இறைவனாய் தந்த இறைவியே
அத்தியாயம் -1
வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோ
விறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ
காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ
காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ
கஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ
கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ
காட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ
கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ
கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
விதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ
வெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ
மத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ
வளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ
கிருஷ்னகிரி மாவட்டத்தில் .ஆண்டவர்பட்டி என்னும் ஊரில் .வயலில் வேலை செய்யும் களைப்பு தெரியாமல் அந்த கிராமத்து இளம் பெண்கள்சுமார் பதினைந்து பேர் பாடிக்கொண்டிருந்தனர்,அனைவருக்கும் வயது பதினாறில் இருந்து இருபத்தி மூன்றுக்குள் தான் இருக்கும்.
இந்த அனைத்து பெண்களும் அதே ஊரை சார்ந்தவர்கள் தான்.திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள்.எத்தனை பெண் பிள்ளை பிறந்தாலும் காத்திருந்து , கொள்ளிவைக்க ஆண் பிள்ளை தான் வேண்டும், என்று பெற்ற காலம்.
அதன் விளைவு ஒவ்வொரு வீட்டிலும் இரண்டோ, மூன்றோ! பெண் பிள்ளைகள் இருப்பர்.இதில் கள்ளிப்பால் கொடுத்து கொன்ற குழந்தைகள் கணக்கில் வராது.
அன்று எல்லாம் அவர்களின் இனத்தில் மாப்பிளை கிடைப்பது மிகவும் அரிது.சொந்தத்தில் அத்தை மகன்,மாமன் மகன். அல்லது பெண் கொடுத்து பெண் எடுப்பது இது போன்ற திருமணம் தான் நடக்கும்.
அப்படி சொந்தத்தில் மாப்பிளை இல்லாத பெண்களுக்கு, அசலில் பார்த்தால் பல பவுன் நகைகள்,வண்டி ,சொத்து என்று கேக்க, எங்கே? போவது.பல பெண்கள் திருமணம் முடியாமல் இன்னும் முதிர்கன்னிகளாகவே இங்கு இருக்கின்றனர்.
நாற்றை நட்டு முடித்ததும் வரப்பில் ஏறியவர்கள். தங்களின் வீட்டை நோக்கி நடையை கட்ட ,நால்வர் மட்டும் பின் தங்கினர்.அவர்கள் நால்வரும் நெருங்கிய தோழிகள் கற்பகம் ,செல்வி ,பர்வதம்,அமுதா.
"சீக்கரம் வீட்டுக்கு போயிட்டு கிளம்பி வாங்கடி," என்று ஒருவருக்கு ஒருவர் கூறி கொண்டவர்கள்.சிட்டாய் பறந்து அடுத்த அரை மணி நேரத்தில் கிளம்பி வந்தனர்.
எல்லாம் அவர்களின் ஆஸ்தான நாயகன் பாக்கியராஜின். இப்போது புதுசாய் ரிலீசான முந்தானை முடிச்சு படம் பார்க்க தான்.இவர்கள் ஊரில் இருந்து ஆறு கிலோமீட்டர் நடந்து தான் டவுனிற்கு செல்ல வேண்டும்.அப்போதெல்லாம் பேருந்து வசதிகள் அவ்வளவாய் இல்லை.
டவுனிற்கு சென்று படம் முடிந்து திரும்பும் நேரம். ஆளுக்கு ஒரு படி பொறி கல்லை வாங்கி தங்கள் தாவணி முந்தானையில் நிரப்பியவர்கள். படத்தை பற்றி தங்களுக்குள் வளவளத்து கொண்டு வீட்டை நோக்கி நடையை கட்டினர்.
தெரு விளக்கின் வெளிச்சத்தில் அமுதாவின் வீட்டை நெருங்கும் போதே! அவளின் தாய் "ஏண்டி இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் வச்சிக்கிட்டு ராத்திரி நேரத்துல இப்படி ஊரு சுத்திட்டு வர,என் அண்ணன் வீட்ல பார்த்தா என்ன ஆகும் ."
"சொந்த மாமன் மகனையே கட்டி கிட்டாலும் ,நீ போற இடத்துல நடந்துக்கிறதை வச்சி தான் உன் தங்கச்சிய கேட்டு வருவாங்க "என்று கத்த,
அடுத்ததாய் இருந்த வீட்டில் இருந்து வெளிவந்த செல்வியின் தாய் விறகு பட்டறையில் இருந்து ஒரு விறகை உருவியவர்.
"ரெண்டு நாளில் உனக்கு கல்யாணம்னு தெரியும்ல,வீட்ல கூட மாட வேலை செய்யாமா இந்த சிரிக்கிங்களோட எங்கடி போயிட்டு வர"என்றவர். அடிக்க துரத்த ஊருக்கே கேக்கும் குரலில் "அம்மா அடிக்காத மா " என்று கத்தி கொண்டு ஓடினாள் செல்வி.
செல்வியை பார்த்து சிரிப்போடு, பர்வதம் தன் வீட்டினுள் நுழைய வீடு ஒருவித அமைதியில் இருந்தது.அவளின் தந்தை தான் இந்த ஊரின் ஊர் கவுண்டர்.சொத்து சற்று ஏராளம் தான் ,தாய் தந்தைக்கு ஒரே பெண்.
அமைதியான சுபாவம் கொண்டவள்.யாரையும் அதிர்ந்து கூட பேச மாட்டாள் என்பதாலே!!! வெளியில் கொடுக்க மனம் இல்லாமல். இதே ஊரில் சம்மந்தம் பேசி இருக்கிறார்.பத்து நாள் கழித்து திருமணம்.
கற்பகம் கடைசியாய் தன் வீட்டிற்கு போக அவளின் தாயாரோ! "அண்ணன் மகள் எப்படி இருந்தாலும். பரவால்லைனு மகனுக்கு கட்டிட்டுப்போக அத்தை இருக்காளா,இல்லை தங்கச்சி மக தப்பு பண்ணா, ஏத்துக்கிட்டு கட்டிகிட்டு போக மாமன் இருக்கானா,"
"இல்லை அசல்ல குடுக்க, உன் அப்பன்காரன் நகை சேத்து வச்சிருக்கானா, பொம்பளை புள்ளயா வீட்ல அடங்கி உட்காராமல். என்னடி படம் வேண்டிருக்கு,"என்று சில பல அடிகளை மொத்தியவர்,
"நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க,அடுத்த ரெண்டு நாளில் நிச்சயம்,அதற்க்கு அடுத்த நாள் கல்யாணம்" என்று கூறியவர்."கல்யாண சோறு போட நெல்லு கூட இல்லையே! நான் என்ன பண்ண போறேனோ!" என்று மீண்டும் தனது புலம்பலை தொடர்ந்தார்.
குறித்த நாளில் ஒவ்வொருவருக்காய் ஒரே பந்தலில் திருமணம் நடந்தேறியது.ஆம் இவர்களுக்கு தனி தனியாய் பந்தல் போட்டு திருமணம் நடத்தும் அளவுக்கெல்லாம் எல்லோரும் வசதியானவர்கள் கிடையாது.
பர்வததிற்கு ஊர்கவுண்டர் முன்னமே போட்ட பந்தலில் தான். நான்கு திருமணமும் நடந்தேறியது.
பர்வதமும் ,அமுதாவும் அதே ஊரில் உள்ள தங்கள் புகுந்த வீட்டில் இருந்து கொள்ள,செல்வியும் ,கற்பகமும் மட்டும் அசலூறிலுள்ள கணவன் வீட்டிற்கு செல்ல ஆய்த்தமாயினர்.
பிறந்ததில் இருந்து ஒன்றாய் வளர்ந்த தோழிகள் பிரியும் நேரத்தில் அழுத அழுகை சொல்லி மாளாது.என்ன தான் பிரியமானவர்களை பிரியும் வேதனை இருந்தாலும்.புது வாழக்கைக்குள் நுழையும் பொழுது சற்று பயம் இருக்குமில்லையா,
அதுவும் சேர்ந்தே ஓலமாய் வெளிப்பட்டது.ஒருவாராய் தங்களை தேற்றியவாறு பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்க,ஆறு மாதம் ஆனது.
அவினாசியில் இருந்து சிலை தருவிக்கப்பட்டதால்,அந்த ஊரின் அம்மனை அவிநாசி அம்மன் என்றும் அழைப்பார்.ஆனால் அம்மனின் பெயர் விசாலாட்சி.
வேண்டும் வரம் அளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்தவர், என்பது சுற்றுவட்டாரத்து மக்களின் நம்பிக்கை.இத்தனைக்கும் கருங்கல்லால் கட்டப்பட்ட சிறு கோவில் தான்.
அந்த கோவிலின் வலது பக்கத்தில் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள சிறு மண் திண்டில் அமர்ந்தவாறு நால்வரும் பேசிக்கொண்டிருந்தனர்.
தற்போது அமுதாவும் ,பர்வதமும் ஐந்து மாத கர்ப்பிணிகள்.செல்விக்கு தானாகவே கருக்கலைப்பு ஆகியிருந்தது.கற்பகம் கருத்தரிக்கவே இல்லை.
ஏழை குடும்ப பெண்கள் தானே!குடும்ப வறுமை ,குழந்தைகள் குறித்த தங்களின் வேதனைகளை,விழிகளில் நீரோடு உரையாடியடி படி இருந்தவர்களின்.தலையாய பிரச்சனை மாமியார்,நாத்தனார் கொடுமைகள்.
பேச்சு எங்கெங்கோ சென்று இறுதியில் ,தங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை தங்களின் பிள்ளைகள் அனுபவிக்க விட கூடாது.என்று ஏதேதோ பேசியபடி இருந்தவர்கள்.அம்மனுக்கு ஆரத்தி காட்டி குங்குமம் அளிக்கும் பொழுது நால்வருமே அம்மனை கைகூப்பி வேண்டியபடி.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளில். ஒன்றை தோழிகளின் பிள்ளைகளுக்கு மணமுடித்து கொடுப்போம் .என்று அம்மனின் முன் நின்று சத்திய பிரமாணம் எடுத்திருந்தனர்.
பர்வதத்திற்கும் ,அமுதாவிற்கும் முதலில் ஆண்குழந்தைகள் பிறந்திருக்க,தங்களின் மருமகளிற்காக ,
காத்திருக்க ஆரம்பித்தனர்.நாளடைவில் கற்பகத்திற்கும் பொதிகை என்ற பெண்குழந்தை பிறந்திருக்க ,
பத்மா அவளையே தன்மகன் வளவனுக்கு என்று முடிவெடுத்ததோடு அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார்.அந்த நிலையிலும் செல்விக்கு மேலும் இருமுறை கருக்கலைப்பு நடந்து ,வேதனையில் இருந்தவரை.
மாமியார் கண்டதையும் பேசி,மகனுக்கு வேறு பெண்ணை மணமுடிப்பதாய் கூறி பிறந்த வீட்டிற்கு விரட்டி விட்டார்.பல வருடம் கணவனை பிரிந்து ,பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பந்தாட பட்டாலும்.
குழந்தை மட்டும் பிறக்கவே இல்லை.போகாத கோவில் இல்லை ஏறாத மருத்துவமனை இல்லை,இதற்குள் அமுதாவுக்கு மற்றுமொரு ஆண்குழந்தையும் பிறந்திருந்தது.
இதற்கிடையில் கற்பகத்தின் கொத்தனார் வேலை செய்யும் கணவர்.இங்கு வேலை அதிகம் கிடைப்பது இல்லை என்று,கற்பகத்தை கொண்டு வந்து தாய் வீட்டில் விட்டு விட்டு,பெங்களூர் சென்று விட்டார்.
ஆறுமாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வருவார்.அதனால் அவரும் அடுத்து கருவுற வில்லை.இப்போதெல்லாம் வீட்டு வேலைகளுக்கு இடையில்.தோழிகள் எங்காவது சந்தித்து கொண்டால் கூட ,அமுதா மட்டும் விலகியே இருந்தார்.
அமுதா கணவனின் அயராத உழைப்பில்,அவர்கள் மெல்ல மெல்ல முன்னேறி கொண்டிருந்தனர்.புது பணக்காரிக்கு ஏழை பெண்களின் சகவாசம் பிடிக்கவில்லை.
அத்தோடு பிள்ளை இல்லா செல்வியையும்,ஆண் பிள்ளைக்கு தவ மிருக்கும் கற்பகத்தை காட்டிலும், இரண்டு ஆண் சிங்கங்களை,பெற்ற கர்வம் அவரை தள்ளியே வைத்தது.
இந்த நிலையில் அவிநாசி அம்மனிடம் ஓயாத பிராத்தனை கொண்டு பல்வேறு விரந்தங்களையும் மேற்கொண்டு ,செல்வி நல்ல படி கருவுற்றார்.கற்பகமும் இரண்டாவது கருவுற்றிருந்தார்.
ஒரு நல்ல நாளில் செல்விக்கு பெண் குழந்தை பிறக்க, விசாலாட்சிஅம்மனின் அருளால் பிறந்த மகளுக்கு,விசாலாட்சி என்றே பெயரிட்டு,சாலா என்று அழைத்து வந்தார்.பிள்ளை பெற்றும்,மாமியார் தன் சுடுவார்த்தைகளை நிறுத்தாமல் தொடரவும்.
இதை கண்டுகொண்ட அவள் கணவரே இவளை அழைத்து கொண்டு ஆண்டவர்பட்டிக்கு வந்து மாமனார் வீட்டருகில், தனி குடிசை அமைத்து இவர்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர்.
இங்கு இரண்டாவதும் கற்பகத்திற்கு பெண்குழந்தை பிறந்துவிட,அவர்கள் வீடு ஏதோ துக்கம் நடந்த வீடு போல் இருந்தது.அவளின் தாய் அந்த பிள்ளையை சீண்ட கூடவில்லை.
மற்றவர்கள் ஒதுக்கினால்? பெற்ற தாய் தன் பிள்ளையை ஒதுக்குவாளா, என்ன?,மகிழ்வோடு மகளை அணைத்து சாரல் என்று பெயரிட்டு," ஒருநாள், இன்னைக்கு உன்ன ஒதுக்குணவங்க, எல்லாம் சாரல், சாரல்னு உன்பின்னாடி வருவாங்க பாரு" என்று உச்சி முகர்வாள்.
காலம் அதன் போக்கில் நகர கற்பகமும் அதே ஊரில் இடம் வாங்கி ஒரு மெத்தை வீட்டை கட்டி கொண்டு வாழத்தொடங்கினார்,அந்த நேரத்தில் ஏதோ ஒரு விஷக்காய்ச்சல் வந்து சாரலுக்கு ,பத்து வயதிருக்கும் பொழுது கணவரும் இறந்துவிட,
அவள் தாய் "எந்த நேரத்தில் உன்ன பெத்தேனோ! அப்படியே அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு எங்களை விட்டு நகராமல் இருக்க ,இதுல உன் பிள்ளைகள் வேற" என்று ஓயாமல் புலம்ப,கற்பகம் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விட்டார்.
இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் இரண்டில் ஏதோ கோளாறு இருப்பதால்.இதய துடிப்பு சரியாக இல்லை என்று கூறி,அந்த காலத்திலேயே சென்னை வரை கொண்டு சென்று ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து அவரை பிழைக்க வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை என்றாலும் இத்தனை தூரம் .அழைத்து வந்து பிழைக்க வைத்தது அவரின்அண்ணன் தான்.
அதன் பின்பும் அவர் தாயின் வாய் ஓயாமல் புலம்பும் நேரங்களில் எல்லாம். சாரல் ஏதாவது சேட்டை செய்து கிழவியின் கவனத்தை மாற்றிவிடுவாள்.வறுமையிலும் மகிழ்ச்சியாகவே!இவர்களின் வாழ்வு சென்று கொண்டிருக்கையில்
தீடீரென ஒரு நாள் பர்வதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒற்றை மகளின் இறப்பிற்கு அவளின் கணவர் தான் காரணம் என்று அவரின் அப்பா போலீசில் புகார் அளிக்க,போதிய ஆதாரம் இல்லாமல்.
அவரின் கணவர் செந்திலும் உடனே வெளியில் வந்துவிட்டார்.பர்வதம் இறந்து இருபது நாட்கள் கழித்து தான்.செந்திலுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதே மற்றவர்களுக்கு தெரிந்தது.
அதுவும் வளவனை விட ஒரு வயது சிறியவனாய் முகிலன் என்ற பையனையும்,நிறை மாத கர்பிணியாய் ,ஒரு பெண்ணையும்.பர்வததோடு வாழ்ந்த அதே வீட்டிற்கு கூட்டி வர,
பத்து வயது வளவன் அடுப்பிற்கு வெட்டி போட்டிருந்த விறகு கட்டையை எடுத்து கொண்டு தந்தையை விளாசு விளாசு என,விளாசி தள்ள,
யாருமே அந்த சிறுவனை தடுக்கவே இல்லை.கடைசியில் நிறை மாத கர்ப்பிணியான அந்த பெண் இவன் காலை பிடித்து கொண்டு கதற,அப்பெண்ணையும் இவன் அடிக்க பாய,இடையில் பாய்ந்த இவனின் பாட்டி,
பர்வதத்தின் தாயார் தான் தடுத்து நிறுத்தினார்.அதன் பின் வளவனின் வாழ்வு தாத்தா பாட்டியின் வசமானது.
இன்று
பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்று நால்வரும் உறுதிபூண்ட அதே அவிநாசி அம்மன்
திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு ஊர் மக்கள் அனைவரும் கூடி இருந்தனர்
பட்டாசோடும் ,வானவேடிக்கை யோடும் அம்மனுக்கு ஊர் மக்கள் மாவிளக்கும் , முளைப்பாரியும் கொண்டுவர அந்தக் கூட்டத்திற்கு முன்னே கரகாட்டக்கார பெண்கள் நையாண்டிஆடிக்கொண்டு வர அதே ஊரைச் சார்ந்த இளம் காளைகளும் அவர்களோடு இணையாக ஆடியபடி கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஒருவழியாய் மாவிளக்கு கோவில் வந்து சேர்ந்து பூஜை ஆரம்பிக்கப்பட்டது. தன் பரிபூரண அலங்காரத்தோடும் பரிவார தோடும் கம்பபீரமாய் ஜெகஜோதியாய் வீற்றிருந்த அம்மனை தரிசிக்க, ஆயிரம் கோடி கண்கள் காணாது.
அத்தனை மக்களுக்கும்இடையில் நம் தோழிகளை எங்கே சென்று தேடுவது என்று யோசனையாய் நாம் இருக்க
எப்போதும் போல் அவர்களின் ஆஸ்தான இடமான மண் திட்டை அகற்றி தற்போது
இரண்டு குதிரைகளும், அத்தோடு சேர்த்து குதிரை காவலர்களும்அமைக்கப்பட்டிருந்த
திண்ணையில் அமர்ந்திருந்தனர்
ஆனால் அங்கு இருவர் மட்டுமே இருக்க, பர்வதம் தான் எப்போதோ இந்தப் பூவுலகை விட்டு விடைபெற்று விட்டாரே!
"சாரல் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்,சித்தி "என்று சோகமாய் அமர்ந்திருந்த சாலாவை வாஞ்சையோடு வருடிய கற்பகம்.
"விடுடா,அவ தான் லீவ் கெடைக்கலைனு சொல்லிட்டாளே!உன் வீட்டுக்காரர் முகிலன் போன் பண்ணாரா"
என்ற கேள்விக்கு குங்குமமாய் முகம் சிவந்த விசாலாட்சி,"ம்ம் அவங்க பிரன்ட் பாத்துட்டு வரேன்னு பெங்களூர் போயிருக்காங்க," என்று மகிழ்வோடு உறைத்து விட்டு,
அன்னையிடமும் ,சித்தியிடமும் விடைபெற்று தங்கள் மாவிளக்கு தட்டும், அர்ச்சனை கூடையும் எடுத்துக்கொண்டு மேலாண்டூர் மக்களோடு இணைந்து நடந்தாள்.
ஆம் முன்னர் ஆண்டவர் பட்டியாய் ,ஒரு ஊராக இருந்தது . தற்போது ஏரியின் மேலே!மேல் ஆண்டவர் பட்டி, ஏரிக்கு கீழே!கீழ் ஆண்டவர் பட்டி என்றும்.பிரிக்கப்பட்டு , நாளடைவில் மேலாண்டூர் ,கீழாண்டுர் என்று வழக்கத்தில் உள்ளது.
இரு ஊருக்கும் பேருந்து நிலையம்,நியாய விலை கடை,ஊர் தலைவர் என தனி தனியாய் இருந்தாலும்.இரு ஊருக்கும் பொதுவாய் இருப்பது.அம்மன் மட்டுமே!
கற்பகம் மகிழ்வோடு செல்லும் தோழியின் மகள் மேல் இருந்த பார்வையை தோழியின் பக்கம் திரும்பியவர்.அதிர்ந்து போனார்.
ஆம் செல்வியின் முகம் அத்தனை
அவள் அன்னை பிள்ளைப்பேறுக்காய் விசாலாட்சி அம்மனிடம் வேண்டிக் கொள்ள சொல்ல, அவளோ! தன் அத்தையிடம் தான் முதலில் வேண்டிக்கொண்டாள்.
இத்தனைக்கும் இருவருக்கும் இடையில் ரத்த பந்தம் கூட கிடையாது. என்பது தான் உண்மை, ஏன் பருவத்தோடு நீண்ட நாள் இருந்தது கூட இல்லை. ஆனால் அவளுக்கு அவ்வளவு பிடிக்க காரணம் பொதிகை,
பொதிகை தன் அன்னையைப் பற்றிக் கூறுவதை விட, பருவத்தைப் பற்றி அதிகம் கூறி ஆரம்பித்து வைத்த பழக்கம் தான் விளக்கேற்றுவது. அவளின் திருமணத்திற்குப் பின் சாரலும், சாலாவும் ஏற்றிக் கொண்டிருக்க,
சாரல் தற்பொழுது வெளியூரில் இருப்பதால் சாலா ஏற்றுகிறாள். தன் போக்கில் நடந்து கொண்டிருந்தவள். தனக்குப் பின்னால் வரும் புல்லட் சத்தத்தை கேட்டுஉடல் நடுங்க தான் பற்றி இருந்த கூடையை இறுகப் பற்றினாள்.
புல்லட் சத்தத்தை வைத்தே பின்னால் வருபவன், யார்? என்று உணர்ந்து தவிர வேறு எந்த ஆண்மகனும் வரப்போவது இல்லை, என்பது நிச்சயம்.
ஏன்? அவன் எங்கே இருந்து வருகிறான். என்பது கூட அவளிற்கு நிச்சயமே!, ஆம் மேல் ஆண்டவர் பட்டியின் தெற்குத் தெருவில், பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறு உணவு விடுதி நடத்திக்கொண்டிருக்கும். பாமா வீட்டில் இருந்து தான் வருகிறான்.
திருவிழா காரணமாய் இரண்டு நாட்கள் உணவுவிடுதி விடுமுறை விட்டிருக்க, இரவு இரண்டு மணி வரை ஒரு ஆண் பிள்ளைக்கு, அவள் வீட்டில் என்ன வேலை. அத்தனை பயத்திலும். இதை எண்ணிப் பெருமூச்சு எழாமலில்லை சாலாவிற்கு, ஆனால் இது ஊரறிந்த ரகசியம் ஆயிற்றே!
ஆம் அவனுக்கும் அந்த பாமா வாகப்பட்டவளுக்கும், ஏதோ தகாத உறவு இருப்பதாய் ஊர் முழுதும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.அதை நினைத்தாலே சாலாவிற்கு பற்றி கொண்டு வரும்.
அவளின் அன்னையும்,கற்பகம் சித்தியும் எத்தனையோ முறை அவனிடம் அப்பெண்ணை வேண்டுமானால் திருமணம் கூட செய்து கொள்.இவ்வாறு நடந்து கொள்ளாதே!என்று கெஞ்ச,
சாரல் கூட கேவலமாய் திட்டி பார்த்து விட்டாள் .ஆனால் அவன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.ஆம் அந்த அவன் வேறு யாரும் இல்லை. அவளின் பிரியத்திற்கு உட்பட்ட பர்வதம் அத்தையின் ஒற்றை புதல்வன் வளவன் தான்.
உண்மையில் ஐந்து வருடம் முன்பு, பொறியியல் நான்காம் ஆண்டு செல்லும்வரை வளவன் நன்றாகத்தான் இருந்தான். அவனை தாயாய் இருந்து வளர்த்த பாட்டி வயது முதிர்ச்சியால் இறந்த போதும். படிப்பை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்.
இடையில் என்ன ஆனதோ! யார் கண் பட்டதோ! தெரியவில்லை.
படிப்பை பாதியில் விட்டுவிட்டு காலி பயல்களோடு ஊர் சுற்ற கிளம்பி விட்டான்.யார் சொல்லிற்க்கும் மரியாதை இல்லை.அவனின் தாத்தா உயிரோடு இருக்கும்வரை எத்தனையோ முறையில் இவனிடம் சொல்லி சொல்லி பார்த்தவர். கடைசியில் அவரும் ஒரு நாள் மறைந்து விட்டார்.
மெல்ல மதுவில் தொடங்கியது ,தற்போது மாதுவரை சென்றிருக்கிறது.இந்த ஐந்து வருடங்களாக எந்த வேலைக்கும் செல்வதில்லை. தாத்தாவின் விவசாய நிலத்தை,தோப்பை குத்தகைக்கு விட்ட பணத்தில்தான் செலவு செய்து கொண்டிருக்கிறான்.
உணவும் பாமாவின் விடுதியிலே முடித்துக்கொள்ள, அவ்வப்போது இரு அத்தைகளின் வீட்டிலும் உண்பான்.பாதி நாட்கள் ஊரிலே இருக்கவும் மாட்டான்.எங்கே செல்கிறான் என்று யாருக்கும் தெரியாது.
சாலாவினருகில் வந்ததும்,புல்லட் வேகத்தை குறைத்தவன்.ஏதும் பேசாமல் அவளை முன்னாள் விட்டு, பின்னால் வண்டியை மெல்ல நகர்த்தி கொண்டு வந்தான்.இன்று மட்டும் அல்ல,என்றுமே தேவைக்கு அதிகமாய் அவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.
இவன் அமைதியாய் இருந்தாலும் சாரல் ஏதாவது சீண்டுவதால், சாரலிடம் அதிக சண்டையிட்டு பார்த்திருக்கிறாள்.ஏன் குடித்து விட்டு தெருவில் கூத்தடித்தும் பார்த்திருக்கிறாள் .அவனின் கருப்பான முகமும் ,எல்லை முனியை போல் அத்தனை பெரிய உடலும்,மீசையும், தாடியையும் கண்டாலே!இங்கு சாலாவிற்கு கொலை நடுங்கிவிடும்.அதை விட எரிச்சலாய் இருக்கும்.
இன்றும் அதே போல் நடுங்கினாலும், மெல்ல தைரியமாய் கூடையிலிருந்த மாவிளக்கையும்,திருநீறையும் ஒரு கவரில் போட்டு வண்டி டேங்கரின் மேல் வைக்க,
"ஏய்!!" என்ற ஒற்றை கர்ஜனையில் சர்வமும் அடங்க,மெல்ல திக்கி திணறி "இல்ல இது அம்மா வீட்ல செஞ்சது"என்று ஒருவாறு அவள் கூறி முடிக்கவும்."ம் " என்ற ஒற்றை எழுத்தோடு அமைதியாகி விட்டான்.
என்னதான் இந்த ஐந்து வருடத்தில் அவன் மாறி இருந்தாலும். அவன் தந்தை மேல் உள்ள வெறுப்பு மட்டும் இன்று வரை குறையவில்லை.அந்த ஆள் விட்டு மாவிளக்கு எனக்கு எதுக்கு? என்ற அதட்டல் தான் முன்னர் வந்தது.
முதலில் அவன் வீடு வந்து விட்டாலும் ,செல்லாமல் அவள் வீடு செல்லும் வரை,பின்னோடு சென்று ஹெட் லைட்டை ஒலிக்க விட்டவன்.அவள் வீட்டு கேட்டை திறந்து உள்ளே சென்ற பின்னே!வந்த வழியிலே திரும்ப சென்று தன்வீட்டை அடைந்தான்.
செந்திலின் மருமகள் என்பதற்கோ !முகிலனின் மனைவி என்பதற்கோ !அல்லது விசாலாட்சி என்ற பெண்ணிர்காகவோ!இதை செய்யவில்லை.செல்வியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக,பாட்டியின் மறைவிற்க்கு பின் அவரின் இடத்தில் இருப்பது செல்வியும் ,கற்பகமும் தானே
இங்கு கோவிலில் வேதனையில் துடித்த தோழியை தேற்றிய கற்பகம். மனதிலும் ஒரு பயம் சூழ்ந்து கொண்டிருக்கிறது தான்.
கணவரின் மறைவிற்கு பின்பு இதய நோயாளியானாலும்,மிகவும் கஷ்டப்பட்டு இரு பெண்களையும் படிக்கவைத்து ஆளாக்கிவிட்டார்.
பொதிகை மணமுடித்து நான்கு வயது மகனை கையில் வைத்திருக்க,சாரல் மட்டும் ஒத்தையில் நிற்கிறாள்.கடவுள் அறிவை குடுத்தது போலே அழகையும் அள்ளி கொடுத்துவிட்டிருக்க,அவளிற்கு மாப்பிளை பார்ப்பது பெரும் பாடாய் இருக்கிறது.
இதே ஊரை சேர்ந்த ஓர் ஆடவனை காட்டி சாரலுக்கு பேசலாம். என்று செல்வி கூற,கற்பகம் மறுத்து விட்டார்.செல்வியிடம் மட்டுமல்ல இதே ஊரிலும் ,உறவுகளிலும் பெண் கேட்ட யாருக்குமே கற்பகம் சம்மதிக்கவில்லை.
கணவர் இல்லாமல் இரு பெண்களை வளர்ப்பது அத்தனை சுலபம் இல்லையே !பெண் பிள்ளையை வெளியூரில் படிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன ,காதல் என்று யாருடனாவது சென்று விட்டாள்.என்ன செய்வாய்?என்றவர்கள்.
சில வருடம் முன்பு பொதிகை திருட்டு கல்யாணம் செய்து கொண்டாள்.என்று வேறு புரளி கிளப்பி,ஊர் முழுவதும் கூடிக்கூடி பேச ,அந்த நொடி கற்பகம் ஊரையும் ,ஊர் மக்களையும் வெறுத்து விட்டார்.
அன்று அவர் எடுத்த ஒரே முடிவு இந்த ஊரிலோ ,ஊர் சார்ந்த உறவுகளிலோ தன் பெண்களை மணமுடித்து கொடுப்பதில்லை என்று.அதே போல் பொதிகைக்கு அசலிலே திருமணம் செய்து கொடுத்தார்.
எந்த குறையும் இல்லாமல் பெரியவள் நலமோடு வாழ்ந்து வர,சாரலுக்கும் நல்ல வரன் அமைய வேண்டும் என்பது தான் அவரின் பெரிய கவலை.சாரலோ திருமணம் என்றாலே பிடி கொடுக்க மறுக்கிறாள் .
தங்களின் மனபாரத்தை அம்மனின் மேல் போட்டு விட்டு இருவரும் வெளியில் வர,இவர்களை விட நல்ல பட்டுடுத்தி ,நகை அணிந்து நின்றிருந்தாலும் பன்மடங்கு சோகம் அப்பிய முகத்தோடு அம்மனிடம் மன்றாடி கொண்டிருந்தார் அமுதா,பின்னே இவர்களுக்காவது பிள்ளைகள் கண்முன்னே இருக்கிறது.
அமுதா ஒரு பிள்ளையை தொலைத்து விட்டு அல்லவா நின்று கொண்டிருக்கிறார்.அவரின் மூத்த மகன் ஏழு வருடம் முன்பு, உறவுகளால் துரோகம் இழைக்கப்பட்டு, ஊராரால் அவமானப்படுத்தப்பட்டு இவ்வூறை விட்டு சென்றவன் தான்.இன்று வரை திரும்பவில்லை.
மாதாமாதம் தாயின் வங்கிக்கணக்கில் பணம் போடுவதை வைத்து தான் அவன் உயிரோடு இருக்கிறான் என்று இவர்களுக்கு நிச்சயமாகிறது.
இளைய மகன் கண்ணபிரான் திருமணம் முடிந்து ஏழு வருடமாகியும் பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருக்கிறான்.
வளவன் தான் தோன்றி தனமாய் சுற்றி கொண்டிருக்க ,பொதிகை, சாலா,கண்ணபிரான் மூவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மற்றொருவன் எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.சாரலுக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை.அத்தோடு அவள் அன்னையோ இதே ஊரில் பெண் கொடுக்க மறுக்கிறார்.
இப்படி இருக்கையில் அன்று ஒரு நாள் அம்மன் முன் செய்த சத்தியம் என்னவாகும்.பொறுத்திருந்து பாப்போம் .......
இறைவி தொடர்வாள் ............
[/SIZE]
ஹாய் மக்களே! இறைவனாய் தந்த இறைவியை முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன்,வாசித்து தங்களின் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களின் கருத்துக்கள் தான் எனக்குமேலும் ஊக்கத்தை அளிக்கும் நன்றி
ஏதேனும் குறை இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.