பாரதிப்பிரியன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் கிளியே கண்ணம்மா
( A Lo(i)ve Story
நாவல்
குரல் - 3
( A Lo(i)ve Story
நாவல்
குரல் - 3
வீணாவின் கண்களை நிறைத்த காட்சிகளின் வழியே நாமும் காவலர் குடியிருப்புக்குள் நுழைகின்றோம். குறுகிய அறைகள், ஓட்டு கூரை, பழமையான சுவர்கள்....
வீட்டிற்கு முன்பு அகலமான தரையிலிருந்து நான்கு அடி உயரத்தில் எழுப்ப பட்டிருக்கும் திண்ணை.... அடுத்தடுத்து வரிசையாக அமைந்திருக்கும் வீடுகள்... இதுதான் 1990 களில் காவலர் குடியிருப்பின் நிலை...
பின்புறமிருக்கும் சிறிய சமையலறையில் காலை சிற்றுண்டி சமைப்பதில் சிரத்தை எடுத்து கொண்டிருக்கும் ஜோதி... 40 வயதில் சற்றும் முதிர்வை வெளிக்காட்டா முகமும், சந்தன மாவில் சிறிது பாலை கலந்து பிசைந்து செய்த தேகமும் உடையவள்.
மூன்று பிள்ளைகளின் தாய் என்பதை இவள் ஒப்புக் கொள்ளாவிடில் யாரும் அப்படி ஒரு எண்ணம் கொள்ளவே முடியாது. ஜோதி ஒரு அற்புதமான குடும்ப தலைவி... காதலித்து திருமணம் செய்து கொண்டவள். தன் சொந்தங்களை அதிகம் நேசிப்பதும், அவர்களின் வழியில் தன் குடும்பம் செல்லவேண்டும் என்ற எண்ணமும் இவளது குறைபாடாக எடுத்துக் கொள்ளலாம்.
நாகராஜன் செல்லப்பா.... தலைமை காவலராக பணி செய்துவரும் ஒரு பொறுப்புள்ள அரசு அதிகாரி. காவல்துறையினருக்கே உரித்தான பல பழக்கங்களுக்கும் நாகராஜுக்கும் சம்பந்தமே கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்துவரும் நேர்மையான காவலர்.
ஜோதியை விரும்பி திருமணம் செய்து கொண்டவர். ஜோதியை திருமணம் செய்து கொண்டதால் ஜோதியின் பெற்றோருக்கு சிலகாலம் எட்டிக்காயாக கசந்தவர். வீணாவின் பிறப்பு அத்துணை கசப்பையும் மாற்றியது. வெள்ளி நிலாவின் வளைவில் நீலமேகத்தில் தொட்டில் கட்டி, நட்சத்திரங்களை அதில் மிளிர செய்து ஒட்டுமொத்த குடும்பமும் வீணாவை அதில் கிடத்தி உற்சாக குரல் எழுப்பி கொண்டாடி தீர்த்தது.....
வீணாவை நாகராஜுக்கு அவ்வளவு பிடிக்கும். அவளின் கைகளும் காலும் அவரை செய்யாத பாடே இல்லை என்னும் அளவிற்கு குறும்பு வீணாவிடமிருந்து கொள்ளிட ஆறாக பாயும். இவரோ அவளின் ஒவ்வொரு செயலையும் ரசிப்பாரே ஒழிய கோபப்பட மாட்டார்.
ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் வீணா ஒரு தேவதை என்றால், நாகராஜுக்கு அவள் தேவதைகளின் தேவதை.... ஜோதிக்கு வீணா மீது தீராத அன்பு கொட்டி கிடந்தது... அதே வேளையில் கொஞ்சம் கர்வமும் இருந்தது.... அது நாகராஜ் குடும்பத்தின் மீது பலநேரங்களில் வெளிப்படும்.
அடுத்தடுத்த சில ஆண்டுகள் இடைவெளியில் லீலாவும், கடைசியாக சாந்தனுவும் பிறந்தனர். லீலாவும், சாந்தனுவும் நாகராஜ் குடும்பத்தின் உருவாகவும், வீணா ஒட்டுமொத்த ஜோதி குடும்பத்து உருவாகவும் வளர்ந்தனர். வளர வளர பிரச்சனைகளும் வளர்ந்தது.
பன்னிரெண்டு வயதில் வீணாவின் இளமையில் பூக்கள் பூத்த போது, நாகராஜ் குடும்பத்தில் இருந்த உறவுகள் வீணாவை தங்கள் வீட்டிற்கு மருமகளாக மாற்றிக் கொள்ள துடித்தனர். சிலர் உறுதியாவது படுத்திவிட வேண்டுமென பலமுறை படையெடுத்தனர்.
நாகராஜுக்கு இதில் விருப்பம் வரவே இல்லை. காரணம் தன் வீட்டு தேவதை படித்து தன்னை போல காவல் துறையில் பெரிய அதிகாரி ஆகவேண்டுமென விரும்பினார். அதற்குள் அவளை உறவுகளுக்கு தாரைவார்க்க நாகராஜுக்கு கொஞ்சமும் இஷ்டம் இருந்ததே கிடையாது. ஜோதிக்கு சுத்தமாக இது பிடிக்கவே இல்லை.
ஒவ்வொரு குடும்ப விஷேசங்களுக்கு போகும் போதும் வீணாவின் பேச்சு நாகராஜ் குடும்பத்தில் இருந்து வரும். ஜோதி நாசூக்காக மறுப்பாள்.... அதே வேளையில் தன் குடும்பத்தில் உள்ள உறவில் வீணாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் வைராக்யமாக அவளுக்குள் விதை விடுத்து செடியாகி, இப்போது ஆல விருட்சமாக விழுது விட்டு பரவி வளர்ந்து நிற்கிறது.
இதில் எதுவுமே வீணாவிற்கோ, லீலாவிற்கோ, சாந்தனுவுக்கோ தெரியாது... இவர்கள் உலகமே வித்தியாசமானது. வீணா படித்தால்....!!!, லீலா படிப்பது போல நடிப்பாள்....!!??? சாந்தனு இவர்கள் இருவருக்கும் கண்காணிப்பாளன்...!!!! இவர்கள் இருவரையும் சென்று தாயிடம் வத்தி வைப்பவன். சிரிப்பும், மகிழ்வும், உற்சாகமும் கலந்த வாழ்வில், வீணாவின் கல்லூரி படிப்பு சில குடும்ப சூழலுக்காக நிறுத்தப்பட்டது.
வீணா வேலைக்கு செல்ல துவங்கினாள்... நாகராஜுக்கு பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.... வீணா வழக்கம் போல் வேலைக்கு செல்வதும், உற்சாகமாக, எல்லோரையும் நம்பி உரையாடுவதும், தோழிகளிடம் அரட்டை அடிப்பதுமாக ஈரெட்டு வயதில் பணிரெண்டு வயது பெண் பிள்ளை போல விளையாட்டாக வாழ்ந்து வந்தாள்..
அன்றும் அப்படித்தான், வேலையில் இருந்து வீடு திரும்பும் போது, வீட்டிற்குள் நிறைய மனிதர்கள் இருப்பதை வாயில் படியிலேயே உணர்ந்தாள்... ஒருவேளை அம்மம்மா... ஊரில் இருந்து வந்து இருப்பார்களோ? இல்லை இல்லை அப்பம்மா வந்து இருப்பார்கள்.
அவர்கள் வந்து சென்று ஒருமாதம் ஆகிறது.... எப்போதும் அவர்கள் கொண்டு வரும் பொரி உருண்டை வீணாவின் வாயில் எச்சிலாக ஊறியது.... ஏனெனில் பாட்டி தனக்கென்றே செய்து கொண்டு வரும் அந்த பொறி உருண்டையில் தேங்காய் துருவல், பனை வெல்லம், பொரியை வறுத்து அரைத்த மாவு, நிலக்கடலை மாவு, கலந்து இருக்கும். அதை எல்லாவற்றையும் விட பாட்டியின் அன்பு பூரணமாக கலந்து சுவையை நூறு சதவீதம் அதிகரித்திருக்கும்.
இருப்பதிலேயே பெரிய உருண்டையை தான் பாட்டி தனக்கு தருவார்கள். அடுத்த முறை பாட்டி வரும் வரை அதை வைத்து தினமும் ஒரு கடி கடித்து சாப்பிட்டு பத்திரமாக வீணா வைத்து இருப்பாள்... தங்கையும் தம்பியும் அன்றே சாப்பிட்டு விடுவார்கள்.... அந்த ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தவளுக்கு அதைவிட இன்ப அதிர்ச்சியாக ஒன்று இருந்தது.
நாகராஜின் அக்கா குடும்பமே மொத்தமாக உட்கார்ந்து இருந்தது... அனைவரும் எதையோ மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. ஆனால் சிறு வயது முதல் தன்னோடு விளையாடி, தன்னை தூக்கி வளர்த்து, அன்பு காட்டிய அத்தை மகன் செந்திலை கண்டதும் வீணாவிற்கு அப்படி ஒரு சந்தோஷம்.... ஓடி சென்று அவனருகில் உட்கார்ந்து கொண்டு, அவனின் கையை பிடித்து கொண்டு விளையாடினாள்...
வீணா... உள்ளே போய் ட்ரெஸ் மாத்து... என்ன பழக்கம் இது.... வெளிய இருந்து வந்தா கை, கால் அலம்பாமல் இப்படி உட்காரது!!!... போ உள்ளே என்று ஜோதி அதட்டினாள்... அவளின் கோபத்தில் வீணா உடைந்து போனாள்.... கோபித்து கொண்டு அந்த சிறிய படுக்கை அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டாள்... படுக்கையில் விழுந்து விசும்பி விசும்பி அழத் துவங்கினாள்.
வெளியே ஜோதி.. உச்ச கட்ட கோபத்தில் நின்று கொண்டிருந்தாள். நாகராஜ் சொல்வது அறியாமல் நின்று கொண்டிருக்க..... ஜோதி பேசினாள்...
பாத்தீங்க இல்ல... அவ வளந்து மட்டும் தான் இருக்கா? இன்னும் அவளுக்கு குழந்தைத்தனம் போகல.... அவளுக்கு எப்படிங்க பத்து வயசு, மூத்த பையன கட்டி வைக்கறது...??? ரெண்டாவது கிராமத்துல வந்து அவளால உங்களோட பழக்க வழக்கத்துக்கு வாழ தெரியாது... விட்டுடுங்க.. வேற பொண்ண உங்க மகனுக்கு பாருங்க என்றாள் ஜோதி கோபம் கலந்த குரலில்.
நாகராஜின் அக்கா விடுவதாக இல்லை... என்ன மைனீ பேசுறீங்க... எல்லாரும் வாழ பழகிட்டா கல்யாணம் செய்துக்கறாங்க... ஒரு குழந்தை பொறந்த வாழ பழகிக்க போறா? செந்திலுக்கு அவா மேல அவளோ இஷ்டம்... அவள ராசாத்தி மாதிரி பாத்துப்பான் என்று நீட்டி முழக்க....
ஜோதி ஏதோ கூற வாய் எடுத்தாள்... அதற்குள் குறுக்கிட்ட நாகராஜ்... இந்தா அக்கா... நீ புரிஞ்சுக்க மாட்டியா? சொந்தம் விட்டுப் போக கூடாதுன்னு நீ நெனைக்கறே... இங்க சொந்தமே வேண்டானு முடிவு இருக்கு. பேசாமே வேற பொண்ண செந்திலுக்கு பாரு.... இப்போ அவளுக்கு கல்யாணத்துக்கு அவசரமும் இல்லே என்று கூறினார்...
அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாத நாகராஜின் உறவினர்கள் வெளியேறினர். ஜோதி சமையலறைக்குள் சென்று அழ தொடங்கினாள். நாகராஜ் சிறிது நேரம் வீட்டிற்கு வெளியே சட்டையை மாற்றிக்கொண்டு புறப்பட்டு போனார். வீணாவிற்கு அதற்குள் நடந்தவற்றை லீலா சொல்லிவிட அவளுக்கு அதற்கு மேல் பயம்... எங்கே நமக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்று...
அதற்குள் வீணா கடந்தவாரம் வாங்கிக் கேட்ட ஒரு செருப்பு ஜோடியை இன்று வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய நாகராஜ் வீணாவின் அறைக்குள் சென்று அவளிடம் தந்தார். அவள் கவிழ்ந்து படுத்து கொண்டு விசும்பினாள்...
ஏ... பப்லிமாஸ், ஏன் அழறே நீ இப்போ... அம்மா திட்டுனதுக்கா???... என்று நாகராஜ் கேட்க....
ஆம் என்று தலை ஆட்டியவள்... உங்க யாருக்கும் நான் இந்த வீட்லே இருக்கறது பிடிக்கலே.... அதான் எப்படியாவது எனக்கு கல்யாணம் செய்து வைக்க எல்லாரும் பிளான் பண்ணறீங்க என்று மீண்டும் ஆழ துவங்கினாள்.
நாகராஜின் அத்தனை கோபம், வேதனை, கஷ்டமும் மறைந்து போனது. பச்சை குழந்தையை தூக்கி மடியில் உட்கார வைப்பது போல் வீணாவை தூக்கி மடியில் உட்கார வைத்து கொண்ட நாகராஜ் கூறினார்... இல்லடா... அப்பா உன் விருப்பம் இல்லாம எதுவும் முடிவு செய்ய மாட்டேன்... நீ கவலை படாதே... நீ கரெஸ்பாண்டன்ஸ்-ல உன்னோட டிகிரிய முடி என்றார்....
பின் அவளின் கண்ணீரை துடைத்து விட்டார்... உச்சி மோர்ந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டார்... நாகராஜ்... சிறிது சிணுங்கி சிரித்தாள் வீணா... அந்த செருப்பு ஜோடிகளை அவளுக்கு காட்ட உற்சாகம் அடைந்த வீணா எல்லா கவலையிலிருந்தும் வெளியே வந்தாள்.
நாகராஜின் மடியிலே துள்ளி குதித்து மகிழ்வை வெளிப்படுத்தியவளை கண்டு நாகராஜுக்கு பெரிய மகிழ்ச்சி... ஆனால் நாகராஜ் தன் செல்ல மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினார். ஜோதி????....
தொடரும்