எபி-8
‘அம்மாவிற்கு ஒன்றும் இல்லை நிலா, ஏதோ கவலை அதுதான் இரத்த அழுத்தம் அதிகமாகிடுச்சு என்று காலையில் நடந்தவற்றை விவரித்தார்.
’நீங்க தான் தெய்வம் ஆண்டி, நான் உங்களை மறக்க மாட்டேன், என்று கையெடுத்து கும்பிட்டாள்’
‘என்னமா இதெல்லாம், தைரியமா இரு, முதலில் அப்பாவிற்கு அழைத்துச் சொல்’ என்றவரை பாவமாக பார்த்தாள்.
’அப்பா…அப்பா… எனக்கு அம்மா மட்டும்தான் ஆண்டி, அப்பா கிடையாது. அவங்களுக்கு ஏதாவதுன்னா என்னால் தாங்க முடியாது’ என்று அவர் தோள் சாய்ந்து அழுத்தொடங்கினாள்.
அவளை ஆதரவாக அணைத்தவர் ‘முதலில் உன்னை அழைக்கலாம்னு நினைத்தேன், நீ சின்னப்பெண் பயந்திடுவ அதனால் உன் அப்பாவிடம் விவரம் தெரிவிக்கலாம்னு முடிவெடுத்தேன் ஆனால் அம்மா மயக்கமா இருந்ததினால நம்பர் வாங்க முடியவில்லை. டாக்டரும் பயபட வேண்டாம் ஒரு நாள் இருந்தால் போதும் என்று சொன்னார். இரவு நேரம் நெருங்கியதும் வீட்டில் தேடுவார்களே என்று வேறு வழியில்லாமல் உன்னை அழைத்தேன். ஆனால் நீ எடுக்கவே இல்லைமா வேலையாக இருப்பன்னு நினைத்துக்கிட்டேன். அன்று கோவிலில் வைத்து நீ எனக்கு நம்பர் தந்தது உதவியாய் இருந்தது. என்னை மன்னிச்சிடுமா, எனக்குத் தெரியாது உனக்கு அப்பா இல்லையென்று அம்மா இபோதுதான் கண் விழித்தாங்க, நானே அவங்களை வீட்டிற்கு கொண்டு வந்து விடலாம்னு நினைத்தேன் ஆனால் டாக்டர் இன்று ஒருநாள் இங்க இருக்கனும்னு சொல்லிட்டார். அதுதான் உன்னை அழைக்க வேண்டியதாயிற்று’ என்று அவளைச் சமாதானம் செய்வதாக நினைத்து பதட்டமாக ஏதேதோ பேசினார்.
’அம்மா தூங்கறாங்க, என்னுடன் வா கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம்’
‘இல்லை ஆண்டி, நான் பார்த்துக்கிறேன், நீங்க கிளம்புங்க உங்க வீட்டில் தேடுவாங்க’
‘நான் சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லிட்டேன் மா, வா சாப்பிடலாம் இல்லாவிட்டால் நீ சாப்பிட மாட்ட’
‘பசியில்லை ஆண்டி’
‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அம்மாவிற்கும் நீ மட்டும்தான் இருக்க, நீ ஆரோக்யமா இருந்தால்தான் அவங்களை நல்லா பார்த்துக்க முடியும். இப்படி பட்டிணி கிடப்பதினால் எதுவும் ஆகப்போவதில்லை, தெம்பாக இருந்தால் குறைந்தது அவங்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றவர் அவளை கேண்டீனுக்கு அழைத்துச் சென்றார்.
உண்டு முடித்துவிட்டு சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
டாக்டர் கூறிய மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்திருந்த கவரை நிலாவிடம் கொடுத்து அதனை எப்பொழுதெல்லாம் குடுக்க வேண்டும் என்று விவரித்தார். மணி பத்து என்று காண்பிக்கவும், நேரமாகிவிட்டதுமா தம்பி எனக்காக கீழே காத்துகிட்டிருக்கு, நான் வரேன் என்று விடைபெற்று சென்று விட்டார்.
அவர் சென்றதும் தாயின் அருகில் அமர்ந்தவள், அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவளையும் அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அப்படி என்ன கவலை அம்மாவிற்கு, படிப்பு முடிந்தாகிவிட்டது, வேலையும் கிடைத்துவிட்டது, பென்ஷன் பணமும் வருகிறது. வேறு என்ன கவலை என்று யோசிக்கும் போதுதான் கடந்த சில தினங்களாக அவர் நடந்துகொண்ட விதம் அவளுக்கு நினைவிற்கு வந்தது.
பலமுறை திருமணம் ஆகி வேறு வீட்டிற்கு செல்லும் பெண் என்று கூறியது நினைவிற்கு வந்தது. அப்படி என்ன திருமணத்திற்கு அவசரம், இப்போது தான் சிறிது நிம்மதியாக இருந்தோம், அதற்குள் அடுத்த பிரச்சினையா, முதலில் அம்மாவிற்கு க்ளாஸ் எடுக்கனும், சும்மா தேவையில்லாததெல்லாம் யோசிச்சுகிட்டு… என்று பெரு மூச்சுவிட்டவள் எழுந்து சென்று ஜன்னலின் அருகில் நின்றுகொண்டாள்.
‘பிடிச்சிருக்கா’ என்ற குரல் அவள் காதருகே கேட்டதும் பதறி திரும்பியவள் அங்கு யாருமில்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தாள். ‘ச்ச என்ன நினைப்பு அம்மாவிற்கு உடம்பு சரியில்லை நான் ஏன் ஏதேதோ நினைத்துக்கொண்டிருக்கிறேன், சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது அழகிய கனவாக மாறியது, விடையில்லா கனவாக.
‘அம்மா முதலில் உட்காருங்க, வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். டாக்டர் சொன்னதெல்லாம் காத்துல போச்சா? டீச்சர்தானே நீங்க ஒரு முறை சொன்னால் புரியாதா?’
‘டாக்டர் ஆயிரம் சொல்வார், நம்ம கஷ்டம் நமக்கு’
‘…’
’நீ வேலைக்கு கிளம்பவில்லையா?’
’நாளையிலிருந்து’
‘ஏன் தேவையில்லாம லீவு எடுக்கிற நிலா, தேவைக்கு லீவு வேண்டாமா?’
‘இதைவிட என்ன தேவை எனக்கு இப்போ?’
‘…’
‘சொல்லுங்கம்மா? ஏன் தேவையில்லாம அலட்டிகிறீங்க?’
’…’
தாயின் அருகில் வந்து அமர்ந்தவள் ‘அம்மா உங்களுக்கு நான் எனக்கு நீங்க இப்போதைக்கு இதை மட்டும் நினைவில் வெச்சுக்கோங்க வேறு எந்த சிந்தனையும் உங்களை பாதிக்காமல் பார்த்துக்கோங்க’ நீங்க வருத்தப்படும் அளவிற்கு நம்ம வாழ்க்கை மோசமாயிடாது புரிஞ்சுக்கோங்க’
மருத்தவமனையிலிருந்து வந்ததிலிருந்து தாயும் மகளும் இவ்வாறுதான் உரையாடிக்கொண்டனர். நிலா முடிந்தளவு தாயை சமாதானம் செய்ய முயன்றாள். அவளுக்கு டாக்டர் கூறியதுதான் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
‘பீபி அதிகமாயிருக்கும்மா, மருந்து ஒரு அளவுதான் வேலை செய்யும் மற்றபடி நீங்கதான் அவங்க உடல்நிலையையும் மனநிலையையும் பார்த்துக்கனும். இது விளையாட்டில்லை, அடிக்கடி பீபி அதிகமானால் வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்களை பயப்படுத்த நான் விரும்பவில்லை அதே சமயம் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.
நிலாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் தாயின் மனநிலையும் உடல் நிலையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தற்போதைய தேவை என்று முடிவெடுத்தாள்.
விடுப்பு முடிந்து வேலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவளின் அலைபேசி மணியடித்தது.
‘ஹலோ, ஆமாம் ஆண்டி, அம்மாவிற்கு இப்போது பரவாயில்லை’
’சரி ஆண்டி’
மீனா அழைத்து அன்னையின் நலம் விசாரித்ததாக தெரிவித்தவள் குழந்தைக்குச் சொல்வதுபோல் ஆயிரம் அறிவுரைகளை அன்னைக்கு கூறிவிட்டு மனமில்லாமல் வேலைக்கு கிளம்பிச்சென்றாள்.
அலுவலகம் சென்றவளுக்கு வேலைகள் சூழ்ந்துகொள்ள அதில் மூழ்கிப்போனாள். அவ்வப்போது ஷீலாவின் இருக்கையை எட்டிப் பார்த்தவள் மதியம் வரை அவளைக் காணாது போகவே அங்குள்ள அவள் குழுவினரிடம் விசாரித்தாள். ஆண்டு விழாவிற்கு பிறகு ஷீலா வரவில்லை என்றும் அவளது அலைப்பேசி எண் வேலை செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.
விக்கி சாரிடம் விசாரிக்கலாம் என்றால், அவரும் கடந்த இரண்டு நாட்களாக வரவில்லை என்று தெரியவந்தது.
அனைவரும் நிலாவின் பாடல் இனிமையாக இருந்தது என்று பாராட்டினர். நன்றியைத் தெரிவித்தவள் எத்தனை முறை முயற்சித்தும் ஷீலாவின் எண்ணில் தொடர்பு கொள்ள இயலவில்லை. என்ன ஆச்சு ஷீலாவிற்கு? என்று தனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டாள்.
ஒருவாரம் கடந்தது… ஷீலாவைக் குறித்து எந்த தகவலும் இல்லை, யாரிடம் விசாரிப்பது என்றும் நிலாவிற்கு தெரியவில்லை. அலைபேசி எண்ணைத் தவிர வேறு எதுவும் நிலாவிற்குத் தெரியாது அவளது விடுதிக்குச் சென்றும் விசாரித்தாள் அங்கும் அதே பதில் தான் ஆண்டு விழாவிற்குப் பிறகு ஷீலா வரவில்லை என்பது தான்.
மதிய உணவிற்கு கேண்டீன் சென்றவள் தன்னுடன் ஷீலா இருந்தால் சற்று நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். தனக்கென்று இருந்த ஓரே ஒரு தோழியும் திடீரென்று மாயமானதும் கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்டது போன்று உணர்ந்தாள். யோசனையாக நடந்து வந்து கொண்டவள் எதிரே விக்கியையும் ஆகாஷையும் ஒன்றாகக் கொண்டதும் அவர்களை நோக்கி வேகமாக நடந்தாள்.
ஓட்டமும் நடையுமாக விக்கியை நோக்கிச் சென்றவள் நிலாவைக் கண்டதும் அங்கிருந்து நகர்ந்து சென்ற விக்கியின் செயல் வித்தியாசமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் ஆகாஷை நோக்கியவளை ஏளனமாக பார்த்துவிட்டு அவனும் கடந்து சென்றான்.
என்னவாயிற்று ஏன் இருவரும் இப்படி நடந்து கொள்கின்றனர். தலையே சுற்றிவிட்டது நிலாவிற்கு சற்று நேரம் அங்கேயே நின்றவள் ஒரு முடிவுடன் விக்கியின் அறைக்குச் சென்றாள்.
‘சார், ஷீலா’
‘ப்ளீஸ் கெட் அவுட் நிலா, உங்ககிட்ட பேசக்கூடிய நிலையில் நான் இல்லை’
‘கொஞ்சம் புரியும்படியா பேசுங்க சார், ஷீலாவிற்கு…’
‘ஒரு முறை சொன்னால் புரிஞ்சுக்கோங்க, ப்ளீஸ்’ என்று வாயிலை நோக்கி கை காட்டினான்.
அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியில் வந்தவளுக்கு வேலையே ஒடவில்லை. விக்கி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?’
மாலை வேலை முடிந்து வண்டி நிறுத்தும் இடத்திற்கு விரைந்தவள் அங்கு ஆகாஷ் இருக்கிறானா என்று தேடினாள். அவள் எதிர் பார்த்தது போலவே அவன் அங்கு தான் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.
அவனை நோக்கி விரைந்தவள் ‘எனக்கு கொஞ்சம் பேசனும்’ என்று தயக்கத்துடன் தொடங்கினாள்.
‘உன்னிடம் பேச எனக்கு எதுவுமில்லை’
புகையினால் இருமியவள் ஆகாஷின் கையிலிருந்த சிகரட்டை வேகமாக எடுத்து தரையிலிட்டு காலால் நசுக்கினாள். இதனை சற்றும் எதிர் பாராதவன் ‘யூ’ என்று அவளை நோக்கி ஆள்காட்டி விரலால் எச்சரித்தான்.
‘ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்க ஷீலா..’ என்று தொடங்கியதும்
‘வில் யூ ப்ளீஸ் ஸ்டாப்’
‘ஏன் எதற்காக நிறுத்தனும்? அதை முதலில் சொல்லுங்க’
‘..’
‘ஷீலாவிற்கு என்னாச்சு? ஏன் நீங்களும் விக்கி சாரும் முகம் கொடுத்து பேச மாட்டீங்கறீங்க?’
‘ஓ! அப்போ ஷீலாவிற்கு திருமணம் ஆனது அவளுடைய உயிர் தோழிக்குத் தெரியாது, இதை நாங்க நம்பனும்’
‘வாட்!’
‘நல்லா நடிக்கிற நிலா’
‘வாட் டூ யு மீன்? ஷீலாவிற்கு திருமணமா? எப்போ? யார் சொன்னது?’
‘முடிந்ததைப்பற்றி இனி பேச வேண்டாம்’
‘ப்ளீஸ் ஆகாஷ், உங்களுக்கு எப்படித் தெரியும், அவளுடைய விலாசம் இருந்தால் சொல்லுங்க நான் அவளை உடனே பார்க்க வேண்டும்’
அவன் பதில் ஏதும் பேசவில்லை அதற்கு பதில் நிலாவை ஒரு வித வெறுப்புடன் பார்த்தான். ஏனோ நிலாவை அந்தப் பார்வை பாதித்தது. அவள் பேச வருவதற்குள் ஆகாஷின் அலைபேசி அலறவும் அவன் அதை எடுத்து பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அதே யோசனையுடன் வீடு திரும்பினாள். ஷீலாவிற்கு திருமணமாகிவிட்டது என்பதை அவளால் உட்கொள்ள முடியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது, பாவம் ஷீலாவின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள மனம் துடித்தது.
அடுத்த நாள் வேலைக்குச் சென்றவள், நெற்றியில் குங்குமமும், கழுத்தில் தாலியுமாக இருக்கையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த ஷீலாவைக் கண்டதும் ஓடிச் சென்று ஷீலாவின் கையைப் பற்றினாள். மொளனமாக நிமிர்ந்து பார்த்தவள் கசந்த முறுவலுடன் கையை உறுவிக்கொண்டாள்.
‘ஷீலா’..
’ப்ளீஸ் நிலா, நான் எதுவும் பேச விரும்பவில்லை, நீ பார்ப்பது உண்மைதான்’
’ஷீலா ஏண்டி’
‘ப்ளீஸ், நான் வேலையை ராஜினாமா செய்வதற்காக வந்திருக்கிறேன். என்னை தொந்திரவு செய்யாதே’
நிலாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தன்னைச்சுற்றியிருந்த உலகம் திடீரென்று மொளனமானதாக உணர்ந்தாள். ஏதும் பேசாமல் தன் இருக்கைக்கு வந்தவள் ஷீலாவை பார்ப்பதும் வேலையைச் செய்வதுமாக இருந்தாள்.
மதிய உணவு இடைவேளையின் போது ஷீலாவை தேடியவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. யோசனையாக தனது தோழியை நினைத்துக்கொண்டு உணவு உண்டு கொண்டிருந்தவளின் அருகே நிழலாடியதும் நிமிர்ந்து பார்த்தாள்.
ஆகாஷ்தான் எதுவும் பேசாது நிலாவின் எதிரே அமர்ந்து கொண்டு உணவு உண்டு கொண்டிருந்தான்.
‘என்ன தோழியை சந்தித்து நலம் விசாரிச்சாச்சா?’
‘..’
‘உங்க ப்ளான் என்ன? தோழியைப் போல காதலிப்பது ஒருத்தனை கல்யாணம் செய்வது இன்னொருத்தனையா?’
‘..’
‘மொளனம் சம்மதம், ப்ளான் போட்டாச்சா இல்லை இனிமேல் தானா, யார் அந்த துரதிஷ்டவாதின்னு சொன்னால் முன்கூட்டியே எச்சரிக்க உதவியாக இருக்கும்’
‘ஆகாஷ்’
‘என்ன மேடம் என் பெயரை சொல்றீங்க, உங்க விளையாட்டுக்கு நான் வரவில்லை, நான் வேணா ஐடியா தரவா?’
நிலாவிற்கு கோபம் தலைக்கேறியது, எதுவும் பேசாமல் விருவிருவென்று வெளியேறினாள். சற்று தூரம் நடந்தவள் ஏதோ தோன்ற திரும்பிப்பார்த்தாள் அங்கு ஷீலா நிலாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருவித படபடப்புடன் நின்று கொண்டிருந்தவளை நோக்கி நிலா வேகமாக நடந்தாள்.
அருகில் சென்றவளின் கையில் ஒரு கடிதத்தை வைத்தவள் என்னவென்று நிலா உணரும் முன்னர் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றுவிட்டாள். ஏன் என்ற பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நிலா குழம்பினாள்.
அமைதியாக இருக்கையில் அமர்ந்தவள் விரைவாக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள். என்றும் போல் ஆகாஷ் வண்டி நிறுத்தும் இடத்திற்கு அருகில்தான் இன்றும் நிலா தனது வண்டியை நிறுத்தியிருந்தாள். ஏதோ நினைவோடு வண்டியை எடுத்துக்கொண்டிருந்தவளை நோக்கி காலடிச் சப்தம் கேட்டதும் மெதுவாக திரும்பிப் பார்த்தாள் அங்கு முகத்தில் மென்முறுவலுடன் இளைஞன் ஒருவன் நிலாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
‘ஹாய் நிலா, ஆண்டு விழாவின் போது நீங்க பாடின பாடல் மிகவும் இனிமையாக இருந்தது’
‘தேங்யூ’
‘யு ஆர் வெல்கம்’ என்றவன் ஆகாஷ் நிறுத்தியிருந்த வண்டியை நோக்கிச் சென்றான். அவனையே யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தவள் சற்று தொலைவில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஆகாஷைக் கண்டதும் வண்டியை வேகமாக எடுத்துக்கொண்டு கிளம்பிச்சென்றாள்.
சரஸ்வதியின் உடல் நிலை சற்று தேறியிருந்தது, பழையது போல் நடமாடத் தொடங்கியவரைக் கண்டதும் சற்று நிம்மிதியாக இருந்தது நிலாவிற்கு. யாரிடமும் மனதை திறக்க வழியில்லாமல் வருந்தியவள் அனைத்தையும் தனது டைரியில் எழுதத் தொடங்கினாள்.
மறுநாள் வேலைக்கு தயார் ஆகிக்கொண்டிருக்கும் மகளிடம் தன்னை கோவிலில் விட்டுவிட்டுச் செல்லுமாறு கேட்டார். மறுப்பேதும் தெரிவிக்காமல் அன்னையை கோவில் வாயிலில் இறக்கியவள் மீண்டும் அறிவுரைகளை அள்ளி வீசிவிட்டு கிளம்பிச் சென்றாள்.
தனக்கு அறிவுரை கூறும் அளவிற்கு மகள் வளர்ந்துவிட்டாள் என்று நினைத்தவர் தனது பாரத்தை இறைவனிடம் இறக்கி வைக்க முடிவு செய்தார். உள்ளே நுழைந்தவர் அங்கு மீனா நிற்பதைக் கண்டு சிநேகப் புன்னகையுடன் அவரை நோக்கி நடந்தார்.
சரஸ்வதியைக் கண்டதும் அங்கிருந்த பூசாரி ’வாம்மா, எப்படி இருக்க?’ என்று நலம் விசாரித்தார்.
‘நல்லா இருக்கேன் சாமி’ என்று மீனாவைப் பார்த்தார். கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தவரைக் காண பாவமாக இருந்தது. அவர் அருகில் சென்று தோள் தொட்டவரைக் கண்டதும் வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு ‘வாங்க எப்படியிருக்கீங்க, தனியாகவா வந்தீங்க’
‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்க எல்லாம் சரியாகிடுச்சு’
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட பூசாரி ‘இங்கேயே இருங்கம்மா நான் அர்ச்சனை செய்த பிரசாதத்தை எடுத்துவரேன்’ என்று உள்ளே சென்றுவிட்டார்.
இருவரும் சரியென்பது போல் தலை ஆட்டினர்.
மீனாவிடம் தான் பிரகாரத்தை சுற்றிவிட்டு வருவதாக கூறிவிட்டு சரஸ்வதி அங்கிருந்து நகர்ந்தார். அர்ச்சனை தட்டுடன் வெளியே வந்த பூசாரி மீனாவிடம் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு சரஸ்வதியைத் தேடினார்.
’அவங்க பிரகாரத்தைச் சுற்றிவர போயிருக்காங்க சாமி’
‘ஓ’
‘தாங்க, நான் அவங்ககிட்ட குடுக்கிறேன்’
‘இந்தாங்கம்மா, இரண்டுபேரும் நெருக்கமாயிட்டீங்க போல’
‘ஆமாம் சாமி, பாவம் தனியா ஒரு பெண்ணை வளர்பது எவ்வளவு கஷ்டம், என்ன மன வேதனையோ அன்று கோவிலில் மயங்கி விழுந்துட்டாங்க’
‘வேறு என்னமா, பெண்ணை பெற்றவங்களுக்கு இருக்கிற கவலைதான். அவங்க பெண்ணிற்கு வரன் பார்க்கிறாங்க, இன்னும் ஒன்றரை மாதத்தில் திருமணம் ஆக வேண்டும் இல்லைன்னா கல்யாணம் தாமதமாகிடும் அந்த கவலைதான்’
’ஓ! பெண்னை பெற்றவங்களுக்கு மட்டுமில்லை சாமி எல்லா பெத்தவங்களுக்கும் இருக்கும் கவலைதான்’
‘அதுவும் உண்மைதான்மா, உங்க பையன் விஷயம் என்னாச்சு? தரகர் கிட்ட பேசுனீங்களா?
‘என்ன சொல்றது சாமி, எல்லாம் சிக்கலா இருக்கு, இப்போ இருக்கிற சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு கல்யாணத்திற்கு சம்மதிக்கனும், ஜாதகம் சேரணும், அவனுக்கு ஏற்ற பெண்ணாக இருக்கனும், இதெல்லாம் இன்னும் மூன்று மாதத்திற்குள் நடக்கனும், எனக்கு என்ன செய்வதுன்னே தெரியவில்லை’
‘கணவர் கிட்ட பேசுனீங்களா? அவர் என்ன சொல்றார், தொழில் வட்டாரத்தில் தெரிந்தவங்க பழகினவங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லி பார்க்கச்சொல்லுங்கம்மா.’
’எப்படி சாமி பெத்தவங்க தன் பெண்னை தோஷமுள்ள ஜாதகாரருக்கு கட்டி வைக்க சம்மதிப்பாங்க? ஒருபுறம் என் பையனாக இருந்தாலும் முறுபுறம் நானும் ஒரு பெண் தானே நானும் பிள்ளையைப் பெற்றவள் தானே, என்ன நடக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் வெடிச்சிடும் போல் இருக்கு’
‘வருத்தப்படாதீங்கம்மா, எல்லாம் சரியாகிவிடும் நம்பிக்கையா இருங்க’ என்று கூறிவிட்டு உள்ளே செல்ல திரும்பியவர் ஏதோ தோன்ற மீனாவை தயக்கத்துடன் பார்த்தார்.
‘என்ன சாமி’
‘ஒன்னுமில்லையம்மா, எனக்கொரு யோசனை, சரியான்னு தெரியாது, ஆனாலும் உங்ககிட்ட சொல்லிடலாம்னு தோனித்து’
----------------------------------
‘சொல்லுங்க சாமி’
‘இப்ப பார்த்தீங்களே சரஸ்வதியம்மா, அவங்க பெண்ணோட ஜாதகத்தை வாங்கி உங்க பையனுக்கு பார்த்தால் என்ன? தப்பா நினைக்காதீங்க, உங்க வசதிக்கு இல்லைதான் ஆனால் குணத்தில் சொக்க தங்கம், யாருடைய தயவும் இல்லாமல் தனியா பெண்ணை வளர்த்திருக்காங்க. அவங்ககிட்ட இல்லாத வசதி உங்ககிட்ட இருக்கு நம்ம பையன் நிம்மதியா நூறு வருஷம் சந்தோஷமா இருக்கனும் அதுக்கு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் முடிச்சாதான் உங்களுக்கும் நல்லது குடும்பத்திற்கும் நல்லது. முதலில் பொருத்தம் பார்ப்போம் ஜாதகம் சேர்ந்தா மேலே பேசுவோம் என்ன சொல்றீங்க?’
‘அய்யய்யோ வேண்டாம் சாமி, நான் எப்படி இதைப் பற்றி அவங்ககிட்ட பேசுவது, சிக்கல் ஒன்றிரண்டில்லை அவன் வாழ்க்கையே மொத்தம் சிக்கலா இருக்கு. அவங்களே பெண்ணை நினைத்து வேதனையில் இருக்காங்க தெரிந்து வைத்துக்கொண்டே புதிய சிக்கலை அவங்களுக்கு நான் தரமாட்டேன். நான் வாங்கி வந்த வரம் அப்படி.’
‘அப்படியெல்லாம் பேசாதீங்க, சிக்கல் கொஞ்ச நாளைக்குத்தான். சரியான ஜாதகம் அமைந்தால் எல்லாம் சரியாகிவிடும். வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லைன்னு நீங்க நினைத்தால் நான் வேணா அவங்க கிட்ட பேசுறேன்.’
‘வேண்டாம் சாமி, அவங்க வாழ்க்கையை குழப்ப வேண்டாம். அவங்களாவது நிம்மதியாக இருக்கட்டும்’
‘அம்மா, நீங்க இரண்டு பேரும் எனக்கு தெரிந்தவங்க, உங்களுக்கு தீங்கு செய்ய நான் நினைக்க மாட்டேன், அவங்க பெண் ஜாதகத்தை நான் முதலில் வாங்கி தருகிறேன் பொருத்தம் இருந்தால் அவங்ககிட்ட எடுத்துப் பேசுவோம் எல்லாம் சுபமாக இருந்தால் இரண்டு குடும்பத்திற்கும் சந்தோஷம்தானே’
‘நீங்க சொல்வது சரிதான் சாமி, ஆனால் அவங்க நிலையை நான் தவறாக பயன்படுத்தவதாக நினைத்தால்’
‘மனச குழப்பாதீங்கம்மா, கடவுளை வேண்டிக்கோங்க. நான் ஜாதகத்தை வாங்கி தருகிறேன், மத்ததை பிறகு பேசிக்கலாம்’ என்று பேசிக்கொண்டிருக்கும் போது சரஸ்வதி அங்கு வந்து சேர்ந்தார்.
’இந்தாங்க அர்ச்சனை பிரசாதம்’
‘நன்றிங்க’ என்று மீனாவின் கையிலிருந்து பிரசாதத்தை வாங்கிக் கொண்டார்.
‘நிலாமா, உங்க பெண் ஜாதகத்தையும் குடும்ப விவரத்தையும் நாளைக்கு வரும் போது எடுத்துவாங்க எனக்கு தெரிந்தவங்கிட்டயும் கொடுத்து தேடுவோம். நாலு பேரிடம் கொடுத்தால்தான் நல்ல வரணா அமையும்’
‘ரொம்ப நன்றி சாமி, நமக்கு ஏற்ற மாதிரி பார்க்கச் சொல்லுங்க. வசதி குறைவாக இருந்தா போதும் பெரிய இடமெல்லாம் வேண்டாம், ஒரே பெண், நம்ம வசதியையும் எடுத்துச் சொல்லுங்க, கூடுதலாகவும் குறைவாகவும் சொல்ல வேண்டாம்’
‘எல்லாம் எனக்குத் தெரியும்மா, நம்ம பெண்ணிற்கு நல்லதைத்தான் நான் நினைப்பேன், நம்பிக்கையா இருங்க எல்லாம் கடவுள் பார்த்துப்பார்’
’அதுதான் எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சாமி’ என்றுவிட்டு மீனாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.
ஷீலாவின் கடிதத்தை படித்ததிலிருந்து நிலாவிற்கு வாழ்க்கை மீதே வெருப்பு வந்தது. கடவுள் இருக்கிறார் என்ற சிறிய நம்பிக்கை போலும் இல்லாமல் போய்விட்டது நிலாவிற்கு. வாழ்க்கை நாம் நினைத்தததுபோல் அமைந்துவிடாது என்பது தெரியும் ஆனால் நினைக்காதது கூட நடக்கக்கூடும் என்று கண்கூடாக பார்க்க நேர்ந்தது. தாயின் உடல் நிலை ஒரு புறம் வாட்ட அந்த பாரத்தை தோழியிடம் கூறி சமாதானம் தேடலாம் என்று நினைத்திருக்கும் நேரத்தில் அந்த தோழியும் உடன் இல்லை என்றானதும் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல தன்னை உணர்ந்தாள்.
தலை பாரமாக உணர்ந்தவள் தேநீர் அருந்துவதற்கு கேண்டீன் சென்றாள். தேநீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கைபேசியை எடுத்து ஷீலாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஷீலாவின் முகத்தை பார்க்க பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது. இதற்குமேல் அங்கிருந்தால் அழுது விடுவோம் என்றெண்ணியவள் எழுவதற்கு முற்படுகையில் ஆகாஷ் அவள் முன் வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் எழுவதற்கு சற்று தயங்கியவள், இவனிடம் நட்பை எதிர்பார்ப்பதும் கடவுளின் மேல் உள்ள தன் நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நினைத்தவள் பெருமூச்சுடன் எழுந்தாள்.
”என்ன மேடம் பேச பேச நேற்று கிளம்பி போயிட்டீங்க, இன்னைக்கு பேசவே இல்லை ஆனாலும் கிளம்பீட்டீங்க’
‘உங்ககிட்ட பேச என்னிடம் ஏதுமில்லை’
’ஆனால் எனக்கு பேச சில விஷயங்கள் இருக்கு’
‘கேட்க எனக்கு நேரமில்லை’
‘நேரம் இருக்காது தான், உங்களுக்கெல்லாம் காதலிக்கும் போது தெரியாத வசதியும் வாய்ப்பும் பணக்கார மாப்பிள்ளை கிடைத்ததும் தெரிந்துவிடும். எங்களைப்போல் மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர்களிடம் பேசுவதற்கு நேரம் இருக்காதுதான்’
‘மிஸ்டர், மைண்ட் யுவர் வோர்ட்ஸ், எதுவாக இருந்தாலும் நேரடியா பேசுங்க’
‘நேரடியா பேசுனா புரியுமா? இல்லை புரியாத மாதிரி நடிப்பீங்களா?’
‘…’
‘என்ன பதிலைக் காணோம்?’
‘நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு’
‘எனக்கு கேட்கலையே’
‘கேட்பதற்கு மனசு வேணும்’
‘மனசு மட்டும் வேண்டுமா? பணமும் வேண்டுமா?’
நிலாவிற்கு எரிச்சலாக இருந்தது, ஆறுதல் தேடி வந்தவளுக்கு ஆறுதல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை எரிச்சல் படுத்தாமல் இருந்தால் போதும் என்றானது.
‘என்ன யோசனை, எதை சொல்லலாம்னா?’
‘ப்ளீஸ், நான் இருக்கிற நிலைமையில் உங்க வார்த்தை விளையாட்டுக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை’
‘சரி நேரடியா கேட்கிறேன், என்னை கல்யாணம் பண்ண சம்மதமா?’
‘வாட்?’
‘இல்லை என்னை போல் ஒருத்தனை கல்யாணம் பண்ண சம்மதமான்னு கேட்டேன்?’
‘வாட் டூ யூ மீன்?’
‘ஐ மீன் வாட் ஐ செட்?’
‘புரியலை’
‘இதை தான் சொன்னேன், நேரடியா சொன்னாலும் உங்களுக்கெல்லாம் புரியாதுன்னு’
‘இப்போ உங்களுக்கு என்னதான் வேண்டும்?’
‘பதில் வேண்டும்?’
‘எதற்கான பதில்’
’மனசா? பணமா?’
‘எதைச் சொல்லனும்னு எதிர் பார்க்கறீங்க?’
‘..’
‘சரி கேட்டுக்கோங்க, உங்களைக் கல்யாணம் செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை’
ஆகாஷ் நிலாவையே இமைக்காமல் பார்த்தான்.
அந்த பார்வை என்ன உணர்த்தியதோ மீண்டும் தெளிவாகச் சொன்னாள் ‘உங்களைப் போல் மாதச் சம்பளம் வாங்கும் ஒருவரை திருமணம் செய்யும் எண்ணம் துளியும் இல்லை, நல்ல பணக்காரனா…’
‘போதும். மேல எதுவும் பேச வேண்டாம். ஐ அண்டர்ஸ்டுட்’
‘தேங்க்யூ, உங்களுக்கான பதில் சொல்லிவிட்டேன், இனி நான் கிளம்பலாம்னு நினைக்கிறேன்’
‘ஸ்யூர்’
மீண்டும் மனம் பாரமாக உணர்ந்தாள், கேண்டீன் வராமல் இருந்திருக்கலாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. இயந்திரம் போல் வேலையை முடித்தவள் ஓய்ந்து போய் வீடு திரும்பினாள்.
தாயைக் கண்டதும் அனைத்து கவலைகளும் மறந்தது, சூடாக தேநீர் வாங்கி அருந்தியவள் சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு தாயிற்கு இரவு உணவு தயார் செய்ய உதவியவள் பொதுவான விஷயங்களைப் பேசினாள். தன்னுடைய பாரத்தை எப்பொழுதும் போல் டைரியில் எழுதியவள் பாட்டு கேட்டுக்கொண்டு உறங்கிப்போனாள்.
மறுநாள் மகள் வேலைக்கு கிளம்பிச் சென்றதும் நிலாவின் ஜாதகத்தையும் அவளின் அனைத்து விவரங்களையும் எடுத்துச் சென்று கோவில் பூசாரியிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். இரண்டு தினங்கள் கழித்து நிலா வேலைக்கு கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் அழைப்பு மணி கேட்டது. யாராக இருக்கும் என்ற யோசனையில் கதவைத் திறந்தவருக்கு அங்கு மீனாட்சி நிற்பதைக் கண்டதும் உள்ளே வருமாறு உபசரித்தார்.
மீனாட்சி சரஸ்வதியே உருத்து உருத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
‘என்னங்க அப்படி பார்க்கறீங்க’
‘நிலாவின் அப்பா பெயர்’ என்று கேட்ட மீனாட்சியை யோசனையாக பார்த்தார் சரஸ்வதி
‘சொல்லுங்க நிலாம்மா’
‘நிலா அப்பா பெயர் சக்ரவர்த்தி’
‘முழு பெயர் சொல்லுங்க நிலாம்மா’
‘ஏன் கேட்கறீங்க’ என்ற சரஸ்வதியின் குரலில் கலவரம் இருந்தது.
‘அவர் பெயர் சக்ரவர்த்தி பாண்டியனா’
பேயரைந்தது போல் இருந்தது சரஸ்வதிக்கு
‘சொல்லுங்க, நான் சொன்னது சரியா?’
‘ஆம் என்பது போல் தலையை அசைத்தார்’
அதைக் கண்டதும் இருக்கையிலிருந்து எழுந்து சென்று சரஸ்வதியை அணைத்தவர் ‘அண்ணி என்னைத் தெரியலையா? என்றதும்’ இல்லை என்று தலையை ஆட்டினார்.
‘அண்ணி நான் … நான்.. அண்ணன்’
‘மேடம் நீங்க ஏதோ குழப்பத்தில் இருக்கீங்க, வீட்டிற்கு கிளம்புங்க இன்னொரு நாள் பேசலாம்’
‘இல்லை நான் தெளிவாக இருக்கேன் அண்ணி’
‘நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் இன்னொரு நாள் பேசலாம் நீங்க கிளம்புங்க’
‘எதிலிருந்து தப்பிக்க நினைக்கறீங்க அண்ணி? நிலாவோட அப்பா உயிரோடுதான் இருக்கிறார், ஏன் அண்ணி நிலாவிடம் அப்பா இறந்திட்டார்னு சொன்னீங்க?’
‘எதைச் சொல்ல சொல்றீங்க, நிலாவோட அப்பா எங்களை அனாதையா விட்டுவிட்டு வேற ஒருவரை கல்யாணம் செய்துகிட்டார்னு என் பெண்கிட்ட சொல்லச் சொல்றீங்களா? அதற்கு நான் சொல்லி வைத்த காரணம் எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்’
‘..’
‘உங்களை தயவுசெய்து கேட்டுக்கிறேன் இதுவரை நாங்க எப்படி இருந்தோமோ அப்படியே இருந்துவிட்டு போகிறோம், புதிதாக எந்த உறவும் தேவையில்லை, கையெடுத்து கும்பிடுகிறேன் இந்த விவரத்தை நீங்க நிலாவிடம் சொல்லிடாதீங்க’ என்று அழத்தொடங்கினார்.
அழுதால் அவரின் மன பாரம் குறையும் என்றெண்ணிய மீனா அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அழுகை ஓய்ந்த போது சரஸ்வதியின் அருகில் வந்து அமர்ந்தவர் ஆறுதலாக அவரின் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு சமாதானம் செய்தார்.
’அண்ணி உங்களுக்கு நடந்த இழப்பை நிச்சயமா என்னால் ஈடு செய்ய முடியாது, அதற்கு மன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கோ என் குடும்பத்தாருக்கோ இல்லை ஆனாலும் என்னால் மன்னிப்பைத் தவிர கேட்பதற்கு வேறொன்றும் இல்லை, தயவுசெய்து மன்னிச்சிட்டேன் ஒரு வார்த்தை சொல்லுங்க அண்ணி’
‘உங்களை மன்னிக்க நான் யாரம்மா?’
‘அப்படி சொல்லாதீங்க, நானும் ஒரு பெண் தான் எனக்கு உங்களுடைய வேதனை புரியும், காலம் கடந்து மன்னிப்பை கேட்கிறேன் என் குடும்பத்தின் சார்பா, தயவுசெய்து மன்னிச்சுடுங்க அண்ணி’
‘எந்த புதிய உறவும் எனக்கு தேவையில்லை மேடம், என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததற்கு நான் என்றும் உங்களுக்கு கடமை பட்டிருக்கேன் அதைத் தவிர நமக்குள் வேற எந்த பந்தமும் வேண்டாம், வேற பேச்சும் வேண்டாம், புரிஞ்சுக்கோங்க’
’அண்ணி நான் உங்களை தொந்திரவு செய்ய வரவில்லை. உங்களையும் நிலாவையும் பார்த்த நாள் முதல் எங்கோ பார்த்த உணர்வு மனதில் தோன்றியது ஆனால் அதை ஆராயப் போகவில்லை. அதற்கான காரணம் இன்றுதான் புரிந்தது. அதுதான் உடனே இங்கே கிளம்பி வந்து விட்டேன். உங்களுக்கும் நிலாவிற்கும் என்றும் நான் துணையாக இருப்பேன்’ என்றவரை கசந்த முறுவலுடன் பார்த்த சரஸ்வதி எதுவும் பேசவில்லை.
‘சரி அண்ணி, நான் கிளம்புறேன்’ என்று விடை பெற்றுச் சென்றார்.
சரஸ்வதிக்கு தன்னுடைய இளமைக் காலம் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வந்தது. சரஸ்வதி படிக்கும் அதே கல்லூரியில்தான் மீனாட்சியும் படித்து வந்தார். மீனாவை அழைக்க தினமும் வரும் சக்ரவர்த்தி பாண்டியன் என்கிற மீனாவின் ‘பாண்டி அண்ணன்’ பேருந்து நிறுத்தத்தில் தனது தோழிகளுடன் கிண்டலும் கேளியுமாக நிற்கும் சரஸ்வதியை ஒரு புறமாக காதலித்தார். மீனா கல்லூரிக்கு வராத நாட்களிலும் சரஸ்வதியை காண்பதற்காக வரும் பாண்டி ஒருநாள் தனது மனதை சரஸ்வதிக்கு தெரிவித்து யோசித்து பதில் சொல்லுமாறு கூறிவிட்டுச் சென்றான். எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் அழகாகவும் நேரடியாகவும் தன் காதலை தெரிவித்த பாண்டியனை சரஸ்வதிக்கும் பிடித்திருந்ததது. பார்வையாலே காதல் செய்தவர்கள் நாட்கள் நகர நகர யாருக்கும் தெரியாமல் ஒன்றாக ஊர் சுற்றித் திரியத் தொடங்கினர்.
சரஸ்வதி சிறிது வசதி வாய்ப்பு உள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், சரஸ்வதிக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தனர். தந்தை அரசு பணியில் இருந்தார் அவரைப் பிண்பற்றி இரண்டு அண்ணன்களும் அரசு பணிகளில் தேர்ச்சி பெற்று நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சக்ரவர்த்தி பாண்டியன் குடும்பம் பரம்பரை பணக்காரர்தான் அனால் தந்தையின் குடிப்பழக்கத்தினால் குடும்ப சொத்தை அனைத்தையும் இழந்தனர். பரம்பரை பணக்காரர்களுக்கு ஒரு சாபம் உண்டு, அவர்களை ஊர் என்றும் பணக்காரர்களாகத்தான் பார்க்கும், மற்றவர்களைப் போல அவர்களுக்கு எளிதாக எந்த வேலையும் செய்ய முடியாது, பணம் இல்லை என்று வெளியில் சொல்ல இயலாது. தங்களது முன்னோர் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையை சிறிதளவும் குறையாமல் ஊர் மக்களின் முன் வாழ்ந்தாக வேண்டும். அதைத்தான் பாண்டியனும் மீனாவும் வாழ்ந்து கொண்டிருந்தினர். குடித்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை சேர்த்துவைத்த கடனை அடைக்க வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தனர். அந்த வரண்ட வாழ்க்கையில் தனக்கு கிடைத்த பொக்கிஷமாகத்தான் சரஸ்வதியை நினைத்தார் சக்ரவர்த்தி பாண்டியன்.
இந்நிலையில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆசிரியை பணிக்கு தேர்வு எழுதிய சரஸ்வதி அதில் வெற்றியும் கண்டார். தங்களது கிராமத்திலிருந்து புதிய நகரமான சென்னைக்கு வந்த சரஸ்வதி முதன் முதலில் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த ஏக்கம் ஏதும் இல்லாமல் பாண்டியன் பார்த்துக் கொண்டார். சரஸ்வதியின் அண்ணன்கள் வராத வாரங்களில் சரஸ்வதிக்கு துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து தந்தார். திருமணம் ஆகாமலே கணவன் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யும் பாண்டியனை உயிராக நினைத்தார் சரஸ்வதி.
இதற்கிடையில் மீனாட்சிக்கு திருமணமும் நடந்தது அதுவும் சென்னை மாப்பிள்ளை என்பது பாண்டியனுக்கு வசதியாகப் போனது. தங்கையையும் காதலியையும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் விதி தனது வேலையைக் காட்டியது.
எத்துனை நேரம் பழமையை நினைத்துக்கொண்டிருந்தாரோ அலைப்பேசி மணி அடிக்கவும்தான் சுயநினைவிற்கு வந்தார் சரஸ்வதி. நிலாதான் அழைத்திருந்தாள் சமயத்திற்கு மருந்து உண்டாரா இல்லையா என்று விசாரித்துவிட்டு வைத்துவிட்டாள். எல்லாவற்றையும் கனவாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தவரை மீனாட்சி ஞாபகப் படுத்திவிட்டார். தனது கடந்த கால வாழ்க்கையைக் குறித்து மகளிடம் இதுவரை எதுவும் சரஸ்வதி கூறியதும் இல்லை, நிலாவும் அதனை குறித்து விசாரித்ததும் இல்லை. தரகரை ஒருமுறை அழைத்து ஜாதகம் ஏதேனும் பொறுத்தம் உள்ளதா என்று விசாரித்தவர். இதுவரை எதுவும் சரியாகவில்லை என்ற பதிலைக் கேட்டதும் சரி என்று அழைப்பை துண்டித்துவிட்டு வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.
வேலையில் மூழ்கியிருந்த நிலா பழக்கதோஷத்தில் ஷீலாவின் இருக்கையை பார்ப்பதும் பின்பு வேலையை கவனிப்பதுமாக இருந்தாள். அவள் குழுவிலும் ஷீலாவின் குழுவிலும் ஏறக்குறைய அனைவரும் கேட்டாகிவிட்டது ஷீலாவின் திடீர் திருமணமும் அவளது ராஜினாமாவின் காரணத்தையும். நிலாதான் சமாளிக்க முடியாமல் திணறினாள். நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு சென்றேன் என்று சொல்வதா, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என்று சொல்வதா என்று குழம்பிப் போனாள். தாயின் உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதித்திருந்த சமயத்தில் விடுப்பு எடுத்த நிலாவை ஷீலாவின் திருமணத்திற்காக நிலா விடுப்பு எடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டவர்களும் உண்டு.
தனிமையிலேயே உணவு உண்ணவும் தேநீர் அருந்தவும் சென்று கொண்டிருந்த நிலா தற்போது யாரேனும் துணையிருந்தால் மட்டும் போதும் நிலைக்கு ஆலானாள். ஷீலாவின் ஞாபகங்கள், தான் தனிமை படுத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்வு இவற்றையெல்லாம் விட அவள் ஒதுங்கியது ஆகாஷிற்காக. ‘ப்ரோ ப்ரோ’ என்று அழைக்கும் ஷீலாவைக் குறித்து ஒரு வார்த்தை கூட பேச விரும்பாதவன் தன்னையும் எதிரியாக பார்ப்பது இன்னும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
‘ஹே நிலா என்ன எப்போ பார்த்தாலும் வேற உலகத்திலேயே இருக்கிற’
‘இ..இல்லை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’
‘அப்பறம் எப்படி, மூன்று முறை நிலா நிலான்னு கூப்பிட்டோம், எந்த யூஸும் இல்லை, நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வான்னு பாடனுமா?’
‘ஹி ஹி ஹி’
‘சரி சரி கேட்டதற்கு பதில் சொல், புது சி.ஈ.ஓ -விற்கு எவ்வளவு மார்க்க் குடுக்கலாம்’
‘எதுக்கு மார்க்? புது சி.ஈ.ஓ வா?’ என்று விழித்தாள்.
‘அம்மா தாயே நீ ட்ரீம்ஸ்லயே இரு, உன் முட்டை கண்ணை உருட்டாதே’
’…’
’கம்பெனி ஆண்டு விழாவின் போது அறிமுகம் செய்தாங்களே நம்முடைய புதிய சி.ஈ.ஓ நீ பார்க்களையா நிலா? பகுதியிலே வரேன் சொல்லிட்டு போன அதுக்கப்புறம் லீவு, மே பி உனக்கு தெரிய வாய்ப்பில்லை, நாங்களும் ஆவலா..ஹூம் ஆசையா எதிர்பார்த்திட்டிருக்கோம், சர்ப்ரைஸ் ஃப்லோர் விசிட் பண்ணுவார்னு’
‘ஓ’
‘யெஸ் யெஸ்’
‘சரி டைம் ஆயிடுச்சு, கொஞ்சம் ஒர்க் இருக்கு நான் கிளம்பறேன், யூ கேரி ஆன் கைய்ஸ்’
‘ஷூர் நிலா’
அனைவருக்கும் விடை கொடுத்து எழுந்து வந்தவள் எதிர்புறம் டேபிளில் அமர்ந்திருந்த ஆகாஷைப் பார்த்ததும் சிறிது தேங்கினாள், அவனும் நிலாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் தான் அதன்பிறகு வேகமாக நடந்து சென்று விட்டாள்.
‘திமிர்’ என்று முனுமுனுத்தவன் அலைப்பேசியில் குருஞ்செய்தி வந்ததும் வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.
--
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதிக்கு அலைப்பேசியில் அழைப்பு வந்தது.
‘சொல்லுங்க அய்யரே’
’அம்மா, உங்க பெண் ஜாதகம் எனக்கு தெரிந்த ஒரு பையனோட ஜாதகத்துடன் பொருந்தியிருக்கு, அது விஷயமா பேசலாம்னு உங்களை அழச்சேன்’
‘ரொம்ப சந்தோஷம் சாமி, வேற விவரம் ஏதும்’
‘எல்லா விவரத்தையும் நாளைக்கு நேரில் பேசலாம், நான் இன்னும் பையன் வீட்டில் பேசல. உங்களுக்கு சம்மதம்னா பையன் வீட்ல பேசலாம்னு நினைச்சேன். சரி அய்யரே, நாளைக்கு நேரில் பேசலாம்’
சரஸ்வதிக்கு மகிழ்ச்சியாகவும், பதட்டமாகவும் இருந்தது. எல்லாம் நல்லதாக அமையனும் கடவுளே என்று வேண்டிக்கொண்டார்.
எல்லாம் சரியாக அமைந்தால் நிலாவிடம் சொல்லலாம் இல்லையென்றால் அவள் தொடக்கத்திலேயே மறுத்துவிடுவாள் என்றெண்ணியவர் அது குறித்து ஏதும் நிலாவிடம் பேசவில்லை.
காலையில் மகள் வேலைக்குச் சென்றதும் கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். பூஜைகளை முடித்துவிட்டு வந்த அய்யர் ‘நிலாமா, சொல்றேன்னு தப்பா எடுக்காதீங்க. நம்ம பெண் வாழ்க்கை நல்லபடியா அமையனும். அதனால் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் மறுத்துடாதீங்க’
‘சரி அய்யரே, முதலில் விவரத்தை சொல்லுங்க’
‘பையன் வீடு இங்க சென்னைதான், ஒரே பையன், வெளிநாட்டில் படிச்சிருக்கான். அவங்களுக்கு சொந்த கம்பெனி இருக்கு.. அம்மா யோசிக்காதீங்க, நீங்க நினைக்கிற மாதிரி அவங்க பரம்பரை பணக்காரர்கள் இல்லை. பையனோட அப்பாதான் கம்பெனியை ஆரம்பிச்சது அது படிப்படியா வளர்ந்து இன்னைக்கு சென்னையில் சொல்லப்படுகிற பெரிய பணக்காரர்களில் ஒருவர்’
‘அய்யரே, பெரிய இடம் எங்களுக்கு வேண்டாம்’
‘அப்படி யோசிக்காம எடுத்தோம் கவுத்தோம்னு ஒரு முடிவை சொல்லாதீங்கம்மா, அது மட்டும் இல்லை ஒரு சின்ன தோஷம் பையன் ஜாதகத்தில் இருக்கு, அதனால தீர்க மாங்கள்ய பாக்கியம் உள்ள ஜாதகம் தான் சேரும். உங்க பெண் ஜாதகத்தில் அது நூறு சதவீதம் இருக்கு நம்பி கல்யாணத்தை செய்யலாம்’
‘அய்யரே, எனக்கு இருக்கிறது ஒரே பெண்’
‘அம்மா, பயப்பட ஒன்னும் இல்லை, அது ஒரு சின்ன தோஷம் தான். பையனோட அம்மாவும் அதனாலதான் பெண் பார்க்க தயங்கராங்க, என்னதான் இருந்தாலும் சொந்த பையன் இல்லியா கல்யாணம் பண்ணாம இருக்க முடியுமா?’
தொடரும்..