சொக்கியின் “என் கறுப்பழகி”
அத்தியாயம் – 12
அந்த துக்கவீடு சலசலத்தது. ஷிவேந்திரன் அலட்சியமானப் பார்வையோடு கம்பீரமாக வந்து கொண்டிருந்தான். ராஜேந்திரன் முகம் இறுகினார். சுகுணா உணர்ச்சி துடைத்த முகத்துடன் சாந்தனின் அன்னையின் அருகில் நின்றிருந்தார். கவனமாக மகனைக் காண்பதை பெற்றோர் இருவரும் தவிர்த்தனர். சாந்தனின் தந்தைக்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு சாந்தனையும் தனது தந்தையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றுவிட்டான்.
சாந்தன் எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. ஒரு பொழுதில் தனது வாழ்க்கையைப் புரட்டி போட்டவனின் எள்ளல் பார்வையைக் கூட அவன் கவனித்தானில்லை. எல்லாச் சடங்குகளும் நடந்தேறி சாந்தனின் தந்தையின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு கனத்த மனதோடு புகனியோடு வீடு திரும்பினர் ராஜேந்திரன் சுகுணா தம்பதியர்.
காரிலிருந்து இறங்கியவுடன் வேலையாள் அவர்களை நெருங்கி ராஜேந்திரனின் காதில் படபடப்புடன் எதோ கிசுகிசுத்தான். ராஜேந்திரன் கோப சிவப்பேறிய விழிகளுடன் சுபிக்ஷத்தின் தோட்டத்தை நோக்கி விரைந்தார். சுகுணாவும் புகழினியும் பதட்டத்துடன் அவரைப் பின் தொடர்ந்தனர். வீட்டின் பெண்டிர் அனைவரும் அங்குக் குழுமியிருந்தனர். அந்தக் காட்சியைக் கண்டு ராஜேந்திரனும் சுகுணாவும் உறைந்துவிட்டனர். புகழினி “ஆத்தீஈஈஈஈஈ” எனத் தன்னை மீறிக் கத்திவிட்டாள். சரவணனுக்கு அதிர்ச்சிதான் ஆனால் சடுதியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். யார் இதனை செய்திருப்பார்கள் என்று அவனுக்கு அந்த கணப்பொழுதில் புரிந்துவிட்டது.
வசுந்தரா தமையனின் முன் ஆக்ரோசமாக வந்து நின்று, “பாரு, பாரு நல்லா பாரு! இப்போ உனக்கு ஹாப்பியா? கண் குளிர பாரு. இதுக்குதானே நீயும் உன் பொண்டாட்டியும் ஆசைப்பட்டிங்க? என் வாழ்க்கையைத் தான் ரெண்டு பேரும் நாசம் பண்ணிங்க, உங்க பையன் உங்களைவிடமோசமா இருக்கான். என் பிள்ளைய என்னப் பண்ணி வச்சிருக்கான் பாரு. உன் பையனை என்ன பண்ணலாம் சொல்லு சொல்ல்ல்ல்லுஊஊஊஉ” என ஆக்ரோசமாக வீறிட்டாள். ராஜேந்திரனும் சுகுணாவும் உடல் விரைத்து அந்தக் காட்சியை வெறித்தபடி அசையாது நின்றனர்.
“யாராவது போய் காப்பத்துங்களேன்.. வசந்த், வசந்த் கண்ணா! வேலைக்கார நாய்களா போங்கடா போய் என் பேரனை கீழ இறக்கி தூக்கிட்டு வாங்கடா..” எனக் கதறினார் மேகவதி.
வசந்த் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் ரத்தக் காயங்களுடன் சுய நினைவின்றி தலை கீழாகக் கயிற்றில் தொங்கிக் கொண்டிந்தான். ஷிவேந்திரனின் வேட்டை நாய்கள் டைகரும், ரைனோவும் அவனுக்கு இருபுறமும் காவலாக நின்றன.
டைகர்! ரைனோ! ஷிவேந்திரனின் கட்டளைக்கு மட்டுமே அவை அடிபணியும். அவ்வளவு எஜமான விசுவாசம். இப்பொழுது அவற்றிடம் நெருங்க யாவருக்கும் பயம். கடித்து குதறிவிட்டால்!!!
ரகுவரனும், விமன்யாவும் தோட்டத்திற்கு ஓடிவந்தனர். அண்ணனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டு வந்தது, ஆனால் செய்வதறியாது விமின்யா அன்னையை அணைத்துக் கொண்டு சுகுணாவையும், புகழினியையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.
மகனின் நிலையைக் கண்டு ராஜேந்திரனின் சட்டையைப் பிடித்துவிட்டார் ரகுவரன். “உன் பையன் தான் இதுக்கு காரணம். எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என் மகனை அடிச்சி தலை கீழே கட்டி தொங்கவிட்டு நாய்களை விட்டு காவல் காக்க வைப்பான். யாரு கொடுத்த தைரியம்? ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா என் புள்ள மேலேயே கை வைச்சிட்டிங்களா! கொன்னுடுவேன்! கொன்னு புதைச்சிருவேன்!” எனக் கர்ஜித்தார்.
ராஜேந்திரன் ரகுவரனை தடுக்காமல் அமைதியாக நின்றார். சரவணன் தான் இருவருக்கும் இடையில் வந்து பிரித்துவிட்டான்.
மேகவதி அலுவலகத்திலிருந்த தனது கணவன் தர்மேந்திரனை அழைத்து விவரத்தைச் சொன்னார். ஆனால் தர்மேந்திரன், முக்கிய கிளையண்டுடன் பிஸ்னஸ் டின்னர் இருக்கிறது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு கழன்று கொண்டார். அவருக்குத் தெரியும் தர்மேந்திரன் ஷிவேந்திரனை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார் என்று. ஆத்திரம் மேலிடத் தனது மகனையும் மருமகளையும் உறுத்து நோக்கினார்.
ஷிவேந்திரனை தொடர்பு கொள்ள முயன்றனர், பலனில்லை. ஷிவேந்திரனின் கார் நள்ளிரவைத் தாண்டி சுபிக்ஷத்திற்குள் நுழைந்தது. வீட்டின் ஹாலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குழுமியிருந்தனர். யாரையும் கண்டு கொள்ளாமல் மாடியேறி சென்றுவிட்டான் ஷிவ்.
தர்மேந்திரன் அமைதியாக அமர்ந்திருந்தார், ஆத்திரத்தில் பல்லைக் கடித்தக் கணவன் ரகுவரனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு அமைதிப்படுத்தினாள் வசுந்தரா. தந்தையுடனும், அண்ணன் மகனுடனும் சண்டை வளர்க்கும் நேரம் இதுவல்லவே! ஷிவேந்திரனின் கோபம் அவள் அறிந்ததே! மகன் என்ன சில்மிசம் செய்து மாட்டிக் கொண்டானோ. பணிந்து தான் பிள்ளையைக் காக்க வேண்டும். இல்லையேல் அவர்களது பிள்ளை அவர்களுக்கு இல்லை என்றாகிவிடும். தங்களது இழி நிலையை எண்ணி அப்பொழுது அவளால் கண்ணீர் மட்டும் தான் விட முடிந்தது. ஆனால் மனதிற்குள் பகை தீ வளர்ந்து கொண்டேப் போனது.
ஷிவேந்திரனை நெருங்கும் திராணியின்றி அனைவரும் அசையாமல் அமர்ந்திருந்தனர். தர்மேந்திரன் மெல்ல எழுந்து மாடியிலிருக்கும் ஷிவேந்திரனின் அறைக்குச் சென்றார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஒருசில நிமிடங்களில் ஷிவேந்திரனின் குரல் ‘டைகர், ரைனோ’ என விளித்தது. ஒரிரு நிமிடங்களில் ஷிவேந்திரனின் அறையில் இருந்து வெளிப்பட்ட தர்மேந்திரன், வேலையாட்களிடம் “போய் அவனை தூக்கிட்டு வாங்க” எனக் கட்டளையிட்டுவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டார்.
வசந்தின் குடும்பத்தினர் வேலையாட்களுடன் அவனை மரத்திலிருந்து கீழே இறக்கி காரில் ஏற்றிக் கொண்டு செல்வதை மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் ராஜேந்திரன், சுகுணா, புகழினி.
“வசந்துக்கு எதாவது ஆகட்டும்ம்ம்,…” என்ற மேகவதியின் குரலில் அனைவரும் அவசரமாகத் திரும்பினர். அதற்குமேல் எதுவும் சொல்ல இயலாது ஓய்ந்து போய் அவரின் அறைக்குச் சென்றார் மேகவதி.
சுகுணா கண்களை இறுக மூடித் திறந்தார். மனைவியின் துயரம் தோய்ந்த முகத்தைப் பார்க்க ராஜேந்திரனால் முடியவில்லை. “நாம உங்க சிவகாமி பாட்டி மாதிரி அமைதியான குணம் கொண்ட அழகான தேவதை பெண் பிறப்பானு எதிர்பாத்தோம், ஆனா ராட்சஷன் வந்து நமக்கு பிறந்திட்டானே! ஏன் இப்படி? நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம், இப்படி ஒரு பிள்ளை நமக்கு?? இவன் செய்யிற பாவம் எல்லாம் நம்ம வருங்கால சந்ததியத் தொடரப் போகுதுன்னு அவனுக்கு தெரியவே இல்லையா??” என மனந்தாளாமல் பிதற்றினார்.
புகழினியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடைய அறைக்குச் சென்றுவிட்டாள். ராஜேந்திரன் மனைவியைச் சமாதானம் செய்தவாறு தங்களது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்தன. எப்பொழுதும் போல் அன்றும் விடியலில் விழிப்பு வந்துவிட்டது புகழினிக்கு. சுபிக்ஷத்தில் அழகாகப் பொருந்தி விட்டாள், இல்லை பொருத்திக் கொண்டாள் என்பதே சரியாகும்! கோலமிடவது, சமைப்பது, வீட்டை அலங்கரிப்பது. மாமியாருடன் வெளியேச் செல்வது எனத் தன்னை வேலைகளில் அமிழ்த்திக் கொண்டாள். கோலம் போட தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு மெல்ல வீட்டின் போர்டிகோவை அடைந்து ஹோஸ் பைப்பின் மூலமாக தண்ணீரடித்து சுத்தம் செய்து அழகாக மயில் கோலமிடத் தொடங்கினாள். பாட்டுப் பாடிக் கொண்டே வேலை செய்ய அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன்னை மறந்து உரக்கப் பாடினாள்.
“ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைச்சேன்
நான் பூவாயீ..
ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயீ
நானா பாடலியே நீ தான் பாட வச்சே
வைகையிலே வந்த வெள்ள(ம் ) நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வர(ம்) வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது
பொன்னுமணி தேரு நான் பொத்து வைச்சேன் பாரு
கன்னி என்ன தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சி நீ வாயேன் வழி பாத்து
கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை
பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்து தான் கூடவில்லை
கூரப்பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்ன ஏந்த நீ தானேஏஏஏஏஏஏஎ “
பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்து தான் கூடவில்லை
கூரப்பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்ன ஏந்த நீ தானேஏஏஏஏஏஏஎ “
கோலமிட்டு முடிந்தவள் கோலத்தின் அழகை ரசித்தபடி “அசத்திப்புட்டப் புள்ளெ” தன்னைத் தானே புகழ்ந்து கொண்டவள், மலர்ந்த முகத்தோடு மெல்லப் படியேறி வீட்டினுள் சென்றாள். அவளுடைய அசைவுகளை ஒரு உருவம் நெருப்பென ஒளிரும் கண்களால் உள்வாங்கிக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. பாவம்!
புகழினி சமையல் அறையில் அன்னம்மாவுடன் சேர்ந்து எல்லோருக்கும் வேண்டிய காலை பாணங்களைக் கலந்தாள். இது மாதிரி வேலைகளைத் தவிர்க்குமாறு சுகுணா வற்புறுத்தியும் அவள் பணிவோடு மறுத்துவிட்டாள். தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்ய அவள் விரும்பினாள். அவர்களும் அவளின் போக்கிலேயே அவளை விட்டுவிட்டனர். அவளுடைய மகிழ்ச்சியைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்!
“அன்ன(ம்) ஆத்தா, எல்லாருக்கும் கொண்ட காபி தண்ணி குடுங்கெ நா(ன்) தோட்டத்தில மல்லி பூ பரிச்சாறே(ன்)”
அன்னம்மா சிரித்தபடி தலையாட்டினார். எதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி கையில் மூங்கில் பூக்குடையுடன் தோட்டத்திற்குச் சென்றாள் புகழினி. அவளைப் பார்த்து பெருமூச்சிட்டார் அன்னம்மா.
தோட்டத்து மண்டபத்தில் அமர்ந்திருந்தான் ஷிவேந்திரன். பருவப் பெண்ணின் அழகிய வனப்பைப் போல விடியல் பொழுதின் அழகு சுபிக்ஷத்திற்கு தனி தேஜசைக் கொடுத்தது. சுபிக்ஷத்தில் சம்யுக்தாவின் வரவுக்குப் பிறகு அவன் ஒரு சில நாட்களில் அன்னிய தேசத்துக்கு பறந்துவிட்டு நான்கு மாதங்கள் கடந்து நேற்று நள்ளிரவில் தான் நாடு திரும்பினான். நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பவன், இளைப்பாற ஓர் இடம் கிடைத்தது போல் சாய்ந்து அமர்ந்து கொண்டு தோட்டத்தைச் சுற்றி பார்வையை ஓட்டினான். அவன் இங்கு இல்லாமல் இருந்தாலும் இங்கு நிகழ்ந்த மாற்றங்கள் அவன் கவனத்துக்கு வந்தது.
மல்லிகைப் பூவின் வாசம் அவன் நாசியில் புகுந்தது. அவன் மனையாள் உருவாக்கியிருந்த மல்லிகை பந்தலின் மணம் அந்தத் தோட்டம் எங்கும் கமழ்ந்தது. “புகழினி தெய்வமங்கை” என அழுத்தமாகத் தன் திருவாயால் மனைவியின் பெயரை முதன்முதலாக உச்சரித்தான்.
அவனின் அழைப்புக்கு இணங்கியதைப் போல் அவனின் மங்கையவள் மல்லிகை பந்திலின் அருகே வந்து நின்றாள்.
அந்த மல்லிகை பந்தல் கொடி மண்டபத்தைச் சுற்றி இருந்தது. காலை இருட்டில் ஷிவேந்திரனை அவள் கவனிக்கவில்லை. அவன் மறைவாக அமர்ந்திருந்தான். அவளின் வருகையை உணர்ந்தும் அசையாமல் அமர்ந்து அவளை நோட்டமிட்டான். அங்கு ஒருவன் தன்னை நோட்டமிடுவதை அறியாது, புகழினி தனது புத்தம் புதுத் தோழியான மல்லிகைப் பந்துலுடன் ஆசையுடன் உரையாடத் தொடங்கினாள்.
Last edited: