விழி- 1
மும்பை…
அந்த இரவு பொழுது நீண்ட நெடும் சாலையில் விலை உயர்ந்த ரகம் கார் ஒன்று காற்றை விட வேகமாக சென்றுக் கொண்டிருந்தது, அந்த வாகனமே அப்படி பறக்கிறது என்றால் அதன் உள்ளிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவனின் மனநிலை எப்படி இருக்கும்…? அந்தக் காற்றை விட இரண்டு மடங்காக அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. காரணம் சற்று முன் அவன் தந்தை கூறிய முடிவில் வந்த கோபம் தான் இது.
ரவிசங்கர் யாதவ் மும்பையில் விரல் விட்டு எண்ணும் பணம் படைத்த லிஸ்டில் மூன்றாவதாக உள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்து 'யாதவ் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற பெயரில் சிறிய அளவில் தொடங்கினார், அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்காக வந்த மாதவி என்ற பெண்ணை பார்த்த முதல் பார்வையில் காதல் கொண்டு திருமணம் முடித்தார், மாதவியும் தன் கணவனுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்து சிறிய அளவில் நடந்துக் கொண்டிருந்த கன்ஸ்ட்ரக்ஷனை அவர்களால் முடிந்தவரை பெரிய அளவிற்கு கொண்டுவந்தனர்.
இடையில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது அவன்தான் சித்தார்த் யாதவ், மாதவி தொழிலை மட்டுமே கவனிக்காமல் மகனையும் நன்றாக வளர்த்தார் என்ன ஒன்று? ஒரே மகன் என்று அதிக செல்லம் மற்றும் அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் இஷ்டத்திற்கும் வளர விட்டார்.
சித்தார்த் தாய் தந்தையை போலவே இன்ஜினியரிங் படித்து முடித்து தன் இருபத்தி மூன்றாவது வயதில் தந்தைக்கு உதவியாக யாதவ் கன்ஸ்டிரக்ஷனை கவனிக்கத் தொடங்கினான். 2 வருடத்திற்கு பின் தந்தைக்கு ஓய்வு கொடுத்து இருபத்தி ஐந்தாவது வயதில் யாதவ் கன்ஸ்ட்ரக்ஷன் முற்றிலும் கையில் எடுத்துக்கொண்டு அந்த வயதிலேயே சிறந்த தொழிலதிபர் என்ற பரிசும் தட்டிச் சென்றான்.
சித்தார்த் யாதவ் யாருக்கும் அடங்காத ஆளுமை கொண்டவன், தாய் சொல்லுக்கு மட்டும் மதிப்பு கொடுப்பவன் அதுவும் சில விஷயங்களில் மட்டுமே! யாரையும் தன்னை நிமிர்ந்து பார்த்துப் பேசும் உயரம் கொண்டவன்... ஒற்றை பிள்ளையாக வளர்ந்ததால் என்னவோ திமிர், கோபம், பிடிவாதம் உள்ளவன். அவனிடம் யாரும் அவ்வளவு சுலபமாக பேச முடியாது எப்போதும் ஒரு அழுத்தமான மற்றும் எச்சரிக்கை பார்வையுடன் இருப்பான்.
இந்த நான்கு வருடமாக யாதவ் கன்ஸ்ட்ரக்ஷன் மும்பையில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தொடங்கினான். மாதத்தில் நான்கு நாட்கள் மற்ற இடங்களுக்குச் சென்று மேல் பார்வை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.
எப்பொழுதும் போல் அலுவலகத்தில் இருந்து இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு முடித்து அவன் மாடிக்குச் செல்ல இருக்கையில் அவன் தாய் மாதவி பேச்சை ஆரம்பித்தார்.
"சித்து என்னப்பா நானும் அப்பாவும் இங்க உட்கார்ந்து இருக்கோம் எங்கள கவனிக்காம நீ பாட்டுக்கு சாப்பிட்டு போற?" என மாடியை நோக்கிச் செல்லும் மகனிடம் முறையிட்டார்.
சித்தார்த் கேள்வியாக தாயை நோக்கினான். ஏனென்றால் இதுதான் வழக்கம் அவன் எப்போதும் வீட்டுக்கு வந்தால், இருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று விடுவான் தாய் தந்தை யார் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டான். ஆனால் ஏன் இன்று..? எனப் பார்வையில் கேள்வியை தேக்கி நோக்கினான்.
மாதவி அவன் பார்த்த பார்வையில் ஒருவித நடுக்கத்துடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தன் கணவனை சீண்டி, "நீங்களே சொல்லுங்க விஷயத்தை" என சைகை செய்ய ரவிசங்கர், "நீ தான ஆசைப்பட்ட நீயே சொல்" என அமைதியாக இருந்து கொண்டார்.
மாதவி தைரியத்துடன், "சித்து உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இப்படி வந்து உட்கார்" என தன் எதிரில் இருக்கும் சோபாவில் கைகாட்டி கூறினார்.
தன் தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு சோபாவில் அமர்ந்தான் சித்தார்த்.
மாதவி மெதுவாக பேச்சை தொடங்கினார், "அது வந்து... சித்து உனக்கு இருபத்தி ஒன்பது வயசு ஆகுது உங்க அப்பாவோட பிரண்ட் அஜய் கிருஷ்ணா டாட்டர் அஞ்சனா தேவி மேரேஜ் பண்ணிக்க..." என அவர் சொல்லிக் கொண்டு வரும்போதே கையை உயர்த்தி தடுத்து, "மாம், எனக்கு மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லை" என ஒரே வாக்கியத்தில் முடித்தான்.
"என்ன சித்து இப்படி சொல்ற? இப்ப பண்ணலன்னா வேற எப்ப பண்ணிக்க போறதா இருக்க?" என சற்று கண்டிப்புடன் கேட்டார். ஏனென்றால் மாதவி அறிவார் அவன் அந்தஸ்திற்கு இல்லை என்றால் குதிப்பான் என்று தான், தன் கணவருடைய நீண்ட வருட தோழரின் மகளை மணம் முடிக்க யோசித்தார்.
சித்தார்த் சிறுவயதிலிருந்தே பணத்தால் வளர்ந்ததால் என்னவோ தனக்கு கீழே இருப்பவரிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், சுத்தம் கடைபிடிப்பவன், அவன் வீட்டு வேலை ஆட்களை யாரும் தன் அருகில் நிற்க வைத்து கூட பேச மாட்டான், அதனாலே அவன் காலை அலுவலகத்திற்கு செல்லும் வரை யாரும் அவன் எதிரில் வர மாட்டார்கள், ஏன் அவன் அணியும் ஷார்ட் கூட விலை உயர்ந்ததாக தான் தேர்ந்தெடுத்து அணிவான். இப்படி இருக்கையில் அவன் வாழ்க்கை துணையை எப்படி எதிர்பார்ப்பான் என்று தெரிந்து தான் அஜய் கிருஷ்ணா மகளை பெண் கேட்டார். அவரும் ஒத்துக் கொள்ள இனி மகனின் முடிவுதான் என்று இருந்தனர். அவன் திடீரென்று இப்போது வேண்டாம் என்று சொல்லவும் மாதவிக்கு சற்று கோபம் வந்துவிட்டது.
"மாம் எனக்கு இப்போ இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னேன் எனக்கு எப்போ இன்ட்ரஸ்ட் இருக்கோ அப்போ மேரேஜ் பண்ணிக்கிறேன் அதுவுமில்லாம பொண்ணு எனக்குக் எல்லா விஷயத்திலும் துணையா இருக்கணும்" என அந்த 'துணை' என்ற வாக்கியத்தை அழுத்தமாகக் கூறினான்.
மாதவிக்கு புரிந்துவிட்டது அவன் எதை பற்றிக் கூறுகிறான் என்று, "சித்து, நீ சொல்றது எனக்கு புரியுது உனக்கு அஞ்சனா எல்லா விஷயத்திலும் முக்கியமா உன் பிஸ்னஸ்ல ஹெல்ப் ஃபுல்லா இருப்பா அதனாலதான் நானும் உன் அப்பாவும் பேசி இந்த கல்யாணத்தை முடிவெடுத்தோம்" என்றார்.
சித்தார்த் அறியாததா அஞ்சனா அறிவிலும், அழகிலும், படிப்பிலும் சிறந்தவள் என்று இருந்தாலும் அவன் மனம் ஏனோ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை, "மாம்" என அவன் ஏதோ கூற வர இவ்வளவு நேரம் அமைதியாக மனைவி மற்றும் மகனின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரவிசங்கர், "சித்து, அதான் அம்மா சொல்றாங்கல்ல உனக்கும் அஞ்சனாவுக்கும் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் இதில் எந்த மாற்றமும் இல்லை" என பேச்சை முடித்து, "வா மாது, நம்ப போய் படுக்கலாம்" என தங்கள் அறையை நோக்கிச் சென்றார்.
இவையனைத்தையும் எண்ணி பார்த்துக்கொண்டு சித்தார்த் அதிவேகமாக காரை பீச் ஹவுஸ் நோக்கி பறக்க விட்டான். கோபம் அதிகமாக இல்லை, அழுத்தம் இருந்தால் அவன் எப்போதும் இந்த பீச் ஹவுஸ் தான் நாடி வருவான். அதனால்தான் இப்போதும் இங்க வந்துக் கொண்டிருக்கிறான் அவன் இங்கிருந்து வீட்டிற்குச் செல்ல இன்னும் ஒரு வாரம் ஆகும் அவன் கோபம் தணியும் வரை.
சூரியன் மெல்ல மெல்ல மேலெழ, அந்தக் காலைப் பொழுதில் வீட்டின் முன்னே அழகாக கோலம் வரைந்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள், அந்த கோலத்தையே ரசித்து வரைந்துக் கொண்டிருக்க அப்பொழுது அவள் முன் இரண்டு காலடி தெரிய புன்னகையுடன் நிமிர்ந்து நின்று, "வந்துட்டீங்களா சார்?" என்றாள் இனிமையாக.
ரவிசங்கர் பதிலுக்கு புன்னகைத்து, "இந்த மும்பையில் நீ மட்டும் தான் மா வீட்டு முன்னாடி கோலம் போடுற அதுவும் இவ்ளோ பெருசா அழகா போடுற உனக்கு ஆர்ட் சென்ஸ்ஸ் ரொம்ப இருக்கு" என கூட பாராட்டவும் செய்தார் எப்போதும்போல்.
அவள் அவர் பாராட்டியதற்கு அதுக்கும் ஒரு புன்னகை கொடுத்து, "சார் உங்களுக்கு கஞ்சி காய்ச்சி டேபிள் மேல வச்சி இருக்கேன் போய் சாப்பிடுங்க" என அதே இனிமையான குரலில் கூறி மீண்டும் விட்ட கோலத்தை தொடர ஆரம்பித்தாள்.
மடமடவென அந்த கோலத்தை போட்டு முடித்து பொருட்களை அதன் உரிய இடத்தில் வைத்து விட்டு கிச்சன் உள்ளேச் சென்று காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தாள், வெளியே மாதவியின் குரல் கேட்க அவருக்கு மிதமான சூட்டில் காபி தயாரித்துக் கொண்டு சென்றாள்.
"மேடம் இந்தாங்க காபி" என்றாள் மேல் மாடியை நோக்கிக் கொண்டே,
"அரசி, பயப்படாத அவன் வீட்டில் இல்லை எப்படியும் அவன் இங்க வர ஒரு வாரம் ஆகும் அதுவரை நீ பயப்படாம எங்க வேணாலும் சுத்தலாம்" என அவள் பதற்றத்தை புரிந்துக் கொண்டு கூறி, "அப்புறம் உங்க அம்மா எங்க?" என கேட்டார்.
இப்பொழுது அவள் முகம் தெளிவடைய, "அம்மா வெளியே போயிருக்காங்க மேடம்" என்றாள், அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ராதா பை நிறைய காய்களை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
ராதா இந்த வீட்டிற்கு வந்து இதோடு 19 ஆண்டுகள் ஆகிறது, ராதா தமிழ்நாட்டில் கிராமத்தில் வளர்ந்த பெண் அவள் குடும்பம் அந்தக் கிராமத்திற்கே பெரிய ஜமீன் குடும்பம், பெரிய மகள் படிப்பில் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் வீட்டிலேயே இருக்க, இரண்டாவது பெண் பிள்ளையை படிக்க வைத்தார், அக்காவை போல் படிப்பில் ஆர்வம் இல்லை என்றாலும் தந்தைக்காக படிக்க ஒத்துக்கொண்டார், படிக்கச் சென்ற இடத்தில் காதல் மலர்ந்தது, குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு தெரிவிக்க ராதா அந்த காதலனை நம்பி மும்பைக்கு வந்தார். ராதா 20 வயதிலே பார்க்க அழகாக இருப்பார்.
மும்பைக்கு வந்து கோவிலில் திருமணம் செய்து ஒரு மாதம் தான் அவர் காதல் கணவனுடன் திருமணம் வாழ்க்கை, பின் அவன் ராதாவை ஒருவனுக்கு விற்றுவிட்டு பணத்துடன் ஓடிவிட்டான். இதை அறிந்த ராதா எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஒரு இடத்தில் மயங்கிக் கீழே விழுந்து இருந்தார், அவ்வழியாகச் சென்ற மாதவி தான் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் தாய்மை அடைந்திருக்கிறார் என்று கூறி அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார் மருத்துவர்.
ராதா கண் விழிக்கும் வரை மாதவி அருகிலிருந்து பார்த்துக் கொண்டு அவர் கண் விழித்ததும் அவர் சோக கதையை கேட்டு தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். ராதாவிற்கு பத்தாம் மாதம் முடிவில் அழகான பெண் குழந்தை பிறந்தது அவள் தான் விழிஅரசி.
ராதா என்று வந்தாரோ அன்றிலிருந்து அவர் சமையல் வேலையை தன் கைவசம் ஆக்கிக்கொண்டார், மகளையும் எங்கேயும் படிக்க வெளியே அனுப்பவில்லை தன்னை போல் அவளும் யாரிடமாவது ஏமாந்து விட்டால் என்ற பயத்தில் தன்னுடனே வைத்துக் கொண்டார்.
அரசி முதலாளி அம்மாவுடன் ஏதோ நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, "அரசி இந்த நேரத்துக்கு ஏன் இங்க வந்த? ஐயா வரும் நேரம் ஆச்சு நீ உள்ள போ" என கண்டித்தார்.
அன்னையின் மிரட்டலில் பயம் ஒட்டிக்கொள்ள அவரைப் பார்த்த மாதவி, "ராதா சும்மா எதுக்கு குழந்தைகிட்ட கத்திட்டு இருக்க என் மகன் வீட்டில் இல்லை அவன் வர இன்னும் ஒரு வாரம் ஆகும் பீச் ஹவுஸ் போய் இருக்கான் அதனாலதான் இங்க நின்னு என்கிட்ட பேசிட்டு இருக்கா" என ஆதரவாக பேசினார்.
"இல்லம்மா என்னதான் இருந்தாலும் வயசு பொண்ணு இங்க நின்னு பேசுறது ரொம்ப தப்பு உள்ளவே இருக்கட்டும்" என்றார்.
"ராதா உன் பொண்ண வெளியேதான் அனுப்புறது இல்ல வீட்டுக்குள்ளவாவுது சுதந்திரமா இருக்கட்டும் அவ எப்போ வெளி உலகத்தைப் பற்றி தெரிஞ்சுக்க போறா, இப்படியே எதுவும் தெரியாமல் அப்பாவி மாதிரி இருந்தா உன் பொண்ணை யாராவது ஏமாத்த போறாங்க" என்றார் பொதுவாக.
ராதாவிற்கு உடனே கண்கள் கலங்கிவிட்டது மகள் தன்னைப்போலவே யாரிடமாவது ஏமாந்து விடுவாளோ என்ற பயத்தில் அதை புரிந்துக் கொண்ட மாதவி அவர் அருகில் சென்று, "ராதா, உன் பயம் என்னன்னு எனக்கு நல்லா புரியுது அதனால உன் பொண்ண வீட்டுக்குள்ளேயே எவ்வளவு நாள் வெச்சுட்டு இருக்க போற? அவளுக்கும் பதினெட்டு வயசு முடிய போகுது வெளி உலகத்தை பற்றி தெரிய வேண்டாமா?" என்றார்.
ஆம் விழி அரசி பார்க்க பால் நிறத்தில் பொம்மை போல் இருப்பாள், அவள் வாய் பேசுவதை விட அவள் கண்கள் தான் அதிகம் பேசும் அதனால் தான் என்னவோ அவளுக்கு விழி அரசி என்ற பெயர் வைத்து இருப்பார் ராதா, விழி அரசிக்கு அன்னை கற்றுக்கொடுத்த தமிழ் எழுத படிக்க தெரியும், பிறந்ததில் இருந்து அந்த வீட்டை விட்டு அவள் எங்கேயும் வெளியேச் சென்றது இல்லை அந்த வீட்டின் தோட்டத்தில் அதிக நேரம் கழிப்பாள். எப்பவாவது வெளிய போக ஆசைப்பட்டால் ராதா தான் அவளை அழைத்துச் செல்வார். அன்னையின் அறிவுரை ஒன்று தான் இருக்கும் ஆண்களிடம் அதிகம் நின்று பேசக்கூடாது அவர்களை நிமிர்ந்து பார்க்கக்கூடாது என்று தான்.
"இல்லமா என் பொண்ணு என்ன மாதிரி ஆகக்கூடாது நான்தான் வாழலை என் பொண்ணு நல்லா வாழணும். அதனால தான் என் கூடவே வெச்சு இருக்கேன் அவளை புரிஞ்சுக்கிற ஒரு நல்ல பையன் கண்டிப்பா வருவான்" என்றார் கண்ணை துடைத்துக் கொண்டு.
"சரி ராதா அவர் வர நேரமாச்சு உன் பொண்ணு எல்லா சமையலும் முடிச்சிட்டா, நாங்க சாப்பிட்டு வெளிய கிளம்பறோம்" என்றார்.
மாதவி எவ்வளவோ கூறிவிட்டார் இந்த வீட்டை மேல் பார்வை மட்டும் பார்த்துக்கொள் மற்ற வேலைகளைச் எதுவும் செய்ய வேண்டாம் என்று... ஆனால் அவர் இந்த வீட்டு வேலைக்காரி ஆகவே நான் இருந்து கொள்கிறேன் மத்த பதவி எனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் இருந்தும் மாதவி வேலைக்காரி மாதிரி நடத்தாமல் தன் தோழி போலவே அவரிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்வார்.