ரகசியம் 7
இரவின் துவக்கத்தில் இருந்தது சென்னை மாநகரம். ஆகாயத் தேவதை முழுப் பௌர்ணமியாய் வானை வலம் வந்துக் கொண்டிருந்தாள். மின் விளக்கின் ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது அந்த அடுக்கு மாடி குடியிருப்பு. அதன் ஏழாவது தளத்தில் இருந்த எஸ் செவனின் பால்கனியில், கையில் மது பாட்டிலுடன் மனதில் ரணத்துடன் நின்றிருந்தான் தேவா. அவன் அதீத போதையில் இருக்கிறான் என்பதற்குச் சாட்சியாய் மதுபாட்டில்கள் கீழே உருண்டு கொண்டிருந்தது.
“டேய் தேவா போதும் டா” என அவன் கையில் இருந்த பாதி மது பாட்டிலை பிடுங்கும் முயற்சியில் இருந்தான் நண்பன் வீரா.
“அவளுக்கு எவ்வளவு திமிரு பார்த்தியா டா??” சொன்னதையே திரும்பத் திரும்பக் கேட்டுச் சலித்துப் போயிருந்தான் வீரா.
“நீ சொல்றதும் சரி தான்டா எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்டா தேவா!!”
“அப்போ என்னைக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லுறீயா மச்சான்” எனக் குழந்தை போல் கேட்பவனைப் பார்த்துப் பாவமாக இருந்தது வீராவுக்கு. இது வரை தேவா குடித்ததும் இல்லை, எந்தப் பெண்களிடமும் பழகியதும் இல்லை. ஆனால் இன்று தியாவால் இப்படிக் குடித்துக் கொண்டிருக்கிறான் என்பதே வீராவுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.
“அவ யாருடா..? நம்ம ஃப்ரெண்ட்ஷிப் பத்தி பேசுறதுக்கு, நீ அவளைப் பத்தி பேக்ரவுண்டலாம் செக் பண்ண வேண்டாம், அவளோட கேரக்டர் தான் காஃபி ஷாப் மீட்டிங்கலையே தெரிஞ்சிடுச்சே” என ஆவேசமாய்க் கோபம் கொண்டவன் மீதம் இருந்த மதுவையும் தொண்டைக்குள் சரித்தான்.
“தேவா! நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா” என அவனை வரவேற்பறைக்குள் இழுத்து வந்து சோபாவில் அமரச் செய்தான்.
“நான் இப்போ என்ன சொன்னாலும் உனக்குப் புரிய போறது இல்லை, இந்தப் பிரச்சனையை நான் சரி பண்ணுறேன் உனக்காக” என உறுதியாகச் சொன்னான் வீரா.
“வேண்டாம் மச்சான், நீ என் கூட இருக்கக் கூடாது நினைக்கிறவ எனக்குத் தேவையே இல்லைடா, தியா என்ன உலக அழகியா?? வீட்டில சொல்லி வேற பொண்ணை உடனே பார்க்க சொல்றேன்” எனத் தன் அலைப்பேசியை எடுத்து தன் தந்தைக்கு அழைப்பெடுக்க முயன்றவனின் கையில் இருந்த அலைப்பேசியைப் பறித்திருந்தான் வீரா.
வீராவுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது தியா அப்படி நடந்துக்கொள்ளக் காரணம் அவன் தான் என்று, இதுவரை எந்தப் பெண்ணையும் நினைத்து புலம்பாத நண்பன் தியாவை நினைத்துப் புலம்பிக்கொண்டிருக்கிறான். அவன் மனதில் காதல் துளிர் விட்டிருக்கோமா? என்ற எண்ணமும் தோன்ற, தியாவிடம் பேசி இதைச் சரி செய்தாக வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டான். வீரா தங்கி இருக்கும் வீட்டிலே அன்று தேவா உறங்கி போனான். நண்பனை அவனின் படுக்கையில் கிடத்தி விட்டு, பால்கனியில் வந்து நின்றான் வீரா.
இதமான தென்றல் காற்று அவன் மேனியில் படர, வானத்து நிலாவில் கூடத் தியாவின் முகம் ஒரு முறை வந்து போனது. அவளைக் காதலித்தது என்னவோ உண்மை தான், ஆனால் இப்போது அப்படி இல்லையே, அவளுடைய நினைவுகள் அவனை விட்டு விலக மறுத்தது. மெல்ல நிதானித்தான். நடந்தேறிக்கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தான் ஒரு முற்று புள்ளியை வைக்க முடியும் என நம்பிக்கை ஏற்பட்டது.
தன்னுடைய ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு தியாவை பற்றி யோசித்தான். அவள் மிகவும் நல்லவள் தான்.. அவள் அவனை எளிதாகக் கடந்து சென்று விட்டாள் அவ்வளவு தான். இருவரும் பேசி முடிவு செய்து தானே பிரிவை தேர்ந்தெடுத்தோம், இப்போது அவளை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பது தவறு எனத் தோன்றியது வீராவுக்கு.
இப்போது அவன் மனதில் பிறந்த தெளிவுடன் அறைக்குள் நுழைந்தான்.
“தியா!!! ஐ லவ் யூ சோ மச்” என்ற தேவாவின் உளறலே சொல்லாமல் சொல்லியது. அவனுக்குத் தியா மீது காதல் அரும்பி விட்டது. அதே நேரம் தேவாவின் செல்பேசியில் தியா காலிங் என வர, அதைச் சின்னப் புன்னகையுடன் கடந்து சென்ற வீரா. சோபாவின் படுத்துக்கொண்டான்.
இந்த இரவு நீண்டுக்கொண்டே போனது, விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் வீரா.
*************
ஐ ஃபுவுன்டேசன்:
அன்று மருத்துவமனைக்கு விடுமுறை தெரிவிக்கபட்டிருந்தது.. எப்போதும் இப்படிச் செய்வதில்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு டெக் ஃபெஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவசர சிகிச்சைக்காகச் சில மருத்துவர்களும், கண் வங்கியில் உள்ள ஊழியர்கள் மட்டும் அன்று அவர்களின் பணிகளைச் செய்துக்கொண்டிருந்தனர்.
தியா தன் ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மெல்ல நடந்து வந்தாள். கருப்பு நிற புடவையில் அழகாய் மிளிர்ந்தாள் அவள், அதற்கேற்ற ஒப்பனைகளுடன் அவள் நடந்து வர,
“வாவ்!!! அழகா இருக்கடி தியா” என வாய் பிளந்தாள் ஷைனி,
“நீயும் அழகா தான்டி இருக்க” எனப் பதில் கொடுத்தாள், அவர்கள் குழுவில் அனைவரும் கருப்பு நிற உடையில் வந்திருந்தார்கள், ஷைனியை தொடர்ந்து லேகா,ஸ்ருதியும் வர இந்த இடமே நண்பர்களின் ஆர்பாட்டத்தோடு கலைக்கட்ட ஆரம்பித்தது.
பேச்சும் சிரிப்பும் இணைந்து நால்வரும் பேசிக்கொண்டிருந்த வேளையில், அவர்களை நோக்கி அங்கயற்கண்ணி வந்தார்.
“என்னடி இது நம்ம டிப்பார்ட்மெண்ட்க்கு ப்ளாக் தானே ட்ரேஸ் கோட், இது என்ன மாரியம்மன் கோவிலுக்குக் கூல் ஊத்துற மாதிரி வந்திருக்கு” தியாவின் செவியில் கிசுகிசுத்தாள் லேகா.
“சும்மா இருடி” எனச் சிரிப்பை உதட்டிற்குள் மறைத்தவள்,
“குட் மார்னிங் மேம்” என அங்கயற்கண்ணி யை பார்த்து சொல்ல, மற்ற மூவரும் கோரஸாக “குட் மார்னிங் மேம்” என ராகம் பாடி சொல்ல,
“ஷட் அப்!! என்ன எலிமென்ட்ரி ஸ்கூல் பசங்க மாதிரி பிகெவ் பண்ணுறீங்க இடியட்ஸ்” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார் அங்கயற்கண்ணி
“சாரி மேடம்” என மற்ற மூவரும் கோரஸாக மீண்டும் ராகம் பாட, தியா மட்டும் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.
“நல்லா சிரி தியா!! ஏற்கனவே டிப்பார்ட்மெண்ட் மானம் காத்துல பறக்குது, இதிலை நீ நல்லா சிரி” என ஏற்கனவே அவள் மேல் இருக்கும் கோபத்தைத் திட்டி தீர்த்துக்கொண்டார் அங்கயற்கண்ணி,
“இதோ பாருங்க, இது வரைக்கும் ஐ ஃப்வுன்டேசன்ல இந்த மாதிரி டெக் காம்படீசன்லாம் வச்சதே இல்லை, வின் பண்ணுறவங்களுக்குப் பெனிபிட்ஸ் நிறைய இருக்குதாம், நம்ம டிப்பார்ட்மெண்ட்ல யாரெல்லாம் கலந்துக்கப் போறீங்க” என அவர் கேட்க,
“ஷைனியும் தியாவும் மேடம்” எனப் பதில் கொடுத்தாள் லேகா.
“தியாவா?? அவளுக்கெல்லாம் எதுவும் தெரியாது, ஸ்ருதி நீ கலந்துக்க” என அங்கயற்கண்ணி சொல்ல, ஸ்ருதியோ திருதிருவென விழித்தாள்.
“மேம்!! எனக்கு டெக்னிக்கலா எதுவும் தெரியாது, நான் ஜெஸ்ட் போன் கால் மட்டும் தான் மேம் அட்டன் பண்ணுவேன்” என நழுவினாள் ஸ்ருதி,
“லேகா நீ” லேகாவை கலந்து கொள்ளச் சொல்ல,
“மேம்!! தியா அளவுக்கு எனக்கு டெக்னிக்கல் நாலெட்ஜ் இல்லை மேம்” என மறுப்பு தெரிவித்தாள் லேகா,
“என்னமோ செய்ங்க டிபார்ட்மென்ட்க்கு கெட்ட பேர் மட்டும் வந்திடக் கூடாது” எனத் தியாவை முறைத்தபடி சொல்லி சென்றார் அங்கயற்கண்ணி.
“தியா!! அங்குக்கு உன் மேல இருக்கக் கோபம் இன்னும் போகலை போல” என்றாள் ஷைனி,
“கோபம் தானே இருந்திட்டு போகட்டும்” என எளிதாய் எடுத்துக்கொண்டாள் தியா.
“சரி வாங்க காம்படீசன் எங்க நடக்குதுன்னு பார்ப்போம்” என லேகா அனைவரையும் அழைக்க, அப்போது தியாவின் செல்பேசி சிணுங்கியது.
வெகுநாட்களுக்குப் பின் அவனிடம் இருந்து அழைப்பு, வீரா எனப் பதிவு செய்யபட்டிருந்த எண்ணை பார்த்தவுடன் பதற்றம் தொற்றிக்கொள்ள,
“நீங்க போங்கடி டென் மினிட்ஸ்ல நான் வந்திடுறேன்” எனத் தோழிகளை அனுப்பி விட்டு அழைப்பை ஏற்றாள்.
எதிர்முனையில் மௌனம் சாதித்தான் வீரா, அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க,
“சொல்லுங்க மிஸ்டர் வீரா!! தியா தான் பேசுறேன்” என்றாள் நக்கல் தொனிக்க.
“தியா!! சாரி ஃபார் எவ்ரிதிங்” என்ற பதில் அவனிடமிருந்து,
“இவன் மன்னிப்பு கேட்கிற ஆளா??” என்ற யோசனையுடன் அவள்,
“இல்லை புரியலை, எதுக்குச் சாரி”
“நேத்து அப்படி நடந்ததுக்குத் தேவாவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை” என்றான்.
“எனக்குத் தேவாவை பற்றி நல்லாவே தெரியும்., நீங்க சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம், இது எங்களோட முதல் சண்டை நிச்சயம் என் மனசில் இருந்து மறையாது, அதை எப்படிச் சரி செய்யணும்னு எனக்குத் தெரியும், நீங்க எங்களுக்கு நடுவில் இன்வால்வ் ஆகாமல் இருக்கிறது உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது” எனத் தியா தெளிவாகப் பேசினாள்.
“அதுக்கில்லை தியா!! நான் உன் கூடக் கொஞ்சம் பர்சனலா பேசணும்” என்றான் அவன்..
“ஈவ்னிங் மீட் பண்ணலாம், எனக்கு இப்போ வேலை இருக்கு” என அவசரமாய்ச் சொன்னவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.
‘எவ்வளவு திமிரா பேசுறா’ என அவளை நிந்தித்தபடி அலைப்பேசியைப் பார்த்திருந்தான் வீரா.
*******
பால்கனியில் நின்று அவளிடம் பேசி முடித்தவன், திரும்பிய போது அவனைப் பார்த்த படி அறைகுறை தூக்கத்துடன் டீசர்ட்டும் ஷாட்ஸுடன் நின்றிருந்தான் தேவா..
“டேய் வீரா!! இது யாரோட ட்ரெஸ்டா இவ்வளவு டைட்டா இருக்கு” என்றான் தேவா.
“என்னோடது தான் தேவா” அவன் பதில் கொடுத்தான்.
“ஆமா!! நான் வீட்டுக்கே போகலையா??”
“இப்போ வந்து கேளுடா?? உனக்குத் தான் அந்தப் பழக்கம் இல்லையே எதுக்காக அந்தக் கருமத்தை வாங்கிட்டு வந்த??”
“எதுடா?? என்ன வாங்கிட்டு வந்தேன்” என அவன் நேற்றிரவு நடந்தவற்றை மறந்தவனாகப் பேச,
“கொஞ்சம் கீழே பாருடா மச்சான்” என வீரா சொல்ல, காலி மது பாட்டில்கள் அவன் கண்களில் பட..
“ஓ மே காட் ஷிட்” எனத் தலையில் அடித்துக்கொண்டான் தேவா.
“நான் உன்கிட்ட என்னடா சொல்லிருக்கேன், உன்னைச் சுத்தி நிறைய ஆபத்து இருக்கு, நீ நிதானம் இல்லாமல் இருந்தன்னா என்ன ஆகுறது?? எவனாவது அட்டாகப் பண்ணியிருந்தானா என்ன பண்ணிருப்ப, இடியட்” எனக் கோபமாய்த் திட்டினான்.
“அதான் என் தோஸ்த்து நீ இருக்கல்லடா என்னைக் காப்பாத்த” என டீசர்ட்டில் இல்லாத காலரை அவன் தூக்கி விட்டான்.
“பைத்தியம் மாதிரி பேசாதே தேவா, அந்த ரத்தினம் உன்னைப் போட்டு தள்ளுரதுல குறியா இருக்கிறான். உனக்கு நான் சொல்றது புரியவே மாட்டேன்துடா தேவா”
“எனக்கு எதுவும் ஆகாதுடா வீரா பயப்படாதே” என்றான் தேவா.
“நேத்து நான் மட்டும் இல்லைனா ரோட்ல தான் குடிச்சிட்டு கிடந்திருப்ப, அப்படி என்னடா தியா மேல உனக்குக் கோபம்”
“தியா மேல எனக்குக் கோபமா?? அப்படியெல்லாம் இல்லைடா, அவளோட பாஸ்ட்டை இத்தனை நாள் சொல்லாமல் இப்போ வந்து சொல்றாளேன்னு வருத்தம் தான்” எனத் தயங்கி தயங்கி சொன்னான் தேவா..
“அது தான் காரணமா? பொய் சொல்லாதேடா தேவா, நைட் ஃபுல்லா உன்னோட உளறலையும் புலம்பலையும் கேட்டுட்டு தான் இருந்தேன், உனக்கு அவளை அவ்ளோ பிடிச்சிருக்கு டா அதான் உனக்குக் கோபம் வருது” என நண்பனிடம் எடுத்துச் சொன்னான் வீரா. தேவாவால் அதற்குப் பதிலே சொல்ல முடியவில்லை, தேவாவோ அமைதி காத்தான்.
“சரி நான் தியாக்கிட்ட பேசிக்கிறேன்” என மழுப்பலாய் பதில் சொல்லி ஆஃபீஸ் செல்வதாகச் சொல்லி அவன் புறப்பட்டு விட்டான். வீராவும் அவனுடைய டிடெக்டீவ் ஏஜென்ஸிக்குப் புறப்பட்டிருந்தான்.
**********
தன் அறைக்குள் நுழைந்த வீரா கணினியை உயிர்பித்தான். அப்போது கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான் ஆதி.
“குட் மார்னிங் சார்” என வீராவை பார்த்துச் சொன்னான்.
“ம்ம் மார்னிங், ஐ ஃப்வுன்டேசன்ல சொன்ன மாதிரி எல்லாம் சரியா நடந்திட்டு இருக்குல??”
“ஆமாம் சார் எல்லமே சரியா நடந்திட்டு இருக்கு, நிச்சயம் நம்ம குற்றவாளியை கண்டுபிடிச்சிடலாம், ஹேக்கிங் தெரிஞ்சவங்க தான் இதைப் பண்ணியிருப்பாங்க சார், நம்ம வச்சிருக்கக் காம்படீசன்ல ஹேக்கிங் பண்ண தெரிஞ்சவன் அவனோட திறமையைக் காட்டி மாட்டுவான் சார்” என ஆதி சொன்னான்.
“ஓகே!! நம்ம பசங்களைக் காண்டெக்ட் பண்ணியா?? யாரும் மிஸ் ஆகக் கூடாது எல்லாரும் இந்தக் காம்படீசன்ல கலந்துக்கணும்” என்றான் வீரா.
“சார் ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட்லையும் ஆர்வம் இருக்கிற இரண்டு பேர் தான் கலந்துக்க போறாங்க”
“வாட்?? நான் என்ன சொன்னேன் என்ன பண்ணி வச்சிருக்கீங்க” எனக் கத்தினான் வீரா.
“சார் எல்லாருக்கும் இந்த ஃபீல்ட் தெரியணும்னு அவசியம் இல்லைல, அதுவும் கோடிங் சார்” என்றான் ஆதி.
“இடியட்!! அது எனக்குத் தெரியாதா?? தெரிஞ்சிக்கிட்டே தெரியாதுன்னு சொல்லி தப்பிக்கிற குற்றவாளியா இருந்தால் என்ன பண்ணுவ?? நான் கொடுத்திருக்க டாஸ்க்கை பார்த்திட்டு அந்த ஹேக்கரால சும்மா இருக்க முடியாது அவன் மாட்டுவான்” என வீரா சொல்லிக் கொண்டிருந்த போதே, அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் எனப் புரிந்தவனாய் ஐ ஃபவுன்டேசனில் இருக்கும் அவர்களின் ஆள்களுக்கு அழைப்பை விடுத்திருந்தான். அனைவரும் பங்கேற்றாக வேண்டும் என வீரா சொன்னதைப் பகிர்ந்து விட்டு வீராவை நிமிர்ந்து பார்த்தான் ஆதி.
“தெட்ஸ் குட் ஆதி” எனச் சொல்லி அவன் வேலையில் முழ்கி போனான்.
எப்படியும் ரிசல்ட் வருவதற்கு அந்தி சாய்ந்து விடும் என நினைத்துக் கொண்டிருந்தவனின் அலைப்பேசி சிணுங்கி தன் இருப்பைக் காட்டியது.
“சார்!! பேங்க்ல இருந்து பேசுறோம்” என்ற ஆணின் குரல் கேட்டவுடன்.
“சொல்லுங்க உங்க கால்க்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றான் வீரா.
“சார் உங்களுக்கு மெயில் அனுப்பியிருந்தோம் பார்த்தீங்களா??” என்றான் பணிவாய்.
“யா!! இப்போ தான் ரிசிவ் ஆகிருக்கு ஓப்பன் பண்ணிட்டு இருக்கேன் சொல்லுங்க”
“சார் நீங்க கொடுத்த அகௌண்ட் பத்தி டீடெயிலா மெயில்ல அனுப்பியிருக்கேன்.. அந்த அகௌண்ட் டெல்லியில இருக்கிற மணீஷ் பாண்டே அப்படின்ற பேர்ல ஓப்பன் ஆகிருக்கு, ட்ரன்ஸ்ஃபர் ஆன அமௌண்ட் இன்னும் அதே அகௌண்ட்ல இருக்கிறத அந்த ப்ராஞ்ச்ல இருந்து தகவல் கிடைச்சிருக்கு சார்” என வங்கி அதிகாரி சொல்ல,
“அந்த மணீஷ் பாண்டே பத்தின கேஓய்சி(kyc) டீடெயில் கண்டிப்பா உங்க ப்ராஞ்ச்ல இருக்கும்ல??” வீரா தீவிரமானன்.
“ஆமா சார்!! அந்தக் கஸ்டமரோட பான் கார்ட், ஆதார் டீடெயில்ஸ் அட்டாச் பண்ணியிருக்கேன் சார், காண்டெக்ட் நம்பர் கூடச் சேர்த்து அனுப்பியிருக்கிறேன்” என வங்கி அதிகாரி சொல்வதைக் கேட்டவுடன் இந்தக் கேஸில் பாதிக் கிணறை தாண்டி விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தான் வீரா. ஆனால் இந்த வழக்கு அவனின் நிம்மதியை ஒட்டுமொத்தமாய்க் குலைக்கப் போகிறது என்பதை அறியாமல், ஐ ஃபவுன்டேசனில் இருந்து வர இருக்கும் அழைப்புக்காகக் காத்திருந்தான் வீரா. இரண்டு நாட்களில் இதை முடித்துத் தருவதாகச் சொல்லியதை முடிக்கப் போகிறோம் என்ற நிம்மதியுடன் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் வீரா.
அந்தி சாய்ந்தது நேரம் ஐந்தை காட்டியது, குட்டி போட்ட பூணைப் போல் அறையை அளவெடுத்து நடந்துக்கொண்டிருந்தான் வீரா. ஆதி விரைந்து ஓடி வருவதைக் கண்ணாடி கதவின் வழியே பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.
“சார்!! ரிசெல்ட் ரெடியாக இருக்கிறதாம், இப்போ நம்ம அங்கே போறது மட்டும் தான் வேலை” என்றான் ஆதி, ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் காரை எடுத்துக்கொண்டு ஆதியும் வீராவும் புறப்பட்டிருந்தனர். காரை இயக்கியபடி ஆதியை பார்த்தவன்,
“உனக்கு ஒரு மெயில் செண்ட் பண்ணியிருந்தேன் பார்த்தீயா?”
“பார்த்தேன் சார், அந்த மணீஷ் பாண்டேவை பத்தி டெல்லில இருக்கிற நம்ம பசங்களை விசாரிக்கச் சொல்லியிருக்கேன். விசாரிச்சிட்டுச் சொல்லுறதா சொல்லியிருக்காங்க” என்றான் ஆதி, என்ன தான் பதிவு செய்யப்பட்ட டிடெக்டீவ் ஏஜென்சியாக இருந்தாலும்,ஸ்லீப்பர் செல் போன்ற ஆள்களைப் பணியமர்த்திப் பார்ட் டைம் வேலை போல் செய்து வைத்திருக்கிறான் வீரா.
இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் எங்கு எதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுத்து இறங்கிவிடுவான். முடிந்தவரை அவன் அந்த வேலையை முடிக்கப் பார்ப்பான் இல்லை என்றால், அங்குக் கல்வி பயிலும் மாணவர்கள், பார்ட் டைம் வேலை செய்பவர்களை வைத்து தகவலை பெற்றுக் கொள்வான்.
இருவரும் பேசியபடி ஐ ஃபவுன்டேசனின் கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு பாஸ்கரனின் அறையை நோக்கி இருவரும் விரைந்திருந்தனர்.வீராவின் வருகைக்காகக் காத்திருந்தவர் மடிக்கனிணியை எதிரே அமர்ந்திருந்த வீராவின் புறம் திருப்பினார்.
அதில் போட்டியில் கலந்து கொண்ட நபர்களின் ப்ரோக்ராம் மற்றும் கோடிங் தனித் தனியாக இருந்தது. அவுட்புட் சரியாக வந்த முதல் பத்து பேரின் ப்ரோக்ராமை நிதானமாய்க் கவனித்துப் பார்த்தான் வீரா.
“அந்தப் பத்து பேர் யாரு??” என்ற கேள்வியுடன் பாஸ்கரனை பார்க்க, அந்தப் பத்து பேரின் பெயரும் அச்சடிக்கப் பட்ட காகிதமாய் அவனிடம் ஒப்படைத்தார் பாஸ்கரன்.
வெற்றி பெற்றவர்களின் பெயர்களுடன் அவர்கள் வேலை செய்யும் பிரிவு என அனைத்தும் குறிப்பிடபட்டிருந்தது. அதிலிருந்த முதல் பெயரை பார்த்து வீராவுக்கு ஒரு குட்டி ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதைப் போல் ஓர் உணர்வு, மிதமாகத் தன் நெஞ்சை நீவியவன் தியாவின் பெயரை தொட்டு மெல்ல வருடினான்.
‘நிச்சயம் அவள் இதைச் செய்திருக்க மாட்டாள், அவள் பணத்திற்கு ஆசை படுபவள் அல்ல’ எனக் காதல் கொண்ட நெஞ்சம் கலங்கி சொல்ல,
‘அவள் செய்திருப்பாள், நிச்சயம் செய்திருப்பாள் உன்னைக் காதலித்து ஏமாற்றிச் சென்றவள், இதைச் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்??” எனக் கேள்வி எழுப்பியது அவனின் மூளை.
மனதிற்கும் மூளைக்கும் இடையே அல்லாடியவன்,
“இந்தப் பத்து பேரையும் நான் உடனே விசாரிக்கணும்” எனச் சொல்லிக் கொண்டிருந்த போதே, அவனுடைய அலைப்பேசி அலறியது. தியா காலிங் என்ற பெயரை பார்த்து முதல் முறை மன நடுக்கத்தை எதிர் கொண்டான் வீரா..
ரகசியமாய் தொடர்வோம்..