அத்தியாயம் 31:
அன்றிரவு நித்திலா கண்விழித்துப் பார்க்கும் போது முதலில் என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பார்த்தவள் ஒருவேளை சொர்க்கத்துக்கு வந்து விட்டோமோ என்று நினைத்து திரும்ப எதிரில் உட்கார்ந்திருந்த ராட்சஷனை கண்டு ஒருகணம் அரண்டு தான் போனாள்.
ஒருவேளை நரகமோ!!
ஈர உடலுடன், கோவைப்பழமென சிவந்திருந்த விழிகளால் அவளை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் ஆதி.. நித்திலாவுக்கு பயத்தில் முதுகுத்தண்டு ஜில்லிட்டது.. கொஞ்ச நேரத்துக்கு முன்பு மோகத்துடன் அவளை மொய்த்த கண்கள் இப்போது நெருப்பை கக்கியது..
தன் சுட்டெரிக்கும் பார்வையால் அவளது அசைவுகளையே அளவிட்டுக் கொண்டிருந்தவன் அவள் முழுமையாக சுயநினைவுக்கு வந்துவிட்டதை உணர்ந்ததும் அருகில் இருந்த மாற்றுத்துணியை எடுத்து அவள் முகத்தில் வீசியெறிந்துவிட்டு அடுத்த நொடியே அந்த கேபினை விட்டு வெளியாகி இருந்தான்.
அதன்பிறகு தான் நித்திலாவினால் மூச்சுவிட முடிந்தது. அவன் சென்றதும் எழுந்து ஈர உடைகளை களைந்துவிட்டு மாற்று உடைகளை அணிந்து கொண்டாள்.
அவள் வெளியே வந்து பார்த்தபோது ஆதியை காணவில்லை. ஜெகன்தான் நின்றிருந்தான். அவளை அந்த போட்டிலிருந்து இறங்க உதவி செய்தவன் காரை நோக்கி அழைத்துச் சென்றான்.
ஆதி காருக்குள் உட்கார்ந்திருந்தான்.. அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அவள் இதுவரை பார்த்திராதது...
நித்திலா ஏறியதும் கார் சாலையில் சீறிப்பாய்ந்தது….
வீட்டின் போர்டிகோவில் காரை நிறுத்தியவன் அவள் இறங்காமல் உட்கார்ந்திருக்கவும் “இறங்குடி...” அவள் முகம் பார்க்காமல் உறுமினான்.
அதன்பிறகு தான் வீடு வந்துவிட்டதை உணர்ந்து அடித்து பிடித்து இறங்கியவள் விட்டால் போதும் என்று வீட்டுக்குள் ஓடினாள்.
அவளை வழிமறித்த மித்ரா “எங்க போயிருந்தீங்க இவ்வளவு நேரமா...???” “உன் ஹேர் ஏன் நனைஞ்சிருக்கு...??” “எங்கே உன் ட்ரெஸ்???” “உன் வாய்ல என்ன காயம்??...” என்று கேள்விகளை அடுக்க அத்தனை நேரம் இருந்த நடுக்கம் மறைந்து கோபமாக அவளை ஏறிட்டாள் நித்திலா..
“கேட்குறேன்ல... என்ன நடந்துச்சு...????” என்றாள் மித்ரா பொறுமையிழந்து....
“ம்ம்ம்.... நீங்க எது நடந்திருக்கும்னு நினைச்சி இத்தனையும் கேட்குறீங்களோ அதுதான் நடந்துச்சி...” என்றாள் இவளும் பதிலுக்கு..
அதில் நித்திலாவை ஏளனமாக பார்த்தவள் “யாரு... தேவ்??? உன்ன??? ஹாஹாஹா.... நித்து பாப்பாவுக்கு அந்த மாதிரி ஆசைலாம் வேற இருக்கா... முழிச்சிக்கிட்டே கனவு காணாம போய் தூங்கு போ...” நக்கலாக கூறிவிட்டு சென்றாள்.
அவர்களது ரிசப்ஷன் முடிந்த மறுநாளே குடும்பத்தினர் அனைவரும் சென்னை சென்று விட்டனர்.. சௌர்யாவும் அமெரிக்கா போய்விட்டான்..
நிர்மலாதான் பேத்தியை விட்டு செல்ல மனமில்லாததால் கொஞ்ச நாளைக்கு மும்பையில் இருந்துவிட்டு வருவதாக கூறி டேரா போட்டுவிட விஸ்வநாதனும் மனைவியுடன் தங்கிவிட்டார். மித்ராவும் கிளம்பாமல் அங்கேயே தங்கிக் கொண்டாள்.
அதன்பிறகு வந்த நாட்களில் ஆதி நித்திலாவின் பக்கமே வருவதில்லை.. ராப்பகலாக மித்ரா ஆதியுடன் ஒட்டிக்கொண்டு சுற்றித்திரிந்தாள்.. நித்திலா என்ற ஒருத்தி அந்த வீட்டிலே இல்லாதது போல் நடந்து கொண்டார்கள்.
இதில் நிர்மலா வேறு எப்போதும் பேத்தியை தன்னுடனே வைத்துக் கொண்டார்.. மூச்சுக்கு முன்னூறு தடவை நித்திலா, நித்திலா என்று எதற்கெடுத்தாலும் அவளையே அழைத்துக் கொண்டிருப்பார்.. அவளுக்கு ஆதியின் பக்கம் செல்லவே அவகாசம் கொடுப்பதில்லை.
நித்திலா பாட்டியை கவனித்துக் கொள்ள மித்ரா ஆதியை கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை அவனுடைய அத்தனை வேலைகளையும் மித்ரா பார்த்து பார்த்து செய்தாள்.
அதைக்கூட பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்ட நித்திலா அவன் இரவுகளில் தாமதமாக வந்துவிட்டு மித்ராவின் அறைக்குள் சென்று உறங்குவதை கண்டதும் அவளுக்கு வெறியே வந்துவிட்டது.
###################################
“இந்த ஓடுகாலி பெத்த பொண்ண கொண்டு வந்து இப்படி நடு வீட்டுக்குள்ள வெச்சிருக்கீங்களே.... இந்த வீடு விளங்குமா....” எட்டு ஊருக்கு கேட்கும் வண்ணம் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் விசாலாட்சி.. அர்ஜுனின் பாட்டி..
அந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் உட்பட அனைவரும் அவளை ஏளனமாக பார்ப்பதை கண்டு மீராவுக்கு அவமானத்தில் பூமிக்குள் புதைந்து விடலாம் போல இருந்தது..
“அத்தை... என்னதான் இருந்தாலும் அவ இந்த வீட்டு மருமக... நீங்க எல்லார் முன்னாடியும் அவள இந்த மாதிரி பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல....” சரஸ்வதி கூற,
“அதுசரி... நீ என் மகன மயக்கி ரெண்டாம் தாரமா வாழ்க்கப்பட்டு வந்தவதானே... நீ எப்படி அவள விட்டுக்கொடுப்ப... என் மருமக மட்டும் உயிரோட இருந்திருந்தா உங்கள மாதிரி அன்றாடங்காய்ச்சிங்க எல்லாம் இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சிருப்பீங்களா... எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு அந்த மகராசி போய் சேர்ந்துட்டாளே....”
அதற்குமேல் சரஸ்வதி வாய் திறக்கவில்லை.. மீராவுக்காக பேசப்போனால் அவளையே கேவலப்படுத்தி விடுவார்.. அவர் சரஸ்வதியை தரக்குறைவாக பேசுவதை பொறுக்க முடியாமல்தான் ஊரிலுள்ள தன் தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார் வரதராஜன்..
இப்போது மகனது மரணத்திற்கு வந்திருந்தவர் திரும்பிச் செல்லாமல் இங்கேயே உட்கார்ந்து கொண்டு இரண்டு பெண்களையும் தன் நாவினால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தார்.
சரஸ்வதிக்காவது கொஞ்சம் பரவாயில்லை... அர்ஜுன் வீட்டில் இருக்கும்போது சரஸ்வதியை ஏதாவது பேசினால் பாட்டியை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவான்.. மீராவின் நிலைதான் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. மீராவுக்காக ஒற்றை வார்த்தை பேசக்கூட அந்த வீட்டில் ஆள் இல்லை..
சில சமயங்களில் விசாலாட்சி மீராவை அவமானப்படுத்தி பேசும் போது அவளை ஏளனமாக பார்ப்பான் அர்ஜுன். அந்தப் பார்வையில் கூனிக்குறுகிப் போவாள் மீரா.
அன்று சரஸ்வதிக்கு உடம்புக்கு சற்று முடியாமல் போனதால் தான் சமைப்பதாக கூறி மீராதான் சமைத்திருந்தாள். முதல் முதலாக அந்த வீட்டில் அன்றுதான் சமைக்கிறாள்.. ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து சமைத்து வைத்தாள்.
அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதி பரிமாறினார். மீரா அவன் எதிரில் வருவது கூட கிடையாது. அவனுக்காக ஆசையாக சமைத்தது அவன் அதை ரசித்து சாப்பிடுவதை சமயலறை கதவோரமாக மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்..
“என்னம்மா... இன்னைக்கு மெனு ரொம்ப ஸ்பெஷலா இருக்கே.....” என்றான்..
“நல்லாயிருக்கா அர்ஜுன்...”
“ம்ம்ம்.... ரொம்ப நல்லாருக்கு...”
மறைந்து நிற்கும் மருமகளை பார்த்து சிரித்தார் சரஸ்வதி.. அவளும் பதிலுக்கு அவரை பார்த்து லேசான வெட்கத்துடன் சிரித்து வைத்தாள்..
“நம்ம மீராதான்ப்பா சமைச்சா... உனக்கு என்ன எல்லாம் பிடிக்கும்னு சிவா கிட்ட கேட்டு அத்தனையும் பண்ணினா தெரியுமா...”
அவர் மீராவின் பெயரை சொன்னதுமே அவன் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல் ஆகிவிட்டது.. பாதி சாப்பாட்டிலேயே கை கழுவிவிட்டு எழுந்துவிட்டான்..
“ஐயோ!!! என்னப்பா இது சாப்பாட்டுல கைகழுவிட்ட...” சரஸ்வதி பதறிப்போய் கேட்க “இனிமேல் எது சமைக்கிறதா இருந்தாலும் ஒன்னு நீங்க சமைங்க... உங்களால முடியலன்னா வேலைக்காரங்ககிட்ட சமைக்க சொல்லுங்க..” கோபமாகக் கூறியவன் சாப்பிடாமலே வீட்டை விட்டு சென்று விட்டான்..
அவனது செய்கையால் கண்களில் நீர் வழிய கதவோரம் நின்ற மீராவை பார்த்தவர் “நான்தான் அப்பவே சொன்னேன்ல வேலைக்காரி சமைக்கட்டும்னு... இப்ப உனக்கு திருப்தியா...” என்றார் சரஸ்வதி கோபமாக... மகன் சாப்பிடாமல் போய்விட்டானே என்ற கவலை அவருக்கு..
அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக சற்று நேரத்துடனே வீட்டுக்கு வந்துவிட்டான் அர்ஜுன்.. ஃபோனை கட்டிலில் போட்டுவிட்டு அவன் குளியலறைக்கு புகுந்துவிட மீரா அப்போதுதான் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் கிடந்த ஃபோன் அடிக்கவும் தற்செயலாக அதனை பார்க்க நிலா என்ற பெயரில் அழகிய ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது அவளது கணவனின் அலைப்பேசி..
ஃபோனில் தெரியும் அந்த பெண்ணின் உருவத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மீரா. அவள் யார் என்று உணர்ந்ததும் இவள் உடல் விறைத்தது.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் தன்னுடைய அலைப்பேசியில் நித்திலாவின் அழைப்பை கண்டதும் முகம் மலர அதை எடுத்து ஆன் செய்தவன் “நித்திலா..” என்று என்று வார்த்தைக்கு வலிக்காத வண்ணம் அவள் பெயரை மென்மையாக உச்சரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான்.
செல்லும் அவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள் மீரா. திரும்பி கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்.. அவளும் அழகாக இருப்பதை போல் தான் தோன்றியது.. ஆனால் நித்திலாவுடன் ஒப்பிடும் போது அவளது அழகு சற்று பின்னுக்குச் சென்றுவிடும்... தாழ்வு மனப்பான்மையில் அவள் மனம் நைந்தது.
###########################
“சோ நித்திலா மேல இருக்கிற பாசத்துல உங்க பாஸ்க்கு துரோகம் பண்ணிருக்கீங்க.... அப்படித்தான…”
தன் எதிரில் அழுத்தமான பார்வையுடன் உட்கார்ந்திருந்தவனை கண்டு எச்சில் கூட்டி விழுங்கினான் வருண்.. அந்த ஏஸி குளிரிலும் அவனுக்கு வியர்த்து வழிந்தது..
“சார்.... நான்....... நான்....” பேச வார்த்தை வராமல் திக்கித்திணறினான்..
“சொல்லுங்க மிஸ்டர் வருண்... நீங்க...”
“சார்... ஐம் ஐம் சாரி சார்....” வருணுக்கு அழுகையே வந்துவிட்டது... “நான் முதல்ல முடியாதுனு தான் சொன்னேன்... நித்திலா கேட்கவும்தான் வேற வழியில்லாம அவங்களுக்கு ஹெல்ப் பண்ண சம்மதிச்சேன்...”
“நித்திலா!!!... ஹாஹாஹா.....” வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன் பின்பு குரலில் தீவிரத்துடன் “அவ கேட்டான்னு நான் ஜெகன வெச்சி மித்ராவ தூக்க ப்ளான் போட்டத சொல்லிருக்கீங்க... அப்படி என்ன உங்களுக்கு நித்திலா மேல அவ்வளவு அக்கறை... அவ புருஷன் எனக்கே இல்லாத அக்கறை...” வேண்டுமென்றே கேட்டான்.
வருணுக்கு நன்றாகவே தெரியும்.. ஆதி யாரையாவது காயப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நாக்கில் நரம்பே இல்லாமல் பேசுவான்..
“சார்...” என்று அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டவன் “நித்திலா எனக்கு தங்கச்சி மாதிரி... அந்த பாசத்துல உங்கள பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. எனக்கு வேற எந்த நோக்கமும் கிடையாது சார்... என் அம்மா மேல சத்தியம்..”
“வருண் உனக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும்... என் எதிரியை கூட விட்டு வைப்பேன்... ஆனா துரோகி....” நிறுத்திவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தவன் “இப்ப சொல்லு வருண்... இத்தனை நாளா என் கூடவே இருந்து குழிப் பறிச்சிருக்க,,, உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்....” பிசிர் தட்டாமல் ஒலித்தது அவன் குரல்.
வருண் தலையை குனிந்து கொண்டான்.. ஆதி அவனுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள அவன் தயாராகத்தான் இருந்தான்... ஆனால் இப்போது அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது.. அவனுக்கு எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படப் போவது அவனது குடும்பம் தான்.
குனிந்திருந்த அவன் தலையை பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் “ஆல்ரைட்... தெரிஞ்சோ தெரியாமலோ ஏதோ ஒரு விதத்துல நீ எனக்கு நல்லதுதான் பண்ணிருக்க... அந்த ஒரே காரணத்துக்காக உன்ன விட்டு வைக்கிறேன்… இனிமேல் உனக்கு இங்க எந்த வேலையும் கிடையாது.. என் ஃப்ரென்ட் ஷியாம் கிட்ட இருந்து ஆஃபர் வரும்... அங்க போய் ஜாயின் பண்ணிக்க... அவுட்...”
அத்துடன் பேச்சு முடிந்தது என்பதுபோல் அவன் தன் லேப்டாப்பில் மூழ்கிவிட மிகுந்த குற்றவுணர்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறினான் வருண்.. சௌர்யாவுக்கு அழைத்து விடயத்தை கூறியவன் இதற்குமேல் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான்..
இரவு மிகவும் தாமதமாக வீடு வந்து சேர்ந்தான் ஆதி... அவனுடைய வேலைகளில் பாதியை வருண்தான் முடித்து வைப்பான்.. இன்று அவனை விரட்டி விட்டதால் அதிக வேலைப்பழுவின் காரணமாக சோர்ந்து போய் காணப்பட்டான்..
அவன் வீட்டுக்குள் நுழைவதை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா..
அத்தனை நேரம் சோபாவில் ஆதிக்காக காத்திருந்த மித்ரா அவனை தன்னுடைய அறைக்குள் அழைத்து சென்றாள்.
அவர்கள் இருவரும் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டதை கண்டதும் கடுப்பானவள் இன்றே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவளாக கீழே சென்றாள்.
நித்திலா மித்ராவின் அறையை அடைந்ததும் கதவை தட்டுவதற்காக பார்க்க அதே நேரம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மித்ரா... நித்திலாவை கண்டு அதிர்ந்தவள் பின்பு “உனக்கு வெட்கமா இல்ல... அடுத்தவங்க ரூம்ல வந்து ஒட்டுக்கேட்கிற... சை...” என்றாள் அருவருப்புடன்.
அவளது அபாண்டமான பேச்சில் கோபம் கரையுடைக்க “ஆமா... நான் ஒட்டுக்கேட்க மட்டும்தான் செஞ்சேன்... அடுத்தவங்க ஹஸ்பென்ட கூப்பிட்டு என் ரூம்ல வெச்சிக்கல்ல...” என்றாள் இவளும் பதிலுக்கு...
“என்னடீ சொன்ன...” என்று மித்ரா விட்ட அறையில் நித்திலா தடுமாறி நிற்க அதே சமயம் மித்ராவின் கன்னத்தில் இடியாக இறங்கியது இன்னொரு கை..
“எவ்வளவு தைரியம் இருந்தா என் பேத்தி மேல கை வைப்ப..” ஆக்ரோஷத்துடன் அங்கு நின்றிருந்தார் நிர்மலாதேவி..
அடிபட்ட வேகத்தில் விழப்போனவளை தாங்கி பிடித்த ஆதி பாட்டியை பார்த்து பல்லைக் கடித்தான். மித்ரா ஆதியை கண்டதும் “தேவ்... இவ என்ன பார்த்து...” என்று நித்திலாவை சுட்டிக்காட்டி ஆரம்பிக்க ‘தெரியும்’ என்பது போல் தலையாட்டியவன் அவளை அணைத்துக் கொண்டான்.
அதற்குள் விஸ்வநாதன், சாரதா சத்தம் கேட்டு அங்கு வந்துவிட மித்ராவை தன் கைவளைவில் வைத்துக் கொண்டே “தாத்தா... இனி ஒரு நிமிஷம் கூட உங்க பொண்டாட்டி என் வீட்டுல இருக்கக் கூடாது...” என்க,,, “ஆதி....” என்று அதிர்ந்து போய் மகனை பார்த்தாள் சாரதா..
விஸ்வநாதன் ‘என்ன இதெல்லாம்’ என்பதுபோல் மனைவியையும் பேரனையும் பார்த்தார்.
“என்ன பேசுற ஆதி... அவங்க என் அம்மா... இன்னொரு தடவை அவங்கள இப்படி மரியாதை இல்லாம பேசின நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டேன்...” என்றாள் சாரதா கோபமாக..
அன்னையை கண்டு கொள்ளாமல் தாத்தாவை நோக்கியவன் “அவங்கள மித்ராகிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க... இல்லைன்னா இப்பவே என் வீட்டை விட்டு வெளிய போக சொல்லுங்க...” என்றான்.
நிர்மலா வெறுப்புடன் பேரனை ஏறிட்டார்..
“என்னடா பேசுற.. இவகிட்ட எங்கம்மா மன்னிப்பு கேட்கனுமா... முதல்ல இவள வீட்டை விட்டு வெளிய அனுப்பு...” அவனது பேச்சில் சாரதாவுக்கே பயங்கர ஆத்திரம் வந்துவிட்டது. “ஏய் மித்ரா... நீ காலையில முதல் வேலையா ஊருக்கு கிளம்புற.. இல்லைனா உன்ன பத்தி நான் தனாகிட்ட சொல்ல வேண்டி வரும்...” என்றாள் மித்ராவிடம் மிரட்டலாக.
“இது அவ வீடு...” என்றான் ஆதி “அவங்க அப்பா இல்ல யார் வந்தாலும் அவ இங்க இருந்து போகமாட்டா.. இவங்க இங்க இருக்கனும்னா மித்ராகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும்...”
அவன் மீண்டும் மீண்டும் நிர்மலாவை மன்னிப்பு கேட்க சொன்னதில் ஆத்திரமடைந்த விஸ்வநாதன்,,, என்னதான் இருந்தாலும் அவருடைய மனைவி அல்லவா.... “நிர்மலா.. நீ கிளம்பு...” என்றார் மனைவியை பார்த்து.
“அப்பா... என்னப்பா அவன்தான் அறிவில்லாம பேசுறான்னா நீங்களும் அம்மாவ கிளம்ப சொல்றீங்க...” சாரதா கெஞ்சுவதை பொருட்படுத்தாமல் நிர்மலாவின் கையை பற்றிக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த அறையை நோக்கி சென்றார் விஸ்வநாதன்.
மகனை அடிபட்ட பார்வை பார்த்தாள் சாரதா... அவன் அழுத்தமான பார்வையுடன் மித்ராவை அணைத்தபடி நின்றிருந்தான்.. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி ஒரு முடிவுடன் தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தாள்.
அத்தனையையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா... சாரதாவை பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது.. ஆனாலும் ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை.. அவளுக்கு இதுதானே தேவை... நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக நின்றிருந்தாள்.
நிர்மலாவும் விஸ்வநாதனும் தங்கள், பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு வெளியே வர அதே நேரம் தன்னுடைய உடமைகளையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டாள் சாரதா...
அதைக்கண்டு ஆதியின் முகத்தில் மெல்லிய அதிர்வு தோன்றி மறைந்தது.. மகன் முகத்தையும் பார்க்க பிடிக்காதவளாக மருமகளை நோக்கி வந்தவள் “என் அம்மாவுக்கு இடம் இல்லாத இந்த வீட்டுல நான் மட்டும் எதுக்கு இருக்கனும்...” என்றவள் “வீட்டை பார்த்துக்க..” என்று வீட்டு சாவியை நித்திலாவிடம் ஒப்படைத்தாள்.
அதைக்கண்டு மித்ரா “அத்தை...” என்று எதையோ சொல்லவர அவளது கை பிடித்து தடுத்தான் ஆதி.. “தேவ்... நான் வேணும்னா போயிடுறேன்... அத்தைய போக வேண்டாம்னு சொல்லு...” என்றாள்..
“அவங்களுக்கு அவங்க பையனவிட அவங்க அம்மாதான் முக்கியம்னா தாராளமா போகட்டும்..” என்றான் குரலும் முகமும் இறுக.
நிர்மலா பேத்தியை நெருங்கியவர் “நீயும் வந்திடு... இங்க இருக்க வேண்டாம்..” என்க... அழுதிருப்பார் போல.. அவரது கண்கள் இரண்டும் கலங்கி சிவந்திருந்தது.
“நீங்க போங்க பாட்டி... நான் கண்டிப்பா வருவேன்..” நித்திலா அவரது கையை பற்றிக்கொண்டு கூறினாள்.. அவளது பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் மேற்கொண்டு அவளை வற்புறுத்தாமல் “பத்திரமா இருந்துக்க...” என்று மட்டும் சொன்னவர் விறுவிறுவென்று வெளியேறிவிட்டார்..
பெரியவர்கள் கிளம்பிவிட இப்போது எஞ்சியிருந்தது ஆதி, மித்ரா, நித்திலா மூவர் மட்டுமே...
ஆதி இறுகிய முகத்துடன் அறைக்குள் செல்ல நித்திலாவை வெறுப்புடன் பார்த்த மித்ரா “இப்ப உனக்கு சந்தோசமா... இதுக்கெல்லாம் இருக்குடி உனக்கு....” என்றுவிட்டு கதவை படாரென்று அடைத்தாள்.
மூடிய கதவை பார்த்தவள் “பாட்டிய தூக்கியாச்சி... அடுத்து நீதான்...” என்று மெல்ல சிரித்தாள் நித்திலா.
மறுநாள் காலை உணவுக்காக நித்திலா டைனிங் டேபிளை நோக்கி செல்ல அங்கு ஏற்கனவே மித்ரா ஆதிக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்...
‘நான் செய்ய வேண்டியதெல்லாம் இவ செய்றா...’ என்று நினைத்தாலும் தோளைக் குலுக்கிக் கொண்டு உட்கார்ந்தவள் வாயை மூடிக்கொண்டு வந்த வேலையை மட்டும் பார்த்திருக்கலாம்...
வேண்டுமென்றே அவர்களை கடுப்பேற்றுவதற்காக “அத்தை இல்லாம வீடே என்னமோ மாதிரி இருக்கு...” என்க ஆதியின் உடல் விறைத்தது.
அவனது தோளில் கைவைத்த மித்ரா “அவ வேணும்னு பேசுறா... நீ சாப்பிடு தேவ்...” என்றாள் அவனை சமாதானப்படுத்தும் விதமாக.
“அத்தை எவ்வளவு டேஸ்ட்டா சமைப்பாங்க இல்ல மித்ராக்கா... இப்போ இப்படி வேலைக்காரங்க சமையல் சாப்பிட வேண்டி ஆகிடுச்சே... ஐயோ பாவம் காலம் போன காலத்துல நம்ம நிலமை இப்படியா ஆகனும்...” சாப்பிட்டிக் கொண்டருக்கும் ஆதியை பார்த்துக் கொண்டே கூற அவ்வளவு தான் தட்டை உதறித்தள்ளிவிட்டு எழுந்துவிட்டான்.
அவன் எழுந்த வேகத்தில் இருக்கை ‘தடார்’ என்ற சத்தத்துடன் தரையில் விழ நித்திலாவை நெருங்கியவன் அவளது கழுத்தை பிடித்து நெரிக்க அவளுக்கு மூச்சு முட்டி விழி பிதுங்கியது.
மித்ரா பயத்தில் ஆதியின் கையை பிடித்தவள் “தேவ் அவள விடு செத்து கித்து தொலைச்சிட போறா...” என்றாள்..
“இவ சாகட்டும்டி... இவ இருக்கிறதுனால தான் அத்தன பிரச்சினையும்...” அவன் பிடி இறுகிக்கொண்டே சென்றது.
இன்னும் ஓரிரு நிமிடங்களில் அவளது உயிர் பிரிந்துவிடும் என்ற நிலையில் அவளை விடுவித்தவன் இருக்கையில் விழுந்து இருமிக் கொண்டிருந்தவளை நோக்கி குனிந்து “இன்னொரு தடவ என் முன்னாடி உன் வாய திறந்த,,, உன் உடம்புல உயிர் இருக்காது...” ஒற்றை விரல் நீட்டி வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து சென்றான்.
###############################
கட்டிலில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த முகேஷை உணர்ச்சிகளற்ற முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரன்வீர்... அவன் முகேஷின் சகோதரியின் மகன்.. அவரது தொழில் அனைத்தையும் அவன்தான் பார்த்துக் கொள்கிறான். முகேஷ் அளவுக்கு ரன்வீரின் குடும்பம் வசதியானது அல்ல என்பதால் அவனை தனக்கு கீழ் வேலைக்கு வைத்துக் கொண்டதோடு சரி.. உறவு சொல்லிக் கொண்டாடுவதில்லை..
“மாமாவ பாரு ரன்வீர்... எப்படி இருந்த மனுஷன் இப்ப இப்படி பேச்சு மூச்சில்லாம கிடக்குறாரு பார்...” என்று அவனிடம் அழுது கொண்டிருந்தார் முகேஷின் மனைவி.
“இப்ப எதுக்கு அழுது ஒப்பாரி வெச்சிக்கிட்டு இருக்க...” என்று எரிச்சலுடன் கூறினாள் அங்கு வந்த ஜீவிகா.
ரன்வீரை பார்த்தவள் “இதை சும்மா விடவே கூடாது ரன்வீர்... கண்டிப்பா இதுக்கு ஆதி பதில் சொல்லியே ஆகனும்.. என் அப்பாவ இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டு அவன் கல்யாணம், ரிசப்ஷன்னு அந்த நித்திலா கூட சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கான்...” என்றாள் வெஞ்சினத்துடன்..
ரன்வீர் நிதானமாக ஜீவிகாவை நோக்கி திரும்பியவன் “அவன விட்டு வெச்சிருக்கிறதெல்லாம் காரணமாத்தான்... அவனுக்கே தெரியாத அவன் வாழ்க்கைல நடந்த நிறைய விஷயம் எனக்கு தெரியும்... அதை வெச்சே அவன உருத்தெரியாம அழிச்சிடுறேன்... மாமா நல்லபடியா குணமாகி வரும்போது அந்த ஆதி இந்த உலகத்துலயே இருக்க மாட்டான்....” தீவிர முகபாவத்துடன் கூறனான்.
பின்பு மென்மையாக ஜீவிகாவின் தலையை தடவியவன் “நீ ஆதிய கட்டிக்க ஆசைப்பட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இப்பவும் உன் மனசுல அந்த மாதிரி ஆசை இருக்கா ஜீவி...” என்றான் கேள்வியாக..
“இல்ல ரன்வீர்... அவன் உயிரை விட்டாலும் விடுவான்.. அந்த நித்திலாவ மட்டும் யாருக்காகவும் விட்டிக்கொடுக்க மாட்டான்... அது நான் என் கண்ணாலயே பார்த்திருக்கேன்..” அவன் அடித்தது அவளுக்கு இப்போது நினைத்தாலும் உள்ளுக்குள் குளிர் பரவியது..
“ஆஹா... யாருக்காகவும் அவன் பொண்டாட்டிய விட்டு கொடுக்க மாட்டானா....” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவன் “அதையும் பார்த்திடலாம்...” என்றான் மர்ம புன்னகையுடன்.
###########################
யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டுக் கொண்டே ஆதியின் ஆஃபிஸ் ரூமிற்குள் நுழைந்து அவனது லேப்டாப்பில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் நித்திலா..
“இங்க என்ன பண்ற நித்திலா???” என்ற மித்ராவின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் தோளைக் குலுக்கிக்கொண்டு “சும்மாதான்... போர் அடிச்சது அதான் சும்மா பார்க்கலாம்னு வந்தேன்..” என்றாள்.
“சரி சரி... இங்கெல்லாம் வரக்கூடாது முதல்ல வெளிய போ...” என்று சிடுசிடுத்தவள் நித்திலாவை வெளியே தள்ளாத குறையாக விரட்டிவிட்டு கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.
மித்ராவின் கையில் இருந்த சாவியை பார்த்துக் கொண்டே திரும்பிச் சென்றாள் நித்திலா..
அன்றிரவு பயங்கர மழை கொண்டிக் கொண்டிருந்தது.. நித்திலா ஹாலில் உட்கார்ந்திருந்தவள் வேலைக்காரி மித்ராவுக்கு பால் எடுத்து செல்வதை கண்டதும் அதை வாங்கிக் கொண்டவள் தானே மித்ராவிடம் கொடுத்துவிடுவதாக கூறி எடுத்துச் சென்றாள்.
அறையில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த மித்ராவிடம் பாலை கொடுக்க அதை எடுத்துக் கொண்டவள் “இங்க என்ன லுக்.. வெளிய போ...” என்று நித்திலாவை விரட்டிவிட்டாள்.
அவளும் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றுவிட்டாள்.
பாலை குடித்த மித்ராவுக்கு கொஞ்ச நேரத்திலே தலை சுற்றுவதை போல் இருக்க எழுந்து கொள்ள முயற்சித்தவள் அப்படியே தொப்பென்று கட்டிலில் மயங்கி விழுந்தாள்..
அவள் விழுந்ததும் அறைக்குள் நுழைந்த நித்திலா அங்கிருந்த ட்ரோயரை ஒவ்வொன்றாக திறந்து பார்த்து உள்ளிருந்த சாவியை எடுத்துக் கொண்டவள் ஆதியின் ஆஃபிஸ் ரூமிற்குள் நுழைந்தாள்..
ஆதி வீட்டுக்கு வரும்போது வீடே நிசப்தமாக இருந்தது.. வழக்கமாக அவன் வீட்டுக்குள் நுழையும்போதே ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்வாள் மித்ரா.. ஏதோ சரியில்லை என்று நினைத்தவன் மித்ராவின் அறைக்குள் சென்று பார்த்தான்..
உறங்கிக் கொண்டிருந்தாள்...
இவ்வளவு சீக்கிரமாக தூங்க மாட்டாளே உடம்பு சரியில்லையா என்று நினைத்துக் கொண்டு அவளை எழுப்பினான்...
அரை மயக்கத்தில் கண் விழித்தவள் “நித்திலா......” என்று கூறிவிட்டு மீண்டும் மயங்கிவிட இது நித்திலாவின் வேலை என்று புரிந்து கொண்டவன் அவளை கொன்றுவிடும் வேகத்துடன் அவர்களது அறைக்குள் சென்றான்..
அங்கு கட்டிலில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள் அவனது அருமை மனைவி.. புயல் வேகத்தில் அறைக்குள் நுழைந்தவன் கட்டிலை நெருங்கி “ஏய்... மித்ராவ என்னடி பண்ணின...” என்று அவளை பிடித்து உலுக்க அவனை நிதானமாக ஏறிட்டவள் “ரொம்ப பேசினாங்க அதான் பால்ல தூக்க மாத்திரை...” என்று மடங்கியிருந்த தன் விரல்களை அவன் முன்னால் நீட்டி “ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு போட்டு கொடுத்தேன்...” என்றாள்.. .
அதில் ஆத்திரம் தலைக்கேற பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு நொடி பார்த்தவன் அப்படியே குண்டுக்கட்டாக அவளை தூக்கிச் சென்று பால்கனியில் போட்டுவிட்டு உள்ளே வந்து கதவை லாக் செய்து கொண்டான்..
வெளியில் பேய்க் காற்றுடன் மழை பொழிந்து கொண்டிருந்ததில் நித்திலா வெளியே நின்று கதவை திறக்க சொல்லி கத்த கண்ணாடிக் கதவுகளுக்கு இந்த பக்கம் நின்று அவள் குளிரில் அவஸ்தை படுவதை சற்றுநேரம் திருப்தியுடன் பார்த்துக் கொண்டு நின்றவன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
நித்திலா எவ்வளவு கெஞ்சி கதறியும் இரக்கமே இல்லாமல் திரும்பி சென்றவனின் முதுகை வெறித்துப் பார்த்தவள் அப்படியே பால்கனியில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.. குளிர்காற்று உடலை துளைத்துக் கொண்டு சென்றதில் சோபாவில் கால்களை குறுக்கி உட்கார்ந்து துப்பட்டாவினால் உடலை சுற்றி மூடிக் கொண்டாள்.
இடி, மின்னல் பீதியை கிளப்பினாலும் பயப்படக்கூடாது என்று ஒருவித பிடிவாதத்துடன் வெகுநேரம் உட்கார்ந்து இருந்தவள் திடீரென இரு வலிய கரங்கள் அவளை பற்றித்தூக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
குளித்து உடைமாற்றி வந்திருந்தான்.. அவனை முறைத்து பார்த்தவள் எதுவும் பேசாமல் அவன் மார்பில் ஒன்றிக்கொள்ள ஒருநொடி அவன் உடலில் தோன்றி மறைந்த சிலிர்ப்பை அவளால் உணர முடிந்தது..
அவளை தூக்கிச் சென்று மென்மையாக கட்டிலில் கிடத்தியவன் போர்வை எடுத்து கழுத்து வரை போர்த்திவிட்டான்.
அறையை விட்டு வெளியேறப்போனவன் கதவருகே சென்றதும் அவளை ஒருமுறை திரும்பிப் பார்க்க... அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. மீண்டும் அவளை நோக்கி வந்தவன் அவள் முகம் பற்றி இழுத்து முத்தமிட்டான்... பின்பு விழிகள் சிவக்க அவளை விடுவித்தவன் “எதுக்குடி என் மாமாவுக்கு மகளா பொறந்த??” வேதனையுடன் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறியிருந்தான்...
அவன் முகத்தில் தெரிந்த வேதனை அவள் மனதை பிசைய அவள் விழிகள் கலங்கியது... ஆதி நித்திலாவின் அறையில் இருந்து வெளியே வந்தவன் கொட்டும் மழையை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்..
அந்த இரவு அவர்கள் இருவருக்குமே தூங்கா இரவாகிப்போனது...
தொடரும்.........
‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 31 போட்டாச்சு மக்களே..... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
"ஆதியின் நிலா" கதைக்கான கருத்துகளை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.srikalatamilnovel.com