முதல் மோதல் முற்றும் காதல்...
மோ(கா)தல்- 1
காலை ஏழரை மணியளவில் அந்த திருமண மண்டபம் முழுக்க ஊர் மக்கள் சொந்த பந்தங்கள் சூழ நிரம்பி திருமணக் கொண்டாட்டத்தில் ஆர்ப்பரித்தவாறு இருக்க அங்கே மணமகன் அறையில் அப்படி எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக தயாராகினான் ஆதவ் கிருஷ்ணா.
மருந்துக்கும் அவன் முகத்தில் மெல்லிய புன்னகை இல்லை. இதையெல்லாம் அவன் அருகில் கடுப்புடன் பார்த்து வாயிற்குள் முனங்கினான் அவனின் அண்ணன் அரவிந்த்.
பின்னே அவனிடம் நேரில் கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள அவன் பைத்தியமா.. 'அவன் அவன் நைன்ட்டிஸ் கிட்ஸ் ஆ பொறந்துட்டு இன்னும் கல்யாணம் ஆகலயேன்னு கவலை பட்டுகிட்டு இருக்கான்.. இவன் என்னடான்னா மூஞ்சில ஒரு ரியாக்ஸனையும் காட்ட மாட்டேங்குறான்... கொஞ்சமாச்சும் சிரிக்குறானா பாரு.. அப்படி என்னத்த தான் மனசுல வச்சுக்கிட்டு ஒழட்டிக்கிட்டு இருப்பானோ ..' என்று முணுமுணுத்தவாறு பெருமூச்செரிந்தான்.
கூடப் பிறந்த அண்ணனாக இருந்தாலும் எதையும் ஷேர் பண்ணாமல் ஒரு டிஸ்ட்டன்ஸ் ஓட இருப்பவனை கண்டு வருத்தமாகவும் அதே நேரம் ஆதங்கமாகவும் வந்தது. ஆனால் இதையெல்லாம் அவனிடம் காட்டி விடும் அளவுக்கு அவர்கள் உறவும் இருந்ததில்லை. அதற்கு ஆதவ் விட்டதும் இல்லை.
இங்கு ஒரு விதமாக இருக்க மணமகள் அறையில் திருமணப் பெண்ணிற்குரிய எந்த ஒரு களையும் இல்லாமல் மேக்கப் ஆர்டிஸ்ட்க்கு ஒரு பொம்மை போல ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவர் அந்த ஊரிலேயே நம்பர் ஒன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ரி. அவரும் வந்ததில் இருந்து அவளை தான் கவனித்துக் கொண்டு தன் வேலையை செய்து கொண்டிருந்தார். அவள் முகத்தில் இருந்த வெறுமையே இந்த கல்யாணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்தது. இருந்தும் தான் இதைப் பற்றி கேட்பது அதிகப்படி என்று தன் வேலையில் மட்டும் கவனமாகினார்.. ஆனால் மனதுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் இவர்கள் வாழ்வு நல்லபடியாக அமையட்டும் என்று மனதிற்குள் வேண்ட தவறவில்லை.
ஐ லைனர் போடும் போது கண்களை மூடியவளின் இமைகளுக்குள் வந்து கண் சிமிட்டினான் அந்த ஆடவன். அதை நினைத்து என்றும் வெட்கப் பூரிப்பு அடையும் அவளின் இதழ் இன்று கசந்த முறுவலை சிந்தியது. தலையை உலுக்கி அந்த நினைவை ஓரங்கட்டியவள் கண்களை திறந்து பார்க்க தேவலோக மங்கையென இருந்தவளை கண்டு திருப்திப் பட்டு யார் கண்ணும் படாமல் இருக்க காதின் ஓரத்தில் திருஷ்டி பொட்டு வைத்து விட்டார்.
இந்த நேரத்தில் ஆதவ் வந்து திருமண சடங்கையெல்லாம் செய்து கொண்டிருக்க இனி மணப்பெண் வந்தால் மீதி உள்ள சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து திருமணத்தை நிகழ்த்தி விடலாம் என்று ஐய்யர் பெண்ணைக் கூப்பிட்டு வர சொல்ல சர்வ லட்சனங்களுடன் பதுமையென எழுந்து வந்தாள் தீக்ஷிதா.
மணமெடை செல்லும் வரை அவளின் பார்வை மொத்தமும் அவனிடமே. அவளின் பார்வையை உணர்ந்து நிமிர்ந்த ஆதவ் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் திரும்ப கீழே குனிந்து சடங்குகளை செய்ய ஆரம்பித்தான்.
அதில் அவளின் விழிகள் கூர்மை பெற்று பின் சாதாரணமாக மாறி அவனின் அருகில் வந்து உட்கார்ந்தாள் . நேரம் செல்ல செல்ல அவளின் பதற்றம் அதிகரிக்க நொடிக்கொருமுறை ஆதவின் முகத்தை பார்ப்பதும் தலைக் குனிவதுமாக அவள் இருக்க அவன் எந்த சலனமும் காட்டாமல் தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான்.
'இது சரி வராது ' என்று அவள் நினைக்கவும் "இந்த கல்யாணத்தை நிறுத்துங்க.. என்ன இது எல்லாம்..?" என்று ஆதவின் அம்மா கத்தும் சத்தத்தில் அனைவரின் அவ்வளவு ஆரவாரமும் அடங்கி அவரை நோக்கியது.
அதுவரை ஒரு வித பதட்டத்தில் இருந்தவள் நிம்மதியுடன் திரும்பி ஆதவை பார்க்க அவன் முகமோ இறுகி போய் இருக்க அதை கண்டவளுக்கு குழப்பமும் அதிர்வும் ஒரு சேர தாக்க ஆதவின் அம்மா ஜான்சி ராணி யின் குரல் அவள் நினைவை கலைத்தது.
"என்னமா.. எதுக்கு இப்ப கல்யாணத்தை நிறுத்த சொல்ற? என்னாச்சு உனக்கு.?" என்று தன் தாயை அரவிந்த் கடிய ,
"இன்னும் என்னடா ஆகனும்.இங்க பாரு லட்சணத்தை..." என்று அங்கு வைக்கப்பட்ட சீர் தட்டுக்களை கைக்காட்ட அவனுக்கு ஒண்ணும் விளங்கவில்லை.
அவன் முகத்தை வைத்தே புரிந்தவர் , "எனக்கு போயி மவனா வந்து பொறந்துருக்கியே.. டேய் அன்னிக்கு என்னடா சொன்னாங்க ..கல்யாண சீரு முப்பதொரு தட்டு வேணும் அதுவும் பெரிய தட்டா அதுல கொறை இருக்க கூடாதுன்னு சொன்னேன்ல அப்போலாம் சரி சரின்னுட்டு இப்ப வெறும் இருபது தட்டு தான் வச்சுருக்காங்க.அதுவும் சின்ன தட்டு. இத பாத்துட்டு நம்ம சொந்தபந்தங்களாம் நம்ம கேலி பேசி சிரிப்பாய்ங்க.. நான் பாத்துட்டு சும்மா இருக்கனுமா..
ஏங்க இது உங்களுக்கே தப்பா தெரியலை.. நான் சொன்ன எல்லாம் செய்யுறேன் ஒரு படி மேலேயே செய்யுறேன்னு பில்டப்பு குடுத்துட்டு இப்போ எல்லாம் அரைகொறையா பண்ணி வச்சிருக்கீங்க இதான் உங்க வாக்கா.. நல்லா இருக்குங்க உங்க லட்சணம்" என்று தன் மகனிடம் ஆரம்பித்து தீக்ஷிதாவின் தந்தை திருவாளன் கிட்ட முறையிட்டார் ஜான்சி ராணி.
அவரும் தன்னால் ஆனா சமாதானங்களை சொல்ல அதை காதிலே இவர் வாங்காமல் சீர் வந்தால் தான் கல்யாணம் இல்லனா இந்த கல்யாணமே நடக்காது என்று தானும் ஒரு பெண்ணாக இருந்து இப்படி திருமணம் மணமேடையில் வந்து பாதியில் நின்றால் என்னவாகும் என்று யோசிக்காமல் பணத்தாசை பிடித்து கத்திக் கொண்டு அரக்கியாக நடந்துக் கொண்டார் ஜான்சி ராணி.
இதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த அரவிந்தின் மனைவி தீபாக்கு குத்தாட்டம் போடனும் போல இருந்தது. பின்னே தனக்கு அடுத்து இருக்கும் ஒரே தங்கையை ஆதவுக்கு கட்டிக் கொடுத்து சொத்து மொத்தத்தையும் ஆளலாம் என கனவில் இருந்தவள் மேல் கல்லை கொண்டு எரிந்தவர் வேறு யாரும் இல்ல இதே ஜான்சி ராணி தான்.
அரவிந்த் வீட்டுக்கு பக்கத்து தெருவில் தான் தீபா வீடு. தினமும் ஆஃபீஸ் போகும் வழியில் இவளை கண்டு இவளது அமைதியான குணத்தில் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்தான். அதை அவளிடம் நேரிடையாக சொல்ல வெளியில் அடக்கமாக வீட்டில் அடங்கப்பிடாரி என இரு வேசம் போட்டு நல்ல பணக்கார வீட்டில் செட்டில் ஆகும் கனவில் இருப்பவளுக்கு பழம் அதுவாகவே தன் வாயில் விழும் பாக்கியம் கிடைக்க விடுவாளா.? உடனே சம்மதம் தெரிவித்து இருவரும் ஈருயிர் ஓருயிராக பழக தொடங்கி தன் அன்னையிடம் கல்யாணம் என்று வந்து நிற்க அவரோ பணத்தாசை பேர்வழி ஆயிற்றே.. !
ஒன்னுத்துக்கும் வழியில்லாத குடும்பத்தில் பொண்ணு எடுக்க முடியவே முடியாதுன்னு திட்டவட்டமாக சொல்ல இவன் சாகும் போராட்டத்தை கையில் எடுக்க பின்பு ஆதவ் தான் தலையிட்டு அன்னையை சமாதானம் படுத்தி கல்யாணத்தை நடத்தி வைத்தான்.
ஆனால் அப்போதே ஒரு கோரிக்கையை அவன் முன் வைத்து விட்டார். அது 'தான் பார்க்கும் பொண்ணை தான் திருமணம் முடிக்க வேண்டும்' என்றும் அண்ணன் மாதிரி காதல் கீதல்னு வந்து நிற்க கூடாதுன்னும் சத்தியம் கேட்க அவன் அவரின் பேச்சுக்கு மதிப்பு தந்து வாக்கு கொடுத்தான்.
அதன்படி பொருளாதாரத்தில் அவர்களுக்கு கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் நல்ல குடும்பம் என்று வந்த வரன் தான் தீக்ஷிதா . இருந்தும் ஒரே பொண்ணு சொல்ற வரதட்சணை எல்லாம் தரணும் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட அவர்களுக்கு செய்யும் வசதி தான் என்று ஒப்புக் கொண்டனர். ஆதவின் வரனை தட்டிக் கழிக்கவும் அவர்களுக்கு மனம் இல்லை. மேலும் சில பிரச்சனை அவர்களுக்கு இருந்ததால் அதிலிருந்து விடுபட இந்த கல்யாணத்தை சீக்கிரம் நடத்தி முடிக்கும் சூழ்நிலையில் அவர்கள் இருக்க எல்லாத்துக்கும் திருவாளன் ஒத்துக் கொண்டார்.
இந்த வரதட்சணை விசயம் ஆதவிற்கு தெரியாமல் ஜான்சி ராணி பார்த்துக் கொண்டார். இதற்கிடையில் தன் கணவன் மூலம் தன் தங்கைக்கு ஆதவை மணம் முடிக்க தீபா தூது விட தூதை நார் நாறாக கிழித்து அனுப்பி விட்டார். இதில் தீபா நேரடியாக பேசி இருந்தால் கன்னம் பழுத்து படுத்திருப்பாள்.
ஏற்கனவே ஒண்ணும் இல்லாத வீட்டில் இருந்து மூத்த மருமகள் வந்து விட்டாலே என்று இன்னும் கடுப்புடன் இருப்பவர் அவர். இந்த லட்சணத்தில் அங்கேயே திரும்பவும் இன்னொரு சம்பந்தம் முடிப்பாரா .. ?
இருந்தும் தன் எண்ணத்தை கைவிடாத தீபா எதாவது ஒரு வழி கிடைக்காதா என காத்திருந்தவளுக்கு இது பெரும் கொண்டாட்டம் அல்லவா. தன் மாமியாரின் குணம் அறிந்தவள் எப்படியும் சீர் வராமல் கல்யாணத்தை நடத்த விட மாட்டார்.அப்படியே அதையும் இதையும் சொல்லி தன் தங்கைக்கு கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீவிர திட்டத்தை போட்டு வைத்தவள் கூடக் கொஞ்சம் அவரின் கோபத்துக்கு தூபம் போட ஆரம்பித்தாள்.
அதுவரை தன் அன்னையிடம் புரிய வைக்க முயன்று கொண்டு இருந்த கணவனை "போதும் கொஞ்ச நேரம் நிறுத்துறீங்களா.? அத்தை இப்போ தான் சரியா பேசுறாங்க. நீங்க கொஞ்ச நேரம் அப்படி போய் நில்லுங்க" என்று சாடியவள் ,
"அத்தை.. பாத்தீங்களா.. நல்ல குடும்பம் கேட்டதுலாம் செய்வாங்கன்னு நம்புனீங்களே இப்போ பாத்தீங்களா என்ன பண்ணி வச்சுருக்காங்கன்னு.. இப்போவே இப்படி தில்லு முள்ளு பண்றவங்க நாளைக்கு கல்யாணம் முடிஞ்சா என்னவெல்லாம் பண்ண மாட்டாங்க .. யோசிச்சு பாருங்க அத்தை.. இவங்க புத்தி நல்ல வேளை கல்யாணத்துக்கு முந்தியே தெரிஞ்சு போச்சு .. இனி என்னத்த பேச்சு பேசாம இந்த பொண்ண விட்டுட்டு கொழுந்தனாருக்கு வேற நல்ல பொண்ணா பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் முடிப்போம்.." என்று பசப்பியவாரு ஜான்சி ராணி யிடம் நல்ல மருமகள் போல கூறி முடிக்க அவளை ஒரு லுக் விட்டவர் ,
"நல்ல பொண்ணுனா.? யார சொல்ற " என்று எதுவும் அறியாதவர் போல கேட்டார்.
இதுதான் சமயம் என்று வாயெல்லாம் பல்லாக " வேற யாரு .. நம்ம ரூபா தான் அத்தை.. என் சொந்த தங்கச்சி அவளை விட இந்த ஊரிலேயே நல்ல பொண்ணு எங்க பாக்க முடியும் .. ஹம்ம் நான் தான் முன்னாடியே கேட்டேன் நீங்க தான் முடியாதுன்னு சொன்னீங்க .. பாருங்க இப்போ கடைசில அவ தான் உங்க மருமகளா வர வேண்டியதா போச்சு.." என்று ஆதங்கம் கலந்த கேலியுடன் சொல்ல வெகுண்டு விட்டார் ஜான்சி.
"அடச்சீ.. நினைச்சேன் டி.. இதுக்கு தான் இப்படி பசப்பிட்டு வருவேன்னு.. பத்து தட்டு சீர் இல்லாததுக்கே கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன் .. நீ அதுக்கு கூட வக்கிலாத உன் வீட்ல பொண்ணு எடுக்க சொல்ற வெக்கமா இல்ல.. நீ சொன்னதும் வேற வழி இல்லாம சரின்னு சொல்லுவேன்னு நெனச்சியா சந்தி சிரிச்சுறும் சந்தி.." என்று ஊரார் முன்னே கத்தி விட்டார்.
இதில் பெரும் அவமானம் அடைந்த தீபா , 'இதுக்கெல்லாம் உனக்கு ஒரு நாள் இருக்கு..' என்று மனதினுள் கறுவியவள் முகம் கருக நின்றாள்.
'இந்த கல்யாணம் நின்றால் போதும் ' என 'யாருக்கு வந்த விருந்தோ ' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தீக்ஷி ஜான்சியின் நடவடிக்கையை பார்த்து முகத்தை சுழித்தாள். பின் தன் தந்தையிடம் பேசும் விதம் கண்டு கோபம் கொண்டவள் 'இப்போது காரியம் தான் முக்கியம் ' என தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
இப்போது தீபாவின் பேச்சும் அதற்கு ஜான்சி ராணியின் அடக்குமுறையும் கண்டவளுக்கு 'அப்பாடா..! நல்லவேளையாக இந்த கல்யாணத்தை இவரே நிறுத்தி விட்டார் ' என்று இருந்தது.
முதலில் இருந்து முகத்தில் யோசனை படர அங்கு நடந்தவற்றை கவனித்த ஆதவ் பின்பே தன் தாயின் எண்ணத்தையும் அவரின் குணத்தையும் அறிந்து மனம் இறுகி அமர்ந்திருந்தான். வெறும் பணத்துக்காக ஒரு பெண்ணின் வாழ்வு இதில் இருக்கிறது என்று நினைக்காமல் பேசும் அவரையே வெறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
இங்கு என்ன பணத்துக்கா பஞ்சம்.. இந்த சீர்களை விட நூறு மடங்கு அவனால் இப்போதே வரவழைக்க முடியும் அந்தளவுக்கு வசதி இருந்தும் இப்படி அற்பமாக நடக்கும் தாயை என்ன சொல்வதென்றே அவனுக்கு தெரியவில்லை.
தந்தை சிவராமனும் மனைவியை பேச விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க , தாயை சம்மதிக்க வைக்க தன் அண்ணன் போராட இங்கு அண்ணியோ இது தான் சாக்கு என்று அவளின் தங்கையை இவனுக்கு மணமுடிக்க முற்பட இப்படி தன் வீட்டிற்குள் இவ்வாறு முன்னுக்கு பின் முரணாக இருப்பர் என்று அவன் கனவில் கூட அறியவில்லை.
பள்ளியில் படிக்கும் போது வீடு விட்டா ஸ்கூல், ஸ்கூல் விட்டா வீடு வந்ததும் படிப்பு பின் அதிலேயே நாட்டம் கொண்டு இருந்தவனால் தன் உறவுகளோடு நேரம் செலவழிக்க முடியவில்லை. அதற்கு ஜான்சி தான் காரணம்.
நன்றாக படித்தால் தான் நல்ல நிலமைக்கு வர முடியும் என்று ஜான்சி ராணி அவனுக்கு மூன்று வயதில் இருந்தே பாடம் புகட்ட ஆரம்பித்தார். அதன் படி அவனும் படிப்பில் கவனம் செலுத்தி கெட்டிகாரனானான்.
வெளியில் விளையாட கூட அனுமதிக்க மாட்டார். அதனால் அவனுக்கு நண்பர்களே இல்லாமல் போயிற்று. அவனுக்கும் அப்போது பெரிய விசயமாக அது தெரியவில்லை. ஆனால் இன்று "எப்படி டா இருக்க..?" என்று உரிமையுடன் கேட்கும் ஒரு நண்பன் கூட அவனுக்கு இல்லையென்று புரியும் போது தான் அதன் வலி உணர்ந்தான்.
பின் காலேஜ் டிகிரி என்று மீண்டும் படிப்பு என்னும் கூட்டுக்குள் நுழைந்து தன்னை மிகச்சிறந்த தொழிலதிபனாக செதுக்கினான். இன்று பெயர் சொல்லும் அளவிலான ஏ. கே மென்பொருள் நிறுவனத்தின் மேனஜர் டேரக்டர் ஆக சிறப்பாக தொழிலை நடத்தி வருகிறான்.
இன்று சம்பாதிக்கும் அவனின் சொத்து இன்னும் இரண்டு மூன்று தலைமுறைக்கு பத்தும்.அந்த அளவுக்கு அவன் அயராது உழைத்து முன்னேறி இருக்கின்றான். அப்படி பட்டவனுக்கு இந்த முப்பது தட்டு குறைவில் நஷ்டம் வந்திற போகுதா இல்ல இதில் அவன் உயர்ந்து விட போறானா..
இதை எண்ணி கடும் சினத்தில் தன் அன்னையை வெறித்து பார்த்தான். இது அவனுக்கு எவ்வளவு பெரிய அவமானம். இவ்வளவு சொத்து இருந்தும் ஒன்னுதுக்கும் ஆவாதவன் போலவா அவன் தாய் அனைவரின் முன்னும் தன்னை சித்தரிக்கிறார் என்று முகம் இறுகி போனான்.
அது அவருக்கு தெரிந்தாலும் அவன் முகத்தை பார்க்காமல் நழுவினார். எங்கே அவனை பார்த்து அவன் எதுவும் பேசி இந்த பிரச்சனையை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டால் என்ன செய்ய.. தான் அவனிடம் பேசும் வரை தன்னை ஒரு வார்த்தைக் கேட்க மாட்டான் என்று அதீத நம்பிக்கையில் அவனைக் கண்டு கொள்ளாமல் தீக்ஷிதா வின் தந்தையிடம் மீண்டும் அடுத்த பிரச்சனையை துவக்கினார்.
"ஏன்யா .. பொண்ணுக்கு தரேன்னு சொன்ன சீருல தான் கொறை வச்சீரு.. பொண்ணுக்கு போடுறேன்னு சொன்ன நானூறு பவுன் தங்கமும் போட்டீரா.. இல்ல அதுலையும் கொறையா..பாத்தா அவ்வளவும் கழுத்துல தொங்குற போல தெரிலயே.. இருக்குறதும் கவரிங் மாதிரிலா தெரியுது என்று அவரை மரியாதை இல்லாமல் தாழ்த்தி பேசி சபையில் தன் மரியாதையையும் சேர்த்து தாழ்த்தினார்.
அவ்வளவுதான் தீக்ஷிதா பொங்கி விட்டாள். அவள் அவரிடம் சண்டைக்கு போக எழும் முன் ஐய்யரின் திடீரென்ற "கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.." என்ற விழிப்பில் அதுவரை நாதஸ்வர மேளா அவர்களின் பணியை விட்டு இவர்களின் கூத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பழக்க தோஷத்தில் அவர்களும் மேளத்த வாசிக்க , அனைவரும் என்ன என்று உணரும் முன் அய்யர் நீட்டிய தாலியை வாங்கி தீக்ஷிதாவின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுட்டு தன் தாரமாக்கினான் ஆதவ்..
மோதல் வரும்...