நித்திலா மதுகிருஷ்ணா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர் பிரெண்ட்ஸ்,
இனிய மாலை வணக்கம்
கடந்த பதிவை வாசித்த,
விருப்பம் தெரிவித்த,
கருத்தைப் பகிர்ந்து கொண்ட
தோழமைகளுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
எண்ணற்றோர் வாசிக்கிறீர்கள்.
கதை குறித்தான உங்கள்
எண்ணவோட்டத்தை சில
வார்த்தைகளில் தெரிவித்தாலும்
பெரும் உத்வேகம் பெறுவேன்.
உங்கள் கருத்து எதுவாயினும்
தயங்காது பகிர்ந்து
கொள்ளுங்கள்.நன்றி
கதையின் நான்காம் அத்தியாயம்
உங்களோடு.உங்கள் கருத்தை
அறிய ஆவலுடன்
காத்திருப்பேன்.நன்றி
ப்ரியமுடன்,
நித்திலா
இரவு பத்து மணியை நெருங்கி
இருந்தது நேரம்.
அனைவரும் அவரவர் அறைக்குச்
சென்றதும்,தன்னறைக்குச்
சென்றாள் மயூரிகா.
நீண்ட நேரத்திற்குப் பிறகு
அவளுக்குத் தனிமை
கிடைத்திருந்தது.
மதுரகீதனைப் பார்த்த காட்சிகள்
அவள் கண் முன் படமாக
ஓடியது.அவள் கன்னம்
நனைத்தது விழி நீர்.
எத்தனை காலம்?எத்தனை
காலம் காத்திருந்தேன்?
கதவு திறக்கும் ஓசையில்
பதறி,அவசரமாகத் தன்
கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு எழுந்து அமர்ந்தாள்
மயூரிகா.
“என்னம்மா”
“ஒண்ணும் இல்லை தங்கம்.
அம்மா உன் கூடப்
படுத்துக்கலாம்னு வந்தேன்”
“வாங்கம்மா”நகர்ந்து தாய்க்கு
இடமளித்தாள் மயூரிகா.
“படுத்துக்கத் தங்கம்”
மகள் அருகில் அமர்ந்து
அவளுக்குப் போர்த்தி விட்டு
விட்டுத் தானும் படுத்தார்
அன்னலட்சுமி.
“அப்பா தூங்கிட்டாராம்மா”
“எதோ புக் படிச்சுட்டு இருக்கார்
தங்கம்.கொஞ்ச நேரம் கழிச்சுத்
தூங்கறேன்னு சொன்னார்”
“ம்”
“நேரா நேரத்துக்கு சாப்பிடணும்.
தாத்தா பாட்டியைத் தொந்தரவு
பண்ணக் கூடாது.சரியா”
“சரிம்மா”
“கிளாஸ் முடிஞ்சா நேரா
வீட்டுக்கு வந்துடணும்.வெளிய
போகணும்னா தனுவையோ,
வருணையோ கூப்பிட்டுப் போ
தங்கம்”
“சரிம்மா.நீங்க கவலைப்
படாமப் போயிட்டு வாங்க”
“சரிடா.தூங்கு”
அன்னலட்சுமி அமைதியாகி விட,
தாயின் முகத்தைக் கனிவுடன்
பார்த்தாள் மயூரிகா.
அம்மாவால் பத்து நாட்கள்
என்னைப் பிரிந்திருக்க
முடியாது.மலரைப்
பிரிந்திருந்து பழகி
விட்டார்கள்.நாளை கிளம்பும்
வரை என்னுடனே இருக்க
ஆசைப் படுகிறார்கள்.
தாயின் அன்பு ரணமான அவள்
மனதிற்கு இதம் சேர்த்தது.
அலை கடலாய் ஆர்ப்பரித்த
உள்ளத்தை அடக்கியபடி கண்
மூடிக் கொண்டாள் மயூரிகா.
இரவு நகர்ந்து கொண்டிருந்தது.
தன்னருகில் கேட்ட அழுகுரலில்
திடுக்கிட்டுக் கண் விழித்தார்
அன்னலட்சுமி.
“மயூயூ...என்னம்மா...
என்னாச்சுடா”
“வேண்டாம் மதூ...நில்லுங்க
மதூ...ப்ளீஸ் மதூ..”
“தங்கம்..என்னம்மா சொல்றே..
கண்ணு...”
"மதூ...மதூ..."
அன்னலட்சுமியின் பலமான
உலுக்கலில் அவள் உளறல் நின்று
விழிகளும் திறந்தது.
தாயின் பதட்ட முகம் கண்டு
அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.
"என்னாச்சும்மா"
"நீ தான் தங்கம்
என்னென்னவோ சொல்றே?
கனவு எதுவும் கண்டியா?"
கடவுளே!என்ன உளறினேன்?
"தங்கம்..."
“ஆ..ஆமாம்மா”
“வேண்டாம் மது வேண்டாம்
மதுன்னு பயங்கரமா சத்தம்
போடறே.யார் அந்த மது?
என்ன வே..மயூ...அழறயா”
தன் ஆசை மகளின் கன்னத்தில்
படிந்திருந்த ஈரத்தைத்
தொட்டுப் பார்த்து அதிர்ந்தார்
அன்னலட்சுமி.
அவசரமாகத் தன் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டு
புன்னகைத்தாள் மயூரிகா.
“தண்ணி குடிக்கிறயா”
“வேண்டாம்மா”
“எதுக்குடா அழுகறே?
பயந்துட்டியா”
“இல்லைம்மா.நான் அழுகலை..
கனவோ என்னவோ...எனக்கே
தெரியலை”
“யார் தங்கம் மது?உன்
பிரெண்டா?நீ எதுவும் சொன்ன
மாதிரி ஞாபகம் இல்லையே”
“பழைய பிரெண்ட்மா.அவ
தான் கனவுல வந்தா...ஏதோ
கெட்ட கனவு.அதுல
கத்திட்டேன் போலிருக்கு”
“கெட்ட கனவா?என்ன கனவு
மயூ.ஏன் அழுகறே?அந்தப்
பொண்ணுக்கு எதாவது
ஆபத்தா?பாட்டிக் கிட்ட
சொன்னா கனவுக்குப் பலன்
சொல்லுவாங்க.நீ அந்தப்
பொண்ணுக்கிட்ட சொல்லு.
கவனமா இருந்துக்கும்.
அவளுக்கு எந்தப்
பிரச்சனையும் வராது.நீ
அழாதே தங்கம்"
"சரிம்மா.நீங்க பதட்டப்
படாதீங்க.காலையில
பாட்டிக்கிட்ட சொல்லலாம்.
இப்பப் படுங்க"
"சரி தங்கம்.அம்மா
உனக்குத் திருநீர் வைச்சு
விடறேன்.கெட்ட கனவு
எதுவும் வராது”அறையில்
இருந்து வெளியேறினார்
அன்னலட்சுமி.
உங்களுடைய இந்த
அப்பாவித்தனமான குணத்தால்
தான் அப்பா உங்களை
அதீதமாக நேசிக்கிறார் அம்மா.
உங்களை இமையாகக்
காத்தும் வருகிறார்.
அம்மா பயந்திருப்பார்கள்.
என்னை மன்னித்து
விடுங்கள் அம்மா.
முட்டாள்!முட்டாள்!
இப்படியா கத்துவேன்?கனவு
வருமென்று நான்
நினைக்கவில்லையே!
இப்போது தான் தூங்க
ஆரம்பித்தேன்.அதற்குள்
கனவா?
நான்கு ஆண்டுகளாக என்னைத்
துரத்தும் கனவல்லவா இது?
ஓவென்று கதறி அழ
வேண்டுமென்ற எண்ணத்தைத்
தன் தாயின் வருகையால் ஒத்தி
வைத்தாள் மயூரிகா.
மகளுக்குத் திருநீர் பூசி விட்டு,
தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்த
பிறகே உறங்கத் தொடங்கினார்
அன்னலட்சுமி.
இனிய கனவொன்றிற்கும்
பொல்லாத கனவொன்றிற்கும்
இடையில் தன் மகள்
போராடுவதை,பாவம் இவர்
அறியவில்லை.
அதிகாலைப் பொழுது.
மதுரகீதன் கைபேசி ஒலிக்க,
விழிக்க மனமற்று விழித்துக்
கைபேசியை எடுத்தவன்,
தந்தையின் அழைப்பென்பதில்
அவசரமாகக் காதில் வைத்தான்.
“சொல்லுங்கப்பா”
“நைட்டும் வீட்டுக்கு வரலை.
இப்ப வர்றயா ராஜா?அம்மா
கவலைப் படறாப்பா”
“சாரிப்பா.வீட்டுக்கு
வர்றேன்னு அம்மா கிட்ட
சொல்லிடுங்கப்பா”
“சரி ராஜா.பொறுமையா
எந்திரிச்சு வாப்பா.
வைச்சுடறேன்பா”
கைபேசியை வைத்து விட்டுக்
கண்களை மூடிக் கொண்டான்
மதுரகீதன்.
அப்பா தோட்டத்திற்குச் செல்ல
நேரமே எழுந்திருப்பார்.அது
தான் உடனே என்னை
அழைத்திருக்கிறார்.
மயூவை நினைத்துக் கொண்டு
அப்படியே தூங்கி இருக்கிறேன்.
மயூ,என் மயூ,உன் மதுவை
மன்னித்து விடு மயூ.
கலங்கிய கண்களோடு
வருணனை அவள் பார்த்த
பார்வை!எத்தனை வலி
அந்த விழிகளில்?அந்தப்
பார்வை என்னைக்
கொல்கிறது.
உன் வலியைப் போக்குவேன்.
உன் விழிகளில் மீண்டும்
காதலைக் கொண்டு
வருவேன் மயூ.
மயூரிகாவை நினைத்த
மதுரகீதன் மனது கடந்த
காலத்தை நினைத்துப்
பார்த்தது.
கடந்த கால நினைவுகள்
சுகமளிக்க,அந்நினைவுகளில்
மூழ்கி கடந்த காலத்திற்குச்
சென்றான் மதுரகீதன்.
கடந்த காலம் தந்த சுகத்தில்
மனம் அமைதி கொள்ள,
மெல்ல உறக்கத்தின்
வசப்பட்டான் மதுரகீதன்.
ஆதவன் முழுமையாகத் தன்
துயில் கலைந்திருந்தான்.
கைபேசி விடாமல் ஒலித்து,
மதுரகீதனைக் கடந்த காலக்
கனவுகளில் இருந்து நிகழ்
காலத்திற்கு அழைத்து வந்தது.
சோம்பலுடன் விழிகளைத் திறந்த
மதுரகீதன்,மணி எட்டென்பதில்
அவசரமாக எழுந்து அமர்ந்தான்.
அம்மா தான்
அழைத்திருக்கிறார்கள்.என்னை
நினைத்துக் கவலையுடன்
இருப்பார்கள்.
மின்னல் வேகத்தில்
குளியலறைக்குச் சென்று முகம்
கழுவி வந்தவன்,வீட்டைப் பூட்டி
விட்டுக் காரில் ஏறினான்.
முக்கால் மணி நேரப் பயண
தூரத்தில் இருந்த அவன்
இல்லத்தை நோக்கி அவன்
கார் சீறிப் பாய்ந்தது.
மதுரகீதன் வீடு சென்று
சேர்கையில்,குடும்பத்தினர்
அனைவரும் உணவருந்தும்
மேஜையில் கூடியிருந்தனர்.
“வா ராஜா.ஏன்பா நைட்
வரலை”
மகனைக் கண்டு கவலை
அகன்று வினவினார் பூர்ணிமா.
“சாரிம்மா”
“பரவாயில்லை ராஜா.
உட்காருப்பா.சாப்பிடலாம்”
“நான் குளிச்சுட்டு வந்து
சாப்பிடறேன்மா”
“சரிப்பா.முகம் வாடிப்
போயிருக்கு.எதுக்குப்பா நீ
இப்படி அலையணும்?நமக்குத்
தொழில் எல்லாம்
வேண்டாம்பா”
“ஆமாம் மது.ஏசியில
ஜாலியா வேலை பார்க்கிறதை
விட்டுட்டு,உனக்கு எதுக்கு
இந்தக் கஷ்டம்”வசந்தி
தாயின் கருத்தை ஆமோதிக்க.
“தொழில் தொடங்கிற
வரைக்கும் அதிக அலைச்சல்
இருக்கும்கா.அப்புறம்
குறைஞ்சுடும்.நான் என்னைப்
பார்த்துக்குவேன்.நீங்க
கவலைப் படாம இருங்க”
“அம்மாவும் அக்காவும்
சொல்றதைக் கேளு மது.உன்
பிடிவாதத்தை விட்டுடு”வசந்தியின்
கணவன் கந்தவேல்,அவர்கள்
கருத்தையே பிரதிபலித்தான்.
“இல்லை மாமா.நான் என்
முடிவை மாத்திக்க மாட்டேன்.
என்னை மன்னிச்சுடுங்க”
“மதுவுக்கு என்ன விருப்பமோ
அதைச் செய்யட்டும் விடுங்க”
மதுரகீதனின் தந்தை கதிர்காமன்
மட்டும் அவனுக்கு ஆதரவாகப்
பேசினார்.
தந்தையின் ஆதரவில் மதுரகீதன்
முகம் மலர,மற்றவர்கள்
முகத்தில் மலர்ச்சி துளியும்
இல்லை!
“போ ராஜா.போய் குளிச்சுட்டு
வந்து சாப்பிடு”
“சரிப்பா”
தந்தையின் வார்த்தையை ஏற்றுத்
தன்னறைக்குச் சென்றான்
மதுரகீதன்.
குளித்து விட்டு வந்து கண்ணாடி
முன் நின்ற மதுரகீதன்,
“ராஜா”என்ற தாயின்
அழைப்பில் உணவருந்தச்
சென்றான்.
“ரவா ரோஸ்ட் சூப்பரா
இருக்கும்மா”
மகன் ரசித்து உண்பதைக்
கனிவுடன் பார்த்திருந்தார்
பூர்ணிமா.
“எவ்வளவு நாளாச்சு இப்படி
உங்க கையால சாப்பிட்டு”
மகன் வார்த்தை கேட்டு
எழுந்த குற்றவுணர்ச்சி
பூர்ணிமா விழிகளுக்குக்
கலக்கத்தைக் கொடுக்க,
மகனிடம் அதைக் காட்டாமல்
எழுந்தார் பூர்ணிமா.
“இன்னொரு தோசை சுட்டு
கொண்டு வர்றேன்பா”
“போதும்மா”
“காபி கொண்டு வரட்டுமா”
“சரிம்மா”
உணவை முடித்து,தாய்
கொடுத்த காபிக்
கோப்பையோடு தன்
அறைக்குச் சென்றான்
மதுரகீதன்.
ஜன்னலருகே சென்று
அசையும் மரங்களைப்
பார்த்தபடியே காபியை
அருந்திய மதுரகீதன்,மயூ
என்ன செய்து
கொண்டிருப்பாள் என
யோசித்தான்.
தன் கைபேசியை எடுத்து,
தன்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கும் அந்தப்
புகைப்படத்தைப் பார்த்தான்
மதுரகீதன்.
“ஸ்மைல் பண்ணுங்க
மதுரன்.நம்ம செல்பி அழகா
இருக்க வேண்டாமா”
அழகோவியமாய்த் தன்
தோளை அணைத்து
நின்றிருந்த மயூரிகாவை
ஏக்கத்துடன் பார்த்தன
மதுரகீதன் விழிகள்.
குரோதம் கொப்பளிக்கும்
வருணனின் விழிகள் அவன்
நினைவில் எழுந்தது.
நீ ருத்ரனாய் நின்று என்னை
எரிக்க முனைந்தாலும் நான்
மயூவிடம் நெருங்கவே
செய்வேன் வருண்!
தங்களுக்கு இடையே
இமயமாய் வருணன் நிற்பான்
என்பதை உணர்ந்த மதுரகீதன்
இதழ்கள் புன்னகை
கொண்டது.
முன்னொரு காலத்தில்,
வானைத் தொட்டு நின்ற
இமயமும் நீரில்
அமிழ்ந்திருந்தது வருண்.
அது போல,என் காதலின்
பேராழியில் உன்னை
அமிழ்த்தி,என் மயூவின்
கரம் பிடிப்பேன் வருண்!
மதுரகீதனின் காதல் கொண்ட
மனதின் உறுதி,அவன்
காதலை அவனுக்கு மீட்டுத்
தருமா?
உனைப் பிரிந்திட
முடிந்தது!
உனை மறந்திட
முடியுமோ?
என் வாழ்வின் ஆதாரம்
நீ தானடி கண்ணே!
கீதம் மயக்கும்...
நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி