அத்தியாயம் -04
பெண் குழந்தைகள் தினமான இன்று இதை வாசிக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் (நம் பெற்றோருக்கு இன்னும் நாம் குழந்தை தானே ) நெஞ்சார்ந்த வணக்கங்கள்..நம்மால் முடிந்த வரை நல்ல எண்ணங்களை சுற்றி விதைப்போம்..அது விருட்சமாய் வளர்ந்து நாளை மற்றவர்களுக்கு பயன் கொடுக்கட்டும்..
உமையாள் இந்த உலகை விட்டு சென்று இரண்டு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், அன்று காலை நிலவொளியையும் வெண்மதியையும் அழைத்துக் கொண்டு தங்கை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் மாணிக்கம்..
வயதான மாமியார்..மனைவி இறந்த சோகத்தில் வீட்டை விட்டே வெளியே வராத சுந்தரம்..இவர்கள் இருவரில் யாரிடம் குழந்தைகளை விட்டு செல்ல? என அங்கிருந்த இரண்டு நாட்களில் எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சுந்தரமே மாணிக்கத்தை கூப்பிட்டு, “ நிலவொளிய கூட சமாளிச்சிடலாம்.. ஆனா வெண்மதி அம்மா அம்மான்னு அழுறத பார்க்கும் போதே முடியல மச்சான்.எனக்கும் உமையாள் இல்லாம உலகமே வெறுப்பா தெரியுது..பேசாம செத்துடலாம்னு தோணுது..!” என மாணிக்கத்தை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்..
இதற்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்ற முடியும் ?..மகளாக, தங்கையாக, மருமகளாக, அத்தையாக, நாத்தனாராக, அம்மாவாக என எல்லாருக்கும் ஏதோ ஒரு முறையில் அவர்கள் வாழ்கையில் சம்மந்தப்பட்டு இருந்தவள் உமையாள்..ஆனால் சுந்தரத்திற்கு அதற்கும் மேலாக அவள் தானே வாழ்க்கை..!
ஒரு அண்ணனாக தங்கையை இழந்து சொல்லொண்ணா துயரில் இருக்கிறான் தான்.. அந்த துயரை கொட்டித் தீர்க்க அவனுக்காக வீட்டில் காத்திருக்கிறாள் அவன் மனைவி.. ஆனால் இவனை துன்ப கடலில் மூழ்க வைத்ததே இவன் மனைவியாய் இருக்க எங்கனம் போய் ஆறுதல் தேடுவான்..?
சுந்தரத்திற்க்கு முன் தன் கவலை சிறியது தான் என மனதில் எண்ணம் உதயமாக , “இப்படி எல்லாம் நீயே யோசிச்சா அப்புறம் பிள்ளைங்களுக்குனு யாரு இருக்கா மச்சான்..? அவ வாழ்க்கை இப்படி தான் பாதில முடியனும்னு இருந்துருக்கு.. இதுல நீயோ நானோ செய்றதுக்கு என்ன இருக்கு சொல்லு..?விதி நமக்கு என்ன வச்சிட்டு காத்து இருக்கும்னு யாராலேயும் சொல்ல முடியாது சுந்தரம்..நீ அம்மாவ பார்த்துக்கோ.. கொஞ்ச நாளைக்கு புள்ளைங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. அங்க என் பசங்க இருக்குறதால ஓரளவுக்கு சமாளிக்க முடியும்னு நினைக்கிறேன்..நீ என்ன சொல்ற?” என அவனைப் பார்க்க,
அவனுக்கும் இது தான் சரியென பட்டது..அதனால் வெறும் 'ம்ம்ம்’ என வார்த்தைகள் இல்லா கண் அசைவில் சரி என ஒப்புக் கொண்டார்..
அவருக்கும் வேறு வழியும் இல்லை..அவருக்கோ அவர் மனைவிக்கோ யாரின் மனதையும் புண்படுத்தி பேச தெரியாது..ஆனால் எல்லாரும் அப்படி இருக்க மாட்டார்களே..!
சொந்தங்கள் என்பது நம்மவர்கள்.. நமக்கு ஒன்று என்னும் போது அதில் பங்கெடுத்துக்க முதல் உரிமை உள்ளவர்கள்..ஆனால் எத்தனை சொந்தங்கள் அப்படி நமக்கு இருக்கிறார்கள்??.. 'உன் சொந்தங்கள் யார் என்பதை உன் கஷ்டத்தில் அறிவாய்' என சொன்னது அவருக்கு உண்மையாகி போனது..!
சொந்தங்கள் என்ற பெயரில் வந்த அரக்கர்கள் துக்கம் விசாரிப்பது போல அந்த பிஞ்சு மனங்களிலும் பதியும் படி எதையாவது பேசிவிட்டு சென்றார்கள். அதை கேட்டு மூத்தவள் இவரிடம் “அம்மா இனி திரும்ப வரமாட்டாங்களாமே பா!..புது அம்மா வந்து தான் எங்களை நல்லா பார்த்துக்குமாம்.. உங்களை புது அம்மாவ கூட்டிட்டு வர சொல்லனும்னு அந்த அத்தை சொல்லிச்சு..புது அம்மா நம்ம அம்மா மாதிரி அழகா இருக்குமா.. அப்போ நம்ம அம்மா எப்போ வரும்?” என கேட்டது மட்டுமில்லாமல்.. அப்படினா என்ன? இப்படினா என்ன?' என்று அவள் கேள்வி கேட்டு குடைய அதில் திணறி போனார்..எப்படி பட்ட வார்த்தைகளை பிள்ளைகளின் முன்பு பேசியிருக்கிறார்கள் என ஆத்திரம் தான் வந்தது..ஆனால் வருபவர்களிடமும் கோபத்தில் எதையும் சொல்ல முடியாது.. எல்லாக் குடும்பங்களிலும் வீணே பிரச்சினை பண்ணவென இருக்கும் நபர்களிடம் எதை சொல்லி தான் தடுப்பது?? சொன்னாலும் கேட்கும் ரகம் அல்லவே அவர்கள்..! இதற்கு தான் மாணிக்கத்திடம் வந்து பேசினான்.. அவன் சொன்ன முடிவு ஏற்புடையதாக இருக்க பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்திருந்தார்..
இதோ இப்போது இறந்தவர்களுக்கு பதினாறாம் நாளின் போது நடக்கும் காரியத்திற்காக பிள்ளைகளை கூட்டி வருகிறார் மாணிக்கம்..மொட்டை போட்ட தலையில் சிறிதாய் முடிகள் முளைத்திருக்க, மீண்டும் தங்கள் வீட்டுக்கு வரும் மகிழ்ச்சியில் மாமனிடம் கதைப் பேசிக் கொண்டு வந்தார்கள் சிறுவர்கள்..
எப்போதும் போல பாவமாய் பார்த்து வைத்த உறவுகளை கண்டுகொள்ளாமல் உள்ளே அழைத்துச் சென்றான் குழந்தைகளை..
பிள்ளைகள் வருகைக்காக காத்திருந்த சுந்தரம் அவன் வீட்டினரும் அவர்கள் வந்ததும் சமைத்து வைத்த பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு உமையாளின் சமாதிக்கு சென்று படைத்து விட்டு வந்தனர்..அதன் பின் அன்றைய பகல் கழிய மீண்டும் மாணிக்கம் பிள்ளைகளை அழைத்து செல்ல வந்தான் ..அதை பார்த்த வள்ளியம்மை,
“ஏப்பா மாணிக்கோ! பிள்ளைங்கள இங்கனவே விட்டுட்டு போயா..அதுக இல்லாம வீடே வெறிச்சோடி போன மாதிரி இருக்கு..அதுங்களோட சிரிப்பு சத்ததுலயாவது நாங்களும் நடந்தத மறக்க முயற்சி பண்ணுறோம்” என தோய்ந்த முகத்துடன் வருத்தமாக சொல்ல,
“உங்கள நம்பி தான் என் தங்கச்சிய விட்டுட்டு போனேன்..எல்லாரும் சேர்ந்து கொண்ணுடீங்க.. இப்போ இந்த புள்ளைங்கள எந்த நம்பிக்கைல விட சொல்றீங்க?” என வாய் வரை வந்த கேள்வியை அடக்கியவன் அமைதியாய் சுந்தரத்தை நோக்கினார் 'எதுவா இருந்தாலும் நீயே சொல்லு' என்பது போல்..
அவனும் அதை தான் மாணிக்கத்திடம் சொல்ல நினைத்திருந்தான்..”இனிமே புள்ளைங்க இங்க இருக்கட்டும் மச்சான்..நாங்க பார்த்துக்குவோம்” என சொல்ல, ஒரு நிமிடம் என்ன சொல்லுவது என தயங்கியவன்.. “சரி.. நல்லா பார்த்துக்கோ..உன்ன நம்பி தான் விட்டுட்டு போறேன்” என வள்ளியம்மையை முறைத்துக் கொண்டு சொல்லி சென்றான்..அது அங்கிருந்த இருவருக்குமே புரிந்தது..
-----------------------------
நாட்கள் அசுர வேகமாய் ஓட நான்கு மாதங்கள் மின்னல் வேகத்தில் விரைந்தது..இந்த நான்கு மாதங்கள் அவர்களுக்கு எப்படி சென்றதென்றால் மிக கொடுமையான நாட்கள் அவை..
அவள் இழப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்தார்கள் தாயும் மகனும்.. வள்ளியம்மை தான் இப்போது சமைத்து வைப்பார்..தாய் கையால் இதற்கு முன் சாப்பிட்டு இருந்தாலும் மனைவியின் கைப் பக்குவதிர்க்கு அது கொஞ்சமும் ஈடாகவில்லை.. இதுவே அவரை பெரும் ஏக்கத்தில் தள்ளிவிட்டது..அவருக்கே கஷ்டமாக இருந்தது என்றால் பிள்ளைகளுக்கு ?!..
அவர்களுக்கு உமையாள் என்ன கொடுப்பாள்? .. என்ன சாப்பிடுவார்கள்? எதுவும் தெரியாத வள்ளியம்மை காலையிலேயே மொத்த பொழுதுக்கும் சோறு வடித்து சமைத்து விடுவார் அவருக்கு வசதியாய்…அதனால் பிள்ளைகள் காலை மட்டும் கஷ்டப்பட்டு சாப்பிட்டாலும் அடுத்த இரண்டு வேளை பட்டினியாய் இருக்க முதலில் அதட்டி உருட்டி கொஞ்சம் சாப்பிட வைத்தவர்.. அதன் பின் 'பசிச்சா தானா வந்து சாப்பிடும்' என அவர்கள் போக்கில் விட்டு முதல் தவறிழைத்தார்…
அதற்கு அழுதாலும் திட்டினாரே தவிர வேறு எதுவும் செய்து பிள்ளைகளின் வயிற்றை நிறைக்காது போனார்.. விளைவு ஒருநாள் சாயந்திரம் அக்காளுடன் பக்கத்துவீட்டு பிள்ளைகளோடு விளையாட போயிருந்த வெண்மதி மயங்கி சரிந்தாள்..
நிலவொளி அவளை விட சற்றே பெரியவர்களுடன் சேர்ந்து குளத்தில் மீன் பிடிக்க சென்றதால் இது தெரியாமல் போனது..
வெண்மதி கூட விளையாடிய குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து அழ, அதை கேட்ட பெரியவர்களும் ஓடி வந்து பார்க்க திகைத்தனர்..
--------------------
முற்றத்தில் மயங்கிய வெண்மதியை கிடத்தி “பாட்டி.. பாட்டி..எங்க இருக்கீங்க?” என குழந்தையை தூக்கி கொண்டு வந்த ஒருவன் கத்தி அழைத்தான்..அவர் தான் வேலைகள் செய்த (?) அசதியில் நல்ல உறக்கத்தில் இருந்தாரே..எப்படி கேட்கும்..?
“என்ன சத்தம்..யாரு பா அது ரொம்ப நேரமா கூப்பிடுறது?” என அப்போது தான் வேலை முடித்து அழுப்பில் குளித்து வந்த சுந்தரம் வெளியே எட்டிப் பார்த்தார்..பார்த்தவர் தன் மகள் இருந்த நிலையில் பதறி ஓடிவர, அவரின் போதாத காலம்..அந்த நேரம் பார்த்து பிள்ளைகளைப் பார்க்க வந்த மாணிக்கமும் அவன் மனைவியும் இதை பார்த்து அலரிவிட்டனர்..
“என்ன இது…ஏன் மதி புள்ள இப்படி கெடக்குறா..என்ன ஆச்சு?”என மூவரும் ஒரே நேரத்தில் கேட்க..
'எங்களுக்கும் தெரியல அண்ணே! புள்ளைங்க ஒன்னுகொன்னு விளையாடிட்டு தான் இருந்துக.. திடீர்னு பாத்தா இந்த பாப்பா மயங்கி விழுந்திருக்கும் போல..நாங்க போனப்போ மயங்கி கிடந்து..தண்ணி தெளிச்சு பார்த்துட்டோம்..ஆனா பாப்பா எந்திரிக்கல..பயந்து போய் இங்க உடனே தூக்கி வந்துட்டேண்ணே..எதுக்கும் ஆஸ்பித்திரி கூட்டிட்டு போயி பாருங்கண்ணே” என சொல்லிவிட்டு அப்படியே நின்றான்..
அவன் சொல்லும் போதே மாணிக்கம் அவள் கன்னத்தை தட்ட எந்த முன்னேற்றமும் இல்லை..
“தூக்கு சுந்தரம்..சீக்கிரம் ஆஸ்ப்பித்திரி போனும்” என வண்டியை கிளப்ப அவனும் பிள்ளையை வைத்துக் கொண்டு அமர.. முழு வேகத்தில் வண்டி சென்றது உமையாளைக் கொண்டு போன அதே மருத்துவமனைக்கு..
அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்..
“அந்த பொண்ணுக்கு அப்பா நீங்க தானே..என்ன சார் சாப்பாடு கொடுக்காம குழந்தைய எத்தனை நாட்கள் பட்டினி போட்டீங்க?.. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயசுனு சொல்லிருகீங்க..கொஞ்ச நாளாவே சரியா சாப்பிடல போல..பசி மயக்கத்தில மயங்கி விழுந்துருக்கு.. இப்படி தான் குழந்தைகள பார்த்துக்குவீங்களா?.. இப்போ குளுகோஸ் போட்டிருக்கேன்.. குழந்தையோட அம்மாவ கூப்பிடுங்க நா பேசணும்..” என கோவத்தில் அறைக்கு கூப்பிட்டு கத்திக் கொண்டிருந்தார்.. (எங்க கூப்பிடுறது! அவ அம்மாவ கொண்ணுக்கிட்டு இப்போ கூப்பிட சொன்னா எங்க இருந்து வருவா ?.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானே டாக்டர்
)
இது அவருக்கு பேரதிர்ச்சி .. காலையில் சீக்கிரமே வயலுக்கு சென்று விடுவார்.. மதியம் பெரும்பாலும் வீட்டிற்க்கு வருவது கிடையாது..அதனால் பிள்ளைகள் தாயின் கவனிப்பில் பத்திரமாய் இருப்பதாக நினைத்தார்.. இரவு வேலை மட்டும் உமையாள் இருந்த போது எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிட்டார்கள்..ஆனால் இப்போதெல்லாம் அதுவும் கிடையாதே.. மனைவியை இழந்த துக்கத்தில் தூக்கம் தூர போக மது எடுக்க ஆரம்பித்திருந்தார் இரவு வேளைகளில்..அதில் பிள்ளைகளை கவனிக்க தவறிவிட்ட தன் முட்டாள் தனத்தை நினைத்து இப்போது நொந்து போனார்..காலம் கடந்த அக்கறையோ ?..
மனைவியை பற்றி டாக்டர் கேட்டதற்கு என்ன சொல்வதென முழித்தவர், “அவங்க இப்போ உயிரோட இல்ல டாக்டர்” என தளர்ந்து போனவராய் சொல்ல..
“அதுனால குழந்தைகள கண்டுக்காம விட்டுடிவீங்களா? என்ன சார் இது” என இப்போது இன்னும் சத்தமாய் கத்த அவர் அவமானத்துடன் தலைகுனிந்து நின்றார் என்றால் வெளியே மாணிக்கமோ ஆத்திரத்தில் நின்றான்.. அவர்கள் பேசியது எல்லாமே அவனுக்கு தெளிவாக கேட்டது.."பச்ச பிள்ளைய கவனிக்காம வேற என்ன வேலை இவங்களுக்கு" என நெஞ்சம் கொதித்தது..
ஒருவழியாய் மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தவன் அவர் திட்டியதிலேயே உழன்று கொண்டிருக்க, மாணிக்கத்தின் இறுக்கத்தை உணராது போனான்..
அதன் பின் நேரம் ஆமை வேகத்தில் செல்ல..வெண்மதி ஓரளவுக்கு கண்கள் திறந்து எல்லோர் வயற்றிலும் பாலை வார்த்தாள்.. டிரிப்ஸ் ஏற்றிய கைகளை மகள் அசைத்திடாமல் இருக்க அவள் கைகளை பிடித்துக் கொண்டவர் பைக்கின் பின் அமர், வீடு வரும் வரை யாருமே பேசிக்கவில்லை..
வீட்டிற்குள் குழந்தையுடன் சென்றவன் நேரே தன் தாயை கடிந்துக் கொள்ள.. இங்கே நிலவொளியிடம் தன் விசாரணையை ஆரம்பித்தான் மாணிக்கம்..
“இந்த மாமா கேட்கிறதுக்கு சரியான பதில் சொல்லணும் நிலா மா..என்ன?” மனைவியுடன் இருந்தவளிடம் மெதுவாக ஆரம்பித்தான்..
“ம்ம்ம்” என்றாள் சோகமாய்..
இவர்கள் மருத்துவமனைக்கு சென்றதுமே மாணிக்கத்தின் மனைவி போய் நிலவொளியை அழைத்து வந்து தங்கைக்கு நடந்த விவரத்தை சொல்ல..எதுவுமே புரியவில்லை என்றாலும் “ ஆஸ்பத்திரி என்ற வார்த்தை அவளை பயமுறுத்தியது.. ஆம்! அங்கே போயிட்டு வந்த பிறகு தானே அம்மாவ காணும்..அதுபோல மதி பாப்பா காணாம போயிடுமோ” என்று அந்த பிஞ்சு மூளை பயமுறுத்தியது..
“அப்பத்தா உங்களை நல்லா பார்த்துக்குறாங்களா நிலா மா?” என்று அவர் கேட்க..
“ஆமா மாமா..அப்பத்தா கிட்ட தான் நாங்க இப்போ இருக்கோம்..நம்ம மதி பாப்பா கூட அதுகிட்ட தான் தூங்கும்” என்றாள் அப்பாவித்தனத்துடன்.
“அப்படி கேட்கல தங்கம்..அப்பத்தா உங்களுக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்குமா இல்லை பட்டினி போடுமா ?” என்க அதை அதிர்ச்சியாய் பார்த்தாள் அவர் மனைவி.. 'அப்படியாங்க' என்ற அவள் எதையோ புரிந்துக்கொண்டு தலையசைத்து கேட்க..'ஆம்' என்றார் கோவத்தில் கண்களை மூடி.. “இந்த சின்ன பிள்ளைங்கள போயா பட்டினி போடுறது..அப்படி என்னங்க இந்த புள்ளைங்க தப்பு பண்ணிட்டு..ச்சீ” என அவர் புலம்ப..
“இல்ல அத்த..அப்பத்தா எங்களுக்கு சோறுலாம் பொங்கி கொடுத்துடும்.. ஆனா மதிக்கும் எனக்கும் தான் அது புடிக்கல..அம்மா செஞ்ச மாதிரி இல்லாதனால நாங்க சாப்பிடமாட்டோம்..அப்பத்தாவ திட்டாதீங்க” என அவள் சொன்னதை கேட்டு இருவருமே பாவமாய் பார்த்தார்கள் ..
குழந்தைகள் எப்போதும் பொய் சொல்லாது.. அவர்களுக்கு மிகைப் படுத்தி பேசவும் வராது..பார்த்தை நடந்ததை மட்டுமே சொல்லுவார்கள்.. அதை தான் ஐந்து வயது நிலவொளியும் செய்தாள்..தங்கைக்கு நேர்ந்த கொடுமையை அவள் உணரவில்லை.. ஏன்! இவள் கூட மயங்கி இருக்க வாய்ப்புண்டு..ஆனால் பசி எடுக்கும் போது தண்ணீர் குடித்து தன்னையும் அறியாமல் பசி தீர்த்துக் கொண்டாள்.. அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு அதை செய்ய தெரியவில்லை.. இவ்வளவு தான் இதில் வித்தியாசம்..நடக்க இருந்த விபரீதம் அறியாமல் பேசுகிறாளே என்றே வருந்தியது அந்த இருவர் உள்ளமும்..இதற்கு ஒரு முடிவுடன்,
நேராக மச்சினனை அழைத்து “ சுத்தி வளைச்சு பேசல சுந்தரம்..பிள்ளைங்க கொஞ்சம் வளர்ந்து வரவரைக்கும் என் வீட்டுல இருக்கட்டும்னு யோசிக்கிறேன்.. நீ என்ன சொல்ற?” என்றார் அந்த பாசமுள்ள மாமன்..
“அது..அதுவந்து மச்சான்..” என்ன சொல்லி தடுக்க என அவருக்கு புரியவில்லை.. தவறு இங்கல்லவா இருக்கிறது..
“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு..நா யாரையும் தவறு சொல்லல..பிள்ளைங்க அவங்க அம்மா இல்லாம சரியா சாப்பிடல போல.. அத்தையும் முடிஞ்சமட்டும் எல்லாம் செஞ்சு போட்ருகாங்க.. அவங்களயும் குத்தம் சொல்ல முடியாது .. வயசானவங்க.. எழுந்து அங்க இங்க நடமாடுறதே பெருசு.. இதுல குழந்தைகள பார்த்துக்கலனு நா தப்பு சொல்லமாட்டேன்..ஆனா இதுவே என் வீட்ல என் பொஞ்சாதி இருக்கா..அம்மா இருக்காங்க.. அதுனால தான் கேட்கிறேன்” என சுயவிளக்கம் வேறு கொடுத்தான்..
இதற்கு மேலும் மறுத்தால் சரி வராது.. கொஞ்ச நாள் போகட்டும் என அனுப்பி வைத்தார்..ஆனால் கண்டிப்பாக முழு மனதுடன் இல்லை..
வள்ளியம்மைக்கு இது தெரிந்த போது இன்னும் கொத்தித்து போனவராய் ஒரு முடிவெடுத்தார்..ஏற்கனவே மாணிக்கத்தின் குத்தல் பேச்சு அவருக்கு பிடிக்காது..அதனால் மெல்ல மகனை உசுப்பேத்தி விட ஆரம்பித்தார்..
“இப்படியே இருந்தா எப்படி யா? நம்ம பேத்தின்க இங்க வளருறது தான நியாயம்!..நல்ல நாள்லயே என் பேத்திங்கள அவன் புள்ளைங்க பார்க்குற பார்வையே சரி கிடையாது.. எனக்கு என்னமோ இது சாக்காக வச்சி அவங்க சொல்லுறத கேட்டு வளருற மாதிரி நம்ம புள்ளைங்கள மாத்தி விட்டுடுவானோனு பயமா இருக்கு சுந்தரம்..” என மூக்கை சீந்தி அழுவது போல நடித்தவர்..இதுக்கெல்லாம் ஒரே தீர்வு “ நீ மறுமணம் பண்ணிக்கணும்.. வர போற பொண்ணு நம்ம புள்ளைங்கள அவ குழந்தைகளா பார்க்கும் போது இது ஒண்ணுமே இல்லாம போயிடும்” என்றார் மெதுவாய்..
“ஆத்தா..! என்ன சொல்லுற நீ..? மறுமணமா? என் உமையாள் இருந்த இடத்துல இன்னொரு பொண்ணா..? “ என கோவமாய் எழுந்து விட்டான்..
“நா என்ன யா தப்பா சொல்லிப்புட்டேன்.. ஊரு உலகத்துல நடக்காததையா சொன்னேன்.. பச்ச குழந்தைய இப்படியே அவன்கிட்ட தூக்கி கொடுத்துட்டா நாளைக்கு அதுங்க வளர்ந்த பின்ன நீ யாருன்னு உன்ன பார்த்தே கேட்க்கும்.. அப்போ என்ன யா பண்ணுவ..சரியோ தப்போ பிள்ளைங்க எப்போதுமே பெத்தவங்கிட்ட தான் வளரணும்.. அதுக்கப்புறம் உன் பாடு” என சரியாய் ஊசியில் நூலை ஏற்றினர்…
அதில் பெற்றவனுக்கே உண்டான உரிமை போராட்டம் மெல்ல எட்டிப் பார்க்க..தன் பிள்ளைகளை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது என மூளை எடுத்துரைத்தது..அதில் தாயை பார்த்து ”நீ சொல்லுற மாதிரியே செய்யுறேன் ஆத்தா..பொண்ணை பாரு” என்றான்.. இந்த இடத்தில் தான் வரும் பெண் தன் பிள்ளைகளுக்கு ஒரு தாயாய் இருப்பாளா இல்லை பேயாய் இருப்பாளா என யோசிக்க மறந்து போனான்..! முக்கியமான நேரங்களில் நம் மூளை மங்கி தான் போய் விடுகிறது..
------------------
கல்யாணம் இரண்டு வீட்டு ஆட்கள் மட்டும் இருக்க கோயிலில் மிக எளிமையாக நடந்தது..
இதை மாணிக்கம் வீட்டினர் அறிவர்..ஆனால் யாரும் தடுக்கவும் இல்லை தடை சொல்லவும் இல்லை..தந்தையான சுந்தரம் தன் பெண்களின் நலனுக்காக என்று சொல்லும் போது யார் என்ன சொல்ல முடியும்?..”என் பெண்களோட நலனுக்காக இதை செய்ய போறேன்..இதுல யாரும் தலையிட வேண்டாம்” என சொல்லி அவர்களின் வாயையும் அடைத்து விட்டார்களே!..
ஆனால் மாலையும் கழுத்துமாக தன் தங்கை இருந்த இடத்தில் வேறொரு பெண்ணை வைத்து பார்த்த நொடி மாணிக்கம் முடிவு செய்ததை செயல் படுத்த அதை புதுப்பெண் முதற்கொண்டு யாரும் எதிர்பார்க்கவில்லை..
தங்கம் தனி தங்கம் மாசு இல்ல..
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல..
தாய்வழி சொந்தம் போல பாசமில்ல நேசமில்ல ஒஹ் ஒஹ்..
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஓடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே..!
அன்புடன்,
மிர்ஷி
கருத்துக்கள் இங்கே
Che che appadi எல்லாம் இல்லமா.... Semma கொடுத்து இருந்திங்க episode... Athuyum அந்த தத்துவம் எல்லாம் romba romba arumai ah இருந்ததது..... எழுத்து நடை semma Thank you thank you chithu sis🤩🤩
www.srikalatamilnovel.com