ஹாய் டியர்ஸ்
"பிளான் பி (Plan B)..!!"
இந்த மாத சுடர்க்கொடி வெளியீடு..
கதையில் இருந்து ஒரு குட்டி டீ..
**********
அவசரமாக அங்கிருந்து கிளம்பி வரும் அவசரத்தில் விக்கிக்கு விளையாட்டு பொருட்களைக் கூட அவள் எடுத்து வந்திருக்கவில்லை. இந்த ஆள் அரவமற்ற பகுதியில் அவனுக்கும் பொழுது போக்குக்கு ஏதாவது வேண்டுமே என்றே அமைதியாக இருந்தாள் கார்த்திகா.
இனி அதை எல்லாம் போற்றிப் பாதுகாக்கும் அளவிற்கு அவளுக்கு நேரமும் பொறுமையும் இருக்குமோ.. என்னவோ..! அதனாலேயே அவன் விளையாட தகுந்த சீக்கிரம் உடைந்து விடாதது போன்ற சில பொருட்களை மட்டும் எடுக்க அனுமதித்திருந்தாள் கார்த்திகா.
இந்தக் கடிகாரத்தையே இரவு தான் கார்த்திகா கவனித்திருந்தாள். ‘இதை அவன் எப்போ எடுத்தான்..?’ என்ற யோசனையோடு கையில் எடுத்துக் கவனமாகப் பார்த்தவளுக்கு அது மரத்தில் செய்யப்பட்டிருப்பதும் எளிதில் உடையும்படியான கண்ணாடி எதுவும் இல்லை என்பதாலும் அவனிடம் கொடுத்து விட்டாள் கார்த்திகா.
ஏனெனில் அதை அவன் பொக்கிஷம் போல் அவளிடம் தர முடியாது எனத் தன் சட்டைக்குள் ஒளித்து வைக்க முயன்ற அழகு அவளுக்கு அத்தனை ரசனையாய் இருந்தது. இது போன்ற செயல்களை எல்லாம் இதற்கு முன் அவள் விக்கியிடம் கண்டதே கிடையாது.
எப்போதும் ஒரு மிரட்சியோடு திகைத்து விழித்த விழிகளும் பதட்டமுமான முகமுமாகவே தன் துப்பட்டாவை பிடித்துக் கொண்டு சுற்றி வரும் விக்கியையே பார்த்து பழகி இருந்தவளுக்கு இப்போதாவதுக் கொஞ்சமேனும் அவனிடம் குழந்தை தனம் மீள்வதைக் கண்டே குழந்தையைத் தடுக்க நினைக்காமல் விக்கியிடமே கொடுத்து விட்டாள் கார்த்திகா.
அதை எல்லாம் எண்ணி கொண்டிருந்தவளின் முகத்தில் ஒரு கசப்பான புன்னகை வந்தது. அதே நேரம் அவளின் முகத்தைப் பற்றி “ம்மா.. ம்மா..” எனத் தன்னை நோக்கி திருப்பினான் விக்கி.
அதில் தன் கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள் கார்த்திகா. விக்கி தன் கையில் இருந்த சின்னக் கடிகாரத்தைக் காண்பித்து “தைம்.. தைம்..” என்று ஏதோ சொல்ல முயன்று பின் திரும்பி அவள் முகத்தைப் பார்த்து தடுமாற..
“டைம்மாடா கண்ணா..? அது ஓடாதுடா தங்கம்.. இப்போ மணி ஆறரை இருக்கும்..” என்று அதை வாங்கிப் பார்த்தவள், “இது பழசுடா.. பெரிய தாத்தாவோடது.. அவர் ஆசையா வெச்சு இருந்தார்..” எனக் கலை வேலைப்பாடுகளோடு கூடிய அந்தக் கையடக்கக் கடிகாரத்தைத் தன் விரல் கொண்டு வருடியவாறே குமாரசுவாமியின் நினைவில் கூறினாள் கார்த்திகா..
குமாரசுவாமி இதையெல்லாம் எவ்வளவு பொக்கிஷம் போல் பத்திரமாகப் பாதுகாத்தார் என்பது நினைவுக்கு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அந்த அறையைச் சுத்தம் செய்ய கார்த்திகா சென்ற போது உடன் சென்ற விக்கி அங்கிருந்து நான்கைந்து பொருட்களை விளையாடுவதற்காக எடுத்து வந்திருந்தான்.
அழகாகத் தன்னருகில் அமர்ந்து விளையாடும் மகனையே அவன் தலையைச் செல்லமாகக் கோதியவாறு கார்த்திகா விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க.. வெளியே அழைப்பு மணி அழைக்கும் ஒலி கேட்டது.
அதில் யோசனையோடு நிமிர்ந்தவள், ‘இங்கே இந்த நேரத்தில் யார்..? பால்காரம்மா கூடப் பத்து மணிக்கு தானே வருவாங்க..?” என்ற யோசனையோடே எழுந்து சென்று சிறு தயக்கத்தோடே கதவை திறந்தவள், அங்கு வாயிற்படியில் கோணல் சிரிப்போடு சாய்ந்து நின்றிருந்த யுகேந்திரனை கண்டு திகைத்து விழித்தாள் கார்த்திகா.
யுகேந்திரனை இங்குத் துளியும் எதிர்பார்த்திராதவள், திகைப்பும் அதிர்வுமாக அப்படியே அசையாமல் நின்றிருக்க.. அவளை அதே கோணல் சிரிப்போடு பார்த்தப்படியே “இங்கே வந்து ஒளிஞ்சுகிட்டா உன்னைக் கண்டுப்பிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டியா..?” என்றவாறே அசையாமல் நின்றிருந்தவளை அலட்சியமாக ஒதுக்கி விட்டு உள்ளே நுழைந்தான் யுகேந்திரன்.
அவனை இங்குக் கண்டதும் உண்டான பதட்டத்தோடு செய்வதறியாது நின்றிருந்த கார்த்திகா என்ற சிலைக்கு, உள்ளே நுழைந்தவனைக் கண்டு பயந்து ஓடி வந்து விக்கி தன் காலை கட்டிக் கொண்டே பின்பே உயிர் வந்தது.
அதில் இருவரையும் கேலியான ஒரு பார்வை பார்த்தவன், “என்கிட்டே இருந்து உன்னால் தப்பிக்கவே முடியாதுன்னு உனக்கு இன்னும் எத்தனை முறை சொன்னாலும் புரியாதா..?” என்றான் யுகேந்திரன்.
“நீங்.. நீங்க.. இங்.. இங்கே.. எப்.. எப்படி..?” என்பதற்குள் கார்த்திகாவின் நாக்கு மேல் அண்ணத்தில் சென்று ஒட்டிக் கொண்டது.. “ஓ.. வரமாட்டேன்னு வேற நினைச்சியா..?” என எகத்தாளமாகச் சிரித்தவன், பார்வையாலேயே அந்த இடத்தை ஒருமுறை சுற்றி வர.. கார்த்திகாவிற்குப் பயத்தில் உடலோடு சேர்த்து மனமும் தடதடக்கத் துவங்கியது.
“என்ன ஒண்ணு இங்கே வந்திருப்பேன்னு யோசிச்சு வர தான் கூட இரண்டு நாள் ஆகிருச்சு.. இல்லை எப்போவோ வந்திருப்பேன் அவ்வளவு தான்.. உன்னால் முடியாததை இன்னும் எத்தனை முறை முயற்சி செய்யப் போறியோ..? நீ எங்கே ஓடி ஒளிஞ்சாலும் தேடி வந்து தூக்குவேன்னு இன்னும் உனக்கு எத்தனை முறை தான்டி சொல்றது..” எனக் கேலியில் மெதுவாக ஆரம்பித்துக் கோபத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடினமாகி கொண்டே செல்லும் குரலில் பேசிக் கொண்டே சென்றவன், இறுதியாகப் பேசி முடிக்கும் போது பளாரென கார்த்திகாவை அறைந்திருந்தான்.
எத்தனையோ முறை அவனிடம் இது போலப் பல அடி(இடி)களை வாங்கிப் பழகியவள் தான் என்றாலும் இப்போதிருந்த அதிர்வான மனநிலையில் எதிர்பாராத அந்த அடியில் அப்படியே சுருண்டு சற்று தள்ளிப் போய்க் கார்த்திகா விழ.. அவளின் காலை கட்டிக் கொண்டிருந்த விக்கியும் அவளோடு சேர்ந்து விழுந்தான்.
***************
விலை ₹40
உங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்..
விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா