மேகம் 4
தோழனின் தோள்களும்
அன்னை மடி...
அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி...
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான்
உயர்ந்தது பத்து படி...
உன் நட்பை நாங்கள் பெற்றோம்...
அதனாலே யாவும் கற்றோம்...
மேலே மேலே சென்றோம்....
வான் மேகம் போலே நின்றோம்….
கல்லூரி கலையரங்கத்தின் வாயிலில் விக்ரம் போய் நிற்கும் பொழுதில் மேடையில் ஒலித்த பாடலும் நிறைவுற்றிருந்தது… பாடியவர்கள் அனைவரும் கீழிறங்கி சென்றிருக்க, கலையரங்கம் முழுவதிலும் பலத்த கரகோஷம் ஒன்றே பெரிதாக கேட்டது…
“ச்சே இறங்கி போயிட்டாங்களா? இன்னும் கொஞ்சம் வேகமா வந்துருக்கணுமோ! ப்ச்... யாரு பாடுனதுன்னு தெரியலையே...” என்று விக்ரம் வாய்விட்டே புலம்ப, அடுத்த நொடி அவன் செவிகளில் அவ்வார்த்தைகள் விழுந்தது…
“அட அட அட… எவ்வளவு கைத்தட்டல்கள்… மேகவதியோட குரலுக்கு நம்ம காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் அத்தனை பேருமே அடிமையப்பா… இல்லையா முகில்?...” என்று மேடையில் புடவை அணிந்தபடி நின்றிருந்த பெண்ணொருத்தி கேட்க,
“பின்ன இருக்காதா? நம்ம மேகா தான் இன்னொரு சரஸ்வதி ஆச்சே… வீணைய தூக்கிட்டு உக்கார்ந்தா…” என்று அவன் சொல்ல,
“போதும்டா அவ மொறைக்குறா பாரு… மன்னிச்சுடு தங்கமே… சரி ஓகே அழகான பாடலோட விழாவை ஆரம்பிச்சு வச்சாச்சு இப்போ அடுத்ததா நாம பார்க்கப்போறது” என்று அவள் புன்னகையுடனே நிறுத்த,
“நடனம் தான்...” என்று அந்த முகில் என்ற பெயருக்கு உரிமையானவனும் தொடரலானான்...
அவர்கள் இருவரின் பேச்சை கவனித்தவன் சிறுபுன்னகையுடனே அப்பாடலை பாடிய பெண்ணின் பெயரை மனதில் பதித்தவாறு “மே...க...வதி… ம்ம் நைஸ் நேம்...” என்று முணுமுணுத்தபடியே திரும்பி நடக்க ஆரம்பிக்க,
“மாப்பி…” என்று இடித்துக்கொண்டு வந்து நின்றது ஓர் உருவம்… மாப்பி என்ற அழைப்பிலேயே வந்து நின்றவனின் நினைவிலும் வரவிலும் உள்ளம் மகிழ்ந்தவன், ஒரு பார்வை பார்த்தபடியே புன்னகை முகமாய்,
“என்ன கௌதம் இந்த பக்கம்?...” என்று ஆர்வமாய் கேட்க, விக்ரமை பார்த்து முறைத்தான் அவன்...
“எல்லா நீ பார்த்த வேலை தான்டா.. அயோக்கிய ராஸ்கோல்..” கௌதம் சொன்ன தோரணையில்,
“நான் என்ன பங்கு வேல பார்த்தேன்… ஆமா என்ன ஒரு மார்க்கமா வந்து நிக்குற? ஓஹோ! ஓஹோஹோ!... புரிஞ்சு போச்சு… புரிஞ்சு போச்சு… ஹா ஹா ஹா… ஹுஹுஹுஹு…" என்று வாய்விட்டே வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க, தலையில் அடித்துக்கொண்டான் அவன்…
“ஆனா நீயெல்லா நல்லாவே இருக்க மாட்டடா… படிக்க மாட்டேன்னு சொல்லுறவன் சாபம் சட்டுன்னு பலிக்கும் பாரு...” என்று புலம்ப ஆரம்பிக்க, விக்ரமால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை…
“சரி சரி… என் செல்லக்குட்டி... பட்டுக்குட்டி… வெண்ணவெட்டி...” என்று கொஞ்சுவது போல ஆரம்பித்து காலை வார ஆரம்பிக்க, விழிகளை சுருக்கியபடியே முறைத்து வைத்தவன்,
“எதே… வெண்ணவெட்டியா? மவனே இன்னிக்கு ஒன்ன கண்டந்துண்டமா வெட்டியெடுக்கல… நான் கௌதமே இல்லடா..” என்று அடிக்கத்துரத்த அவனும் சிரித்தபடியே சிறுபிள்ளையாய் மாறி ஓட ஆரம்பித்திருந்தான்…
அன்றைய தினமதின் நினைவு இன்றும் அவன் இதழில் புன்னகையைத் தான் வரவழைத்தது… எத்தனை காலங்கள் கடந்தால் தான் என்ன? நண்பனின் நினைவினில் துளிர்த்தெழும் கண்ணீரும், மலரும் புன்னகையும் சுகமான சுவையாகவே நெஞ்சில் எழுகின்றன…
தன்னவளின் நினைவினில் அவள் குரலை கேட்கவென்று ஒலிக்கவிடப்பட்ட
பாடல், இப்பொழுது நண்பனின் நினைவை அள்ளித்தெளித்து 'நான் ஒருவன் இருபது நினைவில்லையா?...' என்று கேட்டுவிட்டு சென்றது… மனம் நெருஞ்சிமுள்ளாய் குத்த நண்பனின் நினைவில் ஓரமாய் கிடந்த செல்போனை எடுத்து உயிர்ப்பித்து கௌதமின் எண்ணை தேட ஆரம்பித்தான்…
“மாப்புளகிட்ட ரொம்ப நேரமா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தியே… என்னடி சொன்னாரு அவரு? ஒன்ன பிடிச்சுருக்குன்னு சொன்னாரா?...” என்று மாப்பிள்ளை வீட்டார்கள் கிளம்பி சென்ற இரண்டு நிமிடத்திற்குள் ஐந்து தடவைக்கும் மேல் கேட்டுவிட்டு தனது பதிலுக்காய் காத்திருந்த அண்ணியை நினைக்கவே சிரிக்கத் தான் தோன்றியது…. தன்னை பற்றி முழுக்க முழுக்க அறிந்திருந்த தன் உடன்பிறந்தோனான ஆதவனின் மனைவி கண்மணி இன்று ஏன் ஒன்றும் அறியாதவளைப் போல் திரும்ப திரும்ப கேட்கிறாளோ! என்று ஆயாசமாய் தான் வந்தது இவளுக்கு…
அவளின் கேள்விகளை காதிலேயே வாங்காதவளாக அணிந்திருந்த நகை நட்டுகளை கழட்டி அப்படி அப்படியே ட்ரெஸிங் டேபிளில் வைக்க, அப்பொழுதும் அவளின் அண்ணியாகப்பட்ட கண்மணி தான் வந்து ஒவ்வொன்றையும் பத்திரமாய் எடுத்து வைத்தபடி புலம்பிக்கொண்டிருந்தாள்…
“கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா மித்து ஒனக்கு? தங்க நகைகள கழட்டி இப்படி தான் கண்டமேனிக்கு போடுறதா? அத்தை மட்டும் வந்து பார்த்தாங்கன்னா வச்சுக்கோ! என்ன நாத்துனாகாரிய வளர்த்து வச்சுருக்கன்னு பொறிஞ்சு தள்ளிடுவாங்க… அந்த பெட்டியை முதல்ல எடு...” என்று வேலை ஏவிவிட்டு அவள் கை மெது மெதுவாய் நீண்டு எடுப்பதற்குள்ளாகவே இவளே தலையில் அடித்துக்கொண்டு, எட்டி எடுத்து நகைகளை பத்திரப்படுத்த, சிரித்தபடியே சென்று படுக்கையில் பொத்தென்று விழுந்தாள் இவள்…
“பொறுப்பே இல்லன்னு தெரிஞ்சுமே எதுக்கு மணி இந்த பொண்ணு பார்க்குற வேலையெல்லா? இப்ப பாரு எல்லாத்தையுமே ஒத்த ஆளா நீயே பார்க்கவேண்டி வருது… கோவிச்சுக்காம அந்த புடவையையும் எடுத்து அழகா மடிச்சு வச்சுடே…” என்று கண்களை சிமிட்டி சொல்லிவிட்டு படுக்கையில் குப்புறப்படுத்துக்கொண்டு காலாட்டியபடியே அவள் சொல்ல, வேகமாய் வந்து உச்சந்தலையிலேயே நச்சென்று ஒன்று வைத்தாள் அவள்...
“அண்ணன கட்டிக்கிட்டவளாச்சேன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா ஒனக்கு? எப்பப்பாரு மணி மணின்னுட்டு…” என்று கண்மணி அவளருகில் அமர, உருண்டு வந்து அவள் மடியிலேயே தலை வைத்து படுத்தவள்,
“அண்ணன கட்டிக்கிட்டவளா மட்டும் இருந்திருந்தா நான் ஏன் மணி மணின்னு கூப்புடப்போறேன்? அத்த மகளாவும் போயிட்டியே… சின்னப் புள்ளையில இருந்து மணி மணின்னு கூப்புட்டுப்புட்டு இப்ப அண்ணின்னு கூப்புட சொன்னா எப்படி? மெல்ல மெல்ல கூப்டுக்கலாம்..” என்று கண்களை மூடிக்கொண்டு சொல்ல, கண்மணியின் இதழ்களில் புன்னகை இழையோடியது…
இருவருக்கும் இரண்டு மூன்று வயதுகள் தான் வித்தியாசமே… ஆனாலும் சிறு வயதில் இருந்து ஒன்றாகவே வளர்ந்ததால் இருவருக்குள்ளும் பெயர் சொல்லி போடி வாடி என்று அழைக்கும் அளவிற்கு நெருக்கம் இருந்தது… அது மட்டுமல்லாது கண்மணி பிறந்த பொழுதே அவள் ஆதவனுக்கு தான் என்று பெரியவர்கள் ஒப்புக்காய் பேசி வைத்திருக்க, இளையவர்களும் வளர வளர தங்களுக்குள் நேச வலையை பின்னிக்கொண்டனர்… அதன் பலனாய் ஆதவனுக்கும் கண்மணிக்கும் இடையே நிறையவே காதல் லீலைகள் அரங்கேறியிருக்கிறது… அவர்களின் காதல் விளையாட்டுகளில் முழுக்க முழுக்க துணைநின்றது மேகமித்ரா தான்… ஆதவனுக்கும் கண்மணிக்கும் இடையே காதல் கடிதங்களை கொண்டு சென்று பாலமாகவே செயல்பட்டு அவர்களின் காதலை வளர்த்தவளாதலால் என்றுமே மேகமித்ராவை கண்மணிக்கு நிரம்பவே பிடிக்கும்…
மித்து மித்து என்று உயிரை விடுவாள்… அவள் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் கண்மணிக்கு பிடிக்கும்… திருமணத்திற்கு முன்பே அப்படியென்றால், திருமணத்திற்கு பிறகு இவர்களின் உறவை சாதாரணமாகவா சொல்ல வேண்டும்? திருமணமாகிய இந்த இரண்டு வருடங்களில் அவ்வீட்டில் இவர்களின் அரட்டைக்கச்சேரிகளும், விளையாட்டும், சிரிப்பும் தான் அதிகமாகவே கேட்கும்… மித்து மித்து என்று கண்மணியும், மணி மணி என்று மித்ராவும் இரட்டைவால் குருவிகளைப்போல சப்தமிட்டபடியே தான் சுற்றிக்கொண்டிருப்பர்…
ஆதவன் கூட அடிக்கடி அவர்களுக்கான தனிமையான தருணங்களில், “ஏன்டி பொண்டாட்டி நீ என்ன கல்யாணம் பண்ணியா இல்ல என் தங்கச்சிய பண்ணியா? எப்பப்பாரு அவ கூடவே சுத்திட்டு இருக்க? என்னையும் கொஞ்சம் கவனிடி…” என்று குழைந்திருக்கிறான் தான்… அப்பொழுதெல்லாம் முத்துப்பற்களை இதழில் தேக்கி வெட்கப்புன்னகை பூப்பவள்,
“தங்கச்சி மேலேயே பொறாமை படுறிங்க பாருங்க...” என்று அவன் நெற்றியில் முட்டி சிரித்து வைப்பாள்…
தங்கைக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் உறவைப் பார்த்து பொறாமைபடும் அளவிற்கு அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பு இருக்க, அதுவே கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும் இவர்கள் இருவருக்கும்… இருவருக்கும் இடையினிலே இந்நாள் வரைக்கும் எவ்வித ஒழிவுமறைவும் இல்லாமல் இருப்பது இருவரின் நட்பிற்கும் அணிகலனாய் இருக்க நாத்தனாரின் தலையை புன்னகையுடன் கோதியபடியே இருந்தவள் திரும்பவும் நினைவு வந்தவளாக ஆறாம் முறையாய் அக்கேள்வியை கேட்டாள் வேறு விதமாய்…
“அடியே மித்து… எத்தன தடவ கேட்டுட்டே இருக்கேன்… மாப்புள கூட என்ன பேசுனன்னு? இதுவே நானும் உன் அண்ணனும் கல்யாணத்துக்கு முன்ன மீட் பண்ணயில பேசுனத எல்லாம் சொல்லாம விட்டுருந்தா சும்மா விட்டுருப்பியா? கேட்டுட்டே இருக்கேன் மழுப்பிக்கிட்டே இருக்க… என்னடி சொன்னாரு?...” என்று திரும்பவும் கேட்க, இதழோர புன்னகையை வலியவிட்டவள் சட்டென்று எழுந்து அமர்ந்தவளாக,
“என்ன பேசிருப்பேன்னு தெரியாத மாதிரி கேட்குற பாத்தியா? அங்க நிக்குற மணி நீ… ஆமா இந்த குந்தாணிக் கெழவிக்கு எவ்ளோ தைரியம் பாரேன்… நெனச்சத நெனச்சபடியே நிறைவேத்திக்கிது… நான் கூட என்ன பெத்த தகப்பனுக்கு எம்மேல தான் பாசம் நேசம்லா அதிகமா இருக்கும் நம்ம பேச்ச தான் கேப்பாருன்னு நெனச்சேன்… ஆனா இப்போ பாத்தியா சைடு கேப்புல ஆத்தாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு என்ன டீலுல விட்டுட்டாரு…" என்க, சிரித்துவிட்டாள் அவளின் மணி…
“அம்மாச்சியெல்லா அந்த காலத்து மனுசி மித்து… அவுங்க எல்லா அப்புடி தான் இருப்பாங்க… என்னையெல்லா பத்தாங்கிளாஸோடவே நிறுத்த பாத்தாங்களே அத மறந்துட்டியா? நல்ல வேலையா மாமாவும் ஒங்கண்ணனும் ஒரு டிகிரியையாச்சும் முடிக்காம கல்யாணத்த பண்ணி வைக்க கூடாதுன்னு தீர்க்கமா சொன்னதும் தான் ஏனோதானோன்னு படிக்க விட்டாங்க.. அவங்களுக்கெல்லா நாம கல்யாணம் பண்ணி புள்ளக்குட்டி கூட இருந்தா தான் நிறைவான வாழ்க்கையே வாழுறோம்னு நம்புறவங்க மித்து… இப்ப நீ அத நெனச்சு எல்லாம் குழப்பிக்கிட்டு இருக்காத… படிக்கணும்னு நெனைக்குறியா படி… கல்யாணம் பண்ணிக்க விரும்புறியா பண்ணிக்கோ… எது நடக்குறதா இருந்தாலும் நீயே முடிவெடு… உனக்கு துணையா என்னைக்குமே நான் இருப்பேன்...” என்க, ஆசையாசையாய் கட்டிக்கொண்டாள்…
அதிகப்படியான வெறுப்பையும் கோபத்தையும் விழிகளில் தேக்கியவளாக மொட்டைமாடி சுற்றுச்சுவரில் அமர்ந்து காலை ஆட்டியபடி வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் மேகா… கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் தெரிந்த கட்டிடங்கள் எல்லாம் இது நாள் வரைக்கும் இல்லாத வண்ணத்தில் பளிச் பளிச்சென்று மாறிக்கொண்டிருந்தது…
எத்தனையோ வருடங்களுக்கு முன்பாகவே தனது
பாட்டனாரின் முழு உழைப்பால் வெறும் பொட்டல்காடாக இருந்த இவ்விடம்
கல்லூரியாக அவதாரம் எடுத்து நின்றது… எத்தனை எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு குறைந்த செலவில் நிறைவான கல்வியை கிராமப்புற மாணவ மாணவிகள் கற்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கல்லூரி விடுதியோடு சேர்த்து துவங்கப்பட்டது…
மாணவனோ மாணவியோ இக்கல்லூரியில் படிக்க வேண்டும் என்று வந்து விட்டால் விடுதியில் தங்கி மட்டும்தான் படிக்க முடியும்… ஊரை விட்டு வெகு தொலைவினில் இருந்ததனால் தினமும் வீட்டிற்கும் கல்லூரிக்கும் பயணப்பட்டுக் கொண்டு மட்டும் இருந்தால் எப்பொழுது அவர்கள் படிப்பது என்று எண்ணித்தான் ஆண்பாலர் பெண்பாலர் என இருவருக்குமாக சேர்த்து விடுதி வசதியோடு அக்கல்லூரியை துவங்கியிருந்தனர்…
கல்லூரி துவங்கிய ஆரம்ப காலம் முதல் கல்வி சேவைக்கெனவே நடந்துகொண்டிருந்த கல்லூரி என்று இவளை பெற்றவரின் மேற்பார்வைக்கு கீழ் வந்ததோ அன்றே அனைத்தும் முடிவுபெற்றது என்று தான் சொல்ல வேண்டும்…
தனக்குத் தெரிந்த வகையில் ஏதேதோ தகிடுதத்தம் எல்லாம் செய்து தான் கல்லூரியை நடத்தி வருகிறார் என்பது மேகா அறிந்ததே… ஆனால் இன்று என்னவாயிற்று என்று கல்லூரியை கைமாற்றியிருக்கிறார் என்று தான் அவளுக்கு கொஞ்சமும் புரியவேயில்லை… பெரிய அளவில் பெயரும் புகழும் வாங்கிய கல்லூரி தானே! வருமானத்தில் ஏதேனும் குறை வந்ததா! இல்லை வேறு ஏதேனும் காரணமா?.. என்ற சிந்தையுடனேயே இமைக்கவும் மறந்து வேடிக்கை பார்க்க, அவளின் தோளின் மேல் தேன்மொழியின் கரம் விழுந்து அவளை திசை திருப்பியது...