அத்தியாயம் 6
“தேவ்.. தேவ் ஆனந்த்” ஆச்சரியம், அதிர்ச்சி என்ற பற்பல உணர்வுகளின் வெளிப்பாடாக உச்சரிக்கப்பட்ட பெயருக்கு உரியவன், இதுநாள் வரை ஆபீஸ் ஊழியராக இருந்த தோற்றம் இல்லாமல் தாடி அற்ற தாடையும் முறுக்கிவிடப்பட்ட மீசையும் உடலுடன் ஒட்டிய காக்கி உடையும் அதனூடாக வெளிப்பட்ட தசைக்கோளங்களும் என கம்பீரமாக நடந்து வந்தவனை புன்னகை முகமாக வரவேற்ற தங்கள் எம்டியை வியப்பாக பார்த்தவர்களுக்கு இதில் ஏதோ உள்விஷயங்கள் அடங்கி இருக்கின்றது என்பது புரிந்து போனது..
ஆனால் வாய் திறந்து எதனையும் கேட்டுவிட முடியாத நிலையை உணர்ந்து எல்லோரும் அங்கு நடப்பவற்றை அமைதியாக வேடிக்கை பார்க்கலாகினர்..
“திஸ் இஸ் தேவ் ஆனந்த்.. உங்க எல்லோருக்கும் இந்த கம்பெனியின் ஊழியராக அறிமுகமானவர்.. ஆனால் சார் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் கமிஷ்னர், கூடவே என் காலேஜ் ப்ரெண்ட்டும்.. நம்ம ஆபீஸில் நடக்கும் வினோத திருட்டை பற்றி சொல்லி அதனை கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணமுடியுமான்னு கேட்டேன்.. அவரும் ஒத்துக்கிட்டு சீக்கிரமே கல்பிரிட் யாருன்னு கண்டுபிடிச்சுட்டார்.. அது எப்படின்னு அவரே விளக்குவார்” எனக் கூறிவிட்டு அமர, எல்லோரையும் ஆராயும் பார்வை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தான் தேவ் ஆனந்த்..
“ஹாய் ப்ரெண்டஸ்.. நான் போலீஸ் என்கிறது உங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.. ஆனால் எங்களுக்கு இதைத்தவிர வேறு வழி இல்லையே.. வேலை பார்க்கிற இடத்தில் நீங்க விசுவாசமாக இருந்திருந்தால் நாங்க ஏன் இந்தமாதிரி செய்யப்போகிறோம்” எனக்கூறி தோள்களை குலுக்கியவனின் பாவனை முற்றிலும் மாறிப்போனது..
“கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கூட இருந்தே குழி பறிக்க ரொம்ப தைரியம் தான்.. பட், அதெல்லாம் இனிமேல் இந்த கம்பனியில் நடக்காது” என்றவனின் ஓரப்பார்வை, குறிப்பிட்ட நபரின் நடவடிக்கைகளை ஆராய்ந்து வியர்த்து வழிந்த முகத்தையும் இருக்கையில் நெளிந்தபடி அமர்ந்திருந்ததையும் கண்டு இதழ்கள் நமட்டு புன்னகை புரிந்தது..
“ஓகே.. உங்க பழைய ஜிஎம்மை வேலை விட்டு தூக்கலை.. எங்க பிளானுக்காக வீட்டிலிருந்து வேலை பார்த்தார்.. மிஸ்டர் தேவசகாயம்.. உள்ளே வாங்க” குரலை உயர்த்தி அழைத்த அழைப்பிற்கு கதவை திறந்து உள்ளே வந்தார் அவர்..
“இந்த கம்பெனியில் சில கான்பிடன்ஷியல் டீடெயில்ஸ் தவிர மற்றவை பற்றி எந்தவித ஒளிவு மறைவும் இல்லை.. அதுதான் இப்போ இந்த நிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கு” பேச்சு பேச்சாக இருந்தாலும் அந்த ஹாலில் அமர்ந்திருந்த ஒவ்வொருவர் பின்னாலும் மெல்ல நடக்க அங்கிருந்த அனைவரின் இதயமும் தாளம் தப்பி துடித்தது.. இவர்தான் குற்றவாளி என முதலிலேயே சொல்லாது அனைவருக்கும் ஆர்வம் ஏற்பட பேசினாலும் குற்றவாளியின் இரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டிருந்தான்..
“அந்த குற்றவாளிக்கு அவன் செய்கிற வேலைக்கு லட்சக்கணக்கில் ஆதாயம் கிடைக்கவும் சாரும் எதையும் யோசிக்காமல் ருசி கண்ட பூனை போல் மறுபடியும் மறுபடியும் டென்டர் அமௌண்ட் பற்றி சொல்லியிருக்கார்.. இதில் என்ன ஸ்பெஷல்னா இத்தனை வருஷத்தில் சார் பண்ணுற தில்லு முல்லு அவர் ப்ரெண்ட்சுக்கு தெரியாமல் பார்த்துக்கிட்டது தான்” என்றபடி நடந்தவன், தன் முன்னால் அமர்ந்திருந்தவரின் தோளில் கை வைத்து,
“நான் சொன்னதில் அது யாருன்னு கெஸ் பண்ண முடியுதா??” என கேட்க, தேவ் ஆனந்தின் தொடுகையிலும் கேள்வியிலும் பதறியடித்து எழுந்த அந்நபர்,
“என்கிட்ட கேட்டால் எனக்கு எப்படி தெரியும் சார்” முகவாயை துடைத்தபடி திக்கி திணறி உரைத்தவனை கூர்ந்து பார்த்தபடி,
“அப்படியா சார்.. உங்க மொபைலை காட்ட முடியுமா??” என கேட்கவும் கை நடுங்க தனது மொபைலை எடுத்து கொடுக்கவும் அதனை நன்றாக திருப்பி திருப்பி பார்த்த தேவ்,
“மிடில் கிளாஸ் பேமிலியில் இரண்டு தங்கைகளுக்கு அண்ணனா இருக்கிற சாரின் சம்பளம் மட்டும் தான் அந்த குடும்பத்தின் ஒரேயொரு வருவாய்.. அப்படி கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உள்ளவர் கையில் லேட்டஸ்ட் ஐஃபோன்” என உதட்டை பிதுக்கியவன்,
“எப்படி சார்??” என கேட்கவும் மென்று விழுங்கியவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை..
“அது வந்து சார்” என இழுக்கவும்,
“வந்தும் இல்லை போயும் இல்லை.. உன்னைப்பற்றிய டீடெயில்ஸ் எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்றவன், அவனின் காலரை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு எம்டியின் அருகில் நிறுத்த, தேவின் செயலில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்துபோய் எழுந்து நிற்க, கையை காட்டி அனைவரையும் அமர பணித்தவன்,
“உங்க அதிர்ச்சி எனக்கு புரியுது, ஆனால் சில விஷயங்களை தள்ளிப்போடக்கூடாது தானே.. இந்த ஆபிஸின் எம்டி முதல் ஸ்டாப்ஸ் வரை தலையால் தண்ணீர் குடிக்க வைத்த ஆள் இவர்.. இன்னும் சொல்லப்போனால் எல்லோரையும் அடிமுட்டாளாக்கிய அதி புத்திசாலி” என நக்கல் குரலில் உரைக்க, அந்த ஹாலில் அமர்ந்திருந்த அனைவராலும் இதை ஜீரணிக்கவே முடியவில்லை..
ப்ரெண்டாக, சகோதரனாக, மகனாக என பலதரப்பட்ட உறவுகளாய் அத்தனை நம்பினர்.. அவனை ஒருநொடி கூட இவன் அதை செய்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை அவர்கள்.. எல்லோருமே திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் அமர்ந்திருக்க, சற்று வயதில் மூத்தவர் ஒருவர் எழுந்து,
“இதை செய்தது நீன்னு என்னால் இன்னும் நம்பமுடியவில்லை விமல்.. உன்னை மகனா நினைத்ததற்கு நல்ல தண்டனை கொடுத்துட்ட” ஆதங்கத்துடன் கூறிவிட்டு அவர் அமர்ந்து கொள்ள, இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான விமல் தான் மாட்டிக்கொண்ட அவமானத்திலும் அடுத்து என்ன ஆகுமோ என்ற பயத்திலும் தலை குனிந்தபடி நிற்க, வேறு ஒருவர் எழுந்து,
“இவன்தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க சார்??” என கேட்டார்..
“முதலில் எனக்குமே அது யார், எப்படின்ற குழப்பம் இருந்தது.. மூன்றாவது டென்டர் போனபிறகு தான் எப்படி கான்பிடன்ஷியலான கோட் லீக்காகுதுங்கிறதை கண்டுபிடிச்சேன்” என்றவன், அனைவரின் முகத்திலும் அது எப்படி என்பதை அறியும் ஆர்வம் இருக்கவும் நேராக விஷயத்திற்கு வந்தான் தேவ் ஆனந்த்..
“பொதுவாக இங்கே உள்ள ஸ்டாஃப்ஸ் ரூம்ஸ் கண்ணாடியால் உருவானது.. மேனேஜர் ரூமும் அப்படியானது தான்.. அந்த ரூமின் சுவரில் அதாவது மேனேஜர் உட்காரும் சீட்டுக்கு பின்னால் ஒரு முகம் பார்க்கிறமாதிரி கண்ணாடி இருக்கும்.. கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும் அது அந்த கண்ணாடியில் ரிஃப்பிளக்ட்டாகும்.. அதைத்தான் இந்த விஷயத்தில் விமலும் பண்ணியிருக்கிறார்.. எப்படின்னு கண்டுபிடிச்சிட்டாலும் யாருன்னு கண்டுபிடிக்கிறதில் தான் இத்தனை நாள் இழுத்துடிச்சு.. டென்டர் பற்றி ஸ்டாஃபிற்கு சொல்லப்பட்டதில் இருந்து எந்த நேரம் மேனேஜர் கோட் டைப் பண்ணுவாருன்னு கண்டுபிடிச்சு அந்த நேரம் தன்னோட இடத்தில் இருந்தே அந்த கண்ணாடியில் தெரியும் ரிஃப்பிளைக்ட்டை வீடியோ எடுத்துடுவார்.. அந்த வீடியோவில் டென்டர் அமௌன்ட் கிளியராகவே தெரியும்.. அதன்பிறகு என்ன அந்த வீடியோவை எதிரி கம்பனி முதலாளிக்கு அனுப்பிடுவார்.. இதுதான் விமல் நூதனமாக திருடிய முறை” என விமல் எப்படி இந்த திருட்டை செய்தான் என்பதை விளக்கியவன்,
“விமலோட பாங்க் அக்கௌன்ட்டில் குறிப்பிட்ட திகதிகளில் வந்த பணம் பற்றியும் அவரோட கால் ஹிஸ்டரியில் அந்த கம்பனி எம்டியுடன் குறிப்பிட்ட நாட்களில் பல தடவைகள் பேசியதையும் தரோவா செக் பண்ணியதில் இவர்தான் குற்றவாளின்றது உறுதியாச்சு” என விளக்கி முடித்தவன், எம்டியின் பக்கம் திரும்பினான்..
“இவன் மேல் கம்பளைன்ட் கொடுக்கிறீங்களா மேடம்??” எனக் கேட்க, பெருமூச்சு ஒன்றுடன் எழுந்தவள்,
“கண்டிப்பாக கொடுக்கிறேன் சார்.. இவரின் குடும்ப கஷ்டத்திற்காக பார்த்து எதுவும் செய்யாமல் இருக்க நாங்க தர்ம சத்திரம் நடத்தலை” என கடுமையாக சொல்லவும் திருப்தியாக புன்னகைத்தவன்,
“நல்ல முடிவு” என்றவன், தனது மொபைலை எடுத்து வெளியில் நின்றிருந்த கான்ஸ்டபிளை அழைத்து விமலை அனுப்பியவன்,
“ஓகே நான் கிளம்பவா??” என கேட்க,
“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என அவனிடம் சொன்னவள், தனது ஊழியர்களை பார்த்து,
“நாளையில் இருந்து இந்த ஆபீசில் சில ரூல்ஸ் நடைமுறையில் வருது.. அது என்னவென்ற சர்க்குலர் நாளைக்கு உங்க கையில் கிடைக்கும்.. இப்போ எல்லோரும் போய் வேலையை பாருங்க” எனக்கூறி அனுப்பிவிட்டு தேவின் பக்கம் திரும்பியவள்,
“உட்கார் தேவ்” இருக்கையை காட்டவும் தொப்பியை கழற்றி மேசையில் வைத்துவிட்டு அவள் காட்டிய இருக்கையில் அமர, தானும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
“இத்தனை மாதம் உன் வேலையை விட்டிட்டு எனக்காக செய்த ஹெல்ப்புக்கு தேங்க்ஸ் தேவ்”
“ஹேய், என்ன மூணாவது மனுஷனுக்கு சொல்வது போல் தேங்க்ஸ் சொல்கிற” என உரிமையாக கோவிக்க, இரு கைகளையும் உயர்த்தி மெல்ல நகைத்தவள்,
“தேங்க்ஸ் வாபஸ்.. ஓகே??” எனக்கேட்க,
“ஓகே ஓகே.. லைஃப் எப்படி போகுது ஃபயர் மேடம்??” என கேட்டான்..
“ஹா ஹா காலேஜ் டைமிற்கு பிறகு இப்போதான் இந்த பெயரை கேட்கிறேன்”
“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை”
“நல்லா இருக்கேன் தேவ்.. நீ எப்படி இருக்க??”
“தனிக்காட்டு ராஜாவா நல்லா இருக்கேன்”
“சரிதான்.. கல்யாண சாப்பாடு எப்போ போடப்போற??”
“பொண்ணு ஓகே சொன்னதும் போட்டுடலாம்” என்றவனை ஆச்சரியத்துடன் நோக்கி,
“என்ன சொல்லுற தேவ்??” என கேட்டாள்..
“ஆமா ஃபயர்.. என் மனசுக்குள் ஒருத்தி புகுந்து ரொம்ப படுத்துறா.. என் நேரம் அதை வெளியிலோ அவள் கிட்டவோ என்னால் சொல்லமுடியல”
“ஏன், என்னாச்சு??”
“காலம் கடந்துடிச்சு.. அதை விடு.. நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற??” தேவ் கேட்ட கேள்வியில் அதுவரை இருந்த இலகுத்தன்மை போய் முகமும் மனதும் இறுகியவள்,
“உண்மை தெரிந்தும் இப்படி கேட்கிற.. அதற்கு இனிமேல் வாய்ப்பில்லை தேவ்” எனவும்
“ஃபயர்” வேதனையுடன் அவன் அழைக்கவும் தன்னை மீட்டுக்கொண்டவள்,
“அதைவிடு தேவ்.. இந்த சன்டே நீ ஃப்ரீயா??” கேட்கவும் அவளைப்போலவே உணர்வுகளை மறைத்தவன்,
“ஃப்ரீதான்.. எதற்கு கேட்கிற??” என கேட்டான்..
“உனக்காக சின்ன பார்ட்டி.. எந்த ஹோட்டல், என்ன டைம் என்றதை அப்புறம் டெக்ஸ் பண்ணுறேன்” எனவும் தன் கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன்,
“ஓகே ஃபயர்.. வந்துடுறேன்.. இப்போ எனக்கு டைம் ஆகிடிச்சு, நான் கிளம்புறேன்” என்றவன், பலத்த யோசனையுடனேயே விடைபெற்று சென்றான்..
****************************
“இன்னிக்கும் சப்பாத்தியா??” முகத்தை சுழித்தபடி கேட்ட சௌந்தரியை நிமிர்ந்து பார்த்த மங்கை,
“ஏன், சப்பாத்திக்கு என்ன நன்றாக தானே இருக்கு” புரியாதது போல் கேட்டபடி சப்பாத்தியை குருமாவில் தோய்த்து உண்ணவும் அசூசையுடன் மகளை நோக்கியவர்,
“வாரத்தில் நான்கு நாட்கள் இதையே சாப்பிட்டால் நாக்கு செத்து போகாதா??” என பாவமாக முகத்தை வைத்தபடி கேட்டவரை முறைத்த மங்கை,
“ஏன், அதைத்தானே நாங்களும் சாப்பிடுறோம்.. எங்களுக்கு நாக்கு செத்துப்போகலையே” என்றவள்,
“இந்த வயதில் உடலுக்கு எது நல்லதுன்னு பார்த்து சாப்பிடணும்.. கண்டதையும் சாப்பிட்டு செரிமான பிரச்சினை வந்தால் அதை நீங்கதானே அனுபவிப்பீங்க.. அது நடக்கக்கூடாதென்றால் பேசாமல் சாப்பிடுங்க” கண்டிப்புடன் கூறிவிட்டு அவள் உண்பதை தொடர,
“இந்த வரட்டியை சாப்பிடுறதுக்கு பட்டினி இருக்கலாம்” என முணுமுணுத்தவர், “அங்கே என்ன சத்தம்??” என்ற மகளின் கேள்வியில் “ஒன்றுமில்லையே” எனக்கூறிவிட்டு அவசரம் அவசரமாக உண்ண ஆரம்பித்தார்..
“இன்னிக்கு இன்டர்வியூ எப்படி போச்சு அஜ்ஜூ??”
“நல்லா போச்சுக்கா.. முப்பதுக்கும் மேல் கேன்டிடேட்ஸ்.. ஒவ்வொருவரையும் இன்டர்வியூ பண்ணுறதில் எந்த பிரச்சினையும் வரவில்லை.. பட், எனக்கு பிஏவா வரவங்களை சூஸ் செய்வதில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது”
“ஏன், என்னாச்சு??”
“எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு நினைத்தால் சில விஷயத்தில் கோட்டை விடுறாங்க.. எல்லா விஷயங்களிலும் பர்ஃபெக்ட்டாக இருக்கிற பொண்ணுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லை”
“அப்புறம் என்ன பண்ணின??”
“எக்ஸ்பீரியன்ஸ் என்கிறது அனுபவத்தில் மட்டும் இல்லாமல் கற்றுக்கிறதிலும் கிடைக்கும்.. அதை நாமளே டிரெயினிங்க் மூலம் கொடுக்கலாம் தானே?? சோ, அந்த பொண்ணையே பிஏவாக செலெக்ட் பண்ணி டிரெயினிங்கிற்கு அசோக்கிடமே விட்டிருக்கேன்” என்றவனை மெச்சுதலாக நோக்கிய மங்கை,
“ரொம்ப தேறிட்ட அஜ்ஜூ.. இது, இத்தோடு முடிவதில்லை.. தினந்தினம் நமக்கான சோதனைகள் வந்துக்கிட்டே இருக்கும்.. அதையும் முகம் கொடுத்து அவற்றை முறியடிக்கிறதில் தான் இருக்கு நமக்கான வெற்றி” என அறிவுரை கூறியவள்,
“சரி உன் பிஏ பற்றி சொல்லு” என விபரம் கேட்டாள்..
“அவங்க நேம் அபர்ணா” எனவும் விலுக்கென நிமிர்ந்த மங்கை,
“ஃபுல் நேம் என்ன??” ஆர்வத்தையும் படபடப்பையும் காட்டாதிருக்க முயன்றபடி கேட்டாள்..
“அபர்ணா தில்லைநாயகம்” என்றதோடு அவளின் ஊரையும் அர்ஜூன் கூறியதும் உடல் தளர புருவச்சுழிப்புடன் எதையோ யோசித்தவள்,
“ஓகே.. தனியாக வந்திருக்காங்களா??” என கேட்டாள்..
“தெரியலைக்கா” தமக்கை கேட்டதும் ஏன் எதற்கு என கேட்காமல் பதில் கூறியபடி இருந்தான் அர்ஜூன்..
“ஒஹ்.. எதற்கும் நாளைக்கு அவங்களை பார்த்து விபரம் கேட்டுக்கோ.. தனியாக ஸ்டே பண்ணப்போறாங்கன்னா நம்ம கம்பனி சார்பாக ஏற்பாடு பண்ணிக்கொடு” எனவும் இதுபோன்று எப்பொழுதும் செய்திராததில் தமக்கையை வியப்பாக நோக்கினாலும் சம்மதமாக தலையசைத்தான் அவன்..
“என்ன விபரம் என்றாலும் அவனாக மங்கையிடம் தூண்டித்துருவி கேட்டதில்லை.. சொல்லக்கூடிய விஷயம் என்றால் அவளே கூறுவாள், இல்லையெனில் அவளே சமாளித்துவிடுவாள் என்பதில் அத்தனை நம்பிக்கை அவனுக்கு இருந்ததில் இப்பொழுதும் அதனையே தொடர்ந்தான்..
“இன்னிக்கு அந்த அபர்ணாவை பார்த்து நம்ம அம்மா விட்ட ஜொள்ளை பார்க்கணுமே” என்ற அர்ஜூனின் கிண்டல் பேச்சினை கேட்டு அதுவரை இருந்த இறுக்கம் தளர, சன்ன சிரிப்புடன் கேலியாக தாயை நோக்கிய மங்கை,
“அந்த பொண்ணு வயசு என்ன?? உங்க வயசு என்ன?? பாவமில்லையாமா??” ஏதோ செய்யக்கூடாத தப்பை செய்தது போல் குற்றம் சாட்டிய மங்கையை ஏகத்துக்கும் முறைத்த சௌந்தரி,
“அந்தப்பொண்ணு அழகா இருக்குன்னு பார்த்தது ஒரு குற்றமா?? என்னென்னமோ பேசுற நீ” என எகிற,
“ம்மா.. பார்த்த சரி.. அந்த பொண்ணு குரலை கேட்டு குயில் கூவுதுன்றியே, அப்போ இதுக்கு என்ன அர்த்தம்” நமட்டு சிரிப்புடன் அர்ஜூன் சொல்லவும் தாடையில் கை வைத்து வியந்த மங்கை,
“இது வேறையா டா அஜ்ஜூ??” என கேட்டாள்..
“ஆமாக்கா நம்ம அம்மா பண்ணியதை நீ பார்த்திருக்கணுமே, வயசு பையன்கள் தோத்தாங்க போ.. இதில் இவங்க பண்ணினதை பார்த்து அந்த பொண்ணு என்ன நினைச்சுச்சோ??”
“டேய் டேய்.. அழகை ஆராதிக்கிறதுக்கு மனசு வேணும்.. அது எங்கிட்ட இருக்கு.. சும்மா சும்மா உன் அக்கா கிட்ட கோக்கு மாக்கா சொல்லி ஏத்தி விடாதை.. நான் அவள் இல்லை, புரியுதா??” என்ற சௌந்தரியை பார்த்த அக்கா, தம்பி இருவரும் வாய்விட்டு நகைக்க, விஷயம் புரிந்த புவியரசுவும் அவர்களோடு இணைந்து கொண்டான்.. அவர்களின் சிரிப்பு அடங்கியதும் தமக்கையை நோக்கிய அர்ஜூன்,
“ஆமா அந்த ஆபீசில் நடந்த பிரச்சனை முடிவுக்கு வந்துடிச்சுன்னு சொன்னியே, அப்புறம் என்ன ஆச்சு??” என கேட்டான்..
“ஆல் கிளியர் அஜ்ஜூ”
“சரிக்கா” பேச்சோடு பேச்சாக உணவுவேளை முடிந்தபின் ஹாலில் ஓய்வாக அமர்ந்து டிவி பார்த்தவர்கள், அடுத்தநாள் ஓடவேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்களாக தத்தமது அறைக்குள் நுழைந்து கொண்டனர்..
தனது ரூமிற்கு வந்ததிலிருந்து பால்கனியில் சிந்தனையுடன் நின்றிருந்த மங்கைக்கு வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் எடுத்த முடிவு, அத்தோடு முடிந்ததாகவே இருக்கட்டும் என்பது அவளின் எண்ணம்..
ஆனால் புதியவளின் வருகை பழைய வாழ்கையில் நடந்த பிரச்சினைகளை பூதாகரமாக மாற்றும் அபாயம் உள்ளதா என்றே தெரியாத தலைவேதனையாக இருந்தது.. இருந்தாலும் இப்படி குழம்பிப்போய் நிற்பதற்கு உறுதியாக விஷயத்தை அறிந்துகொண்டால் நல்லது என்றே தோன்றியது அவளுக்கு.. எனவே, நேரத்தை பார்த்தவள், அது சரியான நேரமாக இருக்கும் என்பதை கணக்கிட்டவளாக தனது மொபைலை எடுத்து சில எண்களை தட்டி காதில் வைத்தாள்..
எதிர்முனையில் அழைப்பை ஏற்கும்வரையில் ஒரு நிலையில் இருக்கமுடியாது நகத்தை கடிக்க விரலை வாயில் வைப்பதும் பின் அது தப்பு என்பது புரிந்து கையை எடுப்பதுமாக இருந்தவள், அழைப்பை ஏற்றதும் எதிர்முனையில் இருப்பவர் என்ன கூற வருகிறார் என்பதை பற்றிய எண்ணத்தை மறந்தவளாக,
“அபர்ணா நம்ம ஆபிசுக்கு வேலைக்கு சேர்ந்தது தெரியுமா??” என்னதென்று உணரமுடியாத உணர்வோடு படபடத்தாள்..
ஒரு சின்ன விஷயம் என்றாலும் நிறுத்தி நிதானமாக ஆராய்ந்து செயற்படுபவளால் இந்த விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிக்க முடியவில்லை.. எதுவோ மீண்டும் தொடரப்போவதை மனசு அறிவுறுத்தியதா, மூளை அறிவுறுத்தியதா என பிரித்தறிய முடியாத உணர்வுகளின் சங்கமத்தில் சிக்கி தவித்தவளுக்கு முழு விபரமும் தெரிந்தே ஆகவேண்டும் என்ற வேகம்..
“என்ன சொல்லுற?? அது உன் ஆபீசா?? இந்த விஷயம் எனக்கு தெரியாதே” என்றது எதிர்ப்பக்க அதிர்ச்சி குரல்..
“ஓ.. உங்களுக்கு தெரியாதா?? எப்படி விசாரிக்காமல் அனுப்பினீங்க??” புருவங்கள் முடிச்சிட கேட்டாள் மங்கை..
“விசாரிச்சோம்.. நீ இருக்கிற ஊர்ன்னு மட்டும் தெரியும்.. மற்றபடி அந்த ஆபீஸின் எம்டி ஒரு ஆண்ணென்று போட்டிருந்ததே??” வெள்ளாந்தியாக கேட்க,
“ஆமா.. அது என் தம்பி கம்பனி.. அவள் வேலை செய்வதில் பிரச்சினை இல்லை.. நாளை பின்ன அவங்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் என்ன ஆகும்??” தன் எண்ணக்கிடக்கையை அவள் சொல்ல, எதிர்ப்புறம் சற்று மௌனம் சாதித்தது..
“என்னாச்சு, இதை நீங்க யோசிக்கலையா??”
“இல்லை.. அபி இந்த கம்பனியின் இன்டர்வியூக்கு போயே ஆகணும்னு அடம்பிடிச்சு வந்தாள்.. தனியாக அந்த ஊரில் இருந்துப்பியான்னு கேட்டதற்கு அப்போதான் தனக்கு பொறுப்பு வரும்ன்னு சொல்லிட்டாள்.. அதுக்காக நாங்க அப்படியே விட்டிட முடியுமா?? தனியாக வீடு பார்த்து துணைக்கு ஆளை ஏற்பாடு பண்ணணும்”
“சோ நீங்களும் அவள் இங்கே இருக்கட்டும்ன்னு முடிவு பண்ணிட்டிங்களா??” ஆதங்கத்துடன் கேட்டாள் மங்கை..
“வேறவழி இல்லை மங்கை.. உன் விருப்பப்படி வேலை பாருன்னு சொல்லி அவளும் இன்டர்வியூ அட்டன் பண்ணி வேலையும் கிடைத்துவிட்டது.. இப்போ போய் அங்கே நீ வேலை பார்க்க வேணாம்ன்னு சொன்னால் காரணம் சொல்லவேண்டி வரும்.. பல விஷயங்கள் அவளுக்கு தெரியாமல் இருப்பதே நல்லது அத்தோடு..” என இழுக்க,
“என்ன அத்தோடு??” என பரபரப்புடன் கேட்டாள்..
“நான் இப்போ அபியை தடுத்தால் அவங்களும் காரணம் கேட்பாங்க, நீ அங்கே இருக்கேன்னு வெளிப்படையாக சொல்லிவிட முடியுமா என்ன?? அப்புறம் ஒவ்வொருத்தர் முகத்தில் முழிக்கும்படியாக இருக்கும்.. பிறகு என்ன நடக்கும்ன்னு நான் சொல்லி உனக்கு தெரியத்தேவையில்லை” என்றதும் இயலாமையுடன் உதட்டை கடித்தவள்,
“அப்போ இந்த விஷயத்தில் என்னதான் பண்ணுறது??” விசனத்துடன் கேட்க,
“வேறவழி இல்லை மங்கை.. முடிந்தளவு அபி கண்ணில் படாமல் இருந்துக்கோ.. அதற்கு மேல் கடவுள் விட்டவழி” துயரத்துடன் சொன்ன எதிர்ப்பக்கம்,
“யாரோ வருவதுமாதிரி இருக்கு.. நான் அப்புறம் கூப்பிடுறேன்” பதட்டமும் பரபரப்புமாய் சொன்னதுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் காதிலிருந்து மொபைலை எடுத்தபடி உள்ளே வந்தவள், ஒருபக்க சுவரில் மாட்டப்பட்டிருந்த பிரேமில் இருந்த உருவத்திடம்,
“நீ இல்லாமல் நான் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போயிடும் போலவே.. அவங்க கண்ணிலோ அபி கண்ணிலோ நான் சிக்காதபடிக்கு பார்த்துக்கோ” கண்ணீர் மல்க வேண்டியவளின் மனக்கண்ணில் பல கசப்பான, வலியும் வேதனைகளும் நிறைந்த சம்பவங்கள் வலம் வந்ததில் அதன் பாரம் தாங்காது தலையை இரு கைகளாலும் அழுத்தி பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தவள், ஆற்றுவார் தேற்றுவார் இன்றி மௌனமாக கண்ணீர் சிந்தியவள், எப்பொழுதும் போல் தன்னை தேற்றிக்கொண்டாள்..
அதன்பின்பு வந்த நான்கு நாட்களையும் ஒருவித தளம்பல் மனநிலையுடன் கடந்தாலும் தன் மனவுணர்வுகளை யாருக்கும் தெரியாது பார்த்துக்கொண்டாள்.. ஆனால் அவளின் உள்ளுணர்வு அறிவுறுத்தியது போல் அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவள், பிரதான வாயிலின் வழியே வந்த நபரை கண்டு நிலத்தில் வேரோட அதிர்ந்து நின்றுவிட்டாள்..
தொடரும்..