கீதம்-1
இயற்கை அன்னையின் அருளைப்
பரிபூரணமாகப் பெற்றிருக்கும் ஈரோடு
மாவட்டம்.
பகலவன் பனித்துளியாய்க் கரைந்து
கொண்டிருந்தான்.மாலைக் காற்றின்
இதத்தில் அவனி இளைப்பாறத்
தொடங்கி இருந்தது.
“ஸ்ரீரங்கநாயகி பவனம்”.
கிரானைட்டில் மின்னியது எழுத்துக்கள்.
அலைமகள் அருள் நிறைந்திருப்பதை
உரக்கச் சொல்லி நின்றிருந்தது
அம்மாளிகை வீடு.
ஈரோடு மாவட்டத்தின் பிரபல
தொழிலதிபரான குமரகுரு,பதினைந்து
வருடங்களுக்கு முன்பு தனது பூர்வீக
வீட்டினைப் புதுப்பித்து மாளிகையாக
உருமாற்றி இருந்தார்.தற்போது
தனது குடும்பத்துடன் எழில்
கொஞ்சும் அம்மாளிகையில்
ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்.
குமரகுருவின் தந்தையான
மயில்வாகனனின் தாயாரின் தாயாரே
ஸ்ரீரங்கநாயகி ஆவார்.அவர் மீது
கொண்ட அன்பாலும்,பக்தியாலும்
மயில்வாகனன் அவருடைய வீடு,
தொழில்கள் அனைத்திற்கும்
ஸ்ரீரங்கநாயகி எனப் பெயரிடுவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குமரகுருவும் அதை மாற்றவில்லை.
விசாலமான வரவேற்பறையினுள்
நிலவிய அமைதி,“அன்னம்,அன்னம்”
என்ற உரத்த அழைப்பினில் மறைந்து
போனது.
“வர்றேன் அத்தை”எனக் குரல்
கொடுத்தபடியே சமையலறையில்
இருந்து ஹாலிற்கு விரைந்தார்
அன்னலட்சுமி.
“என்ன அன்னம்,கிச்சன்ல என்ன
பண்றே”
“மயூ வர்ற நேரமாச்சு அத்தை.
அதான்...”
“சரிசரி போ.புள்ளைக்கு வாய்க்கு
ருசியா எதாவது செஞ்சு கொடு.
நாங்க கோயிலுக்குப் போயி்ட்டு
வந்துடறோம்”
“சரிங்கத்தை.செல்வத்தைக்
கூப்பிட்டீங்களா அத்தை”
“நான் கூப்பிட்டுக்கறேன்மா”
“சரிங்கத்தை”
குமரகுருவின் தாய் தந்தையான
குணவதியும்,மயில்வாகனனும்
கோவிலுக்குக் கிளம்பிச் செல்ல,
அவர்கள் கார் கேட்டைத் தாண்டும்
வரை பார்த்திருந்து விட்டு உள்ளே
சென்றார் அன்னலட்சுமி.
சில நிமிடங்கள் சென்றிருக்க,
“லட்சுமி,லட்சுமி”என்ற அழைப்பு
கேட்டது.
தன் கணவனின் குரலில்
அன்னலட்சுமியின் முகம்
தாமரையாய் மலர்ந்தது.
“பூவு,மெதுவா திருப்பு.நான்
வந்துடறேன்”
சமையலோடு அனைத்து
வேலைகளையும் மேற் பார்வையிடும்
பூமணியிடம் சொல்லி விட்டு
நகர்ந்தார் அன்னலட்சுமி.
“சரிங்கம்மா”
கைகளைக் கழுவித் துடைத்து விட்டு,
சமையலறையில் இருந்து ஹால்
சோபாவில் அமர்ந்திருந்த கணவனின்
அருகில் சென்று அமர்ந்தார்
அன்னலட்சுமி.
“அத்தையும்,மாமாவும் இப்ப தாங்க
கோயிலுக்குக் கிளம்பினாங்க”
“வழியில பார்த்தேன் லட்சுமி.
என்னம்மா பண்றே?வேலை எதுவும்
இழுத்துப் போட்டுட்டு செஞ்சுட்டு
இருக்கியா?”மனைவி முகத்தில்
இருந்த வியர்வைத் துளி கண்டு
குமரகுரு வினவ.
“இல்லைங்க.மயூ பஜ்ஜி
சாப்பிடணும் போல இருக்கும்மான்னு
சொல்லிட்டு இருந்தா.அதான் அவ
வர்றதுக்குள்ள செஞ்சுடலாம்னு”
அவசரமாகப் பதிலளித்தார்
அன்னலட்சுமி.
மனைவி வேலை செய்வது
மகளுக்காக என்றதும் குமரகுருவின்
முகத்தில் இருந்த கடுமை
மறைந்தது.
“உன்னோட செல்லப் பொண்ணுக்கு
உன் கையாலயே செய்யறயா?
எனக்குக் கொடுப்பியா?”
“என்னங்க விளையாட்டு?உங்களுக்கு
இல்லாமயா”
“மயூ ஏன் இன்னும் வரலை”
“இன்னும் நேரம் இருக்குங்க.நீங்க
உங்க பொண்ணைப் பார்க்கிறதுக்கு
முன்னாடியே வந்திருக்கீங்க”
“ஓ!பரவாயில்லை.போன்
பண்ணிக் கேளு லட்சுமி”
“சரிங்க.அடுப்பை நிறுத்திட்டு
அப்புறம் கேட்கறேன்.வந்தானா
சுடச்சுட சாப்பிடுவா”
“சரிம்மா”
“காபி குடிக்கறீங்களா”
“மயூ வரட்டும் லட்சுமி”
“சரிங்க”
அன்னலட்சுமி சமையலறைக்குச்
செல்ல,தனது கைபேசியில்
ஆழ்ந்தார் குமரகுரு.
தனது முன்னோர்களின் “ஸ்ரீரங்கநாயகி
ஸ்பின்னிங் மில்லை”தற்போதும்
வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்
குமரகுரு.
அத்தோடு அவர்கள் குடும்பத்திற்குச்
சொந்தமான பால் பண்ணை,
தென்னந்தோப்பு,மாந்தோப்பு,வாழைத்
தோப்பு,ஷாப்பிங் காம்ப்பிளெக்ஸ் என
இதர சொத்துக்களையும் சிறப்பாக
நிர்வகித்து வருகிறார்.
எத்தனை வேலைகள் இருந்தாலும்
மாலை நேரத்தை மகளுடன்
செலவிட வீட்டிற்கு வந்து விடும்
குமரகுருவிற்கு மகள் மீது அதீத
பாசம் உள்ளது.
மூன்று தளங்களைக் கொண்ட
அக்கட்டிடத்தின் பெயர்ப் பலகையில்
“ஸ்ரீரங்கநாயகி டவர்ஸ்”என
தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதி
இருந்தது.
அக்கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில்
“ஸ்ரீ லேங்குவேஜ் அகாடமி”இயங்கிக்
கொண்டிருந்தது.ஆங்கிலம்,ஹிந்தி,
பிரென்ச் மற்றும் ஜெர்மன் மொழியில்
தேர்ச்சியாளர்களை உருவாக்கிக்
கொண்டிருந்தது.
வகுப்புகள் முடிந்து மாணவர்கள்
கூட்டம் கூட்டமாக வெளியேறிக்
கொண்டிருந்தனர்.
ஆண்களும்,பெண்களுமாக இருந்த
அக்கூட்டத்தில் இருந்து விலகி,
தரை தளத்தில் இருந்த ஐஸ்கிரீம்
பார்லருக்குள் நுழைந்தனர் அவ்விரு
பெண்களும்.
அருகருகே அமர்ந்து கொண்டு
ஐஸ்கிரீம்மை வரவழைத்து உண்ணத்
தொடங்கினர்.
“தினமும் இப்படி ஐஸ்கிரீம்
சாப்பிடறது நல்லதில்லை தனு”
“தினமுமா?பொய் சொல்லாதே
மயூர்.தினமும் சாப்பிடக் கூடாதுன்னு
சொல்லி என் கையையும்,வாயையும்
கட்டி வைச்சுட்டு,இப்படித் தினமும்
சாப்பிடறேன்னு சொல்றயே.இது
தர்மமா?நியாயமா?இந்த
ஐஸ்கிரீம்முக்கே இது அடுக்குமா?”
“போதும்போதும்.சாப்பிடு தெய்வமே”
“ஏதோ இன்னைக்குத் தான் என்
மேல கருணை வந்து ஐஸ்கிரீம்மைக்
கண்ணுல காட்டியிருக்கே.என்ன
விஷயம் மயூர்”
“அழுது வடியறயே.பாவமேன்னு
கூப்பிட்டு வந்தேன்”
“அப்படியா?டல்லா இருக்கனா”
“நடிக்காதே தனு.என்ன விஷயம்?உன்
ரோமியோவைப் பார்க்காதனாலயா?”
“ம்.பார்க்கவும் இல்லை.பேசவும்
இல்லை”
“முக்கியமான வேலை எதாவது
இருந்திருக்கும்.நைட் கூப்பிட்டுப் பாரு”
“ம்”
“உம்முன்னு சாப்பிடாதே.சிரி”
தன்னை வாஞ்சையுடன் பார்த்தபடியே
ஐஸ்கிரீம்மைச் சுவைப்பவளை
முறைத்தாள் தன்யஸ்ரீ.
“இப்ப என்ன”
“எப்பவும் அவனுக்குத் தான் சப்போர்ட்
பண்ணுவியா?எனக்கு ஏன் சப்போர்ட்
பண்ண மாட்டீங்கறே மயூர்”
“நீ அநியாயத்துக்குக் கோபப் படறே,
சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம்
சண்டைப் போடறே.நான் அவனை
சப்போர்ட் பண்ணாம என்ன பண்றது”
“நீ காதலிச்சுப் பார்.அப்ப தான்
உன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியும்”
தனக்குப் பதில் வராததில்,ஐஸ்கிரீம்மில்
இருந்து நிமிர்ந்து தோழியின் முகத்தைப்
பார்த்தாள் தன்யஸ்ரீ.
உணர்ச்சிகள் துடைக்கப் பட்டிருந்த
முகத்தைக் கண்டு குழம்பியவளுக்கு
ஐஸ்கிரீம் சுவையற்றுப் போனது.
“என்னாச்சு மயூர்?ஏன் ஒரு மாதிரி
ஆயிட்டே?”
“ஒ..ஒண்ணும் இல்லை தனு.நீ
சாப்பிடு”என்றாள் வரவழைத்த
புன்னகையோடு.
தோழியின் முகத்தை ஆராய்ந்தபடியே
ஐஸ்கிரீம் உண்பதைத் தொடர்ந்தாள்
தன்யஸ்ரீ.
அந்நேரம் கைபேசி ஒலி எழுப்ப,தன்
கைப்பையில் இருந்து கைபேசியை
எடுத்த தோழியைக் கேள்வியாகப்
பார்த்தாள் தன்யஸ்ரீ.
“அம்மா தனு”
“ஓ!பேசு பேசு”
“மேடம் யாருன்னு நினைச்சீங்க?
உங்க ரோமியோன்னு நினைச்சீங்களா?
இந்தத் தூது போகற வேலை
எல்லாம் எனக்கு ஆகாதுன்னு நான்
முதல்லயே சொல்லி இருக்கேன்.
அதனால நீங்க எவ்வளவு சண்டைப்
போட்டுக்கிட்டாலும் அவன்
கண்டிப்பா என்னைக் கூப்பிட
மாட்டான்”
“சரிசரி.முதல் அம்மா கிட்டப் பேசு
மயூர்”
“ம்”
கைபேசியைக் காதிற்குக் கொடுத்து,
“சொல்லுங்கம்மா”என்றாள்
மென்மைக் குரலில்.
“அப்பா உன்னைக் காணோம்னு
கேட்டாருடா தங்கம்.அதான்
கூப்பிட்டேன்.கிளாஸ் முடிஞ்சுதா
தங்கம்”
“இப்ப தான்மா முடிஞ்சுது.
அரைமணி நேரத்துல வந்துடுவேன்னு
அப்பாகிட்ட சொல்லிடுங்கம்மா”
“சரிடா தங்கம்.பார்த்து வா.
வைச்சுடறேன்”
கைபேசியைப் பையினுள் வைத்தவள்,
தோழியின் கேலிச் சிரிப்பில் பொய்க்
கோபம் காட்டி முறைத்தாள்.
“உன் அப்பாவுக்கு நீ அவர் கண்
முன்னாடியே இருக்கணும்”
“ம்.அப்பாவுக்கு மட்டுமில்லை,
அம்மாவுக்கும் தான்”
“அப்ப உனக்கு வீட்டோட மாப்பிள்ளை
தான் பார்க்கணும்”
மயூரிகா முகம் மீண்டும் சிலையானது.
காதல்,கல்யாணம் என்று பேசினாலே
இவள் முகம் மாறி விடுகிறது!
இவள் வாயைத் திறக்க மாட்டாள்.
யாரிடம் கேட்பது?
“கிளம்பலாமா தனு”
“பணம்...”
“கொடுத்துட்டேன்”
கைப்பையோடு விறுவிறுவென
நடந்தவளை ஓட்டமும் நடையுமாகப்
பின் தொடர்ந்தாள் தன்யஸ்ரீ.
“நாளைக்குப் பார்க்கலாம்.பை”
தன் முகம் பார்க்காத தோழியை
ஆராய்ச்சியாகப் பார்த்தபடியே
கையசைத்து விடை கொடுத்தாள்
தன்யஸ்ரீ.
பார்க்கிங் பகுதியில் இருந்த தங்கள்
வண்டியை எடுத்துக் கொண்டு,
அக்கட்டிட வளாகத்தில் இருந்து
வெளியேறிய தோழிகள்,சற்று தூரம்
வரை சாலையில் ஒன்றாகச் சென்று
விட்டுப் பின் வெவ்வேறு திசையில்
பிரிந்து சென்றனர்.
தன் மனதில் பொங்கிய
உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்
கொண்டு வண்டியைச் செலுத்திய
அந்த அழகிய நங்கை,சாலையில்
இருந்து விலகி அகன்ற மரத்தின்
அடியில் வண்டியை நிறுத்தினாள்.
கடவுளே!இவன் நினைவுகள்
இத்தனை வலிமையானதா?ஒரு
வார்த்தையில் விருட்சமாக எழுந்து
நின்று என்னை வாட்டத் தொடங்கி
விடுகிறான்!
நான் காதலை அறியாதவள் இல்லை
தனு.காதலையே சுவாசித்துக்
கொண்டிருப்பவள்.ஆனால்,அந்தக்
காதல் என்னை விட்டுத் தொலை
தூரம் சென்று விட்டது.
தன் அருகில் வந்து நின்ற பைக்கில்,
தன் எண்ணங்களை விடுத்துத்
திடுக்கிட்டுத் திரும்பியவள்,
“வண்டியில எதாவது பிரச்சனையா
மேம்”என்ற கேள்வியில்
நிம்மதியானாள்.
“இல்லைப்பா.போன் பண்ணலாம்னு
ஓரமா நிறுத்தினேன்.நீ கிளம்புப்பா”
“ஓகே மேம்.பை”
முட்டாள்!முட்டாள்!ரோட்டில்
நின்று கொண்டு என்ன யோசனை
உனக்கு?வேறு யாராவது வந்து
கேட்பதற்குள் ஒழுங்காக இடத்தைக்
காலி செய்.
அந்த மாயாவியை நினைத்தேன்
அல்லவா?இந்த முட்டாள் பட்டம்
எனக்கு அவசியம் தான்!
அவள் தன் டியோவைக் கிளப்பவும்,
அவளைப் பின் தொடர்ந்து வந்து
அவள் நின்றதால் நின்ற பலேனோ
மீண்டும் அவளைப் பின் தொடரத்
தொடங்கியது.
காதல் சொல்லி
கானலான
உனையே
நிதம் தேடித் தவித்து
காணத் தவிக்கிறேனடா
காதலா!
கீதம் மயக்கும்...
நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி