பாரதிப்பிரியன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் கிளியே கண்ணம்மா
(A Lo(i)ve Story)
நாவல்
குரல் - 2
(A Lo(i)ve Story)
நாவல்
குரல் - 2
கவின்..... என்று முணுமுணுத்த வீணாவிற்கு நாற்பத்தைந்து வயது இருக்கலாம்..... ஆனால் வீணாவை அவள் வயது வித்தியாசப்படுத்தி காட்டிவிட முடியாது.
"கல்லணையிலிருந்து புதுவெள்ளம் கொள்ளிடத்து வாய்க்காலில் பாய்வது போன்ற பருவ அழகிற்கு உரியவள்...",
"நீள்சதுர முகத்தில் ,கருங்குவளை பூத்தது போன்ற கண்கள், நீண்டு வழுக்கும் நாசி மேடுகள், ததும்பி திளைத்த மாதுளை கன்னங்கள், மலைத்தேனில் தோய்த்தெடுத்த ஆரஞ்சு சுளைகளாய் அதரங்கள்...."
"வெள்ளைப் போளமும், வெள்ளியும் கலந்த கலவையில், தங்கமுலாம் பூசினால் ஒளி மங்கிவிடுமென்று, உலக ரோஜாக்கள் மொத்தமும் கூட்டி, பிரம்மன் வடித்தெடுத்த மென்பஞ்சு தேகத்தவள்...".
"இரண்டு வாலிப பிள்ளைகளின் தாய்....ரிஷி... திவ்யா... இருவரும் அடுத்தடுத்து வீணாவிற்கு பிறந்த குழந்தைகள்... இருவரும் இன்று கல்லூரி படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்து வருபவர்கள்...".
"வீணாவிற்கு இருபது வயதில் திருமணம். பெற்றோர் நிச்சயித்த திருமணம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள்.... முப்பது எட்டு வயதில் விதவை கோலம்.... நீண்ட நெடிய சமுதாய போராட்டங்கள் கடந்து பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து தன் எல்லா ஆசைகளையும், கனவுகளையும் தொலைத்து விட்டு நிராதரவாக வாழும் பாசமுள்ள தாய்...."
"தேவராஜ்... வீணாவின் கணவன்... உயர்ந்து வளர்ந்து செழித்த தென்னையில் வெண்பனியை போர்த்திய தேகத்துக்கு சொந்தக்காரன்."
"வீணாவை உளமார நேசித்து ரசிக்கும் நெஞ்சுக்கு உரியவன். கோபம் என்பது கோபப்படுமளவிற்கு கோபம் கொள்ளும் குணத்தவன்."
"தன்னை என்றும் ,சரியாகவே உலகதிற்க்கு அடையாளப்படுத்தி காட்டுவதில் அலாதிப்பிரியம் தேவராஜுக்கு உண்டு. தன் வார்த்தையை நேசிப்பவர்களுக்கு தேவராஜ் சிநேக சகோதரன்... எதிர்த்து ஒருவார்த்தை யாரேனும் பேசிவிட்டால் அன்றோடு எதிர்த்தவனை தண்ணி தெளித்து தலை முழுகிவிடுவான்....".
"உலகத்தை பொறுத்தவரை உன்னதமான, அழகான, திடகார்த்தமான மனிதன். வீணாவிற்கு....!!!!????
கவினை வீணா பெயர் சொல்லி அழைக்க காரணம் உண்டு... பெயர் சொல்ல மட்டுமல்ல, அவன் ஒட்டு மொத்த உயிருக்கும் உரிமை உள்ளவள் வீணா மட்டுமே....
வழிந்த கண்ணீரை துடைத்தவள்.... அலைபேசியில் எண்களை தொடுத்திரையில் தட்டினாள்..... நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.... மீண்டும் முயற்சிக்கவும் என்ற கணினியின் குரல் திரும்ப திரும்ப ஒலித்தது....செய்வதறியவில்லை வீணாவிற்கு.... நீண்ட யோசனைக்கு பின் தன் தோழி பரிமளாவை அழைத்தாள்...
மறுமுனையில் பேசிய பரிமளா... "என்ன வீணா இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போகலியா?", என்று கேட்டாள்....
"இல்ல பரி.... நான் ஸ்கூல்ல தான் இருக்கேன்... எனக்கு ரொம்ப குழப்பமா, ரொம்ப வலியா இருக்கு... யார்கிட்டயாவது பேசி அழனும் போல இருக்கு", என்றாள் வீணா.
"என்ன ஆச்சு? வழக்கம் போல ரிஷி திரும்பவும் பிரச்சனை செய்யறானா?", என்று பரி கேட்டாள்....
"அதெல்லாம் இல்லை பரி கவின்......" என்று இழுத்து நிறுத்தினாள் வீணா....
"மறுமுனையில் ஒரு நிமிட நிசப்தம்... பின் பரி கேட்டாள் "என்ன ஆச்சு கவினுக்கு", !!!????.
"கவின் ரொம்ப சீரியஸா இன்னைக்கு காலைல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்து இருக்காங்க... சன்மதி எனக்கு வாட்ஸ் அப்லே தகவல் அனுப்பி இருந்தாங்க... கவின் கூட இப்போ யாருமே இல்ல... நான் போகலாம்னா ரிஷி, திவ்யா.... அப்புறம் இதெல்லாம் போக ரிஷியோட வைஃப், எல்லார்கிட்டயும் நான் அனுமதி வாங்கணும்.. என்னோட உறவுகள் எல்லோரும் நான் அங்கே போய் நலம் விசாரிக்க போனாலும் என்ன தப்பா பேச தயாரா இருக்கும். என்ன செய்யறதுன்னு தெரியல என்றாள்...."
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு பரிமளா கூறினாள்... "பிள்ளைகளிடம் பேசு வீணா... சொல்லிப்பார்... கேட்கலன்னா... நீ காத்து இருக்க வேண்டாம் போய் கவினை பார்... ஒருவேளை கவின் உன்னை பார்த்தால் குணம் ஆகலாம் என்றாள்....", வீணாவின் பக்கத்தில் அமைதி நிலவியது...
"திரும்பவும் சொல்லறேன்... பசங்க கிட்ட சொல்லனும், அப்டீங்கறது கடமை.... கவினுக்கு நீ காட்டப் போறது உரிமையுள்ள சேவை...யோசி... ஆனா திரும்பவும் தோத்து போகாதே", என்றாள் பரி...
பரிக்கு நன்றி சொல்லிவிட்டு அலைபேசி தொடர்பை துண்டித்த வீணாவின் கண்களில் அந்த பள்ளி மெல்ல மெல்ல மறைந்தது...
இருநவ வயதில் இன்னமும் சுட்டியாக, எப்போதும் முகத்தில் புன்னகை பூத்தபடி, தான் வாழ்ந்த, வளர்ந்த தாராபுரம் காவலர் குடியிருப்பு காட்சிகளாக விரிந்தது....