பதிவு 9
காத்திருந்த தேவதை
தைரியமாக அறை வாசலுக்கு வந்தவளுக்கு கதவை தட்டியதும் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது… அவன் குரல் உள்ளேயிருந்து கேட்கவும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவளை புன்னகையோடு வரவேற்றான்…
“அடடே.. ஜீஈஈஈவிதா மேடாமா? வாங்க வாங்க...” என்று வேண்டுமென்றே அவள் பெயரை இழுத்து சொல்ல, இவளோ வந்த கோபத்தை அடக்கியபடியே பற்களை நறநறவென கடித்தவாறு அமைதியாக அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தாள்…
“சொல்லுங்க ஜீவிதா என்ன விசயம்?...”
“என்ன நீங்க கூப்புட்டதா சங்கர் சார் சொன்னாங்க...”
“ஓ ஆமால்ல நாந்தான் வரசொன்னேன்… ஏன் நிக்குறிங்க? உட்காருங்க…” என்க மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்து கொண்டாள்…
“இப்போ சொல்லாம்ல...” என்றவளை புன்னகையோடு நோக்கியவன்,
“உங்கள பத்தி அப்பா நிறையவே சொல்லிருக்கார் ஜீவிதா… நம்ம ஆபிஸ்லயே உங்களத்தான் அவருக்கு ரொம்ப பிடிக்குமாமே..?...” என்று அவன் சொல்ல கேட்கவே கொஞ்சம் பெருமையாய் தான் இருந்தது… ஆனாலும் வேண்டுமென்றே,
“ஓ! எனக்கு தெரியாது சார்...” என்க, அவளை கூர்ந்து நோக்கியவன்,
“பரவாயில்ல ஜீவிதா இனிமே தெரிஞ்சுக்கலாம்...” என்றான்…
“சார் நீங்க என்கிட்ட என்ன சொல்லணுமோ அத சீக்கிரமா சொன்னிங்கன்னா நான் என் டேபிளுக்கு போவேன்… பிகாஸ் வொர்க் அதிகமா இருக்கு...” என்று வேண்டுமென்றே நறுக்கென்று கத்தரித்தது போல சொல்லி வைக்க, அவனின் இதழ்களில் மெல்லிய நக்கல் புன்னகை தோன்றியதை போன்றதொரு உணர்வு…
“பரவாயில்லையே… அப்பா ஒனக்கு நல்லாவே ட்ரெயின் பண்ணிருக்காருன்னு நெனைக்குறேன்… எம்.டியையே ஆர்டர் போடுற ஸ்டாஃப்… இதுனால தான் என்னவோ என் அப்பாவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் போல…” என்க,
“ஆர்டரெல்லா போடல சார்.. வொர்க் நிறைய பெண்டிங்ல இருக்கு அதான் சொன்னேன்… சரி சொல்லுங்க...” என்று அவன் முகம் பார்க்க, அவனுமே அதற்கு மேலும் அவளிடம் வம்பு வளர்ப்பது போல எதுவும் பேசாமல் பேச ஆரம்பித்தான்..
அடுத்த ஐந்து நிமிடங்கள் முழுக்க முழுக்க அலுவலகம் சார்ந்த விசயங்களாகவே இருக்க, இவளுமே அவ்வளவு நேரமும் இருந்த தயக்கத்தை விடுத்துவிட்டு இயல்பாக அதே சமயம் அவனை யாரோவென்பது போலவே நினைத்து பேசி வைத்தாள்… அவ்வப்பொழுது சுருங்கி சிரிக்கும் அவன் விழிகளை தன்னையும் மீறி ஆசையாசையாய் பார்க்கத்தோன்றும் மனதை அடக்கி பேச்சுவார்த்தையில் கவனத்தை திருப்பினாள்… நன்றாக பேசிக்கொண்டே இருந்தவன், திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியாக அவள் முகம் பார்த்து அக்கேள்வியை கேட்டான்…
“நேத்து நைட் எங்க ஜீவா போன?... உனக்காக நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன்…ரொம்ப நேரமா தேடித்தேடி பார்த்துட்டு தான் கிளம்புனேனே… எங்க ஜீவா போன?..” என்று சட்டென்று ஒருமைக்கு மாறி கேட்க, அவ்வளவு நேரமும் இயல்பாய் இருந்தவளின் முகமே சட்டென்று மாறியது…
“சார் தேவையில்லாத பேச்செல்லா நமக்குள்ள வேணாம்… வேலை விசயமா என்ன பேசுறதா இருந்தாலும் என்ன கூப்புட்டு பேசுங்க… மத்த எதுவும் பேச வேணாம்…” என்று வெடுக்கென்று எழ,
“அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லமாட்ட?...” என்று கேட்டான்...
“திரும்பவும் உங்களுக்கு சொல்லணும்னு இல்ல… இது ஆபிஸ்… வேலை விசயமா என்ன பேசுறதா இருந்தாலும் என்ன கூப்புடலாம் பேசலாம்… மத்த எதையும்...” என்று நிறுத்திவிட்டு அவனை ஒரு பார்வை பார்க்க, சிறு தோள் குலுக்களோடு, திரும்பவும் அலுவலகம் சம்மந்தமாகவே பேசிவிட்டு அவளுக்கு விடைகொடுத்தான்…
அவளும் அறையை விட்டு வெளியேறிவிட, இவனுக்கு தான் அவளை நினைக்கவே வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது… அன்றைய இரவில் அவனுடன் நன்றாக பழகியவள், எதற்காக இப்பொழுது சிடுசிடுவென நடந்துகொள்கிறாள் என்று நினைத்து அவனையே குழப்பிக்கொண்டான்… பிறகு இதைப்பற்றி வீட்டிற்கு சென்றதும் அப்பாவுடன் பேசவேண்டுமென்று முடிவெடுத்தவனாய் அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான்…
அன்றைய தினத்தின் அலுவலகப்பணிகள் முடிவடைந்ததும், தனது அறையை விட்டு வெளியே வந்து பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது... அவன் வந்ததில் இருந்தே தான் உண்டு தன் வேலையுண்டு என திரிந்தவளிடம் எப்படி பேசுவது என்று சிந்தித்தவன் அலுவலகம் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று காத்திருந்தான்... ஆனால் அவளோ எப்பொழுதும் போலவே கிளம்பி போயிருந்தாள்... புதிதாக தான் வந்திருப்பதால் ஏதேனும் மரியாதைக்காகவாவது சொல்லி சென்றிருக்கக்கூடாதா என்ற ஆதங்கமே கோபமாய் உருவெடுக்க, தன்னுடைய இத்தகைய நிலைக்கு காரணமானவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும் என்ற முடிவோடு காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்...
ஆனந்த் நேராக போய் நின்றது அவனுடைய வீட்டில் தான்... அவன் உள்ளே நுழையும் பொழுது நாகராஜன் கால்மேல் கால் போட்டபடி டிவி பார்த்துக்கொண்டிருந்தார்... ஏதோ நகைச்சுவை காட்சியை பார்த்துவிட்டு கெக்கபெக்கவென்று சிரித்துக்கொண்டிருந்தவரை பார்த்தவன், வேகமாக போய் டிவியை அணைத்துவிட்டு அவர் முன்னே கைகளை கட்டியபடி நிற்க, நாகராஜனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை...
“என்னடா இது? வந்ததும் வராததுமா மொறைச்சு பார்த்துட்டு நிக்குற? இப்படி வந்து உட்காரு... ம்மாஆஆஆ ஆனந்த் வந்துட்டான் ஒரு காபி கொண்டு வாவே...” என்று மகனை கையைப்பிடித்து தனக்கு அருகே அமர வைத்தவர், சமையலறையை நோக்கி குரல் கொடுத்துவிட்டு அவனை பார்க்க, அவனோ!
“பாட்டி காப்பியெல்லா வேணாம்... நீ மொதல்ல இங்க வா...” என்க, நாகராஜனோ அவனை ஒரு மாதிரி பார்த்தார்...
“ஏன் டா காபி வேணாமா?...”
“இரண்டு பேர்க்கிட்டேயும் உடனே முக்கியமான விசயம் பேசணும்... காபியெல்லா போட்டுட்டு இருந்தா நேரமாகும்... பாட்டி வான்னு சொன்னா வரமாட்டியா?...” என்று இவன் பெரிதாக சத்தம் போட்ட பிறகு சமையலறைக்குள் இருந்து, தும்பைப்பூவாய் நரைத்த தலையில் ஆங்காங்கே கருப்பு முடிகள் தெரிய வெளியே வந்தார் ஆனந்துடைய பாட்டி கல்யாணி... நாகராஜனை பெற்றவர்... வயது தான் அறுபதை கடந்துவிட்டதே ஒழிய நடையிலும், கம்பீரத்திலும் எந்த குறையுமே இல்லை... கிண்ணென்ற நடையோடு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார்...
“என்ன விசயம் ஆனந்த்?...” என்றவரின் கேள்வியில் தந்தையை ஒரு பார்வை பார்த்து வைத்தான்...
“என்னடா என்ன பார்க்குற?...”
“பின்ன உங்கள பார்க்காம வேற யார பார்க்குறதாம்? பாட்டி ஒங்க புள்ள என்ன வாடா வாடான்னு வரசொல்லி எந்தலையில ஒரு சிடுமூஞ்சியை கட்டி வைச்சு என் லைஃப்பயே டேஞ்சராக்க பார்க்குறாரு...”என்க, நாகராஜனுக்கோ திடுக்கென்று இருந்தது...
“டேய் யாரப்பார்த்துடா சிடுமூஞ்சிங்குற? என் ஜீவா சிரிச்சா பார்த்துக்குட்டே இருக்கலாம்... யாரையும் அதட்டி பேசவும் மாட்டா, சுருக்குன்னு சொல்லவும் மாட்டா...” என்று வரிந்துகொண்டு வந்தார்..
“ஆமா ஆமா... உங்க ஜீவா பெருமைய நீங்க தான் மெச்சுக்கணும்... லிசன் பாட்டி அந்த பொண்ணு எவ்ளோ மண்டையா பண்ணுறா தெரியுமா? பங்சன்ல மட்டும் என்கிட்ட பல்ல பல்ல காட்டி பேசிட்டு இன்னைக்கு ஆபிஸ்ல முகத்தை தூக்கி வச்சுட்டு திரியுறா...”
“நீ எதாச்சும் அவகிட்ட வம்பு பண்ணிருப்ப...”
“ஹான் இதெல்லாம் ரொம்ப ஓவர் டாடி... அவகிட்ட வம்பு பண்ணுறத தவிர எனக்கு வேற வேலையில்ல பாருங்க... பாட்டி உன் புள்ளைக்காக பாவம் பார்த்து தான் போனா போகுதுன்னு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்... பட் இப்போ சொல்லுறேன்... அந்த பொண்ணு எனக்கு வேணவே வேணாம்... ப்ளிஸ் பாட்டி வேணாம்...” என்று சிணுங்க, அம்மாவை பார்த்து கண்ணால் ஜாடை காட்டியவர், வராத போனை வந்தது போல பாவித்து காதில் வைத்து பேசியபடியே செல்ல, அவனுமே நாகராஜன் செல்லும் வரைக்கும் காத்திருந்து விட்டு பாட்டியை பார்த்தான்…
“பாட்டிம்மா...” என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு அழைத்தவனை புன்னகை வழியும் இதழ்களோடு ஏறிட்டவர், அவரருகே வரும்படி அழைக்க, எழுந்து போய் கல்யாணியின் காலைக்கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்துவிட்டான்...
“உன் அப்பன் அந்த பொண்ண நல்ல விதமா தானே சொன்னான்... உனக்கு நெஜமாவே அந்த பொண்ண பிடிக்கலையா?...”என்று கேட்க, சிறிதுநேரம் வரைக்கும் அவனிடத்தில் பேச்சே இல்லை... “என்ன ஆனந்த் அமைதியாகிட்ட?...”
“பிடிக்கலைன்னு இல்ல பாட்டி... என்னால அவள புரிஞ்சுக்கவே முடியல... நேத்து நைட் என்கூட ஜோவியலா பழகுன பொண்ணு இன்னைக்கு என்கிட்ட பேசவே யோசிச்சா எனக்கு எப்படியிருக்கும்?...” என்று அதிதீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, அவனுடைய தலையை வருடியவர்,
“ஒருவேள அவளுக்கு பிடிக்காத மாதிரி எதுவும் நடந்துக்குட்டியா? அதான் கோபமா இருக்காளோ?...” என்று கேட்டு வைத்தார்...
“போ பாட்டி நீ வேற... கோபப்படணும்னா ஆக்சுவலா நாந்தான் அவ மேல கோபப்படணுமே... நைட் பார்ட்டி முடிச்சுட்டு அவளுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா? பைத்தியக்காரனாட்டம் கேட்கிட்டேயே வெயிட் பண்ணி, எங்க போய்ருப்பா என்ன ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சே தூக்கமும் தொலைச்சேன்...” என்க, அவன் காதைப் பிடித்து திருகினார்...
“படவா ராஸ்கல்... வேணாம் வேணாம்னு சொல்லிட்டு அவள நெனச்சு எதுக்கு கவலைப்பட்ட? உண்மை வந்துச்சா இப்போ!...” என்க, அவர் பிடித்த பிடியில் காது வலித்தாலுமே, அசடு வழிய சிரித்து வைத்தான்...
“அது வந்து பாட்டிம்மா... ஷீ இஸ் க்யூட் தான்... எனக்கு பிடிச்சுருக்கு தான்... பட் ஏதோ அவக்கிட்ட சம்திங் இருக்கு... நைட் நல்லா பேசுனவ திடீர்னு கிளம்பிட்டா... சரி அதக்கூட மன்னிச்சுடலாம்னு விடேன்... இன்னைக்கு ஆபிஸ்ல என்ன பார்த்துட்டு நீ யாரோ நான் யாரோங்குற மாதிரி பிஹேவ் பண்ணா பாரேன்... என்ன தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்கல... அதான் ஹர்டிங்கா இருந்தது...” என்க, மென்மையாக புன்னகைத்தார்...
“திருட்டுப்பயலே அவள பத்தி இவ்ளோக்கு ஜொள்ளு விட்டுட்டு பேசிட்டு அவ வேணவே வேணாம்னா சொல்லுற? இரு உன் அப்பன் வரட்டும்...” எனும் பொழுதே சரியாக ஆஜராகியிருந்தார் நாகராஜன்... கதவுக்கு பின்புறமாய் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தவருக்கு எந்த சமயத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரியாதா என்ன?