பகுதி 9
அந்த பெரிய ஹோட்டலின் கண்ணாடிக் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் ஆதியின் கண்களில் முதலில் பட்டது மனோதான். வாசலுக்கு வலப்பக்கமாக சற்று உள்ளடங்கிய இடத்தில் ஒரு தூணுக்கு மறைவாக இருந்த மேஜையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரிருந்த இருக்கை காலியாக இருந்தது. ஆனால் மனோதானா? அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததில் அவள் போல் தெரிகிறதா? இருளில் இன்னும் உற்றுப் பார்த்தான். இந்த நேரம் ஏன் இங்கு வந்திருக்கிறாள்.. எப்போதும் கேன்டினில்தான் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறான்.. வேலை அதிகமிருந்தால் எப்போதேனும் தன்னறையிலேயே சாப்பிட்டிருக்கிறாள்.. போய் பேசலாமா?ஆனால் பேசக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறானே?
அவன் எண்ண ஓட்டத்தைத் கலைப்பதாய், "ஹாய் ஆதி!" என்று ஒரு மெல்லிய குரல் தயக்கமாய் வந்தது. உள்ளே வந்ததும் இடதுப்பக்கமாய் இருந்த மேஜைகளில் ஒன்றின் அருகில் நின்றபடி ஒரு பெண் தயக்கமாய் இவனைப் பார்த்து புன்னகைத்தாள். மீனலோசனி..
ஆதி இயல்பாய் சிரித்தபடி அவளை நோக்கிப் போனான், "ஹாய் மீனலோசனி!"
இப்போது மனோவிடம் பேசினால் இங்கே வந்திருக்கும் இந்த பெண்ணிற்கு என்ன மரியாதை? "சாரி.. உங்களை இத்தனை தூரம் வரவைத்தததற்கு.. வேலை கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. அதுதான் டிராவல் டைமைக் கொஞ்சம் குறைக்கலாமே என்று இங்கு வரமுடியுமா என்று கேட்டேன்." இலகுவாய்ப் பேசியபடி அவளை நோக்கி நடந்தவன் அவளை உட்காருமாறு சைகை செய்து விட்டு தானும் அமர்ந்தான்.
மீனலோசனியும் புன்னகைத்து, "எனக்கு இங்கு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. காரில் ஏறி அமர்ந்தால் ஐந்து நிமிடங்களும் அரை மணி நேரமும் ஒன்றுதானே.."
அவளைக் கண்களால் ஆராய்ந்தான். அழகான பெண். அந்த அழகை அழகாக எடுத்துக் காட்டத் தெரிந்த பெண்ணும் கூட.. சும்மாவேனும் வாய்பேச்சிற்காகவும் சொல்லவில்லை. நிஜமாகவே இத்தனை தூரம் பயணம் செய்து பார்க்க வந்ததில் வருத்தம் எதுவும் இல்லை. ரொம்பவும் பொறுமையான பெண்தான். ஆனாலும் முரண்டியது. அதெப்படி ஐந்து நிமிடமும் அரை மணி நேரமும் ஒன்றாகும். மீதியுள்ள இருபத்தைந்து நிமிடங்களில் எத்தனை வேலைகள் செய்யலாம்..
“ஓகே.. ஆர்டர் பண்ணலாமா? நீங்க என்ன சாப்பிடுறீங்க?”
மீனலோசனிக்கு சின்ன சந்தோசம். அவர்கள் வீட்டில் ஹோட்டலில் ஆர்டர் சொல்வது அவளுடைய அப்பா அல்லது அண்ணனது வேலை. அவர்கள் மூடுக்கு ஏற்ப, தாம் தூம் என்றோ, பசிக்கு மட்டுமோ ஆர்டர் பண்ணுவார்கள். ஆதி அப்படி இல்லை. “நீங்க என்ன சாப்பிடுறீங்க? நான் , ரொட்டி இந்த மாதிரியா இல்லை ரைஸ் ஐட்டம்ஸா?”
“ம்.. எனக்கு இப்போதைக்கு ரொட்டி போதாது.. ரைஸ்தான்.. என்று தன்னுடைய உணவை ஆர்டர் செய்துவிட்டு அவள் சொல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்,
சட்டென்று விறைத்தான்.. கதவு வழியாக இப்பொழுது உள்ளே வந்தது சித்தார்த். “நோ..நோ..” ஆதியின் மனம் தனக்குள்ளே கத்திக் கொண்டிருக்க, காதில் ஃபோனை வைத்தபடி வந்தவன், அங்குமிங்கும் திரும்ப மனோ தன் இடத்திலிருந்து எழுந்து கை காட்டினாள். சிரித்தபடி சித்தார்த் சென்று அவளிருந்த மேஜையில் அவள் முன்னமர்ந்தான்.
சித்தார்த் எதையோ சொல்ல முன்னே சாய்ந்து கவனமாகக் கேட்டு பதிலுக்கு மனோ ஏதோ சொல்ல சித்தார்த் சத்தமாய் சிரித்தான்.. ஆதிக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
ஓ.. வெளியே வந்து சாப்பிடும் அளவிற்கு பழக்கமாகி விட்டார்களா.. இந்த ஒரு வருடத்தில் மனோ எப்போதுமே ஒரு கவனத்துடன் தான் ஆதியிடம் பழகியிருக்கிறாள். எப்போதாவது கான்டீனில் இவனே அருகே போய் அமர்ந்தாலும் கண்களில் ஒரு கவனம் வந்துவிடும். இப்போது மட்டும் எந்த கவனமும் இல்லாமல் எத்தனை இயல்பாக இருக்கிறாள்..
“உங்களுக்குத் தெரிந்தவர்களா?”
திரும்பி மீனலோசனியைப் பார்த்தவன் தலையில் மானசீகமாய் தட்டிக் கொண்டான். 'ஆதி.. சொதப்பாதே..',. " ம்.. ஆமாம்.. ஆர்டர் பண்ணிட்டீங்களா?"
"ம்.."
அதற்குப்பின் ஆதியால் எத்தனை முயன்றும் அத்தனை இயல்பாய் பேச முடியவில்லை. முயன்று வருவித்த அமைதியுடன் என்ன பேசுவது என்று யோசித்தான். கல்யாணத்திற்கு என்று பார்த்திருக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை எந்த கேள்விகளை வைத்து கண்டுபிடிக்க முடியும்..சரி.. தெரிந்தவரை ஆரம்பிப்போம்.. எப்படி போகிறதோ அதே போக்கில் போக வேண்டியதுதான்.
“நான் ஆதித்யன்.. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் , எம்.பி.எ முடித்து, எங்கள் தாத்தா ஆரம்பித்த கம்பெனியை என் அப்பா, பெரியப்பாவோடு சேர்ந்து நடத்துகிறேன். நீங்கள்?
"நான் மீனலோசனி. கம்ப்யூட்டர் சயின்சில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். "
அவள் இன்னும் ஏதோ சொல்வாள் என்பது போல் அவன் அவளையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க மீனலோசனியின் முகம் சிவந்தது.. "நான்.. நான் வேலைக்கு போகலை"
"ஏன்?" பெர்சனல் கேள்விதான். இருவரும் ஒருவரை மற்றொருவர் இன்டர்வியு செய்வது போலத் தான் இந்த சந்திப்பு.. இதில் இந்த கேள்விகள்தானே கேட்க முடியும்.
"வேலைக்குப் போய்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று அப்பா சொல்லிட்டாங்க.."
சம்பாதிப்பதற்கு தான் வேலைக்குப் போக வேண்டுமா? "ஓ.." புரிந்தது போல் தலையை ஆட்டினான்.
அவள் சொன்ன காரணத்தை அவன் ஒப்புக் கொள்ளவில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவளுக்கே ஒப்பாகாத ஒன்றை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..
"உங்களுக்கு என்ன பிடிக்கும்?"
“என்ன?”
“வேலை. ஜாப்.. என்ன பிடிக்கும் என்று கேட்டேன்..”
ம்ம்ம்.. சொல்லலாமா.. இதுவரை இதைக் கேட்ட யாருமே கேலி செய்யாமல் இருந்ததில்லை. இத்தனை பெரிய பிஸினஸ் மேன் பெண்ணுக்கு இது என்ன ஆசை என்று.. தன் தந்தையின் மதிப்பிற்கு குறைவான ஆசையோ என்று பல நேரம் இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லாமலே தவிர்த்து விடுவாள். இவனிடம் சொல்வதா? இவனும் ஹாஹா என்று சிரித்துவிட்டால்? அதற்காக வேறு சொல்ல முடியுமா? கொஞ்சம் தயங்கியபடியே தான் சொன்னாள், “ம்.. எனக்கு நர்சரி ஸ்கூல் டீச்சராக ஆசை”
புருவங்கள் இரண்டையும் உயர்த்தியவன், “வெரி குட்.. ட்ரை பண்ணலாமே” என்றான்.
"அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாங்க.." தன் தந்தையைக் குறைவாக பேசிவிடுவானோ என்ற பயம் வர, “ குழந்தைகளையெல்லாம் வைத்து சமாளிப்பது எனக்கு கஷ்டமாக இருக்கும் என்றுதான்” என்று விரைவாக விளக்கமும் கொடுத்தாள்.
அவளும் சும்மா இல்லையே.. "ஆனால்.. குக்கிங், ஹோம் மேனேஜ்மென்ட், தையல் வகுப்புகளுக்கு எல்லாம் போகிறேன்"
இவற்றில் தான் விருப்பம் என்றால் தவறில்லை. சம்பாதிக்க அவசியம் இல்லாத பட்சத்தில் விரும்பிய வேலைகளில் நேரத்தைச் செலவிடலாம். ஆனால் வசதியான குடும்பத்துப் பெண்.. திருமணமும் வசதியான இடத்தில்தான் முடிப்பார்கள். இதையெல்லாம் செய்வதற்கு ஆட்கள் இருப்பார்களே.. அதையே அவளிடமும் கேட்டான்.
"அது.. அப்பாவிற்கு பிடிக்குமென்று…"அவளுக்கு முடிக்கவே பிடிக்கவில்லை. தன்னைக் கைகளில் பொத்திக் தாங்கும் அப்பாவையும் அண்ணனையும் அறிந்தவர்கள் முன் அவர்களுக்காக இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்பது தப்பாகத் தெரிந்ததில்லை. ஆனால் யாரென்று தெரியாத ஒருவனிடம் அவர்களுக்காகத்தான் எனக்கு பிடிக்காத வேலைகளில் தினமும் நேரத்தைப் போக்குகிறேன் என்று சொல்வது மீனலோசனிக்கு அத்தனை சுலபமாக இல்லை.
பெண் பார்ப்பது எல்லாம் ஆதிக்கு மறந்து விட்டது. படித்து முடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் ஒரு சின்ன பெண்தான் அவன் முன் தெரிந்தாள். அவன் தாழ்ந்த குரலில் ஒரு நல்ல நண்பனின் பாவனையில் அவளிடம் பேசினான், "அடுத்தவர்களுக்கு பிடிக்க வேண்டுமென்று உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள் மீனலோசனி. அப்படி மாறி உங்களை அவர்களுக்குப் பிடித்தால், அவர்களுக்குப் பிடித்திருப்பது நீங்கள் இல்லையே.. நீங்கள் நீங்களாகவே இருக்கும்போது உங்களைப் பிடிக்க வேண்டும். அதனால் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.." சொல்லி முடிக்கும் போது அவனையும் மீறி கண்கள் வலப்பக்கம் திரும்பி மனோவிடம் சென்றன..
மீனலோசனி கண்களில் மரியாதையோடு ஆதியைப் பார்க்க ஆரம்பித்தாள்.
சித்தார்த் ஏதோ பேசிக் கொண்டே இருந்தான். நிச்சயமாக என்ன பேசுகின்றான் என்பதை அறியும் அளவிற்கு இல்லாமல் எதைப் பற்றி பேசுகிறான் என்கிற அளவில் மட்டும் அவன் பேச்சில் கவனம் வைத்து தேவையான இடத்தில், ம்.. ஓ.. போட்டுக் கொண்டிருந்தாள் மனோ. இந்த சத்யா எப்போது வருவாள்.. இன்று சீக்கிரம் வீட்டுக்குப் போக முடிந்தால் நன்றாக இருக்கும். சத்யாவிற்கும் சேர்த்து மனோ ஆர்டர் செய்ய, சித்தார்த் அவனுக்கு சொல்ல மறுபடியும் காத்திருப்பு தொடங்கியிருந்தது..
திடீரென்று சித்தார்த்தின் குரல் நின்று விட அவனைக் பார்த்தால் இடப்புறமாக திரும்பி யாரையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். “யார் சித்தார்த் சார்?” சித்தார்த் சொன்னான், "ஆதி தானே அது?"
மனோவும் திரும்பி அந்த இருளில்தேடி, ஆதியை அங்கு காண முகம் மலர்ந்தது, "ம்.. ஆதி சார் தான்.." தனியே அமர்ந்திருந்தான். அவன் முன் சர்வர் வரிசையாக உணவு வகைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
"நான் ஒரு ஹாய் சொல்லிட்டு வந்துடறேன்"
தான் என்ன பண்ணுவது என்று மனோவுக்குத் தெரியவில்லை. அவன் அவளிடம் பேசுவதில்லைதான். ஆனால் அங்கே சித்தார்த் மட்டும் போய் மனோ மட்டும் இங்கே நின்று கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா? கொஞ்சம் தயக்கத்துடன் தன் கைப்பையை இறுகப் பற்றியபடி சித்தார்த்தின் பின்னே சென்றாள்.
கொஞ்சம் தூரத்திலேயே"ஹாய் ஆதி!" என்று சொன்னபடி சித்தார்த் வரவும் கைகளை டிஷ்யு பேப்பரில் துடைத்தபடி ஒரு பெண் அவர்கள் மேஜைக்கு வரவும் சரியாக இருந்தது. மனோ உள்ளே காத்திருந்த முதல் சில நிமிடங்களில் வந்த அதே பொம்மை பெண்.
மேஜைக்கு அருகில் வந்து அமராமல் ஆதியைக் கேள்வியாய் நோக்கிய அந்த பொம்மை பெண்ணைப் பார்த்ததும் ஆதி எழுந்தான். அறிமுகம் செய்ய வேண்டும். “இது சித்தார்த். என் அண்ணன். இது மனோ.. எங்கள் கம்பெனியின் கம்ப்யூட்டர் ஹெட். “
“ஹாய்!” என்று அந்த பெண் இருவரையும் பார்த்து அழகாய் புன்னகைக்க "ஹாய்" என்ற சித்தார்த் ஆதியைக் கேள்வியாய் பார்த்தான்.. ஒரு பெரிய மூச்சை உள்ளே இழுத்த ஆதி, "இது மீனலோசனி.. என் ஃப்ரெண்ட்.." என்றபடி கைகளை தன் பான்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்து நிமிர்ந்து நின்றான்.
பெயரைக் கேட்டதும் சித்தார்த்தின் முகத்தில் இப்போது பல்ப் எரிந்தது. "ஓ.. மீனலோசனியா? அம்மா சொன்னார்கள்.. ஏன்டா.. ஃபர்ஸ்ட் டைம் பார்ப்பதற்கு ஏதாவது பெரிய ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போயிருக்கலாமே?"
அம்மா சொல்லி முதலில் பார்க்கும் பெண்ணாம்; யாராயிருக்கும் என்று மனோவிற்கு தெரியாதா? ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் பெண் ஃப்ரெண்டாம். இவள் கம்பெனியின் கம்ப்யூட்டர் ஹெட்டாம். பொங்கிய கோபத்தை மனோ அடக்கினாள்.. 'மனோ.. ரிலாக்ஸ்.. ஆதி யாரோடு எப்போது சுற்றினால் எனக்கென்ன? ' " ஹாய் மீனலோசனி.." என்று பதவிசாய் சொன்னவள், ஆதியின் பக்கமும் திரும்பாமல் கவனமாய், "உங்க ஹேய் ஸ்டைல் ரொம்ப அழகாயிருக்கு.." என்றாள்.
"தேங்க்ஸ்" மீனலோசனி நட்பாய் சிர்த்தாள். பாவம் நல்ல பெண்ணாய் இருக்கிறாள். அம்மாவின் அனுமதியோடு நடப்பதால் அந்த அனுபமா வின் நிலை வராது. ஆனால் நேசமில்லாத திருமண வாழ்க்கை.. ஆதியோடு மீனலோசனியை மனதில் ஒன்றாக நிறுத்திப் பார்த்தவளுக்கு சுறுசுறுவென்று ஏறியது. அந்த பெண்ணுக்கான பரிதாபமாகத்தான் இருக்கும்..
கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்ற மனோவைப் பார்த்த ஆதியின் கண்கள் சுருங்கின. எப்படி எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க முடிகிறது? அப்படியே இருக்கட்டும். அவளுக்கு ஒன்றுமேயில்லை என்றால் அவனுக்கும் ஒன்றுமில்லைதான்.
சித்தார்த்திடம் திரும்பியவன், “ நீ இங்கே இருக்கியா சித்தார்த்? இரண்டு மணிக்கு அந்த மார்க்கெட்டிங் கம்பெனியின் ரெப்டசன்டேட்டிவோட மீட்டிங் இருக்கிறதே”
“ காலையிலேயே அந்த மீட்டிங்கை தள்ளி வைச்சாச்சி. நான்கு மணிக்கு வர்றதா அவங்க மெயில் அனுப்பி இருக்காங்க.. காலையிலிருந்து கொஞ்சம் வேலையும் செய்திருந்தால் தெரிந்திருக்கும்.” மூன்று பேருமே சட்டென்று திரும்பி மனோவைப் பார்க்க, சொன்ன சொற்களின் காட்டத்திற்கும் முகபாவனைக்கும் சம்பந்தமே இல்லாமல் சாந்தமாய் இருந்த முகத்தில் கண்கள் மட்டும் ஆதியை சவால் விடுவது போல் பார்த்தன.
ஆதி முறைத்தான். “நான் வேலை செய்யவில்லையா? வேலை நேரத்தில் ஊர் சுற்றிகிட்டு இருக்கிறவங்க அதைப் பற்றி சொல்லக் கூடாது.”
ஊர் சுற்றுகிறாளாமா? யாரைச் சொல்கிறான்? அதுவும் யார் முன்னே சொல்கிறான். காப்பாற்றி வைத்த கவனமெல்லாம் காற்றோடு போய்க் கொண்டிருந்தது.. “நான் ஒன்றும் ஊர் சுற்றவில்லை. இது சாப்பாட்டு நேரம்.."
“மதிய இடைவேளை நம் கம்பெனியில் ஒரு மணி நேரம். இங்கு வர இருபது நிமிடம், போக இருபது நிமிடம், ஆர்டர் சொல்லி அது வர அரை மணி நேரம், அது போக சாப்பிட என்று எப்படியும் மொத்தம் இரண்டு மணி நேரம் ஆகி விடும்.”
சித்தார்த்தும் மீனலோசனியும் திரும்பி அவனை வித்தியாசமாய்ப் பார்க்க, ஆதியின் முகம் கன்றியது.. ஆனாலும் கண்களைத் தளர்த்தாமல் மனோவைப் பார்த்தான்.
அவனால் வேறு எங்கேயும் பார்க்கவும் முடியாது.. ஏனெனில் கனத்திற்கு ஒன்றாய் மனோவின் முகம் மாறிக் கொண்டிருந்தது.. கண்களில் சீற்றத்தோடு, அவனை முறைத்தபடி, “ரொம்ப நல்லா கணக்கு போடுறீங்க ஆதி சார்.. இரண்டு மணி நேரமா?? சரி ஓகே.. அப்படியே இருக்கட்டும்.. இன்று அரைநாள் விடுப்பு எடுப்பதாய் வைத்துக் கொள்ளுங்கள்.”
சொல்லி நிறுத்தியவள் பின் “சாரி.. உங்களிடம் ஏன் நான் சொல்ல வேண்டும்?” என்று சித்தார்த் திடம் திரும்பி “சித்தார்த் சார்.. எனக்கு இன்று ஹாஃப் டே பெர்மிஷன் வேண்டும்” என்று செயற்கை புன்னகையுடன் கேட்டவள், ஆதியிடம் திரும்பி, மறுபடியும் முறைத்து “சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று முடித்தாள்.
அடுத்து ஆதி என்ன சொல்லியிருப்பானோ, என்ன சொன்னாலும் அதற்கு மேல் தாங்க முடியாது என்ற நிலையில் பக்கத்திலிருந்த மேஜையின் மீதிருந்த கண்ணாடி டம்ளரைக் கைகளில் இறுகப் பற்றியிருந்த மனோவின் கைகளை இருகரங்கள் வந்து பற்றின, *ஹாய் மனோ.. சாரிடி லேட்டாயிடுச்சி..”.. சத்யா..
இதுவரை மனோவும் ஆதியும், 'தாம் தூம்' என்று குதித்ததை இந்த பக்கம் அந்த பக்கம் என்று மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தும் மீனலோசனியும் சத்யாவை ஆபத்பாந்தவனாய் பார்க்க மனோ அவளை முறைத்தாள். "உன் பர்த்டே ட்ரீட்க்கு நீயே லேட்டாக வருவாயா சத்யா?"
"சாரி மனோ.. வரும் வழியில் தைக்க குடுத்த டிரஸ் ரெடியாகிடுச்சானு பார்த்துட்டு வரலாம்னு போனேன். லேட்டாயிடுச்சி” என்றவள் ஆதியைப் பார்த்து, "ஹாய் ஆதி சார்!" என்றாள்.
"போதும் சத்யா.. நீ தேவையில்லாமல் பேசி யார் நேரத்தையும் வீணடிக்காதே.. வா.. சாப்பிடலாம்" சத்யாவின் கரங்களைப் பிடித்து இழுத்தபடி செல்ல சித்தார்த் அவர்கள் பக்கமும் ஆதி பக்கமும் மாறி மாறி ப் பார்த்து, “என்னடா?” என்றவன் பின் மீனலோசனியைப் பார்த்து, "சாரி சிஸ்டர்.. நான் வர்றேன்.. மீண்டும் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு ஆதியின் தோளில் தட்டிவிட்டு அவர்கள் பின்னே போனான்..
அங்கே இருந்தவர்களில் அப்போதைக்கு உற்சாக மனநிலையில் இருந்தது ஆதி மட்டும்தான். சத்யாவின் பர்த்டே. அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள். அதுவும் சேர்ந்து வரவில்லை. தனிதனியாகத்தான் வந்திருக்கிறார்கள்.. ச்சே.. அது தெரியாமல் என்னவெல்லாம் நினைத்து விட்டார். எப்படியெல்லாம் பேசிவிட்டார்... ஆனால் அதுகூட நல்லதிற்குதான். ஆதியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. எப்போதுமே ஒரு அரைப்புன்னகையோடு சற்று தன்னை தூரத்தே நிறுத்தி பேசும் மனோ இதுபோல் காற்றில் முன் நெற்றி முடி பறக்க, கோபத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் இன்றி இன்றுதான் அவனிடம் பேசியிருக்கிறாள். ஏனோ மனதில் ஒரு இதம், அவனுக்கே தெரியாமல் அவன் மனம் இந்த நொடிக்காகக் காத்திருந்தது போன்று ஒரு நிறைவு..
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மீனலோசனிக்கு இன்று நடந்தவற்றில் பல வாழ்வில் முதல்முறை எதிர்கொள்பவை. திருமணத்திற்கு என்று அவள் முதலில் சந்திக்கும் நபர் ஆதி தான். உனக்கும் பிடித்ததைச் செய்.. யாருக்காகவும் மாறாதே என்ற அறிவுரையும் இதுவரை யாரும் செய்ததில்லை. ஒரு வேலை செய்யும் ஊழியர் தன் முதலாளியிடம் கோபமாய் வார்த்தைக்கு வார்த்தை பேசுவதையும், தண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்ற தயாராய் இருப்பதையும் இன்றுதான் பார்த்திருக்கிறாள். எல்லாவற்றையும்விட அப்படி பேசிய ஊழியரை ஏதோ பெரிதாகச் சாதித்து விட்ட நிறைவோடு, மெச்சும் பார்வையோடு, முகத்தில் புன்னகை தவழ பார்த்துக் கொண்டிருக்கும் முதலாளியையும் இன்றுதான் பார்க்கிறாள். உலகத்தில் அவளுக்குத் தெரியாதது இன்னும் நிறைய இருக்கிறது போல..
அன்று இரவு தன் தாய், தந்தை, தமையனுடன் இரவு உணவுக்கு மேஜை முன் அமர்ந்திருந்த போது மீனலோசனியின் தந்தை ஆரம்பித்தார், "மீனு ஆதியைப் போய் பார்த்தாகிவிட்டதா?"
"ம்.. இன்று மதியம் போனாள்." இது அவளது அத்தை.
"ஓகே.. இனி அவர்கள்தான் அடுத்து பேச வேண்டும்.."
"நம்ம மீனுவை யாருக்காவது பிடிக்காமல் போகுமா அப்பா?" பெருமை கலந்து பேசியது அவள் அண்ணன்.
இந்த நொடிக்காக மாலையிலிருந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தவள், மெதுவே பேசினாள், "எனக்கு பிடிச்சிருக்கானு தெரியலைப்பா.. கொஞ்சம் டைம் வேணும்"
அவள் அப்பா எழுந்தே விட்டார், "பிடிக்கவில்லையா? ஏன் பிடிக்கவில்லை? ஏதாவது தப்பாகப் பேசினானா? சொல்லும்மா?"
“அச்சோ அப்பா.. அப்படியெல்லாம் இல்லை. பிடிக்கலைன்னு சொல்லவில்லை.. பிடிச்சிருக்கானு தெரியலைனு தான் சொன்னேன். அதுதான் கொஞ்சம் டைம் வேணும்.”
எல்லோரும் அவளை வித்தியாசமாய்ப் பார்க்க அவள் அண்ணன்தான் சுதாரித்தான், "ஓகே மீனு.. டேக் யுவர் டைம்.. நல்லா யோசிச்சு சொல்லு"
"தேங்க் யு அண்ணா!" பூவாய் சிரித்தாள்.