என் இனிய தோஸ்த்களுக்கு இனிய காலை வணக்கம்மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. சொன்னது போலவே புத்தாண்டு அன்று என் புது கதையோட முதல் அத்தியாயத்தோட வந்துட்டேன் தோஸ்த்ஸ்.படிச்சுட்டு உங்க கருத்தை கருத்தா சொல்லிட்டு போங்க..
அத்தியாயம் 1
திருச்சிராப்பள்ளி
காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்று.
இங்கு பெல் (BHEL),துப்பாக்கி தொழிற்சாலை, பாய்லர் தொழிற்சாலை என தொழிற்சாலைகளுக்கு குறைவு இல்லை.
மேலும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கமும் இங்கு தான் அமையப் பெற்றுள்ளது.
திருச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மலைக்கோட்டை தான். தாயுமானவரையும் உச்சி பிள்ளையாரையும் ஒருங்கே ஓரிடத்தில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இடமே மலைக்கோட்டை.
அந்தி மாலை ஆதவன் மறையும் ஏகாந்த வேலையில் சில்லென்று காவேரியை உரசி வரும் காற்றிறோடு மலைக் கோட்டையின் உச்சியிலிருந்து பார்க்கும் போது தெரியும் மொத்த திருச்சி மாநகரத்தின் எழிலை வர்ணிக்க வார்த்தைகள் ஏது!!
ஷபாஆஆஆ போதும்மா உன் வர்ணனை.ரொம்ப போர் அடிக்குது அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்ததால் நாம திருச்சியோட அருமை பெருமையை இத்தோடு நிப்பாட்டிட்டு கதைக்குள் போலாம்.
திருச்சி கன்டோன்மென்ட் சாலையில் முற்பகல் பதினொரு மணி.வாகனங்கள் சர் சர்ரென்று வேகமாய் சென்று கொண்டிருக்க கிடைக்கும் சிறு இடைவெளியில் சாலையை கடக்க பொதுமக்கள் முயன்று கொண்டிருக்க போக்குவரத்தை ஒழுங்கு செய்ய வந்தேன் என்ற பெயரில் திடீரென்று வந்து நின்ற போக்குவரத்து காவலர் கன்டோன்மென்ட் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களை நிறுத்தி ஓரங்கட்ட செய்தார்.
"சார் ஆபிஸ்க்கு லேட் ஆச்சு சார். லைசன்ஸ், ஆர்.சி புக் எல்லாம் கரெக்டா இருக்கு சார் .ஹெல்மெட் கூட போட்டு இருக்கேன்.விட்ருங்க சார்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.
"எல்லாம் ஒழுங்கா பண்ண நீ வேகமா வந்துட்டியே பா. இவ்வளவு வேகம் தப்பு தம்பி. ஒழுங்கா ஃபைன் கட்டு" என்று தன்னை ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்று காட்டினார் அந்த போக்குவரத்து காவலர்.
"சார் நூறு ரூவா தான் சார் இருக்கு. இதை வச்சுக்கோங்க சார்"
"என்னய்யா உன்னோட ரோதனையா போச்சு.சரி சரி குடுத்துட்டு போ" என்று அதை வாங்கி தன் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டவர் அடுத்த வண்டியை நிறுத்தி
"ஏன் ஹெல்மெட்டு போடலை.கட்டுய்யா ஃபைனை" என்று கடமை,கண்ணியம் ,கட்டுப்பாட்டை அந்த டூவீலர் காரனிடம் காட்டிக் கொண்டிருக்க அவனோ அந்த மாநிலத்தை ஆளும் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர் என்ற அடையாள அட்டையை காட்ட அடுத்த நிமிடம் காவல்துறை தன் கடமையை செய்தது.
அந்த கடமை என்னவென்றால் டூவீலரை சல்யூட் அடிக்காத குறையாக அப்படியே அனுப்பி விடுவது தான்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவர்களை விட அதிகாரத்தில் இருப்பவர்களிடம் தவறே செய்திருந்தாலும் சரியென்று ஏற்று கொள்வார்கள். அடிமட்ட சாதாரண மக்கள் செய்யும் சின்ன தவறையும் பெரிதாக காட்டி புரட்டி எடுத்துடுவிடுவார்கள். இதெல்லாம் இங்க காலம் காலமா நடப்பவை தானே.
நம்ம ஆபிசர் வேறு இன்றைக்கு இத்தனை பேருக்கு ஃபைன் போட்டே ஆக வேண்டும் என உறுதிமொழி எடுத்தவர் போல் போற வர வண்டியை எல்லாம் நிறுத்தி ஃபைன் போடுவேன் ஃபைன் போடுவேன்னு பந்தா காட்டுறாரே தவிர ஒருமுறை கூட அந்த ஃபைன் புக்கை திறந்தது என் கண்ணுல கூட படவில்லை. (நீங்க பாத்தா சொல்லுங்க)
இதுல என்ன கொடுமையென்றால் நடக்கும் அனைத்தையும் வீடியோவா ரெகார்ட் பண்ணிட்டு இருக்கு ஒரு கும்பல்.பாவம் இது ஆபிசருக்கு தெரியல. இன்னிக்கு என்ன ஆக போறாரோ!! (ம்ம்ம்… சிக்கினா சிதறு தேங்காதான்)
"எம்மா ஏய் நிறுத்தும்மா..பீக் ஹவர்ஸ்ல இப்படியா வேகமா வருவ" என்று பச்சை கலர் டி.வி.எஸ் எக்சலில் வந்த அந்த பச்சைக்கிளியை நிறுத்தினார் அந்த ஆபிசர்.
இன்னிக்கு அவருக்கு ஏழரை உச்சத்துல இருக்கு போல..யாரு கிட்ட என்ன பண்ணுறோம்னு தெரியாமயே பண்ணுறாரு.
தன்னை நிறுத்திய போக்குவரத்து காவலரையும் அதற்கு அவர் சொன்ன காரணத்தையும் கேட்டு "லூசாப்பா நீ" என்று பார்த்தாள் அந்த பச்சைக்கிளி.
பின்னே டி.வி.எஸ்.எக்சலில் ஹை ஸ்பீடில் வந்தாய் என்று சொன்னால் இது அந்த ஹூண்டாய் கம்பெனிக் காரனுக்காவது அடுக்குமா?
ஆமா டி.வி.எஸ் க்கும் ஹூண்டாய்க்கும் என்ன கனெக்சன்னு தானே கேட்குறீங்க?அது எதுக்கு நமக்கு?ஒரு ஃப்ளோல சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது சரியா?(ஷபாஆஆ எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)
"என்னம்மா என்ன அப்படி பாக்குற.எடு லைசன்சை" கடமை கண்ணாயிரமாய் கேட்க
புருவத்தை ஒற்றை விரல் கொண்டு தேய்த்துக் கொண்டே முகத்தை சுருக்கிய அந்த பச்சைக்கிளி தன் லைசன்சை எடுத்து நீட்ட அதை சரிபார்த்தவர் "ஆர்.சி புக் எடுமா' "இன்ஷூரன்ஸ் எடும்மா" என்று அவளை பட்டுப் புடவை எடுக்க சொன்னது போல் பாடாய் படுத்தி வைத்தார்.
"இன்ஷூரன்ஸ் வீட்ல இருக்கு சார்.கொஞ்சம் இருங்க என் தம்பியை எடுத்துட்டு வர சொல்றேன்" என்று அவள் போனை எடுக்க
"இன்ஷூரன்ஸ் வீட்ல இருக்குன்னா நீயும் வீட்லயே இருந்துக்க வேண்டியது தானே.எதுக்கு வெளியே வர" என்று அலட்டியவர் "சரி சரி பாக்க பாவமா இருக்கு.ஒரு ஐநூறு ரூவா குடு" என்று கேட்டார்.
"சரிதான்.நான் வீட்டுலயே இருந்து இருந்தா உங்களுக்கு இன்னிக்கு ஐநூறு ரூவா கிடைச்சு இருக்காதுல்ல.யாரு பெத்த பிள்ளைக்கோ தர்மம் பண்ணனும்னு எனக்கு எழுதி இருக்கு"தோள்பட்டையில் முகத்தை இடித்து கொண்டே சொன்னாள்.
"என்னம்மா தர்மம் அது இதுங்குற"என்று ஆபிசர் எகிற
"ரசீது கொடுத்து வாங்குனா அதுக்கு பேரு ஃபைன்.ரசீது கொடுக்காம வாங்குனா அதுக்கு பேரு தர்மம்.நான் சரியா தான் சொல்லி இருக்கேன்.சரி இப்ப நீங்க சொல்லுங்க ஃபைன் வேணுமா தர்மம் வேணுமா"
அவளை ஆவென்று வாயைப் பிளந்து பார்த்தார் ஆபிசர்.யாரும் இப்படி அவரின் முன்னால் பேசியது இல்லையே!
ரசீது கொடுத்து வாங்கினால் அது டிபார்ட்மென்ட்க்கு சென்று விடும்.ரசீது கொடுக்காமல் வாங்கினால் பாக்கெட்டுக்குள் பாதுகாப்பாக சென்று விடும்.
ஒன் ப்ளஸ் ஒன் ஈக்வல்ஸ் டு டூ என்று கணக்கு போட்டவர் "நீ தர்மமே பண்ணும்மா" என்று தயங்காமல் கேட்டார்.
அவரை கேவலமாக ஒரு லுக்கு விட்ட நம் பச்சைக்கிளி "ஐநூறு ரூவா தர்மம் பண்ணுறதுக்கு நான் ஒன்னும் அம்பானி பரம்பரையில பொறந்து வளரலை.இருநூறு ரூவா தான் இருக்கு.வேணுமா வேணாமா?" என்று பேரம் பேச
மூஞ்சி மூஞ்சூறு போல் சுருங்கினாலும் "சரி கொடும்மா" என்று கையை நீட்டவே செய்தார்.
அவர் நீட்டிய கையைப் பார்த்து சிரித்தவள் "ஒத்த கையை மட்டும் நீட்டுனா எப்படி.ரெண்டு கையும் நீட்டுங்க" என்று அவரின் இரு கையையும் யாசகம் கேட்பது போல் வைத்தவள் தன் எக்சலின் முன் கம்பியில் மாட்டி இருந்த கட்டைப் பையினுள் கை விட்டு எடுத்தாள் அந்த பொட்டலத்தை.
"கிண் கிண் கிணிங்" என்று சில்லரைச் சத்தம் கேட்க வெயிட்டான அந்த சில்லரைகளை சேர்த்து வைத்திருந்த பொட்டலத்தை கவிழ்த்து காவலரின் கையில் கொட்டினாள் பச்சைக்கிளி.
"யம்மா என்னம்மா என்ன பிச்சக்காரனாவே மாத்திட்ட" என்று பரிதாபமாய் கேட்டார் ஆபிசர்.
"என்னா பண்றது சார்?இருக்கறதை தானே கொடுக்க முடியும்.வேணாட்டி போங்க" என்று சில்லரையை கொட்டுவதை நிறுத்த
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ கோபப்படுற.சரி சரி அந்த பொட்டலத்தோட குடும்மா" என்று கூச்சமே படாமல் கேட்க
"அஸ்கு புஸ்கு.இருநூறு ஓவா உங்களுக்கு தர்மம் பண்ணுறதும் இல்லாம பொட்டலத்தை வேற கொடுக்கனுமோ.அதுக்கு வேற ஆளைப் பாருங்க" என்றவள் அவரின் இரு கைகளும் கொள்ளாத அளவிற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்,ஐந்து ரூபாய்,பத்து ரூபாய் சில்லரைகளை கொட்டினாள்.
ஆபிசர் அதை கோவில் பிரசாதத்தை கையில் ஏந்துவது போல் பயபக்தியுடன் ஏந்த அதை அழகாய் படம் பிடித்துக் கொண்டது அந்த கேமரா.
"ஏம்மா எண்ணிக்கை சரியா இருக்குமா?"
"அவ்ளோ சந்தேகம் இருந்தா இங்கேயே உக்கார்ந்து எண்ணுங்க" என்று ஏத்தமாய் பச்சைக்கிளி பதில் கொடுக்க
"எனக்கு இது தேவை தான் " என்று மானசீகமாக மனதில் நொந்தவர் " ஆத்தா மகமாயி நீ கிளம்பு தாயே மொதோ" என்று கையெடுத்து கும்பிடாத குறையாக கெஞ்சினார்.(கை முழுக்க சில்லறைய வச்சிருக்கீங்களே ஆபிசர்.அப்புறம் எப்படி கையெடுத்து கும்பிடுவீங்க)
"அது!!" என்பது போல் பார்த்தவள் தன் எக்சலை எட்டி உதைத்து கிளம்பி சென்றாள் வேகமாக ஆபிசருக்கு டாட்டா காட்டிக் கொண்டே.
இவ்வளவு நேரம் இங்கு நடந்த கூத்தை சுவாரசியமாய் பார்த்த அந்த இரு விழிகளும் தங்களின் கேமராவினுள் அதை பத்திரமாய் பதுக்கி கொண்டவர்கள் தங்களின் இருப்பிடம் நோக்கி செல்ல நாம் நம் பச்சைக்கிளியை பின்தொடர்வோம்.
ஆமா அது என்ன சும்மா அந்த பிள்ளையை பச்சைக்கிளின்னே சொல்ற.ஏன் அதுக்கு பேரு இல்லையான்னு தானே கேட்குறீங்க.இதோ கொஞ்ச நேரத்துல அது தெரிஞ்சுடும்.
கன்டோன்மெண்ட் சாலையை புயல் வேகத்தில் கடந்து ஆர்.ஜே.நகர் இரண்டாவது குறுக்கு தெருவினுள் நுழைந்த எக்சல் அந்த தெருவிலுள்ள வெள்ளை பெயிண்ட் அடித்த ஆறாவது வீட்டின் வாயிலின் முன் அமர்த்தலாய் நின்றது.
ஒற்றை மாடியுடன் கூடிய அந்த வீட்டை அண்ணாந்து பார்த்தவள் "ரெங்கநாயகி இல்லம்" என்று எழுதி இருந்ததைப் பார்த்து வழக்கம் போல் மனதில் ஒலித்த "ரங்கு ரங்கம்மா ..எங்க ரத்தம் உரியும் ரங்கம்மா" என்ற பாடலை தனக்கேற்றவாறு பாடிக் கொண்டே உள்நுழைந்தாள்.
"வாடியம்மா நுவலிஈஈஈ..இப்ப தான் என் வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு தெரிஞ்சுச்சா வழி..சீக்கிரம் உன் அக்காவை கூட்டிட்டு இங்க இருந்து போய் ஒழி" என்று அடுக்கு வசனம் பேசினார் ரெங்கம்மாள்.(ஓ அந்த ரங்கு ரங்கம்மா..நீங்க தானா?அம்மையார் டீ.ஆர் ரசிகையோ)
அவருக்குப் பதில் சொல்லாமல் மேலும் கீழும் அவரைப் பார்த்தவள் "என்னைப் பேச வைக்காதே..நான் கண்டபடி பேசி புடுவேன்" என்று பாட்டாலேயே அவருக்குப் பதில் கொடுத்து விட்டு சாவகாசமாக வீட்டினுள் நுழைந்தாள்.
"இவளுக்கு திமிரு மட்டும் குறையுதான்னு பாரு" என்று புசு புசுவென்று மூச்சு விட்ட ரெங்கம்மாள் அவள் பின்னேயே சென்றார்.
அங்கோ நுவலியின் அக்கா யாழிசை கண்ணை கசக்குவதோடு மட்டுமல்லாமல் கையில் சுருட்டி வைத்திருந்த புடவை முந்தானையையும் கசக்கிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
நுவலியைக் கண்டதும் கரும்புக் காட்டை கண்ட யானையைப் போல் மகிழ்வு பாதி நிம்மதி மீதியாய் நுவலியைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள் யாழிசை.
தன்னை அணைத்துக் கொண்டு மறுபடியுமாய் கண்ணைக் கசக்கத் தொடங்கிய யாழிசையைப் பார்த்து "அக்கா ஏன் அழறே..அழாதே அதான் நான் வந்துட்டேன் இல்ல.எல்லாம் சரியாகிடும்" என்று ஆறுதல் சொன்னாள் என்று நீங்கள் எண்ணினால் அது மிகவும் தவறு.
"இங்காரு உன் புடவையை கசக்குனதோட இல்லாம என் சுடிதாரையும் கசக்க ஆரம்பிச்சுட்டியா.மொதோ விலகி நில்லு நீ.போன தீவாளிக்கு எடுத்த துணி நீ இந்த கசக்கு கசக்குனீனா என்ன ஆவுறது அது?" என்று அக்காவை அதட்டியவள்
"எல்லாம் எடுத்து வச்சிட்டியா?அப்படின்னா கிளம்பு போலாம்.எனக்கு வேலை கெடக்கு" என்று யாழிசையின் கையைப் பற்றி நடக்க துவங்க தான் எதிர்பார்த்தது நடக்காததால் கோபத்தில் கொதித்த ரெங்கம்மாள் "ஏ நில்லு நில்லு.என்ன நீ பாட்டுக்கு வந்த உங்கொக்கா கையைப் பிடிச்சு இழுத்துட்டு போற.நான் எதுக்காக அவளை வந்து கூட்டிட்டு போவ சொன்னேன்னு கேட்க மாட்டியா?" என்று அதிகாரமாய் கேட்க
"ஏன் கேட்கனும்ங்குறேன்.மாசமா இருக்க பொண்ணு அம்மாவைப் பாக்க ஆசைப்பட்டு இருப்பா.அதான் வந்து கூட்டிட்டு போவ சொல்லி இருக்கீங்க.இதைக் கேட்டு வேற நான் தெரிஞ்சுக்கனுமாக்கும் " என்று நுவலி நொடிக்க
"வித்தாரக்கள்ளி கதையவே மாத்திப் புட்டாளே" என்று வியந்தவர்
"நான் ஒன்னும் அதுக்காக அனுப்பலை.எதுக்கு அனுப்புறேன்னா" என்று இவர் ஆரம்பிக்க "போதும்" என்பது போல் கையை உயர்த்தி அவர் பேச்சை தடை செய்த நுவலி
"எப்படியும் ஒரு திரைக்கதை எழுதி இருப்பீங்க.அதை எதுக்கு தனியா சொல்லிக்கிட்டு.சாயங்காலம் உங்க மவனைக் கூட்டிட்டு சாவகாசமா எங்க வீடு தேடி வந்து அம்மாவும் மகனுமா சொல்லுங்க.நாங்க ஊம் கொட்டி கேட்குறோம்.இப்ப எனக்கு நிறைய வேலை கெடக்கு" என்றவள் அங்கு மேலும் நிற்காமல் தன் அக்காவை இழுத்து எக்சலில் அமர வைத்து போயே விட்டாள்.
ரெங்கம்மாள் தான் "அவள் பறந்து போனாளே..என் பேச்சைக் கேட்காமல் போனாளே " என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தார்.
பின்னர் மனதை தேற்றயவராய் "இருடி மகளே.சாயங்காலமா என் மகனைக் கூட்டிட்டு வந்து வச்சுக்குறேன் கச்சேரியை "என்று கருவிக் கொண்டு உள்ளே சென்றார்.
ஆக மொத்தம் சாயங்காலம் ஒரு கதாகலேட்சபம் இருக்குன்னு சொல்லுங்க.
கருத்துத் திரி
"மிட்டாய் கனவுகள்" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
www.srikalatamilnovel.com