அத்தியாயம் 30:
தன் அருகில் ஏதேதோ சொல்லி முணகியபடி புரண்டு கொண்டிருந்தவனை தூக்கம் கலைந்து திரும்பி பார்த்தாள் நித்திலா. ஏதோ கனவு கண்டிருப்பான் போல அவன் உடம்பெல்லாம் வியர்த்து லேசாக தூக்கி தூக்கி போட்டது.
அவனை நெருங்கியவள் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். திருமணமான இந்த மூன்று வாரங்களில் நான்கு, ஐந்து முறை இதுபோல நடந்து விட்டிருக்கிறது.
அவன் தலை, தோள் என்று மென்மையாக வருடி “ஒன்னுமில்ல அத்தான்.. தூங்குங்க..” அவள் மீண்டும் மீண்டும் கூற அந்த குரலிலும் அவளது அரவணைப்பிலும் அவன் உடலின் நடுக்கம் சற்று குறைந்து உறங்க ஆரம்பித்தான் ஆதி.
தன் கழுத்துப் பகுதியில் ஈரத்தை உணர்ந்தவள் மெல்ல அவன் முகத்தை விலக்கி பார்க்க மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அழுகிறானா.. அதுவும் தன்னை மறந்த நிலையில்.. தூக்கத்தில் இப்படி அழும் அளவுக்கு இவனுக்கு அப்படி என்னதான் நடந்திருக்கும்.
என்னதான் அவன்மேல் பயங்கர கோபமும் வெறுப்பும் அவளுக்கு இருந்தாலும் இப்படி அவன் கஷ்டப்படுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இயல்பிலேயே உண்டான தாய்மை உணர்வு மேலோங்க அவனை அணைத்துக் கொண்டு வெகு நேரம் உறங்காமல் விழித்திருப்பாள் நித்திலா. இது எதையும் அறியாமல் அவள் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பான் ஆதி.
அன்று அவர்களது திருமண வரவேற்பு என்பதால் நித்திலாவை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவளது ஒப்பனைகளுக்காக பிரபல மேக்கப் ஆர்டிஸ்டை வரவழைத்திருந்தான்.
இத்தாலி நாட்டில் வடிவமைக்கப்பட்ட பிங்க் மற்றும் தங்க நிறத்திலான விலையுயர்ந்த கவுன் தரையில் வழிய கையில் சிவப்பு, பிங்க் நிற பூக்களிலான சிறிய பொக்கே ஒன்றுடன் வெண்ணிற ரோல்ஸ் ராய்ஸில் நித்திலா வந்திறங்க அதே நேரம் கருநிற புகாட்டி சிரோனில் இருந்து இறங்கியவன் தன் கம்பீர நடையுடன் அவளை நெருங்கினான்.
அவனுக்கென்றே உருவாக்கப்பட்ட சாம்பல் வண்ண டாம் ஃபோர்ட் சூட்டில் விட்டால் அவளை கடித்து தின்றுவிடுபவன் போல பார்த்துக் கொண்டு வருபவனை கண்டு பழைய நித்திலாவாக இருந்தால் மயங்கியே விழுந்திருப்பாள்.
இந்த நித்திலா கல்லையும் மண்ணையும் பார்ப்பது அவனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இருந்தாலும் மனதின் ஓரத்தில் மத்தளம் கொட்டுவது போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை அவளால் தடுக்கவும் முடியவில்லை. தன்னை மீறி தோன்றிய அந்த உணர்வில் அவள் உடல் இறுகியது.
அவன் அருகில் வந்ததும் அவளை நோக்கி கை நீட்ட அவனது இடது கை மீது தனது வலது கையை வைத்து அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
சிகப்பு கம்பளம் விரிக்கப் பட்டிருந்த பாதையில் இருவரும் கைகோர்த்து நடக்க மேலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூக்களை தூவிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் உள்ளே சென்றதும் ஒரே நிறத்தில் உடை அணிந்த இளம்பெண்கள் நடனமாடி இருவரையும் வரவேற்றனர். அலங்கரிக்கப்பட்ட மேசை, மற்றும் இருக்கைகளில் விருந்தினர்கள் அமர்ந்திருக்க அவர்களை தாண்டி மணமக்கள் இருவரையும் அவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த வெட்டிங் த்ரோனை நோக்கி நடனமாடிய படியே அழைத்துச் சென்றனர்.
அவனது தொழில்முறை நண்பர்கள், அரசியல்வாதிகள் , செல்வந்தர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை அத்தனை பேரும் வருகை தந்திருந்தனர். விஸ்வநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அத்தனை பெருமையாக இருந்தது. திருமணத்தை மிகவும் சாதாரணமாக பெரும் குழப்பத்துக்கு மத்தியில் நடந்ததால் அதிருப்தியில் இருந்தவர்கள் இந்த வரவேற்பின் பிரம்மாண்டத்தில் அவர்கள் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச குறையும் மறைந்து காணாமல் போனது.
சந்திரலேகாவுக்கு மட்டும் எதையும் ஜீரணிக்க முடியாமல் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். நிர்மலாதேவி அவர் மனதில் என்ன இருக்கிறது என்று கணிக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.
அதன்பிறகு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அவர்களது திருமண வரவேற்பு களை கட்டியது. விக்ரம், அஜய், சஞ்சனா அனைவரும் நடனமாடி ஆரப்பரித்துக் கொண்டிருக்க சஞ்சயும், சௌர்யாவும் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சகுந்தலா தேவியின் குடும்பத்திலிருந்து ஆர்யா மட்டும் வந்திருந்தான்.
ஆதி அத்தனை நேரம் நித்திலாவின் கையை விடாமல் பற்றிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தவன் மித்ரா வந்து அழைக்கவும் அவளுடன் சென்றுவிட்டான்.
இருவரும் டேங்கோ ஆடினார்கள். விருந்தினர்கள் அத்தனை பேரும் அவர்களது நடனத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நித்திலா கூட சற்று நேரம் வாயை பிளந்து பார்த்தபடி நின்றிருந்தாள். அவ்வளவு அற்புதமாக இருந்தது அவர்களது நடனம்.
ஆதியுடன் ஒட்டி, உரசி, வளைந்து, நெளிந்து ஆடிக் கொண்டிருந்த மித்ராவை இறுகிய முகத்துடன் பார்த்திருந்தான் சௌர்யா.
நித்திலாவின் அருகில் வந்த ஆர்யா அவளை நோக்கி கை நீட்ட முதலில் மறுக்க நினைத்தவள் பின்பு ஆதி, மித்ரா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனுடன் இணைந்து கொண்டாள். அதைக்கண்டு இறுக்கத்துடன் அமர்ந்திருந்த நிர்மலாவின் முகம் மெல்ல மலர்ந்தது.
நித்திலா ஆர்யாவுடன் ஆடிக் கொண்டிருப்பதை கண்டதும் கண்கள் இடுங்க மித்ராவுடன் ஆடியபடியே அவர்களை நெருங்கியவன் சடுதியில் நித்திலாவின் இடுப்பை வளைத்து அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு மித்ராவை பிடித்து ஆர்யாவின் மேல் தள்ளிவிட இரண்டு பெண்களுமே அவனை முறைத்தனர்.
ஆதி அதனை கண்டு கொள்ளாமல் ஆடுவதில் முனைப்பாக இருக்க அவனிடமிருந்து விலகி மற்றவர்களின் பார்வைக்கு தீனி போட வேண்டாம் என நினைத்தவள் அவனுடன் ஆட்டத்தை தொடர அவனும் வீண் சேட்டைகள் எதுவும் செய்யாமல் நாகரீகமான முறையில் ஆடிக் கொண்டிருந்தது அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
ஆளாளுக்கு ஒவ்வொரு ஜோடியுடன் ஆடிக் கொண்டிருக்க சௌர்யா மட்டும் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த படியே மித்ராவை தன் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான்.
ஆர்யாவுக்கு மித்ராவுடன் ஆடுவது அவ்வளவு உவப்பாக இல்லாததால் பாதியில் அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டான். ஆதியை திரும்பி பார்த்தாள் மித்ரா. அவன் மித்ராவின் பக்கமே திரும்பாமல் நித்திலாவுடன் ஆடிக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் அவனை வெறித்துப் பார்த்தவள் திரும்பிச்செல்ல நினைக்க அவள் எதிரில் வழியை மறித்தாற் போல் வந்து நின்றான் சௌர்யா.. அவள் அவனை முறைக்க ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தவன் “நல்லா ஆடுறீங்க மிசஸ் ஆதி..” என்றுவிட்டு அவளை கடந்து சென்றான்.
அதில் ஒரு கணம் திடுக்கிட்டவள் அவன் பேசியதை யார் காதிலாவது விழுந்திருக்குமோ என்று சுற்றுமுற்றும் பார்க்க யாரும் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
நடன நிகழ்வுகள் முடிந்ததும் அடுத்து விருந்து ஆரம்பமானது பஃபே முறையில் அவரவருக்கு வேண்டிய உணவுகளை எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பிக்க நித்திலாவும் தனக்கான உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவளது காலை யாரோ சுரண்டுவது போல் தோன்றவும் கீழே பார்த்தாள்.
அது ஒரு சிறுமி. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும். றோஜா நிறத்தில் குண்டு கன்னங்களுடன் புசுபுசுவென்று இருந்தாள்.
இவள் பார்த்ததும் தன்னை தூக்க சொல்வது போல இவளை நோக்கி இரு கைகளையும் விரித்து காண்பித்தாள். அதில் சிரிப்பு வர அழகிய அந்த குழந்தையின் செயலில் ஈர்க்கப்பட்டவள் உணவு ப்ளேட்டை அப்படியே வைத்துவிட்டு அவளை தூக்கிக் கொண்டாள் நித்திலா.
“நீங்கதான் ஆதி அங்கிளோட ஆன்ட்டியா..” என்று கேட்டாள் நித்திலாவிடம்.
“ஆமா.. நீங்க யாரு?? உங்க பெயர் என்ன??” என்று பதிலுக்கு கேட்டாள் நித்திலா.
“நிலா..” என்றாள் குழந்தை “ஆதி அங்கிள் அப்டித்தான் கூப்பிடுவாங்க..”
“ஓஹ்...” என்றாள் நித்திலா..
அதே நேரம் அங்கு வந்த ஒரு இளம்பெண் “நித்திலா உன்னை எங்கெல்லாம் தேடுறது..” என்று அந்த சிறுமியை பார்த்து கூறியவள் “அம்மா கிட்ட வா...” என்றாள்.
பின்பு நித்திலாவிடம் திரும்பி “உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டா போல.. சாரிங்க...” என்க “இட்ஸ் ஓகே..” என்றவள் அந்த குழந்தையின் கன்னத்தை தொட்டு முத்தம் வைத்தாள் நித்திலா.
###########################
“உள்ளே வாம்மா...” அர்ஜுனின் அறைக்குள் வர தயங்கியபடி நின்றிருந்த மீராவை அழைத்தாள் சரஸ்வதி.
வரதராஜன் இறந்து அன்றோடு பதினாறு நாட்கள்.. அர்ஜுன் மீராவின் கழுத்தில் தாலி கட்டி ஒருசில நிமிடங்களிலே அவர் உயிர் மண்ணை விட்டு பிரிந்திருந்தது. இத்தனை நாட்களும் அவள் சரஸ்வதியின் அறையில்தான் தங்கியிருந்தாள்.
இதற்கு மேலும் அவளை தன் அறையிலேயே வைத்திருப்பது முறையில்லை என்று நினைத்த சரஸ்வதி மீராவின் உடமைகளை அர்ஜுனின் அறைக்கு மாற்றம் செய்துவிட்டு அவளையும் அவன் அறைக்கு அழைத்து வந்திருந்தார்.
மீராவுக்கு அவனது அறைக்குள் செல்லவே மிகவும் தயக்கமாக இருந்தது. அன்று தாலி கட்டியதோடு சரி,, இந்த பதினாறு நாட்களில் அவள் அவனை பார்த்ததே ஒரு சில தடவைகள் தான். அதிலும் அவன் ஒரு முறை கூட மீராவின் முகத்தை ஏறிட்டும் பார்த்ததில்லை.
“என்னம்மா அப்படியே பார்த்துக்கிட்டு நிற்கிற... உள்ள வா...” என்று சரஸ்வதி மீண்டும் அழைக்கவும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் மீரா. நுழையும்போதே அவள் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
“இனிமேல் நீ அர்ஜுன் ரூம்லயே தங்கிக்கம்மா...” என்றவள் அதற்குமேல் அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் வெளியே சென்றுவிட்டாள்.
சரஸ்வதிக்கு மகனது மனம் தெரியும்.. அவன் ஒன்றும் உடனே மீராவுடன் கூடிக்குலாவி ஆனந்தமாக வாழ்ந்து விடுவான் என்றெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை. தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பெண்ணுடன்தான் அவனது வாழ்க்கை என்றாகிவிட்டது. நடந்து முடிந்ததை நினைத்து இருக்கும் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாமல் தனக்கான வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும் என்று நினைத்தாள்.
தயக்கம், பயம், எதிர்பார்ப்பு, தவிப்பு என்று கலவையான உணர்வுகளுடன் அந்த அறையில் காத்திருந்தாள் மீரா. அர்ஜுன் இன்னும் வந்து சேரவில்லை. அவன் இரவுகளில் மிகவும் தாமதமாக வீடு திரும்புவதை இங்கு வந்த இத்தனை நாட்களில் அறிந்திருந்தாள்.
ஒருவழியாக மணி இரண்டை நெருங்கும் வேளையில் வந்து சேர்ந்தான் அர்ஜுன்.. ஆனால் அவனது மனநிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. குடித்திருந்தான்.
அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியவன் அதன்பிறகு தான் கட்டிலில் உட்கார்ந்திருந்த மீராவை கண்டான். போதையில் ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் அவளை பார்த்தவன் அது மீரா என்பதை உணர்ந்ததும் “சிவாஆஆஆஆ.....” என்ற அவனது குரலில் வீடே அதிர்ந்தது.
அர்ஜுனை வீட்டில் விட்டுவிட்டு அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்த சிவாவும் ப்ரசாத்தும் அவனது அலறலில் ஓடி வந்து பார்க்கவும் அறை வாசலில் விழிகள் சிவக்க ஆக்ரோஷமாக நின்றிருந்தான் அர்ஜுன்.
“என்னடா... எதுக்கு கத்தின...” என்க,
“இவள யாருடா என் ரூம் உள்ள விட்டது..” என்றான் கோபமாக.
அதன்பிறகு தான் கவனித்தான் சிவா.. மிரட்சியுடன் அந்த அறைக்குள் நின்றிருந்தாள் மீரா.. அவனுக்கும் யார் அவளை இவன் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள் என்று புரியவில்லை.
வெறுப்புடன் அவளை நோக்கியவன் “ஏய் வெளிய போடி..” என்றான் அர்ஜுன்.
அவள் பயத்தில் அசையாமல் நடுங்கிக் கொண்டு நிற்க, “சொல்றது காதுல விழல்ல... வெளிய போ முதல்ல..” என்றவன் அவளை நெருங்கி தரதரவென இழுத்துச்சென்று அறைக்கு வெளியே தள்ளி விட்டான்.
அதில் கோபமடைந்த சிவா,, “டேய் என்னடா பண்ற..” என்று அதட்ட மீரா கீழே விழப்போனவள் எதிரில் வந்த சரஸ்வதியின் மேல் மோதி நின்றாள்.
சரஸ்வதி அர்ஜுனை அமைதியாக பார்த்தார்... “நான் தான் அவள உன் ரூம்ல தங்கிக்க சொன்னேன்...” என்க “மா.. என்னம்மா இதெல்லாம்...” என் மனநிலை தெரிந்திருந்தும் இப்படி செய்திருக்கிறாய் என்பதுபோல் அவளை நோக்கினான்.
அவனது குற்றம் சாட்டும் பார்வையில் ஒரு நொடி தயங்கியவள் “அர்ஜுன் இதுக்கு மேலயும் இவ என்கூட தங்கிட்டு இருந்தா நாலுபேர் நாலு விதமா பேசுவாங்க.. உன் பாட்டி வேற அந்த பொண்ண பார்க்கிற நேரமெல்லாம் எதையாவது சொல்லி திட்டிக்கிட்டே இருக்காங்க..”
“அதுக்கு...” என்றான் கோபமாக.
“தயவு செஞ்சு எனக்காக அவள உன் ரூம்ல தங்க வெச்சிக்கப்பா..” கெஞ்சும் குரலில் சரஸ்வதி கேட்டுக்கொள்ள ஆற்றாமையோடு “அம்மா...” என்றான் அர்ஜுன்.
அவனால் சரஸ்வதியை எதிர்த்து பேசவும் முடியவில்லை.. அதேசமயம் மீராவை அவன் அறைக்குள் அனுமதிக்கவும் இஷ்டமில்லை.
“அவ ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்பா... உன்ன தொந்தரவு பண்ணமாட்டா..” என்றாள் சரஸ்வதி..
சிவாவும் தன் பங்குக்கு “ஆமா அர்ஜுன்.. எனக்கும் அம்மா சொல்றதுதான் சரியா படுது..” என்றான்.
தாயின் முகத்தை ஏறிட்டவன் கண்களில் மன்றாடலுடன் சரஸ்வதி அவனை பார்த்திருக்க கை முஷ்டியை சுவற்றில் ஓங்கி குத்தியவன் “எதையாவது பண்ணி தொலைங்க..” என்றுவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டான்.
கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தவளை பார்த்த சரஸ்வதி “எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்மா... போக போக எல்லாம் சரியாகிடும்...” என்றார் “உள்ள போம்மா...”
சிவா ப்ரசாத்தை அழைத்துக் கொண்டு கிளம்ப அமைதியாக வந்தவனை பார்த்து “என்ன ப்ரசாத் எதுவும் பேசாம வர்ர...” என்க,
“நான் என்ன பேசனும்னு எதிர்பார்க்கிற.. அவன் இப்படி கஷ்ட படுறத என்னால சகிச்சுக்கவே முடியல..” என்றான்.
“எல்லாம் மாறிடும்டா ப்ரசாத்... கண்டிப்பா ஒருநாள் அர்ஜுன் மீராவ ஏத்துக்குவான்.. அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழத்தான் போறாங்க..” உறுதியுடன் கூறினான் சிவா.
“ம்ம்ம்... நடந்தா பார்க்கலாம்...” என்றான் ப்ரசாத் அது ஒருபோதும் நடக்காது என்ற உறுதியுடன்.
பயத்தில் மெல்ல மெல்ல அடியெடுத்து உள்ளே வந்தவளை விழிகளில் தீப்பொறி பறக்க ஏறிட்டவன் “என் அம்மா சொன்னதுக்காகத்தான் உன்ன என் ரூம்க்குள்ள வர விட்டிருக்கேன்.. நான் காலையில எழுந்துக்கிறதுக்கு முன்னாடியே நீ வெளிய போயிருக்கனும்.. தப்பித்தவறி என் கண் முன்னாடி வந்து நின்ன நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...” என்றுவிட்டு போர்வையை எடுத்து தரையில் வீசினான்.
அவன் கட்டிலில் படுத்துக்கொள்ள அவள் தரையில் உறங்கினாள்.. போர்வையை தூக்கி போட்டவன் கூடவே ஒரு தலையணையும் போட்டிருக்கலாம்..
தன் கைகளையே தலையணையாக்கி மௌனமாக கண்ணீர் வடித்துக்கொண்டு படுத்திருந்தாள் மீரா.
அர்ஜுன் அவளை உடனே எல்லாம் ஏற்றுக் கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லைதான்.. அதற்காக இப்படி அவளை அவமதித்து வெளியே தள்ளி விட்டதையும் எடுத்தெறிந்து பேசியதையும் மீராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..
அவளுக்கு தந்தையின் நியாபகம் வந்தது. அவளது திருமண நாள் அதாவது வரதராஜன் இறந்த தினத்திலிருந்து பேச்சுமூச்சில்லாமல் மருத்துவமனையில் கிடக்கிறார். தன்னுடைய அன்பு மகள் கணவன் வீட்டில் தரையில் சுருண்டு படுத்திருக்கிறாள் என்பதை அறிந்தால் அந்த மனிதர் எவ்வளவு வருத்தப்படுவார்.
எதிர்காலம் அவளை அச்சுறுத்தியது.
அர்ஜுனின் நிலை அவளைவிட பரிதாபகரமாக இருந்தது. இத்தனைநாள் தந்தையின் பிரிவால் வாடியிருந்தவன் அன்று நித்திலாவின் ரிசப்ஷன் என்பதை அறிந்து பயங்கர மன உளைச்சலில் சுற்றிக் கொண்டிருந்தான். விக்ரமின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதி, நித்திலா இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் காட்சி லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட அதை பார்த்து அவனுக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.
அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே குடித்தான். எவ்வளவு குடித்தும் அவன் மனம் ஆறவில்லை. இதயத்தை கீறி பிளந்து பிய்த்து எடுப்பதைப்போல் வலித்தது.
அவனால் தூங்க முடியவில்லை.. கண்ணை மூடினால் நித்திலாவின் முகம்தான் தெரிந்தது.
எழுந்துவிட்டான்..
சத்தமாக கதறி அழ வேண்டும் போல இருந்தது. ஓரக்கண்ணில் மீரா தூங்கிக் கொண்டிருப்பது பட தனக்கு அழ கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது போல உணர்ந்தான். அந்த அறையில் இருப்பதே மூச்சு முட்டுவது போல் தோன்ற உடனே எழுந்தவன் மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான்.
வானில் முழு நிலவு பவனி வந்து கொண்டிருந்தது. அதை வெறித்து பார்த்தான். அவனுடைய நிலா இப்போது இன்னொருவனுக்கு சொந்தமாகி விட்டாள் என்ற நினைவில் அவன் விழிகளிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. கூடவே தந்தையின் நினைவும் சேர்ந்து வந்தது. தன் இறுதி ஆசை என்ற பெயரில் அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் பறித்துவிட்டு சென்றுவிட்டார்.
“அப்பா.... இதுக்கு நீ உன் கையாலயே என்னை கொன்னுட்டு போயிருக்கலாம்பா...” கேட்க முடியாத தூரத்துக்கு சென்றுவிட்டவரிடம் கூறி அழுதான்.
##########################
விடைபெறுமுகமாக ஒரு சிலர் நித்திலாவிடம் வந்து பேசிக்கொண்டிருக்க கண்களால் ஆதியை துலாவியவள் அவன் சற்று தூரத்தில் குட்டி நித்திலாவை தூக்கி வைத்துக் கொண்டு அவளிடம் எதையோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
இவள் பார்ப்பதை உணர்ந்து இவள் புறம் பார்வையை திருப்பினான்.
இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்டன. அவன் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் உடல் சிலிர்க்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் நித்திலா.
அதன்பிறகு விருந்தினர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று கிளம்பிவிட குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியிருந்தனர். சாரதாவை விஸ்வநாதன் காரில் அனுப்பிவிட்டு நித்திலாவை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றான் ஆதி.
வந்த வழியில் செல்லாமல் அவன் கார் வேறு புறம் திரும்பவும் புருவம் சுருக்கி அவனை பார்த்தாள் நித்திலா.
“இந்த பக்கம் ஒரு சின்ன வொர்க் இருக்கு.. முடிச்சிட்டு போயிடலாம்..” என்றான் சாலையில் கவனத்தை பதித்தவனாக.
‘இந்த நேரத்தில் என்ன வொர்க்’ என்று நினைத்தாலும் அவனிடம் எதையும் கேட்க மனமில்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
கடற்கரை சாலையில் சென்று காரை நிறுத்தி இறங்கியவன் அவள் புறம் கதவை திறந்து இறங்க சொல்ல “இல்ல... நான் கார்லயே இருக்கேன்.. நீங்க போயிட்டு வாங்க...” என்றாள்.
அந்த இடத்தை சுற்றி பார்வையை ஓடவிட்டவன் “இங்க நீ தனியா இருக்க வேண்டாம்... கம் வித் மீ...” என்றபடி அவளது கையை பிடித்து காரிலிருந்து இறக்கி விட்டவன் தன்னுடன் அழைத்து சென்றான்.
அவன் சொன்ன தொனியில் அவளுக்குமே இங்கு தனியாக இருப்பது தவறோ என்று தோன்றிவிட வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றாள். நடந்து செல்ல அவளது உடை தடையாக இருக்க தரையில் வழிந்த அந்த கவுனை இரு கரங்களால் லேசாக தூக்கி பிடித்தபடி சென்று கொண்டிருந்தாள்.
உள்ளே சிறிது தூரம் சென்றதும் மெரின் போன்ற இடத்தில் லக்சுரி யாக்ட் ஒன்று நின்றிருந்தது. இவர்கள் படகை நெருங்கியதும் அதிலிருந்து இறங்கி வந்தான் ஜெகன்.
ஆதியை கண்டதும் “தேவ் பாய்..” என்றான்.
“எல்லாம் ஓகே தான...” என்று ஆதி அவனிடம் கேட்க “பக்கா..” என்றவன் நித்திலாவை பார்த்து ஒரு மாதிரி சிரித்து வைத்தான் ஜெகன்.
ஆதி நித்திலாவின் கையை பற்றிக் கொண்டு படகில் ஏற்றிவிட்டவன் “உள்ள போய் வெய்ட் பண்ணு.... நான் வந்திர்ரேன்...” என்க சரியென்று தலையாட்டியவள் அவனை தவறாக நினைக்கவில்லை.
அவன் வந்த வேலையை முடித்துவிட்டு வரட்டும் என நினைத்துக் கொண்டு அந்த உல்லாச படகை சுற்றிப்பார்த்தாள்.
பின்பு டெக் பகுதியில் வந்து நின்றவள் குளிர் காற்று உடலை தழுவிச்செல்ல கடலில் தெரிந்த நிலவின் பிம்பத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு ரம்மியமாக இருந்தது. நிலவை பார்த்ததும் அவளுக்கு அர்ஜுன் நியாபகம் வந்தது. அடிக்கடி அவளை நிலவோடு ஒப்பிட்டு எதையாவது பேசிக் கொண்டிருப்பான்.. அவள் மனம் கனிந்தது. அவனுக்குத்தான் அவள் மீது எவ்வளவு பாசம்.
தன் திருமணத்தை கூட அவனிடம் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வர நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக அவனை அழைத்துப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ யோசனையில் இருந்தவள் திடீரென படகு நகர ஆரம்பிக்கவும் புரியாமல் தடுமாறி திரும்பி பார்க்க அழுத்தமான நடையுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஆதி.
அவன் விழிகளில் தெரிந்த வேட்கையில் அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து நடுங்கியது.. இதே பார்வையைத்தான் முதலிலும் பார்த்து வைத்தான்.
அவள் அதிர்வுடன் நின்றிருந்த கோலத்தை ரசித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் இடது கையால் அவள் பின்னால் இருந்த டாஃப்ரைலை பிடித்துக் கொண்டு அவள் மீது பட்டும் படாமல் நின்றபடி ஒற்றை புருவம் உயர்த்தி அவள் முகம் பார்த்தான்.
“ஃபைனலி யு ஆர் ஹியர்...” வலது புறங்கையால் அவள் கன்னத்தை வருடிக் கொண்டே அவன் கூற கொதித்துப் போனாள் நித்திலா.
அவனது கையை தட்டி விட்டவள் “இதுக்குத்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்களா..” கோபமாக கேட்டாள்.
“ஹாஹாஹா....” அவன் சிரித்தான்.
“உங்களுக்கு வெட்கமாயில்ல... என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்க..”
“இல்லையே...” என்றான் அவன் “என் பொண்டாட்டி கிட்ட இந்த மாதிரி நடந்துக்க நான் எதுக்கு பேபி வெட்கப்படனும்..”
அவனிடமிருந்து விலகி ஓட முயன்றவளை அடக்கி பிடித்தபடி
அவள் உதடுகளை இரு விரல்களால் பற்றி இழுத்தவன் “இப்போலாம் இந்த வாய் ரொம்ப பேசுதில்ல... பனிஷ் பண்ணனுமே...” கூறிக்கொண்டே அவள் முகமெங்கும் முத்தமிட ஆரம்பித்தான்.
தன் முகத்துக்கும் அவனது வாய்க்கும் இடையில் தடுப்பாக தன் உள்ளங்கையை வைத்தவள் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு “ஏன்... இந்த வீரத்தை உங்க வீட்டுல வெச்சி காட்டியிருக்கலாமே..” திமிறினாள்.
“உன்கிட்ட எங்க,, எப்போ,, எப்படி என் வீரத்தை காட்டனும்னு எனக்கு நல்லாவே தெரியும்...” என்றவன் அவள் திமிறத் திமிற தூக்கிக் கொண்டு அங்கிருந்த கேபினுக்குள் நுழைந்தான்.
கட்டிலில் அவளை கிடத்தியவன் அவள் மீது பரவிப் படர்ந்து ஆட்கொள்ள துவங்க பலவாறு போராடி பார்த்தவள் உடல் பலத்தால் அவனை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து “அத்தான் ப்ளீஸ்...” கெஞ்ச ஆரம்பித்தாள்.
அவன் அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவனா....
“ஐ நீட் யூ வெரி பேட்லி நித்திலா...” அவள் காதோரமாக தாபத்துடன் ஒலித்தது அவன் குரல்.
அவளது உடலும் அவன் கைகளுக்கு தாராளமாக ஒத்துழைப்பு வழங்கியதில் அவனிடமிருந்தும் தன்னிடமிருந்துமே தப்பிக்கும் வழி தெரியாமல் அவள் திணற அவளிடம் நெகிழ்வை உணர்ந்த அவன் வேகம் அதிகரித்தது.
துடிக்கும் அவளது அதரங்களை தன் இதழ்களால் சிறை செய்தவன் ஆவேசமாக முத்தமிட்டுக் கொண்டே அவன் அணிந்திருந்த சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்ற அவனது பிடி தளர்ந்திருந்த அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் உடலின் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவனை உதறித்தள்ளியவள் எதிலிருந்தோ தப்பிப்பது போல் வேகமாக ஓடினாள்....
என்ன ஓடி என்ன பயன்??? முன்னால் கடல் பின்னால் ஆதி.. எங்கு சென்று தப்பிப்பது??....
படகின் முனைவரை வந்துவிட்டவள் இவனிடம் சிக்கியிருப்பது கடலுக்குள் என்பது அப்போதுதான் உறைக்க ஓய்ந்து போய் திரும்பி பார்த்தாள்.
நக்கல் சிரிப்புடன் கேபின் வாசலில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் ஆதி.
விழிகளால் கெஞ்சியபடி பரிதாபகரமான தோற்றத்துடன் தன் முன்னால் நின்று கொண்டிருந்தவளை பார்த்து அவனுக்கு பாவம் வருவதற்கு பதிலாக ஆசைதான் வந்ததோ?.
அசராமல் பார்த்தவன் இதற்குமேல் அவளால் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்புடன் எஞ்சியிருந்த மற்ற இரண்டு பட்டன்களையும் கழற்றிக்கொண்டே அவன் முன்னேற அவனிடம் மீண்டும் ஒருமுறை தோற்று விடப்போகிறோம் என்பதை உணர்ந்து விழிகளில் நீர் திரையிட அவனை பார்த்தவள் அடுத்த நொடியே கடலுக்குள் குதித்திருந்தாள்.
தொடரும்......
‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 30 போட்டாச்சு மக்களே... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்....
"ஆதியின் நிலா" கதைக்கான கருத்துகளை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.srikalatamilnovel.com