அத்தியாயம் 41
சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாள்.
“நீங்கல்லாம் எப்படி இங்க...? எப்போ வந்தீங்க?” திகைத்துப் போய் கேட்டாள்.
தங்களின் ஒட்டு மொத்த உறவும் வந்து இருந்தார்கள். அதில் இவள் திகைக்காமல் என்ன செய்வாளாம்.
“ஒரு சின்ன பேமிலி டூர் என்று மிருதன் தான் அரேஞ் பண்ணி இருந்தான் மிரு...” என்று அவளின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டார் சம்பூர்ணவதி.
பெருவுடையாரும் பெருவுடையாளும் புன்னகை முகமாக வந்து அவளின் நலனை விசாரித்து விட்டு அவர்களும் அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டார்கள். அவர்களை கடந்து தான் பரவாசுவும் சுதாவும் அமர்ந்தார்கள் அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி தான்.
அவர்களை தொடர்ந்து நண்பர்கள் மூவரும் அவளிடம் நலம் விசாரித்து கேலி கிண்டல் செய்து அவளை சிரிக்க வைத்த பிறகே போய் அமர்ந்தார்கள். இந்த பக்கம் மிருளாணி அவளை கட்டிப் பிடித்து தன் அன்பை தெரிவித்தவள் அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தன் அன்னையின் அருகே அமர்ந்துக் கொண்டாள். அவளை தொடர்ந்து வேண்டா வெறுப்பாக மகேந்திரன் அமர்ந்துக் கொண்டார்.
அவரின் முகத்தில் ஒரு துளி மகிழ்ச்சி கூட இல்லை. அதை மிருதி சட்டை செய்யவே இல்லை. எல்லோரும் அவளை ஒட்டி அமர்ந்து விட “அச்சச்சோ இப்போ மிருதன் வந்தா எங்க உட்காருவார்” அவள் உள்ளுக்குள்ளே புலம்பினாள்.
ஏனெனில் ஒரு இருக்கை கூட வெற்றிடமாக இல்லை. எல்லா இருக்கையும் நிறைந்துப் போய் இருக்க தன் கணவனின் இருக்கைக்காக அவள் பரிதவிக்க அதை தூரத்தில் இருந்து பார்த்து இரசித்த மிருதனின் இதழ்களில் ஒரு சின்னப் புன்னகை வந்து எட்டிப் பார்த்தது.
“இந்த நேரம் பார்த்து இந்த மனிதன் எங்க தான் போனாரோ...” என்று அவனை தேடத் தொடங்கினாள்.
அவளது தேடலை பார்த்தவனுக்கு உள்ளம் சிறு பிள்ளையாய் குதுகளிக்க “கொல்றாளே...” என முணகியவன் அவளை அலைய விட எண்ணி அவளின் கண்களுக்கு தட்டுப் படாமல் ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டான்.
தீரா தேடலில் அவன் அகப்படாமல் போக அவனது போனுக்கு அழைத்தாள். உடனடியாக எடுக்கப் படவில்லை. கொஞ்சமே கொஞ்சம் அலையவிட்டான்.
அதில் அலாதி சுகம் அவனுக்கு கிட்டியதோ என்னவோ நேரம் கழித்தே எடுத்தவன் “ம்ம்ம்” என்றான் எதுவும் பேசாமல்.
“எங்க இருக்கீங்க...?”
“இங்க தான்” என்றான்.
“இங்க தான்னா எங்கன்னு சரியா சொல்லுங்க...”
“உன்னை பார்த்தபடி தான் இருக்கேன்” என்றான் ஆழமான குரலில். அந்த குரலில் உயிர் சிலிர்த்துப் போக, கண்கள் கலங்கியது. அவனது காதல் அந்த ஒற்றை சொல்லாடலில் வெளிப்பட்டது.
“இங்க என்கிட்டே வாங்க” என்றாள் மனமுருக.
“வரேன்... எனக்காக என்ன வச்சு இருக்க?” அதே ஆழமான குரலில் கேட்டான்.
“என்னை தவிர வேற எதை நான் கொடுப்பேன்” என்றவளுக்கு அவனது வெளிப்படையான பேச்சில் கண்கள் இன்னும் கலங்கியது.
“வேற எதுவுமே இல்லையா...?” அவனது குரலில் இன்னும் ஆழமும் அழுத்தமும் இருக்க உயிர் வரை அந்த தாக்கம் சென்று தாக்கியது.
“அழவைக்க பார்க்குறீங்க...” புகார் வாசித்தாள்.
“நீ திடமா இருக்க வேண்டியது தானே...” என்று சீண்டி விட்டான்.
“நான் போனை வைக்க போறேன்” என்றாள் மிரட்டலாக.
“ஓகே” அவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.
“ப்ச்... வாங்க மிருதன். என்னவோ ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.
“அது தான் உன்னை சுற்றி இத்தனை பேர் இருக்காங்களே... பிறகு என்னவாம்?”
“யார் இருந்தாலும் நீங்க இருக்க மாதிரி இருக்காது. சோ ப்ளீஸ்” என்று அவள் சொல்ல,
“சரி வரேன்” என்றான். ஆனால் வரவில்லை.
“இன்னும் வரல நீங்க..” என்று மீண்டும் அவனுக்கு போன் போட,
மேடையில் இருந்த ஸ்க்ரீன் விலகி நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.. ஒலிவாங்கியில் ஆங்கர்ஸ் நிகழ்ச்சிகளை தொடங்கி இருக்க அப்பொழுது தான் தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அவதனிக்க ஆரம்பித்தாள்.
தன் கண்கள் காட்டும் காட்சி உண்மை தானா என்று சிலிர்த்துப் போனவள் மீண்டும் விழிகளை அலையவிட்டாள். மிருதஞ்சயன் இருக்கும் இடம் தெரியவே இல்லை. அவ்வளவு பெரிய கூட்டத்தில்.
“எங்க இருக்கீங்க...” என்று மெசேஜ் அனுப்பினாள் படபடப்புடன். அவளுக்கு பதில் சொல்லாமல் போன் வந்தது அவனிடம் இருந்து.
“மிருதன்..” என்றாள் படபடப்புடன்.
“இங்க தான் இருக்கேன்” என்றான் மீண்டும்.
“நா..ம நாம எதுக்கு இங்க வந்து இருக்கோம்” என்று அவள் தடுமாற,
“நீ கேட்டியே அதுக்காக தான்..” என்றான் அழுத்தமான குரலில்.
“நான் என்ன கேட்டேன்” அவளது குரல் பிசிறடித்தது.
“என்ன கேட்டன்னு யோசிச்சு வை...” என்றவன்,
“எனக்காக என்ன வச்சி இருக்க?” என்று மீண்டும் கேட்டான் அவளிடம்.
“என்னை தவிர நான் வேற எதையும் வச்சு இருக்கல மிஸ்டர் மிருதன்” என்றாள் அவளும் விடாமல்.
“ரைட்...” என்றவன் போனை வைத்து விட இவளுக்கு உள்ளங்கை வேர்த்தது அவ்வளவு குளிரிலும். சம்பூர்ணவதி கண்கள் கலங்க அமர்ந்து மேடையை பார்த்துக் கொண்டு இருந்தார்.
பெருவுடையாரும் பெருவுடையாளும் அதே நிலையில் தான் இருந்தார்கள். தங்கையும் நண்பர்களும் பெருமையில் உற்சாகமாக இருந்தார்கள். தன்னுடைய பெற்றவர்களும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்று புரிய திரும்பி மகேந்திரனை பார்த்தாள்.
அவரின் முகம் எள்ளும் கொல்லும் வெடிக்க அமர்ந்து இருந்தார். சோ இங்க நடக்கப் போகும் நிகழ்வுகளை பற்றி இவங்க எல்லோருக்கும் முன்னாடியே தெரிந்து இருக்கு இல்லையா...? என எல்லாவற்றையும் உள் வாங்கியவளுக்கு படபடவென்று இதயம் துடித்தது.
என்னை கலவரப்படுதுற மாதிரி இங்க ஏதோ ஒரு விசயம் நடக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி எண்ணியவள் மூச்சை நன்கு உள் இழுத்துக் கொண்டு தன்னை சம நிலையில் வைத்துக் கொள்ளப் பார்த்தாள்.
அரங்கம் முழுக்க அமைதியில் நிரம்பி இருந்தது. ஒரே சலசலப்பு மேடையில் இருந்து மட்டும் வந்த வண்ணம் இருந்தது. அவர்களின் அறிவிப்புக்கு பிறகு இங்கே கைத்தட்டும் ஓசை மட்டும் இடைவிடாது வந்த வண்ணமாக இருந்தது...!
நீண்ட காத்திருப்புக்கு பிறகு,
“மிஸ்டர் மிருதஞ்சயன் பெருவுடையார் ப்ரம் இந்தியா...” என்கிற அறிவிப்பு வர இதயம் எகிறி குதித்தது மிருதிக்கு. உதடுகள் நடுங்க விழிகளில் கண்ணீர் இப்பவா அப்பவா என்று தளும்பிக் கொண்டு இருந்தது. ஆனால் மிருதனுக்கு ஒரு நல்லது நடக்கும் பொழுது தன் கண்களில் அதித ஆனந்ததில் கூட கண்ணீர் சிந்த கூடாது என்று வைராக்கியம் கொண்டவள் தன் கண்ணீரை அடக்க இதழ்களை இறுகக் கடித்து தன்னை அடக்கிக்கொண்டு இமை கூட சிமிட்டாமல் மேடையை பார்த்த வண்ணம் அப்படியே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
பெருவுடையார் நெகிழ்ந்து போய் நெஞ்சுக் கொள்ளா பெருமையில் இருக்கையின் பிடியை இறுக்கிப் பிடித்துக் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தார்.
சம்பூர்ணவதிகும் பெருவுடையாளுக்கும் கண்களில் கண்ணீர் கரகரவென்று இறங்கியது. இந்த நாளுக்காக தானே இவர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.
அந்த நாள் இதோ அவர்களின் கண் முன்... அகில உலக திரை உலகம் கொண்டாடும் ஒரே விருது ஆஸ்கார் விருது.
அந்த விருதை வாங்க வர சொல்லி மிருதனை அழைத்து இருந்தார்கள். எஸ் சிறந்த அசல் திரைக் கதைக்கான அங்கீகாரம் தான் இந்த விருது.
ஒரு கற்பனை கதையை மைய்யமாக வைத்து எழுதிய திரை கதை தான் அது. அந்த திரைக்கதையை மிக அழகாக வடிவமைத்து இருந்தான் மிருதன். அவனது சொந்த கற்பதம். ஹாலிவுட்டில் நடந்த மூவி பெஸ்டிவல் ஆரகனைசிங்க்கு இந்த கதையை அனுப்பி வைத்தான் மிருதன்.
அந்த கதையே அந்த பெஸ்டிவலில் முதலிடம் பிடிக்க அதை டைரக்ஷன் செய்து உலகளாவில் வர்த்தக ரீதியாக முதல் இடம் பிடித்து அதிக வசூலை குவித்தது.
இத்தனைக்கும் மிருதன் எங்கும் செல்லவில்லை. தன்னுடைய டிவி நிகழ்ச்சியை தான் இயக்கிக் கொண்டு இருந்தான். ஒரு சில சந்தேகங்கள் மட்டுமே இருந்தது அந்த படத்தை இயக்கம் இயக்குனருக்கு.
ஏனெனில் இவன் ஸ்க்ரீன் ப்ளேயில் எந்த வித தடுமாற்றமும் இல்லை... ஏற்கனவே அதில் வல்லவன் தான். அதனால் தான் மிருதி எந்த தடுமாற்றமும் இல்லாமல் அவனது முதல் கதையை மிக அழகாக இயக்கி வசூலை வாரி குவித்தாள்.
அவளுக்கு அது முதல் படம் தான். ஆனால் அவளே தடுமாறவில்லை எங்கும். அப்படி பட்டவனின் ஸ்க்ரிப்ட் சிறந்த இயக்குனருக்கு கிடைத்தால் சொல்லவும் வேண்டுமா என்ன... பிச்சு உதறி தள்ளிவிட்டார்.
அதை விட மிருதனை வாயார மனதார பாராட்டி தள்ளினார். “சுயர் யூ கம் இன் ஹாலிவுட் சைட்... ஷோ யுவர் டேலன்ட் டு தே வேல்ட் மிஸ்டர் மிருதஞ்சயன் பெருவுடையார்” என்றார் அவர் வலுக்கட்டாயமாக.
எஸ் அவன் தன் பெயரை எம்பி என்று தான் கொடுத்து இருந்தான். அதாவது மிருதஞ்சயன் பெருவுடையார் என்று கொடுத்து இருந்தான். படத்தில் கூட அவனது பெயர் முழுமையாக வராமல் எம்பி என்றே போட சொல்லி சொல்லி இருந்தான்.
அதன் படியே அந்த படம் அகில உலகில் ஒளிபரப்பு ஆனது. கதையை பார்த்து அனைவரும் வியந்து தான் போனார்கள். எம்பி என்பதால் யாருக்கு எதுவும் தெரியவில்லை. அதைவிட மீடியா வெளிச்சம் தன் மீது படுவதை மிருதன் விரும்பவில்லை. அதை அந்த டைரக்டரிடம் அவன் சொல்லி விட அதன் பிறகு அவர் எல்லாவற்றையும் அவன் சார்பாக பார்த்துக் கொண்டார்.
அந்த படம் ஆஸ்கார் விருதுக்கு செலக்ட் ஆக,
“கண்டிப்பா நீ வந்து தான் வாங்கணும்” என்று திட்டவட்டமாக அவர் சொல்லி விட ஹனிமூனை சாக்காக வைத்துக் கொண்டு தன்னவளுடன் வந்து விட்டான் அமெரிக்காவில்.
எஸ் ஆஸ்கார் விருது எப்பொழுதும் அமெரிக்காவில் தான் நடை பெரும்... அதனால் இங்கே எல்லோரையும் வரவைத்து விட்டான்.
விருது கிடைத்து இருப்பதை பற்றி முதலில் யாருக்கு எதுவும் சொல்லவில்லை. ஆனால் எல்லோரையும் அமெரிக்கா கூட்டிட்டு வர காரணம் வேண்டுமே அதனால் அலட்டிக் கொள்ளாமல் அவன் சொல்லிவிட்டான்.
எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. இந்த அங்கீகாரம் தான் தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருவுடையாரும் சம்பூர்ணவதியும் பெருவுடையாளும் எதிர் பார்த்தார்கள். அதை கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் நிகழ்த்தி விட்டவனை நெஞ்சு நிறைய பரவசத்துடன் பார்த்தார்கள் மூவரும்.
மற்ற அனைவருக்கும் பெருமையோ பெருமை. மகேந்திரனுக்கு அந்த நியூஸ் புதிது. எப்படி இருந்த இடத்துல இருந்தே இவன் இவ்வளவு பெரிய வேலையை செய்தான் என்று அயர்ந்துப் போய் விட்டார்.
எவ்வளவு முட்டுக்கட்டை... அப்பப்பா கணக்கே எடுத்துக் கொல்லாத அளவுக்கு அவனை முடக்கிப் போட அவரால் என்னென்னல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து இருந்தாரே. ஆனால் அப்படி இருந்தும் இது எப்படி நிகழ்ந்தது என்று மாய்ந்துப் போனார்.
நெஞ்சு எரிந்தது...! மேடை ஏறிய மிருதனை அனல் பொங்கும் விழிகளில் பார்த்தார். ஆனால் அவரால் ஒன்றுமே செய்ய முடியாதே...! என்ன செய்ய முடியும் மகேந்திரனால்.
சிங்கத்தின் காட்டை சிறுநரி வளைக்க நினைத்தால் சிங்கம் சும்மா விடுமா என்ன..? சிங்கம் பிடரி சிலிர்க்க ஒரே ஒரு கர்சனையில் ஓட விட்டு விடாதா அந்த சிறு நரியை... அதே போல தான் மிருதஞ்சயனும்... அவனது ஒரே ஒரு கர்சனையில் பம்மி பதுங்கி விட்டார் மகேந்திரன்.
அவனது ஒட்டு மொத்த திறமையையும் முடக்கிப் போட அவர் முயன்றார். ஆனால் எனக்கு இதெல்லாம் தேவையில்லை. என்னோட தேவை இது அல்ல.. என்பாதாலே தான் அவன் அமைதியாக இருந்தான்.
ஏனெனில் சிங்கம் பசித்தால் கல்லில் உறங்கும் சாதாரண சின்ன தேரையையா வேட்டையாடும்.. இல்லையே கானகத்தில் உயிருக்கு பயந்து பின்னங்கள் பிடரியில் பட ஓடி ஒழியும் கொம்பு உள்ள திடமான உடல் வாகைக் கொண்ட மிருங்கங்களை தானே குறி வைத்து பாய்ந்து தாக்கி வீழ்த்தி வேட்டையாடும்..
அதே வகையறா தான் நம்ம மிருதஞ்சயனும். அவன் கொண்ட கலை தாகத்துக்கு மகேந்திரன் வர விடாமல் செய்த கோலிவுட் இடமே சின்ன வட்டம் தான் அல்லவா... அதனால் அவனது இலக்கு ஹாலிவுட் நோக்கி சென்றதோ...! அதில் முதல் முயற்சியிலே ஆஸ்கார் வென்று விட்டான் மிருதஞ்சயன்.
அவன் இவ்வளவு நாளும் பதுங்கி இருப்பது பாய தானே தவிர ஓடி ஒழிய இல்லையே...! நின்று நிதானமாக தன் இலக்கை அடைந்து விட்டான்.
“கைன்ட்லி யூவர் ஹார்ட்டி வெல்கம் மிஸ்டர் மிருதஞ்சயன் பெருவுடையார்...” என அவனது பெயரை மைக்கில் அனவுன்ஸ் பண்ண ஒரு கணம் ஆடி தான் போனார் மகேந்திரன்.
மிருதஞ்சயன் பெருவுடையாரா...? இல்லை அவன் மிருதஞ்சயன் மகேந்திரன்...! என்று அவரின் உள்ளம் கூப்பாடுப் போட்டது. ஆனால் அதை கேட்க தான் அங்கு யாருமில்லை.
எஸ் மிருதன் தெரிந்தே தான் தன் பெயரை அப்படி கொடுத்தான். அவனை பொறுத்தவரை தன் பெயருக்கு பின்னாடி மகேந்திரன் என்கிற பெயர் வருவதை கொஞ்சம் கூட விரும்பவில்லை. மிருதி போட்ட பொழுது அதை ஒரு அங்கீகாரமாக பார்த்தான் தான். ஆனால்அந்த அங்கீகாரத்துக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவர் மகேந்திரன் என்று முன்னாடியே அறிந்து தான் தன் பெயரை தன் தாத்தாவின் வம்சாவழியாக வந்த பெயரை இணைத்துக் கொண்டான்.
அதில் பெருவுடையாருக்கு அதித பெருமை... கம்பீரமாக மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார். அதை பார்த்த மகேந்திரனுக்கு நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி எழுந்தது...! முதல் முறை ஒரு வலியை உணருகிறார்.
கண்களில் இருந்த வெம்மை சற்றே தணிந்ததோ என்னவோ விழி எடுக்காமல் கம்பீரமாக மேடை ஏறியவனை பார்த்தார்.
மைக்கை கையில் வாங்கியவன் அந்த அரங்கை ஒரு கணம் நிதானமாக பார்த்தான். தன் குடும்பம் அமர்ந்து இருந்த இடத்தை பார்த்தான். எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சியும் கண்ணீரும் சேர்ந்தே இருந்தது.
“நீ பெரிய இடத்துக்கு போகணும் மிருதன் அதை நான் பார்க்கணும்” என்ற தாத்தாவை பார்த்தான். அவர் கம்பீரமாக மீசையை முறுக்கி அவனுக்கு காட்டினார்.
அம்மா பாட்டி தங்கையை பார்த்தான். மூவரின் விழிகளிலும் ஆனந்த கண்ணீர். நண்பர்களை பார்த்தான் மச்சான் நீ சாதிச்சுட்டடா... என்ற உற்சாகத்தில் இருந்தார்கள்.
மகேந்திரனை அவனது கண்கள் தழுவவே இல்லை. ஒவ்வொருவராய் பார்த்துக் கொண்டு வந்தவன் தன்னை மட்டும் பார்க்காமல் ஒதுக்கி வைக்க மீண்டும் அவரது நெஞ்சில் முள் தைத்தது...!
இனி ஒவ்வொரு நாளும் முள் தைக்கும் என்பதை உணர்ந்துக் கொண்டார். எல்லோரையும் பார்த்துவிட்டு அவனது கண்கள் தன்னவளின் மீது அதித கூர்மையோடு பாய்ந்தது...
நான் அழமாட்டேன் என பிடிவாதமாய் அமர்ந்து இருந்தவளை பார்த்தவனுக்கு மெல்லியதாய் இதழ்கள் விரிந்தது...
கண்களை சிமிட்ட கூட இல்லாமல் அட்டென்ஷன் பொஷிசனில் அவள் அமர்ந்து இருந்ததை பார்த்து இன்னும் இன்னும் அவள் மீது காதல் கூடிப் போனது மிருதனுக்கு.
அவள் அன்று சொன்னாளே,
“உங்களை உயரத்துல போய் உட்கார சொல்லல... ஆனா எனக்காக உங்க உயரத்தை நீங்க கூட்டி சிகரம் தொடணும். இதோ இப்படி காலடியில போட்டே வச்சு இருக்கணும்னு நினைக்கிறவர் முன்னாடி உங்களை நீங்க நிரூபிக்கணும் ங்க. என் புருசன் யாருக்கும் சளைச்சவர் இல்லைன்னு காட்டணும். நீங்க என்ன தான் எவ்வளவு தான் முட்டுக் கட்டை போட்டாலும் என்னவர் எல்லாவற்றையும் தாண்டி முறியடிச்சி வெற்றியை நிலை நாட்டுவார்னு காட்டணும்” என்று விழிகளில் நீர் நிறைய சொன்னாளே அதை குறிப்புக் காட்டினான்.
“எனக்கும் ஆசை இருக்கும்ல என் புருசனும் நல்ல நிலையில இருக்கணும்னு...” என்று சொன்னதன் பொருளை மெய்யாக்கி இருந்ததை தன் விழியாலே அவளுக்கு உணர்த்தினான்.
அவனது இந்த பரிமாணத்தை கண்டு உடல் சிலிர்த்து, உயிர் கரைந்து, மெய் மகிழ்வுற்றது மிருதிக்கு. அவளை விட்டால் இப்பொழுதே அவனை ஓடிப் போய் கட்டிக் கொண்டு அழுது தீர்த்து விடுபவள் போல இருந்தாள். அதையும் மீறி அவளது விழிகளில் தெரிந்த மகிழ்சியை இங்கிருந்தே பார்த்தவனுக்கு நெஞ்சம் நிறைந்துப் போனது அந்த நொடியில்.
குடுத்த நேரத்துக்குள் தன் உரையை முடித்துக் கொண்டவன் அந்த ஆஸ்கார் விருதை வாங்கிக்கொண்டு தலைகனம் சிறிதும் இல்லாமல் மேடையை இறங்கினான் மிருதஞ்சயன்.
இப்பொழுதாவது அவனிடம் போக முடியுமா என்று அவள் தவிக்க, அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
“ரிட்டேர்ன் ஹிப்ட் என்னடி வச்சி இருக்க..?” என்று அவனிடம் இருந்து வந்தது.
இந்த முறை “நம்மளை வச்சி இருக்கேன்” என்றாள் விழிகள் கலங்க.
அந்த பக்கம் இருந்து அதன் பிறகு எந்த செய்தியும் வரவில்லை. ஆனால் அவன் இதழ்களில் புன்னகை பூத்து இருந்தது.
அத்தியாயம் 42
எல்லாம் முடிந்து இரவு டின்னர் போது எல்லோரும் கூடி இருந்தார்கள். மிருதன் உட்பட, ஆனால் அவனை நெருங்க கூட முடியவில்லை. அவனது டீம் ஆட்கள் முழுவதும் அவனை தான் சூழ்ந்து இருந்தார்கள்.
அந்த படத்தில் இவனுக்கு மட்டும் தான் விருது வந்து இருந்தது. மற்ற அனைவரும் பரிந்துரையில் தான் இருந்தார்கள். அதனால் அவனை அங்கு வேந்தனாக கொண்டாடி மகிழ்ந்தார்கள் அனைவரும்.
இன பாகுபாடு எதுவும் இல்லை. எல்லோரும் ஒரே குலமாக பார்க்கப் பட்டது. நண்பர்கள் மட்டும் அவனை ஓடிப் போய் கட்டிக் கொண்டு வாழ்த்து சொல்லி தோள்களில் வைத்து ஒரு சுற்று சுற்றி கொண்டாடினார்கள்.
அதை பார்த்த மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. குடும்பத்தவர்கள் ஒதுங்கி நிற்க மிருதியும் ஒதுங்கி நிற்க வேண்டி வந்தது. விடிய விடிய நிகழ்ச்சி களை கட்டியது.
அந்த ஆராவரம் எல்லாம் சற்றே குறைந்து அனைவருக்கும் ஏற்பாடு செய்து இருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றவன் அவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தான்.
“ரொம்ப மகிழ்ச்சிய்யா இதை விட வேற என்ன வேண்டும். எங்கே உன் திறமை எல்லாம் குடத்துல ஏற்றி வச்ச விளக்கா போயிடுமோன்னு நெஞ்சுல அறிச்கிக்கிட்டே இருந்தது. ஆனா இன்னைக்கு நீ வாங்குன இந்த விருதுல என் மனசே நிறைஞ்சி போயிடுச்சு. எத்தனையோ விருதுகள் நாம படம் ப்ரொட்யூஸ் பண்ணதுக்காக வாங்கி இருக்கோம் தான் ஆனா எங்களுக்கு அதெல்லாம் பெருசா தெரியல ய்யா...” என்று அவனை ஆரத்தழுவிக் கொண்டார் பெருவுடையார்.
“உண்மையாவே ரொம்ப பெருமையா இருக்கு மிருதன்.. அப்பா சொன்ன மாதிரி எவ்வளவோ நேஷனல் விருது நாம வாங்கி இருக்கோம். ஆனா இந்த விருது” என்று தன் மகன் தன் கையில் கொடுத்த விருதை தொட்டு தடவி பார்த்தவர் ”ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்...” என்று விழிகளில் நீர் நெகிழ சொன்னார் சம்பூர்ணவதி.
பெருவுடையாள் அவனின் உச்சி முகர்ந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். அதே போல சுதாவும் பரவாசுவும் கைக் குலுக்கி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள் அவனுக்கு.
மகேந்திரன் விலகி நின்றுக் கொண்டார். அவரை மிருதன் சட்டை செய்யவே இல்லை. மிருளாணி அவனை கட்டிக் கொண்டு தன் உவகையை சொல்ல அவனும் அணைத்துக் கொண்டு மகிழ்ந்தான்.
ஆனாலும் அவனது இதழ்களில் மிதமான புன்னகை தான் நிறைந்து இருந்தது. எல்லா ஆர்ப்பாட்டத்தையும் முடித்துக் கொண்டு தன் காரில் ஏறினான் மிருதன். ஆனால் அவனுக்கு உரியவள் முரண்டு பண்ணிக்கொண்டு காரில் ஏறாமல் நின்றாள்.
எல்லோரிடமும் அளவலாவியவன் அவளிடம் மட்டும் பேசவே இல்லை. அவனே வந்து பேசினாலும் அவள் பேசிக் கூடிய நிலையில் இருக்கவில்லை. எனவே அவன் பேசாமல் போனது எல்லாம் பெரிதாக அவளுக்கு தெரியவில்லை.
அவன் அவளின் அருகில் வராமல் இருந்ததிலே ஒரு விடுதலை உணர்வை பெற்றால் என்றாள் மிகையில்லை. ஏனெனில் எல்லோரின் முன்னிலும் தன் கண்ணீரை காட்ட அவள் விரும்பவில்லை. ஆனால் அவன் மீது கோவம் இருந்தது.
ஏனெனில் அவளுக்கு மட்டும் தான் அவன் விருது வாங்குவது தெரியாது. மற்ற அனைவருக்கும் சொல்லி எல்லா ஏற்பாடும் செய்து இருக்கிறானே என்று முரண்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. பிணக்குக் கொண்டு அவள் ஊடல் கொள்ள,
அவள் பக்கத்து கதவை திறந்து விட்டான் எதுவும் பேசாமல். அப்படி இருந்தும் அவள் ஏறாமல் அப்படியே நிற்க,
“ரைட்...” என்றவன் கதவை அழுந்த சாற்றி விட்டு காரை இயக்க பக்கென்று ஆனது இவளுக்கு. ரொம்ப இல்லை என்றாலும் குறைந்தது ஏறச்சொல்லியாவது சொல்வான் என்று எதிர் பார்த்தாள்.
ம்ஹும்... மிருதனாவது சொல்வதாவது. அவன் அவனது பிடியிலே நின்றான். வந்தா வா.. என்பது போல அவனது செயல் இருக்க பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு.
“இவர் கிட்ட எதிர் பார்த்தது என்னோட தவறு தான்” முணகியவள் கதவை திறந்துக் கொண்டு ஏறி அமர்ந்தாள்.
கார் விருட்டென்று பறந்தது அவனது இடத்துக்கு.