All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிர்ஷியின் 'நிலாபெண் ஈன்ற நிலவொளியே!' - கதை திரி

Status
Not open for further replies.

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -09

“போகும்போதே எந்த கிருக்குதனமும் பண்ணிடாதனு எச்சரிச்சிட்டு தான போனேன்.. ஆனா இந்த ஆத்தா என் பேச்சையே கேட்க கூடாதுனு கங்கணம் கட்டிட்டு சுத்துது.. வயசானாலே புத்தி எல்லாம் மழுங்கிடும் போல..” நாலு எட்டு வைப்பதற்குள் எண்ண அலைகள் நாலாப் பக்கமும் சிதறி ஓடியது..


“அந்த புள்ளைக்கு என்ன தலையெழுத்தா? இப்படி ஒருத்தனை இரண்டாவதா கல்யாணம் கட்டிக்கிட்டு அனுபவிக்கனும்னு.. இந்த ஆத்தாளோட மூக்கருக்குற பேச்சால எப்படி எல்லாம் பயந்து போச்சோ.. பாவம் சின்ன பொண்ணு வேற..” என புலம்பிக்கொண்டு பின் பக்கத்தில் இருந்த அடுப்பங்கரையை நோக்கி தன் வேக எட்டுக்களை போட்டான்..


அவர்களுடையது மழை பெய்தால் உள்ளிருப்பவர்களுக்கு எந்த சேதாரமும் விளைவிக்காத சாதாரண ஓட்டு வீடு தான். உள்ளே இரண்டு அறையும் கூடவே ஒரு அடுப்பங்கரையும் மட்டுமே.


அதில் ஒன்றை சுந்தரம் – லட்சுமி மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொள்ள, அதை ஒட்டியுள்ள வரவேற்பு அறையில் வள்ளியம்மை உறங்குவார். அதுவும் சமீப காலமாக தான். வரவேற்பரையும் படுக்கையறையும் இருக்கும் அதே நீள வாக்கில், அதற்கு சமமாக வாசலுடன் ஒட்டிய ஒரு ஒடுங்கிய நீண்ட அறையுண்டு. அங்கு தான் உமையாள் இருந்தவரை வள்ளியம்மை உறங்கினார். அன்று மாட்டும் அங்கு சென்று இளைப்பாறாமல், முற்றத்திலேயே உட்கார்ந்து, உமையாளுடன் உரையாடியிருந்தால் அத்தகைய இழப்பு நேர்ந்திருக்காதோ என அவருக்குள்ளும் இருந்த ஈர மனம் எட்டி பார்த்ததில் இப்போது அந்த அறையை பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.


அந்த அறை தான் அடுப்பங்கரைக்கும் வீட்டிற்கும் உள்ள முக்கியமான பாலம்.


இன்னொரு வழி வெளி வாசலில் இருந்து சமயர்கட்டுக்கு செல்வது. ஆக மொத்தத்தில் அந்த வீட்டின் அடுப்பங்கரையால் தனித்து ஒரு அறை போல் தன்னிச்சையாக செயல்பட முடியும். பெரும்பாலும் இருட்டி விட்டால் சாப்பிட்டு முடித்த கையோடு அந்த கதவை உள்பக்கமாக அடைத்து விடுவார்கள்..


தாயிடம் சமரசம் பேசி உள்ளே அனுப்பி விட்டு, நேராக அவருடனேயே செல்லாமல் சிறிது நேர யோசனைக்கு பின் அடுப்பங்கரை வழியாக வீட்டிற்குள் செல்ல முயன்றான்.. ஆனால் வீட்டிற்குள் செல்லும் வழி உள்ளிருந்து பூட்டப் பட்டிருக்க, சமயலறையின் கதவு தாழ்ப்பாள் போடாமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.. அதில் லட்சுமி அங்குதான் இருக்கிறாள் என யூகமாய் கதவில் கை வைக்க, தள்ள வேண்டிய அவசியமே இன்றி கதவு தானாக திறந்து கொண்டது.. வெளிச்சம் எதுவும் இல்லாமல் கும்மிருட்டாக காட்சியளிக்க அதை பழகிக்கொண்டு உருவம் தெரிந்த இடத்தில் பார்வையை செலுத்தினான் சுந்தரம்..


அதேநேரம் லட்சுமியும் வாசலை தான் பார்த்து நின்றிருந்தாள்.. இருட்டிலும் அது தெளிவாகவே அவன் கண்களுக்கு தெரிந்தது.


“ஏய் லட்சுமி.. என்ன இது விளக்கு போடாம இருட்டுல நின்னுக்கிட்டு இருக்க?” என்றவர் சுவரில் தேடிப்பிடித்து ஸ்விட்ச் போட,


அங்கு தலையில் இருந்து கால் வரை நனைந்து போய், உடல் வெடவெடக்க கைகள் இரண்டையும் பின்னிருந்த திண்டை பற்றிக்கொண்டு சிவப்பேரிய கண்களுடன் நின்றிருந்தாள் லட்சுமி.


“என்ன இவ.. இப்போ போய் குளிச்சிட்டு வந்திருக்கா” என மனதில் எண்ணம் ஓட, அவளை நோக்கி முன்னேறி வந்தவனுக்கு அப்போதுதான் மண்ணெண்ணெய் வாசம் நாசியை நிரப்ப, அவளை இன்னும் கூர்ந்து கவனித்தவன் கண்களில் ஒற்றைக் கைக்குள் மடக்கி வைத்திருந்த தீப்பெட்டி தென்பட அது உணர்த்திய செய்தியில் மொத்தமாக அதிர்ந்து நின்றுவிட்டார்.


வெளியே சென்று வீடு திரும்பும் ஆணிடம் வீட்டு பெண்களே இத்தகைய நாடகத்தை அரங்கேற்றினால் பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள்..!!


அவள் தற்கொலை செய்ய முடிவெடுத்து விட்டாளா? நம்ப முடியாமல் திகைப்பில் இருந்தது இரண்டு நொடிகள் தான்..


“ஏய்… ஏய்… லட்சுமி! என்ன மா இது.. ஏன் இப்படி இருக்க? மண்ணெண்ணெய உடம்பு முழுசுக்கும் ஊத்திக்கிட்டு இது என்ன விளையாட்டு?” என சற்றே குரலை உயர்த்தி அதட்டலுடன் அவளை நெருங்கி வர முயல,


“அங்கேயே நில்லுங்க! பக்கத்துல ஒரு அடி எடுத்து வச்சாலும் என்னை நானே பொசுக்கிடுவேன்” என்றாள் குரல் உடைந்து போய்..


முதல் வாக்கியத்திலேயே அவனுக்கு வலிக்க செய்த பெண்ணை அதிர்ச்சியாக பார்த்தான் சுந்தரம்.


“என்ன லட்சுமி? என்ன வார்த்தை இது? உன் கோவம் எனக்கு புரியுது.. ஆத்தா உன் மனசு நோகும் படி எதையோ சொல்லியிருக்கு.. வயசானலே பெரியவங்களுக்கு புத்தி மழுங்கிடும்னு உனக்கு தெரியாதா? என்மேல இருக்குற அக்கறையில எதையாவது உளறியிருக்கும்.. ஆனாலும் அது என்ன சொல்லியிருந்தாலும் நா உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.. எதையும் மனசுல வச்சிக்காத மா..” என்றார் அவளை சமாதானப்படுத்தும் முனைப்போடு..


தாயின் வார்த்தைகள் அவளை தாக்கியிருக்கும் என்பதை அறிவார்.. ஆனால் தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டியிருக்கிறது என்றால் அவர் என்ன பேசியிருப்பாரோ என இப்போது பயம் அப்பிக்கொண்டது..


“எதுவா இருந்தாலும் என்கூட வா.. அவங்கள கூப்பிட்டு வச்சு பேசி நான் தீர்த்து வைக்கிறேன்.. எதுக்குமே தற்கொலை ஒரு தீர்வே கிடையாது லட்சுமி.. புரிஞ்சிக்கோ.. கையில இருக்கிறத தூர போடு மா.. நீ தான் வாழ்க்கையில எனக்கும் பிள்ளைங்களுக்கும் இப்போ இருக்க ஒரே பிடிப்பு..” மறைமுகமாக தன் விருப்பத்தை சொல்லி அவளிடம் கெஞ்சியவரை கண்டும் அவள் உள்ளம் அடங்க மறுத்ததோ?


அடுத்த அம்பில் தனக்கு வேண்டியது கிடைக்க, தேர்ந்தெடுத்த சொற்களை சரியாக தடவி அவன் மார்பில் குறிப்பார்த்து எய்தினால்..


“இல்ல.. அத்த சொன்ன மாதிரி நா எதுக்குமே உதவாதவ.. வெறும் அன்றாடங்காய்ச்சி.. உங்க முத பொண்டாட்டி மாதிரி நா கைநிறைய சொத்தும் கொண்டு வரல.. சொல்லிக்குற அளவுக்கு பணக்கார சொந்தங்களும் எனக்கில்ல.. என்னால உங்களுக்கு எப்போதுமே அவமானம் மட்டும் தான்.. இந்த அவமானம் உங்களுக்கு வேண்டாம்” என அப்படியே உட்கார்ந்து கதறி அழ, சுந்தரம் முகம் சிவக்க கைமுஷ்டி இறுக அவளை நெருங்காமல் நின்று விட்டார்..


“புகுந்த வீட்டிற்க்கு வாழ வந்த பெண்ணை அன்றாடன்காய்ச்சி என்பதா..! அது அவளுக்கு எத்தகைய இழுக்கு.. அதை கூட உணர முடியாத பெண் உண்டா..? பெண்ணுக்கு பெண்ணே எதிரிங்குறது உண்மைதானோ? கை நிறைய பணமோ நகையோ கொண்டு வந்தா தான் வீட்டுக்கு உதவுறவளா..! மகராசியா..! அப்போ ஒன்னத்தையும் கொண்டு வரலனா உதவாதவளா..! அன்றாடங்காய்ச்சியா! இதுல அந்த பொண்ணோட மனசையோ ஒழுக்கத்தையோ பார்க்கவே மாட்டாங்களா? ச்சீ.. என் ஆத்தா இவ்ளோ கீழ்தரமா பேசுமா.. அப்போ கேவலம் இந்த சொத்துக்காகவா உமையாள் மேல பாசமா இருந்துச்சு..?” என ஆயிரம் எண்ணங்கள் ஓட அதை கலைத்தது அடுத்து அவள் சொன்ன வார்த்தைகள்..


“இதுல என் அக்காங்க கூடயெல்லாம் உங்கள சேர்த்து வச்சு வாய் கூசாம பேசிட்டாங்களே அத்த.. நா தான் அடுத்த வீட்டு பிள்ள.. என்ன பிடிக்கல.. இருந்துட்டு போட்டும்.. ஆனா உங்கள சொல்ல எப்படி அவங்களுக்கு மனசு வந்தது.. அதையெல்லாம் இந்த காதால கேட்குற அளவுக்கு துர்பாக்கியவதியா ஆகி போனேனேங்க.. உங்க நல்ல மனச புரிஞ்சிக்காம இவங்களே இப்படி பேசினா ஊர் வாய் என்னவெல்லாம் சொல்லுயிருக்குமோ.. உங்களுக்கு இந்த அவமானம் எல்லாம் என்னால தானே..?” என தலையில் அடித்துக்கொண்டு கதறி அவன் நெஞ்சில் மெது மெதுவாக ஈட்டியை பாய்த்துக் கொண்டிருந்தாள்..


அவருக்கு தாயின் இந்த தகாத பேச்சுக்கள் முற்றிலும் புதிது.. அதற்கு ஒரே காரணம் உமையாளின் பொறுத்து போன குணம்… மாமியாரை பற்றி புகார் சொல்ல தெரியாத அந்த அப்பாவி பெண்ணினால் இதுவரை தப்பித்து வந்த வள்ளியம்மை இன்று சொல்லாத வார்த்தைகளுக்காக மாட்டிக்கொள்ள.. இதுதான் செய்த கர்மத்தின் பலனோ..!


அவளை அவமானப்படுத்தி குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கிய வேளையிலும் தனக்காக வருந்துகிறாளா என மலைப்பாக இருந்தது..


பற்கள் நறநறக்க, “ஏன் ஆத்தா இப்படி செஞ்ச.. என் வாழ்க்கையில இருந்து எல்லாரையும் துரத்தி விடுறியே.. உன்ன நம்பி ஒருத்தங்களையும் விட்டுட்டு போக முடியலயே..” என மனதிற்குள் குமுறியவன் முதன் முறையாக தாயின் மீது உட்ச பட்ச வெறுப்பில் உழன்றான்..


லட்சுமியின் கண்ணீருக்கு தான் எத்தனை மதிப்பு..! அவளின் ஒற்றை கதறலுக்காக இத்தனை வருடங்களில் தன்னை ஈன்றவள் தனக்காக செய்த அனைத்து நல்ல காரியங்களும் கூட கருத்தை விட்டு அகன்று விட, பூத கண்ணாடிக் கொண்டு ஆராய்ந்ததில் அவன் தாயே இப்போது தவறாக பட்டார்.


அதீத அன்பும் அதீத வெறுப்பும் உருவாக ஒரு செயல் ஒரு நொடி போதுமே..!


ஆனால் இப்போது அவருக்கு அதுவல்ல முக்கியம்… கண் முன் கதறுபவளின் கண்ணீரை எப்படியாவது களைத்தெரிய வேண்டும்..


“அப்படி எதுவும் இல்ல லட்சுமி.. நீ வாழ வந்தது என்கூட.. என் அம்மாக்கூட இல்ல.. நா உன்னை அந்த மாதிரி எல்லாம் நினைக்கவே இல்ல.. நினைக்கவும் மாட்டேன்.. உன்ன கல்யாணம் செஞ்சு நாள்ல இருந்து ஊருல எல்லாரும் என்ன பேசிக்குறாங்க தெரியுமா? சுந்தரம் ரொம்ப குடுத்துவச்சவனு சொல்றாங்க.. அதுல எனக்கு எவ்ளோ பெருமைனு உனக்கு நா எப்படி புரியவைப்பேன்..” என சொல்ல தெரியாமல் தவித்தவர், “உண்மைய சொல்லனும்னா உனக்கு நா தான் எந்த விதத்துலயும் பொருத்தமே இல்ல..” குரல் உடைய அவளருகில் அமர்ந்து இயலாமையில் விம்மினார்..


அதுவரை கதறியவள் அழுகையை நிறுத்தி அவரை நிமிர்ந்து பார்த்தாள்..


“இப்போவாவது உனக்கு புரிஞ்சிதே..” அருவருப்பில் முகம் சுருங்கியது.. ஆனால் சடுதியில் மாற்றிக் கொண்டு அவரை நெருங்கியவள் கன்னம் தொட்டு தன்னை பார்க்க வைத்தாள்.


“அய்யோ என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? உங்க மனசுல இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை வரலாமா! அதுவும் என்னால? நீங்க என்னோட தெய்வங்க.. அழகான ரெண்டு தேவதைகளுக்கு அம்மாவா உங்களுக்கு மனைவியா அமைஞ்சது எல்லாமே என்னோட பாக்கியம்..” அலைபாய்ந்த அவன் கண்களுக்குள் பார்த்து சொன்னவள்,


“நா ஒன்னு சொல்றேன்னு கோவப்படாதீங்க.. இந்த எண்ணமே தப்பு தான்.. இருந்தாலும் சொல்றேன்..” என்று ஆரம்பித்து


“அக்கா எனக்காகவே உங்களை விட்டுட்டு போயிருக்காங்கனு எத்தனையோ முறை அந்த புண்ணியவதிக்கு மனசார நன்றி சொல்லிருக்கேன் தெரியுமா.. எனக்கு உங்கள அவ்ளோ புடிக்கும்…” என்றாள் வியப்புடன் தன்னை நோக்கியவனிடம்..


“உங்களுக்கு என்ன புடிக்குமாங்க..?” பொட்டில் அடித்தாற்போல் அவன் பார்வையே பதில் கூறுகிறது.. இருந்தும் கொக்கி போட்டாள்.


இதை சொல்ல தானே தனக்கு தகுதி இல்லை என இத்தனை நாட்களாக மனதிற்குள் புளுங்கிக் கொண்டிருந்தான்..


மனைவியே மனம் திறந்து கேட்கையில் அவனுக்கு என்ன தடை? மனதில் இருந்த பாரம் முழுதாக விலகி ஓடிய உணர்வு.. அதற்கு மேலும் கட்டுபடுத்தமுடியாமல் அவளை வேகமாக இழுத்து அணைத்தவனை 'ஆடே வந்து சிக்கிடுச்சு…இனி பொலி போட்டுட வேண்டியதுதான்' என்னும் ரீதியில் அணைத்தவள்,


“பதில் சொல்லுங்க…” என சிணுங்கினாள்..


“என்னோட கைக்குள்ள சிறைப்பட்டு போய் இருக்க… இதுலயே உனக்கு புரியவேண்டாமா லட்சுமி..” என்றான் குரல் கரகரக்க..


“அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கும் தானே..! எவ்ளோ பிடிக்கும்னு சொல்றீங்களா..?” அவன் தோளில் வாகாக சாய்ந்துகொண்டு உணர்ச்சிகளை தூண்டும் விதமாக நெஞ்சில் கோலமிட்டவளை பார்த்து கிறங்கியவன்,


“சொல்றது என்ன சொல்றது… என்னோட செயல்ல நீயே தெரிஞ்சுக்கோ..!” என்று தன் செயல்களால் லட்சுமியை வேறு உலகத்திற்கு கடத்தி செல்ல, அங்கே சுந்தரத்தின் அறீவீனத்தாலும் லட்சுமியின் சாதூறியத்தாலும் இயல்பாக, இயற்கையாக நடக்க வேண்டிய தாம்பத்தியம் தனி ஒருத்தியின் சூழ்ச்சியால் சத்தமில்லாமல் ஈடேரியது..


---------------------


அடுத்து வந்த நாட்களில் தன் சொல் எடுபடாமல் போனதில், லட்சுமியை விரட்டாமல் அவளுடன் அன்னியோன்யமாக இருந்ததில் வள்ளியம்மைக்கு நன்றாகவே புரிந்தது இது வந்தவளின் கைங்கர்யம் என்று..


அதிலும் மகன் தன்னிடம் நேராக வந்து “எங்களை விட்டு ஒதுங்கியே இரு” என்று எச்சரித்துவிட்டு சென்றது நெருஞ்சி முள்ளாய் பெற்றவளை குத்தியது..


மகனை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள் என சதா உர்ரென எதையாவது வாய்க்குள்ளாகவே முணுமுணுத்து கொண்டு வீட்டை சுற்றி வசைபாடினார்.. அவரால் அதை மட்டுமே செய்ய முடிந்தது..


இதை பார்த்த லட்சுமிக்கு சொல்லவும் வேண்டுமா? அவள் காட்டில் அடைமழை வெளுத்து வாங்கியது.. தன் திட்டம் ஒவ்வொன்றாக ஈடேறும் மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரிய வீட்டில் வளைய வந்தாள்..


இப்போதெல்லாம் கணவன் இவளிடம் காசை கொடுத்து செல்கிறான்.. தேவைக்கும் அதிகமாகவே கையில் பணபுழக்கம் இருந்தது.. விளைவு, வேண்டிய நேரங்களில் கணவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் சகோதரிகளுக்கு உதவி தன் செல்வ நிலையை பெருமையுடன் பறைசாற்றினாள்..


'அம்மா அம்மா' என கால்லை சுற்றும் குழந்தைகள் ஒரு பக்கம்.. முந்தானையை பிடித்துக் கொண்டு பூனைக்குட்டி போல் பின்னாடியே ஓடிவரும் கணவன் மறுபக்கம் என இருந்தவள் கிடைக்கும் நேரங்களில் மாமியாரை வார்த்தைகளால் பொசுக்கவும் தவறவில்லை.. மொத்தத்தில் ஒரே ராத்திரியில் அந்த வீட்டின் மகராணியாகி போனாள் லட்சுமி..


இப்படியே மாதங்கள் உருண்டோட, உமையாளின் முதல் வருட நினைவு நாளன்று லட்சுமி கருவுற்ற செய்தி எல்லோர் காதிற்கும் வந்து சேர்ந்தது..



பதினைந்து வருடங்களுக்கு பிறகு……



அன்புடன்,
மிர்ஷி 😍

கருத்துக்கள் இங்கே,

 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 10(a)


பதினைந்து வருடங்களுக்கு பிறகு……



புலர்ந்தும் புலராத காலை பொழுதில் ஆங்காங்கே தெருவிளக்குகளின் வெளிச்சம் பரவியிருக்க, வீட்டு பெண்கள் சிலர் அப்போது தான் எழுந்து முற்றத்தை பெருக்கி, சாணத்தால் வாசலை மொழுகி கோலமிட்டு கொண்டிருந்தனர்..


இன்னும் சிலர் தாங்கள் வளர்க்கும் மாட்டில் பால் கறந்து கொண்டிருக்க, இவை எல்லாம் எப்போதோ செய்துவிட்ட லட்சுமியின் வீட்டிலோ 'டக் டக் டக் டக்' என இடைவிடாது சத்தம் ஒலித்தது..


“ஏய்.. இந்தாங்கட்டி .. பால்காரன் வர்ற சத்தம் கேட்குது.. நா போயி குடுத்துட்டு வரதுக்குள்ள ரெண்டு பேரும் இந்த வேலைய முடிச்சிருக்கணும்..” என ஊருக்கே கேட்கும்படி கத்திய லட்சுமி பால் கேன்னுடன் வெளியே ஓடினாள்..


அவள் சென்று விட்டாளா என எட்டி பார்த்த ஒரு ஜோடி கண்கள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் திரும்பி பார்த்து செரும, “போயிட்டாளா! அய்யோ முடியல டி.. கையெல்லாம் ரொம்ப வலிக்குது..” என செய்யும் வேலையை நிறுத்தி அப்படியே திண்ணையில் சரிந்தாள் சுந்தரம் உமையாளின் மூத்த மகள் நிலவொளி.


“அக்கா.. எந்திரிச்சு வேலையை முடிச்சிடு.. சித்தி வந்தா திட்டுவா..” நேராய் இருந்த இன்னொரு திண்டில் கோரை பாய்யை வேக வேகமாய் கொடுத்து இயந்திரத்தால் பின்னிக்கொண்டிருந்த வெண்மதி வாசலையும் தன் சகோதரியையும் பார்த்துவிட்டு பயத்துடன் தன் வேலையை தொடர்ந்தாள்.


அவள் திரும்பி வருவதற்குள் ஆளுக்கொரு பாய்யை பின்னி முடித்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் அவர்களுக்கான தண்டனை அன்றைய காலை உணவு கிடையாது.


வெண்மதிக்கும் கை வலிக்கிறது.. ஆனால் இயந்திரத்தை நிறுத்திவிட்டால் எங்கே சத்தம் நின்று இருவரும் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சம் அவளை தொடர்ந்து வேலை செய்ய தூண்டியது..


தூரத்தில் இருந்தே பூனை நடை போட்டு சத்தமின்றி வந்து திட்டும் சித்தியால் ஒருபக்கம் நடுக்கம் என்றால்.. தாய் இல்லாத நேரங்களில் நடப்பவற்றை கவனித்து அப்படியே பத்திவைக்கும் தங்கையால் இன்னொரு பக்கம் பயம்.


“அக்கா.. தூங்காத கா.. எந்திரி.. நேரமாச்சு பாரு..” கால் மணி நேரம் கடந்திருக்க, பதற்றத்தில் சகோதரியை மீண்டும் எழுப்பினாள்.


“ம்..” முணங்கிய நிலாவுக்கு கண்கள் இரண்டும் தீயாய் எரிந்தது.. மெதுவாக எழுந்து போய் முகம் கழுவி வந்து அமர்ந்தவள் விட்ட வேலையை கொட்டாவியுடன் தொடர்ந்தாள்.



-----------------



“என்னட்டி, முடிஞ்சா..!” வீட்டிற்குள் நுழைகையிலேயே லட்சுமி உருமினாள்.. அன்று மாத கடைசி நாள் என்பதால் பாலுக்குண்டான கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு வீடு திரும்ப சற்று நேரம் ஆகியிருக்க, அந்த நேரத்தை பயன்படுத்தி முடித்துவிட்டாள் நிலா..


“ஆச்சு சித்தி..” உள்ளே இருந்து மதி ஓடி வந்தாள்.


“அவ எங்க..?” பணத்தை பெட்டிக்குள் வைத்தவாறு அடுத்த கேள்வி..


“அக்கா பொறத்த பால் காய்க்குது..” அவசர அவசரமாக பதிலளித்தாள்.


“ஆஹ், சரி சரி காய்ச்சதும் தம்பி தங்கச்சிய எழுப்பி பால குடுத்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க.. நா போய் தோப்புல தேங்காய் ஏதாவது விழுந்துருக்கானு பார்த்துட்டாரேன்..” இரண்டு நிமிடம் கூட நிற்காமல் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை ஏவிவிட்டு ஓடினாள்.


'தங்கச்சி தம்பிக்கும் குடுத்துடுங்க..!' என்ற வாக்கியத்தில் மெல்ல உள்பக்க அறையை எட்டிப்பார்த்தாள் வெண்மதி..


எந்தவித கவலையுமின்றி மின்விசிறியின் உபயத்தால் விடிந்தது கூட தெரியாமல் படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள் தங்கையும் தம்பிகளும்..


தங்கையும் தம்பிகளுமா??


ஆம், சுந்தரம் லட்சுமியின் தாம்பத்திய வாழ்கையில் நடந்த சாதனை தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரிசையாக பிறந்த மூன்று குழந்தைகள்.


முதலாவதாக அத்தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறக்க, கையில் தவழ்ந்த பெண் குழந்தையை பார்த்து சுந்தரத்தின் முகம் தொங்கி போனது..


“தனக்கு மூன்று பெண் குழந்தைகள். வாரிசு கொடுப்பினை இல்லையோ..! இதுதான் கடவுள் விட்ட வழியோ..! அப்போ இதுவே போதும்” என ஒரு தந்தையாய் அவர் பக்கத்தில் இருந்து யோசித்து முடிவுக்கு வந்துவிட்டார்..


ஆனால் லட்சுமி விடுவதாய் இல்லை..


அவளுக்கு ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கை ஜோசியம், குறி சொன்னவர்கள் ஏராளம்.. அவர்களின் சொல்லை வலுவாக பிடித்துக் கொண்டு கணவனை வற்புறுத்தினாள்.. அதுபோலவே பிறந்தார்கள் அடுத்த இரண்டு ஆண் பிள்ளைகள் வரிசையாக..


சுந்தரத்திற்க்கு அந்த நிமிட சந்தோஷத்திற்கு ஈடு இணையே இல்லை.. முதல்முறை நிலவொளியை கையில் தூக்கிய நொடியை காட்டிலும் அதீத சந்தோஷம் இப்போது.. என்ன இருந்தாலும் தகப்பனுக்கு கொள்ளி வைக்க பிறந்த வாரீசு அல்லவா அவர்கள்..!


லட்சுமி வெளியே சென்றதும் நிலாவிடம் சென்றவள் சித்தி சொன்ன வேலைகளை அப்படியே ஒப்புவித்தாள்..


“ம்ம்ம்ம்..”


அதை தவிர நிலா வேறு எதுவுமே சொல்லவில்லை.. அதை பார்த்த மதி பெருமூச்சுடன் அவளருகில் அமர்ந்தாள்.


“என்னக்கா.. ரொம்ப வலிக்குதா.. நீ போய் கொஞ்ச நேரம் படுத்துக்க.. சித்தி வர எப்படியும் நேரமாகும்.. இத நா பார்த்துக்குறேன்..” அன்போடு அருகில் அமர்ந்தவளை பார்த்து நிலாவுக்கு கண்கள் கரித்தது..


மாதவிடாய் நாட்களின் தொடக்கத்தில் இருந்தாள் நிலா.. செய்ய வேண்டிய வேலைகள் ஒரு பக்கம் குவிந்து கிடக்க, வயிற்று வலி, கால் வலி அவளை படுத்தி எடுத்தது.. அவளுக்கும் போய் எங்காவது ஒரு ஓரத்தில் சுருண்டுக் கொள்ள தான் ஆசை.. ஆனால் அவள் கொண்ட வைராக்கியம் அவளை தடுத்தது..


“அதெல்லாம் இல்ல மதி.. எப்பையும் வர வலி தான..! சரியா போயிடும்.. நீ போய் மூணு பேர்த்தையும் எழுப்பி விடு.. அதுக்குள்ள நானும் பால ஆத்திடுவேன்..” கொதித்து வந்த நுறைகளை ஆற்றியவாரு பதில் கொடுக்க, 'சொன்னாலும் கேட்க மாட்டா' என வருத்தத்துடன் எழுந்து சென்றாள் வெண்மதி.


சிறிது நேரத்தில் இலக்கியா பல் துலக்குயவாரு சோம்பலுடன் வெளியே வந்தாள்.. இவள் தான் நிலா, மதிக்கு அடுத்து சுந்தரத்திற்கு பிறந்த பெண்.. அதாவது லட்சுமியின் பெண்.. அவள் மற்ற இரு பெண்களையும் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டாள்.. அப்படி அந்த வீட்டில் ஒரு பிரிவினையை உருவாக்கி அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்திருந்தால் லட்சுமி.. தன் தம்பிகளுடன் பேசியவாரு நின்றிருந்தவளை நிலா, மதி கூட பெரிதாக கண்டுக்காது தங்கள் வேலைகளை பார்த்தனர்.. அவர்களுக்கு இது ஒன்றும் புதுசல்லவே!


இலக்கியாவிற்கு நிலா, மதி இருவரையும் பல காரணங்களால் பிடிக்காது.. அத்தனையும் தாயால் உருவானது அன்று.. சில சொந்த வெறுப்புகளும் உண்டு.


வயதுக்கு வந்த இந்த ஓராண்டில் அவர்கள் இருவரிடமும் இருக்கும் இயற்கையான அழகும், வெள்ளைத் தோலும் தன்னிடம் இல்லையே என்கிற ஏக்கம்.. முட்டிக்கு கீழே வரை அசைந்தாடுகிற அடர்த்தியான அழகான கூந்தல் தன்னிடம் இல்லையே என்கிற பொறாமை.. அவர்களை போல் மெல்லிய இடையாளாய் தான் இல்லையே என்கிற இயாலாமை.. எல்லாம் சேர்த்து அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைத்திருக்க, அந்த நேரம் பார்த்து தாய் சொன்ன “அவர்கள் இருவரையும் போல் நீ இல்லாததற்கு காரணம் அவர்கள் அப்பாவின் மூத்த தாரத்தின் பிள்ளைகள்” என்னும் வார்த்தை ஓரளவுக்கு புரிய அவர்களை வெறுத்து ஒதுக்க காரண கர்த்தாவாக மாறியது.


ஆனால் இதை அறிந்தாலுமே அவள் சகோதரர்களுக்கு மூன்று அக்காளுமே ஒன்று தான்.. இருவருமே இலக்கியாவிடம் பேசியபின் நிலாவிடம் சென்றார்கள்..


“அக்கா.. பல் தேய்ச்சிடோம்.. பால ஆத்திட்டியா..?” என வந்த அன்பு, குமார் இருவரிடமும் மென்னகையுடன் ஆளுக்கொரு கப்பை கொடுத்தவள் அடுத்து அவர்கள் குளித்து உணவுண்டு பள்ளிக்கூடம் செல்லும் வரை பம்பரமாய் சுழல, வெண்மதியோ நேரத்தை வீணாக்காமல் மீண்டும் பாய்யை பின்ன அமர்ந்து விட்டாள்.


இதை எல்லாம் கோவத்துடன் பார்த்து நின்றாள் இலக்கியா.. நிலாவிடம் அன்பாக பேசும் தம்பிகளை அவளால் தடுக்க முடியாது.. ஏனெனில் அன்பு, குமார் இருவரையும் வளர்த்ததே நிலவொளி அல்லவா!


நடை பயில வைத்த காலம் தொட்டு குளிக்க வைப்பது, உணவு ஊட்டுவது, தூங்க வைப்பது என முகம் சுளிக்கும் வேலைகளை கூட எந்த வித பேதமும் இன்றி செய்தவள் அவள் தானே.. சொல்ல போனால் அவர்கள் மூவருக்குமே அவள் தான் இரண்டாம் தாய்.. என்னவொண்ணு இதை இப்போதிருக்கும் இலக்கியா ஏற்கமாட்டாள்.


சகோதரர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு “அப்பாடி..” என வலியில் இடுப்பை பிடித்துக்கொண்டு வந்த நிலா முன் “உன்னால தான் டி.. உன்னால மட்டும் தான்டி நா இப்படி இருக்கேன்..” என சண்டைக் கோழியாய் சிலிர்த்து நின்றாள் இலக்கியா.


“நா உன்ன என்ன இலக்கியா பண்ணினேன்?” இருக்கும் வலியில் இவள் வேற என நினைத்தாலும் பொறுமையாகவே கேட்டாள் நிலா.


“நீ என்னடி பண்ணல.. என் படிப்பையே கெடுத்த பாவி நீ.. உன்னால தான் இப்படி பள்ளிக்கூடம் போக முடியாம படிப்ப தொலச்சிக்கிட்டு நிக்குறேன்.. உன்னால தான்.. எல்லாமே உன்னால மட்டும் தான்டி..” கண்கள் மொத்தமும் வெறியுடன் கேட்டவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பதென புரியாமல் திகைத்து நின்றாள் நிலவொளி.


10(b) தொடர்ச்சி அடுத்த பதிவில்...


அன்புடன்,
மிர்ஷி 😍


கருத்துக்கள் இங்கே,
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-10 (b)


“நா என்னத்த செஞ்சேன் இலக்கியா? சித்தி தான் உன்ன போக வேண்டானு சொல்லிச்சு.. தேவையில்லாம எல்லாத்துக்கும் என்ன பழி போடாத.. தெனோ உன்னோட ஒரே ரோதனையா போச்சு.. தள்ளு.. எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு..” சொன்னாலும் இவள் புரிந்துகொள்ளும் ரகமில்லை என்பதால் நிலா ஒதுங்கி போக நினைத்தாள்..


“என்ன சொன்ன… என்ன சொன்ன? நா பழி போடுறேனா? பத்தாவது படிக்கும்போதே படிப்பு வராம பாதியில விட்டவ நீ.. நல்லா படிச்சாலும், உன்ன பார்த்தே அந்த ஊமாங்கொட்டையும் விட்டுட்டா..! ஆனா ஊர் காரங்க என்னமோ என் அம்மா தான் உங்கள படிக்க விடாம செஞ்சமாதிரி “மூத்த தாரத்து புள்ளைங்கள படிக்க விடாம உன் பொண்ண மட்டும் படிக்கவைக்குறது நியாயமா'னு கேட்டா பாவம் அவ என்ன செய்வா..?” தன் தாய்க்கு வக்காலத்து வாங்கினாள் சின்னவள்..


“இப்போ சொல்லு உன்னால தான என் படிப்பு போச்சு.. உன்னால தான நா இப்படி எட்டாவதுலேயே என் படிப்ப தொலச்சிட்டு நிக்குறேன்..” உக்கிரமாய் முறைத்தாள்..


அவள் சொல்வது பாதி உண்மையே..! படிக்க பயந்து பள்ளிக்கூடம் செல்ல இவள் தான் மறுத்தாள்.. ஆனால் அது படிப்பு வராமல் அல்ல.. படிக்கும் காலத்திலேயே அவள் மீது சுமத்தப்பட்ட அதீத சுமையினால்.. சொன்னாலும் இவளுக்கு புரியாது என எண்ணியவள்,


“இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல இலக்கியா.. உனக்கு படிக்கணும்னு ஆச இருந்தா உன் அம்மாக்கிட்ட சொல்லு.. இப்போ வழிய விடு டி.. எனக்கு வேலை இருக்கு..”


முறைக்கும் தங்கையை காண்டுக் கொள்ளாமல் நேராக சென்று திண்ணையில் அமர்ந்தவள் மெஷினை ஓட விட்டு வேலையை தொடர, “நடக்காதுனு நெனைக்குறியா நிலா? என் அம்மாக்கிட்ட சொன்னா கண்டிப்பா செய்யும் எனக்காக.. இதுக்காகவே பள்ளிக்கூடம் போய் காட்டுறேன் டி..” சூளுரைத்துக் கொண்டு அவர்களைத் தாண்டி முக திருப்பலுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.



-----------------


“எனக்கு தெரியாது.. யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவல இல்ல.. என்ன பள்ளிக்கூடத்துல சேர்த்து விடு.. என் கூட உள்ள புள்ளைங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளா வரும்.. நா மட்டும் இவளுங்க கூட சேர்ந்து பாய்ய பின்னணுமா.. அதுக்கு நா செத்தே போவேன்..”


லட்சுமி வீட்டிற்க்கு வந்த நேரம் தொட்டு, தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது.. இலக்கியாவின் பிடிவாதம் நேரமாக ஆக அதிகரித்து கொண்டே செல்ல, ஓரிடத்தில் பேச்சு முற்றியது.


“செத்து போயேன்ட்டி… என் பேச்ச கேட்டு இருக்க முடியலனா செத்தே போ.. சனியே விட்டதுனு நானாவது நிம்மதியா இருப்பேன்..” என்றவர் மனந்தாங்கமல் “சொல்லுவியா.. இன்னொரு முறை செத்து போவேனு சொல்லுவியா..” தன் மகள் என்றும் பார்க்காமல் கையில் கிடைத்த துடைப்பத்தால் அடிக்க,


“சொல்லமாட்டேன் மா.. தெரியாம சொல்லிட்டேன்.. இனி இப்படி கேட்கவே மாட்டேன்.. வலிக்குது மா.. விட்டுட்டு.. ஆஆஆ.. அம்மாஆஆ..” வலி தாங்காது கதறிவிட்டாள் இலக்கியா..


அதுவரை யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த நிலா உள்ளே ஓடினாள். அக்கா ஓடி செல்லவும், தானும் எழுந்து உள்ளே சென்றாள் மதி.


“சித்தி.. விடுங்க.. அவ சின்ன பொண்ணு சித்தி.. ஏதோ தெரியாம பேசிட்டா.. அடிக்காதீங்க.. அவ தாங்க மாட்டா..” தங்கைக்கு அரணாய் நின்று தடுக்க முயன்றாள்.


“ஏய்ய்ய்.. தள்ளி போட்டி.. அவ ஒருநாளும் இல்லாம இன்னைக்கு இவ்ளோ பிடிவாதம் பிடிக்க காரணமே நீ தான்.. சின்ன பொண்ணு கோவத்துல ரெண்டு வார்த்த சொன்ன, பொறுத்து போக தெரியாதோ? எம்புள்ளைய தூண்டி விட்டு என்கையால அடிவாங்கி கொடுத்துட்டல.. இந்த மாதிரி அவகிட்ட பேசுவியா இனிமே? பேசுவியா..?” தடுக்க வந்தவளுக்கும் அடி தாரு மாறாக விழுந்தது.. என்ன செய்வதென்று தெரியாமல் மதி ஒருபக்கம் அழ, அடிவாங்கிய இலக்கியா ஒருபக்கம் நிலா வாங்குகிற அடியை எண்ணி நிம்மதியுடன் அழ, அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு பாறையின் உறுதியோடு நின்றாள் நிலவொளி.


“எம்புள்ள கிட்ட எடுக்கு மடக்கா எது பேசினாலும் இந்த அடி உனக்கு நினைவிருக்கட்டும்..” அவள் கை வலிக்கும் வரை அடித்து ஓய்ந்தவள், எச்சரித்துவிட்டே உள்ளே சென்றாள்.


“ஏங்க்கா தங்கச்சிக்கிட்ட அந்த மாதிரி கோவமா பேசின? நமக்கு தெரியும்ல அவ அப்படியே சித்திக்கிட்ட போட்டு கொடுத்துடுவானு.. அவ என்ன சொன்னாலும் நாம அமைதியாவே போயிடுவோம் கா.. இந்த அடி தேவையா? பாரு, கையெல்லாம் செவந்து போயிட்டு.. வா வந்து மருந்து போட்டுக்க..” அழுதுக்கொண்டே வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்த நிலாவை இழுத்துக்கொண்டு சென்றாள் மதி.


இது இன்று நேற்று நடப்பது இல்லை.. லட்சுமியின் கோவதிற்கான வடிகாலே உமையாளின் தவபுதல்வி நிலவொளி தான். அவள் செய்தவற்றிர்க்கும் அடிவுண்டு, செய்யாதவற்றிற்கும் அடிவுண்டு..


நிலவொளி பொறுமைசாலி என்றாலும் சில நேரங்களில் லட்சுமியை எதிர்த்து பேசிவிடுவாள்.. விளைவு, காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்னிப்பு கேட்டாள் மட்டுமே பாதி அடியியிலிருந்து தப்பமுடியும். இளையவள் மதி, ஒரு வாயில்லா பூச்சி. அதிகம் பேசாத, பேசதெரியாத பெண்.. வளரும் போதே அதிகம் யாரிடமும் பழக விடாததால், அவளுடைய பேச்சு நிலாவோடு நின்றுபோனது..


“விடு மதி.. இது என்ன நமக்கு புதுசா.. அடிவாங்கி அடிவாங்கி உடம்பெல்லாம் மறந்து போச்சு.. நீ போய் வேலைய பாரு.. இல்லைன்னா இலக்கியாவ அடிச்ச கோவம் அடுத்து உன்மேல திரும்பும்” தங்கையை விரட்டியவள் வீங்கிய தன் கை முழுக்க தைலம் தடவினாள்.



---------------


“எல்லாமே இவளாலக்கா.. இந்த வயசுலயே என்ன பிடிவாதம் பிடிக்குது கழுத..” இலக்கியாவை முறைத்துக்கொண்டே தன் மூத்த சகோதரி பார்வதி வீட்டிற்கு வந்திருந்த லட்சுமி மகளைப் பற்றி குறைக் கூறலானாள்.


“ஏன்டா தங்கம் அப்படி பண்ணின.. அதான் பள்ளிக்கூடம் போவேண்டானு அம்மா சொல்லிட்டுல்ல.. கேட்டு நடந்துருந்தா இப்போ இந்த அடி தேவையா சொல்லு..” அவள் கைகளைப் பிடித்து திருப்பி ஆராய,


“அதெல்லாம் மெதுவா தான் அடிச்சேன்.. எங்கேயும் வீங்கியிருக்காது.. வலிக்கவும் செஞ்சிருக்காது.. கழுத நடிக்குது.." லட்சுமி


“வீங்க மட்டும் தான் செய்யல.. ஆனா எவ்ளோ வலிச்சது தெரியுமா பெரியம்மா உனக்கு?” இலக்கியா தாயை மாட்டிவிட,


“அடிச்சேனு வை.. பொய் பொய்யி.. என் கண்ணு முன்னாடி நிற்காம ஓடி போயிரு.. செத்திருவாளம்ல.. அதுவும் என்கிட்டயே எம்புட்டு தைரியமா சொல்ற..” லட்சுமி அடிக்க கை ஓங்க, உதடு பிதுங்க மீண்டும் அழ போனாள் இலக்கியா.


“சும்மா இரேன் டி..” தங்கையை அதட்டிய பார்வதி, “இலக்கியா.. உள்ள அக்கா இருப்பா.. போ.. போய் அவளோட இருந்து பேசு” என தன் மகளிடம் அனுப்பி வைத்தவள் தங்கையிடம் திரும்பி, “ இப்போ சொல்லு.. எதுக்கு நம்ம புள்ளைய போட்டு அடிச்ச?” என்றார் கறாராக. தன் மகளையே அடித்திருக்கிறால் என்றால் எதுவோ நடந்திருக்கும் என யூகித்தவராய் கேட்க,


“இவள படிக்க அனுப்புறது எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. எவன் என்ன சொல்லிட போறான்.. என்கிட்ட வந்து பேச அம்புட்டு தைரியம் இருக்க எவனுக்கும்.. ஆனால் என் பயமே வேற..” என்றவள் தொடர்ந்து,


“இப்போ இவள அனுப்பி விட்டேன்னு வையி.. அடுத்து அந்த மதியையும் அனுப்ப வேண்டிய நிலை வரும்.. நம்ம இலக்கியாவ விட மூணு வயசு வித்தியாசம் இருந்தாலும் அவ படிச்ச தினுசுக்கு இப்போ போனாலும் பள்ளிக்கூடத்துல சேர்த்துக்குவாங்க.. அம்புட்டு நல்லா படிக்குற புள்ள.. படிக்க ஆசப்பட்ட அவள, அவ அக்காக்காரிய காட்டி, வயசுக்கு வந்த பிறகு எங்கேயும் போக கூடாதுனு சொல்லி நா தான் வீட்டோட உட்கார வச்சேன்.. அந்த நிலாப் புள்ளைய அதிக வேலைய கொடுத்து படிக்க விடாம செஞ்சதும் நா தான்.. இப்போ நா பெத்துவச்சத மட்டும் படிச்சு பெரிய உத்தியோகத்துக்கு போனு அனுப்புனா, அவ பள்ளிக்கூட வாத்தியானே வந்து மதிய கூட்டிட்டு போனாலும் ஆச்சர்யபட ஒன்னுமில்ல..” என்றாள் எரிச்சலாக.


“அதுக்கு என்ன டி.. அவ எக்கேடு கெட்டு போனா நமக்கு என்ன? நம்ம புள்ளைக்கு நாலு எழுத்து தெறியுமில்ல..” என்ற பார்வதியை முறைத்த லட்சுமி,


“விவரமில்லாம பேசாத.. இப்போ பாரு, அவளுக ரெண்டு பேராலயும் தான் நித்தமும் கை செலவுக்கு கணிசமா காசு வந்துட்டு இருக்கு.. என் புள்ளைய படிக்க அனுப்பினா அடுத்து நா சொல்றது தான் நடக்கும்.. அப்புறம் வீட்டு வேலையா யாரு செய்வா? வாங்கி போட்ட மெஷின யாரு ஒட்டுவா?” என்றதும் தான் பார்வதிக்கு புரிய,


“ஓ, இப்படி வேற ஒன்னு இருக்கா..!” என வாய்விட்டு சொன்னாள் பார்வதி.


“ஆனால் சும்மா சொல்லக்கூடாது பார்வதிக்கா.. அந்த ரெண்டு புள்ளைங்களுக்கும் எவ்ளோ அடிக் கொடுத்து வேலைய வாங்கினாலும், கொஞ்சம் பாசமா பேசிட்டா போதும்.. என் பின்னாடியே நாய் மாதிரி வாலாட்டிட்டு வந்துடுதுங்க” என சிரிக்க,


“அதுதான டி நமக்கும் வேணும்” இரு பெண்களின் வாழ்கையை கையில் எடுத்து பந்தாடுகிறோமே என்ற வருத்தம் சிறிதுமின்றி சிரித்துக் கொண்டனர் சகோதரிகள் இருவரும்.



--------------------


இரவு ஒன்பது மணிக்கே அனைவரும் உணவை முடித்துக்கொண்டு உறங்கிவிட, பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி வைத்த சகோதரிகள் இருவரும் விளக்கை அணைத்து கொண்டு படுக்கையில் விழுந்தனர்.


நிலாவுக்கு முதுகு வலி உயிரை எடுக்க அன்றைய நாள் முழுதும் செய்த வேலை, அடிவாங்கியதால் ஏற்ப்பட்ட உடல் வலி எல்லாம் சேர்த்து கண்களில் காட்டாற்று வெள்ளமாய் கண்ணீரை உற்பத்தி செய்தது..


“வலிக்குது சித்தி.. உயிரே போற மாதிரி இருக்கு.. கொஞ்ச நேரம் இங்க படுத்துக்குறேன்..” என்றோ ஒருநாள் இந்த பாழாப்போன வயிற்று வலியை தாங்கமுடியாமல் லட்சுமியிடம் கேட்டு,


“ஏன்ட்டி வேலை செய்ய சோம்பற பட்டு அந்த அளவுக்கு பொய் சொல்ல கத்துக்கிட்டியா..! வலி எடுத்து நீ செத்து போனா போய் தொல.. பருப்பு குழம்பு சாப்பிட்டது ஒத்துக்காம வாயு வந்து செத்து போயிட்டனு உன் அப்பன்கிட்ட சொல்லி நம்ப வச்சுக்குறேன்..” என்றவர் கோவம் தீரும் மட்டும் விளக்குமாத்தால் அடிக்க, பதினாறு வயதில் வாங்கிய அடி அவளுக்கு கிடைத்த மிக பெரிய வாழ்க்கை பாடம்..


அவள் கடந்து வந்த இந்த பதினைந்து வருடங்களில் அந்த வீட்டையும், தங்களின் வாழ்கையையும் தவிர எல்லாமே, எல்லாருமே மாறியிருந்தனர்.


தன்னுடைய ஆறாம் வயது வரை சிறகை விரித்தாடும் பறவையாய் சந்தோஷமாய் சுற்ற திரிந்தவளை,


“அம்மாக்கு உடம்பு சரியில்ல நிலா பாப்பா.. கொஞ்சம் இந்த வீட்டை பெருக்கிடு..” முதன்முறையாக கருவுற்றிருந்த நேரம் லட்சுமி கட்டி போட்டார்.


“இனிமே இதெல்லாம் நீ தான் செய்யணும் நிலவொளி.. அம்மா தங்கச்சி பாப்பாவ வச்சிருக்குல.. ரெண்டு பேருக்கும் உதவி பண்ணினா தான சீக்கிரம் குட்டி பாப்பா உங்ககூட வந்து விளையாடும்..” இது சுந்தரம்.. மனைவிக்கு மகள் துணையாக இருக்கவேண்டும் என அந்த வேலையை ஊக்குவித்தார்.


அவளுடைய எட்டு வயதில் அன்பு பிறக்க, ஆண் குழந்தை என்றதும் லட்சுமியை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தது குடும்பம்.. வேண்டாத மருமகள் என்ற நிலைப்பாடு போய் தாமாக சென்று பேசினார் வள்ளியம்மை. அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் தாயும் மகனும்.. இதனால், மற்ற வேலைகளுடன் இலக்கியாவை கவனிக்கும் பொறுப்பும் நிலாவின் தலையில் விழ, அதை துள்ளலுடனே ஏற்றுக் கொண்டது சின்னவள் மனம்..


குழந்தையை வைத்துக்கொள்ள யாருக்கு தான் கசக்கும்.. 'தங்கச்சி மா.. தங்கச்சி மா’ என நிலாவும் மதியும் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சுற்ற, லட்சுமியும் அவள் சகோதரிகளும் தங்களுக்குள் அர்த்த பார்வை வீசினர்.


காலங்கள் ஓடியது.. அடுத்த ஒன்றரை ஆண்டில் மீண்டும் குமாரும் பிறந்தான்..


“பொட்ட புள்ளைக்கு சமைக்க தெரியலனா எல்லாரும் சிரிப்பாங்க.. எப்போதுமே அம்மாவே செஞ்சி தர முடியுமா? வா வந்து அடுப்புல தீய பத்தவை… நா சொல்லி தரேன்” தங்கையை பார்க்க வரும் நேரங்களில் நயவஞ்சகமாக பேசி அதையும் வற்புறுத்தி கற்றுக்கொடுக்க,


செய்தாள்.. தட்டு தடுமாறி சூடுப்பட்டு காயங்களுடன் ஒவ்வொன்றாய் செய்தாள்.. பழகினாள்.. பழக பழக பளு ஏற்றபட்டதே அன்றி குறையவில்லை.. ஆனால் இதில் கொடுமையே, தன் வயதுக்கு மீறிய வேலைகளை செய்கிறோம் என அறியாமலே அவள் செய்து கலைத்தது தான்..


ஆனால் இது எதையும் சுந்தரம் அறியாமல் பார்த்துக்கொண்டாள் அந்த மனித உருவின் ராட்சசி.. நாள் முழுவதும் பேரன்களின் மழலை சிரிப்பில் நேரத்தை கழித்த வள்ளியம்மையும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை..


அன்று, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வர, எல்லா வருடங்களும் அந்த தேதிகளில் மாணிக்கம் வந்து இவர்களை அழைத்து செல்வது வழக்கம். மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காத போதும் அவனை தடுப்பதில்லை. அன்றும் வாசலை திறந்துகொண்டு வந்தவன் பார்த்தது, உச்சி வெயிலில் அமர்ந்து வேக வைத்திருந்த நெல்லை, காயவைத்து கொண்டிருந்த நிலவொளியையும் வெண்மதியையும் தான்..


“மதி, நிலா.. நீங்க எதுக்கு இத செய்யுறீங்க..?” நுழைகையிலேயே அவர் சத்தம் உள்ளிருந்தவர்களுக்கு கேட்க, குழந்தையை தோளில் போட்டு தட்டியவாரு வெளியே வந்தாள் லட்சுமி.


“மாமா..” இருவரும் எழுந்து ஓட,


“வாங்கண்ணே..” வார்த்தைகளில் தேன் தடவி வரவேற்றாள் லட்சுமி.


“ம்ம்ம்ம்.. இருக்கட்டும்.. இது என்ன சின்ன புள்ளைங்கள வெயில்ல விட்டுட்டு பெரியவங்க நீங்க உள்ள இருக்குறது?” பார்வை மருமகள்களிடம் இருந்தாலும், கேள்வி லட்சுமிக்கு சென்றது.


“இம்புட்டு நேரம் நா தான் காயபோட்டுட்டு இருந்தேண்ணே. இப்போ, நீங்க வரநேரந்தான் கொழந்த அழுதுனு உள்ள போனேன். எனக்கு உதவி செய்ய நெனச்சு போயிருக்காளுங்க போல. ரெண்டு பேரும் மேல ஏறு. நிலா, நீ உள்ள போய் மாமனுக்கு குடிக்க தண்ணி கொண்டுவா..” ஆணையிட்டாள்.


அவள் பேசும் தொனியில் யாருக்காக இருந்தாலும் உண்மை என நம்பவே தோன்றும்.. ஆனால் சூடு தாங்காமல் ஓடி ஓடி காயவைத்த கொடுமை நிலா, மதிக்கு தானே தெரியும்!


“ஒஹ்! சரி” என்று அவள் சொன்னதை நம்பிவிட்டார். குழந்தைகளும் மாமனைக் கண்ட மகிழ்ச்சியில் மற்றதை கவனிக்கவில்லை.


“இல்ல, எனக்கு எதுவும் வேண்டாம்.. பிள்ளைங்கள ஆத்தா கூட்டிட்டு வர சொல்லிச்சு.. சுந்தரம் எங்க? அவன் இருந்தா அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கூட்டிட்டு போலாமேனு வந்தேன்..” என்றார்


என்றும் போல் தன்னிடம் ஒட்டி உறவாடாமல் எட்டி நின்று பேசும் அவருடைய பேச்சு பெண்ணவளுக்கு கோவத்தை ஏற்படுத்தியது. ஆனால் கோபப்பட்டு காரியத்தை இழக்க அவள் ஒன்றும் முட்டாள் இல்லை.


“அத எதுக்கு அவருகிட்ட கேட்டுகிட்டு? நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாண்ணே.. அவரு வந்ததும் நானே சொல்லிக்கிறேன்..” சிரித்து வைத்தாள் உள்ளிருக்கும் கடுப்பை மறைத்துக்கொண்டு.


“அப்படியா.. அப்போ சரி மா..” என்றவர்,


“டேய்.. ரெண்டு பேரும் போய் துணிய எடுத்துட்டு கிளம்புங்க.. நாம மாமா வீட்டுக்கு போறோம்..” என்க


“அண்ணே! சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம்.. இதுங்க ரெண்டும் இல்லாம இலக்கியா இருந்துக்க மாட்டா.. அழுவா.. அழுதா சமாதானப்படுத்துறது ரொம்ப கஷ்டம்.. அதுனால அவளையும் கூட்டிட்டு போறீங்களா?” அடுத்த பந்தியின் பாயாசத்துக்கு மெல்ல அடி போட்டாள்.


'அவ என் தங்கச்சி பொண்ணு இல்ல.. உன் பொண்ணு.. அவ எப்படி அழுது கரஞ்சாலும் நீ தான் பார்த்துக்கணும்' என்றா சொல்வது.. ஒரு பெரிய மனிதனாக இருந்துக்கொண்டு அவரால் சொல்ல முடியுமா?


“ஆமா மாமா.. பாப்பா அழும்..” வெண்மதி ஓடி சென்று தங்கையை தூக்கினாள்.


“சரி, கூட்டிட்டு போறேன்.. உங்கள யாரையாவது தேடி அழுதா கொண்டு வந்து விடுறேன்..” மனமில்லாமல் ஒப்புக்கொண்டவர் அழைத்து செல்ல, திண்ணையின் தூண்களில் சாய்ந்து நின்று வக்கிரமாக சிரித்து கொண்டாள் லட்சுமி.


“நீ மட்டும் தான் ரொம்ப நாளா தப்பிச்சு தப்பிச்சு போயிட்டே இருந்த.. சிக்குனியா வசமா.. எப்படி எப்படி.. இந்த வீட்டு புள்ளைங்களுக்கு அவங்க உரிமை கிடைக்கலனாலும் உன் சொத்து அதுங்கள நல்ல பார்த்துக்குமா.. பார்த்துக்கும் பார்த்துக்கும்.. ஏன் சொல்லமாட்ட.. அட வெளங்காதவனே! உரிமையே அவங்களுக்கு இல்லங்குற போது சொத்து எப்படி அவங்களுக்கா இருக்க முடியும்.. இல்ல நா தான் எப்படி இருக்க விடுவேன்னு நீ நெனைக்கலாம்..” கருவிகொண்டு அடுத்த செய்ய வேண்டியதை முடிவெடுத்து கொண்டு அன்று இரவே கணவன் காதில் ஓத,


“அது… எப்படி சரி பட்டு வரும்..?” தயக்கத்தில் நின்றார் சுந்தரம்..


வழக்கம் போல் பெண்ணவள் கண்ணீர் வடிக்க, அந்த போலிக் கண்ணீரில் மயங்கியவர் வேறு வழியின்றி அடுத்த நாளே மாணிக்கம் வீட்டிற்க்கு சென்றிருந்தார்..


மச்சான் என ஆரம்பிக்க போனவர், தயக்கத்துடன், “அது.. அது வந்து லட்சுமி என்ன ஆசப்படுறானா இலக்கியாவுக்கு உன் மடியில வச்சு காது குத்தனுமாம்.. அவளுக்கு கூட பொறந்த பொறப்புனு சொல்லிக்க ரெண்டு அக்காங்க தான்.. அண்ணனோ, தம்பியோ அங்க கிடையாது.. ஆனா புகுந்த வீட்டுல ரத்த பந்தமில்லனாலும் அண்ணனா நீ இருக்கனு அவ நம்புறா.. எனக்கு என்ன சொல்லனு தெரியல..” என நிறுத்த, மாணிக்கம் மனம் ரணமாக வலித்தது.. உள்ளுக்குள் அடக்க முடியாமல் கோவம் எழ, சுந்தரத்தை நக்கலாக பார்த்தான்.


“என் பொண்ணுங்களுக்காக தான் இந்த கல்யாணம்னு சொல்லிட்டு திரிஞ்ச சுந்தரம் எங்கேயோ மலை ஏறி கண்காணாத இடத்துக்கு போயிட்டான் இல்ல ம..” மச்சான் என சொல்ல வந்தவனும் நிறுத்திக் கொண்டு கேட்க, அவருக்கு அவமானமாக போய்விட்டது.



அன்புடன்,
மிர்ஷி 😍

கருத்துக்கள் இங்கே,
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே😍😍
கதை கொஞ்சம் சீரியஸா தான் போகும்.. முழுக்க முழுக்க நிலவொளி என்னும் பெண்ணையும் அவள் வாழ்கையில் அனுபவிக்கும் சுக துக்கங்களுமே கதையை நகர்த்தும்.. சோ, என்னடா இந்த புள்ள ஒரே அழுகாச்சியா கொடுக்குதேனு கடுப்பாக வேண்டாம்...🔥
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -11


திருச்செந்தூர் முருகனை தரிசிக்க குடும்பத்துடன் வந்திறங்கினார் சுந்தரம்.. இன்று அவருடைய மகள் இலக்கியாவிற்கு இறைவன் சன்னிதானத்தில் வைத்து காதுகுத்து வைப்பதாய் முடிவு செய்திருந்தது அவர் குடும்பம்.

மொட்டையடித்த தலையுடன் காதில் புது காதணி நாட்டியமாட மாணிக்கத்தின் மடியில் அழுது கரைந்தாள் இலக்கியா.

அன்று சுந்தரத்தின் வேண்டுகோளை நிராகரிக்க மூளை அறிவுறுத்திய போதும் பாழாய்ப் போன இந்த மனசாட்சி அவரை தடை செய்தது. தன் உடன் பிறந்தவளின் பிள்ளைகளை எந்த குறையுமின்றி பார்த்துக்கொள்ளும் லட்சுமிக்கு செய்ய வேண்டிய சிறு நன்றிக்கடனாகவே இதை கருதினான். அதனால் குடும்பத்தையும் அழைத்து வந்தவனுக்கு தெரிய வாய்ப்பில்லையே இது அவனுக்கு பிடித்த வாழ்நாள் சனி என்று!

நிலா, மதி இருவரும் தங்கையின் அழுகையை நிறுத்த ஆளுக்கொரு பக்கம் நின்று விளையாட்டு காட்டினர்.. மொத்த குடும்பமும் இதை ரசிக்க, லட்சுமி மட்டும் குமாரை இடுப்பில் வைத்து கொண்டு அமைதியாக நடப்பவற்றை கண்டு கழித்தாள்.

ஆனால் வெற்றிக்களிப்பில் அவள் மனதிற்குள் போட்ட குத்தாட்டம் அவளன்றி வேறு யார் அறிவார்? இருக்காதா பின்னே! மகளின் வாழ்நாள் சீரையும், முறை மாமன் செய்ய வேண்டிய கடமையாய் மாணிக்கத்தின் தலையில் ஏற்றுவிட்ட அவளுடைய சாணக்கியதனம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அதன் பிறகு வந்த நாட்களும் கூட, எந்த மாற்றமுமின்றி அவளுக்கு சாதகமாகவே கடந்து செல்ல, மனித குணமான மமதை அவளை ஆட்கொள்ள அதிக நாட்கள் எடுக்கவில்லை.

“ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா?” என்பது போல் பிறவியிலேயே கோபக்காரியால் எத்தனை நாட்களுக்கு தான் தேவதையாய் நடிக்க முடியும்? காலம் அவளுக்கு ஏற்றார் போல் ஒவ்வொன்றையும் நடத்திக் கொண்டே வர, மெல்ல மெல்ல தன் நிறத்தை வெளிப்படுத்தினாள். அதற்கு இன்னும் தீனி போட்டது சுற்றி இருந்தவர்களின் பேச்சு.

ஊரில் பலருக்கும் நிலவொளி உமையாளின் மறுபிம்பமாக தெரிந்தாள்.. “இது சுந்தரம் உமையாளோட பொண்ணு தானே.. எம்புட்டு வளர்ந்துட்டு.. அப்படியே அவ அம்மா மாதிரியே அழகா அம்சமா இருக்கால்ல” என்று மேம்போக்காக கேட்டு செல்ல, இவளே மறந்தாலும் அந்த வீட்டிற்க்கு சென்ற முறையை நினைவூட்டி கொண்டிருந்த இத்தகைய வார்த்தைகள் அவளை கடுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. அவர்களிடம் காட்ட முடியாத கோவத்தை நிலாவிடம் கண்மூடித்தனமாக காட்டினாள்.

விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் அவளை எழுப்பி விடுவாள்.

வீட்டின் நாலாபக்கமும் பெருக்கி சுத்த படுத்திய கையோடு சாணத்தால் மொழுகி, கோலமிட்டு இவள் முடிப்பதற்குள் மணி ஐந்தை தொட்டு செல்லும். அடுத்த ஐந்து வினாடி கூட ஓய்வின்றி வேர்க்க விறுவிறுக்க கால்நடைகளை சுத்தப்படுத்தி பாலையும் கறந்து இவள் நிமிர்கையில் குளித்து சீவி சிங்காரித்து வந்து நிற்பாள் லட்சுமி.

“என்னட்டி.. பால் மொத்தமும் வெளிய சிந்தியிருக்கு.. கவனமா செய்ய மாட்டியா?” சின்னவளின் மண்டையில் நங்கென்று கொட்டிவிட்டு வேகவேகமாக பால் கேன்னுடன் அவள் சொசைட்டிக்கு செல்ல, உதடு துடிக்க சுற்றி கண்களை சுழல விடுவாள் நிலவொளி. ஒரு சொட்டு பால் கூட வீணாகியிருக்காது. ஆனாலும் அடித்துவிட்டு செல்லும் அன்னையின் செயல் என்றுமே அவளுக்கு புரியாத புதிராக தான் இருக்கும். கண்களில் குளமென கண்ணீர் பெருகிட லட்சுமி சென்ற திசையையே பார்த்திருப்பாள்.

“இப்படியே நல்லா சொகுசா உட்கார்ந்து பால் கறந்தா இன்னைக்கு இல்ல அடுத்த வருஷம் தான் பால்காரன்கிட்ட குடுக்க முடியும். வேகமா செய்ட்டி..” என்று முதுகில் அடி வாங்கிய நாட்கள்..

“ஒழுங்கா மாட்டுக்கு புண்ணாக்கு கலந்து குடக்குறது இல்லையா? பால் எல்லாம் கம்மியாகிட்டே போகுது.. அதுக்கு ஒழுங்கா தீவனம் போடாம நீ என்ன தெண்டத்துக்கு வீட்டுல கிடக்க?” என்று கண்களை உருட்டி சீறுவாள் சில நாள். இவளோ பயத்தில் நடுங்கி போவாள். அப்போதெல்லாம் இதோ விழவா என அழுகை முட்டிக்கொண்டு வரும். மீறி கண்ணீர் விழுந்தாலும் “என்னத்துக்கு காலங்காத்தாலயே கண்ணீர் வடிச்சிட்டு திரியுற. இங்க யாரும் செத்தா போயிட்டோம்?” என்று வசவு தான்.

தாயிடம் திட்டுவாங்க கூடாது என அனுதினமும் பார்த்து பார்த்து வேலைகளை செய்தும் ஒரு சின்ன பாராட்டை கூட அவள் இதுவரை பெற்றதில்லை. மாறாக, அதிலும் குற்றம் கண்டு பிடித்து திட்டினால் பாவம் அவளும் என்ன தான் செய்வாள்?

கண்களை துடைத்துக் கொண்டு அடுப்பங்கரைக்குள் செல்பவள் அடுத்த ஒரு மணி நேரமும் தட்டு தடுமாறி ஆமை வேகத்தில் தந்தை கொண்டு செல்ல மதிய சமயலை முடிப்பாள். பின் பள்ளிக்கூடம் செல்ல நேரமாவதை உணர்ந்து அரக்க பறக்க குளிக்க ஓடுவாள். ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு இதுவரை ஒருமுறை கூட நேரத்திற்கு சென்றதில்லை. வெண்மதியையும் அழைத்துக்கொண்டு தங்களுக்கு முன் சென்ற சக தோழிகளை பிடிக்க இருவரும் கால் நெடுக்க ஓடுவார்கள்.

இவ்வாறு நாள் தவறாமல் செல்வதால் மட்டும் படிப்பு மண்டையில் ஏறிவிடாதே! விடியலிலேயே எழுந்து செய்யும் வேலையால் பாவம் தூக்கம் கண்களுக்குள்ளேயே நிற்கும்.. எப்போதுமே ஒருவித மயக்க நிலையிலேயே பாடங்களை கவனிப்பாள்.. அதுனாலே அந்த வகுப்பின் சோம்பேறி மாணவி என்று அழைக்கப்பட்டு தோழிகளிடம் இருந்து ஒதுக்கப்பட்டாள்.

மீண்டும் மாலை வீடு திரும்பிகையில் வயலுக்கு அழைத்து சென்று விடுவாள் லட்சுமி.. அங்கே களைப் பிடுங்குவது, கதிர்களுக்கு தண்ணீர் நிறைப்பது, காய்கறிகளை பறிப்பது என பருவநிலைக்கு ஏற்ப செய்யவேண்டிய வேலைகள் அவளுக்கு வரிசைக் கட்டி காத்திருக்கும்.. சிரமத்துடன் செய்து வீட்டிற்க்கு வரும்போது சந்திரன் தன் கடமை ஆற்ற வந்திருப்பான்.. கால் வலிக்க நடந்தே வீட்டிற்கு வரும்போதே எப்போதடா உறங்குவோம் என்ற எண்ணம் மட்டுமே இருக்க, கண் முன்னே வீட்டு பாடங்கள் மலைப்போல் குவிந்துக் கிடக்கும்.. வேறு வழியின்றி படிக்க அமர்ந்தால் பத்து நிமிடங்களுக்கு கூட தாக்கு பிடிக்காமல் உறங்கியும் போவாள். மீண்டும் வந்த நாட்களில் இதுவே தொடர் கதையுமாகி போனது.

வருடங்கள் வேகமாக செல்ல, இதோ நிலா பத்தாம் வகுப்பிற்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள். இந்த வருடம் அவளுக்காக காத்திருந்தது பொது தேர்வு. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட தோற்காமல் அவள் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேறியது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் எனலாம். அத்தனை சிரமப்பட்டால் படிப்பதற்கு.. சொந்தங்களில் பலருக்கும் கூட இது ஆச்சர்யமாக இருக்க, லட்சுமிக்கோ அவளை வீட்டில் முடக்கி போட முடியாதது ஒரு குறையாகவே தெரிந்தது.

இம்முறை நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என ஆழ் மனதில் விதைத்துக் கொண்டாள். அதற்கு முக்கியகாரணம், அவளுடைய மாமன் மகன் நந்தகுமார் மட்டுமே. ஊர் அருகில் உள்ள கலை கல்லூரியில் இவன் மூன்றாம் ஆண்டு பயில, இவன் தம்பி மனோரஞ்சன் முதலாமாண்டு பயில்கிறான். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவனாய் அத்தை மகளுக்கு அறிவுரை வழங்கினான்.

“செல்லம்மா.. இந்த வருஷம் கொஞ்சம் மெனுக்கெடுத்து படிச்சா தான் உன் எதிர்காலம் சிறப்பா இருக்கும்.. மனசுல வச்சிட்டு படி” என்ற அவளுடைய பிரியமான நந்து அத்தானின் வார்த்தைகளை அவள் மீறுவாளா?

கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நேரத்தை விரயமாக்காது படிப்பில் கவனத்தை செலுத்தினாள். அவள் படிப்பில் காட்டிய ஆர்வம் லட்சுமியின் கண்களில் தவறாது விழுந்து வயிற்றில் புளியை கரைத்தது என்றால் மிகையில்லை. உள்ளுக்குள் உறுத்தினாலும் அமைதியாக கடந்து சென்றவளுக்கு தோதாக அமைந்தது அந்த ஒருநாள். தன் வாழ்நாளில் வந்திருக்கவே வேண்டாம் என நிலவொளி பிற்காலத்தில் வருந்திய நாளும் அது தான்.

பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த இரண்டாவது மாதமே ஒரு காலையில் நிலவொளி வயதிற்கு வந்திருந்தாள்.

மாமனான மாணிக்கதிர்க்கு முதல் தகவல் பகிரப்பட்டிருக்க, குடும்பத்தில் பல வருடங்களுக்கு பிறகான சுபகாரியம் என்பதால் திருவிழா போல் விழாவை நிகழ்த்த முடிவு செய்தான் மாணிக்கம் அப்போதே.

அவன் வீட்டில் இருந்து சுந்தரத்தின் வீடு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் தான் இருக்கும்.

தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி..

அவன் தங்க கொலுசு பண்ணித் தாராண்டி..


'கிழக்கு சீமையிலே' படத்தின் பாடல் நாதஸ்வரத்தில் இருந்து பின்னணியில் ஒலிக்க, சொந்த பந்தங்களின் புடை சூழ, முந்தைய இரவில் உறவுப் பெண்களின் கைபக்குவத்தில் உருவான அனைத்து வகை உணவு பதார்த்தங்கள், பழ வகைகள், புத்தாடை என ஊரே வியக்குமாறு சென்றிருந்தவனை வாசலிலேயே தடுத்து நிறுத்தியிருந்தாள் லட்சுமி.

“வாங்கண்ணே! வாங்க மதனி!” முகமெல்லாம் பல்லாக வாசலில் நின்று அழைத்தவள், இருவருக்கும் சேர்த்து ஆரத்தி சுற்றி உள்ளே அழைக்க, அதை சிறு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டது மாணிக்கத்தின் குடும்பம்.

உள்ளே அழகு பதுமையாய் உடல் முழுதும் மஞ்சள் பூசி குழித்ததற்கான அடையாளமாக ஆங்காங்கே மஞ்சள் திட்டு மினுமினுக்க, தாவணி அணிந்து மனையில் அமர்த்தப்பட்டிருந்தாள் நிலவொளி. பார்த்ததுமே பெரியவர்களின் கண்ணிரண்டும் ஆனந்தத்தில் பணித்தது. அவர்களையும் மீறி கை இரண்டும் திஸ்டிக் கழித்து ஆசீர்வதிக்க, அவர்களைப் பார்த்து கன்னக்குழி விழ அழகாக சிரித்தாள் குமரியாக உருவெடுத்திருந்த அந்த குழந்தை.

இரு மகன்களின் துணையுடன் ஒவ்வொரு சம்பிரதாயங்களையும் வெகு நேர்த்தியாக செய்து விழா நிறைவுற, அன்றைய ஊரின் முக்கிய பேச்சு நிலவொளியின் முறை மாமன் புகழே!

கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் வழக்கங்களில் ஒன்று நாற்பத்தியொரு நாட்கள் சமைந்த பெண்கள் அவள் தங்கிய அறையை விட்டு வெளியே செல்லக்கூடாது.. இந்நாட்களில் எடுக்கும் சத்தான உணவும் சரியான ஓய்வுமே கர்பப்பையை பலப்படுத்தும் என்கிறது அறிவியல். அதை சொன்னால் வீட்டில் யாரும் அடங்கி இருக்கமாட்டார்கள் என மனித மனதை சரியாக கணித்த ஞானி எவரோ, 'சமைந்தவளின் வாடை ஏழு ஊரு பேய்களையும் கவர்ந்து இழுக்கும்' என்று பரப்பிவிட்டிருக்க வேண்டும். அதை மலைப் போல் நம்பி பயந்து வீட்டிற்குள் அடைத்து வைத்தனர் வேறு வழியின்றி.

நிலாவையும் அத்தகைய காரணத்தால் பள்ளிக்கூடம் செல்ல விடாமல் சொந்தங்களின் சொல் கேட்டு வீட்டில் இருத்தி வைத்தனர்.. ஒன்று, இரண்டு….. பத்து என நாட்களை அவள் நெட்டி தள்ள, அவளுடைய அந்த ஓய்வு கூட லட்சுமியின் கண்களை உறுத்தியது போலும். இரண்டாம் வாரமே அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து பாய் பின்னுகிற இயந்திரம் ஒன்றை கந்துவட்டியில் வாங்கி போட்டாள். இதை சுந்தரமோ வள்ளியம்மையோ கூட எதிர்பார்க்கவில்லை.. மனைவியிடம் சென்று எதிர்ப்பை தெரிவித்தார்..

“இதெல்லாம் நம்ம வீட்டுக்கு இப்போ தேவையா சொல்லு? வயலு, தோப்பு, படிப்புனு அவளுக்கு அதுக்கே நேரம் எல்லாம் போயிடுது. சின்ன பொண்ணு வேற.. இது சரிப்பட்டு வராது.. நாளைக்கே திருப்பிக் குடுத்துரு..” என்றார் மகளின் மீது கொண்ட அக்கறையில்..

மகள் அவ்வபோது வேலை செய்து வீங்கிய கைகளுக்கு மருந்தெண்ணை தேய்த்துவிட்டு தூங்குவதை அவரும் பார்த்திருக்கிறார்.. ஆனால் இதுவரை பெரியதாக எடுத்துக் கொண்டதில்லை.. காரணம், மனைவி அத்தனை கொடுமை காரியாக இருந்ததை அவர் உணராது போனது தான்..

“நான் என்ன எனக்குனா வாங்கி போட்டேன்? ரெண்டு மாசம் ஒரே இடத்திலேயே இருந்தா உடம்பெல்லாம் சோம்பலாகி போயிடும்னு எதிர்த்த வீட்டு காமாட்சி அத்த சொல்லிட்டு இருந்துச்சு.. இதை வாங்கி போட சொன்னது கூட அவக தான்.. அவக சொன்னத தான் நானும் செஞ்சேன்.. இப்போ என்ன உங்களுக்கு? நான் கந்துவட்டிக்கு வாங்கிப் போட்டது பிடிக்கல அவ்ளோதானே.. சரி நாளைக்கே போய் திருப்பி குடுத்து பணத்த அடைக்குறேன்.. என் புள்ளைங்க தானேனு நல்லது நினைச்சி செஞ்சா ஒன்னு உங்களுக்கு புடிக்காது இல்லைனா உங்க அம்மைக்கு புடிக்காது.. எனக்கு எதுக்கு இந்த வம்பு எல்லாம்? இனிமே நான் யாருக்காகவும் எதுவும் யோசிக்கவும் மாட்டேன், செய்யவும் மாட்டேன்.. இது உங்க மீது ஆணை..” குரல் பிசிற, புடவையின் நுனியால் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் நகர.. வழக்கம் போல் மனிதர் தான் உருகி போனார்.

“ம்ப்ச், இப்போ நான் என்ன சொல்லிப்புட்டேன்னு அழுவுற? ரெண்டு மாசத்துக்காக தான் வாங்கி போட்டேன்னு சொல்லிட்டா முடிஞ்சு போச்சு.. உடனே நம்ம புள்ளைங்களுக்கு எதுவும் செய்யமாட்டேன்னு சத்தியம் பண்ணிடுவியா?” என்று பதற்றத்துடன் பேசினார். அப்படியும் அவள் எதுவும் பேசாமல் நிற்க,

“உன் இஷ்டப்படி எதையும் செஞ்சிக்க தாயி.. இனி உனக்கும் புள்ளைங்களுக்கும் நடுவுல நான் எக்காரணம் கொண்டு வரமாட்டேன்.. போதுமா..!” என கை எடுத்து கும்பிட்டு மனைவியை சமாதானப்படுத்தி நகர்ந்துவிட, சென்றவரை கூட கவனிக்காமல் கோணல் சிரிப்புடன் அந்த இயந்திரத்தை தொட்டுப் பார்த்தவள்,

“வெறும் இரண்டு மாசம் உன் பொண்ணு பொழுதை போக்க வட்டிக்கு பணம் எடுத்து எந்திரங்களை வாங்கி போடுற அளவுக்கு நான் முட்டாளா? இல்லை அதைக்கூட புரிஞ்சிக்க முடியாத நீ முட்டாளா? எதை சொன்னாலும் நம்புது பாரு..” தனக்குள் முணுமுணுத்தாள்.

மனைவியின் வார்த்தையை நம்பி மூளையை உபயோகிக்க தவறி போன பல அப்பாவி கணவன்மார்களில் சுந்தரம் விதிவிலக்கு இல்லையோ..!

-------------------

“பரவாயில்லையே! இன்னும் ஒரு மாதகாலம் கூட முடியல.. அதுக்குள்ள கையெல்லாம் ரொம்ப வேகமா ஆட்டி பின்ன கத்துக்கிட்டாளே உங்க பேத்தி..” என வள்ளியம்மை இருந்த அறைக்குள் நுழைந்தார் காமாட்சி பாட்டி.. அங்குதான் நிலவொளியும் அமர்ந்து பாய் பின்னினாள்..

“வாங்க பாட்டி..” என்றதோடு தன் வேலையில் கவனமானால் சின்னவள் .

“என்ன டி ஆத்தா! இந்த வேலை அம்புட்டு புடிச்சு போச்சோ? கை ஓயாம வேலைய செஞ்சிகிட்டே இருக்குறவ..”என்று இருக்க இடம் தேடியவர் கடைசியில் வள்ளியம்மை அருகில் சென்று அமர்ந்தார்.. அவ்வளவுதான்.. பேச்சு துணைக்கு ஆள் கிடைத்துவிட்ட துணிச்சலில் தன் மனகுமுறலை கொட்ட ஆரம்பித்து விட்டார் வள்ளியம்மை.

“அதைக் ஏன் கேக்குற காமாட்சி.. ஒருநேரமும் அந்த பொட்டிய நிறுத்தமாட்டாளுங்க ஆத்தாலும் மவளும்.. என் தூக்கத்த கெடுக்க அந்த சதிகாரி வேணும்னே தான் வாங்கி போட்டுருக்கா.. இதோ இவளும் அந்த சதிக்காரிக்கு கூட்டு.. எங்கயாவது இப்படி பார்த்திருப்போமா நாம? ” என்று புலம்பி தள்ளினார்.. அதை கேட்ட சின்னவள் சிரிப்புடன் அமர்ந்திருக்க, காமாட்சி தான் சமாதானப்படுத்தினார்.

“உம் மருமவளாவது வீட்டு ஆம்பிளைக்கு உதவியா இருக்கணும்னு யோசிச்சு நடுந்துக்கிட்டாளே.. எங்க வீட்டு சங்கதிய கேளு.. நாள் முழுக்க சும்மாவே இருந்து காலத்த தள்ளிப்புடலாம்னு நினைச்சவள நான் தான் அதட்டி உருட்டி இதை வாங்க வச்சேன் கா.. நமக்கு தான் இப்போ கைகாலெல்லாம் வெளங்காது.. இவலுங்களுக்கு என்ன.. சம்பாதிக்கிற காலத்துல ஓடியாடி சம்பாதிக்கட்டுமே.. கொஞ்சம் கொழுப்பாவது குறையுமில்ல” என குரூரமாக பேசிய காமாட்சியின் எண்ணம் வள்ளியம்மைக்கு புரிந்துபோக அதன் பிறகு பேசுவாரா என்ன?

ஆக இவர்களின் அடக்குமுறை விதங்கள் தான் வெவ்வேறு தவிர வந்தவளை நிம்மதியாக இருக்கவிட கூடாது என்கிற எண்ணம் ஒன்றே!!

மூத்தவர்களின் தந்திர பேச்செல்லாம் சிறியவளுக்கு புரியவில்லை.. அதுவும் போக அவளுடைய எண்ணங்கள் யாவும் விரைவாக பாய் பின்னி கொடுத்து 'புது துணிகள்' பெற வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது. புது துணிகளா? ஆம்! இதுவும் லட்சுமியின் கைங்கர்யமே…

“நீ தினம் பாய் பின்னி கிடைக்குற காசுல உனக்கும் தங்கச்சிகளுக்கும் நிறைய புது துணி எடுத்து தருவேன் சரியா” என அவள் ஆசையை சிறியதாக தூண்டிவிட்டாள்.. அது போதுமே, நிலவொளி சோறு தண்ணீரை மறந்து முழு மூச்சாக வேலை செய்ய.. எந்த சம்பளமுமின்றி அந்த வீட்டிற்க்கு உழைத்து போடும் மாடாக அவள் மாற்றப்பாட்டாள்.

---------------

மீண்டும் நிலா பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய நாளும் வந்தது.. இருபாலர் படிக்கும் பள்ளிக்கூடம் அவளுடையது.. தன்னை யாரும் கேலி பரிகாசம் செய்வார்களோ என்ற அச்சம் ஒரு பக்கம்.. வேலை செய்து பணத்தை பார்த்த கைகளுக்கு படிப்பின் மீது குறைந்த நாட்டம் ஒருபக்கம் என அவள் பள்ளிக்கு போக திணறி தவிக்கையில் காலாண்டு பரீட்சைக்கான கால அட்டவணை அவள் கைகளில் கிடைக்க செய்வதறியாது பயத்தில் விழி பிதுங்கி நின்றாள் நிலவொளி.

“போச்சு போச்சு.. இந்த முறை பரிட்சையில் நான் ஃபெயில் ஆக போறது உறுதி.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அம்மா வேற நல்லா திட்டும் அடிக்குமே.. அது என்ன சொன்னாலும் நா மறுக்காம கேட்டுக்குறேன்.. இந்த ஒருவாட்டி மட்டும் என்னை அதோட அடியில இருந்து எப்படியாவது காப்பாத்திடு முருகா!”

அன்று மாலையே வீட்டிற்கு செல்லும் வழியில் குன்றின் மீது வீற்றிருந்த முருகனிடம் வேண்டுதல் வைத்து அழுகையுடன் நின்றிருந்தாள்.

பார்க்க பரிதாபமாக இருக்கிறாளே.. அவள் வேண்டுதலை நிறைவேற்றி விடுவோமா? என அந்த செந்தில் வேலவனுக்கே ஆசை எழுந்திருந்தாலும் அவள் கேட்டதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அவர் நிச்சயம் குழம்பியிருப்பார்.

கேட்டதையும் கேட்டாள்.. “என்னை எப்படியாவது பாஸ் ஆக்கி விடு”, “எனக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடு” என்று கேட்டிருக்க கூடாதா? துன்பத்தில் கடவுளை தேடி சென்றவளுக்கு பாவம் அந்த நொடினேர இன்பம் மட்டுமே மனதிற்கு பெரிதாக தெரிந்தது..

மகளின் வேண்டுதலை திருத்தி வாழ்நாள் நிம்மதியை அளிப்போம் என இறைவனுக்கும் ஆசை எழவில்லை போலும்.. “நீ எண்ணிய காரியம் ஈடேறும்..”என்று முடித்துக்கொண்டு அடுத்த வேலையை பார்க்கக் சென்றுவிட்டார்.

அதன் பலன் அந்த தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வியை தழுவியிருந்தாள்.. இது வெறும் காலாண்டு பரிட்சை தான்.. இன்னும் கூட சரிவர படிக்க காலஅவகாசம் இருக்கின்றது என்றெல்லாம் அந்நேரம் புத்திக்கு எட்டவில்லை..

'தோல்வியடைந்ததால் இனி சொந்தங்கள் முதற்கொண்டு எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்' என்பது மட்டுமே வழியெங்கும் மனது எடுத்துக் கொடுக்க, அதற்கு மேல் யாரிடமும் ஆலோசனை கேட்க கூட தோன்றாது ஒரு முடிவுடன் வீட்டிற்க்கு சென்றாள்.


அன்புடன்,
மிர்ஷி 😍


 
Status
Not open for further replies.
Top