அத்தியாயம் 2
திருமுருகன்பட்டியின் மலைக்கோயில் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தியானது.ஊருக்கு பெயர் கொடுத்த முருகன் தம்பதி சமேதராகக் காட்சியளித்தார்.சுவாமி தரிசனமெல்லாம் முடிந்து அம்முவும் அவள் உயிர் தோழி ரம்யாவும் கோயிலை சுற்றி ஆளுயரத்தில் இருந்த மதில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்தனர்.
அம்மு பேச வேண்டும் எனவும் ரம்யா தான் கோயிலைத் தேர்ந்தெடுத்தாள்.வருடத்தில் ஒரு முறை நடக்கும் திருவிழாவை தவிர அங்கு மக்கள் வருவது அபூர்வம்.நூற்றி ஐம்பது படிகளை ஏற வேண்டுமென்பதே அதன் முக்கிய காரணம்.கடவுள் தரிசனத்தோடு உடற்பயிற்சியும் கிடைக்கட்டும் என்றுதான் முன்பு நம் முன்னோர்கள் அநேக கோவில்களை உயரத்தில் கட்டி வைத்தனர்.ஆனால் அதேயே காரணம் கூறி மக்கள் வருகை குறைவது என்பது வேதனையான விஷயம்.ஆனால் அந்த பதினேழு வயது பெண்களுக்கு அதன் உயரம் பொருட்டல்ல என்பதால் இருவரும் தனியாக பேச விரும்பினால் அங்குதான் வருவர்.
பேச வேண்டுமென்றவள் மவுனமாக எதிரே தெரிந்த மலைமுகட்டை வெறுத்தபடி இருக்கவும் ரம்யாவே,
"என்னடி பேசனும்னு சொல்லிட்டு இப்படி சும்மா இருந்தா என்ன அர்த்தம்?..எந்த காலேஜ்ல சேர்றதுன்னு கன்ஃப்யூஸா?"
"ம்ப்ச் அதெல்லாம் இல்ல!"
"பின்ன அம்மா திட்டிட்டாங்களா?அம்மா திட்றதெல்லாம் நமக்கு புதுசா என்ன?"
"அதுவும் இல்ல!"என்று சிறிது கோபமாகக் கூறினாள் அம்மு.
"ம்..இரு இரு!உன் ஹீரோ உன்னை புடிக்கலைன்னு சொல்லிட்டான்...கரெக்டா!"
"அவன் புடிக்கலைன்னு சொன்னாத்தான் போடா புண்ணாக்குன்னு சொல்லிடுவேனே... புடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...உப்பைக் கொட்டி நான் கொடுத்த பாயசத்தை கொஞ்சம் கூட முகம் சுழிக்காம குடிக்கற அளவு என்னை பிடிச்சிருக்கு..ஆனா அப்பாம்மா அவனுக்கு செஞ்சத்துக்கு நன்றி காட்றேன் பேர்வழின்னு என் காதலை நிராகரிக்கிறான்... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சீக்கிரம் இதை சரி பண்ணலேன்னா வேலை கிடைச்சதுன்னு எங்காவது போயிடுவான்...ரமி! நீதான் இதுக்கு ஏதாவது
ஐடியா சொல்லனும்...என்ன பண்ணா அவன் மனசுல மூடி மறைக்கிற காதல் வெளியே வரும்?"என்று தோழியை வினவ தீவிரமாக யோசித்த ரம்யா திடிரென துள்ளிக் குதித்து நின்றவள்,
"அம்மு! சூப்பர் ஐடியா வந்துடுச்சு...இதை மட்டும் நீ பண்ணேன்னு வை... கண்டிப்பா கதிர் கதறிக் கிட்டு தன் மனசுல இருக்கற சொல்லிடுவான்!"என்று உற்சாகத்த்தில் ஆர்பரிக்க,
"என்னடி அது.. சீக்கிரம் சொல்லு"என்று அம்மு பரபரக்க சுற்றும்முற்றும் ஒருமுறை பார்வையை சுழற்றிய ரம்யா அம்முவின் காதில் ஏதோ கூற கண்களை அகல விரித்தாள் அவள்.
"ம்ஹூம் நா மாட்டேன்...இது இது சரிவராது...என்னால முடியாது"என்று அவள் மறுக்க,
"இத பாரு அம்மு!கதிரை தன் மனசுல இருக்கிறத சொல்ல வைக்க இது ஒண்ணு தான் வழி...மயிலே மயிலேன்னா இறகு போடாது தெரிஞ்சிக்க"என்க,
"அதுக்காக இப்படியா!!!வேண்டாம்டி வேற ஏதாவது ஐடியா சொல்லு...அவன் இதுனால என்னை கோவிச்சிக்கிட்டு வெறுத்துட்டா என்னால அதை தாங்கவே முடியாது!"
"ஐய்யே அவன் ஏன் கோவிச்சுக்குவான்...க்ளீன் போல்ட் ஆயிடுவான்...சொல்றத கேளு இதுதான் பெஸ்ட் ஐடியா!"என்று இன்னும் அவள் வற்புறுத்த அரைமனதாக ஒப்பினாள் அம்மு.
நண்பன் தினேஷ் வீட்டில் இருந்த கணிணியில் வேலைவாய்ப்பு செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தான் கதிர்.இதுவரை பார்த்ததில் இரண்டு மூன்று வேலை அவனுக்கு திருப்திகரமாக இருந்தது.ஆனால் அவை எல்லாமும் மும்பை டெல்லி என்று இருந்தது.பெற்ற தாய் தந்தை இருந்தால் கூட அவனை இவ்வளவு அன்போடு பார்த்துக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே!ஒட்டுறவு எதுவும் இல்லாத ஒருவனை உண்ண உணவு உறைவிடம் தரமான கல்வி என குறைவில்லாமல் கொடுத்த விக்னேஸ்வரன் சுசீலா தம்பதிகளை விட்டு பிரிவது அவனால் முடியாத விஷயம்.அதைவிட அவன் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் அவனின் உயிரான அம்முவை ஒருகணம் பிரியவும் அவனுக்கு மனமில்லை.தூர ஊரில் இருக்கும் வேலைகளை ஒதுக்கி பக்கத்தில் எங்கே இருக்கிறது என்று அவன் தேடிய போது அவனின் சின்னஞ்சிறு கைபேசி கிணுகிணுத்து அழைத்தது.
திரையில் அம்முவின் எண்ணை கண்டு ஆச்சரியமானான்.ஏனெனில் நேரே எவ்வளவு அவனை வம்புக்கிழுத்தாலும் போனில் அழைத்து இதுவரை எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை அவள்.இப்போது ஏதோ அவசரமாக இருக்குமோ என பதறியவன் பதில் பொத்தானை அமுக்கி,
"என்ன விஷயம்? எதுக்கு போன் பண்ண?"என்று முயன்று தோரணையாக அவன் கேட்க மறுபுறத்தில் அவன் அம்முவோ,
"கதிர்! சீக்கிரம் அணைக்கட்டுக்கு பக்கத்துல இருக்கிற மாயமான் காட்டுக்கு வா! நானும் அப்பாவும் இங்க காட்டு இலாகா ஆபிசர பாக்க வந்தோம்..அவர் இல்ல ஆபிஸ் பூட்டியிருந்தது...திரும்ப கெளம்பும் போது அப்பா மயங்கிட்டாரு...நீ சீக்கிரம் வாயேன் எனக்கு பயமாயிருக்கு!"என்று அழ திடுக்கிட்ட கதிர்,
"அம்மு!அழாதடா! நான் இப்பவே அங்க வரேன்...அப்பா முகத்துல தண்ணி தெளி...கை காலை தேச்சு விடு... நான் அரைமணில அங்க இருப்பேன்...பயப்படாதடா... நான் இருக்கேன்ல...இதோ கிளம்பிட்டேன்"என்று போனில் அவளுக்கு தைரியம் அளித்தபடியே தன் பைக்கை அடைந்தவன் அதில் தாவி ஏறி மின்னலாக அவள் கூறிய இடத்தை நோக்கி விரைந்தான்.
சொன்ன நேரத்தை விட பத்து நிமிடம் முன்னதாகவே அங்கு வந்து சேர்ந்துவிட்டான் கதிர்.
மோயாறின் மேல் கட்டப்பட்ட சிறு அணைக்கட்டு அது... சுற்றிலும் இருந்த காடு காட்டிலக்காவால் பாதுகாக்கப்பட்டு வந்தது.அங்கு மக்கள் நடமாட்டம் மிக மிக குறைவு.கோடை விடுமுறையில் மட்டும் சிறிது சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் இருக்கும்.மீதி நாட்களில் காட்டு இலாகா அதிகாரிகள் இரண்டு மூன்று பேரை தவிர அந்த இடம் அமைதியாக இருக்கும்.
காட்டிலாக்கா ஆபிஸ் அருகே வந்து தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய கதிர் அம்முவையும் விக்னேஸ்வரனையும் பதட்டத்தோடு தேடினான்.ஆனால் அவர்கள் இருந்த சுவடே இல்லை.அம்மு கூறியது போல அந்த ஆபிஸ் பூட்டியிருந்தது.இன்னும் சிறிது போய் பார்க்கலாம் என்று காட்டிற்குள் முன்னேறினான்.
அங்கே மரங்கள் அடர்ந்த பகுதியில் அம்மு அணிந்திருந்த தாவணி கண்ணில் பட வேகமாக அருகே சென்றான்.நீண்டு வளர்ந்திருந்த மரமொன்றால் சாய்ந்து நின்றிருந்த அம்முவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.அவள் அருகே சென்று நின்றவன்,
"அம்மு!அப்பா எங்கே?கண்ணு முழுச்சாங்களா?"என்று வினவ பதில் கூறாமல் தலைக்குனிந்து நின்றிருந்தாள் அம்மு.
"அம்மு!அப்பா எங்கே?ஏன் பேசாம இருக்க?"என்று மீண்டும் அவன் கேட்க அவள் மவுனம் தொடரவும் கண்கள் இடுங்கியது அவனுக்கு.
"ஓ... அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு பொய் சொன்னது என்னை இங்க வரவழைக்க...ம்..என்ன விஷயம்? இந்தளவு பொய் சொல்ற அளவுக்கு?"
"அது உனக்கே தெரியும்தானே!"
"இல்ல.. எனக்கு தெரியலை..தெரியவும் வேண்டாம்"
"கதி!எங்கே என் முகம் பார்த்து சொல்லு...உனக்கு தெரியலைன்னு..."என்று அவனை தன்புறம் திருப்பினாள்.தன் கையைப் பிடித்திருந்த அவள் கையை உதறியவன்,
"பார் அம்மு! இதெல்லாம் நல்லதில்ல...பேசாம வா... வீட்டுக்கு போலாம்"என்று முன்னே நடக்கத் தொடங்கினான்.
மீண்டும் அவன் கையைப் பற்றி தன் தன்புறம் திருப்பியவள்,
"நிஜமா உனக்கு ஒண்ணுமே தெரியாது இல்ல...எப்போ என் முகத்தை பார்த்து உன்னால இல்லேன்னு சொல்ல முடியலையோ...அப்பவே ஏதோ இருக்குன்னு தானே அர்த்தம்...வெட்டி யோசனைய விட்டு உண்மையை ஒத்துக்க"என்று அவள் பேச அதில் கோபமுற்ற கதிர்,
"ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல... எல்லாம் உன் தப்பு கற்பனை... அதையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு...படிச்சு முன்னேற வழியைப் பாரு!"
"என்ன சொன்ன...தப்பு கற்பனையா...எது தப்பு எது சரின்னு இப்ப தெரியும்"என்று அவன் முன்பு சென்று நின்றவள் அவன் சுதாரிக்கும் முன் அவன் உயரத்திற்கு எம்பி தன் இதழை அவன் இதழோடு பொருத்தி விட்டாள்.
முதலில் அதிர்ந்து விட்ட கதிருக்கு இத்தனை காலம் மனதின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்த காதல் மேலெழும்ப தன்னவளின் முதல் முத்தத்தை அனுப்பிக்க தொடங்கினான்... ஆனால் சில நொடி தான் விக்னேஸ்வரனும் சுசீலாவும் அவன் மனக்கண்ணில் தோன்ற அன்னமிட்டவருக்கு துரோகம் செய்வதா என்று துடித்து அம்முவை தன்னிடமிருந்து தள்ளியவன் அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.
முத்தத்தில் மயங்கியிருந்த அம்மு கதிர் தன் தள்ளியதும் அல்லாமல் அறையவும் செய்யவே அதிர்ந்து நின்று விட்டாள்.
"சே... இதுதான் அப்பாம்மா உனக்கு சொல்லிக் கொடுத்ததா பண்பாடா?... இவ்வளவு தூரம் நீ போவேன்னு நான் நினைக்கவே இல்ல...உன் முகத்துல விழிக்கவே எனக்கு பிடிக்கல..."என்று சரமாரியாக அவளை திட்டியவன் விடுவிடுவென அங்கிருந்து அகல சிறிதே தூரம் அவன் சென்ற போது தொப்பென நீரில் ஏதோ விழும் சத்தம் கேட்டு அவன் ஓடி வந்த போது அம்முவின் கை மட்டுமே தண்ணீரின் மேல் அவனுக்கு தெரிந்தது.