செய்யவும் "இப்ச்"என சலித்துக் கொண்டு காரை நிறுத்த,அவன் எதற்காக காரை நிறுத்தினான் என்பதை புரிந்து கொண்ட நிஷாந்தி வேறு எதுவும் கேட்காமல் முன் போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
கார் சிக்னலில் தடைபட்டு நிற்க 12 வயது சிறுமி ஒருத்தி காரின் கண்ணாடியை தட்ட, அதை கீழே இறக்கியவன் அந்தப் சிறுமியை கேள்வியாக பார்க்க கையில் வைத்திருந்த பூக்கூடையை உயர்த்தி காட்டிய சிறுமி "பூ வாங்கிக்கோங்க சார் ஒரு முழம் 20 ரூபாய் தான்.. இன்னைக்கு சுத்தமா போனி ஆகலை உங்க பக்கத்துல இருக்க அந்த அக்காவுக்கு வாங்கி கொடுங்க சார்.."என்று ஒரு முழம் பூவையாவது விற்று விட மாட்டோமா? என்று அந்த சிறுமி அவர்களை பாவமாக பார்க்க, அந்த சிறுமியை பார்த்த நிஷாந்தி கைகள் தன்னால் தன் வயிற்றை தடவி கொடுத்தது.
அதை ஓர கண்ணால் கண்ட கார்த்திகேயன் "எனக்கு வேணாம்.."என்று சொல்லிவிட்டு காரின் கண்ணாடியை ஏத்தி விட, அந்த சிறுமியின் முகம் களையிழந்து போனது.
"சார் ப்ளீஸ் சார் ஒரு முழம் பூவாவது வாங்கிக்கோங்க.. இதை வித்தா தான் நாளைக்கு நான் ஸ்கூல் போகும்போது எனக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு போக முடியும்.. கொஞ்சமாவது கருணை காட்டுங்க சார் ப்ளீஸ் சார்.. அக்கா நீங்களாவது சொல்லுங்கக்கா வாங்கி வச்சுக்கோங்க அக்கா ப்ளீஸ் அக்கா.."என்று அந்த சிறுமி மன்றாட, அந்த சிறுமியை பார்த்ததும் நிஷாந்தியின் மனம் பாகாய் உருகி விட்டது.
முன்பும் இதே போல் தான் ஒரு முறை
தீட்சண்யனுடன் காரில் வந்திருந்த பொழுது இதே போன்று ஒரு சிறுமி அவனிடம் பூ வாங்கிக் கொள்ள சொல்ல, அவனோ மொத்த பூக்கூடையையும் வாங்கிக் கொண்டு பணத்தை இரண்டு மடங்காக கொடுத்து அவளை நன்றாக படிக்கும்படி சொல்லிவிட்டு பூ மொத்தத்தையும் மனைவியிடம் கொடுத்தவன் "இதை உன் தலையில் வச்சிக்கிட்டாலும் சரி.. இல்ல நைட் படுக்கும் போது பெட்ல வச்சிக்கிட்டு படுத்தாலும் சரி எனக்கு டபுள் ஓகே தான்.."என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க,"உங்களுக்கு எப்ப பாத்தாலும் வேற வேலையே இல்லையா மாமா அதே நினைப்புதான்.."என்று செல்லமாக சலித்துக் கொண்டு அவன் தோளில் ஒரு அடி வைக்க வலித்தது போல் வேண்டுமென்றே பாவ்லா செய்து அவளின் முறைப்பை வாங்கி கட்டிக் கொள்வான்.
ஒரே நொடியில் மின்னலென அவள் மனதில் தீட்சண்யனுடன் இருந்த நினைவுகள் தோன்றி மறைய, அதற்குள் சிக்னல் விழுந்திருந்தது.
அந்த சிறுமி கெஞ்சுவதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் காரை எடுத்துக்கொண்டு சென்றவனை பார்த்த நிஷாந்தியின் மனம் அவன் செய்ததை கண்டு மனதளவில் அருவருத்துப்போனாள்.
அவனைப் பார்க்க கூட பிடிக்காமல் முன் போல் வேடிக்கை பார்த்து கொண்டு வர, பத்து நிமிடங்களில் அவன் பார்த்து வைத்திருந்த வேறொரு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவன் சுவாசிக்கும் காற்றை தான் சுவாசிப்பது கூட தீங்கை விளைவிக்கும் என்று மூச்சை இழுத்து பிடித்து கொண்டிருந்தவள் கார் நின்றதும் கார் கதவை திறக்க, அவள் முகத்தை வைத்தே என்ன நினைக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட கார்த்திகேயன் முகம் இறுகி போனது.
அவன் வருகைக்கு கூட காத்திருக்காமல் வீட்டு வாசலில் சென்று நிற்க, கார்த்திகேயன் முகம் ஒரு நொடி மிருதுவாக மாறி பின் இயல்பு போல் இறுகிப் போனது.
ஜோடி புறா இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று ஒரு நொடி கூட பிரிந்து இருக்காது.
இவற்றில் ஒன்று இறந்து போனாலும் மற்றொன்று அந்த துன்பத்திலேயே தானும் மாண்டு போய்விடுமாம்.
அதேபோல் வாசலில் நின்று கொண்டிருந்த அந்த பெண் புறாவும் தன் ஆண் புறா இறந்த உடனேயே இறந்து விடலாமா என்று நினைத்தாலும் அடிக்கடி 'உன் வயிற்றில் நான் உயிரோடு தான் இருக்கிறேன்'என்பதை நினைவுபடுத்தும் விதமாக அவள் வயிற்றில் வளரும் குழந்தை எட்டி உதைத்து அவளுக்கு நினைவு படுத்த, அந்தக் குழந்தை
தீட்சண்யன் தனக்கு கொடுத்து சென்ற மிகப்பெரிய பொக்கிஷம் அதை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தன் உயிரைப் பிடித்து வைத்திருந்தவள் கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்ட போது துடித்து விட்டாலும் அவளை ஒரு கணவனாக தொந்தரவு செய்யாது ஒரு மாத காலம் அவளுக்கு முழுமையாய் அவகாசம் கொடுத்து விட்டு வெளிநாடு சென்று அன்று காலையில் தான் வந்திருந்தான்.
அதனால் தான் என்னவோ அவளுக்கு பெரிதாய் கார்த்திகேயன் நினைவு வரவில்லை.
காரில் ஏறும் பொழுதும் கூட அவன் தன் மாமன் மகன் என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருந்தவள் அந்த சிறுமியிடம் அவன் பாரமுகம் காட்டவும் அவனைப் பார்க்க பிடிக்காமல் தலையை குனிந்து கொண்டவள் பார்வையில் புத்தம் புதிதாய் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருக்க அந்த நிமிடம் தான் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டாள்.
இனிமேல் தான் நிஷாந்தினி தீட்சண்யன் கிடையாது.
நிஷாந்தினி கார்த்திகேயன். தன் பெயரின் பின்னே அவன் பெயரை சொல்லும் பொழுதே அவளுக்கு தாங்க முடியாத துக்கம் வந்து சேர, ஆண் புறாவை இழந்த பெண் புறா துடிப்பது போல் அந்த நிமிடம் அவள் துடிதுடித்துப் போனது என்னவோ உண்மைதான்.
தாடிக்குள் புரிந்திருந்த அவன் இதழ்கள் ஒரு வன்ம புன்னகையை சிந்த கைகள் கதவுகளை திறந்து விட, புலியிடம் அகப்பட்ட மான்குட்டி தப்பித்துச் செல்வது போல் அவன் கதவு திறந்து விட்டது தான் தாமதம் வீட்டிற்குள் வேகமாக நுழைந்தவள் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தியவன் அவள் வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொண்டு மிக மெதுவாக சுவரில் சாய்த்தவன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான்.
அவன் செயலில் மருண்ட மான் குட்டி போல் அவள் கருவண்டு விழிகள் அங்கும் இங்கும் அசைய, இரு கைகளையும் சுவற்றில் சாய்த்து பிடித்தவன் தாடிக்குள் இருக்கும் இதழ்களை பிரித்து புன்னகை சிந்த, மேகத்தில் மறைந்திருக்கும் நிலா எட்டிப் பார்ப்பது போல் அவன் புன்னகை அவளுக்கு தோன்றியது.
"என்னங்க பொண்டாட்டி ரொம்ப அதிசயமா பாக்கறீங்க..? நான் பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இருக்கேனா ரொம்ப ரசித்து பார்க்கிற மாதிரி இருக்கு..?"என்றவன் கேள்வியில் நினைவுக்குத் திரும்பிய நிஷாந்தி, அவன் கைகளில் சிக்கி இருந்த தன் கைகளை விடுவிக்க போராட, அவனும் இன்னும் அழுத்தம் கூட்டினான்.
தான் முயற்சி செய்ய செய்ய அவன் இன்னும் அதிகமாக அழுத்தத்தை கூட்டவும் அவள் கைகள் வலிக்க ஆரம்பிக்க, முயற்சி செய்வதை விட்டவள் கலங்கிய கண்களோடு அவனை நிமிர்ந்து பார்க்க "தட்ஸ் குட்"என்று புன்னகையுடன் சொன்ன கார்த்திகேயன் அவள் கைகளில் இருந்த அழுத்தத்தை குறைத்து விட்டு மெதுவாக பிடித்துக் கொண்டான்.
"தயவு செஞ்சு என் கையை விடுங்க வலிக்குது.."
"முடியாது.."
"எதுக்காக என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க? இங்க பாருங்க உங்களுக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் ஒரு விபத்து மாதிரி தான்.. என்னை ஏமாத்தி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..பொய் சொல்லி நடந்த இந்த கல்யாணத்தை நான் எப்பவும் ஏத்துக்க மாட்டேன்.."என்றவளை பார்த்து நன்றாக வாய்விட்டு சிரித்த கார்த்திகேயனை புரியாமல் பார்த்தாள் நிஷாந்தி.
கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி சீதையை காட்டுக்கு தனியாக அனுப்பி வைத்த ராமனை தன் பதியாக கொண்ட சீதை அவன் தன்னை இங்கு எதற்காக அனுப்பி வைத்தான் என்பதை தெரிந்து கொண்டபோது எப்படி துடித்து போனாளோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அவன் சொன்னதை கேட்டு துடிதுடித்து போனாள் நிஷாந்தி.
அவள் சொல்வதைக் கேட்டு நன்றாக வாய் விட்டு சிரித்த கார்த்திகேயன் முகம் நொடியில் இறுகிப் போக, சிறை செய்திருந்த அவள் கைகளை விடுவித்தவன் அவள் கழுத்தில் தொங்கிய தாலியை தூக்கி காட்டியவன் "இதுதான் பொய் கல்யாணம் ஆச்சே? அப்புறம் எதுக்கு இந்த தாலி கழட்டி தூக்கி எறி.. இப்ப என் கண் முன்னாடியே இந்த தாலியை நீ கழட்டி தூக்கி எறிஞ்சுட்டா உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன்.. உன் விருப்பப்படி நீ எங்க வேணாலும் போகலாம் இல்ல உன்னை எங்கிருந்து கூட்டிட்டு வந்தேனோ அங்கேயே கொண்டு போய் நானே விட்டுடறேன்.. பட் இந்த தாலி உன் கழுத்துல இருந்தா அதுக்கப்புறம் நடக்கிற அத்தனைக்கும் நீ மட்டும் தான் பொறுப்பு.. உனக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் டைம் தரேன்.. அதுக்குள்ள உன் கழுத்துல இருக்க அந்த தாலியை கழட்டி என்கிட்ட கொடுத்துட்டு உன் இஷ்டம் போல போகலாம்.. இல்லன்னா இந்த வீட்ல கூட நீ தாராளமா இருக்கலாம்.. என்னதான் இருந்தாலும் நீ என்னோட அத்தை பொண்ணு.. ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்கும் போது அவளை அனாதரவா விட்டுட்டு போற பழக்கம் என்னோடது கிடையாது.. எல்லாத்துக்கும் மேல அடுத்தவங்க மனசை புரிந்து கொள்ளாமல் நோகடிக்கிற பழக்கம் எனக்கு ஒரு பர்சன்டேஜ் கூட இல்லை.."என்று இறுதி வாக்கியத்தை அவள் முகத்தை பார்த்தபடி அழுத்தம் கூட்டி சொல்ல,அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த நிஷாந்தி அவன் இறுதியாக சொன்னதைக் கேட்டு குற்ற உணர்வு அவள் மனதை ஆக்கிரமிக்க தலை தன்னால் தாழ்ந்தது.
எந்த பெண்ணுக்கும் வரக்கூடாத ஒரு நிலை.
கணவனை பறிகொடுத்த ஒரு மாதத்திலேயே வேறொருவருடன் திருமணம்.
அதையே அவள் ஏற்க முடியாமல் தவித்து துடித்துக் கொண்டிருக்க, இதற்கிடையில் அவள் குடும்பத்தினர் சதி செய்து கார்த்திகேயனுடன் திருமணம் செய்து வைத்ததை எண்ணி மனதளவில் வெம்பி போயிருந்தவள் மனதை மொத்தமாக துடிக்க வைத்திருந்தது கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகள்.
அடுத்தடுத்த அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து நின்றவள் மனம் 'நிச்சயம் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது..'என்று உறுதியாக சொல்ல, கைகள் கழுத்தில் இருந்த தாலிக்கயிறை தன்னால் கழட்ட ஆரம்பித்திருந்தது.
அவள் செயலையே கண்களில் கூர்மையுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது அந்த அரிமா.
அவன் கேட்டது போல் தாலியை கழட்டி அவனிடம் கொடுத்து விடுவாளா?