அவளும் நானும்...
வடிவு வேற இன்னும் ஆளை காணும். வேலைன்னா சரியான நேரத்துக்கு வரணும்னு தெரிய வேண்டாம்? இவங்களை எல்லாம் வச்சுக்கிட்டு நான் படுற பாடு. இதுல இவங்க வேற அதை காணும் இதை காணும்னு. கண்ணு முன்னால இருந்தாலும் நான் தான் வரணும் எடுத்து கொடுக்க, என்று காலையிலேயே வசை மாரி பொழிந்து கொண்டு இருந்தாள் நந்தினி.
காலை நேர பரபரப்பில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், கணவனை அலுவலகத்துக்கு அனுப்பி விட்டு தானும் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் வீட்டு வேலைக்காரி வடிவு வேறு எப்போதும் ஏழு மணிக்கெல்லாம் வருபவள் இன்று எட்டு மணி ஆகியும் வராததால் புலம்பி கொண்டு இருந்தாள்.
நந்துமா, என் கண்ணாடி மட்டும் எடுத்துதாமா, என்று கணவன் விஸ்வா கெஞ்ச,
அம்மா, என்னுடைய ஸ்கூல் டைரி காணும் என்று அவளுடைய இளைய மகன் ரிஷி ஒரு பக்கம் கத்த,
அம்மா எனக்கு இன்னும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணலயா? ஸ்கூல் பஸ் வந்துரும்மா.. என்று மூத்த மகள் வெண்ணிலா துரிதப்படுத்த
என்ன செய்ய, ஏது செய்ய என்று தெரியாமல் அத்தனை கோபமும் வேலைக்கு வரும் வடிவு அக்கா மீது தான் திரும்பியது,.
நந்தினி வீட்டில் வேலை செய்யும் பெண் தான் வடிவு. தினமும் காலையும், மாலையும் வந்து சாப்பாடு செய்து, சமையல் அறை வேலை எல்லாம் அவள் பொறுப்பு. இன்று தாமதமாக வந்தாள்.
வா மா மகா ராணி, வர்ற நேரமா? இங்க எல்லா வேலையும் நானே பார்த்துக்க வேண்டிய இருக்குது. எதை தான் நான் பார்ப்பேன்? நானும் வேலைக்கு கிளம்ப வேண்டாமா? சம்பளம் மட்டும் சரியா ஒண்ணாம் தேதி கேட்டு நிக்குறீங்கல்ல. அதே மாதிரி எல்லாத்துலயும் இருக்கனும். இங்க என் மண்டை உருளுது. ஏன் இவ்ளோ நேரம்?
அம்மா, என் மாமியாருக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. அதனால வீட்ல எல்லா வேலையும் பார்த்து வச்சுட்டு, அவுங்களுக்கு கஞ்சி எல்லாம் வச்சுட்டு வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகி போச்சுமா என்று வடிவு அவள் கதையை சொல்ல,
அதுக்கு ஏத்த மாதிரி நீ உன் வேலையை சீக்கிரமே முடிக்கணும். இப்படி நீ வேலைக்கு போற வீட்ல எல்லாம் சொல்ல முடியுமா? போ போய் வேலையைப்பாரு.
வடிவு ஒரு நாளும் வேலைக்கு விடுப்பும் எடுக்க மாட்டாள், தாமதமும் ஆகாது. இன்று அவள் மாமியாருக்கு வேலை பார்க்க முடியாமல் போனதால், இவளுக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. நொந்துகொண்டு நந்தினி விட்டு வந்த வேலைகளை தொடர்ந்தாள்.
பிள்ளைகளை அனுப்பி விட்டு, கணவர் கிளம்பியதும், அவள் குளித்து கிளம்ப மணி ஆகி விட்டது. அவள் அலுவலகத்துக்கு என்றும் பத்து நிமிடம் முன்னமே செல்பவள், நேரம் தவறாமை முக்கியம் அவளுக்கு.
இவள் அலுவலகத்துக்கு செல்லவும், மணி பத்து ஆகவும் சரியாக இருந்தது. அப்பாடா லேட் ஆகலை என்று பெருமூச்சு விட்டு அமரவும்,
ஆபீஸ் பாய் வந்து உங்களை மேனேஜர் கூப்பிடறார் மேடம் என்று சொல்லி விட்டு சென்றான்.
அங்கு மேனேஜர் கத்தி கொண்டு இருந்தார். இவங்களை எல்லாம் வச்சுக்கிட்டு என்னோட தலை தான் உருளுது.
நந்தினி, "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்று அனுமதி வேண்டி உள்ளே செல்ல,
வாங்கம்மா, இன்னும் கொஞ்சம் மெல்ல வர்றது, ஏன் இவ்ளோ சீக்ரம் வந்தீங்க? என்று மேனேஜர் கத்த
சார் நான் ஒன்னும் லேட்டா வரலையே, அப்புறம் என்ன சார்.
என்னம்மா, உண்மையிலேயே மறந்துட்டா? இல்லை மறந்த மாதிரி நடிக்கீங்களா? இன்னைக்கு டெண்டர் கோட் பண்ணனும், சோ எல்லாரும் ஒன்பது மணிக்கு வரணும்னு நேத்து சொல்லி இருந்தேன். நீங்க எப்ப வரீங்க? என்று கோவத்தில் சீறினார்.
அவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. அய்யயோ அதனால தான் எப்பவும் லேட்டா வர்ற லேட் லாவண்யா கூட சீக்ரம் வந்துட்டா போல, எப்படி மறந்தோம். இன்னைக்குன்னு பார்த்தா வடிவும் லேட்டா வரணும் என்று மனதுக்குள் நினைத்தவள். சாரி சாரி சார், வீட்டுல வேலைக்காரி வர லேட் ஆயிருச்சு, எல்லா வேலையும் நானே பார்க்க வேண்டிய சூழ்நிலை அதான் மறந்துட்டேன். ஒன்ஸ் அகைன் சாரி சார் என்று கெஞ்சினாள்.
இப்ப வந்து கெஞ்சி என்ன பண்ண? MD வந்துட்டாரு. என்ன பிடிச்சு கத்துறாரு. வேலைக்காரி வரலைன்னா அதுக்கேத்தாப்புல நீங்க கெளம்பனும். இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லாதீங்க.
சார், தினமும் சீக்ரம் வர்றவ தானே, இன்னைக்கு மட்டும் தான் லேட்டா வந்திருக்கான். இப்படி திட்டறீங்களே சார்,.
தேவைன்னு சொல்ற நேரத்துக்கு வரணும். அதை தான் எல்லாரும் கேட்பாங்க. சரி நிற்காம போய் வேலையை பாருங்க. பன்னிரண்டு மணிக்கு டெண்டர் அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க. என்று அவன் MD இடம் வாங்கிய திட்டை எல்லாம் இவளிடம் கொட்டி தீர்த்து விட்டான்.
அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும், என்று மனதுக்குள் திட்டி கொண்டே தன் இடம் வந்து சேர்ந்தாள்.
அப்போது தான் உரைத்தது. காலையில் வடிவிடம் தன் கோபத்தை காட்டியது. தனக்கு ஒரு காரணம் போல் தானே அவளுக்கும், அவளும் என்னை போல தானே. நான் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். அவள் வீடுகளில் வேலை பார்க்கிறாள். அவளும் நானும் ஏதோ ஒரு வகையில் ஒன்று தான். இரண்டு பெரும் வேலை பார்க்கும் இடம் தான் வேறு. ஒரு பெண்ணான நானே அவள் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் இவர்களுக்கு எங்கே புரிய போகிறது, என்று வடிவை திட்டிய தன் மடத்தனத்தை நினைத்து நொந்து கொண்டாள்.
மனதில் ஏதோ ஒரு தெளிவு பிறந்த மாதிரி இருந்தது. அடுத்த நாள் வடிவுக்கு விடுப்பு கொடுத்து, மாமியாருக்கு உடம்பு சரி ஆனதும் வா என்று சொல்லி விட்டாள். அவள் வீட்டுக்கு வர்ற நேரமாவது அவளுக்கு மிச்சம் ஆகுமே என்று தான்.
பெண்களே முதலில் பெண்களை நாம் மதிப்போம்.