Karuram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-10
தன்னை நட்புணர்வுடன் ஏற்றுக் கொண்டிருந்த சம்யுக்தாவிடம் அர்ஜுன் தயக்கத்தை விடுத்து இயல்பாக உரையாடலானான்... சம்யுக்தா எளிதில் பழகும் ரகம் இல்லை தான் என்றாலும், அவனின் நட்புணர்வில் ஏதோ ஒன்று அவன்பால் ஈர்க்கபட்டிருக்கவே அவனுடன் சகஜமாக உரையாடினாள்.“சரி அப்போ நெக்ஸ்ட் பிளான் என்னன்னு நீங்க டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க சம்யுக்தா?” என்று கூறிவிட்டு மரியாதை நிமித்தம் கைகுலுக்கிவிட்டு நகர எத்தனித்த சமயம் சம்யுக்தாவின் குரல் தடுத்தது.
“ஒரு நிமிஷம்” என்றதும் நடையை நிறுத்தி சிரத்தை மட்டும் திருப்பி பார்த்தவனிடம்...
“என்னை நீங்க இனி என் பெயர் சொல்லியே கூப்பிடலாம்” என்று புன்முறுவலுடன் கூறியதும், கூர்மையாக துளைத்தவனின் பார்வையில் ஏதோ ஒன்று தென்பட்டிருக்க அது என்னவென்று புரியாது யோசனையில் புருவம் இடுக்கினாள்... அதை பற்றி அவள் வினவும் முன் சுதாரித்தவன்...
“கண்டிப்பா சம்மு” என்று இயல்பாக கண்சிமிட்டி தன் கருநிற குளிர் கண்ணாடியை அணிந்துக் கொண்டு வேகமாக நகர்ந்துவிட்டிருந்தான். அவன் அழைப்பில் இருந்த பிரத்யேக உணர்வின் தாக்கம் அப்போதும் அவளுக்குள் ஏதோ செய்தது.
அவன் கூறியவற்றை எல்லாம் யோசித்தபடி அடுத்தகட்ட முடிவை எண்ணி கொண்டிருந்தவளின் சிந்தனையை சந்தோஷின் அழைப்பு கலைத்திருக்கவே, தன் யோசனையை ஒத்தி வைத்தவள் சிரத்தையுடன் பதிலளிக்க ஆயத்தமானாள்.
அன்பழகன் சம்யுக்தாவின் தீர்மானத்தில் பலமான எதிர்ப்பு கருத்து இருந்தபோதும் அவள் கூறியதை முற்றிலும் முடக்கிவிட மனம் வரவில்லை... ஆகையால் சில பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டவர் அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி செய்யலானார்.
முதல் முக்கியமாக அங்கே நீதிமன்றதில் மிகவும் பிரபலமான பெண் வழக்குரைஞர் சகுந்தலாதேவியை அணுக திட்டமிட்டார்... அவர் எடுத்த எந்த ஒரு வழக்கும் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை என்ற சுற்றும் உலவளாவிய கருத்துக்களே அவரை எந்தவித தயக்கமும் இன்றி அணுக வசதியாகிப் போனது.
“எக்ஸ்கியூஸ் மீ மேடம் அம் அன்பழகன்” என்று அறைக்குள் நுழைந்தவரை கண்ட சகுந்தலாதேவி...
“வாங்க அன்பழகன்... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்...”
“அதிருக்கட்டும் திடிர்ன்னு என்னை பார்க்கணும்னு சொன்ன காரணம் என்ன?” என்று விசாரித்தார்.
“ஒரு கேஸ் விஷயமா உதவி வேணும் மேடம்” என்றதும் அவருக்கு வியப்பாகிப் போனது...
“என்ன என் உதவியா?”
“ஆமாம் மேடம்” என்றவர் சம்யுக்தாவை பற்றி கூறி அவளுடைய தொழிலையும், திருமண வாழ்வையும் பற்றி எடுத்துரைத்தவர் அதற்கான சில சாதகபாதகங்களையும் கூறியிருந்தார்.
“சோ, நீங்க சொல்றதை பார்த்தா இது கொஞ்சம் சென்சிடிவா ஹேண்டில் பண்ணுற மாதிரி இருக்கும் போலவே” என்று தன் யூகத்தை கூறிவிட்டிருந்தார்.
“உண்மை தான் மேடம்... இதில் சில சிக்கல்களும் இருக்கு... சம்யுக்தா சில விஷயங்களில் அடமெண்ட்டான பொண்ணு, அவள் கணவர் கவின்கலாதரன் அதை விட அழுத்தமானவன் இவங்களுடைய முடிவு நாளைக்கு அந்த குழந்தையை பாதிக்கலாம் இல்லையா?”
“பாதிக்கலாம் என்கிற பிராபபிலிட்டி எல்லாம் இல்லை அன்பழகன், நிச்சயம் பாதிக்கும்... இந்த கேஸ் முடியற வரைக்கும் நானே முழு பொறுப்பை எடுத்துக்கிறேன்” என்றவரின் பதிலில் மிகுந்த திருப்தியுற்றவராக அடுத்தகட்ட பணிகளை பார்க்கச் சென்றிருந்தார்.
அன்பழகன் சென்றதும் சகுந்தலாதேவி உடனடியாக அந்த வழக்குக்கு சம்மந்தமான முக்கிய தகவல் படிகளை தெரிந்துக் கொள்ள ஆயத்தமானார்.
அன்றைய தினம் இனிதாகவே புலர்ந்திருக்க சம்யுக்தா, கலாதரன் இருவருக்கும் அன்று முதல் வழக்கு விசாரணையொட்டி கலந்தாய்வு ஆலோசனைக்கு வழக்குரைஞர் பக்கம் அழைப்பு விடுத்திருந்தார்கள்.
அர்ஜுன் வாயிலாக அறிய வந்த வாணி, அரசி இருவரும் அவர்களின் நல்வாழ்க்கைக்கு சாதகமாக முடிய வேண்டி, குழந்தையை அர்ஜுன் பொறுப்பில் விட்டுவிட்டு இருவரும் அதிகாலையிலேயே கிளம்பி புலியகுளம் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட புறப்பட்டனர்.
இருவரும் விநாயகரை வழிபட்டு விட்டு பிரகாரத்தில் சற்று நேரம் ஆசுவாசமாக அமர்ந்து அன்று அவர்கள் தமையனின் வாழ்க்கை சீர்பட நேர்மறையான பதிலே கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் நினைத்து பிரார்த்தித்து கொண்டனர்.
தரிசனத்தை முடித்துவிட்டு இருவரும் கிளம்ப ஆயத்தமான சமயம்... “அக்கா அண்ணனும், அண்ணியும் பிரிஞ்சிடமாட்டாங்களே?” என்று பதைப்புடன் வினவினாள் வாணி.
“அதெல்லாம் பிரியமாட்டாங்க வாணி நீ கவலைப்படாதே... நமக்காக தானே அர்ஜுன் சார் ரிஸ்க் எடுக்கிறாரு... எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றவள் தன் கரத்தை அவள் கரத்தில் வைத்து ஆறுதலளித்திருந்தாள்.
அங்கிருந்து புறப்பட்டு அவர்கள் பதிவு செய்திருந்த ஆட்டோவின் வருகைக்காக காத்து கொண்டு நின்றிருந்த சமயம், அவர்களுக்கு வெகு அருகில் அவர்களை உரசுவது போன்று கிறீச்சிட்ட சப்தத்துடன் வந்து நின்ற வாகனத்தை கண்டு திகிலடைந்து போனவர்கள், அதிலிருந்து சீற்றத்துடன் இறங்கிய ரஞ்சனை கண்டு மேலும் இருமடங்கு திகைத்தவர்களாக ஒருவர் முகத்தை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டனர். அவர்களின் அச்சம் மிகுந்த பார்வையை பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல்...
“உங்ககிட்டே பேசணும்” என்று அதிகாரமாக கூறியவனை கண்டு இருவரும் கிலி மறந்து சினம் அதிகரித்திருக்க வாணி தீயென முறைத்தபடி...
“உங்ககிட்டே பேச எங்களுக்கு விருப்பம் இல்லை” என்று கடுத்த குரலில் சுள்ளென்று எரிந்து விழுந்தவள் அவனை அலட்சியப்படுத்தும் விதமாக...
“வாக்கா போகலாம்” என்று அரசியின் கரத்தை பிடித்துக் கொண்டு வெடுக்கென்று நகர்ந்தவளின் செயலில் கடுப்புற்றவன்...
“எனக்கும் உங்க கூட பேச இஷ்டம் இல்லை தான், என்ன செய்யுறது எல்லாம் என் தலையெழுத்து” என்று வெகுவாக சலித்துக் கொண்டவனை கண்டு இருவரும் உஷ்ண நிலையை அடைந்தனர்...
“இது இனி தொடரக் கூடாதுன்னு தான் என் விருப்பமும்... உங்களுக்கு எப்படி வசதி” என்றவனின் வார்த்தையில் அரசிக்கு சினம் மேலோங்கினாலும் அதை கட்டுபடுத்திக் கொண்டு மிகவும் நிதானமாக அவனை பார்த்தவள், அருகில் கொதிநிலையின் உச்சத்தில் இருந்த வாணியின் கரத்தை அழுத்திக் கொடுத்து சைகையால் அமைதியாக இருக்கும்படி உணர்த்தியவளின் சூட்சுமத்தை புரிந்துக் கொண்டு தானும் பொறுமையை கடைபிடிக்கலானாள்.
“சொல்லுங்க” என்று அவள் பேச அனுமதித்ததும்...
“எனக்கு தெரியும் உங்க அண்ணனுடைய விவாகரத்து முடிவை நிராகரிக்கிறது நீங்கதான்னு... இனி நீங்க உங்க அண்ணன் வாழ்க்கையில் தலையிடாதீங்க... அப்படி செய்தா சனியனை உங்க முந்தானையில் முடிஞ்சுக்கிற கதை தான்... உங்களையும் உங்க குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன்” என்று துவேசத்துடன் கூறி மிரட்டல் விடுத்திருந்தான்.
அதுவரை மெளனமாக இருந்த அரசி தன் பொறுமையை இழந்தவளாக வெடித்தாள்... “ஒஹோ... அப்படியா? எங்கே அப்படி என்ன செய்திருவீங்கன்னு ஒரு சாம்பிள் காட்டுங்களேன் பார்ப்போம்” என்று சிறிதும் அச்சமில்லாமல் நிமிர்வுடன் மிடுக்காக வினவினாள்.
“நான் எதையும் சொல்லமாட்டேன் செய்து தான் காட்டுவேன்... அதுக்கு சாம்பிள் நான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை... அதுதான் ஆல்ரெடி ஆதாரமே இருக்கு” என்று கூறியவனின் பார்வை ஏளனமாக வாணியின் மேல் படிந்தது... அவன் பார்வையின் பொருள் அறிந்த இருவருக்கும் ஆக்ரோஷம் போங்க, இருவரின் கண்களிலும் அழல் எரிந்தது.
“என்ன எகத்தாளமா?” என்ற அரசியின் குரலில் அனல் பறக்க...
“எப்போவும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது மிஸ்டர்.ரஞ்சன், பார்த்து நடந்துக்கிறது தான் உங்களுக்கு நல்லது... முதலில் நீங்க செஞ்ச தப்பை சரி செய்யப் பாருங்க” என்று எச்சரித்த வார்த்தையில் எஃகின் கடினத்தை தாங்கி இருந்த கடுமையை உணர்ந்தவன்...
“ஏய் என்ன திமிரா? நான் நினைச்சேனா உங்க ஒட்டு மொத்த குடும்பத்தையும் இப்போவே கம்பி எண்ண வைப்பேன், என்ன செய்து காட்டடுமா?” என்று சீறினான்.
“முடிஞ்சா செய்து பார்... இந்த பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்” அவனை அலட்சியபடுத்தி விட்டு செல்லும் நோக்கில் முனைந்தவளை ஆத்திரத்துடன் மறித்து நின்றவன்...
“என்னையே அலட்சியம் செய்யுறீங்களா? ஏன் இவ்வளவு பேசுறியே உன் தங்கைக்கு ஊரில் வேற ஆம்பளையா இல்லை” என்றதும் அரசி இருக்கும் இடம், பொருள், ஏவல் அனைத்தையும் ஒதுக்கி வைத்தவள் அவன் கன்னத்தில் “பளார்” என்று அறைந்திருந்தாள். அவளின் அறையில் ரஞ்சன் அதிர்ந்து போனான்!
வாணியின் குழந்தை தாயை தேடி அழுகையில் தவித்ததை கட்டுபடுத்த இயலாது, அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த அர்ஜுனும் அரசியின் தாக்குதலை கண்டு அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன தைரியம் இருந்தா உங்க அக்கா என்னை அடிப்பா?” என்று அவமானத்தில் வாணியிடம் சீறினான்.
அவர்களுக்குள் ஏதோ பலமான தர்க்கம் நடப்பதை அறிந்த அர்ஜுன் அவர்களை நெருங்க எண்ணுகையில் ஏதோ ஒன்று தடுக்க வாகனத்திலேயே அமர்ந்துவிட்டான்... அதுவரை அழுகையில் கரைந்து கொண்டிருந்த குழந்தையும் தன் அழுகையை நிறுத்தி தன் பொக்கை வாயை திறந்து கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் செயலை கண்டு அவனுக்கே பெரும் மறுட்கை சூழ்ந்தது.
“ஒஹ்! அங்கே உன் அப்பா அடி வாங்கியதும் உனக்கு இங்கே இவ்ளோ சந்தோசமா” என்று கூறி கன்னத்தில் அச்சாரம் பதித்தவன், இந்த சூழ்நிலையில் தானும் இடையிட்டால் வேறேதும் விபரீதம் நேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்பதை உணர்ந்து அவர்களே கையாளட்டும் என்ற எண்ணம் கொண்டு வாகனத்திலேயே அமர்ந்துவிட்டான்.
ரஞ்சனின் கேள்விக்கு... “ஆமாம் தப்புதான்” என்று தாளம் அடித்ததில் அரசியை பார்வையால் எரித்து கொண்டிருக்கும் போதே அடுத்த சவுக்கடி வார்த்தைகளை தெளித்தாள் வாணி.
“நியாயமா பார்த்தா செருப்பால் அடிச்சிருக்கணும் கையால் அடிச்சது தப்புதான்... அந்த தப்பை இப்போ நான் சரி பண்றேன்” என்றவள் தன் பாதணியை எடுக்க முயல்வதை சட்டென்று தடுத்து நிறுத்திய அரசி...
“வாணி அவசரப்படாதே முதலில் நிதானத்துக்கு வா” என்று அதட்டியபடி அவளின் கரத்தை இறுக்க பிடித்துக் கொண்டவள் பார்வையாலும் எச்சரிக்கை விடுத்திருந்தாள்.
“இனி இது போல எங்களை மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம்... அப்புறம் கொஞ்சமும் தயங்காம உங்களை உள்ளே தள்ளிருவோம்” என்றவளின் வார்த்தைக்கு அப்போதே தேவதைகள் ததஸ்து சொல்லியதோ என்னவோ... அவளின் பேச்சை கேட்டு ரஞ்சன் கையை ஓங்கிய சமயம், அர்ஜுன் அதற்கு மேல் பொறுக்காமல் வேகமாக இறங்க முற்படவும், காவல்துறை வாகனம் ஒன்று அங்கே நிற்கவும் சரியாக இருந்தது.
“என்னம்மா பிரச்சனை...?” என்று வாணி, அரசியிடம் வினவியபடி காவல்துறையின் அடையாளமான காக்கி ஆடையை அணிந்த காவலர் இறங்கினார்.
வாணி, அரசி இருவரும் முதலில் புரியாமல் பார்த்தாலும் ரஞ்சன் பார்வையில் இருந்த மிரட்சியை கண்டு... ‘மாட்டினியாடா மகனே...’ என்று மானசீகமாக கேலி செய்தனர்.
இரண்டு பெண்கள் மத்தியில் ஆணவன் மிகுந்த ஆவேசத்துடன் பேசியதை கண்டு ஏதோ தகராறு என்று மட்டும் அறிந்தவராக...
“என்னடா பொண்ணுங்ககிட்டே பிரச்சனை பண்ணிட்டு இருக்கிற?” என்று அதிகாரத்துடன் ரஞ்சனை அதட்டினார்.
அதில் ரஞ்சன் மிரண்டு போக உள்ளக்குள் உதறிக் கொண்டிருந்தது... அரசி சுதாரித்துக் கொண்டவளாக அவனிடம் கண்களால் ‘என்ன சொல்லிவிடவா?’ என்று வினவ... அதில் அவனுக்கு அச்சத்தில் முகம் ரத்த பசையின்றி வெளுத்துப் போக, முதுகுதண்டு சில்லிட்டு குளிர்ஜுரம் வருவது போன்று ஆகிப் போனது.
“கேட்கிறேனில்லை சொல்லுங்கம்மா என்ன பிரச்சனை?” என்று இப்போது காவலர் பெண்கள் புறம் திரும்பி வினவியதும்...
“இவர் இவளுடைய கணவன் சார்... ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை அதில் கோவிச்சுகிட்டு எங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னதும் நான் கூட்டிட்டு போக வந்தேன் உடனே இவர் கோபப்பட்டு இவளை கூட்டிட்டு போகக் கூடாதுன்னு எங்கிட்டே சண்டைக்கு வராரு” என்றதும் காவல் அதிகாரியின் மூளைக்கு அவள் திரித்து கூறுவது முற்றிலும் பொய் என்பதை மட்டும் கண்டு கொண்டாலும் அவர்களாக சட்டத்தை நாடாமல் தான் கையில் எடுக்க முடியாது என்பதை உணர்ந்தவர்...
“ஏன்யா உன் குடும்ப பிரச்சனை எல்லாம் வீட்டில் வச்சுக்கக்கூடாதா? இப்படி ரோட்டில் வச்சு பிரச்சனை பண்ணிட்டு இருக்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு? இதெல்லாம் சரியில்லை பார்த்துக்கோ, ஒழுங்கா அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போ” அவனின் செயலுக்கு கடிந்தபடியே அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, ரஞ்சனுக்கு போன உயிர் மீண்டது போன்று ஆகிப் போனது.
“பார்த்தீங்களா இப்போ மட்டும் நாங்க நினைத்திருந்தா நீங்க கம்பி எண்ண வேண்டியதா இருந்திருக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க” என்றதும் அவளின் பேச்சில் பல்லை கடித்தவன்...
“என் நேரம் உங்களுக்கெல்லாம் அடங்கணும்னு, உங்களையும் ஒருநாள் அடக்கறேன்... அன்னைக்கு தெரியும் நான் யாருன்னு” என்று குரோதத்துடன் சீறிவிட்டு சென்றவன் இதயதுடிப்பு அப்போதும் எகிறி குதித்து கொண்டு தான் இருந்தது. அவனை பெரிதும் சட்டை செய்யாத அரசி, வாணி இருவரும் பதிவு செய்திருந்த வாகனம் ரத்து செய்யப்பட்டிருக்க...
“ச்சேய்... இது வேற இப்படி பண்ணுது” என்று கடுப்புடன் அலைபேசியை கையாண்டவளை நெருங்கிய அர்ஜுன்...
“அரசி” என்றழைக்க, அவனை கண்ட இருவரும் சற்று நிம்மதியடைந்தனர்.
“அண்ணா நல்ல நேரத்துல நீங்க வந்தீங்க” என்று நடந்ததை அவனிடம் கூற வாய்திறந்த சமயம், அரசி அவள் கரங்களில் அழுத்தம் கொடுத்து தடுக்கவே சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டாள்.
ஆனால் இவர்களின் செயலை கவனித்துவிட்டவன்... “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நடந்தது எல்லாத்தையுமே நான் பார்த்துட்டு தான் இருந்தேன்... நீங்க புறப்பட்ட சரியா பத்தாவது நிமிஷம் பாப்பா அழுக ஆரம்பிச்சுட்டா... என்னால ஒரு கட்டத்துக்கு மேல சமாளிக்க முடியலை உங்க அண்ணன் கவனிச்சு கேட்டுட்டா உங்களை கடிச்சு துப்பிருவான், அது தான் சீக்கிரமே குழந்தையை தூக்கிட்டு உங்களை தேடி வந்தேன்”
“ரஞ்சன் பேசியதை பார்த்தேன்... அதுக்குள்ள போலீஸ் ஆபிசர் ஒருத்தர் இடையிடவும், நீங்க மட்டும் பேசுறது தான் சரின்னு ஒதுங்கி நின்னேன்” என்று கூறி முடிக்க...
“நாங்களே அண்ணனுக்கு மனசு மாறனும்னு தவிச்சுக்கிட்டு இருக்கிறோம் இதில் இவரு வேற எங்களை எரிச்சல் பண்ணிட்டு இருக்கிறாரு” என்று எரிச்சலுடன் கூறினாள் வாணி.
“பார்த்தேனே, அவர் உங்களை பேசியதையும் அதுக்கு அரசி மேடம் பதிலடி கொடுத்ததையும்” என்றவனின் முகம் சாதாரணமாக இருந்த போதிலும், அவன் கண்களில் இருந்த சிரிப்பையும், பாராட்டையும் அவள் மட்டுமாக கண்டுக் கொண்டு வெட்கத்தில் முகம் சிவக்க சிரம் தாழ்த்தினாள்... அவளின் அந்த நாணத்தை ரசித்தவனுக்குள் ஏற்பட்ட புதுவித நாளங்களின் உணர்வில் உள்ளம் கிளர்ச்சியடைவதை உணர்ந்தான்.
“சரி.. சரி.. சீக்கிரம் வீட்டுக்கு போகணும் வாங்க” என்றவன் அவர்கள் வாகனத்தில் ஏறியதும் ரஞ்சன் அடி வாங்கியதை ரசித்து சிரித்த வாணியின் குழந்தையை பற்றி கூறினான்.
“நிஜமாவா அண்ணா சொல்றீங்க...?”
“ஆமாம் வாணி... உனக்கு குழந்தை இருக்கிறதும் ஒருவகையில் நல்லது தான்... ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் உன் பொண்ணு அவங்க அப்பாவை கேள்வி கேட்கத்தான் போகிறாள்... அன்னைக்கு இருக்கு அவனுக்கு” மனதில் எதையோ நினைத்தபடி கூறியிருந்தான்.
“ஆனால் இதெல்லாம் நடக்குமா அண்ணா?” என்று துயரம் தோய்ந்த குரலில் ஏக்கத்துடன் கேட்டவளை கண்டு மனம் கசிந்து விட அதில் மனமுருகியவன்..
“நடக்கும் நிச்சயம் நடக்கும்... உன் ரஞ்சன் வீம்புக்காக வேஷம் போடுகிற மனித ஜந்தும்மா அவனை மாற்ற உன் பெண்ணால் தான் முடியும்” என்று ஆணித்தரமாக கூறினான்.
“எப்படி இவ்ளோ உறுதியான சொல்றீங்க?” என்று வினவியவள் அரசி.
“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”
“சரி தான் ஆனால் அது மனுஷனா இருக்கிறவனுக்கு... உயிர் மேல பாசமும், அன்பும், இரக்கமும் இருக்கிறவனுக்கு”
“ரஞ்சனுக்கு இப்போ இல்லாம இருக்கலாம், ஆனால் அவனுக்குள் அதை நுழைய வைக்கிறது சுலபம்” என்றவன் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
கலாதரன் சரியாக ஒன்பது மணி அளவில் நீதிமன்றம் செல்ல கிளம்பி தயாராகி வந்தவனை அர்ஜுன், அரசி, வாணி மூவரும் ஒன்றாக திரண்டு சூழ்ந்தனர்.
“அண்ணா தயவு செய்து என் வாழ்க்கையை காப்பாற்றணும்னு உன் வாழ்க்கைக்கு சூனியம் வச்சுக்காதேன்னா... நீ அண்ணி, குழந்தையோட தான் ஊர் திரும்பனும்... அவங்க கூட நீ சந்தோசமா வாழணும்” மனவலியுடன் மன்றடினாள் வாணி.
அவளின் வார்த்தைக்கு எந்த எதிரொலியும் இல்லாமல் மெளனமாக நின்றிருந்தவனை கண்ட அரசிக்கு, அவள் பேச வேண்டிய வார்த்தை தர்ணாவில் ஈடுபட்டுவிட தயவுடன் அர்ஜுனை நோக்கினாள், அவனோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் இமைமூடி திறந்து ஆறுதல் அளித்தான்.
“நீ என்னடா இன்னும் அசமஞ்சமா நின்னுட்டு இருக்கிற போய் காரை ரெடி பண்ணு நான் ஒரு கால் பேசிட்டு வரேன்” என்று அதிகாரமாக கூறிவிட்டு நகர்ந்திருந்தான் தரன்.
கலாதரன் நகர்ந்ததும் அரசி அவனை வியப்புடன் நோக்க அதை புரிந்தவன்... “என்னடா முந்தின நாள் தான் சட்டையை பிடிச்சு நீ யாருன்னு கேட்டான், இப்போ என்னமோ அதிகாரம் பண்ணுறானேன்னு பார்க்கறியா?” அவள் மனதை படிப்பிதவானாக கேட்டவனை ஆம் என்பதாக தலையசைத்தாள்.
“நான் தான் அப்போவே சொன்னேனே, உன் அண்ணன் கோபத்தில் பேசுறேன்னு... குடிகாரன் பேச்சும், கோபக்காரன் பேச்சும் தெளிஞ்சா போச்சு அவ்ளோ தான்” என்று கூறி இமை சிமிட்டினான்.
“எல்லாம் சரி தான் இன்னைக்கு நாள் நமக்கு சாதகமா அமஞ்சிருமா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு... நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நல்லபடியா நடந்திருமா?”
“நடக்கும் அரசி... நம்பு... நம்பிக்கை தான் வாழ்க்கை... அப்படி இல்லைன்னா என் கன்னம் சிவந்திருமே” என்று சூழ்நிலையை சகஜமாக்க கூறியவனின் சொல்லில் மறைந்திருந்த அர்த்தத்தை புரிந்து நாவை கடித்துக் கொண்டாள்.
“ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க”
“இல்லை நாங்களும் கோர்டுக்கு வரோம்”
“எப்படியும் இன்னும் ரெண்டு நாளையில் கிளம்ப வேண்டிய சூழ்நிலை இருக்கும்... இன்னும் நீங்க வீட்டுக்கு போனா அங்கே வேற சூழ்நிலை சமாளிக்கனும்” என்று கூறியவனின் வார்த்தையில் அடுத்தகட்ட பிரச்சனையை நினைத்து சித்தம் திகிலடைந்தது.
“பரவாயில்லை நாங்களும் வரோம் இங்கிருந்து பதட்டத்திலேயே பயந்து இருக்கிறதுக்கு கூட வந்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறோம்” என்று பிடிவாதமாக நின்றவர்களின் நிலையையும் புரிந்துக் கொண்டவன்...
“சரி வாங்க... ஆனால் நாங்க முன்னாடி போயிடுறோம் நீயும், வாணியும் கேப்ல வந்திருங்க, அப்போ தான் உங்க அண்ணன் தடுக்க வழி இருக்காது” அவனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு அப்படியே செயல்படுத்தினர்.
அர்ஜுன், கலாதரன் இருவரும் புறப்பட்டு நீதிமன்ற வளாகத்தை அடைந்திருந்தனர். கலாதரன் இறங்கும் முன் அவன் கைபிடித்து தடுத்திருந்த அர்ஜுன்...
“டேய் நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சது, இனி நடக்கப் போகிறதை யோசி... உன் வாழ்க்கை, உன் தங்கை வாழ்க்கை, ரெண்டு பேரும் வாழ்க்கையும் உன் கையில் இருக்கு... நீங்க நல்லா வாழணும், நீ தான் அதுக்கு அடித்தளம், அதை யோசிச்சு நல்ல முடிவா எடு” என்றவனின் சொல்லிற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாது சென்றவனை ஆயாசத்துடன் பார்த்திருந்தான்.
கலாதரன் வழக்குரைஞர் அலுவலகம் சென்று சம்யுக்தாவுக்காக காத்திருக்கலானான். அரைமணி நேரம் கடந்த பின்பே சம்யுக்தா அன்பழகனுடன் பேசியபடி வருவதை கண்டவன், அவள் கையில் கோப்பு மட்டும் இருக்கவே குழந்தை இல்லாதது அவன் மனதை நெருடியது... அவளுக்கு பின்னால் யாரேனும் சுமந்து வருகிறார்களா என்று அவனையும் அறியாது அவன் விழிகளால் அலசினான்.
இருவரும் அவனை சமீபத்திருக்க, அப்போதும் தன் தேடுதலை தொடர்ந்தவனுக்கு குழந்தையை யார் கையாளுகிறார்களோ என்று பெருத்த விசனம் ஏற்பட்டது... அதை அனுபவம் வாய்ந்த அன்பழகன் பார்வைக்கு தட்டுப்பட்டிருக்க, அதை கவனமாக குறிப்பிடுத்துக் கொண்டவருக்கு தன் செயல் நிச்சயம் வெற்றி என்று மனதிற்குள் ஊர்ஜிதம் செய்து கொண்டார்.
அவனையே வைத்த கண் வாங்காமல் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த அன்பழகன்... “என்ன மிஸ்டர்.கவின்கலாதரன் வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்று இயல்பாக விசாரித்தார்.
“இல்லை சார் வந்து கொஞ்சம் நேரம் தான் ஆச்சு” என்றவன் அப்போதும் அவன் தேடுதலை நிறுத்தாது தொடர்ந்து கொண்டிருந்தான்.
“என்ன மிஸ்டர்.கவின் எதையோ தேடுவது போல இருக்கீங்க? உங்க சார்பாக யாரும் வர வேண்டுமா” அவரின் கேள்வியில் சுதாரித்தவன் சாதாரணமாக இருக்க மனதை இறுக்கிக் கொண்டவன்...
“அதெல்லாம் இல்லை... மேடம் டைம் ஆகிருச்சுன்னு அவசரமா வந்துட்டாங்க போல... அவங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா முடிச்சுட்டே வரலாம்... குழந்தையை கவனிக்கணும் என்றாலும் பரவாயில்லை நான் அதுவரைக்கும் வெயிட் பண்றேன்” என்று இறுதியில் அழுத்தம் கூறி முடித்தவனின் பேச்சில் இருந்த கரிசனத்தின் பின்புலத்தில் அவனுடைய உரிமை தென்பட்டத்தை இருவருமே கண்டு கொண்டனர்.
அவன் பேச்சில் இருந்த அக்கறை தொனியை புரிந்த சம்யுக்தாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது... ‘பேசுறதையெல்லாம் பேசிட்டு இப்போ பெத்த பிள்ளையை நினைச்சு ரத்தம், ஆவி எல்லாம் துடிக்குதோ?’ என்று நிந்தித்து சிறிதும் வெளிகாட்டிக் கொள்ளாமல் பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டவள், அவனையே அமர்த்தலாக பார்த்துக் கொண்டிருந்தாள்... அந்நேரம் அன்பழகனுக்கு முக்கிய அழைப்பு வரவே...
“சம்மும்மா இன்னைக்கு இன்னொரு கிளைண்ட்டோட கேஸ்க்கு தீர்ப்பு வருது நான் அதை முடிச்சுட்டு தான் இனி பார்க்க முடியும் நீங்க ரெண்டு பேரும் மிசஸ்.சகுந்தலாதேவியை பாருங்க” என்று நகரவும் அவளுக்கு கிடைத்தது வாய்ப்பு என்று அவனை தீர்க்கமாக நோக்க, தானும் சளைக்காது அவளை எதிர்கொண்டவனிடம்...
“ரொம்ப தேங்க்ஸ்” என்று குதர்க்கமாக மொழிந்தாள்... அவளின் நன்றியில் ஏதோ குதர்க்கம் இருப்பதை அறிந்து கண்கள் இடுக்கி பார்த்தவன்...
“எதுக்கோ?” என்க...
“அப்பா யாருன்னே தெரியாத குழந்தையை பற்றிய உங்க அக்கறையும், கரிசனமும் என்னை மெய்சிலிர்க்க வைக்குது” சற்றும் அலட்டிக் கொள்ளாது குத்தீட்டி வார்த்தையை இயம்பியவளின் இலக்கு சிறிதும் தவறாமல் அவன் நெஞ்சை குறிபார்த்து தாக்கி சுருக்கென்று தைத்ததில் துடித்துப் போனான்.
அவன் விழிகளில் ஓடிய செவ்வரியை கண்டவள் சிறிதும் அசையாமல் கல்லை போன்ற கடினத்துடன் நின்று விட்டிருந்தாள்.
இருவரும் பார்வையால் கத்திச் சண்டை யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைத்தது ஒரு குரல்... “எக்ஸ்க்யூஸ் மீ சார்... சகுந்தலாதேவி மேடமுடைய கிளைண்ட் நீங்க தானே?”
“ம்ம்ம்... ஆமாம்”
“மேடம் உங்களுக்காக தான் வெயிட் பன்றாங்க” என்றதும் இருவரும் சுதாரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
சகுந்தலாதேவி இருவரிடமும் மனுவை பெற்று சற்று நேரம் அதை கருத்தாக பார்த்தவர் தன் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தார்.
“ரெண்டு பேரும் லவ் மேரேஜா, அரேஞ் மேரேஜா?”
அவரின் கேள்விக்கு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் இறுக்கத்துடன் பார்த்து விட்டு... “லவ் மேரேஜ்” என்று இறுகிய குரலில் ஒரு சேர பதிலளித்தனர்.
“ம்ம்ம்... லவ் மேரேஜ் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு?”
“பத்து மாசம்”
“உங்கள் குழந்தைக்கு எத்தனை மாசம் ஆகுது?”
“மூணுமாசம்” அனைத்துக்குமே இருவரும் ஒரு சேர தான் பதிலளித்தனர்... அதை எல்லாம் குறிப்பாக கவனித்துக் கொண்டவருக்கு எங்கோ இடித்தது.
“சரி ரெண்டு பேரும் விவாகரத்து செய்வதில் உறுதியா இருக்கீங்களா?”
“ம்ம்ம்...” என்ற பரிபாஷை கலாதரனின் பக்கம் மட்டுமே எதிரொலிக்க சுதாரித்த வழக்குரைஞர்...
“என்ன மிசஸ்.சம்யுக்தா நீங்க எதுவும் சொல்லலை” என்றதும்...
“எனக்கு விவாகரத்துக்கு சம்மதமில்லை” என்று குண்டை தூக்கி வீச கலாதரன் மனைவியை திகைத்து பார்த்திருந்தான்.
“வாட் சம்மதமில்லையா?”
“எஸ் மேடம்! எனக்கு விவாகரத்துக்கு சம்மதமில்லை... எனக்கு அவர் கூட வாழணும்” என்று தீர்மானமாக கூறியவளின் வார்த்தையில் உறுதி தெரிந்தது. அதுவரை ஒற்றுமையாக பதிலளித்தவர்கள் திடிரென்று வேறுபாடாக கூறியதை கவனமாக சேகரித்து வைத்துக் கொண்டவர் மேலும் இருவரிடமும் அவரவர்களின் பின்னணியை பற்றி விசாரித்தார்.
“மிஸ்டர்.கவின்கலாதரன் உங்க மனைவி நீங்க கோரிய விவாகரத்தை அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க நீங்க என்ன சொல்றீங்க”
“நோ... என் முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனக்கு விவாகரத்து வேணும்” என்று அவனும் தீர்மானமாக கூறினான். இருவரின் எதிர்மறை பதிலை கண்டு யோசித்தவர்...
“உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு மணி நேரம் டைம் தரேன் ரெண்டு பேரும் ஒரு மனதாக பேசி முடிவெடுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர்... இருவரும் அருந்த பலச்சாரையும் அனுப்பி வைத்திருந்தார்.
சம்யுக்தா விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்ததையொட்டி அவளை கடுமையாக முறைத்தபடி... “ஏன் விவாகரத்து தர மறுக்கிற?” என்றவனை பார்வையால் வெட்டினாள்.
“வாழ்க்கை ஒன்றும் நீங்க செய்கிற பொம்மலாட்டம் கலை தொழிலை போல, உங்க கையால் ஆட்டி வைக்கும் கைப்பாவை இல்லை”
“..........” அவளின் வார்த்தையை கேட்டு அனல் வீசும் விழிகளால் துளைத்துக் கொண்டிருந்தவனை கண்டு சிறிதும் சட்டை செய்யாதவளாக அடுத்த அஸ்திரத்தை வீசினாள்...
“குழந்தைக்கு அப்பா யாரு என்கிறதுக்கு தானே சாட்சி கிடையாது? ஆனால் எனக்கு புருஷன் நீங்க தான் என்கிறதுக்கு சாட்சி இருக்கே” என்று மிடுக்காக தோரணையுடன் கூறியவளின் வார்த்தை சுருக்கென்று உரைத்த கணமே ஆவேசத்தில் அவளை அடிக்க கரத்தை ஓங்கியவன் சூழ்நிலை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவனின் செயலை கண்ட சம்யுக்தாவிடம் அதிர்ச்சியோ, கோபமோ தென்படாமல் தீட்சண்யம் மிதந்ததை கண்டறிந்தான்.
“அது மாதிரி இனி பேசாதே” என்றவனின் குரல் கதனத்தில் நடுங்கியது.
“ஏன் அந்த ஏக போக உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா?” என்று அமர்த்தலாக வினவியவளை கண்டு சீற்றத்தில் பற்களை நெறித்தப்படி...
“வேண்டாம் இப்படி வார்த்தைகளால் வாள் வீச்சு நடத்தி என் கோபத்தை கிளப்பாதே... நான் தானே மகாபாதகன், ஏமாற்றுக்காரன் அப்படியே இருக்கட்டும், ஒழுங்கா எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடு... தேவையில்லாத பேச்சுகளையும் தவிர்த்துவிடு”
“முடியாது! நான் டிவோர்ஸ் கொடுக்க முடியாது... நிச்சயம் நான் கொடுக்கவும் மாட்டேன்” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தாள்.
அவளை அழுத்தமாக பார்த்தவன்... “சோ என்னுடன் வாழணும் அதில் நீ உறுதியா இருக்கிற?” என்று வினவியவனின் பேச்சில் சூசகம் மறைந்திருப்பதை உணர்ந்தாலும் அதை பெரிதும் லட்சியம் செய்யாமல்...
“நீங்க தான் என் புருஷன்” என்று வார்த்தையை விட்டிருக்க, அவன் எதிர்பார்த்த நூல்முனை கிட்டிய இறுமாப்புடன் பார்த்தவன்...
“அப்போ பொண்டாட்டிக்கான கடமைகளை நிறைவேற்றனும் பரவாயில்லையா?” என்றதும் தானே அவனுக்கு நூல்பிடித்து கொடுத்திருப்பதை உணர்ந்தவள் வெறுப்புடன் நோக்கி...
“அதானே பார்த்தேன்” என்று ஒரு மார்க்கமாக பார்த்து இகழ்ச்சியில் முகத்தை சுளித்தவள்...
“இந்த ஆண்களுக்கு முக்கிய தேவையான விஷயம் இது ஒண்ணு தானே... எனக்கு என்னன்னா நான் யார் பிள்ளையையோ பெற்றவள் ஆச்சே இருந்தும் உங்களுக்கு ஆட்சேபம் இல்லைன்னா, எனக்கும் ஆட்சேபம் இல்லை” அவனுக்கு சளைக்காத வகையில் பதிலாளித்ததில் கண் சிவந்தான்.
“இதுக்கு நான் பதில் சொல்லிருவேன்... ஆனால் கொஞ்சம் கொச்சையா, அசிங்கமா இருக்கும் பரவாயில்லையா?” கடிந்த பற்களுகிடையே வார்த்தைகளை துப்ப, அதில் உட்பொருள் பொதிந்திருப்பதை புரிந்து சித்தம் தூக்கி வாரிப்போட இதழ்கள் பசையில்லாமல் மூடிக் கொள்ள மௌனியானாள்.
அவர்களின் மௌனம் சில நிமிடங்கள் நிலவ அதை கலைத்தது கலாதரனின் குரல்... “என்னை விவாகரத்து செய்துட்டு உன் வீட்டில் சொன்னது போல் அந்தஸ்தில் உயர்ந்த மாப்பிள்ளையாய் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ... நானும் எனக்கு தகுந்த வாழ்க்கையை அமைச்சுக்கிறேன்” தீர்மானமாக கூறியதில் அவளின் விவாகரத்து எதிர்ப்புக்கான மனவுறுதிபாடு மேலும் வலுவுற்றது.
“கண்டிப்பா நான் விவாகரத்து தர முடியாது பார்க்கலாம் நீங்களா நானான்னு?” அவளின் வார்த்தைக்கு தானும் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்த சமயம்...
“என்ன ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்துட்டீங்களா?” என்றபடி நுழைந்தார் சகுந்தலாதேவி... கலாதரன் மனைவியிடம் கூற வந்த வார்த்தைகள் அவரின் இடையீட்டில் தடைபட்டு விடவே, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைக்கு ஆட்பட்டவன் அவன் வாய்திறக்க செல்ல...
“எனக்கு விவகாரத்தில் ஈடுபாடில்லை, என் வாழ்க்கை அவருடன் தான்” அவனை அமர்த்தலாக பார்த்தபடியே உறுதியாக கூறியிருந்தாள். அவளின் பதிலில் அவளை முறைத்தபடி கடுப்பில் பற்கள் தான் நெரித்து நொறுங்கியது.
“எனக்கு விவாகரத்து தான் வேண்டும் அவளுடன் சேர்ந்து வாழ்வதில் உடன்பாடில்லை” தானும் எதிர்ப்பு தெரிவிப்பதில் உறுதியாக இருந்தான். இவர்களின் வார்த்தை போரில் வேறு யாரேனும் என்றால் நிச்சயம் தலையால் தண்ணி குடித்திருப்பார்கள் தான், ஆனால் சகுந்தலாதேவி இது போன்ற பல விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு இது புதிதாக அல்லாமல் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கவே அவர்களை சாதுர்யமாக கையாண்டார்.
“சரி இன்னும் ஒரு வாரம் டைம் தரேன்... ரெண்டு பேரும் மனசு ஒத்து ஒருமுடிவா எடுக்கணும்... ஒரு வாரத்திற்கு பிறகு நீங்க என்ன முடிவெடுத்திருந்தாலும் சரி நான் கோர்ட்ல ஜட்ஜ்மென்ட்க்கு ப்ரோசீட் பண்ணிருவேன்” என்று கூறியவர் இருவரையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுக்கும் படி பல அறிவுரைகளுடன் வலியுறுத்தி அனுப்பி வைத்திருந்தார்.
இவர்களின் சம்பாஷணைகளை அர்ஜுன் ஏற்பாடு செய்திருந்த தூதனால் அறிய வந்த மூவருக்கும் ஆகாயத்தை சூழ்ந்த முகிலினம் போன்று வியாகூலம் வியாபித்திருந்தது.
ஒரு வாரம் கடந்த நிலையில் சம்யுக்தா, கலாதரனின் விவாகரத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்க நீதிபதியின் இறுதி தீர்ப்பு வெளியானது.
சுவடுகள் தொடரும்....
**************************************
வணக்கம் நட்பூக்களே...“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-10 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
டாக் செய்யவேண்டும் என்றால் கீழே கமெண்ட் செய்யவும் மக்களே.
காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" - கருத்துத் திரி
வணக்கம் நட்பூக்களே... "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" கருத்துகளை இங்கே பகிரவும் மக்களே. நட்புடன் காருராம்.
www.srikalatamilnovel.com
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels
நட்புடன்
காருராம்