தஞ்சம் 02
அலாரத்தின் சத்தத்தில் தன் உறக்கம் கலைந்தான் அவன். தன் நீளக் கைகளை தூக்கி சோம்பல் முறித்தவாரே எழுந்தவன் நேரே போய் நின்ற இடம் அவனறை பால்கனி. சிவப்பும் செம்மஞ்சளும் நீலமும் என்று வானமெங்கும் ஒவியம் தீட்டியிருக்கும் சூரியோதயத்தின் அழகை காண்பதிலும் இன்னமும் கலப்படம் கண்டிராத காற்றை ஆழ்ந்து சுவாசிப்பதிலும் அலாதி பிரியம் அவனுக்கு.
பொன் மஞ்சள் நிறத்தில் சூரியன் அவனின் ஓவியம் வானம் எங்கும் விரிந்து கிடக்க தன் குஞ்சுகளுக்கு இறை தேடி அணியணியாய் பறவைகளின் ஊர்வலம். இரவெங்கும் பனியில் குளித்தெழும்பியதில் இன்னமும் ஈரம் காயா குளிர்ச்சியுடன் இருந்த பச்சை தாவரங்கள் கண்ணுக்கு இதமளித்தன. இவற்றை கொஞ்சம் நேரம் பார்த்திருந்தவன் பின் தன் உடற்பயிற்சி அறைக்கு சென்றான். உள ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியமும் பார்க்க வேண்டாமா?
உடற்பயிற்சிகள் முடிய குளித்து தயாராகி கீழே வந்தவனுக்கு காபி கலந்து கொடுத்தார் பத்மா. அந்த சாந்தம் நிறைந்த முகத்தை கண்டதும் தன்னால் ஒரு புன்னகை உருவானது இவனது முகத்தில்
"ஜெய் நீ ஆபீஸ் போகும் வழியில் .............. அருகில் என்னையும் கொஞ்சம் இறக்கி விட்றியாப்பா...?" என்ற பத்மாவின் கேள்விக்கு
"யேன்மா அங்க என்ன வேல டீச்சரம்மாக்கு" தன் தாயின் பாடசாலை கூட அந்த வழியில் இல்லை என்பதால் இப்படி கேட்டான் அவன்.
"ஏன்பா ஆம்பளைங்களுக்கு மட்டும் தான் வெளியில் வேலை இருக்குமோ பொம்பளைங்களுக்கு இருக்காதோ " என்ற தாயின் கேள்விக்கு சிரித்தபடியே " அப்படி இல்லம்மா பொதுவா நீங்க வெளியே போறீங்கன்னா அப்பா கூட போவீங்க இப்போ என்னை கேக்கறீங்க அதுவும் இந்தக் காலையிலேயே அது மட்டும் இல்லாம நீங்க சொன்ன ஏரியாவில் அவ்வளவா கடைகள் ஷாப்பிங் மோல்ஸ் கூட கிடையாதே என்று கேட்டேன்." என்றான் அவன் .
"உங்க அப்பாவை கூப்பிடல்ல என்றா நினைக்கிற. அவருக்கு என்னை விட அவரு பிரண்ட்ஸ் தான் முக்கியமா போய்ட்டாங்க. இன்னைக்கு அவரு பிரண்ட்ஸ் கூட பட்மின்டன் விளையாட போறாராம். என்னையெல்லாம் கூட்டிட்டு போயி கூட்டிட்டுவரதுன்னு ட்ரைவர் வேலை பார்க்க முடியாதாம். கிழவருக்கு லொள்ளை பார்த்தியா." என்று நொடித்துக்கொண்டவர்
"என்னோட ஸ்டாப் பொண்ணுக்கு கல்யாணம்ப்பா. போகல்லனா சரி இல்லைல்ல அதான் நீ அங்கவர வர வேண்டாம்டா ******* தெரு கிட்ட இறக்கி விடு. மண்டபம் அங்கின கிட்ட தான். நடந்தே போய்க்கிறோம்." என்றாள் பத்மா. மண்டபத்திற்க்கே கொண்டு போய் விடு என்றால் முடியாது அப்பா கூடவே போய்க்கோங்க என்று சொல்வான் என்று தெரியும் அவளுக்கு.
"தனியாவா போறிங்க" என்ற ஜெய்யின் கேள்விக்கு
"இல்லைப்பா. மகி கூடத்தான். ஆனா இந்த மகி இன்னும் ரெடி ஆகி வரல. ரெண்டு பெரும் இன்னும் சண்டை போட்டுகிட்டு இருக்காங்களா இருக்கும். ஏழு கழுத வயசாகுது. இன்னும் சின்ன குழந்தைகளைப்போல சண்டைப் போட்டுக்கறதே வேலையாய் போய்டிச்சி இதுங்க ரெண்டுக்கும். இவன் விட்டுக்கொடுக்றதாவும் இல்லை. அவ விட்டுக் கொடுக்கறதாவும் இல்லை." என்று அங்கலாய்த்தவள் தான் நம் நாயகனின் தாய்.
இதழில் புன்னகை ஓட தாயின் புலம்பலை கேட்டபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தான் நம்ம நாயகன்.
பெயர் ஜெயவேந்தன். பெயருக்கு ஏற்றார் போல ஜெயிக்கப் பிறந்தவன். நெருக்கமானவர்களுக்கு ஜெய். இருபத்தி ஏழு வயது ஆண்மகன். ஆறு அடிக்கும் கூடிய உயரத்தில் சிவப்புமில்லா கருப்புமில்லா நிறத்தில் கூர் நாசிகளோடு அழுத்தமான உதடுகளோடு தலை நிறைய அடர்ந்து வளர்ந்து அவனுக்கே அடங்காத முடிகளோடு இருப்பவன். ஆனால் என்ன கொஞ்சமே கொஞ்சம் கோபக்காரன். அதற்காக முரடன் இல்லை.
இவன் தாய் பத்மா. புகோள ஆசிரியை. கணவரும் பிள்ளையும் சேர்த்த சொத்து கொட்டிக்கிடந்தாலும் அவரின் ஆசைக்காய் ஆசிரியையாய் பணி புரிகிறார். கணவரும்
தடை சொல்லவில்லை.
தந்தை யசோதரன். பரம்பரை பணக்காரன். தன் தாத்தா அப்பா நடத்திய வியாபாரங்களை கட்டிக்காதவர் இப்பொழுது தொழிலை மூத்தவன் தலையில் கட்டி விட்டு ஓய்வாய் வீட்டிலிருக்கிறார்.
ஜெய்யிற்கு ஒரு தம்பி ஒரு தங்கை. தம்பி கிருஷ்ணவேந்தன். பிஎஸ்சி கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கிறான்.
கிருஷ் யாருடனும் இலகுவில் பழகி விடுவான். தகுதி தராதரம் தாண்டி மனித நேயத்தை நம்புபவன். குடும்பத்தினர் மேல் மிகுந்த அன்புடையவன். ஜெய் போலல்லாது மிகுந்த கலகலப்பானவன். இவனும் எந்த விதத்திலும் அண்ணனிற்கு குறைந்தவன் அல்ல. பெயரிற்கு ஏற்றாற் போல் பெண்களை கவர்ந்திலுக்கும் கிருஷ்ணனே தானிவன். தங்கையை வம்பிழுப்பதில் அளாதி பிரியம் இவனுக்கு.
தங்கை மகிழினி. கல்லூரி முதலாம் வருடம். பத்தொன்பது வயதில் இருக்கும் பெண். முகத்தில் என்னேரமும் குறும்புப் புன்னகை உடன் இருப்பவளின் புன்னகையே அவளுக்கு தனி அழகை கொடுத்தது.
இன்னும் பாட்டி, தாத்தா இது தான் அவன் வீடு.
ஒரு வழியாய் கிருஷ்ஷுடன் சண்டையை சுபம் போட்டு முடித்து மகிழினி தயாராகி வர ஜெய்யுடன் பயணமானார்கள் அந்த தாயும் மகளும்.
காரில் பாடல் கசிந்து கொண்டிருக்க தாளமிட்டவாரே காரை ஓட்டிக்கொண்டிருந்தான் ஜெய்.
அவன் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பத்மா இடைக்கிடை அவன் முகத்தை திரும்பி திரும்பி பார்த்த படியே வந்தாள்.
அவர் தடுமாற்றத்திற்கும் காரணமிருந்தது. விடாமல் துரத்தும் மழைக் காதலனின் தொடுகையில் பூமிக் காதலி உருகி நெகிழ்ந்து போயிருந்தாள்.
இதில் அந்த கல்யாண மண்டபம் செல்லும் தெரு, மண் பாதை வேறு. அதில் இறங்கி நடந்து சென்றால் தான் ஒரு வழியாகி விடுவோம் என நினைத்தவள்.
'ஐயோ இதை அவனிடம் சொன்னால் கல்யாணமே வேண்டாம் என்று காரை திருப்பி விடுவானே”
என நினைத்தவராய் மெதுவாய் பின்னால் திரும்பி பார்த்தால் யாருக்கு வந்த விருந்தோ என வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்தாள் மகிழினி.
“மகிழ், அடியே மகிழ்ழ்" என கிசு கிசுப்பில் கேள்வியாய் திரும்பியவள் தாயின் உதட்டசைவு சொன்ன சேதியில் முறைக்க தொடங்கி விட்டாள். பின்ன தாய் சொன்னதை அண்ணன் கேட்டால் கல்யாணமாவது கச்சேரி ஆவது வீட்டை பார்த்துக் கொண்டு போக வேண்டியது தான்.
தாயின் பிளீஸ்டியில் முறைப்பை கைவிட்டவள் நான் பார்த்துக் கொள்வதாக சொன்னதில் கொஞ்சம் திடம் வந்தவர் கொஞ்சம் மகன் புறம் திரும்பி பார்த்தார்.
நல்ல வேளை அவன் கண்டு விடவில்லை.
அவனெங்கே இங்கே பார்ப்பது அவன் கவனமெல்லாம் இன்று நடக்கப் போகும் டீலை முடிப்பதில் சுற்றிக் கொண்டிருந்தது.
தெரு முனை வந்ததும் காரை நிறுத்தியவன் தாயும் தங்கையும் இறங்கும் வரை காத்திருந்தவன் அவர்கள் இறங்காமல் போகவே கேள்வியாய் தாயை பார்த்தான்.
'ஐயய்யோ பார்த்துட்டானே பார்த்துட்டானே... அடியே நான் பெத்த தெய்வமே ஏதாச்சி செய்டி'
காரை நிறுத்தியவுடனே அந்த தெருவை பார்த்த மகிழ்க்கு தெரிந்து போனது தன் அண்ணா எப்படியும் அந்த தெருவில் காரை விடப்போவதில்லை என்று.
அந்த பாதையின் அழகு அப்படி. அவ்வளவு குழி அதிலும் மழையின் கை வண்ணத்தில் தண்ணீர் வேறு தேங்கியிருந்தது. இதில் நடந்து போவதே கஷ்டம்.
பிறகு எப்படி அண்ணா தன் காரை செலுத்துவான். ஜெய்யிற்கு இந்த கார் மிகவும் பிடிக்கும். தான் சம்பாதிக்க தொடங்கிய பின் அவன் காசில் சொந்தமாய் வாங்கிய கார் என்கிற பெருமையும், பிரியமும் அவனுக்கு இருந்தது. அதனாலேயே அவன் காரை அவன் குழந்தையை போல் பராமரிக்கிறான். அதை இந்த ரோட்டில் விட்டால் நாளைக்கு காரை பாகம் பாகமாய் பேரீச்சம்பழ கடையில் தான் பார்க்கக்கிடைக்கும்.
மாதாஜி கல்யாணத்த மறந்துடுஜீ
அண்ணணின் பார்வையில் கூர்மை கூடுவதை கண்டவள் "அண்ணா கொஞ்சம் மண்டபம் வரை கொண்டு போய் விட்டுடேன். இந்த மழைல நடந்து வேற போனா குளிச்சு தான் போவோம். குடை வேற எடுக்கல்ல. அம்மா நீ குடை எடுத்தியாம்மா" என்றவள் தலையை இடம் வலமாக ஆட்ட பத்மா அதை பின்பற்றினார்.
கொஞ்சம் திரும்பி பாதையை பார்த்தவன் திடுக்கிட்டு விட்டான்.
இதில் காரை செலுத்துவதா?
"என்ன இந்த தெருல கார்லயா? நோ வேய். கல்யாணம்லாம் வேண்டாம். போன்ல உங்க விஷ்ஷை சொல்லிடுங்க." என்றவன் காரை திருப்ப போக தாயை முறைத்த மகிழின் ப்ளீஸ் அண்ணா உடன் தானும் ப்ளீஸ் கண்ணா என இணைந்து கொண்டார் பத்மா.
ஜெய்யின் முறைப்பில் "கண்ணா அவங்க வீட்டு கடைசி கல்யாணம்பா. முதல் இரண்டு கல்யாணத்துக்குமே போகல்ல. இதுக்கு சரி போகனும்மில்லப்பா. இப்படி நான் ஒவ்வொரு வீட்டு கல்யாணத்திற்கும் போகலை என்றால் நம்ம வீட்டு கல்யாணங்களுக்கு ஈ எறும்பு கூட வராதுப்பா" என்று முகத்தை பாவமாய் வைத்த படி சொன்னார் பத்மா.
தாயின் கெஞ்சலில் மீண்டும் பாதையை பார்த்தவனுக்கு எரிச்சல் மண்டியது.
'இங்கல்லாம் கல்யாணம் வைக்கல்ல என்று யார் அழுதா... வேற மண்டபமே கிடைக்கல்லயா. இதல்லாம் ஒரு ரோடு... இதுக்கு ஒரு காரு வேற !!!”
அந்தப் பாதையில் காரை செலுத்தியவன் முகம் கல்லாய் இருகிப் போனது.
விதி அவனை நோக்கி தன் காதல் எனும் கைகளை நீட்டியதை அறியாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான் ஜெயவேந்தன்.
'கண்ணா"
ஜெய் திரும்பி முறைத்த முறைப்பில் சட்டென அடங்கி விட்டார் பத்மா.
ஒரு குழியிலிருந்து தப்பினால் அடுத்த குழி அதிலிருந்து மீண்டால் அடுத்த பள்ளம்
ஜெய்யின் கோபம் இருகியிருந்த அவன் முகத்திலேயே தெரிந்தது. காரின் ஒவ்வொரு குலுங்களுக்கும் தூக்கி தூக்கி போட்டது. முன்னால் இருந்தவர்களாவது சீட் பெல்ட்டை மாட்டியிருந்தனர். ஆனால் மகிழினியின் தலை தான் ஒன்றுக்கு மூன்று முறை காரின் கூரையை முத்தமிட்டது.
ஒரு வழியாய் மண்டபம் வந்துவிட தனக்கிருந்த கோபத்திற்கும் கொஞ்சம் வேகமாவே காரை நிறுத்தினான் ஜெய். உண்மையில் ஜெய்யின் கார் சேராபிஷேகத்தில் குளித்து தான் போயிருந்தது.
"ஏய் முட்டாள். கண்ண என்ன பின்னாடி வெச்சிகிட்டா கார் ஓட்ற. கார் ஓட்றதுன்னா ஏரோபிளான் ஓட்றதா நினைப்போ. ரோட்ல வேற மனுஷங்க போக வேணாம்.
ஒழுங்கா ஓட்ட தெரியாதவன்க்கு எல்லாம் எதுக்கு தேவையில்லாத வேலை... கைய விடுமா... என் டிரஸ் எல்லாம் அழுக்கா போச்சி பாரு..." என்றவள் நம் நாயகி மதுரவாணியே தான். ஜெய் காரை நிப்பாட்டிய வேகத்தில் அப்போது தான் அங்கே வந்திருந்த மதுரவாணியின் தாவணியில் தெறித்திருந்தது சகதி. அப்படியே அந்த குரல் தேய்ந்தும் போனது.
அவள் கத்த ஆரம்பிக்கும் போதே காரில் இருந்து இறங்க தொடங்கிய ஜெய் கண்டது எல்லாம் தாய் கையில் இருந்து தன் கையை உருவ முயன்று கொண்டே சென்ற அந்த நீல தாவனியின் பின் அழகுதான்.
கோபமாய் அவளின் பின்னால் செல்ல முயன்றவனின் கையை பற்றியிருந்த தாயின் கண்களின் கெஞ்சலில் அந்த நீல தாவணிக்காரியின் கண்ணத்தில் அறைய தோன்றிய கோபத்தை அடக்கியவன் காரை கிளப்பிய வேகத்தில் பத்மாவே பயந்து போனாள்.
மகன் போனதும் திரும்பியவர்கோ கிடைத்தது மகிழினியின் முறைப்பே.
"நீ ஏண்டி முறைக்கிற இப்போ"
"ஆஆஆஆஆ ஆசைக்கி... யேன்மா இப்படி எல்லாம் ஒரு கல்யாண வீடு உனக்கு தேவையாம்மா.... இப்போ உன் பெரிய பையன் முகத்தை கொஞ்சம் பாரு... நாலு கடுகை போட்ருந்தா பட படன்னு வெடிச்சிருக்கும்."
"கடுகென்ன கடுகு வீட்டுல போய் அப்பளமே பொரிச்சிக்கலாம் இப்போ வா லேட்டா ஆகுது " மகளை கையை பிடித்து இழுத்தபடி உள்ளே நுழைந்தாள் அந்தத்தாய்.
கீழே உள்ள லின்க் மூலமா உங்க கருத்துக்களை பகிர்ந்து கவள்ளுங்கள் நண்பர்களே