பனி விழும் மலர்வனம்!
அத்தியாயம் – 4
காலை வெயிலின் இதத்தில், அருளும், அனிக்காவும் அவர்களது வயலை நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தனர்.
வழியில் தென்படுவோர் சொல்லும் வணக்கத்திற்கு புன்னகையும், தலையசைப்பையும் கொடுத்தவாறே அவன் வண்டியோட்ட, எவ்வித உணர்வுகளும் இல்லாத நிர்மலமான முகத்துடன் அனி அமர்ந்து இருந்தாள்.
நாற்றுக் கட்டுக்களை வைத்து, பூஜையிட்டு முதல் நாற்றுக் கட்டினை எடுத்து அவள் கையில் கொடுத்தான் அருளரசு.
பெயருக்கு புன்னகை சிந்தியவள், மெல்ல அவன் கையில் இருந்து வாங்கிக்கொண்டு வயலின் முன் வந்து நின்றாள். புடைவையைத் தூக்கி சொருகி, வலது காலிட்டு கீழே இறங்கியவள், கிழக்கு புறமாக நின்று நாற்றுக் கட்டுடன் சூரியனை வணங்கி, நாற்று நடத்தயாரானாள்.
நெடுநாள் கைதேர்ந்த ஒரு கிராமத்து பெண்ணாக அவளைப் பார்த்து அதிசயித்து நின்ற அனைவரும் ஆச்சர்யத்தில் வாய் பிளக்க, அருள் ஒற்றைப் புன்னகையுடன் மற்ற பெண்களுக்கு நாற்றுக் கட்டு எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தான்.
அனைவரும் அவரவர் இடத்தில் நிற்க, சிறுசும், பொடிசுமாக இருந்த சில வாண்டுகள், நாற்று வரிசையாக நட தோதாக, இரண்டு பக்கமும் சிறு கயிறு ஒன்றை, மிகக்கச்சிதமாகப் பிடித்தபடி உட்கார்ந்து கொண்டனர்.
அவர்கள் பிடித்து இருந்ததை சரிபார்த்த அனி, மீண்டும் ஒருமுறை இயற்கையை மனதால் வணங்கி நாற்று நட ஆரம்பித்தாள்.
அவள் நட ஆரம்பித்த பின், சில நிமிடங்கள் தாமதித்து மற்ற பெண்களும் நட ஆரம்பித்தனர்.
அமைதியாக அனைவரும் இருப்பதைப் பார்த்த வாண்டுகளில் ஒன்று,
“என்ன அத்த! இன்னிக்கு பாட்டு படிக்கக் காணோம்?”
“மொதலாளியம்மா இருக்காங்களே! என்ன நினைப்பாங்கன்னு தான் படிக்கல”
அதைக் கேட்டு புன்னகைத்த அனி,
“பாட்டு படிங்க. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று பதிலளிக்க,
சந்திரரே சூரியரே
எஞ்சாமி பகவானே!
இந்திரரே!
உன்ன நோக்கி நாங்க எடுத்த
காரியம் சிறக்கோணும்
இந்திரரே வாசுதேவா
இப்பமழை பெய்யவேணும்!
மந்தையிலே மாரியாயி
மலைமேலே மாயவரே!
இந்திரரே சூரியரே
இப்பமழை பெய்யவேணும்!
என்று அந்த பெண்மணி பாடி முடிக்க, அடுத்து ஆரம்பிக்க வேண்டிய பெண்மணி பாடாமல் அமைதியாக நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்.
“என்ன சித்தி! பாடாம வேலையை பார்க்கற?” என்ற அந்த வாண்டு மீண்டும் ஆரம்பித்தது.
“பாட்டு வர மாட்டிங்குது டா” என்று முனங்கிக்கொண்டே அந்த பெண் வேலையைப் பார்க்க,
“பொய் சொல்லாத சித்தி, உன்னைப்பத்தி தெரியாதா?”
“டேய், மொதலாளியம்மா இருக்காங்க. நம்ம பாட்டு அவங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ?”
“இதானா! அண்ணி நீங்களே சொல்லுங்க”
“அதென்னடா அண்ணி முறை?” என்று அனி புன்னகையுடன் கேள்வி கேட்க,
“நாங்க அருளண்ணன ஐயான்னு கூப்பிட்டோம், அவங்க தான் அப்படி கூப்பிடக் கூடாதுன்னு சொல்லி, அண்ணான்னு சொல்ல சொன்னாங்க. அப்ப நீங்க அண்ணி தானே” என்று மற்றொரு வாண்டு பதில் சொன்னது.
மெல்ல சிரித்தவள்,
வாழ்த்துறேன் வாழ்த்துறேன்!
வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன்!
பொண்ண பெத்த தாயாரே
போதரமா கேட்டுறுங்க!
மாப்பிள்ளைய பெத்தவக
மனம் மங்கலமா கேட்டுறுங்க!
சாதிக் கிளி முழுங்கி
சந்திரற்கே வாழ்த்துறேன்!
அன்னக் கிளி முழுங்கி
அர்ஜுனற்கே வாழ்த்துறேன்!
என்று வாய்விட்டு பாட, அதில் அதிசயித்த அனைவரும் ஒரு நிமிடம் வேலையை விட்டுவிட்டு நிமிர்ந்து நின்று அனிக்காவையேப் பார்த்தனர்.
கையில் இருந்த நாற்றுக் கட்டு முடிந்து எழுந்து நின்ற அனி, அனைவரும் அவளையேப் பார்ப்பதைப் பார்த்து,
“என்ன என்னையே பார்த்துக்கிட்டு நிற்கறீங்க? வேலையைப் பாருங்க” என்று சொல்லிக்கொண்டே வயலை விட்டு வரப்பில் கால் வைத்து மேலேறினாள்.
“அங்க பம்பு செட்டு இருக்கு, போயி கை கால் கழுவிக்கிட்டு இரு, வரேன்” என்று சொல்லிவிட்டு அருள் நாற்றுக் கட்டுக்களைப் பிரித்து வரப்பிற்கு, வரப்பு போடுவதில் மீண்டும் கவனமானான்.
மெல்ல நடந்து பம்பு செட்டை நோக்கிப் போக,
மற்ற பெண்கள் பாடிக்கொண்டே வேலையில் கவனமாகினர்.
அவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டே பாத்தி பாத்தியாக இருந்த சில வயல்களைக் கடந்து, நூற்றுக்கணக்கான வயல் பாத்திகளுக்கு நீர் பகிரும் மையமாக இருந்த பம்பு செட்டை வந்து அடைந்தாள்.
சந்திரர் வாழ்த்து சரி பார்த்து வாழ்த்துறேன்!
இந்திரர் வாழ்த்து இள வாங்கு வாழ்த்துறேன்!
காளியாம்மா வாழ்த்து கண வாழ்த்து வாழ்த்துறேன்!
பிள்ளையார் வாழ்த்து பேரு வாழ்த்து வாழ்த்துறேன்!
பந்த பளபளங்க பந்தக்கால் சரி மின்ன!
நவரத்தன பந்தலிலே ராசாக்கள் வந்து நிக்க!
எந்திரடி பொன்னரளி அம்மானே நிக்கிறாக!
கையெடுத்த கைகளுக்கு என்னென்ன சீதனங்க!
கைக்கே கணையாழி! காலுக்கோ வீரமெத்த!
நெத்திக்கோர் சுட்டி! நிழல் பார்க்க கண்ணாடி!
காடு நிறைஞ்சிருக்க கருந்தானி சீதனமா!
வீடு நிறைஞ்சிருக்க வெண்கலங்கள் சீதனமா!
மாடம் நிறைஞ்சிருக்க மணிவிளக்கு சீதனமா!
கூடம் நிறைஞ்சிருக்க குத்து விளக்கு சீதனமா!
இத்தனையும் குடுத்த அம்மான்!
பட்டினியா போறாரு!
மாமரதுச் சோலையிலே உங்கொழுந்தேன்
மயில் மேல்தேன் ஆடயிலே!
மாமரத்து கீழ நின்னு மயங்கினவ நீதான!
இளையாங்குடியினிலே உங்கொழுந்தேன்!
இனிசுபெக்டரு வேலையின்னு!
இளையாங்குடி போய் பார்த்தேன்
ரெண்டேருமை தான் மெய்ச்சாண்டி!
காரைக்குடியிலே உங்கொழுந்தேன்!
கருக்கத்தான் வேலையின்னான்!
அங்கப்போயி பார்த்தாக்கா!
ரெண்டு கழுதையைத்தான் மேய்ச்சாக!
பூமரத்துச் சோலையிலே எங்கொழுந்தேன் புலி வேட்டையாட!
பூமரத்து கீழ நின்னு புலம்புனவ நீதானே!
குன்னக்குடியிலே உங்கொழுந்தேன்
குமாஸ்த்தா வேலையின்னான்!
அங்கப் போயி பார்த்தாக்க
ரெண்டு குதிரையைத்தான் மேய்ச்சாக!
வெத்தலைய போல விரிச்ச மொகறைக்கு!
எங்க வெள்ளாள வம்சம்தேன் எங்கெங்கே வாச்சுச்சோ!
பாக்குவெட்டி போல பரந்த மொகறைக்கு
எங்க பாப்பாறை வம்சம்தேன் எங்கெங்கே வாச்சுச்சோ!
சுண்ணாம்பு போல சிரிச்ச மொகறைக்கு
எங்க சூரியனார் வம்சம் எங்கெங்கே வாச்சுச்சோ!
கறண்டகம் போல உருண்ட மொகறைக்கு
எங்க கள்ளாளர் வம்சம்தேன் எங்கெங்கே வாச்சுச்சோ!
ஆன திருடிப் பயல் ஆனை மேல் வாரதென்ன!
அர்ச்சுனரைப் பெத்தவக கால் நடையா வாரதென்ன!
கோழி திருடிப் பயல் குதிரை மேல் வாரதென்ன!
கோகுலரைப் பெத்தவக கால் நடையா வாரதென்ன!
மூணாம் வருசத்திலே மொத்தெருமை மேய்ச்சவனே!
எங்களோட பாஷை எதமான பாஷை!
சுண்ணாம்பு இல்லையடா சிரிச்சானே உங்கையிலே!
புகையில இல்லையடா பூசனத்தான் உங்கையிலே!
பாக்குத்தான் இல்லையடா பதங்கெட்ட உங்கையிலே!
வெத்தலை இல்லையடா வீதியத்தான் உங்கையிலே!
ஒன்னாம் பயிர் பிடுங்கி ஒரு லட்சம் கூட பின்னி!
கூட வித்த காச வாங்கும் குறவர்தான் பசங்க நீதானோ!
ரெண்டாம் பயிர் பிடுங்கி ரெண்டு லட்சம் கூட பின்னி!
கூட வித்த காச வாங்கும் குறவர்தான் நீதானோ!
மூணாம் பயிர் பிடுங்கி மூணு லட்சம் கூட பின்னி!
கூட வித்த காச வாங்கும் குறவர் பசங்க நீதானோ!
மாமரதுச் சோலையிலே உங்கொழுந்தேன்
மயில் மேல்தேன் ஆடயிலே!
மாமரத்து கீழ நின்னு மயங்கினவ நீதான!
பூமரத்துச் சோலையிலே எங்கொழுந்தேன் புலி வேட்டையாட!
பூமரத்து கீழ நின்னு புலம்புனவ நீதானே!
என்று ஆளாளுக்கு ஓரிரு வரி பாடிக்கொண்டே அவள் பக்கம் இருந்த பெண்கள் பாடி முடிக்கவும், அவள் கை கால் கழுவி முடிக்கவும் சரியாக இருந்தது.
அதே நேரம் அங்கு வந்த அருளும், கை கால் கழுவிக்கொண்டு முன்னே நடக்க, அனிக்கா அவனைப் பின் தொடர்ந்தாள்.
இருவரும் கிளம்பி நேராக சென்றது, தோப்பிற்கு. அங்கு அவன் வேலையைப் பார்க்க, அனிக்காவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கால் போன போக்கில் அவள் நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் தோப்பின் கடைசியில், ஒரு சிறு மர வீடு அமைத்து, அதில் சில முயல்களை வளர்த்து வந்தனர்.
அந்த முயல்களை ரசித்துக்கொண்டு நேரம் போவது தெரியாமல் நின்றவளை திடுமென பின்னிருந்து இரு கைகள் அணைக்க, திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“ஏய், நம்ம தோப்புல, என்ன மீறி உன்கிட்ட இப்படி யார் நடந்துப்பாங்க” என்ற அருளரசைப் பார்த்தவள்,
மெல்ல அவன் கைகளை விலக்கி, “நான் வீட்டுக்கு போறேன்” என்று அவனை விட்டு விலக, அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தது.
அவள் கரம் பற்றித் தடுத்தவன், “போலாம். இப்ப இல்ல. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு” என்று சொல்லிக்கொண்டே அவளை அந்த மர வீட்டினுள் இழுத்துச் சென்றான்.
“புதுசா பிறந்த ரெண்டு முயல் குட்டி” என்று அவன் காட்டிய திசையில், கருப்பும் வெள்ளையும் கலந்த, பிறந்து சில தினங்களே ஆன இரண்டு முயல் குட்டிகள் பஞ்சு பொதிகளாய் உறங்கிக்கொண்டு இருந்தன.
அதனைத் தொட வேண்டும் என்ற ஆசையில் மெல்ல அதன் பக்கம் கை கொண்டு போனவள், அங்கிருந்த தாய் முயலைப் பார்த்து பயந்து பின்னிளுத்தாள்.
பயந்து பின் வாங்கிய அவள் கைகளை சுவாதினமாகப் பற்றிய அவன், மெல்ல அந்த குட்டிகளிடம் கொண்டு சென்று, வருடிக் கொடுத்தான்.
“ரெண்டு குட்டி தானா?” என்று கேட்டவளிடம்,
“5 குட்டி போட்டு இருந்துச்சு, பசங்க மூனு குட்டிய தூக்கி கொஞ்சி விளையாடி இருந்து இருக்காங்க. அதுல இந்த அம்மா முயல் பீட் பண்ண மறுத்துடுச்சு போல. ரொம்ப வீக்கா இருந்த மாறி இருந்துச்சு, அதான் அதை தனியா நம்ம வீட்ல கொண்டு போயி வைச்சு இருக்கேன். கொஞ்சம் வளர்ந்ததும் கொண்டு வந்து இங்க விடனும்”
“ம்ம். ஸ்மெல் மாறினா முயல் தன்னோட குட்டிக்கு பீட் பண்ணாதுன்னு நானும் கேள்விப்பட்டு இருக்கேன்”
“சரி வா போலாம்” என்று எழுந்தவன், அவளைத் தன்னுடன் அணைத்தவாறு வெளியே கூட்டி வந்தான்.
அவனிடம் இருந்து விலக முற்பட்டவளை பிடித்து நிறுத்தியவன், சுற்றிலும் பார்வை பார்த்து, யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு,
“என்னாச்சு?” என்றான், கடினக் குரலில்,
“என்ன என்னாச்சு?”
“ஏன் விலகி போற?”
“பிடிக்கல”
“என்ன பிடிக்கல?” என்ற குரலில், கடினத்தன்மையுடன் கோபமும் கலந்து வந்தது.
அவன் கோபத்தில் மனதில் குளிர் பிறந்தாலும், தைரியம் வரப்பெற்றவளாக,“இது எதுவுமே பிடிக்கல” என்று அவள் கையைப் பிடித்து இருந்த அவன் கையைப் பார்த்துச் சொன்னாள்.
“இங்க பாரு அனி, மனசும் மனசும் சேரனும், ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கனும், அதுக்கப்புறம் வாழனும். இதெல்லாம் கதைக்கும், படத்துக்கும் தான் ஒத்து வரும். நிஜத்துக்கு இல்ல”
“-------------------------------------------“
“காதல் கல்யாணத்துல முடிஞ்சா அது படம், கல்யாணம் ஆகி பிரிஞ்சு இருந்து கடைசில புருஷன் பொண்டாட்டி தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிச்சா அது கதை. இதுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் ஒத்து வராது. நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும், நம் விருப்பு வெறுப்புகள் பகிரப்படனும். ஒருத்தர் கஷ்டத்துல ஒருத்தர் பங்கெடுத்துக்கனும்.”
“----------------------------------------------“
“கல்யாணம் முடிஞ்சா பின்னாடி தான், வாழ்க்கையே தொடங்குது, அதுவரைக்கும் கால் பாகம் தான் வாழ்ந்து இருப்போம். மீதி நாள்ல தான் நமக்குன்னு ஒரு குடும்பம், அதை அழகா கொண்டு வர யோசிக்கணும். நீ என்னை புரிஞ்சி, நான் உன்னை புரிஞ்சி வாழ்கையை ஆரம்பிக்கனும்னா நாம நேரா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணிக்கனும்”
“---------------------------------------------------------------“
“உலகத்துல, எந்த ஒரு தம்பதியுமே, நான் உன்னை நூறு சதம் புரிஞ்சு வைச்சு இருக்கேன், நீ என்னை நூறு சதம் புரிஞ்சு வைச்சு இருக்கன்னு சொல்ல முடியாது”
“---------------------------------------------------------“
“அவசரம், பொறுமை இல்லாத குணம், ஈகோ, கர்வம், தலைக்கணம் இப்படி எல்லா வார்த்தைகளும் பொருந்தாம இருக்கற ஒருத்தனோ, அல்லது ஒருத்தியோ அவங்களால மட்டும் தான் சில விதி விலக்கு இருக்கு”
“--------------------------------------------------“
“நம்ம விசயத்துல, எனக்கும் பொறுமை அதிகம், உனக்கும் அதிகம். ரெண்டு பேருமே ஆரம்பத்துல இருந்து விட்டுக் கொடுக்கறோம். நீ இங்க வந்து இன்னும் முழுசா 3 நாள் கூட ஆகல, அதுக்குள்ள நீயும் குழம்பி, நமக்குள்ள குழப்பத்தை கொண்டு வரப் பார்க்காத”
“------------------------------------------------------“
“நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். நான் இப்படித்தான் இருப்பேன். என்னால உன் கூட இயல்பா இருக்க முடியுது. அதுவும் உன் கழுத்துல தாலி கட்டினதுல இருந்து. நீ அப்படி இருக்க முடிலைன்னா குழப்பம் உன் கிட்ட. அதை தூக்கி போடு. இந்த நிமிஷம், என்ன நிஜமோ அதை ஏத்துகிட்டு வாழு. கஷ்டமான சூழல் வரும் போது, நீயே புரிஞ்சுப்ப”
“அப்படின்னா”
“கவனி, நெருக்கம் உண்மையிலேயே விலகலா இருக்கற ரெண்டு உள்ளத்தை நெருங்க வைக்கும். நீ நமக்குள்ள இடைவெளி இருக்குன்னு நினைக்கிற, ஆனா இந்த மூனு நாளா நீ என்கிட்டே எல்லா விதத்திலேயும் உரிமை எடுத்துக்கற! எப்படி?”
“-----------------------------------------“
“உன்னை நான் என் மனைவியா முழுசா அங்கீகரிச்சு, உனக்கான உரிமையை முழுசா குடுத்து இருக்கேன். நீயும் மனசுல தெளிஞ்சுட்ட, அதாவது, நான் உன் கணவன், இது உன் குடும்பம், உன் வீடுன்னு”
“-----------------------------------------“
“உன்னை நான் தொடும் போது, உங்கிட்ட விலகல் இருந்துச்சு, ஆனா வெறுப்போ, அருவெறுப்போ இல்ல. ஒரு வேலை அப்படி இருந்து இருந்தா, அதை உங்கிட்ட சுட்டிக்காட்டி அதை சரி செஞ்சும் இருப்பேன், அதுக்காக உன் மனசு மாற வெயிட் பண்ணவும் மாட்டேன்.”
“------------------------------------------“
“நீ விலகினாலும், என் உரிமையை நான் எடுத்துக்க ஆரம்பிச்சதும், முழு மனசா தானே எனக்கு உன்னை கொடுத்த. அந்த நிமிஷம் உன் மனசுல எந்த சஞ்சலமும் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்”
“----------------------------------------“
“ஏய் அணில்குட்டி! இன்னும் உன் குழப்பம் போகலியா?”
குழப்பம் மேலிட நின்று கொண்டு இருந்தவளைச் சட்டென்று இடையில் கைகொடுத்து இழுத்து தன்னோடு அணைத்தவன், அவள் சுதாகரிக்கும் முன்பே, அவள் இதழ்களைத் தன்னிதழ்களால் சிறை செய்ய ஆரம்பித்தான்.
நொடிகள் நிமிடங்களாக, மூச்சுக் காற்றுக்காய் அவளை விடுவித்தவன், மெல்ல அவள் முகம் நோக்கினான்.
சட்டென்று ஒரு இதழ் யுத்தத்தில் பங்கேற்றவளின் முகம் செம்மையுற்றுக் கிடக்க, அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்.
புன்னகையுடன் அவளை இன்னும் இறுக்கி அணைத்தவன், “இப்ப உன் குழப்பம் போயிடுச்சா?” என்று கேட்க, வழக்கம் போல அவள் மவுனம் சாதித்தாள்.
“என்னை நீ உன் புருஷனா ஏத்துக்கிட்டதாலதான், இப்ப நீ என் நெஞ்சுல முகத்தை மறைச்சு வைச்சு இருக்க. ஒரு பெண்ணுக்கு வெட்கம் அவள் மனம் கவர்ந்த ஆண்கிட்ட தான் வரும். பிடிக்காதவன்கிட்ட இல்ல. இன்னொன்னு நீ இப்ப என்னை விலக்கவே இல்லை. என் கூட ஒன்றிதான் நின்ன”
அவளோ அமைதியாக இருந்தாள். சில நிமிடங்கள் கடக்க, இருவரும் அவரவர் நிலையிலேயே அப்படியே நின்றிருந்தனர்.
இருவரின் அருகாமையில் பேச்சுக்குரல் கேட்க, சட்டென்று அவன் பிடியில் இருந்து விலகியவள், அவனுக்கு பின்னால் நின்று கொண்டாள்.
மெல்ல அவன் எட்டு வைக்க, அவன் பின்னால் அவன் கரம் பற்றியவாறே அவளும் நடக்க, பண்ணையாட்கள் எதிரில் வந்தனர்.
“தம்பி மன்னிச்சுக்கோங்க. நீங்க இந்த பக்கம் வந்ததை பார்க்கலைங்க”
“பரவால்ல... நாங்க கிளம்பறோம். நீங்க வேலையைப் பாருங்க” என்றவன் நடக்க அவளும் பின் தொடர்ந்தாள்.
மலர் வனம் பூக்கும்.....