அத்தியாயம் 1:
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பசுமையாக காட்சியளித்தது நெற்களஞ்சியமாம் தஞ்சையில் உள்ள அந்த செண்பகப்புறம் கிராமம். இருபுறமும் வயல்கள் பரந்து விரிந்திருக்க நடுவே வாகனங்கள் செல்லும் சாலை.
மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் மக்களிடையே தூய்மையான சுத்தமான காற்றினை சுவாசித்துக் கொண்டிருந்தனர். சுற்று வட்டார மக்களெல்லாம் தண்ணீருக்கு கஷ்டப்பட, தண்ணீர் பஞ்சம் என்பதை அறியாத அந்த மக்கள் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.
மூன்று வேளையும் உழைத்து அதில் வரும் வருமானத்தில் உணவருந்தி சொர்க்கம் என்றால் என்னவென்று பூமிதனிலே அனுபவித்தனர்.
உணவு மற்றும் உடையைத் தவிர வேறு எதற்குமே அவர்கள் தங்களது பணத்தினை செலவழித்தது கிடையாது. ஏனெனில் அந்த ஊரில் மருத்துவம், கல்வி என அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசமாக கிடைத்தன.
மூன்று போகம் பயிரிட்ட போதும் நல்ல விளைச்சலைக் கண்டனர் அந்த ஊர் மக்கள். வளமான ஒரு வாழ்வு வாழ்ந்தனர் அந்த மக்கள்..
இதற்கெல்லாம் காரணம் அவர்கள் குல தெய்வமாக நினைக்கும் இளம்பரிதி தான். அந்த கிராமத்தின் பெரிய குடும்பத்தின் இந்நாள் வாரிசு.
ஆறடி உயரத்தில் நல்ல வாட்ட சாட்டமான உடலுடன் , பார்வையிலே மற்றவர்களை அடக்கும் கம்பீரத்துடன் இருந்தான் அந்த இருபத்தியெட்டு வயது கிராமத்துக் காளை.
அடங்காமல் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் அவனது சிகையும், நாசிக்கு கீழே அடர்ந்த மீசையும், மிக அரியதான சிரிப்பின் போது தெரியும் சிங்கப்பல்லும் அவனை பேரழகனாகவே காட்டியது.
எப்போதும் அணிந்திருக்கும் வெள்ளை நிற வேஷ்டி சட்டையும், கையில் இருக்கும் சில்வர் நிற டைட்டன் வாட்சும், ராயல் என்பீல்டு வண்டியும் அவனது அடையாளங்கள் என்று சிறு குழந்தையும் சொல்லி விடும். சிலம்பாட்டம் , மல்யுத்தம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான் அவன்.
அவனை எதிர்த்து பேச அந்த கிராமத்தில் ஒருவரும் இல்லை. அப்படியே பேசினாலும் அவர்கள் அதன்பிறகு பேசவே முடியாதபடி செய்திடுவான்.அவனை யாரும் எதிர்த்து பேசாததால் தான் அவனாக பார்த்து அந்த மக்களுக்கு உதவி செய்தான். இல்லையென்றால் நடப்பதே வேறு. அவனிடம் பேச அவனது தாய் தந்தையரே அச்சம் கொள்வார்கள்.
பல கன்னியர்களுக்கு அவன் கனவு நாயகனாக இருந்தாலும் யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் , தன்னை அடக்கிட யாருமின்றி இஷ்டப்படி சுத்தியது அந்த இளங்காளை.
முன்னேயும் பின்னேயும் இரண்டு இரண்டு கார்களில் காவலர்களும் அதிகாரிகளும் தொடர நடுவிலே பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தது அந்தக் கருப்பு நிற கார்.
காவலர்களும் அதிகாரிகளும் பயத்துடனே அந்த காரைக் சுற்றி சென்று கொண்டிருந்தனர். ஏனடா இந்த வேளையில் சேர்ந்தோம் என்ற மனநிலையில் இருந்தார்கள் அவர்கள்.
ஏனெனில் அவர்கள் சென்று கொண்டிருந்தது செண்பகப்புறத்திற்கு அல்லவா???
இன்னும் சிறிது நேரத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்று அவர்கள் அச்சப்பட எதைப் பற்றியும் கவலையில்லாமல் மனதில் கோபம் தீயாய் எறிய முகத்தை இறுக்கத்துடன் வைத்துக் கொண்டிருந்தது அந்த கருப்பு நிற காரில் வந்து கொண்டிருந்த உருவம்.
ஊரை நெருங்கியதும் அந்த உருவத்தின் முகத்தில் சிறு இளக்கம் தெரிந்தது. ஆனால் ஊரின் எல்லையை தொட்டதும் மீண்டும் இறுக்கமாகியது.
சின்ன சிறு குடில்கள் அழகாகவும் , நேர்த்தியாகவும் இருந்த பகுதியை அடைந்ததும் அந்த உருவம் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தவரை அழைத்து காரை நிறுத்தச் சொல்லியது.
அடுத்த நொடி அனைத்து கார்களும் நிறுத்தப்பட அந்த இடத்தில் புழுதி பறந்தது. அந்த கருப்பு காரில் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தவர் அவசரமாக கீழே இறங்கி வந்து கதவை திறந்துவிட கம்பீரமாய் நேர் கொண்ட பார்வையாய் இறங்கினாள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கீர்த்தனா.
அழகு தேவதையென இருந்தவளை ஆவென்று பார்த்தனர். பால்நிறத்தில் இருந்தவள் தனது மீனைப் போன்ற கண்களுக்கு தீட்டியிருந்த கருமை அவளை மேலும் அழகாக காட்டியது. உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்திருந்த உதடுகள் எந்த ஒரு செயற்கை அழகு சாதனங்களும் பயன்படுத்தாமலே எழில் மிகுந்த பேரழகியாய் இருந்தாள்.
அவளது நிறத்திற்கு அவள் அணிந்திருந்த நீலவண்ண சில்க் காட்டன் சேலை அவளுக்கு பொருத்தமாய் இருந்தது. நெற்றியில் கருப்பு வண்ண பொட்டும் காதில் ஜிமிக்கியும் மட்டுமே அவள் அணிந்திருந்தவைகள்.
கீழிறங்கிய அவளை சுற்றி காவலர்களும் , அதிகாரிகளும் சூழ்ந்து கொண்டனர்.
அதுவரை அவளது அழகை வியந்து பார்த்து கொண்டிருந்த மக்கள் அவளை சுற்றியிருந்த காவலர்களை கண்டதும் பயந்தனர்.
அங்கிருந்த அனைவரையும் அவளுக்கு அடையாளம் தெரிந்தது. ஆனால் யாரிடமும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது கருவிழியை உயர்த்தி அங்கிருந்த அனைவரையும் பார்த்தாள்.