பாரதிப்பிரியன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாரதிப்பிரியனின்
காதல் கிளியே கண்ணம்மா
(நாவல்)
குரல்- 4
காதல் கிளியே கண்ணம்மா
(நாவல்)
குரல்- 4
தாராபுரத்திலிருந்து இருபத்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய நகர் மூலனூர்.... சுற்றிலும் வறண்ட நிலப்பரப்பு... தரிசாகிப் போன நிலங்கள் செம்மறி ஆடுகள் நிறைந்து காணப்படும். வானம் பார்த்த விவசாயம் கூட இந்தப் பகுதியில் கிடையாது. சோளமும், கம்பும் சில மழை காலத்தில் இங்குள்ள நிலங்களில் விதைக்கப்படும்.
கோடையில் தகிக்கும் பூமி, சித்திரையின் இறுதியில் மொத்தமாக மாறிப் போகும். மேற்கு தொடர்ச்சி மலையின் கணவாய்கள் வழியே பாய்ந்து வீசத் துவங்கும் காற்று, ஆடியில் ஆளையே கீழே தள்ளும். வாரி இறைக்கும் புழுதியும், சோ... வென்று இரையும் காற்றும், மூலனூரின் அக்மார்க் முத்திரைகள். வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த ஊரில்.... படிப்பை ஏதோ பகுதிநேர பணியாக செய்யும் மாணவர்கள் மத்தியில்... முதல் முதலில், கணினி பயிற்சி மையம் ஒன்றை துவக்கினால் எப்படி இருக்கும்?.
அப்படித்தான் ஒரு நிறுவனம் தொடங்கப் போகின்றார்கள். பெரிய அளவில் விளம்பரங்கள்... கண்ணாடி அறைகள், இந்த ஊருக்கு கீழ்கண்டவைகள் வித்தியாசமாக தான் இருக்கும். வகுப்பறை தனியாக, அலுவலகம் தனியாக, ஆய்வுகூடம் தனியாக என்று பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்ட மையம். பயிற்சி கொடுக்க பயிற்சியாளர் வேண்டும் என்று தெரிந்த ஒருவரிடம் அந்த நிறுவனத்தின் முதலாளி நிலையில் இருந்த ஒருவர் கூறியிருந்தார்.
அந்த விபரம் ஜோதிக்கு எட்டியது.... ஜோதிக்கு வீணா தாராபுரத்தில் பணி செய்வது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஜோதியை உறவுகள் கண்ணில் இருந்து மறைக்கவும், அவளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தரவும் ஜோதி தீர்மானித்தாள். ஆகவே வீணாவை நேர்க்காணலுக்கு மூலனூர் அழைத்துச் சென்றாள்...
விஜயன் வீணாவை நேர்க்காணல் செய்தான்... வீணாவிற்கு தெரிந்த விஷயம் மற்றும் செய்யவேண்டிய பணியில் உள்ள அனுபவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் வீணாவை அந்த நிறுவனம் பணியில் அமர்த்த தீர்மானித்து பணியில் சேர்வதற்கான நாளும் கூறப்பட்டது.
ஜோதியும் வீணாவும் விஜயனை தான் அந்த நிர்வாகத்தின் தலைவராக நினைத்து இருந்த நேரத்தில் இரண்டு இளைஞர்கள் அங்கு வந்தனர். ஒருவன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் முகத்தில் ஒருவித தேடலுடன் காணப்பட்டான்... மற்றொருவன் மெலிந்த தேகத்தில் கருத்த நிறத்தில்... பெரிதாக ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத தோற்றத்தில் இருந்தான். அவனின் தலை முடிகள் ஒற்றையாய் நீளமுடன் இருக்க... அவற்றை நடுக்கோடு எடுத்து சீவியிருந்தான். எப்போதும் யோசிக்கும் கண்கள், எதிலுமே அலட்டல் இல்லாத பார்வை... யார் பார்த்தாலும் சொல்லுவார்கள் "இவனெல்லாம் என்ன செய்யப்போகின்றான் என்று?".
கவின்.... என்று அந்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரனை அழைத்தான் விஜயன்... அழைப்பிற்கு இணங்கி வந்தவனிடம் வீணாவையும், ஜோதியையும் அறிமுகப்படுத்தி வைத்த விஜயன்... வீணாவிடமும், ஜோதியிடமும் கவினை காட்டிக் கூறினான்... இது தான் இந்த நிறுவனத்தின் முதலாளி... என்னுடைய சித்தி மகன். இவன்தான் முழுமையாக இந்த மையத்தை நிர்வகிக்கப் போகின்றான்... என்று கூறியவன் வீணாவின் குறிப்புகள் அடங்கிய தாளை கவினிடம் கொடுத்தான்.
ஜோதிக்கு தான் அதிர்ச்சி.. இவனா இந்த நிறுவனத்திற்கு முதலாளி... என்று. ஜோதி பொதுவாக வெளித்தோற்றம் வைத்து பிறரை எடை போடுபவள். அதே வேளையில் ஜோதிக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதல் இங்கு எப்படி பார்த்தாலும் நம் மகளுக்கு ஒரு காதல் தொல்லையும் வராது என்பது தான்.
ஆனால் வீணா இது எதையுமே கண்டு கொள்ளவில்லை. கவினுக்கு சுத்தமாக எந்த விதமான சிறிய அளவிலான ஓட்டுதல் கூட தோன்றவில்லை. இருவரும் இருவேறு யோசனைகளில் மூழ்கி இருக்க ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளாமல் நேர்காணல் வைபவம் இனிதே முடிந்தது....
மையத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. ஜோதி, நாகராஜ் இருவரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். கவின் முதலாளியாக இல்லாமல் எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு கொண்டிருந்தான். அவனும் அவன் நண்பன் ஆறடி அருள் முருகனும் மொத்த விருந்தினரையும் கவனிப்பதில் இருக்க வீணா ஏதோ தோன்றியவளாக தன் தந்தை நாகராஜை கவினிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தாள்... கவினும் நாகராஜும் சம்பிரதாயத்திற்கு பேசிக் கொண்டு கை குலுக்கிக் கொண்டனர்.
அடுத்த சில நாட்களில் மையத்தை விளம்பரப் படுத்துவத்திலும், மாணவர்களை மையத்திற்கு கொண்டுவந்து சேர்க்கை செய்வதிலும் கவின், அருள் இருவரும் முழு மூச்சாக ஈடுபட்டு வந்தனர். வீணாவிற்கு இருவரையும் பார்ப்பதே அரிதாக இருக்க கவின் மீது வீணாவின் பார்வை நேர்மறையாக இருந்தது... விஜயன் 11 மணிக்கு மையத்திற்கு வருவான்... 2 மணிக்கு வீட்டிற்கு சென்று விட்டு பின் 6 மணிக்கு வீணா மையத்தை விட்டு கிளம்பும் போது வருவான். இதனிடையில் மையம் குறித்து அத்தனை செயல்களையும் கவின் செய்து கொண்டிருப்பான். அருள் கூட வீணாவிடம் பேசுவான். கவின் எப்போதாவது வீணாவிடம் பேசுவான்.
ஒரு நாளின் மதிய வேளையில் விஜயன் இல்லாத நேரத்தில் தான் முதல் முதலாக வீணாவும் கவினும் பேசிக் கொண்டனர். அதுவும் வீணா தன் அம்மா தன்னை திட்டியதற்காக அழுது கொண்டிருக்க எதேச்சையாக அங்கு வந்த கவின் அவள் அழுவதை கண்டு... கேட்டான்.. அப்போது அவள் கூறிய குழந்தைத்தனமான காரியங்கள், அவளின் கனவுகள், என்று ஒவ்வொன்றாய் கேட்டு... கவின் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றினான்.
அந்த சிலமணி நேர உரையாடல் கவினை நிறைய யோசிக்க வைத்தது. அழகான பெண், அறிவாளி, நல்ல திறமைசாலி, அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவள், பிறருக்கு இரக்கம் காட்ட தயங்காதவள்... இவள் ஏன் நம்மிடம் அவளை பற்றி கூறவேண்டும். அவள் நினைத்தால், ஆறுதல் பெற உறவுகள், நண்பர்கள், என்று எவ்வளவோ பேர் இருக்கின்றனர். அவர்களிடம் கூறலாமே... அவள் என்னை நம்புகின்றாள். அதனால் தான் கூறினாள். அவளது நம்பிக்கையை என்றும் நான் காப்பாற்ற வேண்டும்.. தீர்மானித்தான். நல்ல நண்பனாக அவளுக்கு இருக்க முடிவே செய்தான்.
அடுத்த நாள் காலையில் அலுவலகத்தில் இருந்த வீணா கவின் வந்ததும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து வணக்கம் கூறினாள். பின் கவின் நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாமா? உண்மையில் உன்னோடு பேசிவிட்டு வீடு திரும்பிய போது மிகப் பெரிய நிம்மதியை உணர்ந்தேன்... உங்களுக்கு விருப்பமா? என்று கேட்டாள். உள்ளுக்குள் சற்று ஆச்சரியப்பட்ட கவின் ஆமோதித்து தலை அசைத்தான். இருவரும் கைக்குலுங்கிக் கொள்ள இருவரிடையேயான புரிதலும், எண்ண ஓட்டங்களும் ஒன்றாக... இருவருக்குமே தெரியாமல் பயணிக்கத் தொடங்கின....
இதழ்கள் விரியும்....