All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

யார் அவள்? - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் அன்பு வாசகர்களே,
எனது அடுத்த நாவலான "யார் அவள்?" எனும் கதை மூலமாக விரைவில் உங்களை சந்திக்கவுள்ளேன். இதுவும் பல மர்ம முடிச்சுகளையுடைய ஒரு கிரைம் நாவலாகும். முடிச்சுக்களை அவிழ்க்க தயாராகுங்கள்.
நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யார் அவள்?

அத்தியாயம் 1 - இரு ரேகைகள்



ஆகஸ்ட் 22,

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி

கோயம்புத்தூர் நகர போலீஸ் கன்ட்ரோல் ரூம் அமைதியாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு பணியிலிருந்த கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டர் பரமசிவம் அன்றைய நாள் நாளிதழை கையில் வைத்தபடி சொப்பன வாசலில் மிதந்துகொண்டிருந்தார்.

"ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்......" தொலை பேசி அலறல் கேட்டு திடுக்கிட்டெழுந்தவர் தனது ஹெட் போனில் உள்ள மைக்கை ஆன் செய்துவிட்டு பேசத்தொடங்கினார்.

“கோயம்புத்தூர் போலீஸ் கன்ட்ரோல் ரூம், யார் பேசுறீங்க?"

“சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!" எதிர் முனையில் ஒரு பெண் உயிர்ப்பயத்தில் கதறிய கதறலில் பரமசிவத்திற்கு வியர்த்து ஒழுகியது. கணப்பொழுதில் சுதாகரித்த பரமசிவம் "யாரும்மா பேசுறீங்க? எங்க இருந்து பேசுறீங்க? பயப்படாதீங்கம்மா."

"என் பேரு ராதிகா, என்னோட பிரெண்ட்ஸ யாரோ கொலை பண்ணிட்டாங்க. இப்ப என்ன துரத்துறாங்க. சீக்கிரமா வந்து காப்பாத்துங்க சார்!"

"எங்க இருக்கீங்கம்மா இப்ப?

"பொள்ளாச்சில இருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சோலையாற்றைக்கடந்து போட்ல வரணும். கேரளா போர்டர்ல இருக்கிற நீலமலைக்காடு. சீக்கிரம் வாங்க சார்"

அடுத்ததாக பரமசிவம் ஏதோ கேட்கப்போக ஒரு பெரும் அலறல் சத்தம் மாத்திரமே கேட்டது. அத்துடன் அழைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.



ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி

பொள்ளாச்சி நகருக்கு ஒதுக்குபுறமாக இருந்த இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் பெண்ணொருத்தி சோகமே உருவானவளாய் யாரையோ எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தாள். கண்களின் ஓரம் வழிந்து காய்ந்து போயிருந்த கண்ணீரும் வாரி முடியாத கூந்தலும் அவளது சோகத்தை வெளிக்காட்டின. அவள் பெயர் ஆனந்தி, வயது முப்பதை அண்மித்திருந்தது. வீட்டிற்கு அருகிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை பராமரிப்பாளராக பணி புரிகிறாள். கணவனது பெயர் கார்த்திக். பொலிஸ் இன்ஸ்பெக்டர். காவல்துறையில் மீதமுள்ள ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். சம்பளத்தை தவிர வேறு எதையும் கை நீட்டி வாங்கியது கிடையாது. நேர்மையான போலீஸ் என்றவுடன் நமது தமிழ் சினிமா நாயகர்கள் போல எண்ண வேண்டாம் நேர்மை எவ்வாறு போலீசிற்கு ஒத்துவராதோ அதேபோல இவரது இளகிய மனமும் ஒத்து வராது. பல கனவுகளுடன் போலீஸ் வேலைக்கு வந்தவருக்கு தற்போது இந்த வேலையில் ஏன் இருக்கிறோம் என்று எண்ணுமளவுக்கு அவமானங்கள். டிபார்ட்மென்டில் தனது பெயருக்கும் ஒரு மரியாதை கிடைக்கவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் வேளையில்தான் தனது மூன்று வயது மகள் இனியாவிற்கு இதயத்தில் கோளாறு என்பது தெரிய வந்திருக்கிறது. சிறுகச்சேமித்த பணமும் தங்கையின் திருமணத்திற்கு கொடுத்தாச்சு. மகளை காப்பாற்ற வேண்டுமானால் மூன்று மாதத்திற்குள் 10 லட்ச ரூபாய் அறுவை சிகிச்சைக்கு கட்டியாக வேண்டும். உதவி செய்யவும் யாருமில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தான் கார்த்திக்.

வெளியே பைக் சத்தம் கேட்டதும் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றாள் ஆனந்தி. கார்த்திக்கிற்க்காக காத்திருந்தவள் அவன் உள்ளே வருவதைக்கண்டதும் "டாக்டர் என்ன சொன்னாரு?" என்று கேட்டுக்கொண்டே கார்த்திக்கினது கையிலிருந்த பைலை வாங்கிப்பார்த்தாள்.

"ஹெல்த்ல இம்ப்ரூவ்மன்ட் இருக்குதாம், ஆனா எப்பிடியோ சர்ஜரி பண்ணித்தான் ஆகோணும்னு சொல்லிட்டார்"

இதைக்கேட்ட ஆனந்திக்கு அழுகையை அடக்க முடியவில்லை. வாய் விட்டு கதறியே விட்டாள்.

"ஏய் உள்ள குழந்தை இருக்கிறாள், அழாத" என்று ஆனந்தியை சமாதானமாக்கி விட்டு தனது கண்ணீரையும் துடைத்துக்கொண்டான் கார்த்திக்.

"பணத்துக்கு என்னங்க பண்றது?"

"கடவுள் பாத்துப்பான் ஆனந்தி"

"இந்தக்கதையெல்லாம் வேணாம், எப்பிடியாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. இல்லைனா நானும் என்னோட பொண்ணும் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குவோம்"

ஆனந்தி இவ்வாறு கூறியது கார்த்திக்கிற்கு கோபத்தை வரவழைத்தது.

"அப்பிடி பணம் வேணும்னா ஏன் நேர்மையான போலீஸ்காரன்தான் வேணும்னு தேடி கல்யாணம் பண்ணினீங்க. ஊர்ல எத்தனையோ போலீஸ்காரன் வசதியா இருக்கிறானே"

"எனக்கு இப்ப பொண்ணோட உசுருதான் முக்கியம், யாரோட கைய காலையாவது புடிச்சு பணத்தைக்கொண்டு வாங்க, உங்க டிபார்ட்மென்ட்ல எல்லாரும் வசதியாத்தானே இருக்கிறாங்க, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ பணத்தோட திரும்பி வாங்க." என்று கத்திவிட்டு அறையினுள் சென்று கதவடைத்தாள் ஆனந்தி.

கனத்த இதயத்துடன் அங்கிருந்த கதிரையில் அமர்ந்த கார்த்திக்கின் செல்போன் சிணுங்கத்தொடங்கியது. செல்போனில் மேலதிகாரியின் பெயரைப்பார்த்ததும் அவரிடம் பண உதவி கேட்டதை நினைத்துக்கொண்டு போனை காதில் வைத்தான் கார்த்திக்.

"குட் ஈவினிங் சார்"

"குட் ஈவினிங் கார்த்திக். நீங்க...."

இடைமறித்த கார்த்திக் "சார் அந்தப்பணம் கேட்டிருந்தனே......" என இழுத்தான்.

"இங்க பாருங்க கார்த்திக், டிபார்ட்மென்ட்ல யாரும் அவ்வளவு பணம் உங்களுக்கு கொடுக்க மாட்டாங்க. அதோட என்ன நம்பிக்கைல உங்களுக்கு பணம் கொடுக்கிற? உங்களோட மாத சம்பளத்துல திரும்பி தந்துடுவீங்கன்னா? போலீஸ்ல இருந்திட்டு புழைக்க தெரியாத ஆளா இருந்திருக்கீங்க. அது உங்களோட தப்பு. கொஞ்சம் புத்தியோட வேலை செய்திருந்தா இன்னைக்கு இந்த நிலமை வந்திருக்காது. என்னால வேற எதுவும் பண்ண முடியாது" எஸ்.பி ராஜசேகரின் குரலில் கோபம் கொப்பளித்தது.

"ஓகே சார்" பயந்து கொண்டே பதிலளித்தான் கார்த்திக்.

"கார்த்திக் உடனடியா பொள்ளாச்சி ஹாஸ்ப்பிட்டலுக்கு போங்க, அங்க ஒரு பொண்ண அட்மிட் பண்ணியிருக்காங்க. சுய நினைவில்ல, யாருன்னே தெரியல. போய் அத கொஞ்சம் விசாரியுங்க"

"சார் இப்ப வீட்ல நிலமை சரியில்ல......"

"வீட்ட இருந்து பொம்பிளை புள்ளைங்க மாதிரி அழுதிட்டு இருக்க போறீங்களா? உங்களோட கஷ்டம் தெரிஞ்சுதான் உங்கள போக சொல்றன். அந்தப்பொண்ண பார்த்தா வசதியான பொண்ணு மாதிரி தெரியுதாம், அதோட இன்னொரு பொண்ணோட டெட் பாடியும் கண்டுபிடிச்சிருக்காங்க. புழைக்குற வழியப்பாருங்க. உங்க பொண்ண பற்றி மறந்துடாதீங்க" என்று சொல்லிவிட்டு அழைப்பைத்துண்டித்தார் ராஜ சேகர்.

அடுத்த சில நிமிடங்கள் ஆனந்தி கூறியதும் ராஜசேகர் கூறியதும் கார்த்திக்கின் தலைக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. தன்னுடைய விதியை நினைந்து நொந்து கொள்வதா? இல்லை, ராஜசேகர் கூறியது போல தான் புழைக்கத்தெரியாதவனா? என்றெல்லாம் எண்ணி மனம் வருந்தினான் கார்த்திக். கடைசியாக, காவல்துறையில் பணிக்கு சேர்ந்து கடந்த பத்து வருடங்களாக மனசாட்சிக்கு விரோதமாக நடக்காமல் பணி புரிந்ததற்கு பலனாக தன்னுடைய மகளை பறிகொடுக்க மாட்டேன் என்றும் இது கடவுள் தனக்கு கொடுத்திருக்கும் சந்தர்ப்பம் என்றும் முடிவெடுத்தவனாய் பொள்ளாச்சி அரச மருத்துவமனை நோக்கி டூ வீலரை செலுத்தினான்.



பொள்ளாச்சி அரச மருத்துவமனை, நேரம் மாலை 6.00 மணி

அன்று விடுமுறைதினம் என்பதால் மருத்துவமனையில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. மருத்துவமனைக்குள் நுழைந்த கார்த்திக்கினை பார்த்ததும் ஹெட் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி கார்த்திக்கினை நோக்கி விரைந்தார்.

"குட் ஈவினிங் சார், நீங்கதான் இந்த கேஸ ஹாண்டில் பண்ண போறதா சொன்னாங்க. நீங்க இப்ப இருக்கிற நிலைமைக்கு ........" என்று மெதுவாக இழுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"அண்ணன் நம்ம உழைச்சாத்தான் நம்ம சாப்பிடலாம், யோசிக்கிறதால எதுவும் நடக்கபோறல்ல. எல்லாம் கடவுள்ட கைலதான் இருக்கு. கேஸ பற்றி சொல்லுங்க." என்று வெறுப்புடன் கூறினான் கார்த்திக்.

கிருஷ்ணமூர்த்தியும் கார்த்திக்கும் ஐந்து வருடங்களாக ஒன்றாக பணிபுரிகின்றனர். தான் கிருஷ்ணமூர்த்திக்கு மேலதிகாரியாக இருந்தாலும் தனது சொந்த அண்ணா போலதான் கார்த்திக் பழகுவான். கார்த்திக்கினது இந்தக்குணத்தாலேயே அவனது ஸ்டேஷனில் வேலை செய்யும் எல்லோருக்கும் அவனைப்பிடித்திருந்தது. கிருஷ்ணமூர்த்தியும் கார்த்திக்கின் நிலமையைக்கண்டு வருந்தாத நாளில்லை.

"தம்பி இன்னைக்கு காலைல ஒன்பது மணி போல கண்ட்ரோல் ரூம்ல இருந்து நம்ம ஸ்டேஷனுக்கு கால் வந்திச்சு. யாரோ ஒரு பொண்ணு கால் பண்ணி தன்ன யாரோ கொலை பண்ண துரத்துறதா சொல்லியிருக்கா. இங்கயிருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சோலையாத்துக்கு அந்தப்பக்கம் இருக்கிற நீலமலைக்காட்டில இருந்து பேசியிருக்குது அந்தப்பொண்ணு. உடனடியா நானும் தாமோதரனும் கிளம்பினோம். இடையில ஓடுற ஆற்றை கடக்கிறதுதான் பெரும்பாடா போச்சு. பொண்ணு சொன்ன லொகேஷனுக்கு போனா அது ஒரு கெஸ்ட் ஹவுஸ், சுத்தி மூணு பக்கமும் காடு, ஒரு பக்கம் ஆறு. நாங்க போய் போட்ல இருந்து கீழ கால வைக்கும் போதே யாரோ அலறுற சத்தம் கேட்டுச்சு, ஓடிப்போய் அந்த கெஸ்ட் ஹவுஸ திறந்து போனா அங்க மேல ஒரு ரூம்ல ரெண்டு பொண்ணுங்க விழுந்து பேச்சு மூச்சில்லாம இருந்துதுங்க. கிட்ட போயி பார்த்தா அதில ஒரு பொண்ணு நெஞ்சிலயும் கழுத்திலயும் கத்தியால யாரோ குத்தியிருந்தாங்க, மற்ற பொண்ணு பேச்சு மூச்சில்லாம மயங்கி கிடந்துச்சு. உடனடியா ரெண்டு பொண்ணுங்களையும் இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டம். ஆனா அதில அந்த கத்தி குத்து வாங்கின பொண்ணு இறந்திடுச்சு, மற்ற பொண்ணுக்கு சுயநினைவு திரும்பல. தாமோதரன் திரும்ப நம்ம டீமையும் பொரென்சிக் டீமையும் கூட்டிகிட்டு அங்க போயிருக்கிறான். அந்தப்பொண்ணு கண் முழிச்சாதான் என்ன நடந்திருக்கும்னு தெரியவரும் தம்பி"

"அண்ண, கண்ட்ரோல் ரூம்க்கு கால் பண்ணின பொண்ணு அவளோட பேர் சொல்லலையா?"

"சொல்லியிருக்கா தம்பி. ராதிகாவாம்"

"இந்தப்பொண்ணுங்க யாருன்னு தெரிஞ்சுதா?"

"இந்தப்பொண்ணுங்க யாருன்னே தெரியல. கண்ட்ரோல் ரூமுக்கு வந்த கால்ல பேசின பொண்ணு தன்னோட பிரெண்ட்ஸ யாரோ கொலை பண்ணிட்டதா சொல்லியிருக்கா, ஆனா இங்க ஒரு பொண்ணுதான் செத்து போய் கிடந்தது. அந்த கெஸ்ட் ஹவுஸ்ல வேற சில பேரும் இருந்த போல தெரியுது. ஆனா இப்ப ஒருவரும் இல்ல. அந்தக்காட்டுக்குள்ள கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதே வெளில யாருக்கும் தெரியல"

"ஆனா அந்த இடத்துக்கு எப்பிடி போயிருப்பாங்க?"

"போட்ல தான் போகலாம். அவங்களுக்கு சொந்தமான போட்ல போயிருக்காங்க. அந்த போட் அங்க என்ஜின் ரிப்பேர் ஆகி நிக்குது. தாமோதரன் செக் பண்ணி சொன்னான்."

"அப்போ வேற ஏதாவது வழியிருக்கா?"

"இல்ல தம்பி, மற்ற எல்லா பக்கமும் காடுதான் அதுக்கப்புறம் கேரளா பார்டர். இன்னொரு விஷயம் தம்பி அந்த கொலையெல்லாம் இங்க சுயநினைவில்லாம இருக்கிற பொண்ணுதான் செய்திருக்கு. அவளுக்கு பக்கத்திலதான் கத்தியும் இருந்திச்சு. கைரேகை எடுத்திருக்காங்க. ரிசல்ட் வந்திச்சுன்னா கேஸ முடிச்சுடலாம்.”

"ஆனா மற்ற பிரெண்ட்ஸுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிச்சாகணுமே!"

“இதுல கூட யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்ல. அந்தப்பொண்ணு எல்லாத்தயும் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும். நீங்க ஆக வேண்டியத பாருங்க."

கிருஷ்ணமூர்த்தி கூறியதன் அர்த்தம் கார்த்திக்கிற்கு விளங்கியது. தன் மீது கொண்டுள்ள அக்கறையில்தான் அவ்வாறு கூறுகின்றார் என்பதை விளங்கிக்கொண்ட கார்த்திக்கும் இரண்டு மனதுடன் தலையசைத்து கிருஷ்ணமூர்த்தியை ஸ்டேஷனுக்கு செல்லுமாறு கூறிவிட்டு சிரேஷ்ட வைத்தியரின் அறையை நோக்கி நகர்ந்தான்.

சிரேஷ்ட வைத்தியர் சித்ரலேகாவிடம் தன்னை அறிமுகப்படுத்திய கார்த்திக் இறந்த பெண்ணின் உடலைப்பார்க்க அனுமதி பெற்று பிணவறை நோக்கி டாக்டரையும் அழைத்து சென்றான்.

இறந்த பெண்ணின் உடலில் நெஞ்சிலும் கழுத்திலும் ஆழமான கத்திக்குத்து காயங்கள் தென்பட்டன. ஜீன்சும் ஸ்கின்னியும் அவள் அணிந்திருந்தது கார்த்திக்கிற்கு கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியது சாதாரணமானதுதான்.

"என்ன இன்ஸ்பெக்டர் ஒண்ணுமே பேசாம நிக்கிறீங்க?" டாக்டரின் குரல் கேட்டு கார்த்திக்கும் "இல்ல டாக்டர், இந்தப்பொண்ணோட டிரஸ் ஏதாவது ரிமூவ் பண்ணினீங்களா?"

"இல்லையே, ஏன் கேட்குறீங்க?"

"இல்ல, அவ்வளவு குளிரான இடத்துல இப்பிடி ட்ரெஸ் பண்ணிருக்கே அதான் கேட்டன்?"

"இந்தக்காலத்து பொண்ணுங்களுக்கு குளிர விட ஸ்டைல் தான் முக்கியம் போல.........."

"மற்ற பொண்ணோட கண்டிஷன் என்ன டாக்டர்?"

"இங்க கொண்டு வரும் போது மயக்கத்துலதான் இருந்தா, ரொம்ப பயந்திருக்கான்னு நினைக்கிறன். அட்மிட் ஆகி கொஞ்ச நேரத்துக்கப்புறம் கண் முழிச்சா பட் தான் யாருன்னே தெரியாத மாதிரி பிஹேவ் பண்ணினா. அப்புறம் நாங்க டிஸ்டர்ப் பண்ணல. இப்பவும் அரை மயக்கத்துலதான் இருக்கிறா"

"எதனால இப்படி ஆகும் டாக்டர்?"

"அங்க ஒரு கொலை நடந்திருக்கு. அந்த அதிர்ச்சிலயும் இப்பிடி ஆகலாம். பட் எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும். மற்றபடி அந்தப்பொண்ணுக்கு வேறெந்த பிரச்சனையும் இல்ல இன்ஸ்பெக்டர்" கதைத்துக்கொண்டே இருவரும் அந்தப்பெண்ணின் வார்டிற்கு வந்தடைந்தனர். அங்கே மயக்கத்திலிருந்து பெண்ணை அருகே சென்று பார்வையிட்டான் கார்த்திக். ஜீன்சும் டீ ஷர்ட்டும் அணிந்திருந்த அந்தப்பெண்ணின் இடது கை மணிக்கட்டில் கட்டு போடப்பட்டிருந்தது.

"கையில என்ன காயம் டாக்டர்?"

"அதுவா, இந்தப்பொண்ணுட கையிலயும் ஒரு கத்தி வெட்டின காயம் இருந்திச்சு, சின்ன காயம்தான்"

அவள் கையிலிருந்த காயத்தை மாத்திரமல்ல, ரோலெக்ஸ் மணிக்கூடு, கோல்ட் செயின் என்று எல்லாவற்றையும் நோட்டம் விட்டிருந்தான் கார்த்திக். ராஜசேகருக்கு ஏன் அவள் வசதியானவள் என்று தகவல் போயுள்ளது என்றும் கார்த்திக்கிற்கு விளங்கியது.

அவள் இருந்த வார்டை விட்டு வெளியேற ஆயத்தமாகிய கார்த்திக்கிடம் டாக்டர் உரையாடலை தொடங்கினார்.

"இன்ஸ்பெக்டர் உங்க பொண்ணுக்கு இப்ப ஓகேயா?"

"இல்ல டாக்டர், இன்னும் சர்ஜரி பண்ணல....... உங்களுக்கு எப்பிடி தெரியும் டாக்டர்?"

"டாக்டர் ஜீவானந்தம் என்னோட பிரெண்ட்தான், என்னோட பையனுக்கும் ஹார்ட்ல ப்ரோப்ளம் இருந்துச்சு. ஜீவானந்தம் தான் சர்ஜரி செய்தார். அவர்கூட டூ வீக்ஸ் முன்னாடி பேசிக்கிட்டிருக்கும் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பொண்ணுக்கும் அதே ப்ரொப்ளம் இருக்குனு சொன்னார். உங்க பேர கேட்டதும் அது நீங்கதான்னு விளங்கிச்சு.அதான் கேட்டன் இன்ஸ்பெக்டர்"

"ஓ..... உங்க பையன் எப்பிடி இருக்கிறான் டாக்டர்?"

"ஹீ இஸ் காம்ப்லீட்லி ஆல்ரைட். சீக்கிரமா சர்ஜரி பண்ணிடுங்க. லேட் பண்றது அட்வைசபில் இல்ல"

"யெஸ் டாக்டர்"

கதைத்துக்கொண்டே இருவரும் சித்ரலேகாவின் அறையை வந்தடைந்திருந்தனர்.

"டாக்டர் இந்தப்பொண்ணுதான் கொலை செய்திருக்கும்னு ஸ்பாட்ல இருந்த போலீஸ் சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?"

"போலீஸ் மாதிரி என்னால சந்தேகப்பட முடியாது இன்ஸ்பெக்டர். கத்தில இருக்கிற கைரேகையும் இந்தப்பொண்ணோட கைரேகையும் ஒண்ணான்னு செக் பண்ணி பார்த்து நீங்க கண்டுபிடியுங்க, பட் அவ கொலையாளியாவே இருந்தாலும் இந்த ஹாஸ்பிடல்ல இருக்கும் மட்டும் அவள் என்னோட பேஷண்ட். அவ்வளவுதான்."

"சரி டாக்டர், நான் ஸ்டேஷனுக்கு கிளம்புறன், இங்க கான்ஸ்டபிள் ரெண்டு பேர் காவலுக்கு நிப்பாங்க. அந்தப்பொண்ணு முழிச்சதும் இன்போர்ம் பண்ணுங்க."

"ஓகே இன்ஸ்பெக்டர்" என்று சித்ரலேகாவும் கூற விடைபெற்று சென்றான் கார்த்திக்.

ஒரு பாதி தூரம் பைக்கில் சென்று விட்ட கார்த்திக்கிற்கு தனது கால்ச்சட்டை பைக்குள் இருந்து செல்போன் அதிருவது விளங்கி வண்டியை ஓரங்கட்டினான்.

"ஹலோ கிருஷ்ணமூர்த்தி நான் டிரைவ் பண்ணிட்டிருக்கன், சீக்கிரம் சொல்லுங்க"

"தம்பி அந்த கத்தில இருந்த கைரேகை அந்தப்பொண்ணோடதுதானாம்......"

"ஓ……, அப்ப நீங்க சந்தேகப்பட்டது சரிதான்."

"ஆனா பிரச்சனை என்னன்னா அந்தக்கத்தில வேற ஒரு கை ரேகையும் கிடைச்சிருக்கு தம்பி."

"இன்னொரு ரேகையா?"

"ஆமா தம்பி இன்னொரு ரேகையும் இருக்கு, அதில செத்துப்போன பொண்ணோட ரத்தக்கறையும் இருக்குதுனு சொன்னாங்க."

"வேற யாரோடதும் பிளட் இருந்த மாதிரி ஏதாவது......"

"இல்லையாம், ஒருத்தரோட பிளட் தான் இந்தக்கத்தில இருந்துச்சாம்."

"வேற ஏதாச்சும் டீடெயில்ஸ்?"

"இன்னொரு முக்கியமான விஷயம், ஆத்துக்கு இந்தப்பக்கம் அவங்களோட போட் பார்க் பண்ணியிருந்த இடத்தை தாமோதரன் கண்டுபிடிச்சிருக்கிறான், அங்க ஒரு பஜுரோ வண்டியும் நிக்குதாம். கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன். அதுலதான் யாரோ வந்திருக்காங்க. நேற்று சாயுங்காலமா அந்த வண்டி போனத ஏரியா பையன் ஒருத்தன் பார்த்திருக்கிறான். வண்டிக்குள்ள அஞ்சு அல்லது ஆறு பேர் இருந்திருப்பாங்கன்னு சொல்றானாம்"

அந்தப்பையன்கிட்ட இருந்து வேற ஏதும் டீடெயில் எடுக்கலாமான்னு பார்க்க சொல்லுங்க அண்ணே"

"சரி தம்பி, நான் பார்த்துக்கிறன்"

கர்நாடகா வண்டி தமிழ்நாடு கேரளா பார்டரில் ஏன் நிற்கிறது? வண்டியிலிருந்தவர்கள் எங்கே? யார் அந்த ராதிகா? இறந்த பெண் யார்? ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருக்கும் பெண் யார்? என ஆயிரம் கேள்விகள் கார்த்திக்கின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்க குழப்பத்துடன் பைக்கை ஸ்டார்ட் செய்தான் கார்த்திக்.

பைக் ஸ்டார்ட் ஆனதுதான் தாமதம் செல்போன் மீண்டும் சிணுங்கியது. லாண்ட் லைன் நம்பரை பார்த்ததும் எடுத்து காதில் வைத்தான் கார்த்திக்.

"ஹலோ இன்ஸ்பெக்டர் கார்த்திக்" எதிர் முனையில் டாக்டர் சித்ரலேகாவின் குரல்.

"யெஸ் ஸ்பீக்கிங்"

"நான் டாக்டர் சித்ரலேகா, அந்தப்பொண்ணு கண் முழிச்சிட்டாள். பேரு ராதிகாவாம்."

"என்ன!....... ராதிகாவா!?...... டாக்டர் நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்திடுறன்." என்று கூறிவிட்டு போனை வைத்தவன் மின்னல் வேகத்தில் மருத்துவமனை நோக்கி பறந்தான்.



-தொடரும்-​
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2 - ஒரு கதை சொல்லட்டுமா சார்!



பொள்ளாச்சி அரச மருத்துவமனை, நேரம் இரவு 7.00 மணி

மனதில் எழுந்த கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் விடைதேடி விரைந்து மருத்துவமனை வந்த கார்த்திக் நேரே டாக்டரை சந்திக்க அவரது அறைக்கு சென்றான். அங்கு கார்த்திக்கிற்காக காத்துக்கொண்டிருந்த டாக்டர் சித்ரலேகா கார்த்திக்கின் முகத்தில் தென்பட்ட குழப்பங்கள் புரியாதவராக " இன்ஸ்பெக்டர் லேப்ல டெஸ்ட் ரிசல்ட் தந்திட்டாங்களா?" என்றார்.

"ஆமா டாக்டர், அந்த கத்தில இருக்கிறது இங்க இருக்கிற அந்த ராதிகாவோட கை ரேகைதானாம்."

"ஓகே, அப்பிடின்னா உங்க முகத்தில ஏன் இந்தக்குழப்பம் இன்ஸ்பெக்டர்?"

"இல்ல டாக்டர் கத்தில இன்னொரு கை ரேகையும் இருக்குதாம், இன்னொன்னு இந்த ரெண்டு பொண்ணுங்க மட்டுமில்ல அந்த நீலமலைக்காட்டுக்கு இவங்களோட வேற சில பெரும் போயிருக்கிறதா இன்போர்மேசன் கிடைச்சிருக்கு. அதோட கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்ல ஒரு வண்டியும் கிடைச்சிருக்கு. ஸோ குழப்பத்துக்கு நிறைய ரீசன் இருக்கு டாக்டர்"

"ஓ அப்பிடின்னா இது ஏதோ பெரிய கேஸ் போலதான் தெரியுது. சரி நீங்க அந்த பொண்ணுகிட்ட ஏதாவது விசாரிக்கணுமுன்னா இப்ப விசாரிக்கலாம், பட் இப்ப ஹாஸ்பிடல்ல இருந்து ரிலீஸ் பண்ணமாட்டம்."

"ஏன் டாக்டர், நீங்கதான் அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னீங்களே!"

"அது சரி இன்ஸ்பெக்டர், ஆனா எங்களுக்குன்னு ஒரு ப்ரொசீஜர் இருக்கு. மயக்கத்துல இருந்து முழிச்சவங்கள டுவல்வ் அவர் ஆப்செர்வசன்ல வச்சிருந்திட்டுத்தான் ரிலீஸ் பண்ணலாம். மோர்னிங் தாராளமா நீங்க கூட்டிட்டு போகலாம்"

"ஓகே டாக்டர், அதுவும் ஒரு விதத்துல நல்லதுதான். ஸ்டேஷனுக்கு கூட்டி போய்ட்டா பொண்ணுங்கள விசாரிக்கிறப்போ கட்டாயம் ஒரு லேடி போலீஸ் கூட இருக்கணும். பொள்ளாச்சில இருக்கிற போலீஸ் பூரா இப்ப தேர்தல் பிரச்சாரத்துக்குத்தான் பாதுகாப்புக்கு போயிருக்கு. பேசாம நான் இங்க இருந்தே விசாரணைய பண்ணிடலாம்."

கார்த்திக் வெறுப்பின் உச்சத்தில் கூறிய வார்த்தைகள் சித்ரலேகாவிற்கு சிரிப்பை வரவழைத்திருந்தாலும் வெளியிலே காட்டிக்கொள்ளாமல் இருவரும் ராதிகா இருந்த வார்டை நோக்கி நடந்தனர். அங்கே வாசலில் காவலுக்கு இருந்த கான்ஸ்டபிள் இருவரும் கார்த்திக்கை கண்டதும் கார்த்திக்கிடம் ஏதோ பேச முயல்வதுபோல் கையை பிசைந்து கொண்டு நின்றனர்.

"என்ன விஷயம் தங்கவேல், சொல்லுங்க" என்று கார்த்திக் வினவ,

"சார் இன்னைக்கு டவுன் ஹால்ல நடக்குற ஆளும்கட்சிட கூட்டத்துக்கு நம்ம ஸ்டேஷன்ல இருந்தும் நாலு பேர பாதுகாப்புக்கு போக சொல்லியிருந்தாங்க, ஆனா இப்ப ரெண்டு பேர்தான் போயிருக்காங்க."

"ஏன் மிச்ச ஆட்கள் எங்க?"

"தாமோதரன், மணி, சிவா, ராம் இவங்க நாலு பெரும் நீலமலைக்காட்டுக்கு போயிருக்காங்க. ஏ.சி. சார் கோபப்பட்டு கிருஷ்ணமூர்த்திக்கு திட்டியிருக்காரு. அதான் என்ன பண்றதுன்னு தெரியல சார்"

அசிஸ்ட்டண்ட் கமிஷனர் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பதிலேயே தனக்கு எந்தளவுக்கு டிபார்ட்மெண்டில் மதிப்புள்ளது என்பதை புரிந்து கொண்ட கார்த்திக் பீறிட்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு “தங்க வேல் நீங்க ரெண்டு பெரும் உடனே கிளம்புங்க. நாங்க என்ன வேலையில்லாம ஸ்டேஷன்ல தூங்கிட்டு இருக்கோம்னு நினைக்கிறாங்க போல....." என்று கூறினான்.

"இங்க காவலுக்கு இருக்கணுமே சார்"

"அதெல்லாம் நான் பாத்துக்கிறன், இந்த ஒரு பொண்ணுதானே, கிருஷ்ணமூர்த்தி ஸ்டேஷன்ல இருக்கட்டும். கைய நீட்டி காசு வாங்கியிருப்பாங்க. டைம்க்கு போகலேன்னா அவங்களுக்கு கோபம் வந்திடும். நீங்க கிளம்புங்க" என்று கூறிவிட்டு மனசிற்குள் அசிஸ்டன்ட் கமிஷனருக்கு திட்டிக்கொண்டே அறைக்குள் நுழைய முற்பட்டான் கார்த்திக்.

"சார் அந்தப்பொண்ணு கையில விலங்கு போட்டிருக்கம் சார், இந்தாங்க சாவி" என்று சாவியை கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டு நடையைக்கட்டினர் இருவரும்.

உள்ளே கட்டிலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் பேரழகி ஒருத்தி. முன்னர் வந்திருந்த நேரம் மயக்கத்திலிருந்தவளின் உடை, அணிகலன்களை மாத்திரமே அதிகம் அவதானித்திருந்த கார்த்திக்கிற்கு இவள்தானா அவள் என்று சந்தேகமே ஏற்பட்டுவிட்டது. சாந்தமான முகத்தில் ஆங்காங்கே பதற்றங்களும் தென்பட்டன.

கார்த்திக்கிற்கும் "இவள் கொலை செய்திருப்பாளா? இந்தக்கைகள் கத்தியால் ஒரு உயிரை எடுக்கக்கூடியதா?" என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் எழுந்துகொண்டிருந்தன.

"இப்ப எப்பிடியிருக்கும்மா?" சித்ரலேகாவின் குரல் கேட்டு தன்னிலை உணர்ந்தான் கார்த்திக்.

"இப்ப பரவால்ல டாக்டர்"

அவள் குரல் கூட அழகாகத்தான் இருந்தது.

"இவர்தான் இன்ஸ்பெக்டர் கார்த்திக், இவர்தான் உங்கள இன்வெஸ்டிகேட் பண்ணப்போற போலீஸ் ஆபிஸர்." என்று கூறி கார்த்திக்கிடம் ராதிகாவை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார் சித்ரலேகா.

"நான் இன்ஸ்பெக்டர் கார்த்திக், உங்களோட கேஸ நான்தான் டீல் பண்றன். மிஸ் நீங்க எவ்வளவுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குறீங்களோ அவ்வளவுக்கு உங்களுக்கு நல்லது. ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிச்சா எங்க டிரீட்மென்ட் வேற மாதிரி இருக்கும். உங்களுக்கு புரியும்னு நினைக்குறன்."

எதிரே இருந்தவளின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை, எந்தப்பதிலும் இல்லை. இது கார்த்திக்கிற்கு கோபத்தை உண்டாக்கியது.

"மிஸ் நீங்கதான் அந்தப்பொண்ண கொலை செஞ்சிருக்கீங்கன்னு தெரியும். உங்களோட கைரேகைதான் அந்த கத்தியில கிடைச்சிருக்கு. நீங்க எதுவும் பேசாம இருந்தா உங்களுக்குத்தான் நஷ்டம். நீங்க வந்த வண்டியையும் கண்டுபிடிச்சாச்சு. பெங்களூர்ல போலீஸ்க்கு இன்போர்மேசன் கொடுத்தாச்சு. நீங்க ஆறு பேர் போனத ஒரு பையன் பார்த்திருக்கிறான். சோ நீங்க உண்மைய சொல்லித்தான் ஆகணும்."

கார்த்திக்கின் மிரட்டல் தொனியைக்கேட்டவள் பயம் கொண்டவளாய் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீர் துளியை துடைத்த படி ஆம் என்பது போல தலையசைத்தாள்.

தனது மிரட்டலுக்கு பலன் கிடைத்துவிட்டதை உணர்ந்த கார்த்திக்கும் “ம்..... சொல்லுங்க, நீங்க யாரு? உங்க பெரு என்ன? உங்க கூட வந்தவங்கெல்லாம் யாரு? அவங்கெல்லாம் எங்க? ஏன் அந்த பொண்ண கொலை பண்ணீங்க?" என்று கேள்விக்கணைகளை தொடுத்தான்.

"கார்த்திக் சார் நான் எல்லா உண்மைகளையும் உங்ககிட்ட சொல்லிடுறேன், உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?"

"அத அப்புறம் பார்க்கலாம், நீங்க யாருன்னு முதல் சொல்லுங்க"

சிறிது நேர அமைதிக்கு பின்னர் பதில் சொல்லத்தொடங்கினாள் ராதிகா.

"என்னோட பேரு ராதிகா, அப்பா மனோகர். பெங்களூர்ல "வின்சாப்ட்" என்கிற சாப்ட்வேர் கம்பெனியோட எம்.டி."

"ம்ம்ம்.... உங்க கூட வந்தவங்கெல்லாம் யாரு?"

"ஒருத்தன் என்னோட லவ்வர், பேரு விக்ரம், சண் இண்டஸ்ட்ரீஸ் ஓனர் சண்முகவடிவேலோட ஒரே பையன். அதோட எங்களோட காலேஜ் பிரெண்ட்ஸ் ராகுலும் அர்ஜுனும் மனீஷாவும் வந்தாங்க."

"ராகுல், அர்ஜுன், மனீஷா இவங்கெல்லாம் யாரு?"

"ராகுல் டாக்டர் பரந்தாமனோட பையன். மனீஷா ஜட்ஜ் நாராயணஸ்வாமியோட பொண்ணு. அர்ஜுனோட அப்பா போஸ்ட் ஆபிஸ்ல வேலை செய்றார். அர்ஜுனுக்கு சின்ன வயசில இருந்து விக்ரம்தான் ஸ்பான்சர் பண்ணிகிட்டு இருக்கான். நாங்க எல்லாரும் சென்னை அண்ணா யூனிவெர்சிட்டில பைனல் இயர் படிச்சுக்கிட்டிருக்கம்"

"ம்..... அப்போ எல்லாருமே பெரிய இடம்தான்... அந்த மனிஷாங்கிற பொண்ணத்தானா நீங்க குத்தி கொலை பண்ணினீங்க?"

"சார் உண்மை என்னன்னு தெரியாம நீங்கபாட்டுக்கு எதுவும் முடிவெடுக்காதீங்க" என்று கூறிவிட்டு கண்கலங்கினாள் ராதிகா.

ராதிகா அப்படிக்கூறியது கார்த்திக்கிற்கு சிறிது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் கடமையிலிருந்து விலகாதவனாய் “உண்மைய நீங்க சொன்னாத்தானே தெரியும். மனீஷாவை ஏன் கொன்னீங்க? இல்ல இல்ல மனிஷா ஏன் இறந்து போனா? இப்பிடிக்கேட்டா ஓகேவா?" என்று கேட்டு மீண்டும் மீண்டும் குடைந்தான் கார்த்திக்.

"சார் நான் மனிஷாவ கொலை பண்ணல......" இம்முறை கொஞ்சம் கோபத்துடனே கூறினாள் ராதிகா.

"மிஸ் ராதிகா, நீங்க இங்க குரல உயர்த்தி பேசுறதால நீங்க பண்ணின கொலை இல்லன்னு ஆகிடாது. கிரைம் சீன்ல கிடைச்ச கத்தில உங்க கைரேகைதான் இருக்குது. மனிஷாவ அந்தக்கத்தியாலதான் குத்தி கொலை பண்ணியிருக்காங்க. சோ கிளியரா நீங்கதான் கொலை பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது. போலீஸ ஏமாத்தலாம்னு மாத்திரம் நினைக்காதீங்க." என்று தாம் கண்டுபிடித்தவற்றை சற்று மாற்றங்களுடன் கூறினான் கார்த்திக்.

"சார் நான் சொல்ல வாராத கொஞ்சம் கேட்டுட்டு அதுக்கப்புறம் முடிவெடுங்க ப்ளீஸ். அங்க செத்துக்கிடந்த பொண்ணு மனீஷாவே இல்ல!!!!!"

"என்ன!!!!? அப்போ அது யாரு?"

"அவ பெரு விஷாலி, ராகுலோட காதலி"

"முன்னாடி கேட்டப்போ ஏன் அவ பேர சொல்லல?"

"நான் முன்னாடி சொன்னவங்க எல்லாரும் என்னோடதும் விக்ரமோடதும் பிரெண்ட்ஸ். நாங்க எல்லாரும் ஒவ்வொரு வருசமும் காலேஜ் எக்ஸாம் முடிஞ்சதுக்கப்புறம் ஒரு வீக்கெண்ட் விக்ரமோட கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து ஹாலிடேய என்ஜாய் பண்ணுவம். ஆனா விஷாலி யாருன்னே எங்களுக்கு தெரியாது. லாஸ்ட் மினிட்லதான் ராகுல் விஷாலிய கோயம்புத்தூர்ல வச்சு தன்னோட கேர்ள் பிரெண்ட்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தினான். கடைசி நேரம்கிறதால விஷாலியும் கூட வாரத எங்களால அவொய்ட் பண்ண முடியல. அவ வந்தது எங்க ஒருவருக்குமே உடன்பாடில்ல, ராகுலத்தவிர."

"ராதிகா இன்னும் கொஞ்சம் நம்புற மாதிரி கதை சொல்லுங்க.... "என்று ராதிகா சொன்னதை நம்பாதவன் போல பாசாங்கு செய்தான் கார்த்திக்.

"சார் நான் உங்ககிட்ட பொய் சொல்ற நிலைமையில இல்ல......" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார்த்திக்கின் செல் போன் சிணுங்கியது.

போனில் கிருஷ்ணமூர்த்தியின் பெயரைக்கண்டதும் அறையிலிருந்து வெளியில் வந்து செல்போனை காதில் வைத்தான்.

"அண்ண, ஏதாவது இன்போர்மேசன் கிடைச்சுதா?"

"அத கேட்கத்தான் நானும் போன் பண்ணினன் தம்பி. தாமோதரன் இன்னும் சேர்ச் பண்ணிட்டுதான் இருக்கிறான். இதுவரைக்கும் எதுவும் கிடைக்கலயாம். அந்த பொண்ணு ஏதாவது சொன்னாளா தம்பி?"

"இப்பதான் கொஞ்ச கொஞ்சமா வாய் திறக்கிறாள், அவ கூட போனவங்கட டீடெயில்ஸ் தந்திருக்கிறாள். உங்க போனுக்கு மெசேஜ்ல போட்டு விடுறன். அவ குடுத்த டீடெயில்ஸ் உண்மையானதான்னு செக் பண்ணிட்டு அவங்க அப்பா அம்மாக்கு இன்போர்ம் பண்ணிடுங்க. எல்லாருமே பெங்களூர்ல பெரிய இடம்தான் அண்ண."

"சரி தம்பி, நான் செக் பண்ணிடுறன். ஆனா என்னன்னு இன்போர்ம் பண்றது? உங்க பசங்க செத்து போய்ட்டாங்கன்னா?"

"நமக்கு வேற பாடியும் கிடைக்கல, கத்தில வேற ஆட்கள்ட பிளட்டும் கிடைக்கல.பாடி கிடைக்குற வரைக்கும் நாம எதையும் கன்போர்ம் பண்ண ஏலாது. உங்க பசங்களுக்கு இங்க ஒரு பிரச்சனை. உடனே கிளம்பி வாங்கன்னு சொல்லுங்க"

"அப்பிடியே சொல்லிடுறன் தம்பி. அப்ப அந்த செத்துப்போன பொண்ணு அதுல யாருன்னும் மெசேஜ்ல போட்டுடுங்க தம்பி"

"இல்ல அண்ண, அதுல சின்ன குழப்பம் இருக்கு. நீங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியே இன்போர்ம் பண்ணிடுங்க"

"ஓகே தம்பி, இன்னொரு விஷயம்....."

"என்ன சொல்லுங்க அண்ண"

"இல்ல எல்லாரும் பெரிய இடம்னு சொல்றீங்க, பணம் அதிகமானாலே இப்பிடித்தான் தம்பி. ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு கெஸ்ட் ஹவுஸ வாங்குவானுகள். அங்க வந்து பிரெண்ட்ஸ் கூட குடியும் கும்மாளமுமா இருப்பானுகள். ஏதாவது சின்ன பிரச்சனைல போதைல ஒருத்தன் மற்றவன போட்டு தள்ளிடுவான். இதுதான் நடந்திருக்கும். ஹாஸ்பிடல்ல இருக்கிற பொண்ணுகிட்டயோ அவ அப்பாகிட்டயோ ஒரு டீல் பேசினா எல்லாத்தயும் சுமூகமா முடிச்சுடலாம். வேற அதிகாரிங்கன்னா அப்பிடித்தான் செய்திருப்பாங்க. உங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராதுன்னு தெரியும் தம்பி. இருந்தாலும் ஏதோ மனசு கேட்கல, சொல்லிட்டன். நீங்க யோசிச்சு பாருங்க தம்பி."

"ம்ம்ம்.... நான் பார்த்துக்கிறேன் அண்ண" என்று பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்தான் கார்த்திக்.

இதுவரை காலமும் கார்த்திக்கிடம் யாரும் இவ்வாறு கதைத்ததில்லை. அதுவே அவனுக்கு பெருமிதமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று தனக்கு கீழே வேலை செய்பவர் தன்னையே லஞ்சம் வாங்குமாறு வெளிப்படையாக கூறியது பெரியதொரு அவமானமென கருதினான் கார்த்திக். இதுவே கிருஷ்ணமூர்த்தியாக இல்லாமல் வேறு யாராவது கூறியிருந்தால் கார்த்திக்கின் கோர முகத்தை இன்று பார்த்திருப்பார்கள்.

சிறிது நேரம் நிதானமாக அங்கேயிருந்த பெஞ்சில் அமர்ந்து யோசித்த கார்த்திக்கிற்கு தன்னுடைய நன்மைக்காகவே கிருஷ்ணமூர்த்தி அவ்வாறு கூறியுள்ளார் என்பதும் தனக்கும் இதைவிட்டால் தனது செல்ல மகளை காப்பாற்ற வேறு வழியுமில்லை என்பதுவுமே நிதர்சனம் என புரிந்தது.

தன் மகளை நினைத்தவுடன் ஏற்பட்ட இறுக்கமான மனநிலையை இலகுவாக்கிக்கொண்டு எதுவாயிருந்தாலும் நீலமலைக்காட்டினுள்ளே அதற்கு முந்தைய தினம் என்ன நடந்தது எனும் உண்மையை அறிந்த பின்னர் முடிவெடுக்கலாம் என்று தனக்கு தானே சொல்லியபடி ராதிகாவின் வார்டுக்குள் நுழைந்தான் கார்த்திக்.

உள்ளே ராதிகாவும் எதையோ யோசித்துக்கொண்டு கார்த்திக் அவ்விடம் வந்தது கூட தெரியாதவள் போல கையில் விலங்குடன் அமர்ந்திருந்தாள்.

"மிஸ் ராதிகா உங்களுக்கு என்கிட்ட இருந்து ஏதாவது உதவி வேணும்னு நினைச்சீங்கன்னா என்கிட்ட நீலமலைக்காட்டுக்குள்ள என்ன நடந்ததுங்கிற உண்மைய சொல்லித்தான் ஆகணும், உங்களுக்கு வேற சாய்ஸ் இல்ல."

ராதிகாவும் ஆம் என்பது போல மெதுவாக தலையாட்டினாள். கார்த்திக்கும் ராதிகாவிடம் அவள் நம்புமாறு பேச்சுக்கொடுத்து உண்மையை அறிந்துவிட வேணும் என்று மனதிற்குள் திட்டம் போட்டிருந்தான்.

"மிஸ் ராதிகா உங்க பேரண்ட்ஸுக்கும் உங்க பிரெண்ட்ஸோட பேரண்ட்ஸுக்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல இன்போர்மேசன் போய்டும், விடியிறதுக்கு முன்னாடி எல்லாரும் இங்க வந்துடுவாங்க. எப்பிடியும் அவங்க கமிஷ்னர் கூடத்தான் வருவாங்க. ஒண்ணு நீங்க என்கிட்ட உண்மைய சொல்லுங்க, இல்ல கமிஷ்னர் அண்ட் மனீஷாட பேரண்ட்ஸ்கிட்ட. இது கர்நாடகா இல்ல தமிழ் நாடுன்னு மறந்துடாதீங்க." என்று ஏதோவெல்லாம் சொல்லி எப்பிடியாவது உண்மையை அறிந்து விடமுனைந்தான் கார்த்திக்.

கார்த்திக் இவ்வாறெல்லாம் உண்மையை அறிய முற்பட காரணமில்லாமலில்லை. தன்னிடம் எதுவும் கூறாமல் ராதிகா அவளது பெற்றோரிடம் உண்மையை கூறிவிட்டால் அவர்களின் அந்தஸ்த்துக்கும் வசதிக்கும் அவர்கள் இலகுவாக போலீசில் மேல் மட்டத்தில் கதைத்தோ பணத்தை வாரி இறைத்தோ இந்த நிகழ்வையே மறைத்துவிடுவார்கள். போதாததற்கு அவளுடைய நண்பர்களுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. எனவே தான் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி உண்மையை தெரிந்துகொள்வதுதான் என்று கார்த்திக்கிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இவ்வாறான மனசாட்சிக்கு புறம்பான செயலை எந்நாளும் அவன் செய்திராவிட்டாலும் இன்று அவன் அவ்வாறு செய்வதற்கு வெட்கப்படவில்லை, காரணம் இனியா……

"சார் நான் எனக்கு தெரிஞ்ச விஷயத்த உங்ககிட்ட சொல்றன். எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்புறன். உங்கள நம்பலாமா?"

"நிச்சயமா நம்பலாம். நம்பலானா உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னு இப்ப சொல்லுங்க"

"இல்ல சார், அத நான் நேரம் வரும் போது கேட்கிறன்."

"ம்..... சொல்லுங்க, அந்த நீலமலைக்காட்டில என்ன நடந்துச்சு......" ராதிகா தன்னை முழுவதுமாக நம்பி விட்டாள் என்று உணர்ந்த கார்த்திக் தனது ஆட்டத்தை தொடங்கி நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்தான்.

எதிரே கட்டிலில் அமர்ந்திருந்த ராதிகாவோ நீலமலைக்காட்டில் நடந்த பயங்கரத்தை சொல்வதற்கு ஆயத்தமானாள்.



- தொடரும்-​
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3 - நீலமலைக்காட்டு ரகசியம்

(ராதிகாவின் பார்வையில் நீலமலைக்காட்டில் நடந்த நிகழ்வுகள்)

ஆகஸ்ட் 21, நீலமலைக்காடு, பிற்பகல் 2.30

கதிரவனின் முழு ஆக்கிரமிப்பிலிருக்கவேண்டிய நேரமது, ஆனால் காரிருள் மெலிதாக வானில் பரவ மனதை சில்லிடச்செய்யும் இளம்குளிர்காற்று சோலையாற்றை சுற்றிப்படர்ந்திருந்தது. அந்த நிசப்தமான ஆற்றிலே காற்றைக்கிழித்துக்கொண்டு வேகமாக ஜெட் வேகத்தில் பறந்தது மோட்டார் விசைப்படகொன்று. சோலையாற்றின் மறுகரையை அடைந்த படகில் இருந்து கீழிறங்கினான் விக்ரம்.

"தோழர்களே உங்கள் அனைவரையும் இந்த உல்லாச உலகிற்கு வரவேற்கின்றேன். இந்த இரண்டு நாட்களும் வெளியுலகை மறந்து உங்கள் கவலைகளைக்களைந்து உங்கள் வாழ்க்கையின் இறுதிப்பயணமாக இதை எண்ணிக்கொண்டாடுங்கள்."

"டேய் என்னடா பில்ட் அப் எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு?" என்று கூறிய படியே படகிலிருந்து கீழே குதித்தான் ராகுல்.

"மச்சான் இது காலேஜ் பைனல் இயர். நெக்ஸ்ட் இயர் யாரு எங்க இருப்பான்னே தெரியாது. நானும் ராதிகாவும் யூ எஸ் போற பிளான்ல இருக்கோம். மோஸ்ட்லி இதுதான் நம்ம சேர்ந்து என்ஜாய் பண்ணப்போற லாஸ்ட் பியூ டேஸ்......." என்று விக்ரம் மகிழ்ச்சிக்கடலில் திளைத்துக்கொண்டிருக்க இடையே குறுக்கிட்ட ராதிகா "என்ன விக்ரம், வந்ததிலேருந்து அபசகுணமா பேசிகிட்டு...." என்று கூற, விக்ரம் அப்படியே ராதிகாவை அலேக்காக தூக்கி முத்தமிட்டான்.

சுற்றியிருந்த ராகுலும் மனீஷாவும் அர்ஜுனும் கைகொட்டி சிரித்துக்கொண்டிருக்க படகினுள்ளே இருந்து வெளியே இருந்த இடத்தை ஒருவித மிரட்சியுடன் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள் விஷாலி. அந்த நண்பர் குழாமில் வயதில் குறைந்தவள் விஷாலிதான். காலேஜில் முதலாமாண்டு படிப்பவள். ராகுல் நீண்ட நாட்களாக விஷாலி மீது ஒருதலைகாதலில் இருந்தவன், சமீபத்தில்தான் விஷாலியும் தனது சம்மதத்தை தெரிவித்திருந்தாள். ராகுலைத்தவிர மற்றவர்களுக்கு விஷாலியை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அதனாலேயே அவர்களுக்கும் விஷாலி அங்கே வந்ததில் பெரிய உடன்பாடு இல்லை. என்றாலும் ராகுலுக்காக விக்ரம் ஒத்துக்கொண்டான்.

விஷாலியினை கண்ணுற்ற ராதிகா விக்ரமின் காதில் எதோ சொல்ல ராதிகாவை கீழே இறக்கிவிட்டு விஷாலியை நோக்கி "விஷாலி உனக்கு இது புதுசா இருக்கலாம். நாங்க இப்பிடித்தான் ஜாலியா என்ஜாய் பண்ணுவம். எல்லார்கிட்டயும் மிங்கில் ஆகிறதுக்கு இத விட நல்ல சான்ஸ் கிடைக்காது. யூஸ் பண்ணிக்க."

"யெஸ், எல்லாருகூடவும் மிங்கில் ஆகிறதுக்கு நான் ரெடியா இருக்கன் அண்ட் உங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஹாலிடேயா இத நான் மாத்தி காட்டுவன் விக்ரம் பிரதர்." என்று மெல்லிய புன்னகையுடன் கூறினாள் விஷாலி.

எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டே லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடந்தார்கள்.

"என்னடி ஒரு மாதிரி இருக்கே? எனி ப்ரொப்ளம்?" மனீஷாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த ராதிகா விசாரித்தாள்.

"இல்லடி அவ மூஞ்சிய பார்த்தாலே பிடிக்கல, நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா வந்திருக்கோம், சிவ பூஜைல கரடி புகுந்த மாதிரி.... அவளுக்கே ஒரு இங்கிதம் தெரிய வேணாமா?"

"சரி சரி என்னடி பண்ணுற, எனக்கும் பிடிக்கலத்தான், பட் ராகுலுக்கு என்ன சொல்ற?"

"ஏதோ சொல்லு, அந்த அர்ஜுன் மாதிரி ஆட்களை எல்லாம் பிரெண்டா சேர்த்தா இப்பிடித்தான் நடக்கும்."

மனீஷாவிற்கு எப்போதுமே அர்ஜுனைப்பிடித்ததில்லை. அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக இரண்டு வருடங்களுக்கு முன்னே மனீஷா கூறி அது பெரிய பிரச்சனையாகியிருந்தது. விக்ரமும் ராதிகாவும்தான் ஒரு வழியாக அப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். விக்ரமும் ராதிகாவும் மனீஷாவை சமாதானப்படுத்தினார்களே தவிர மனீஷாவை நம்பவில்லை, ஏனெனில் மனீஷா தன்னுடைய அந்தஸ்த்திற்கு குறைவானவர்களை எப்போதும் மதிப்பதில்லை. அன்றிலிருந்து அர்ஜுனை எப்படியாவது அவர்களது குழுவிலிருந்து பிரித்துவிட துடிக்கிறாள் மனீஷா.

"ஹேய் மனீஷா, என்னடி சம்பந்தமே இல்லாம அர்ஜூன்ல பாயுற?” வாய்க்கு வந்தபடி எதுவும் கதைக்காத. அர்ஜுன எப்பவும் நம்மகூடத்தான் வச்சிருக்கணும். கோபத்துல எதையும் மறந்துடக்கூடாது."

“நான் ஒண்ணும் சும்மா சொல்லல.”

"அப்பிடீன்னா......"

"போட்ல வரும்போது அர்ஜுன் அவளையேதான் பார்த்திட்டிருந்தான்"

"உன்னோட கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?"

"சரி சரி, நீ விட்டு கொடுக்க மாட்டியே"

"சரிடி அவளுக்காக நாம எதுக்கு சண்டை போடணும், அவ என்னவும் பண்ணட்டும். லெட்ஸ் ஹாவ் பஃன் டியர்" பேசிக்கொண்டே கெஸ்ட் ஹவுஸை வந்தடைந்தனர்.

அந்த பங்களாவின் கீழ்த்தளத்தில் உள்ள அறைகளில் ராகுலும் அர்ஜுனும் மனீஷாவும் நுழைய விக்ரமும் ராதிகாவும் மேலே உள்ள ஆடம்பரமான அறையினுள் தஞ்சமடைந்தனர். அது விக்ரமின் பிரேத்தியேக அறை. அங்கு பொதுவாக ராதிகாவினைத்தவிர வேறு எவரையும் விக்ரம் அனுமதிப்பதில்லை.

"விக்கி வீடு ரொம்ப கிளீனா இருக்கு, எங்கயிருந்து அந்த சர்வன்ட பிடிச்ச?"

"யெஸ் டியர், நானும் நோட் பண்ணினன். ரொம்ப கிளீனாதான் இருக்கு. அது யாரோ அர்ஜுனோட தூரத்து சொந்தக்காரராம். அர்ஜுன்தான் அரேஞ் பண்ணிவிட்டான். நான் ஒர்க் எப்பிடின்னு பார்த்திட்டு பெர்மனண்டா இங்க வச்சுக்கிறேன்னு சொல்லிட்டேன்."

"ஓகே, இங்க வேலைக்கு வைக்கிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கணும்டா"

"ம்.... ஐ நோ........ சரி என்ன மனீஷா புலம்பிட்டே வந்தாள்?"

"எல்லாம் பழைய புராணம்தான்..... விஷாலி வந்ததுக்கும் அர்ஜூன்ல தான் பழி போடுறாள்"

"இதுக்குமா?"

"ஆமா, அர்ஜுன் விஷாலிய பார்த்துட்டே இருந்தானாம்." என்று சொல்லிவிட்டு சிரித்தாள் ராதிகா.

விக்ரமும் சிரித்துக்கொண்டே "ஹ்ம்ம்.... ராதிகா ரெண்டு பேருக்கும் பிரச்சனை வராம இருந்தா சரிதான். நமக்கு ரெண்டு பெரும் முக்கியம்."

"அத நான் பார்த்துக்கிறேன் விக்கி. யூ டோன்ட் வொரி"

பயணம் செய்த களைப்பில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அனைவரும் மீண்டும் நீச்சல் தடாகமருகே சந்திக்கும் போது மணி ஏழாகியிருந்தது. அங்கு அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இரவுப்பார்ட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விதவிதமான மதுகுடுவைகள் விதவிதமான பைட்ஸ் கூடவே அவர்கள் உபயோகிக்கும் போதைப்பொருட்களும் இருந்தன. நீச்சல் தடாகத்தை சுற்றி ஒளிர்ந்த பல வண்ண மின்குமிழ்கள் அவ்விடத்தினை பைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்விம்மிங் பூல் பார்ட்டி போல மாற்றியிருந்தது. இவையனைத்தையும் விஷாலிதான் ஏற்பாடு செய்திருக்கிறாள் என்பதும் எல்லோருக்கும் புரிந்தது. ராதிகாவினதும் மனீஷாவினதும் வயிற்றிலிருந்து கருகிய வாசனையும் வெளிப்பட்டது.

"வாவ் விஷாலி, எக்ஸலண்ட்..... பர்ஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஸன்..... திஸ் இஸ் கூல் டியர்" என்று விக்ரம் விஷாலியின் கைவண்ணத்திற்கு அடிபணிந்தான்.

ஏற்கனவே வயிற்றெரிச்சலில் குமுறிய ராதிகாவுக்கு விக்ரமின் பாராட்டு மேலும் கோபத்தை வரவழைத்தது.

"தாங்க்ஸ் விக்கி" என்று செல்லமாக மறுமொழி சொன்னாள் விஷாலி.

அதைத்தொடர்ந்து ராகுலும் அர்ஜுனும் விசாலியைப்பாராட்டிவிட்டு விக்ரமுடன் சேர்ந்து குடிக்க தொடங்கினர். அவ்விடத்தில் விஷாலியை பாராட்டாமல் சென்றால் தமது எரிச்சல் மற்றவர்களுக்கு புரிந்துவிடும் என்று தெரிந்த ராதிகாவும் மனீஷாவும் வேண்டாவெறுப்பாக "நல்லாயிருக்கு, பட் நாங்க இத விட பெட்டரா செய்திருக்கம்" என்று கூறி விட்டு நீச்சல் தடாகத்திற்குள் இறங்க சென்றனர்.

"ராதிகா கேட்டியா? விக்கியாம்...... ஏதோ நிறைய நாள் பழக்கம் போல கதைக்கிறாள். விக்ரமும் இழிச்சிட்டு நிக்கிறான். இந்த பசங்கள நம்பவே ஏலாது. உஷாரா இருந்துக்கோ." என்று மனீஷா பற்ற வைத்தாள்.

"யெஸ், நானும் நோட் பண்ணினன். என்னதான் செய்றாள்னு பார்ப்பமே."

ராதிகாவும் மனீஷாவும் நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்துக்கொண்டிருக்க உள்ளே சென்ற விஷாலி சில நிமிடங்களில் திரும்ப அங்கே வந்தாள். இம்முறை நீச்சலுடையுடன் வெளிவந்தவள் நீச்சல் தடாகமே சூடாகிப்போகும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்தாள். மது போதைக்கு அடிமையாக தொடங்கியவர்கள் விஷாலி எனும் மாதுவிற்கு முழுவதும் அடிமையாகிவிட்டார்கள். விக்ரம் கூட தனது காதலி அருகில் இருக்கிறாள் என்பதை மறந்து விஷாலியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான். ராகுல் ஒருபடி மேலே போய் தானும் நீச்சல் தடாகத்தினுள் இறங்கிவிட்டான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராதிகாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இப்போது தான் கோபப்பட்டால் விக்ரம் ஒரேயடியாக விஷாலியின் வலையில் வீழ்ந்து விடுவான் என்ற பயம் அவளுக்கிருந்தது. அவர்களது கலாச்சாரத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது மலையேறிப்போயிருந்தது. ராகுலும் கூடவே இருந்தபடியால் பொறுத்துக்கொண்டாள் புதுமைப்பெண் ராதிகா.

ஒருவாறாக விஷாலியின் பிடியிலிருந்து விக்ரம்மைக்காப்பாற்றி கரை சேர்த்து தானும் ஒரு பீர் டின்னை காலி செய்துவிட்டு விக்ரமை அழைத்துக்கொண்டு மேலுள்ள அறைக்கு வந்து சேரும்போது மணி பன்னிரெண்டாகியிருந்தது.

‘விஷாலி ஏன் இவ்வாறு செய்கிறாள்? அவள் நோக்கம்தான் என்ன? விக்ரமை வளைத்து போட முயற்சி செய்கிறாளா? யார் அவள்?’ என்று பல கேள்விகள் ராதிகாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்க அப்படியே தூங்கி விட்டாள் ராதிகா.



“விஷாலி, எனக்கு உன்ன பார்த்ததுமே பிடிச்சிடிச்சு. நான் இத்தனை நாள் காத்துக்கிட்டு இருந்தது உனக்காகத்தான். நானும் ராதிகாவும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறம், ராதிகாதான் என்னோட லைஃப்னு தப்பா புரிஞ்சுக்காத. ராதிகா ஜஸ்ட் ஒரு பிரெண்ட்தான். மேபீ அவளுக்கு அப்பிடி ஒரு ஆசை இருக்கலாம். பட் நான் விரும்புறது உன்னைத்தான்........ ஐ லவ் யூ விஷாலி......." என்று விக்ரம் கூற எதிரிலிருந்த விஷாலியும் ஓடி வந்து விக்ரமை கட்டியணைக்க திடுக்கிட்டு கண் விழித்தாள் ராதிகா.

பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தவள் அருகில் விக்ரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்ட பின்பே தான் கண்டது கேட்டது எல்லாம் கனவு என உணர்ந்தாள். இருந்தாலும் அவள் கண்ட கனவு அவளுக்கு பெரும் நெருடலாகவே இருந்தது. விக்ரம் ஒன்றும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் ராமன் கிடையாது என்பது ராதிகாவுக்கு தெரியாமலில்லை, ஆனாலும் விக்ரமின் பார்வை வேறு பெண்கள் மீது விழவிடாமல் பார்த்துக்கொண்டது ராதிகாவின் சாமர்த்தியம்தான். எனவே ராதிகாவிற்கு தற்போது ஏற்பட்ட நெருடலும் நியாயமானதுதான். சிறிது நேரம் ஏதோ யோசித்து கொண்டிருந்தவள் நேரம் என்ன என்று அறிவதற்காக தனது கைபேசியை நோக்கி கையை கொண்டு சென்றாள்.

போனை கையிலெடுத்து நேரத்தை அதிகாலை நாலு மணி என அறிந்தவளுக்கு வெளியே ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது. மெதுவாக எழுந்து சென்று ஜன்னல் திரையை விலக்கி கீழே பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டது.

கீழே ஒரு உருவம் காட்டுப்பகுதியை நோக்கி மெதுவாக சென்று கொண்டிருந்தது. ராதிகாவுக்கோ நெஞ்சம் படபடக்க, உடலும் நடுநடுங்க மூர்ச்சையாகிப்போனாள். சில கணப்பொழுதில் தன்னிலை உணர்ந்தவளாய் கடுகளவு தைரியத்தை கடனாக பெற்றுக்கொண்டு அந்த உருவத்தினை நோட்டமிடத்தொடங்கினாள்.

கருப்பு நிற ஓவர்கோட் போட்டிருந்த அவ்வுருவம் சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. விஷாலி மீது ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்த ராதிகாவுக்கு அவ்வுருவம் நிச்சயமாக விஷாலியாய் இருக்காது என்றே தோன்றியது. அதற்கு காரணமும் இல்லாமலில்லை, ஏனெனில் அவ்வுருவத்தின் உயரமும் நடையும் அது ஒரு ஆண் என்பதை ராதிகாவிற்கு தெளிவுபடுத்தியது. இவ்வாறு அது யாராக இருக்கும் என்று ராதிகா குழம்பிக்கொண்டிருந்த வேளையில் திடீரென அவ்வுருவம் அங்கிருந்த ஒரு பெரிய ஆல மரத்தின் அருகில் நின்றபடி சுற்றி எல்லாத்திசையிலும் மறுபடியும் நோட்டமிட்டது, அதிலும் குறிப்பாக கெஸ்ட் ஹவுஸினை நோக்கி சில நிமிடங்கள் தன் பார்வையை செலுத்தியது. ராதிகா இருந்த மேல் அறையினுள் எவ்வித ஒளியும் இல்லை என்பதால் தன்னை அவன் காண்பதற்கு வாய்ப்பில்லை என அறிந்த ராதிகா தற்காப்பிற்காக சில நிமிடங்கள் ஜன்னல் கட்டிற்கு கீழே ஒளித்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் மெதுவாக தலையை உயர்த்தி வெளியே நோட்டமிட்டவள் அவ்வுருவம் இன்னும் அதே இடத்தில் தான் நிற்கிறது என்பதை தெரிந்து கொண்டாள். நேரமும் ஓடியது, ராதிகாவும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். விக்ரமை எழுப்பலாம் என்றால், கட்டிலிற்கு அருகில் சென்று எழுப்ப வேண்டும், அதற்கிடையில் உருவம் எங்காவது சென்று மறைந்துவிட்டால்?.... என்ன நடந்தாலும் அதை யார் என்று கண்டுபிடித்தே தீர வேண்டும் என உறுதியோடு இருந்தாள் ராதிகா.

யாருக்காகவோ அந்த உருவம் அங்கே காத்து கொண்டிருக்கிறது என்ற ராதிகாவின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல அந்த மரத்திற்கு அந்தப்பக்கம் இன்னொரு உருவமும் வந்து நின்றது. சில நிமிடங்கள் பார்வையை துல்லியமாகியதன் விளைவாக மரத்திற்கு பின்புறம் மறைவாக நின்றிருந்தது ஒரு பெண்தான் என ராதிகா கண்டு பிடித்தாள். அத்துடன் அங்கே இருக்கும் இருவருக்குமிடையில் எதோ வாக்குவாதம் நடைபெறுவது போலவும் அவளுக்கு தெரிந்தது.

'யாராக இருக்கும்? நிச்சயமாக விஷாலியாகத்தான் இருக்கமுடியும். அப்படியானால் மற்றையது யார்? ராகுலா? ராகுல் ஏன் இவளை மறைவாக இந்த வேளை சந்திக்க வேண்டும்? இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறார்கள்? ராகுல் இல்லையென்றால் யார்? அர்ஜுனா?????' இப்படியாக தனது எண்ண அலைகளில் லயித்துப்போன போதுதான் தான் அவர்களை கவனிக்க தவறியதை உணர்ந்தாள் ராதிகா. சட்டென அவர்கள் நின்ற மரத்தை நோக்கி கவனத்தை திருப்பியவளுக்கு வெறும் ஆல மரம் மாத்திரமே கண்ணுக்கு புலப்பட்டது.

‘எங்கே அவர்கள்? ஐயோ என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன்?’ என்று தன்னை கடிந்து கொண்டிருக்கும் போது ராதிகாவுக்கு அந்தக்குளிரிலும் வியர்த்து கொட்டியது.

கணப்பொழுதில் சுதாகரித்துக்கொண்ட ராதிகா வேகமாக சென்று கும்பகர்ணன் போல தூங்கிக்கொண்டிருந்த விக்ரமின் தூக்கத்தை கலைத்தாள்.

"விக்கி விக்கி எந்திரிடா........."

"நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறன்டி......."

இன்னும் கொஞ்சம் வேகமாக விக்ரமை உலுப்பிவிட திடுக்கிட்டபடி எழுந்தான் விக்ரம்.

எழுந்தவனுக்கு ராதிகாவின் பயத்தினால் உறைந்து போன முகம் பதற்றத்தை அவனுக்குள்ளும் கடத்தியது.

"என்ன ராதிகா? என்னாச்சு? ஏன் இப்பிடி பயந்து போயிருக்க?"

"விக்கி யாரோ ரெண்டு பேர் பின்னால இருக்கிற ஆல மரத்துக்கு பக்கத்தில பேசிக்கிட்டிருந்தாங்க!"

"இந்த நேரத்திலயா? வெளியாட்கள் யாருமா?" இப்போது ராதிகாவிற்கு ஏற்பட்ட பயம் விக்ரமுக்கும் முழுமையாக பற்றிக்கொண்டது.

"ஆமா விக்கி, வெளியாட்கள் இங்க எப்பிடி? அங்க நின்னதுல ஒருத்தி பொண்ணு. அது நிச்சயமா விஷாலியாத்தான் இருக்கும்."

"அதானே பார்த்தன், திரும்ப உன்னோட வேலைய தொடங்கிட்டியா?"

"இல்ல விக்கி, நிஜமா நடந்தத தான் சொல்றன். என்ன நம்பு"

விக்ரமின் பார்வை வேறு பெண்கள் மீது விழும் பொது இப்படி அவர்கள் மேல் ஏதாவது பழி போடுவது ராதிகாவிற்கு வாடிக்கை, இது விக்ரமுக்கும் தெரியும். இன்றும் அதே போலதான் விஷாலி மீது வீண் பழி போடுகிறாள் என நினைத்தான் விக்ரம்.

"ராதிகா நான் அப்பிடில்லாம் அவள நினைக்கல, நீ நிம்மதியா தூங்கு"

"ஐயோ விக்கி, நான் சொல்றது உண்மை, நம்பலன்னா அவளோட ரூம்க்கு போய் பார்ப்பம்.அங்க அவள் இருக்கமாட்டாள்."

"சரி இல்லைன்னா........"

"ஆ............................"

தூரத்திலிருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு இருவருக்குமே ஒருகணம் இதயம் நின்றுதான் போனது.



- தொடரும்-​
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4 - யார் கொலையாளி?



வலியால் துடிப்பது போல் கேட்ட அந்தக்குரல் சில வினாடிகள் நீடித்தது.

"விக்கி பயமாயிருக்கு விக்கி" நடுங்கினாள் ராதிகா.

பயத்தை மறைத்துக்கொண்டு விக்ரமும் "அந்தக்குரல்........"

விக்ரம் இவ்வாறு கூறியதும் தான் அந்தக்குரல் அர்ஜுனுடையது என்று ராதிகாவிற்கு புரிந்தது.

"அது அர்ஜுனோடதா?" ராதிகா கேட்டு கொண்டிருக்கும் போதே விக்ரம் ஜன்னலருகே சென்று காட்டு பகுதியை நோட்டமிட்டான்.

"விக்கி வெளிய என்ன தெரியுது?"

"எதுவுமே இல்ல, யாரையும் காணோம். சரி, நீ பார்த்தது அர்ஜூனையா?"

"நிச்சயமா சொல்ல முடியலடா, ஓவர் கோட் போட்டிருந்ததால அடையாளம் தெரியல."

"நீ சொல்றத வச்சு பார்த்தாலும் அர்ஜுன் எதுக்கு விஷாலிய தனியா மீட் பண்ணனும்?"

விக்ரமிற்கு ஏதோ தப்பாக நடக்கிறது என்பது விளங்கினாலும் ஏதோ ஒரு குழப்பமும் மனதில் குடி கொண்டிருந்தது. அர்ஜுனோட கைபேசிக்கு அழைப்பெடுத்த விக்ரமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த காட்டுக்குள் சிக்னல் கிடைப்பதே அரிது. ஆற்றங்கரையில் மாத்திரமே சிறிதளவு சிக்னல் கிடைக்கும். மற்றப்படி மற்றைய இடங்களில் அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்துத்தான்.

"சரி விக்கி, இங்க இருந்து கதைச்சிட்டிருக்கிறது வேஸ்ட். வா போய் அர்ஜுனோட ரூம்ல பார்ப்பம்." ராதிகா சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினாள்.

"ம்.... அதுவும் சரிதான், அப்பிடியே ராகுல்ட ரூமையும் பார்த்திடுவம்."

"எனக்கு அங்க போக பயமாயிருக்கு விக்கி!"

"ஏன் ராகுல் கீழ இல்லையா?" அதிர்ச்சியுடன் கேட்டான் விக்ரம்.

"இல்ல விக்கி, ராகுல் ஓவரா குடிச்சதால அவனும் விஷாலியும் ஸ்விம்மிங் பூலுக்கு பக்கத்தில இருந்த ரூம்லயே இருந்திட்டாங்க. விஷாலிதான் தானும் கூட இருக்கிறதா சொன்னாள்"

ராதிகா சொல்லி முடிக்க மனீஷாவின் குரலும் அவர்களது அறைக்கு வெளியிலிருந்து கேட்டது.

"டக்... டக்..... ராதிகா..... ராதிகா....." மனீஷா மெதுவாக அழைத்தது கூட உள்ளிருந்த இருவருக்கும் பதற்றத்தை உருவாக்கியது.

விக்ரமும் ராதிகாவிற்கு சத்தம் எதுவும் போடா வேண்டாம் என்று சைகையால் காட்டி விட்டு கதவின் இடுக்கின் வழியாக நோட்டமிட்டான். அங்கே பதற்றத்துடன் மனீஷா நிற்பது ஓரளவுக்கு தெரிந்ததுமே கதவைத்திறந்தான்.

உள்ளே வந்த மனீஷா "விக்ரம் அது என்ன சத்தம்? யாரு கத்தினது? உனக்கும் கேட்டுச்சா?" என்று கேள்விகளை அடுக்கினாள்.

"எங்களுக்கும் கேட்டுச்சு, அர்ஜுனோடது போல இருந்துச்சு. அவனோட போனும் சுவிட்ச் ஆஃப்னு வருது. அதான் அவன் ரூம்க்கு போய் பார்க்கலாம்னு கிளம்ப நீயும் வந்துட்ட"

சிறிது அதிர்ச்சியை முகத்தில் காட்டிய மனீஷா தொடர்ந்தாள். "அர்ஜுனா?!.... அவன் ரூம் ஓப்பனா இருக்கு. அவனும் உங்ககிட்டத்தான் வந்திருப்பான்னு யோசிச்சிட்டு வந்தன்"

"என்ன ரூம்ல அவன் இல்லையா?" ராதிகாவிற்கு மேலும் கிலி பிடித்தது.

"நான் உள்ள போய் பார்க்கல்லடி, டோர் ஓப்பின் பண்ணி இருந்துச்சு, அத மட்டும்தான் பார்த்தன்.”

"வேற ஏதாவது பார்த்தியா?

"இப்போ அது மட்டும் தான் பார்த்தன், பட் நைட் கொஞ்ச நேரம் தூக்கம் வரல, ஸோ வெளில கொஞ்ச நேரம் வந்து நின்னன். அந்த டைம் விஷாலியும் வெளிலதான் நின்னுக்கிட்டிருந்தா."

"அப்போ உன்ன அவள் பார்த்தாளா? இது விக்ரமின் கேள்வி.

"பார்த்திருக்க மாட்டான்னு தான் நினைக்கிறன். ஆனா டிஃபரெண்டா ஒரு ஓவர் கோட் ஒண்ணு போட்டிருந்தா"

"பிளாக் கலர் ஓவர் கோட் தானே?" ராதிகா தனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள முயன்றாள்.

"ஆமாடி நீயும் பார்த்தியா?"

"ஹ்ம்ம்...."

"என்னோட ஐபோன் கூட அவகிட்டதான் இருக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கினேன்." என்று புலம்புவதை கேட்ட ராதிகாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"அடியே உயிர் போற நிலமைலயும் உன்னோட ஐபோன் தான் முக்கியமா?"

மனீஷா சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த விக்ரமுக்கு அப்போதுதான் ராதிகா கூறியது போல விஷாலி மீது சந்தேகம் வந்தது. சட்டென பீரோவிலிருந்த அவனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜன்னலருகே ஒளிந்து கொண்டவாறு வெளியே நோட்டமிடத்தொடங்கினான்.

அந்த நேரத்தில் ராதிகாவும் தான் பார்த்தவற்றை மனீஷாவிடம் சொல்லி முடித்தாள்.

"எனக்கு பயமாயிருக்குடி.... இங்க என்ன நடக்குது?" என்று மனீஷாவும் பதற விக்ரம் சைகை மூலம் இருவரையும் அமைதியாகுமாறு கூறி விட்டு தொடர்ந்தான்.

"ராதிகா நான் வெளிய போய் அர்ஜூனுக்கும் ராகுலுக்கும் என்ன ஆச்சுன்னு பார்த்திட்டு வாறன், அதுவரைக்கும் நீங்க ரெண்டு பெரும் சைலண்டா இங்க உள்ளேயே இருங்க. அதான் உங்களுக்கு சேஃப்."

ராதிகா ஏதோ சொல்ல வர முந்திக்கொண்ட மனீஷா "நீயும் எங்ககூடயே இரு விக்கி, எங்கள தனியா இங்க விட்டுட்டு போகாத" என்று பிதற்றினாள்.

விக்ரமும் ராதிகாவின் பதிலை எதிர்பார்க்க, "ஆமா விக்கி, அவ சொல்றதும் கரெக்ட்தான், தனியா போறது உனக்கும் சேஃப் இல்ல, எங்களுக்கும் சேஃப் இல்ல."

"அப்பிடீன்னா வாங்க மூணு பேரும் சத்தம் கேட்ட பக்கம் போய் பார்ப்பம், ராகுலுக்கும் அர்ஜூனுக்கும் என்ன ஆச்சுன்னு தெரியாம இங்க நாம இருக்கிறது தான் நம்ம செய்யக்கூடிய பெரிய முட்டாள்தனம்" என்று ஒரே பிடியாக நின்றான் விக்ரம்.

விக்ரம் தன் நண்பர்களை எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காதவன் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த ராதிகாவிற்கு அவனது பதில் எதிர்பார்த்ததுதான், ஆனால் மனீஷாவிற்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை.

"இல்ல விக்ரம், நான் விடியும்வரைக்கும் இந்த ரூமை விட்டு வெளிய வரப்போறதில்ல. வெளில என்ன ஆபத்து இருக்குனு தெரியாம போறதுதான் முட்டாள்தனம்."

"ஓகே மனீஷா, தட்ஸ் யுவர் விஷ். பட் நான் என்ன நம்பி வந்தவங்கள அப்பிடியே விட்டுற மாட்டன்."

விக்ரமின் பதிலில் உள்ள சுயநலத்தை ராதிகா நன்கு அறிந்திருந்தாள். அத்துடன் அப்போது தான் விக்ரமுடன் இருப்பதே தனக்கு பாதுகாப்பு என கருதியவளாய் தானும் விக்ரமுடன் புறப்பட்டாள் விக்ரமையும் அவனது கைத்துப்பாக்கியையும் நம்பி.

ராதிகா ஜன்னலினூடு பார்த்த ஆல மரமானது கெஸ்ட் ஹவுசிலிருந்து வடக்கு திசையில் கிட்டத்தட்ட இருநூறு மீற்றர் தொலைவிலிருந்தது. ராகுலும் விஷாலியும் தங்கியிருந்த அறையானது கிழக்கு திசையில் ஸ்விம்மிங் பூலினை தாண்டி கிட்டத்தட்ட நூறு மீற்றர் தொலைவிலிருந்தது.

எதற்கும் தயாராக இருக்கும்படி ராதிகாவிடம் கூறிய விக்ரம் கெஸ்ட் ஹவுஸிற்கு மேற்கு திசையில் உள்ள காட்டுப்பாதை வழியே செல்லத்தொடங்கினான். அங்கே அப்படி ஒரு குறுக்குப்பாதை இருப்பது இதுநாள் வரை ராதிகாவிற்கு கூட தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை தாம் சந்தேகப்படுவது போல விஷாலிக்கும் அங்கு நடப்பவைக்கும் ஏதும் சம்பந்தமிருந்தாலும் கூட அவளுக்கு இந்த ரகசியப்பாதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே விக்ரமின் எண்ணம். சிறு சலசலப்புமின்றி அங்குமிங்கும் நோட்டமிட்டவாறு சென்ற இருவரும் சுமார் ஐந்து நிமிடத்தில் அந்தப்பெரிய ஆல மரப்பகுதியை அடைந்திருந்தனர். அங்கு மறைவாக ஒரு புதரில் இருந்துகொண்டு அவ்விடத்தை சல்லடை சல்லடையாக கண்களால் அலசிக்கொண்டிருந்தனர்.

திடீரென மழைத்துளியொன்று தன் கை மீது விழுந்ததைக்கண்டு மேலே அண்ணார்ந்து பார்த்தவளின் உயிர் அவளிடம் இல்லை.

"விக்கி!!!! விக்கி!!!" என்று பதை பதைத்தபடி மூர்ச்சையாகி விழுந்தாள் ராதிகா.

அங்கே விக்ரம் கண்ட காட்சி எப்பேர்ப்பட்ட வீரனையும் குலை நடுங்கச்செய்துவிடும். அந்த மரத்தில் இறுகக்கட்டப்பட்டவாறு அர்ஜுனின் பிணம் தொங்கிக்கொண்டிருந்தது. உடல் முழுவதும் ரத்தக்காயங்கள், ராதிகா மீது விழுந்தது கூட மழைத்துளி அல்ல அர்ஜுனின் குருதிதான். அழுகையையும் பயத்தையும் அடக்கிக்கொண்ட விக்ரம் ராதிகாவை மயக்க நிலையிலிருந்து சுய நினைவிற்கு கொண்டு வந்தான். ராதிகாவினது வாயை பொத்தியபடி சீக்கிரம் அவ்விடம் விட்டகன்று சிறிது தூரம் ஓட்டமாக சென்று ஒரு புதரில் ஒளிந்து கொண்டான் விக்ரம்.

"விக்கி என்ன நடக்குது விக்கி? அர்ஜுன ஏன் இப்பிடி பண்ணினாங்க?" சாவு பயத்தை கண்டிருந்த ராதிகா தழுதழுத்த குரலில் கேட்டாள்.

"எனக்கும் ஒண்ணும் புரியல, நாம விஷாலிய சந்தேகப்படுறம், ஆனா இங்க நடந்தது எல்லாமே மர்மமா இருக்கு."

"என்ன சொல்ல வர விக்கி?"

"அந்த மரத்தோட ஹைட்ட பார்த்தியா? அந்த உயரத்துக்கு ஒரு பொண்ணால ஏற முடியுமா? சும்மாவே ஏற ஏலாது. அதில அர்ஜுனன் தூக்கிகிட்டு....."

"அப்படீன்னா வேற யாரோ கொலை பண்ணியிருப்பான்னு சொல்றியா?"

சிறிது யோசித்த விக்ரம் ஏதோ முடிவெடுத்தவனாய் "நம்ம முதல்ல ராகுல் எங்கன்னு கண்டுபிடிச்சாகணும்" என்று புதிர் போட்டான்.

"ராகுல சந்தேகப்படுறியா விக்கி?"

"நமக்கிருக்கிற ஒரே ஆப்ஷன் அவன்தான். இனி யாரையும் நான் நம்பப்போறதில்ல. அவன் முந்திக்கிறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்."

ராதிகா ஏதோ சொல்ல வர அந்த நேரம் பார்த்து விக்ரமின் செல்போன் சிணுங்கியது. அந்த இடத்தில் சிறிதளவு சிக்னல் கிடைத்ததை அவனுக்கு வந்த குறுஞ்செய்தி உணர்த்தியது. மனீஷாவின் பெயரைக்கண்டதும் மனீஷாவிற்கு என்ன ஆகிற்றோ? என்றபடி குறுஞ்செய்தியை திறந்த விக்ரமிற்கு "ராகுல் கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க விக்கி" என்று இருந்த செய்தி மேலும் குழப்பத்தை உண்டாக்கியது.

"ராதிகா மனீஷா உள்ள பூட்டிட்டு தானே இருந்தாள். எப்பிடி மாட்டிகிட்டாள்னே புரியல?"

"இல்ல விக்கி, ராகுல்தான் உண்மையா இதெல்லாம் பண்றான்னா அதுக்கு சான்ஸ் இருக்கு."

"ம்ம்ம்.... ரூம்ல சிக்னல் இருக்காது. ஸோ அவள் இப்ப சிக்னல் இருக்கிற இடத்துலதான் இருக்கிறாள்னு அர்த்தம்."

"அப்போ நம்ம படகு நிக்கிற இடத்துலதான் இருக்க சான்ஸ் இருக்கு."

"யெஸ், அங்கதான்......."

"ராகுல் எதுக்கு இப்பிடில்லாம் பண்றான்?" ராதிகா தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.

"ஆசை யாரைத்தான் விட்டுச்சு, நாம இதுக்கு ரெடியா இல்லாம இருந்தது நம்ம தப்பு. ஆனா ராகுல் செய்வான்னு எதிர்பார்க்கல." என்று விக்ரம் கூறியபடி மெதுவாக மறைவிலிருந்து வெளிவந்து ஆற்றங்கரை நோக்கி ஊர்ந்து சென்றான். முன்னால் கைத்துப்பாக்கியை நீட்டியபடி சென்ற விக்ரமின் பின்னால் ராதிகாவும் சுற்றும் முற்றும் வேவு பார்த்தபடியே சென்றாள்.

ஆற்றங்கரையை நெருங்கிய விக்ரமின் தோளை பிடித்த ராதிகா "வாட் எ பூல்?......." என்று நெற்றியில் கை வைத்தபடி பதறினாள்.

"என்னாச்சு ராதிகா? சைலன்ட்.... "என ராதிகாவின் குரலை தாழ்த்தினான்.

"விக்கி, மனீஷாவோட செல்போன் விஷாலிகிட்ட தான் இருக்கும். மனீஷா சொன்னத மறந்துட்டியா?"

"அடச்சா..... எப்பிடி இத மறந்தன்."

"இது விஷாலியோட பிளானா கூட இருக்கலாம் விக்கி, நாங்களா அவளோட வலையில மாட்டக்கூடாது. என்ன இருந்தாலும் ராகுல் நம்ம கூட இருக்கிறவன். வீணா அவன சந்தேகப்படுறதுல அர்த்தமில்ல." ராதிகா கூற கூற விக்ரமிற்கு அவள் கூறியதிலும் அர்த்தமுள்ளதென விளங்கியது.

"நீ சொல்றதிலயும் பாயிண்ட் இருக்கு. எனக்கு ஸ்டார்ட்ல இருந்தே புரியாத விஷயம் என்னன்னா நீ சொல்ற போல விஷாலிதான் இதுக்கெல்லாம் காரணம்ன்னா யாரிந்த விஷாலி? அவளுக்கு நம்மகிட்ட இருக்கிறத பற்றி எப்படி தெரிஞ்சிருக்கும்? நிச்சயமா ராகுல் சொல்லியிருக்கமாட்டான். ஏன்னா புதுசா பழகினவகிட்ட அத சொல்லுற அளவுக்கு அவன் முட்டாள் இல்ல."

"மாணிக்கத்துக்கு ஒரு பொண்ணு இருந்தால்ல?"

"ஆமா, ஆனா அவதான் கொஞ்சநாள் முன்னாடி ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டதா சேதி வந்துச்சே?"

"சரி அதெல்லாம் யோசிக்க இப்ப டைம் இல்ல, இப்ப நம்ம தப்பிக்க என்ன வழி?"

"முதல்ல ராகுல் எங்கன்னு கண்டுபிடிப்போம்? அப்புறமா அந்த நாய போட்டுத்தள்ள வேண்டியதுதான்." வெறி கொண்டவனாக வெகுண்டெழுந்த விக்ரம் வேகவேகமாக ஸ்விம்மிங் பூல் அருகே இருந்த அறையினை நோக்கி ஓடினான். பின்னாலேயே ராதிகாவும் உயிர்ப்பயத்தில் ஓடத்தொடங்கினாள்.

ஆதவன் உதயமாகி இருந்தாலும் எங்கோ ஒரு மழை மேகத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் பெரிதாக வந்துவிடவில்லை. போதாக்குறைக்கு மழை வேறு தூறத்தொடங்கியிருந்தது. கையிலிருந்த துப்பாக்கியும் அந்த அடர்ந்த காட்டிற்குள் தன்னை விட வேறு யாருக்கும் இத்தனை குறுக்கு பாதைகள் உள்ளது தெரியாது என்ற தைரியத்திலும் விக்ரம் சில நிமிடங்களில் ராகுலும் விஷாலியும் தங்கியிருந்த இடத்திற்கு பின் புறமாக வந்து சேர்ந்தான்.



- தொடரும்-​
 
Status
Not open for further replies.
Top