அத்தியாயம் 3 :
வருடம் 2015 மதுரை :
“அம்மா நான் கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகிட்டேன்.ஜாப் பெங்களூர்ல “
என்ற வித்யாவின் குரலுக்கு தேவகி மகிழ்ந்தாலும் ,வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்பதில் தயங்கி,
“ ஏன் பாப்பா நீ மேல படிக்கலாம்ல.நீ வேலைக்கு தான் போகணுமா ? மேற்கொண்டு படிச்சா இங்கேயே இன்னும் நல்ல வேலை கிடைக்கும்ல”
என்ற தேவகியின் குரலுக்கு, சுப்ரமணியம்,
“ தேவா ! என்ன பேசுற நீ ?
பிள்ளை திறமையா வேலை வாங்கிட்டு வந்து சொல்லுது.சந்தோசமா அனுப்பாமல்,
இது என்ன பேச்சு !”
“அப்பா ! நானும் ஒரு நிமிஷம் யோசிக்க தான் செஞ்சேன்.இது என் திறமைக்கான வேலையே இல்லை,அதோட சம்பளமும் கம்மி.ஒருவேளை இன்னும் படிப்பு எதிர்பார்க்கிறாங்க போல?”
என்ற மகளின் வார்த்தையில்,சுப்ரமணியம்
“அதுக்கில்லைமா..இந்த காலத்தில் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு! இதுல நம்மளே கைமேல் கிடைச்ச வேலையை கழிக்கலமா ?”
“ என்னப்பா பேசுறீங்க ! என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.எனக்கு தெளிவா புரியுது இந்த வேலை எனக்கான இடமில்லைனு.வேலை கிடைச்ச சந்தோசத்தில் தான் அம்மக்கிட்ட சொன்னேன்பா.மத்தபடி அம்மா சொன்னபடி நான் இன்னும் படிக்கணும்பா.படிச்சு கண்டிப்பா இதை விட பெரிய வேலைக்கு போவேன் “
இதுவரை உறுதியாக பேசியவள் இறுதியில்,
“இதுல உங்களுக்கு ஒன்னும் வருத்தமில்லைலபா.அப்படி இந்த வேலைக்கு நான் போகனும்னு நீங்க ஆசைப்பட்டா கண்டிப்பா போறேன்பா”
என்றவள் அவரது கண்களை பார்க்க,சற்று இதழ் வளைந்து சிரித்த
சுப்ரமணியம்,
“ என் பொண்ணு வளர்ந்திட்டா ..!
அவளுக்கு என்ன வேணும்னு அவளுக்கு தெரியுது .ரொம்ப சந்தோசமா இருக்குடா .உனக்கு என்ன படிக்கணுமோ படி.அப்பா எப்பவும் உனக்காக இருப்பேன் “
என்றவர் பெருமிதத்துடன் தலைகோதி,சிரிப்புடன் அவள் தோள் சாய்ந்து கொள்ள,அந்த நிமிடம் பெற்றோருக்கு உவகையுடன் கழிந்தது.
இந்த பத்து வருடத்தில் வித்யாவின் குடும்பத்தினருக்கு நல்ல வளர்ச்சி. செட்டில்ட் வாழ்க்கை என்பார்களே அத்தகைய செழிப்பான வாழ்க்கை.
வீடு காண்ட்ராக்ட்,தொழில் ஸ்தாபன காண்ட்ராக்ட் என சிறிது சிறிதாக துவங்கி இன்று பல அரசு ஒப்பந்தங்கள் அவரது கையில்!
‘காற்றுள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும்’ என்பது போல் கையில் பணம் சேர சேர பெரிய வீடு,கார், மனைவி மகளுக்கு நகை என்று அனைத்தையும் திருப்திபடுமளவு சேர்த்து விட்டார்.இதோடு
மகளது தெளிவிலும் நிறைவு ஏற்பட்டிருக்க,சுப்ரமணியம் அடுத்தகட்டமாக ஜோதிடரை காண சென்றிருந்தார்.அவர் சொன்ன தகவலோ அத்தனை இனிப்பானதாக இல்லை.
“ பொண்ணுக்கு கல்யாணம் இருபத்தி ஒன்னுல முடியலைனா அடுத்து இருபத்தி ஏழுதா அண்ணாச்சி.ஜாதகப்படி அடுத்த வருஷம் முடிச்சா தான் பொண்ணு நல்லா வாழும்” என்று விட்டார்.இதில்
சுப்ரமணியத்திற்கு சற்று கவலையாகிப் போனது.
மகள் அடுத்து படிக்க வேண்டும் என்றாலே ! அதற்கு இன்னும் ரெண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளுமே.! ஜோதிடர் அடுத்த வருடம் திருமணம் முடிக்க வேண்டும் என்கிறார்.பின் மகள் மேற்கொண்டு கல்லூரி படிப்பை எப்படி வெற்றிகரமாக முடிப்பாள்?அவளுக்கென எதிர்கால கனவுகள் வேறு இருக்குமே!
என்ன செய்வது ?அடுத்த வருடத்திற்குள் முடிக்கவேண்டும் என்றால் தற்பொழுதே பார்க்க துவங்க வேண்டுமே ! அதற்குள்ளா ? இதைப் பற்றி யாரிடம் பேசுவது.மகள் புரிந்து கொள்வாளா ? ‘
என அத்தனையும் யோசித்த சுப்பிரமணியத்திற்கு முதலில் சற்று படபடத்தே வந்தது.பின் சற்று நிதானித்து
மனைவியிடம் மட்டும் முதலில் பகிர்ந்தார்.அனைத்தையும் கேட்டுக் கொண்ட தேவகி ,
“ அதுனால என்னங்க !ஜோசியர் அய்யா சொன்ன மாதிரி அடுத்த வருஷமே முடிச்சிடலாம்.நமக்கும் நல்லது
தானே ! “ என அத்தனை சுலபமாக பேசியதில் சற்று தெளிந்த சுப்பிரமணியம்,
“ என்ன பேசுற தேவா ? வித்யாகிட்ட கேட்காமல் எப்படி பார்க்கிறது.அவள் எப்படி சம்மதிப்பா ? நல்ல வேலைக்கு போகனும்னு நினைச்சிட்டு இருக்க பொண்ணை கல்யாணத்துக்கு வற்புறுத்துவது தப்பில்லையா ? “
“ இதை ஏங்க இவளோ பெருசா நினைக்கிறீங்க.வித்யா நம்ம பொண்ணு.நம்ம பேச்சை மதிச்சு நடக்கிறவ ! அப்புறம் வேலை,கல்யாணத்துக்கு பின் பையன் வீட்டில் சம்மதிச்சா போகட்டும்.
கடைசி வருஷம் பையன் வீட்டிலிருந்து படிக்கட்டும்.இதை மட்டும் சொல்லியே வரன் தேடுவோம் “
“ எதுக்கும் வித்யாகிட்ட ஒருவார்த்தை சொல்லிடலாம் தேவா “
“ அட என்னங்க நீங்க? உடனேவா வரன் வர போகுது.இனிதான் ஜாதகம் எழுதணும்.அப்புறம் அந்தா இந்தானு மாப்பிள்ளை பார்த்து முடிக்க,ஒரு வருஷம் ஆகிடும்.அதுவரை வித்யா மனசுல எந்த தடையுமில்லாமல் படிக்கட்டும்.நல்ல வரன் அமைந்து அவங்க பார்க்க வரேன் சொல்லும் போது பாப்பாக்கிட்ட சொல்லிடலாம் “
“ இது சரிவருமா தேவா ?”
“ அதெல்லாம் வரும்..வித்யா நம்ம பொண்ணு.கல்யாணம் விஷயத்தில் நடப்பை சொன்னால் ஏத்துக்கப் போகிறாள் “
என்ற தேவகி ,அதே சூட்டோடு சுப்ரமணியத்தை மகளின் திருமண ஜாதக குறிப்பு எழுதிவர அனுப்பியிருந்தார்.
வருடம் 2015, கும்பகோணம் :
“அம்மா ஃபிரண்ட்ஸ்க்கு என் பெர்த்டே ட்ரீட் வைக்கணும் ஆயிரம் ரூபாய் வேணும்மா”
என்ற யுவனின் குரல் பார்வதியை அடையும் முன் வீட்டினுள் நுழைந்த விஸ்வநாதனை அடைந்திருந்தது.அதில் திருதிருத்த
பார்வதி மருண்டு விழிக்க,யுவனோ யாரையும் கண்டுக் கொள்ளாது அடுத்த பணியாக உணவுன்ன துவங்கியிருந்தான்.
“படிச்சு முடிச்சு நாலு வருஷமாகுது ஒரு நிலையான வேலையில்லை.கடைக்கு வந்தாலும் உருப்படியா வியாபாரம் பார்க்கிறதில்லை. இதுல சார் ஃபிரண்ட்ஸ்க்கு
ட்ரீட் வைக்கணுமாக்கோம்.அப்படி என்ன சார் சாதிச்சிட்டாராம் பிறந்தநாள் கொண்டாடுறதுக்கு”
என்ற விஸ்வநாதனின் கேள்விக்கு ,
“இவர் கூட நான் இத்தனை வருஷம் வாழ்ந்ததே சாதனை தான்னு எடுத்துச் சொல்லுமா “ என்ற யுவன் அன்னையிடம் ஜாடை காட்டி சிரிக்க,அவரோ மகனுக்கும் கணவருக்கும் இடையே அல்லாடிக்
கொண்டிருந்தார்.கூடவே மகனை கண் ஜாடையில் மிரட்டியவர்,கணவருக்கு தண்ணீர் நிறைந்த சொம்பை நீட்டியபடி பேச்சைத் துவங்கினார்.
“ நம்ம யுவனுக்கும் வயசு ஏறிட்டே போகுது.கல்யாண வயசு வந்திடுச்சுனு சொல்லாத ஜோசியர் இல்லை.ஆனா,நம்ம தான் இன்னும் ஜாதக குறிப்பு கூட எழுதாமல் இருக்கோம் “
“ உம்ம்..ஜாதக குறிப்பு .அதுல உங்க மகனுக்கு என்ன உத்தியோகம்னு போடுவ ? தண்டச்சோறுனா ?”
என்ற விஷ்வனாதனின் குரலுக்கு ராதா குலுங்கி சிரிக்க,பார்வதியோ விடாது தொடர்ந்தார்.
“இது என்ன பேச்சு.அவனுக்கு படிப்பில்லையா? தொழிலில்லையா ? தட்டுத்தடுமாறி கரையேறியிருந்தாலும் அவன் பி.ஈ பாஸ் அப்புறம் தொழில் உங்களுக்கு அப்புறம் அவனுக்கு தான்.இப்படி எல்லாமிருக்க என் பையன் எந்த வகையில் குறைஞ்சு போயிட்டான்.
பேசாமல் ஜோசியர் சொல்படி அவனுக்கு கல்யாணத்தை முடிங்க.என் பையன் நல்லா பொறுப்பா வருவான் “
என்ற பார்வதியின் சற்று அதிர்ந்த பேச்சில் அவரது வார்த்தைகளை மௌனமாக ஏற்றுக் கொண்ட விஸ்வநாதன்,அனைத்து ஜோசியர்கள் சொன்னதை அசைபோட்டபடி நகர்ந்தார் .
ஒன்றல்ல ரெண்டல்ல கிட்டத்தட்ட ஐந்து ஜோதிடர்களும் சொல்லி வைத்தாற்போல் ,
‘ அடுத்த வருஷத்துக்குள்ள தம்பிக்கு கல்யாணத்தை முடிங்க நாதன்.பையனுக்கு இது தான் கல்யாண நேரம். திருமணத்திற்கு பிறகு நீங்க நினைக்கிற மாதிரி நல்ல பொறுப்புடன் இருப்பான்.தாமதிக்காமல் இப்போவே பார்க்க ஆரம்பிங்க,அப்போதான் விரைவில் திருமணம் முடியும் ‘
இந்த பேச்சு விஸ்வநாதன் மனதில் மட்டுமல்ல யுவனின் மனதிலும் ஓடிக் கொண்டுதானிருக்கறது.வீடு துவங்கி கடை வரை விஸ்வநாதன் யாரிடம் குறைபாட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே வரி,
“அவனுக்கு கல்யாணம் பண்ணி வைபா!அதெல்லாம் அவன் நல்ல படியா வாழ்ந்திடுவான். “
காதில் விழுந்த வரியை மனதோடு பதிந்து போக,திருமணம் செய்து கொண்டால் வீடு, சமூகத்தில் மரியாதை மற்றும் பெரு வாழ்வு கிடைக்குமென நம்பிக் கொண்டான்
யுவன்.
*******
சூரியனுக்கு இந்தியாவில் ரெண்டே ரெண்டு இடத்தில் தான் கோயில் உள்ளது.அதிலும் உருவ வழிபாடு திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் மட்டுமே உண்டு.நவகிரகங்களை ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவக்கிரகமே மூலதனமாக கொண்ட கோயில் இது மட்டுமே.அத்தகைய கோயிலுக்கு தான் தற்பொழுது யுவன் குடும்பத்தினர் வந்திருந்தனர்.பார்வதி,விரைவில் இரு மக்கட்செல்வத்தின் திருமணம் முடிந்தால் இக்கோவிலுக்கு அவர்களுடன் வருவதாக வேண்டியிருந்தார்.அதற்கான காலம் இத்தனை வருடத்தில் கிடைக்காது போக, தற்பொழுது அனைவரிடமும் சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் .
வித்யாவிற்கு மனதோடு ஆயிரம் காயங்கள் இருந்தாலும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை .
மனதோடு , ‘ யுவனுக்காக’ என்று சொல்லிக் கொண்டவள்.தற்பொழுதும் அமைதியாக யுவனை பின்தொடர்ந்தாள்.வருகின்ற வழியில் யாழை மையப்படுத்தி இவளிடம் பலமுறை ராதா பேச முயற்சிக்க, சிரிப்புடனே அவள் முயற்சியை எட்டி நிறுத்தியிருந்தாள் .
மூச்சினை இழுத்து விட்டவன்,வித்யா பக்கம் திரும்பி
“ உனக்கு இங்க இருக்க பிடிக்கலைனா சொல்லு இப்போவே கிளம்பிடலாம்”
என்றதில் , ‘ அதை இப்போ கேட்கிற ? ’ என்ற அர்த்தத்தில் அவனை முறைத்தவள் அவனிடமிருந்து விலகி நடக்கலானாள்.பின் பார்வதியின் ஆசையின் பேரில் அனைவரும் சூரியனார் கோயிலுக்கு சென்றனர்.
அதுவரை வித்யாவிடம் பேசாத பார்வதி,திடீரென அனைவர் முன்னிலையிலும்,
“ இந்த கோவிலில் நேந்திகிட்டா வேண்டின வரம் உடனே கிடைக்குமாம்.நான் எனக்கு பேரப்பிள்ளை வேணும்னு நேந்திகிட்டேன்.அதுக்கு மடிக்கிட்டு பிள்ளை சுமக்க போறவ தான் கோவிலை வலம் வரணும்.அதனால
வா! வந்து மடி கட்டிகிட்டு அடிப்ரத்தச்சனம் பண்ணிட்டு வந்திடு!”
என்று அதிகார குரலில் கூறியிருந்தார். அதில்,’யாரை சொல்கிறார் ’ என அனைவரும் குழம்ப,பின் அவர் பார்வையும் பேச்சும் வித்யாவிடம் இருப்பதை கண்டுக்கொண்டு, அவளை நோக்கி அனைவரும் துளைக்கும் பார்வை பார்க்க,ஒரு நொடி வித்யா வெலவெலத்துப் போனாள்.
உறவுகளின் துளைக்கும் பார்வை, அதன் பின் மறைந்திருக்கும் ‘ உனக்குத் தான குழந்தை இல்லை !’ என்ற பொருள் அவளை நடுங்க வைத்தது.நடுக்கத்துக்கு பிடிமானம் தேடி அவள் யுவனை பார்க்க,அவனோ மடி நிரப்பும் பொருட்களோடு அன்னையின் பின் நின்றிருந்தான்.பார்த்தவள் கண்களில் நொடியில் கண்ணீர் கூடிக் கொண்டது.
அன்பாக,’ உனக்கான வேண்டுதல்! ‘ என்றிருந்தால் கூட பரவாயில்லை.
யாரோ போன்ற பார்வை,நீ எனக்கு அந்நியமே என்று எட்டி நிறுத்தும் விதம்,அதனுடன் உணவு உண்ண கூட அழைக்காத அவரது கவனிப்பு மற்றும் ராதா குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பார்வையில் ,’உனக்கு தான குழந்தை இல்லை!நீயே கோவிலை சுற்றி வா’ என்று கோடிட்டு காட்டிய இடம் பெரிதாக வலிக்கச் செய்தது என்றால் யுவன் நின்ற இடம் இதயத்தை பெரும் பாரமாக அழுத்தியது.அதில் உண்டான கோபம்,ஆத்திரம்,வெறுப்பு அனைவரது பார்வையும் தன்னிலிருந்து மாற்ற வேண்டும் என்ற வேகத்தில்,
“குழந்தை வரம் எனக்கு மட்டுமா வேணும்.உங்க பையனுக்கும் தான!அவரையும் என்கூட மடிக்கட்டிகிட்டு சுத்தி வரச் சொல்லுங்க “
என்று வித்யா கூறியிருக்க,இப்பொழுது அரண்டு விழிப்பது பார்வதியின் முறையானது.
நீரும் நீ
நெருப்பும் நீ !
பெருங்காதலால் தள்ளி நிற்கிறேன்
தணிந்து எழுவேனா !
தகித்து மடிவேனா !
- வித்(யா) யுவன்
-தொடரும்
கதையின் கருத்துத் திரி