All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புதிய கதைகளுக்கான முன்னோட்டங்கள்💖💖💖

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

" மறுஜென்மம் வேண்டுமோ" கதையில் இருந்து குட்டி teaser..

*********************

அதில் மெலிதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தவன், "ஹப்பா எத்தனை கோபம்.. நீ எந்த காலத்தில் இருக்க மாயா.. ஒரு சிம்பிள் கிஸ் சீன்க்கு இத்தனை அலப்பறை தேவையா..!" முகத்தில் இருந்த நக்கலை குரலிலும் தேக்கி அவன் கேட்க

அதில் மேலும் அதிகரித்த கோபத்தை முயன்று கட்டுபடுத்தியவள், "ராம் என்னால் சில விஷயங்கள் செய்ய முடியாது.. என் நிலை என்னோடு.. நான் இது போல் காட்சிகள் எல்லாம் இல்லாமல் டீசென்ட்டாக நடிப்பதால் தான் என் அப்பா என்னை இன்னும் நடிக்க விட்டு வைத்திருக்கிறார்.. அவர் பெயர் கெடுவது போல் நடித்து வைத்தால் அவ்வளவு தான்.. நான் வீட்டிலேயே இருக்க வேண்டியது தான்.. சும்மா உங்கள் பக்கத்தில் இருந்து மட்டும் பேசாதீங்க.." படபடவென பொரிந்து விட்டு அவனை கடந்து மாயா நடக்க

அவள் தந்தை பற்றி பேசியதும் தர்ஷனின் முகம் விகாராமாய் மாறி இருந்தது..

அவள் கெட்ட நேரமோ என்னவோ இப்போதும் அதை அவள் கவனிக்கவில்லை..

தன்னை தாண்டி சென்றுகொண்டிருந்தவளை ஒரே எட்டில் பிடித்து நிறுத்தினான் தர்ஷன்..

அவன் கைகள் அவள் கைகளை வெகு இறுக்கமாக பற்றி இருக்க, தன்னை உற்று பார்த்து கொண்டு நின்ற தர்ஷனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் மாயா..

"நீ அந்த காட்சி என்னுடன் நடிப்பாய் மாயா.. யு வில்.." ஒரு சிறிய புன்னகையுடன் கூறியவன் அந்த புன்னகை மாறாமல் அவளை விட்டுவிட்டு சென்று விட்டான்

அவன் காரை எடுத்து கொண்டு சென்ற பின்பும் கூட குழப்பம் நீங்காமல் நின்றிருந்தாள் மாயா..

அவன் முகம் என்னவோ வழக்கமான புன்னகையுடன் தான் இருந்தது..

ஆனால் அந்த குரல்.. அதில் என்ன இருந்தது.. எதற்கு அத்தனை அழுத்தம்.. அந்த அழுத்தம் ஏதோ ஒரு இனம் புரியா பயத்தை உள்ளுக்குள் தோற்று விப்பதை அவளால் தடுக்க முடியவில்லை..

நேற்று அவள் மனதில் மென் சாரலாய் வீசி கொண்டிருந்தவன், திடீரென்று புயலாகி விட்ட உணர்வு மாயாவிற்கு..

நன்றாக தானே இருந்தான்..

அவன் மீது நட்பையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு, அன்பு எல்லாம் உணர்ந்தாலே..

இன்று அவனுக்கு என்ன ஆயிற்று.. ஏதோ ஒரு வகையில் முதல் முறையாக அவள் மனதை பாதித்தவன் பொய்த்து போய்டுவானோ என்று வெகுவாக பயமாக இருந்தது மாயாவிற்கு..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மறுஜென்மம் வேண்டுமோ" குட்டி துணுக்ஸ்..

********************

"மாயா ஓவரா பண்ணாத.. உனக்கு எத்தனை முறை சொல்வது, நமக்கு திருமணம் ஆகி விட்டது என்று.. முதலில் இது உன் கணவன் வீடு.. அதை நினைவில் வை.. வேறு எங்கோ கொண்டு வந்து விட்டுவிட்டது போல் எதற்கு இத்தனை பாடு.."

அழுத்தமாக தர்ஷன் பேசினாலும் அது பெண்ணவளுக்கு புரியவில்லையோ என்னவோ,அவள் மண்டையில் அவன் சொன்னதும் ஒன்றுமே ஏறவில்லை..

மாறாக அவன் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான் அவள் காதில் ஒலித்தது...

வேறு ஏதோ இடத்துக்கு என்றால் என்ன அர்த்தம்.. அதன் அர்த்தம் புரிந்த நொடி அவள் உடல் மீண்டும் ஒரு முறை தூக்கி போட்டது..

அவளுக்கு அப்படி தானே தோன்றுகிறது.. கணவன் வீடு என்று தோன்றவில்லையே..!

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

நானும் நியூ இயர் ஸ்பெஷல் டீயுடன் வந்துட்டேன்...🥰🥰🥰🥰

******************

"ப்ச் இது வேறா.." என்று சலித்து கொண்டே வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அந்த முள்ளை எடுக்க முயன்றாள் மாயா..

எங்கே, அது வந்தால் அல்லவா..

பெரிய முள்ளானது ஆழமாக குத்தி இருந்ததால், அது அத்தனை எளிதில் வந்துவிடவில்லை..

அவளுக்கோ அதை மெதுவாக எடுக்கும் பொறுமை கொஞ்சமும் இல்லை..

மனதில் மண்டி கிடந்த எரிச்சலையும் கோபத்தையும் எதில் காட்டுவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தவளுக்கு இந்த முள் நல்ல ஆயுதமாக மாறி விட, அதில் தன் கோபத்தை காட்டி கொண்டிருந்தாள் மாயா..

"ப்ச்.. ச்ச.." என்ற எரிச்சலுடன் முணுமுணுத்துக்கொண்டே அவள் முள்ளை எடுக்க போராடி கொண்டிருக்கும் போது சரியாக வந்து சேர்ந்தான் தர்ஷன்..

எப்போதும் மாலை வேலைகளில் அவள் தோட்டத்தில் தான் இருப்பதால் அவளை தேடி அவன் நேராக அங்கு வர, அவள் செய்து கொண்டிருந்த செயலை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்று விட்டான்..

ஒருவாரு அவள் கால்களில் இருந்து வழிந்த ரத்தம் சூழ்நிலையின் கனத்தை உணர்த்த "மாயா என்ன பண்ணுற.." என்று கத்திகொண்டே அவளிடம் வேகமாக வந்தான்

அவன் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் மீது ஒரு உணர்வற்ற பார்வையை செலுத்தி விட்டு மீண்டும் தன் வேலையே தொடர "ஸ்டாப் இட் மாயா.." என்று கத்திகொண்டே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் தர்ஷன்..

அவள் கால்களை வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்து பிரித்து எடுத்து அவன் ஆராய, ஏற்கனவே முள் குத்திய காயத்துடன் அதை எடுக்கிறேன் பேர்வழி என்று அந்த இடத்தை குதறி வைத்திருந்தாள் மாயா..

அதை பார்த்ததும் அவனுக்கும் கோபம் தலைக்கேற, "பொறுமையா எடுக்க மாட்டாயா மாயா.. இப்படியா குதறிவைப்பாய்.. வலிக்கவில்லையா..?" கோபத்துடன் ஆரம்பித்தவன் வருத்தத்துடன் முடிக்க

அதில் கசப்பான ஒரு சிரிப்பு சிரித்தவள், "வலியா..! நீ தினம் தினம் எனக்கு கொடுக்கும் வலிகளை விடவா.." என்று நக்கலாக கேட்க

குனிந்து முள்ளை ஆராய்ந்து கொண்டே பதில் கூறினான் தர்ஷன்..

"உனக்கு வலிப்பது போல் நான் நடந்துகொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை மாயா.."

"உடலை வருத்தினாள் தானா.. மனதை கொல்வதற்கு பெயர் என்ன..? நீ தினம் என் மனதை குத்தி கொல்வதை விட பெரும் வலி எதுவாகவும் இருக்காது ராம்.."

அவள் கூற்றில் அவனுக்கு சிரிப்பு வந்ததோ என்னவோ..

லேசாக சிரித்துக்கொண்டவன், "இருக்கும் மாயா.. அதை விட அதிக வலி நிச்சியம் இருக்கும்.. ஒரு பறவை ஆசையாக கூடி கட்டி, அதில் உறவுகளுடன் மிக சந்தோசமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அந்த மரத்தை ஒருவன் தன் சுயநலத்திற்காக வெட்ட போய், அந்த கூட்டில் இருந்த கடை குட்டி பறவை தவிர மற்ற அனைத்து பறவைகளும் அது கண் முன்னாடியே இறந்து அந்த கடை குட்டி பறவை மட்டும் அனாதையாக திக்கு திசை தெரியமால் நின்றால்.. ஆற்றுவார் தேற்றுவார் யாருமில்லாமல் நின்றால்.. அதன் வலி எப்படி இருக்கும் மாயா..?"

ஒரு மாதிரி வெறுமையான குரலில் கூறி கொண்டே வந்த தர்ஷன் கேள்வியுடன் நிறுத்தி அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவன் கூறிய கதைக்கு ஏற்றார் போல் அவன் கண்களும் லேசாக கலங்கி இருந்ததோ..!

மனதின் ஆழம் வரை ஊடுருவி செல்லும் அவன் பார்வையில் கட்டுண்டு போனவள் அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டு அமர்ந்துவிட, சிறிது நேரம் தானும் அப்படியே இருந்தவன் பின் ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று விட்டான்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புது கதையோ டீசர் பேபீஸ்.. இந்த புக் புக் fair இல் வரும் டியர்ஸ்..

Warning⚠⚠⚠ ஆண்ட்டி ஹீரோ கதைகள் பிடிக்காதாவங்க படிக்க வேண்டாம் பா..

*******************

அங்கு இருந்த குளியல் அறைக்குள் நின்று தான் ஏதோ ஆராய்ந்துகொண்டிருந்தான் ஜெகன்..

நன்றாக மேலே நிமிர்ந்து சுற்றி சுற்றி பார்த்துவிட்டு வெளியே வந்தவன், சாதாரணம் போல் அவள் கையில் இருந்து ஜூஸ்ஸை வாங்கி கொண்டே பேசினான்..

"ம்ம் இங்கிருந்து பார்த்தால் மரம் நன்றாக தெரிகிறது தான்.. ஆனால் பார்த்த உடனேயே நான் வேறு பக்கம் திரும்பி தான் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன் என்றும் தெரிந்திருக்கும் இல்லையா சாரு..!" யோசனையுடன் ஜெகன் கேட்க சாருவிற்கு தான் அடிவயிற்றில் பிசைந்தது

அவன் சாதரணமாக தான் பேசுகிறான்.. ஆனால் தனக்கு ஏன் இத்தனை கலங்குகிறது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

"என் கேள்விக்கு பதில் வர வில்லை என்றால் எனக்கு கோபம் வரும் சாரு.. இப்போதே என் கோபத்தின் அளவை பார்க்க வேண்டுமா..? அதுவும் உன் வீட்டில் வைத்தே..!" அவளை ஆழம் பார்த்து கொண்டே அவன் கேட்க, அவளுக்கோ தொண்டையில் முள் சிக்கியது போல் அடைத்துக்கொண்டது..

வார்த்தை ஏதாவது வந்தால் அல்லவா பேச முடியும்!

அவளுக்கு தான் ஒன்றுமே வரவில்லையே..!

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை போல், "பதில் சொல்லு" என்று அழுத்தமாக கூறி கொண்டே அவள் தோளை அவன் பிடிக்க, அவளோ இன்னும் பயந்து தான் விழித்துக்கொண்டிருந்தாள்..

தோளில் இருந்த அவன் கையின் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி கொண்டே போக, ஒரு கட்டத்தில் கையே நசுங்கி விடுவது போல் வலி எடுக்கவும் தான் சாருவிற்கு சுயநினைவே வந்தது..

"ஆ..." என வலியில் முனகி அனிச்சை செயலாக அவள் நகர நினைக்க, அவளால் தன் கையை இன்ச் கூட அசைக்கமுடியவில்லை..

அப்போது தான் வேண்டுமென்றே அவன் அழுத்துகிறான் என்பதே புரிய, முகத்தில் வலியுடன் அவனை பார்த்தவளுக்கு அவன் கண்களில் இருந்த அழுத்தமே அவன் மனதை கூறியது..

பதில் சொன்னால் மட்டும் தான் கையை விடுவான் என்று புரிந்துவிட, மிகவும் முயன்று அவன் என்ன கேட்டான் என்று நினைவுபடுத்தி பார்த்தாள் சாரு..

ஒருவாறு அவன் கேட்டது நினைவு வர "ம்ம் பார்த்தவுடன் தெரியும்" என்று நெளிந்துகொண்டே அவள் கூற, சட்டென அவள் தோளை விட்டுவிட்டான் ஜெகன்.

ஒரு நொடி அவன் விட்ட தோளில் உயிர் வலி தோன்றி மறைந்தது..

கையை தூக்கவே முடியாதோ என்னும் அளவு வலிக்க, அதை லேசாக அசைத்து பார்த்தாள் சாரு.. நல்லவேளையாக வலித்தாலும் அசைக்க வந்தது..

அவள் செயலில் அவன் முகத்தில் எப்போதும் தோன்றும் புன்னகை தோன்ற, "என்ன நீ உடைத்த கைகள் நல்ல பலமா மீண்டிருக்கா..?" என அதே சிரிப்புடன் அவன் கேட்க, சாரு பதில் கூற திராணியற்று அவனையே பயத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்..

அவனும் இந்த முறை பதிலை எதிர்பார்க்கவில்லை போல், அவளை கடந்து உள்ளே சென்றுவிட்டான்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுஜென்மம் வேண்டுமோ சும்மா குட்டி டி..🥰🥰

*****************

அதனால் எப்படியும் அவன் கோபமாக இருப்பான் என்ற எண்ணத்தில் தர்ஷன் அமைதியாக நிற்க, விக்ரமோ அவன் அருகில் வந்ததும் எதுவும் பேசாமல் நண்பனை ஓங்கி அறைந்திருந்தான்..

சரியாக அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்த மாயா முதலில் கண்டதே விக்ரம் தர்ஷனை அடித்ததை தான்..

அவர்கள் இருந்த அறை வாசல் அருகிலேயே இருந்த அறை என்பதால் அவர்கள் நின்றிருந்தது அப்போது தான் உள்ளே நுழைந்த மாயாவிற்கு தெளிவாகவே தெரிந்தது..

அங்கு கண்ட காட்சியில் மாயா உறைந்து நின்றுவிட, தர்ஷனும் விக்ரமை தான் பாவமாக பார்த்தான்..

"டேய் நான் சொல்வதை.." என்று தர்ஷன் தொடங்க

"வாயை மூடு டா முட்டாள்.." என்று கத்தி கொண்டே மீண்டும் அவனை ஒரு அரை அரைந்தான் விக்ரம்..

இந்த முறை அடி பலமாக இருக்க, தர்ஷனே சற்று தடுமாறி தான் போனான்..

அவன் தடுமாறி லேசாக நகர்ந்ததில் தான் பின்னால் மாயா நின்றுகொண்டிருந்தது விக்ரமிற்கு தெரிய, அது அவனுக்கு அடுத்த அதிர்ச்சியாக இருந்தது..
"மாயா.." என்று மெதுவாக முனுமுனுத்தவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை..

ஆனால் விக்ரம் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்த தர்ஷன் அவன் கண்கள் சென்ற திசையை திரும்பி பார்க்க, மாயா வந்துவிட்டது அவனுக்கும் தெரிந்தது..

விக்ரம் அதிர்ச்சியுடன் நின்றிருந்ததை கவலையுடன் பார்த்தவன், "வரேன் விக்ரம் இரு.." என்று மெதுவாக கூறி விட்டு மாயாவிடம் சென்றான்

அவளோ தனது உறைந்த நிலையில் இருந்து மாறவே இல்லை..

தர்ஷனை ஒருத்தன் அடிக்க அவன் அமைதியாக வாங்கி கொண்டு, இப்போது ஒன்றும் நடக்காதது போல் அவனிடம் பேசிவிட்டு வந்தது அவளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது..

விக்ரம் தர்ஷனை அடித்த சத்தத்தில் சமையல் அறையில் இருந்த ராதாவும் வெளியே வந்திருந்தார்..

அவருமே மீண்டும் மீண்டும் விக்ரம் தர்ஷனை அடித்ததிலும், யாரோ ஒரு பெண் வந்து நிற்பதிலும் என்னவென்று புரியாத குழப்பத்தில் தான் இருந்தார்..

அவர் பேச வரலாம் என்று நினைக்கும் போது சரியாக தர்ஷன் அங்கு வந்துவிட்டான்..

மாயாவின் கவனத்தை கலைக்கும் வன்னம் அவள் தோளில் அழுத்தமாக கை போட்டவன், ராதா புறம் திரும்பி, "அம்மா இவள் என் மனைவி.." என்று அவர் தலையில் ஒரு குண்டை போட, இப்போது உறைந்து நிற்பது அவர் முறை ஆயிற்று..

அவன் குரலில் தானும் நினைவிற்கு மீண்டிருந்த மாயாவும் அவனை கிண்டலாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்..

பின் மனைவி என்ற சொல்லை சொல்லும் தகுதி அவனுக்கு ஏது என்ற எண்ணம் அவளுக்கு..

அதை உணர்ந்தும் அதை கண்டுகொள்ளாத தர்ஷன் தொடர்ந்து ராதாவிடம் தான் பேசினான்..

"சந்தர்ப்ப சூழ்நிலையால் உங்களிடம் சொல்ல முடியாமல் போய் விட்டது மா.. இன்று ஒரு நாள் நாங்க இங்க தான் இருக்க போறோம்.. இவளை சுகன்யாவிடம் அழைத்து போங்க மா.. நாங்க கொஞ்சம் பேசிட்டு வந்து விடுகிறோம்.."

தர்ஷன் அவன் பாட்டிற்கு சரளமாக பேச, ராதாவிற்கு தான் அவன் கூறுவதை ஜீரணிப்பதே பெரும் பாடாக இருந்தது..

தர்ஷன் அவர்கள் யாரிடமும் கூறாமல் திருமணம் செய்து கொண்டான் என்றால் அவரால் சுத்தமாக நம்பவே முடியவில்லை..

அதிலும் இருவரும் நிற்கும் சூழல் பார்த்தால் எதுவும் நன்றாக இருப்பது போல் தோன்றவில்லையே..

ஒன்றும் புரியாமல் அவர் மருமகனை பார்க்க, அவருக்கு கண்களாலேயே ஆறுதல் கூறியவன், "கூட்டிட்டு போங்க மா.. எல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.." என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்

அவன் குரலில் இருந்த அழுத்தத்தை புரிந்து கொண்ட ராதாவும் அதற்கு மேல் எதுவும் ஆராயாமல் மாயாவை அழைத்து சென்றார்..

"வா மா.." என்று ராதா அழைக்க அவள் தோள்களை சுற்றி இருந்த தன் கைகளை விலக்கினான் தர்ஷன்..

அதில் அவனை உயிரற்ற ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாக ராதாவுடன் சென்று விட்டாள்..

அவளுக்கும் அவன் சட்டையை பிடித்து கத்த வேண்டும் போல் தான் இருந்தது..

ஆனால் உடலிலும் மனத்திலும் நிறைந்து விட்ட சோர்வு அதற்கு இடம் கொடுக்காததால் பேசாமல் சென்று விட்டாள் மாயா..

அவள் நகர்ந்ததும் மீண்டும் அந்த அறைக்குள் வந்த தர்ஷன் இப்போது கவனமாக கதவை மூடிவிட்டே வந்தான்..

விக்ரமின் பார்வையில் இருந்த அழுத்தமும் கோபமும் கொஞ்சமும் குறையாமல் இருக்க, அவனை பார்த்து ஒரு கசப்பான சிரிப்பு சிரித்த தர்ஷன், "என்ன டா இன்னும் அடிக்கணுமா.." என்று மென்மையாக கேட்க, விக்ரமோ அவனை இப்போது வேதனையுடன் பார்த்தான்

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்ல குட்டிஸ் Valentines day special teaser.. கதை எப்போ வரும் தெரியாது டியர்ஸ்...

***************

"வேதா சீக்கிரமே வந்துட்டயா?" என முகம் மலர கேட்டுக்கொண்டே புத்தம் புது மலர் போல் வந்தவளை பார்த்தவன் மனம் ஒரு நொடி நின்று பின் துடித்தது..

"உனக்காக தான் பேபி" என்றவன் தனக்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய கேக் எடுத்து "வெட்டு பேபி" என்றான் அவளை ரசித்துக்கொண்டே

அவன் செயலில் ஒன்றும் புரியாமல் விழித்த சைத்ரா, "இன்று எனக்கு பர்த்டே இல்லை வேதா.." என்று கூற

"எனக்கு பர்த்டே பேபி" என்றான் வேதாந்த் சிறு புன்னகையுடன்

அதில் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள், "என்ன வேதா இப்போ சொல்லுற? முன்னாடியே சொல்லி இருக்க வேண்டாமா! போ டா.. எதுவும் கிபிட் கூட வாங்கலை.." அவள் பாட்டிற்கு புலம்ப

"ஹேய் பேபி நீ வந்ததே எனக்கு பெரிய கிபிட் தான் டி.. கேக்கை வெட்டு.." என்று அவளிடம் அவன் கத்தியை நீட்ட

"நீ வெட்டு டா.. உனக்கு தானே பர்த்டே.." என்றாள் சைத்ரா குழப்பத்துடன்

"நோ பேபி எனக்கானது எல்லாமே நீ தான்.. நீ கொண்டாடினால் தான் எனக்கு சந்தோசமா இருக்கும்.. வெட்டு டா.." என மென்மையாக கூறிக்கொண்டே அவன் கத்தியை நீட்ட

'என்ன மாதிரி அன்பிது!' என்று வியந்து தான் போனாள் சைத்ரா

ஒரு மனிதன் இந்த அளவு ஒருவர் மேல் அன்பு வைக்க முடியுமா என பெரும் வியப்பை தான் வேதாந்த் காதல் அவளுக்கு தோற்றி வைத்தது..

அவன் ஆசையை மறுக்காமல் அவள் கேக்கை வெட்ட, முதல் வாய் கேக்கை கூட அவன் அவளுக்கு தான் ஊட்டினான்..

"தேங்க்ஸ் பேபி" என்றவன் சிறு கிபிட் வேறு கொடுக்க,

"என்ன வேதா இது!" என இன்னும் வியப்பும் நெகிழ்வுமாய் கேட்டவள், அதை வாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை.

"பிடிச்சிருக்கா பாரு பேபி" என்று வேதாந்த் கூற, முகத்தில் உறைந்த புன்னகையுடன் அதை பிரித்தவளுக்கு அந்த கிபிட் மிகவும் பிடித்து தான் இருந்தது..

அது ஒரு அழகான வெள்ளி மோதிரம்..

"ரொம்ப அழகா இருக்கு வேதா" என அதை ரசித்து கொண்டே சைத்ரா கூற

"இப்போதைக்கு வெள்ளி தான் வாங்க முடிஞ்சது பேபி.. நான் வேலைக்கு போன பின் வைரத்திலேயே வாங்குவேன் பார்.." என்று வேதாந்த் கனவுடன் கூற

"டேய் லூசு.. வெள்ளியா வைரமா என்பதா முக்கியம்.. என் வேதா வாங்கியது என்பது தான் முக்கியம்.. அந்த பொருளின் மதிப்பு எதிலுமே அடங்காது வேதா.." அழுத்தமாக மோதிரத்தை பார்த்து கொண்டே சைத்ரா கூற, அவள் வார்த்தைகளில் அர்த்தம் தேடி திகைத்து நின்றுவிட்டான் வேதாந்த்..

"பேபி" என அவன் மெதுவாக அழைக்க, அவன் குரலில் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவளுக்கு அப்போது தான் தான் உளறிவிட்டது உரைத்தது

அதில் லேசாக நாக்கை கடித்து கொண்டவளுக்கு இனிமேலும் மறைக்க எதுவும் இல்லை என்று தோன்றி விட, "உன் பர்த்டேக்கு நானும் ஒரு கிபிட் வச்சிருக்கேன் வேதா.." என்றாள் சைத்ரா அவனை கூர்மையாக பார்த்தபடியே

"என்ன பேபி?" என ஒன்றும் புரியாமல் வேதாந்த் கேட்க

"கொஞ்சம் குனி டா தென்னை மரம்.." என்றாள் சைத்ரா

அதில் சிரித்துக்கொண்டே அவன் குனிய, அவன் முகத்தை பிடித்து அவன் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றியவள், "லவ் யு வேதா" என்றாள் மென்மையாக

அவள் கூற்றை உடனடியாக நம்ப முடியாமல் "பேபி" என அவன் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க

"ஆமா வேதா நீ தான் என் வாழ்க்கை என்று புரிஞ்சு போச்சு.. நீ இல்லாமல் வாழ முடியாதுனு தெளிவா புரிஞ்சு போச்சு.. ஐ லவ் யு டா.." மேலும் அழுத்தமாக அவள் கூறியதில், மகிழ்ச்சியில் மூச்சு விடவே திணறி போனான் வேதாந்த்

"போட்டு விடு வேதா" என அவன் கொடுத்த மோதிரத்தை அவள் அவனிடமே நீட்ட, அதை வாங்கியவன் கைகள் லேசாக நடுங்கியது..

அவள் கையை அழுத்தமாக பிடித்து மோதிரத்தை அணிவித்தவன், அதை விடும் எண்ணமே இல்லாமல் அவள் கையையே பார்த்துக்கொண்டிருக்க, தானும் அவன் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டவள் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, நம்ப இயலாத மகிழ்ச்சியில் எதுவுமே பேச தோன்றமால் அவளை அப்படியே அணைத்துக்கொண்டான் வேதாந்த்..

இருவருக்குள்ளும் அந்த நிமிடம் இருந்த மௌனமும் அமைதியும் ஆயிரம் காதல் கதை கூறியது..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்ல குட்டிஸ்,

" உயிர் தாங்குமோ" கதையில் இருந்து குட்டி டீ..

Warning : ⚠⚠⚠: ஆண்டி ஹீரோ கதை பிடிக்காதவர்கள் கடந்து சென்று விடுங்கள்

*************

அவன் சிரித்ததும் ஒன்றும் புரியாமல் அவள் பார்க்க, தனது சிரிப்பை நிறுத்தி விட்டு அவளை உறுத்து விழித்தவன், "என்ன ஒரு உறுதி உனக்கு.. நான் கொடுக்கும் தண்டனை தான் சரி சாரு.." அவள் கைகளை பற்றி அழுத்தம் திருத்தமாக அவன் கூற, அன்று போலவே அவன் பிடி இறுகினாலும் இன்று சாரு அமைதியாகவே நின்றாள்..

அவள் முகத்தை பிடித்து தன் முகத்திற்கு நேராக அழுத்தமாக நிமிர்த்தியவன், "இந்த திமிர் என்னிடம் வேண்டாம் சாரு.. ரொம்ப வருத்தப்படுவாய்.." என அடிகுரலில் கூறிக்கொண்டே மேலும் அவள் கையை அழுந்த பிடிக்க, அதில் வலியில் முகத்தை சுருக்கியவள்

"திமிர் எல்லாம் நிச்சியம் இல்லை" என்றாள் வலியினூடே

அவள் பதிலில் திருப்தி அடைந்து தன் பிடியை தளர்த்தியவன், "பின்னே இதற்கு பெயர் என்ன?" என்று கோபத்துடன் கேட்க

"நிதர்சனம்" என்றாள் சாரு

"அன்று எனக்கு எப்படி என் தவறின் வீரியம் புரியவில்லையா, இன்று அதே போல் உங்களுக்கும் புரியவில்லை.. நிச்சியம் ஒரு நாள் புரியும்.." தெளிவாக சாரு கூற இத்தனை நேரம் இருந்த கோபம் மறந்து அவன் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை தோன்றியது

"ம்ம் இது கூட நல்லா தான் இருக்கு" என்று கூறிக்கொண்டே அவன் ஒரு சிகரெட் பற்ற வைக்க, அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் குழப்பத்துடன் அவனை பார்த்தாள் சாரு.

"இல்லை என்னை பொறுத்தவரை என் தண்டனை சரி.. உன்னை பொறுத்தவரை அது தவறு.. இப்படி வாக்குவாதம் செய்வது கூட நல்லா சுவாரஸ்யமா தான் இருக்கு.. கடந்த இரண்டு நாளா நீ பயந்து பயந்து ஒடுங்கியதை பார்த்து எனக்கும் சலிப்பாக தான் இருந்தது.. இப்படி பதிலுக்கு பதில் பேசி கொண்டிருந்தால் எனக்கும் நன்றாக தான் இருக்கும்.." பேசிக்கொண்ட வந்தவன் அவள் பார்வையில் லேசாக சிரித்துக்கொண்டான்

"ஆனால் பாரேன், என்ன தான் நீ பேசினாலும் நான் சொன்னது மட்டும் தான் நடக்கும்.. பரவாயில்லை பேசு.. கேட்க நல்லா தான் இருக்கு.." சிரித்து கொண்டே கூறிவிட்டு ஜெகன் அவளை பார்க்க

அவன் சொல்வதும் சரி தானே என்று தான் அவளுக்கும் தோன்றியது.

எப்படியானாலும் அவன் நினைப்பது தான் நடக்கும்..


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் டியர்ஸ்..💐💐💐💐💐💐..

இன்றைய ஸ்பெஷல் முதல் முறை "உயிர் தாங்குமோ" பாகம் இரண்டில் இருந்து டீஸர்..

****************************

"இங்கு நான் வேலை பார்க்கிறேனா இல்லையா என்றே எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்துவிடுகிறது அபி.. இதெல்லாம் வேண்டாம் என்றால் கேட்பதே இல்லை.." சாருவும் தினமும் இப்படி புலம்பி கொண்டு தான் இருக்கிறாள்..

எங்கே அபி கேட்டால் அல்லவா..

"ஏன் டி கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை கவனிப்பது தப்பா.. என்னை ஒரு புண்ணியமும் சம்பாதிக்க விட மாட்டாயா நீ..?"

"ஆஹா இங்கு எந்த பெண் கர்பமானாலும் இப்படி தான் கவனிப்பாயாக்கும்..?" நக்கலாக சாரு கேட்க

"எல்லாரும் என் சாரு ஆக முடியுமா.. மேலும் எல்லாருக்கும் பார்க்க குடும்பம் கூடவே இருப்பாங்க.. உனக்கு நாங்க தானே குடும்பம்.. நாங்க தானே பார்க்க வேண்டும்.. இதெல்லாம் பெருமையா, கடமை டி கடமை.." சிரித்து கொண்டே அபிராமி கூற, அதில் பதில் சொல்ல தோன்றாமல் சாருவும் சிரித்து விட்டாள்..

சிறிது நேரம் அமைதியாக சாரு ஜூஸ் குடிக்க, எப்போதும் அவளுக்கு தோன்றும் அதே உணர்வு அப்போதும் தோன்றியது..

ஆம் சில நாட்களாக யாரோ தன்னை அடிக்கடி பார்ப்பது போல் சாருவிற்கு தோன்றி கொண்டே தான் இருந்தது..

இப்போதும் அதே போல் தான் தோன்றியது..

ஆனால் அது மன பிரம்மையாக தான் இருக்கும் என்று தான் அவள் நினைத்தாள்..

பின்னே அது தனி அறை.. அங்கு இருப்பதே சாருவும் அபிராமியும் மட்டும் தான்.. திறந்திருந்த கதவு வழியாக யாரவது பார்த்தாலும் அவளுக்கு தெரிந்து விடும்..

இந்த எண்ணமே முட்டாள் தனமாக தோன்றியது சாருவிற்கு..

அதனால் அதை கூற கூட முடியாமல் அமைதியாக ஜூஸ்ஸை குடித்து முடித்தாள் சாரு..

ஜூஸ் குடித்ததும் உடனடியாக அவளை போக விடாமல் சிறிது நேரம் அவளை பிடித்து வைத்து பேசி கொண்டிருந்தாள் அபிராமி..

அபிராமியின் பேச்சை முகத்தில் உறைந்துவிட்ட புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தவளை வினய் அறையில் இருந்து அவள் எண்ணத்திற்கு காரணமான ஜெகன் பார்த்து கொண்டிருந்தான்..

ஆம் சாருவின் உள்ளுணர்வு கூறியது பொய்யல்ல..

அவளுக்கு அந்த உணர்வு தோன்றும் போதெல்லாம் அவளை பார்ப்பது ஜெகன் தான்..

சாரு இருந்த அறைக்கும் வினய் அறைக்கும் இடையில் ஒரு கண்ணாடி தடுப்பு இருக்கும்..

சாரு அறையில் இருந்து பார்த்தால் அந்த கண்ணாடியில் அவள் தான் தெரிவாள்.. அந்த பக்கம் வினய் அறையில் இருந்து பார்த்தால் இந்த அறை நன்றாக தெரியும்..

இரு பக்கமும் எப்போதும் ஸ்க்ரீன் போடப்பட்டிருக்கும்.. சாருவை அழைத்துவரும் போது மட்டும் ஜெகனுக்காக அபிராமி தான் லேசாக ஸ்க்ரீனை நகர்த்தி வைப்பாள்..

உதட்டில் உறைந்துவிட்ட புன்னகையுடன் அமர்ந்திருந்த சாருவை கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஜெகன்..

அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.. எப்போதும் போல் இறுக்கம் தான்.. ஆனால் அவன் கண்கள் தன்னவளை விட்டு இம்மி அளவு கூட நகரவில்லை..

இது போல் அவன் அவளை பார்த்துக்கொண்டாள் தான் உண்டு..

மற்றபடி நேரில் போய் அவனவளையோ அவன் குழந்தையையோ அவன் பார்த்துவிட முடியாதே.

சிரித்து கொண்டிருந்த சாருவின் கைகள் தானாக மேடிட்டிருந்த அவள் வயிறை பிடித்துக்கொண்டிருக்க, ஜெகனின் கண்கள் பெரும் ஏக்கத்துடன் அவள் வயிற்றின் மீது படிந்தது..

சில நொடிகள் அவள் வயிற்றை பார்த்து கொண்டிருந்தவன் கண்கள் தானாக கலங்கி விட, வேகமாக கண்ணீரை சுண்டி விட்டான் ஜெகன்..

கிடைக்கும் சில நிமிடங்களை எதற்காகவும் இழந்து விட அவன் விரும்பவில்லை.

அழுவதற்கு நேரமா இல்லை.. அது தான் காலம் முழுக்க இருக்கிறதே.. இப்போது அவளை பார்ப்பது தான் முக்கியம் என்று மனதிற்கு கூறி கொண்டு தன் தரிசனத்தை தொடர்ந்தான் ஜெகன்..

அவள் அங்கிருந்து கிளம்பும் வரை அவன் பார்வையை விலக்கவில்லை..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மா ஜெகனுக்கு குட்டி டீ...

********************************

அவன் எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவனிடம் குனிந்த வினய் "ஜெகா என்ன பண்ணுது டா.. வலிக்குதா.. என்னை பிடித்துக்கொண்டு எழுந்துகொள்ள முடியுமா.. வா டா.. முதலில் ஹாஸ்பிடல் போவோம்.." என்று பதற ஜெகனோ கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் நிதானமாக வினய்யை பார்த்தான்..

அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் அவன் கைகளை பிடித்து கொண்டு எழுந்து நின்றவன் இப்போதும் சாருவை தான் அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தான்.

வினய்யின் தோளை பிடித்து கொண்டு நடுங்கும் கால்களை கடினப்பட்டு ஊன்றி நேராக நின்றவன், மெதுவாக சாரு அருகில் வந்தான்..

அவள் கண்களை கூர்மையாக பார்த்து கொண்டே அவன் நெருங்க சாருவோ அவன் எழுந்து நின்ற அதிர்ச்சியில் இருந்தே மீள முடியாமல் ஸ்தமித்து நின்றிருந்தாள்.

அவள் முகத்திற்கு மிக அருகில் வந்தவன் மெதுவாக அவள் முகத்தில் விழுந்திருந்த ஒற்றை முடியை அவள் காதின் பின்னால் எடுத்துவிட்டுவிட்டு லேசாக புன்னகைத்தான்.

ரத்தம் தோய்ந்த அவன் முகம் வெகு அருகில் இருந்ததிலும், ரத்தவாடை மாறாத அவன் கைகள் முகத்தில் உரசியதிலுமே பெரும் பயத்துடன் நின்றிருந்த சாருவிற்கு அவன் சிரித்ததுமே பயத்தில் கொலை நடுங்கி விட்டது..

என்ன மாதிரி ஒரு புன்னகை அது.. நிச்சியம் நல்ல சிரிப்பு இல்லை என்று உடனடியாக கூறிவிடலாம்..

அவனது கூர்மையான உணர்வுகளற்ற பார்வைக்கும் அவன் முகத்தில் தோன்றி மறைந்த சிரிப்பிற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் இருக்க, சாருவிற்கும் இனம் புரியாத பெரும் பயப்பந்து உருண்டது..

எச்சில் விழுங்கி கொண்டே அவள் அவனை பார்க்க, அவனோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவள் மீது இருந்த பார்வையை கொஞ்சமும் விலக்கி கொள்ளாமல் நகர்ந்தவன், வினய்யை விட்டுவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்..

அவன் நடந்து செல்வதை பார்த்து வினய்யே ஒரு நொடி அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டான்..

எப்படி நடக்கிறான்..! ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்!

அவன் இருந்த நிலையில் ஊரை விட்டு அவனை எப்படி அழைத்து செல்ல போகிறோம் என்று தெரியாமல் வினய் விழித்துக்கொண்டிருந்தான்..

அவனானால் இப்படி திடீரென நடந்து போனால் அவனும் என்ன செய்வான்..

ஒரு நொடி தான் திகைத்து நின்றிருப்பான்.. அடுத்த நொடி நண்பனின் வைராக்கியம் அவனுக்கு புரிந்து போனது..

ஆனாலும் இந்த அளவிற்கா!

உயிரே ஒட்டிக்கொண்டிருக்கும் அளவு அடி வாங்கியவன் நடந்து செல்வது மிக பெரிய ஆச்சர்யம் தான்!

இத்தனை வைராக்யத்துடன் செல்கிறான் என்றால் அவன் மனதில் இருக்கும் கோபம்..! அதன் எல்லையை வினய்யால் கணிக்கவே முடியவில்லை..

அவசரமாக சாரு புறம் திரும்பியவன், "நீ செய்தது மிக பெரிய தவறு மா.. உனக்கு இப்போது புரியாவிட்டாலும் பின்னாடி புரியும்.. ஜெகனுக்கு தவறை மன்னிக்க தெரியாது.. அவன் கோபம் எப்போதுமே எதிரியால் தாங்க முடியாத அளவுதான் இருக்கும்.. எனக்கு தெரிந்து உன் மீது அவன் பெரும் கோபத்தில் இருப்பான்.. பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ.." என்றவன் அதற்கு மேல் நிற்காமல் வேகமாக ஜெகனிடம் ஓடி விட்டான்..

புக் link: உயிர் தாங்குமோ - பாகம் 1, 2

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" நீங்கா தடம் உனதே" கதையில் இருந்து குட்டி டீ.. மாத நாவல்.. கடைகளில் கிடைக்கும். 40 rs மட்டுமே

***************

"அங்கு பார்ட்டியில் ஒருத்தங்க, என் ராசியால் தான் நீங்க காணாமல் போய்விட்டதாக சொன்னாங்களே! நீங்களும் அப்படி நினைக்கிறீங்களா..?" அவனை நேராக பார்த்து அவள் கேட்க, அவனுக்கோ சட்டென்று கோபம் தான் வந்தது..

அதை முயன்று கட்டுப்படுத்தி கொண்டவன், "நான் என்ன நினைக்கிறேன் என்று உனக்கு தெரிந்தால் போதுமா..?" என கேட்க, "ம்ம்" என வேகமாக தலையை உருட்டினாள் அவள்.

அவள் செயலில் மெலிதாக சிரித்துக்கொண்டவன், மெதுவாக அவளை நெருங்கினான்.

முதல் முறை கணவனின் மூச்சுக்காற்று முகத்தில் மோதியதில், அவளுக்கு உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது..

அவள் பயத்துடன் கண்களை மூடிக்கொள்ள, அவனோ மேலும் அவள் முகத்தை நெருங்கி அதை மென்மையாக தன் கைகளில் ஏந்திக்கொண்டான்..

அழுந்த மூடி இருந்த அவள் கண்களில் மென்மையாக இதழ் பதித்தவன், அடுத்த நொடி அவள் இதழ்களை அழுத்தமாக சிறை செய்து விட்டான்..

என்ன மாதிரி உணர்கிறோம் என்றே தெரியாமல் இந்து அமர்ந்திருக்க, அவனோ பெண்ணவளின் இதழ் கடலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தான்..

சில நிமிடங்கள் சென்று அவன் விலக, அவளோ அப்போதும் கண்களை மூடி கொண்டு தான் இருந்தாள்..

"நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டாய் இல்லையா டாலு, இந்த முத்தத்தை உன்னை தவிர வேறு யாருக்கும் தர முடியாது என்று நினைக்கிறேன்.. மீண்டும் இதுபோல் எதாவது லூசு தனமாக கேள்வி கேட்டால், இது தான் தண்டனை.." என அவள் காதோரம் அவன் கூற, அவன் மீசை ரோமங்கள் உரசியதில் சிலிர்த்து அவள் கண்கள் தானாக திறந்தது.

"இனி இப்படி எதாவது கேட்பாயா?" அவள் கண்களை திறந்ததுமே அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,

"மா.. மாட்டேன்..." என்றாள் அவள் திணறலாக..

"அண்ட் அவங்க அப்படி பேசியதற்கு காரணம் உன் மேல் இருக்கும் பொறாமை தான். அந்த ரெண்டு பெண்களுமே உன்னிடம் டெண்டரில் தோற்றவர்களின் மனைவிகள். அங்கு ஜெயிக்க முடியாமல் இங்கு உன்னை குறை சொல்கிறாள்.. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும் டாலு"


அவள் தலை கோதி மென்மையாக அவன் கூற, "ம்ம்" என எப்போதும் போல் அவள் முனகி வைத்தாள்..

அவள் திணறியதை வெட்கம் என்று மட்டுமே எடுத்துக்கொண்டவன், அவளுக்கு சங்கடமாக இருக்குமோ என்ற கண்ணோட்டத்தில் யோசிக்கவே இல்லை.

அவளோ சங்கடமா? வெட்கமா? என்ன உணர்வு? என ஒன்றுமே புரியாமல் அமர்ந்திருந்தாள்..


 
Status
Not open for further replies.
Top