அனல் 24
(பொருளடக்கம்)
பித்ரு தோஷம் நியாயமோ!
அவர் வினை அவரவர்
அனுபவித்திடலகாதா!
தன் முன்னால் நின்றுக் கொண்டு.. சூர்யா இறந்துவிட்டான் என்றுக் கூறியதைக் கேட்ட சோமேஸ்வரனுக்கு திக்கென்று இருந்தது. அதே நேரத்தில் விதார்த்தும் மைதிலியும் வந்துவிட.. அவர்கள் அழைத்தும், சூர்யா திரும்பியும் கூடப் பார்க்காமல் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து.. சோமேஸ்வரனின் கால்கள் தானே பின்னே சென்றன.
சூர்யா நெருங்கி வரவும்.. சோமேஸ்வரன் “இல்லை நீ பொய் சொல்லுறே..” என்ற கத்தினார். மழை நின்று காலைப் பொழுது தொடங்கும் வேளை வந்திருக்கவும், அவரது குரல் அந்த மலையெங்கும் எதிரொலித்தது. அதுவே அவருக்கு பீதி கிளப்பவும், உடல் நடுங்க.. நின்றிருந்தவருக்கு.. சூரியன் ஒளியைப் பரப்பி.. வெளிச்சத்தைக் கொண்டிருக்க.. அவருக்கு ஏனோ இருட்டிக் கொண்டே போவது போல் இருந்தது. கண்கள் சொருக.. மயக்கம் போட்டு விழுந்தார்.
சோமேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்ததும்.. அவரை நோக்கி ஓடிய சூர்யா அவரது கழுத்து நாடியில் விரலை வைத்துப் பார்த்தான். பின் மணிக்கட்டை பிடித்துப் பார்த்தவன், “என்ன சோமேஸ்வரன் உங்க கிட்ட இருந்து நான் இன்னும் நிறையா எதிர்பார்த்தேனே.. அவ்வளவுத்தானா உங்க தைரியம்! ஆவி என்று பயமுறுத்துவது என்றால் எப்படியிருக்கும்.. என்று இப்போ புரிந்ததா!” என்றுவிட்டு அவரது தோளில் தட்டிவிட்டு எழுந்தவன், திரும்பி விதார்த்தை பார்த்து “வாங்க ஒரு கை பிடிங்க..! வெறும் மயக்கம் தான்” என்று அழைத்தான்.
ஆனால் விதார்த்தும்.. மைதிலியும் இன்னும் திகைப்பில் இருந்து நீங்காது நிற்கவும், சூர்யா ‘இவர்களுக்கு என்னவாகிற்கு’ என்பது போல் பார்த்தான். பின் தெளிந்தவனாய் “ஓ! நான் மிஸ்டர் சோமேஸ்வரனுக்கு சொன்னதை நீங்களும் நம்பிட்டிங்களா! அது அவரைப் பயமுறுத்த அப்படிச் சொன்னேன். ஹெ கைய்ஸ் லுக் அட் மை ஹன்ட்! முதல்ல இவ சித்தப்பா கிட்ட இருந்து சராமாரியா அடி வாங்கினேன். அப்பறம் குண்டடி, அந்த கையோட.. மைதிலியை காப்பாத்தா மண்ணை வாரிப் போட்டேன். அந்த சுரங்கப்பாதையில் இருந்து வரும் போது.. இவர் அந்த உண்டியலை ஓங்கி அடித்தார்.. நல்லவேளை கையால் தடுத்தேன். இல்லைன்னா நான் பொய்யா சொன்னது உண்மையாலுமே நடந்திருக்கும். அப்படியொரு அடி.. என்னால் கையை தூக்கவே முடியலை. இந்த ஒத்த கையை வச்சுட்டு.. எப்படி இவரோட சண்டை போடறது. ஆள் தான் பழசு.. ஆனா அடி ஒண்ணும் இடி மாதிரி விழுது. கையில கூரா கட்டை வேற வச்சுருந்தார். அதுதான் பொய் சொல்லி பயமுறுத்தி பார்த்தேன். வொர்க் அவுட் ஆகிடுச்சு..” என்றுத் தோள்களைக் குலுக்கினான்.
உடனே அவனிடம் வந்த மைதிலி.. தனது கரங்களை கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
“இப்படியா பொய் சொல்லுவீங்க! நான் பயந்தே போயிட்டேன்.” என்று அவனது மார்பில் அடிக்கவும், ஒரு கையால் அவளை எளிதாக அடக்கியவன், தன்னுடன் அணைத்துக் கொண்டான். விதார்த் இன்னும் குழப்பத்துடன் சூர்யாவை பார்க்கவும், சூர்யா “இந்த விசயத்தை எல்லாம் முடிச்சுட்டு நாம் கண்டிப்பாக பேசலாம் ஸார்..” என்று கண்ணடித்தான்.
இரு வாரங்களுக்கு பிறகு..
தோள்பட்டையில் சிறு பான்டேஜ்ஜும்.. புறங்கையில் எலும்பு முறிந்ததின் பயனாக அசைவு கொடுக்காமல் இருக்க தகடு வைத்து கட்டப்பட்ட கட்டுமாக அந்த மலைக்காட்டின் முதலில் இருந்த மலையின் உச்சியில் நின்றிருந்த சூர்யா சுற்றிலும் பார்த்தான். இதுவரை நான்கு மலைகளில்.. இடி தாங்கியை பொருத்தியிருந்தார்கள். மற்ற மலைகளிலும் பொருத்தும் வேலை சிறிது சிறிதாக நடந்துக் கொண்டிருந்தன. பத்து நாட்களுக்கு முன்.. சூர்யாவும் விதார்த்தும்.. அவர்களுடன் சில ஊர் மக்கள் சென்று மனு கொடுத்ததின் பயனாக.. இவ்வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன மேலும் அவன் நின்றுக் கொண்டிருக்கும் இந்த மலையில் முருகர் கோவில் ஒன்று சிறிதாக கட்ட அஸ்திவாரம் போடப்பட்டது. அடுத்த வாரத்தில் இருந்து அதன் பணிகள் தொடங்கும்! மேலும்.. அடுத்து இருந்த செங்குத்து பாறைகளால் ஆனா மலை. அடுத்து சேற்றுகுழிகள் அதிகமாக இருந்த மலை.. என்று ஆபத்தான மலைகள் கண்டறிப்பட்டு ஆபத்தானது என்று போர்ட் மாட்டப்பட்டு.. கம்பி வேலிகள் போடும் வேலைகளும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பத்து நாட்களுக்கு முன்.. ஊர்மக்களுடன் பேசியதை நினைத்துப் பார்த்தான்.
தன்னுடன் விதார்த் மற்றும்.. அவனது நண்பர்களுடன் மைதிலியை அழைத்துக் கொண்டு அனைத்து மக்களையும் சந்திக்க.. ஏற்ற இடமாக ரேஷன் கடையை தேர்ந்தெடுத்தான். அங்கு தான் மக்கள் அனைவரும் கூடுவார்கள். அவர்கள் பேசுவதையும் தவிர்த்து போக முடியாது என்று நினைத்தான்.
அங்கிருந்தவர்களுடன் பேச வேண்டும் என்றுக் கூறியதும்.. அவர்கள் மைதிலியை வெறுப்புடன் பார்த்ததைப் பொருட்டாக எடுக்காமல் சூர்யா பேச ஆரம்பித்தான்.
“நான் மைதிலியின் ஹஸ்பென்ட்! மைதிலி உங்க கிட்ட சில விசயங்களைப் பேச விரும்புற.. ப்ளீஸ் அவ என்ன சொல்கிறானு கேளுங்க! முழுவதுமாக கேட்ட பின் நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி..” என்றான்.
அவர்கள் அமைதியாக நிற்பதே அனுமதியாக ஏற்றுக் கொண்டு மைதிலி “நான் இதுவரைக்கும் இதைக் கேட்டதில்லை. ஆனால் கேட்கணும் என்று நிறையா தரம் நினைச்சுருக்கேன். நினைச்சுட்டே இருக்க கூடாதுனு இப்போ தான் எனக்கு புரிஞ்சுது.” என்றவள் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
“என் தாத்தா.. உங்க மூதையர்களுக்கு செய்த.. கொடுமைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” என்றதும்.. அங்கிருந்தவர்கள்..
“அட போ! இத சொல்ல தான் வந்தியா!”
“தளுக்கா மன்னிப்பு கேட்டுட்டு வந்துட்டா.. என் பாட்டி தற்கொலை செய்திருச்சு தெரியுமா!”
“என் தாத்தா.. இந்த இடமெல்லாம் நம்மளோட சொத்தா இருந்திருக்க வேண்டியதுனு சில இடங்களைக் காட்டும் போது.. எங்களுக்கு எப்படியிருக்கும் தெரியுமா..”
“இப்போ என்ன அதுக்கு மன்னிப்பு கேட்டு.. ஜெயிலுக்கு போறீயா..” என்று பல குரல்கள் ஆத்திரத்துடன் வந்தன.
இம்மாதிரி பேச்சுகள் வரும்.. என்று சூர்யா முதலிலேயே கூறித் தான் மைதிலியை அழைத்து வந்தான். ஆனாலும்.. இப்பேச்சுக்கள் அவளைப் பாதித்தது. கண்களை இறுக்க மூடி நின்றிருந்தவளைப் பார்த்த சூர்யா மெல்ல காயம் படாத கரத்தை உயர்த்தி யாருக்கும் தெரியாமல் அவளது முதுகில் வருடிக் கொடுத்தான். அவளுள் திடம் பெறுவதை உணர்ந்தாள்.
அனைவரும் அவளைத் திட்டி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தாள். பின் நிமிர்ந்த மைதிலி "செய்த தப்பிற்கு ஜெயிலுக்கு போய் தான் தண்டனை அனுபவிக்கணும் என்றில்லை. வாழ்ந்தே அனுபவிக்கலாம். நாங்க வாழ்ந்து அழிந்ததை நீங்க பார்த்துட்டு தான் இருந்திருப்பீங்க!" என்றவள் சிறு பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு தொடர்ந்து பேசினாள்.
"அறுபது வருஷத்துக்கு முன்பே என் குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்தாங்க.. அதுக்கு பிறகு உங்க கிட்ட இருந்து அநியாயமா பறித்த நிலபுலன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து.. செல்வ நிலையில் ரொம்பவே தாழ்ந்தோம். அப்பறம் முப்பது வருஷத்துக்கு முன்னாடி.. மறுபடியும் மாறன் ஆவி எங்களை மட்டுமில்லாம உங்களையும் பயமுறுத்துச்சு! அதனால பணம் இல்லைன்னாலும் நிம்மதியாக இருக்கலாம் என்றுப் பார்த்தால் அதுவும் முடியலை. நாலு வருஷத்துக்கு முன்னாடி ஆதிகேஷன் என்ற ஜோசியர் வந்து.. குலதெய்வம்.. பூஜை.. பழி வாங்க துடிக்கும் மாறனின் ஆத்மா, எங்களோட அழிவு என்று இன்னும் பயமுறுத்தினார். அதுக்கு தகுந்த மாதிரி.. முதல்ல என் பெரியப்பா பேமலி எங்களை விட்டுப் போனாங்க.. அப்பறம் என் சித்தப்பா இறந்தார். கல்யாணமான ஆண்கள் அவங்க மனைவியுடன் சரியா வாழுலை. அப்பறம் இப்போ இந்த நாலு நாளுக்கு முன்.. ஒரே இரவில் அத்தை பேமலியும் விட்டுட்டு போயிட்டாங்க! தாத்தா இடிப்பாட்டுல சிக்கி இறந்துட்டார். அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து ஹாஸ்பெட்டல அட்மிட் ஆகிருக்கார். இரண்டு நாள் விடாம பெய்த மழையால் எங்களோட மாளிகை பின் பக்கம் முழுவதும் சரிந்திருச்சு! இப்போ நானும் வீடில்லாமல் தான் நிற்கிறேன்." என்றாள்.
அங்கு நின்றிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில்.. சிறு திருப்தியும் நிலவியது.
மைதிலி தொடர்ந்து "இந்த நிலைமையில் எனக்கு கிடைத்த ஒரே அதிர்ஷ்டம் என் கணவர் சூர்யா! நான் இவருடன் நல்லபடியா வாழ ஆசைப்படரேன். உங்களால் எங்க குடும்பம் சுமந்த பாவங்களை இறக்கி வைக்க ஆசைப்படறேன். தப்பு செய்தா.. மன்னிப்பு கேட்கணும், நான் மன்னிப்பு கேட்டுட்டேன். தண்டனை அனுபவிக்கணும், அதையும் அனுபவிச்சுட்டோம், அடுத்து பிராய்சித்தம் செய்யணும். அந்த பிராய்சித்தத்தை செய்து பாவத்தை கழிக்க நினைக்கிறேன்.”
“நம்மைப் பயமுறுத்திட்டு இருந்த மாறனின் ஆவி பொய் என்று என் ஹஸ்பென்ட் கண்டுப்பிடித்தார். அந்த ஜோசியர் தான்.. அந்த மலைக்காட்டில் தங்க பெட்டியை தேட.. ஆவியா நடிக்க ஆளை ஏற்பாடு செய்திருக்கிறார். அதையும் என் ஹஸ்பென்ட் தான் கண்டுப்பிடித்தார். இப்போ அவங்க தலைமறைவாக்கியதையும்.. அவங்களை போலீஸ் தேடிட்டு இருக்கிறதும் உங்களுக்கு தெரியும்.”
“முப்பது வருஷமா தேடியும் அந்த பெட்டி கிடைக்கலை. அந்த பெட்டிகளை மாறன் எழுபது வருஷத்திற்கு முன்னாடி புதைத்திருக்கிறார். இத்தனை வருஷத்துல.. மண்ணோடு மண்ணா ஆழமாக உள்ளே போயிருக்கும் என்பது என் ஹஸ்பென்ட்டோட கணிப்பு! அது சையின்டிவ்விக்கா ஃப்ரூவ் ஆகிக்கு! அந்த பெட்டியை எடுக்கணும் என்றால் மலையை புரட்டி போட்டா தான் முடியும். அதுக்கு பூகம்பம் தான் வரணும்.” என்று இகழ்ச்சியாக சிரித்தாள்.
பின் தொடர்ந்து “ஆனா அதுக்குள்ள அந்த மலைக்காட்டில எத்தனையோ உயிர்கள் பலி போயிருச்சு! எங்க அழிவோட சின்னமா அந்த அழகான மலைக்காடு இருக்கு! அதை மாத்தலானு இருக்கேன். மலைகள் என்றாலே முருகன் தான்! அதனால அங்கே சின்ன முருகர் கோவில் கட்டலானு நினைக்கிறேன். அதே மாதிரி அங்கே.. இடி தாங்கிகளை வைக்க கவுர்மென்ட் கிட்ட மனு கொடுக்கலானு இருக்கேன். அந்த மலைகளையும் கவுர்மென்ட் அன்டர் கன்ட்ரோல்லா கொண்டு வர மனு கொடுக்க போறேன். இதுக்கு நீங்கெல்லாம் ஒத்துழைக்கணும்.” என்றாள்.
பின் தொடர்ந்து “இவங்க அதை கவுர்மென்ட்டிடம் சரியாக சேர்ப்பாங்க!” என்று விதார்த்தையும் அவர்களது நண்பர்களையும் காட்டினாள்.
பின் மைதிலி “கண்டிப்பா சேர்ப்பாங்க! இவங்களுக்கு இந்த ஊருக்கும் மட்டுமில்ல.. நான் பேசிட்டு இருந்த விசயத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு. இவர் வேற யாருமில்லை. மாறனின் கொள்ளு பேரன் தான் இவர்!” என்றதும்.. அங்கிருந்தவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.
தற்பொழுது விதார்த் முன்னே வந்து.. அவனது பாட்டி.. தனது அன்னையான மாறனின் மனைவியுடன் எவ்வாறு தப்பி வந்தார் என்றுக் கூறியதைக் கூறினான். தப்பித்து வந்து வாழ்க்கையை ஓட்டிய அவர்களது தலைமுறை வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். அவனது பாட்டி கூறியதின் பேரில் இங்கு வந்து பார்த்த பொழுது.. அவனது தாத்தாவின் ஆவி.. என்றுக் கூறி.. யாரோ ஏமாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அது யார் என்றுக் கண்டுப்பிடிக்க தலைமறைவாக இருந்ததாகவும், பின் சூர்யாவின் உதவியுடன் கண்டுப்பிடித்தாக கூறினான். அவனும் சோமேஸ்வரன் மற்றும் பெட்டியை பற்றிய விசயத்தை மறைத்தான்.
விதார்த் மாறனின் கொள்ளு பேரன் தான் என்று ஊர்ஜீதமானதும்.. அந்த ஊர் மக்கள் அவனைச் சுற்றி நின்று ஆவலுடன் பேசினார்கள். அதில் இருந்தே.. இன்னும் மாறன் அங்கு ஒரு கதாநாயகனாக விளங்குவது அனைவருக்கும் புரிந்தது.
பின் விதார்த் “இது ஜமீன் குடும்பத்தின் அதிகாரத்தின் மேல் இருந்த எதிர்ப்பு, வெறுப்பின் பிரச்சினையாக தான் ஆரம்பித்தது. அதுல இந்த ஊரோட நலன் தான் இருந்துச்சு! ஆனா இந்த பிரச்சினை முடியும் போது.. இதுல ஊர் பிரச்சினை மட்டும் இருக்கட்டும் என்று விரும்பறேன். ஒருவேளை.. ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவங்க.. இன்னும் உங்க மேலே அதிகாரத்தை செலுத்திட்டு இருந்தா.. என் முடிவு வேறாக இருந்திருக்கும். ஆனால் மைதிலி சொன்ன மாதிரி.. அவங்க நிறையா தண்டனை அனுபவிச்சுட்டாங்க! அதுனால பழிக்கு பழி வாங்குவது.. இன்னும் வெறுப்பை காட்டுவது என்பது வேண்டாமே.. அதற்கு பதிலாக.. இப்போ மைதிலி கூறியதை போலவும்.. இன்னும் இந்த ஊருக்கு பல நலன்கள் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அதற்கான செலவை டிரஸ்ட்டிடம் இருந்தும்.. கவுர்மென்ட்டிடம் இருந்து வாங்கி தர நாங்க முயல்கிறோம்.” என்றான்.
உடனே அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்தார்கள். விதார்த்தின் கையைக் குலுக்கி.. நன்றி கூறினார்கள். ‘இது என் ஐடியா இல்லை..’ என்று மறுத்தான். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. திகைப்பும் குழப்பமுமாக சூர்யாவையும் மைதிலியையும் பார்த்தான். அவர்கள் அவனைப் பார்த்து சிரித்தவாறு நின்றார்கள்.
சதீஷ் என்னதிது என்பது போல் சூர்யாவை பார்த்தான். அதற்கு சூர்யா “இன்னும் இந்த மக்கள் மாறவே இல்லை. ஒன்று யார் பின்னால் போகணும்.. இல்லை.. அவங்களை கொண்டாடணும்.” என்றுச் சிரித்தான். அப்பொழுது அவனை யாரோ உற்றுப் பார்ப்பது போன்று இருக்கவும், தலையை திருப்பிப் பார்த்தான். ரேஷன் கடைக்கு அருகில் இருந்த வீட்டில் இருந்த பெரியவர், கை தடி ஊன்றியவாறு தள்ளடியவாறு வெளியே வந்தார். அவரது பார்வை சூர்யாவின் மேல் தான் இருந்தது. உடனே சூர்யாவிற்கு இங்கிருப்பது சரியில்லை என்றுத் தோன்றவும், அங்கிருந்து மைதிலியை அழைத்துக் கொண்டு சென்றான்.
அதற்கு பிறகு அவர்கள் திட்டமிட்டபடி வேலைகள் கடகடவென நடந்தது. சோமேஸ்வரன் எடுத்து வந்த பையில் இருந்த.. தங்கங்களை அவர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை. ஒரு பெட்டி கிடைத்தது என்பதை அனைவரிடமும் இருந்து மறைத்தார்கள். அப்பணம் சரியாக மக்களை சென்றயைடைய வேண்டும் என்பது ஒரு காரணம் என்றாலும்.. ஒரு பெட்டி கிடைத்தது தெரிந்தால்.. மற்ற பெட்டிகளும்.. அங்கு தான் இருக்கும் என்று யாரும்.. வந்து விடக் கூடாது என்பது மற்றொரு காரணம்! எனவே தான் சூர்யா முதலில் கூறியதையே கூறினார்கள்.
புதிதாக நிறுவனம் ஒன்றை தொடங்கி டென்டர், மற்றும் நிதியுதவி என்கிற பெயரில் அந்த தங்கங்கள் இந்த ஊரின் வளர்ச்சி பணிக்கும்.. நலத் திட்ட உதவிகளுக்கும் பயன்படும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும்.. அன்று வெடி வெடித்தது மற்றும் பலத்த மழையின் காரணமாக அவர்களது ஜமீன் மாளிகை பின் பகுதி முழுவதுமாக சரிந்து விழுந்தது.
அந்த இடிந்த மாளிகையை சீரமைப்பது என்பது கடினமான காரியம் ஆகும். எனவே சூர்யாவின் யோசனையின்படி அந்த மாளிகையில் இருந்த வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள், சன்னல்கள், மர அலமாரிகள், பொருட்கள், மேசை நாற்காலிகள்.. போன்ற பழம் பொருட்களில் அதிகம் சேதமாகாத பொருட்களை மட்டும் சேகரித்து அதைக் கொண்டு அவர்களது குத்தகை நிலத்தில் அந்த மர வேலைப்பாடு கொண்ட கதவுகள் மற்றும் சன்னலை பொருத்தி.. வீடு கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. வீடு கட்டுவதற்கும்.. குத்தகை நிலத்தை சொந்தமாக வாங்குவதற்கும்.. மேலும் அங்கு விவசாயத்தை அவர்களே பார்ப்பதற்கும்.. தேவையான பணத்திற்கு மட்டும் அந்த பெட்டியில் உள்ள தங்கத்தை பயன்படுத்திக் கொண்டான்.
ஒரு வீடு மைதிலின் பெயரிலும் நிலம் அவனது அண்ணன் பெயரிலும் எழுதி வைக்க ஏற்பாடு செய்தான். ஏதேதோ நடந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்த மைதிலியின் அண்ணன் கார்த்திகேயன் அந்த நிலத்தில் விவசாயம் பார்த்தும்.. சிறு மில் ஒன்று கட்டி அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினான். அவனின் பிரிவில் வாடியிருந்த அவனது மனைவி.. அவளது தந்தையின் பேச்சை மீறி.. கார்த்திகேயனுடன் வந்துவிட்டாள். வீடு கட்டி முடிக்கும் வரை.. மூன்று அறைகள் கொண்ட சிறு பண்ணை வீட்டில்.. மைதிலியும்.. அவளது அண்ணன் மனைவியுடனும் வசித்தார்கள். சூர்யா.. அந்த கைக்கட்டுடன்.. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வருவது.. என்று இருந்தான். ஒருநாள் கூட முழுவதுமாக தங்கவில்லை. அவன் கூறியவைகளை செயல்படுத்த விதார்த்துடன் அலைந்துக் கொண்டிருந்தான்.
இந்த இரு வாரத்தில்.. இத்தனை விசயங்களும் நடந்துவிட.. சிறு பெருமூச்சுடன் அதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது ‘சூர்யா’ என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தான். அங்கு விதார்த்தும் மைதிலியும் நின்றிருந்தார்கள்.
மைதிலியை பார்த்ததும் சூர்யா “ஹாய் பொண்டாட்டி!” என்றான்.
மைதிலி “எப்போ வந்தீங்க? நான் ஹாஸ்பெட்டல் போய்.. அப்பாவை பார்த்துட்டு இப்போ தான் வரேன்.” என்றாள்.
சூர்யா “ம்ம்! அப்பா எப்படியிருக்கிறார்?” என்றுக் கேட்டான்.
மைதிலி “விஷம் கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியேறுமாம். விஷம் மூளைக்கு எட்டுவதற்குள் கூட்டிட்டு வந்துட்டோம் என்றாலும்.. நரம்புகள் மூலம்.. மூளைக்கு போகாமல் இருக்க ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு! ஆனா சரியாகிருவார் என்றுத் தான் சொல்றாங்க..” என்றாள்.
சூர்யா “அவரோட மனநிலை எப்படியிருக்கு! நான் வந்த போது.. நாம் சொன்னதை நம்பலை.. இன்னும் அப்படித்தான் சொல்லிட்டு இருக்கிறாரா?” என்றுக் கேட்டான்.
மைதிலி “இல்ல! இப்போ அமைதியா இருக்கிறார். அதுக்கு ஊர் சனங்க கிட்ட சொன்னதை அவரும் ஏற்றுக்கிட்டார் என்றுத் தானே அர்த்தம்! இனி தங்கம், பெட்டி, புதையல் என்றுப் போக மாட்டார் என்று நம்பறேன்.” என்று பெருமூச்சை இழுத்துவிட்டாள்.
சூர்யா “உன் அத்தை அதுக்கு பிறகு.. கான்டெக்ட் செய்தாங்களா?” என்றுக் கேட்டான்.
மைதிலி “இல்லை! ஆதிகேஷன் என்கிற ஜோசியன் பேச்சை கேட்டு ஏமாந்திருக்கோம் என்று அன்னைக்கே வீட்டை விட்டுப் போனவங்க! இந்த நிலத்தை வாங்கிறோம் என்றதும் வந்தாங்க.. ஆனா நீ கேட்ட கேள்வியில் திரும்பியும் கூடப் பார்க்காம போனவங்க. அப்பறம் வரவேயில்ல! போலீஸில் பிடித்துக் கொடுத்திருவேன் என்று நீ மிரட்டினதில் பயந்துட்டாங்க..” என்றாள்.
சூர்யா “தட்ஸ் குட்!” என்றவன், “அத்தை ஒகே தானே?” என்றுக் கேட்டான்.
அதற்கு மைதிலி “அம்மா முகத்தில் இருக்கிற நிம்மதியை நான் இதுவரை பார்த்து இல்ல! தேங்க்ஸ் சூர்யா..” என்றாள்.
பின் சூர்யா விதார்த்திடம் “சோமேஸ்வரன் எப்படியிருக்கிறார்?” என்றுக் கேட்டான்.
விதார்த் “ஃபோன் போட்டு கேட்டேன். இன்னும் அவர் யார் என்ற ஞாபகம் வராமல் தான் இருக்கிறார். ஆனா அந்த முதியோர் இல்லத்தில்.. எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்துட்டு இருக்கிறார். நான் ஏதோ செய்யணுமேனு அடிக்கடி புலம்பரார்.” என்றான்.
அதற்கு சூர்யா “குட்! பிராய்சித்தம் தேடட்டும்.” என்றான்.
உடனே விதார்த் “அவருக்கு எல்லாம் ஞாபகம் வந்திருச்சுன்னா?” என்கவும், சூர்யா “செய்த தப்பிற்கு தண்டனை அனுபவிக்க வேண்டியது தான்.. அவரோட சிருஷ்யப் பிள்ளைகளோட அனுபவிக்கட்டும். அவங்களையும் பொய் வழக்கு போட்டு.. ஆந்திரா ஜெயில் தானே வைத்திருக்கோம்.” என்றான்.
அதற்கு விதார்த் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான்.
அதைப் பார்த்து புன்னகைத்த சூர்யாவின் பார்வை சீரமைத்த அந்த அம்மன் கோவிலின் மேல் சென்றது. பின் சற்று தொலைவில் அமைந்துள்ள அவர்களது நிலத்தில் புது வீட்டிற்காக அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.
சூர்யா “மில்லில் பார்டனர்ஷீப்பிற்காக நான் சொன்ன டீலரை கார்த்தி பார்த்தானா?” என்றுக் கேட்டான்.
மைதிலி “இன்னைக்கு காலையில் தான் போயிருக்காங்க..” என்றாள்.
சூர்யா “நான் நேத்தே போக சொன்னேனே..” என்றான்.
அதற்கு மைதிலி “கார்த்தியோட வைஃப்பும் வரேன்னு சொன்னாளாம். அவன் சொதப்பி வச்சுருவான்னு அண்ணிக்கு பயம்..” என்று புன்னகைத்தாள்.
சூர்யா “ம்ம்! அவனுக்கு அவங்களிடம் பயம்!” என்று முறுவலித்தான்.
அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த விதார்த்தின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அவர்களது இதமான மனநிலையை மேலும் இதமாக்க தென்றல் காற்று அவர்களைக் கடந்து சென்றது. மூவரும் அதை இரசித்து அனுபவித்தார்கள்.