சொக்கியின் “என் கருப்பழகி”
அத்தியாயம் – 7
“பொண்ண சீக்கிரம் அழைச்சிண்டு வாங்கோ, நாழியாறது” என்று அறிவித்தார் ஐம்பது வயது நிரம்பிய பூசாரி.
“பொண்ணு வந்தாச்சு ஐயரே, நீங்க மந்திரத்தை சொல்லுங்க.” என்றார் தர்மேந்திரன்.
விலை உயர்ந்த கார்கள் மூன்றும், ஒரு பழைய அம்பாசிடர் காரும் அணிவகுத்து நின்றன ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில். அந்த இடம் ஒரு பாழடைந்த அம்மன் கோயில், அளவில் சிறியதும் கூட. தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தான் அந்தக் கோயில் அமைந்திருந்தது. பராமரிப்பின்றி சிதைந்த தோற்றத்துடன் காட்சியளித்தது. அங்கு ஒரு திருமணம் நடக்க இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் அங்கு ஒரு திருமணம் இன்னும் சில நிமிடங்களில் நடக்க இருக்கிறது. அங்கு நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டு வரவில்லை. மணமகனையும் சேர்த்து ஐந்து ஆண் மக்களும், மணப்பெண்ணையும் சேர்த்து நான்கு பெண்மக்களும் கலந்து கொண்டனர். தர்மேந்திரன், சற்குணபாண்டியன், சுந்தரபாண்டியன், சுந்தரவல்லி இவர்கள் தான் மணமக்களின் உறவினர்கள்.
“டக்கூஊ டக்கூஊ டக்கூஊ டக்கூஊ டக்கூஊ” என்ற ஊன்றுகோல்களின் சப்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தனர் அனைவரும், பூசாரி முதற்கொண்டு. அவன் ஒருவனைத் தவிர.
4’11 அடி உயரத்தில், அடித்தால் ஒடிந்து விழக் கூடிய தேகத்துடன், அவளது அடர்ந்த காப்பிக் கொட்டை நிற தேகத்தில் சுற்றப்பட்ட அடர் சிவப்பு நிறப் புடவையில், கழுத்தில் சிறிய ரோஜா பூ மாலையும், ஒரு பழைய அட்டிகையும், ஒரு டாலர் சங்கிலியும், கைகளில் ஒரு ஜோடி தங்க வளையல்களும் அணிந்து கொண்டு, தலையில் கனகாம்பரப் பூ, பந்து போல் சுற்றப்பட்டு, காதில் சிறு சிமிக்கி ஆட, ஊன்றுகோல்கள் எழுப்பிய சப்தத்தில் அமிழ்ந்துவிட்ட கால்களில் அணிந்திருந்த மெல்லியக் கொலுசொலியுடன், தர்மேந்திரன் வீட்டுச் சமையல்காரி அன்னம்மாவும், சற்குணபாண்டியன் வீட்டுச் சமையல்காரி செங்கமலமும் இருபுறமும் தன்னைத் தாங்க, தன் ஊன்றுகோல்களை அழுந்த ஊன்றுக் கொண்டு மெல்ல நடந்து வந்தாள் அவள். அல்ல நொண்டிக் கொண்டு வந்தாள்.
அவள் கருப்பி! கருப்பி என்று அழைக்கப்படும் புகழினி தெய்வமங்கை!!! பாண்டிவனத்தில் பிறந்த அபலைப் பெண்!!!
பூசாரி அதிர்ந்த பார்வையுடன் நொண்டிக் கொண்டு வந்த மணமகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். “இவாளுக்கு மூளை கீளக் குழம்பிப் போயிடுத்தா??? இந்தப் புள்ளாண்டானுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ண கட்டி வைக்கிறாளே??? அதுவும் ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கிற கோயில்ல கல்யாணம் பண்றாளே??? ஏதோ வில்லங்கம் இருக்கும் போலயே! இவளாப் பாத்தா அந்தப் பொண்ண பலிக் கொடுக்கப் போறாப்னனா இருக்கு. ஐய்ய்யோ! பெருமாளே முப்பாதாயிரம் காசுக்கு ஆசைப்பட்டு, பெரிய பாவம் பண்ணிண்டு இருக்கேனோ??? நேக்கு இவா சங்கதியெல்லாம் தெரியாது, என்ன தண்டிச்சுடுதா நாராயணா!! இவாக் கிட்ட இருந்து தப்பிக்கவும் முடியாது, கரிகாய் வெட்டறாப்ல என்னோடக் கை கால வெட்டிடுவா..” என மனதிற்குள் திகிலுடன் புலம்பிக் கொண்டிருந்தார் பாவப்பட்ட பூசாரி.
“ஐய்யரே ஐய்ய்ய்ய்ரே யோவ்வ்வ்வ் அய்ய்யரே” என உலுக்கப்பட்டார் பூசாரி. திடுக்கிட்டுத் திரும்பினார் அவர். “என்னெய்யா வேடிக்கெ பாத்துக்கிட்டுக் கெடக்க, வேடிக்க பாக்கவா உனக்கு அம்புட்டுப் பணம் குடுத்து அழச்சுட்டு வந்தோம்??? வந்த சோலியெப் பாருய்யா” என உறுமினார் சுந்தரபாண்டியன், புகழினியைப் பெற்றவர்.
அவசர அவசரமாக மந்திரங்களை உச்சரித்தார் பூசாரி, பயத்தில் அவருக்கு நாக்குழறியது. புகழினி ஐயரின் அருகில் வந்துவிட்டாள். “உக்காரு ஆத்தா” என்றார் செங்கமலம். அவளுடைய ஊன்றுகோலை அன்னம்மா வாங்கிக் கொண்டார். செங்கமலத்தின் கைகளைப் பிடித்து கொண்டு மெல்லக் கீழே அமர்ந்தாள். அவள் குனிந்த தலை நிமிரவில்லை. கண்களில் தேங்கி நின்றக் கண்ணீர் காட்சிகளை மங்கலாக்கியது.
“ஐயரே மொத மந்திரம் ஓதுரத நிப்பாட்டு, பொழுதுக்கும் பல்லவி பாடத்தேன் வந்தியா? வெரசா தாலிய எடுத்துக் குடுய்யா” என்று பூசாரியை விரட்டினார் சற்குணபாண்டியன், புகழனியின் தந்தை வழி தாத்தா.
அடுத்த உறுமல்கள் வருமுன் அவசரமாகத் தாலியைக் கைப்பற்றிக் கொண்டு மணமகனிடம் நீட்டினார். அவன் அவரை தீர்க்கமாக ஒரு பார்வைப் பார்த்தான். “பெருமாளே நேக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல..” என மனதினுள் எண்ணிக் கொண்டு பயத்துடன் அவனைப் நோக்கினார்.
பின்னே 6’3 அடி உயரத்தில், சுண்டினால் ரத்தம் வரும் பால் வெள்ளை நிறத்தில், அஜானுபாகுவானத் தோற்றத்துடன், அடர்ந்த சிகையும், சிரிப்பை மறைக்கும் தாடியும், கூர்மையானக் கண்களில் தீட்சண்யம் நெருப்பென மின்ன, நான் எதற்கும் அஞ்சாதவன், என்னிடம் மோதிப் பார்க்கிறாயா என்று சாவல் விடும் தோற்றத்துடன், ராஜ கம்பீரத்துடன் சிங்கம் போல் அமர்ந்திருக்கும் அவன், அவரை ஆழ்ந்து பார்த்தால் அவருக்கு ஏன் குளிர் எடுத்து உடல் நடுங்காது!
அவன் ஷிவ் என்கிற ஷிவேந்திரன்! திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் எனும் பெரும் தொழில் சாம்ராஜியத்தின் எம்.டி அண்ட் சேர்மன். தொழில் வட்டாரத்தில் ‘ப்ளாக் சீட்டா’ என்ற அடைமொழியைக் கொண்டவன்.
“ஷிவ்! என்னப்பா பாக்குற? சீக்கிரம் தாலிய வாங்கிக் கட்டுப்பா, லேட் ஆகுது!” என்றார் தர்மேந்திரன். அவரை அழுத்தமானப் பார்வை பார்த்துவிட்டு, தன் அருகில் அமர்ந்திருந்தவளைச் சற்று தலை தாழ்த்தி நோக்கினான். அவளின் முன் இருமுறை சொடக்கிட்டான். புகழினி திடுக்கிட்டுத் திரும்பி, தலை நிமிர்ந்து பார்த்தாள் அவனை(அண்ணாந்து தான்!). மங்கலாகத் தெரிந்தான், கண்களில் கண்ணீர் குளமாகத் தேங்கி இருந்தது. பூசாரியிடம் தாலியை வாங்கிக் கொண்டு, அவளின் கழுத்தைச் சுற்றிக் கைகளை கொண்டு சென்று கட்டினான், அவள் கண்களைப் பார்த்துபடி. அவன் விரல் கூட நுனி அவள் மேல் படவில்லை! ஏன், மூச்சுக் காற்றைக் கூட அவள் மேல் படவிடாது விழிப்புடன் நடந்து கொண்டான்.
பந்தல் போடவில்லை! வாழை மரங்கள் கட்டவில்லை! தோரணங்கள் தொங்கவில்லை! மணவறை அமைக்கவில்லை! ஹோம குண்டம் வளர்க்கவில்லை! மேள தாளங்கள் முழங்கவில்லை! நாதஸ்வரம் இசைக்கவில்லை! உறவினர் கூடி அட்சதை தூவ வில்லை! குடும்பத்தினர் வாழ்த்தவில்லை! ஆனாலும் அங்கு ஒருத் திருமணம் நடந்தேறியது. தெய்வமாவது அவர்களை வாழ்த்தியதா??? அந்த தெய்வத்துக்கு தான் வெளிச்சம்!!!
மூன்று முடிச்சிட்டவன் நொடியும் தாமதிக்காமல் எழுந்து கொள்ள, அவன் பி.ஏ ஆண்டனி அவனருகில் விரைந்தான். கழுத்தில் கிடந்த மாலையைக் கழட்டி கீழே விசிறியடித்துவிட்டு, நெற்றியில் இருந்த சந்தனக் கீற்றை தன் கைக்குட்டையால் துடைத்தவன் தனது கூலர்சை பி.ஏவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டான் ஷிவேந்திரன்.
“தாத்தா, மை ஜாப் ஸ் டன்.” என்று ரத்தின சுருக்கமாகக் கூறிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வேக நடையுடன் தனது பி.ஏ பின் தொடர சென்றான்.
போகும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் புகழினி. பூசாரிக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. இது என்ன மாதிரி திருமணம்? இந்தப் பெண்ணின் வாழ்க்கை இனி எப்படி இருக்குமோ? என மூன்றாம் மனிதரான அவர், முதல் முறையாக அவளைக் காண்பவர் அவளுக்காகப் பரிதாபப்பட்டார்.
“ஏய், கருப்பி எந்திருடி. எம்புட்டு நேரமாதேன் உக்காந்திருப்பே? தாலிகட்டுன மவராசென் வந்து தூக்கி விட்டாதேன் மகராணி எழுந்திருப்பியலோ!” என ஓங்கியக் குரலில் எகத்தாளமாக வினவினார் சுந்தரவல்லி, புகழினியின் தந்தை வழிப் பாட்டி.
சுந்தரவல்லியின் குரலில் தேங்கி நின்று திரும்பிப் பார்த்தான் ஷிவ். அவள் தட்டு தடுமாறி எழுந்து கொண்டு, பிடிமானமில்லாமல் கீழே விழ இருந்தவளைச் செங்கமலம் ஓடி வந்து தாங்கிக் கொண்டார். அன்னம்மாள் அவளது ஊன்றுகோல்களை சடுதியாக கொண்டு வந்துக் கொடுத்தார். அவள் அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு “மொத தரம் பொடவக் கட்டுறேன் அதேன் வாகு வரல.” என்றாள் மெல்லியக் குரலில் கள்ளமில்லாமல். கேட்ட இருவருக்கும் கண் கலங்கியது. “பிறந்த இடம் தான் இவளைப் பாடாய் படுத்தியது என்றால், புகுந்த இடம் அவர்களை மிஞ்சுபவர்களாக இருக்கிறார்களே! பாவம்! இந்தப் பெண்ணுக்கு விடிவு காலமே இல்லையா தெய்வமே?” என மனதிற்குள் மறுகினர்.
ஷிவேந்திரன் அவளின் கண்ணீருடனான புன்னகையை சலனமில்லாத முகத்துடன் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றான். தர்மேந்திரன் நொடியும் தாமதிக்க விரும்பவில்லை. சற்குணபாண்டியனிடமும், சுந்தரபாண்டியனிடம் சொல்லிக் கொண்டு அவசர அவசமாகக் கிளம்பினார். கோயிலின் வெளியே கார் ‘சர்ர்ர்ர்’ என்று சீறிப் பாய்ந்த சப்தம் கேட்டது.
“அன்னம்மா, கூட்டுட்டு வா சீக்கிரம், டிரெயின்கு டைம் ஆச்சு” எனத் தனது வீட்டு சமையற்காரியிடம் அவசரப்படுத்தினார் தர்மேந்திரன்.
“இதோ ஐயா, கூட்டிட்டு வரேன்” என தன் எசமானனுக்குப் பதில் கூறிவிட்டு புகழினியின் அருகில் சென்றவர்,
“போலாமா தங்கம் நேரமாச்சு ஐயா கூப்பிடுறாங்க?” என்று சற்று தயங்கிக் கொண்டே வினவினார். அவருக்கே இங்கு நடப்பதில் எதிலும் உடன்பாடில்லை, ஆனால் அவர் ஆளும் வர்க்கத்தில் பிறக்கவில்லையே! கேள்வி கேட்கும் உரிமை அவருக்கு இல்லை. என்ன செய்வார் பாவம்!
புகழினிக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அவளுக்குப் புரிந்தது, பாண்டிவனத்தை விட்டுத் தான் நெடுந்தூரம் பயணிக்கப் போகிறோம் என்று. ஏங்கே அழைத்துப் போகிறார்கள் என்று அவளுக்குத் தெரியாது. ஏன் அவர்கள் இருவரும் யாரென்றும் அவளுக்குத் தெரியாது! மணந்தவனையும் அறியாள், அவனின் மண்ணையும் அறியாள்! அடுத்தவர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டே வளர்ந்தவள். கேள்வி கேட்கும் பழக்கமும், உரிமையும் அவளுக்கு இல்லை. செங்கமலத்தின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். தன்னைத் தூக்கி வளர்த்தவள் அல்லவா. அவளுக்கு அவர் தான் தாய். செங்கமலத்துக்கு அழுகை வரும் போல் இருந்தது, ஆனால் எசமானி சுந்தரவல்லியின் முன் அழுதுவிட்டு அவரால் பாண்டிவனத்தில் வேலைப் பார்த்து சீவனத்தை ஓட்டிவிட முடியுமா? எனவே அழுகையை அடக்கி அவளின் கையைத் தட்டிக் கொடுத்தார். ஆறுதல் சொல்லக் கூட அவரால் வாய் திறக்க முடியாது சுந்தரவல்லியின் முன்னிலையில்.
“செங்கமலம்” என அதட்டினார் சுந்தரபாண்டியன். சட்டென்று புகழினியின் கைகளை விட்டு விட்டார். அன்னம்மா அவள் கைகளைப் பற்றி அவளை கார் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார்.
“ஸ்ஸ்ஸ் அப்பாடா!!! இப்பத்தேன் எம்மனசு குளுந்திருக்கு. இருபத்தி வருசமா நம்மளப் புடிச்சி ஆட்டுன கெரகம் புடிச்ச மூதேவிய ஒரு வழியா ஒழிச்சுப்புட்டோம். எம்புட்டு ஆட்டு ஆட்டிபுட்டா நொண்டி சிறிக்கி...” என பெருமூச்சுவிட்டவாறேக் கூறினார் சுந்தரவல்லி.
புகழினிக்கு தனது அப்பத்தாவின் பேச்சுக் காதில் விழத்தான் செய்தது. ஆனால் எத்தனை முறை இவ்வாறான குத்தூசி வார்த்தைகளால் குத்துப்பட்டாலும், அந்த மெல்லிய மனம் கொண்ட பாவையால் அவற்றினை தூசி போல் தட்டிப் புறந்தள்ள முடியவில்லையே! அவளுக்குக் கேவல் வந்தது. அன்னாம்மாவின் கை அழுத்தத்தில் அந்தக் கேவலையும் முயன்றுக் கட்டுப்படுத்திக் கொண்டாள். கேவல் விசும்பலானது.
சுந்தரபாண்டியன் அன்னையின் கூற்றை தலை அசைத்து ஆமோதித்தார். சற்குணபாண்டியனும், தர்மேந்திரனும் தனிமையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். புகழினியின் வரவை உணர்ந்து, காருக்கு அருகில் சென்றனர் இருவரும்.
அன்னம்மாவும், புகழினியும் அம்பாஸிடர் காரில் ஏற்றப்பட்டனர். தர்மேந்திரன் எல்லோரிடமும் தலையசைத்து விடைபெற்று தனது ஆடிக் காரில் ஏறிக் கொண்டார்.
சற்குணபாண்டியன் புகழினியும் அமர்ந்திருந்த காரின் சன்னல் அருகில் வந்து மெல்லியக் குரலில் தெளிவாக “நீ செத்தா, ஓன் சாம்பெ(ல்) கூட இந்தத் தேனி பக்க(ம்) வரக் கூடாது, சொல்லிப்புட்டேன்..” என விரல் உயர்த்தி எச்சரித்துவிட்டுச் சட்டென நகர்ந்து கொண்டு “வண்டிய எடுப்பா.” கட்டளையிட்டார் ஓட்டுநரிடம். ஸ்தம்பித்துப் போய் அவரை நோக்கினாள் புகழினி. கார் நகர்ந்தது. கரும் பளிங்கு கன்னங்களில் வெண் முத்தாய் கண்ணீர் கோடுகளாக இறங்கின.
“நான் பிறந்த மண்ணில் கால் ஊன்ற எனக்கு அனுமதி இல்லையா??? இந்த திருமணத்தின் வாயிலாக எனக்கு காரியம் செய்துவிட்டனரா என் பிறந்த வீட்டினர்?? என்றும் அவர்களுக்கு நான் சுமை தான். இன்று இறக்கி வைத்துவிட்டனர். இந்த சுமைக்கு எதற்கு ஒரு திருமணம்??? அவர்களுக்கும் நான் சுமைதானே! இன்னும் என்ன என்ன கொடுமை எல்லாம் நான் காண வேண்டி இருக்கு பெரியக்கா அம்மாளே!” மனதினுள் மருண்டு ஒடுங்கினாள் அந்தப் பாவப்பட்ட பெண்.
மதுரை ரயில் நிலையத்தில் கார்கள் சென்று நின்றன. அன்னம்மா வேகமாக இறங்கி, “மெதுவாம்மா, மெதுவா இறங்குங்க.” என்றபடி புகழினிக்கு காரிலிருந்து இறங்க உதவினார்.
டிரைவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு இவர்கள் பின்னே நடந்து வந்தார். தர்மேந்திரன் இவர்களுடன் வருவதை மரியாதைக் குறைவாக எண்ணி விரைவாகச் சென்று தனக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ள ஏ.சி கோச்சில் சென்று அமர்ந்து கொண்டார். அன்னம்மாவும், புகழினியும் ஸ்லீப்பர் கோச்சில் சென்று அமர்ந்து கொண்டனர். அவர்கள் ரயில் பயணம் தொடங்கியது. அவள் சன்னலில் தலையைச் சாய்த்துக் கொண்டு தங்களை கடந்து செல்லும் காட்சிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். புகழினி தன் வாழ்க்கை எந்த திசையில் பயணிக்கிறது எனத் தெரியாது பயணித்தாள்.
“போராளே பொன்னுதாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு பஜாரத்து கோழிய விட்டு
போராளே பொட்டை புள்ள ஊர விட்டு”
பாண்டிவனத்தில் சுமையாக வாழ்ந்தவள், சுபிக்ஷத்தில் சுகமாக வாழ்வாளா???
கருப்பு அழகி வருவாள்…