Shrijo
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!
அத்தியாயம் – 8
பிறந்தகம் விட்டுப் பிரிந்து போகும் வருத்தம் கொள்ளக்கூட மலருக்கு அன்று வாய்ப்புக் கிடைக்கவில்லை. சேலத்தை நோக்கி கார் வேகமாகப் பயணிக்க பயணிக்க மலரின் முகத்தில் அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது. அதிவேகம் உண்மையில் நல்லதன்றே!
துப்பாக்கியில் இருந்து சீறி வரும் தோட்டாவாய் கார் பறந்து கொண்டு இருந்தது. எதிரில் வந்த வண்டிகளில் மோதாமல் வீடு போய் சேர வேண்டிய கட்டாயம் மலருக்கு உறைத்தது.
வயிற்றில் இருக்கும் சிசுவின் நினைவு வந்த நொடி, அவர் வாய் தானாகத் திறந்து கொண்டது.
“என்னங்க... கொஞ்சம் மெதுவா போங்க...”
“------------------------------------“
“இப்பத்தான் மூனு மாசம் முடிஞ்சு இருக்கு”
“-----------------------------------“
“எனக்காக வேண்டாம்... உங்க பிள்ளைக்காகவாது கொஞ்சம் மெதுவா போங்களேன்”
“-----------------------------------“
மலரின் கெஞ்சல் குரல் அனைத்தும் வீணாகப் போனது தான் மிச்சம்! கொஞ்சம் கூட மேகநாதன் இளகவில்லை.
அதே வேகத்தில் தொடர்ந்த அவர் சேலம் வந்து தான் காரை நிறுத்தினார்.
அப்பொழுதுதான் மலருக்கு மூச்சே வந்தது. இருந்தும் பொள்ளாச்சியில் அடி வயிற்றில் வைத்த கரத்தினை கார் நின்றும் எடுக்க மனம் வரவில்லை.
கார் வந்த வேகத்தைக் கண்டே வீட்டுப் பணியாட்கள் காரின் அருகில் ஓடி வந்து நின்றனர்.
“இறங்கு” என்று மலரிடம் சொன்னவர் வேலையாட்களிடம் திரும்பி, காரின் டிக்கி சாவியைத் தூக்கி எறிந்தார்.
அடுத்த நிமிடம், மலரின் பொருட்கள் இறக்கப்பட்டு இருக்க, மலரும் இறங்கி இருக்க, கார் புறப்பட்டுச் சென்றது.
புயல் வேகத்தில் வந்த காரில் இருந்து இறங்கி திகிலுடன் நின்று கொண்டு இருந்த மலரைக் கண்ட மேகநாதனின் தாய் சிவகாமி, வேகமாக அவளிடம் விரைந்தார்.
மலருக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. கணவனின் செயலில் மனமும் கண்களும் கலங்கி நிற்க, சிவகாமி அவளைத் தேற்ற ஆரம்பித்தார்.
“ஒன்னும் இல்ல மலரு, அவன் அக்கா சுலோச்சனா புருஷன் கடனைப் பண்ணி வைச்சிட்டு எங்கேயோ ஓடிப்போயிட்டான். அதான் அவ ஆளு அனுப்பி தம்பிய வரச் சொல்லி இருக்கா. எனக்கே இப்பத்தான் தெரியும்”
“பரவால்ல அத்தை” என்று நிலைமையின் தீவிரம் உணர்ந்த மலர் புன்னகைத்தாள்.
“அட நீ வேற... வயத்துப் பிள்ளைய பார்க்காம அங்கிருந்து அவன் ஒன்னும் பறந்து வர வேண்டாமேன்னு தான் நான் சொல்லாம விட்டேன். அவ அவசரப்பட்டு ஆள அனுப்பி வைச்சு இருக்கா”
“இருக்கட்டும் அத்தை... ஆத்திர அவசரத்திற்கு உதவாட்டி என்ன தம்பி?”
“சரி சரி... நீ வா” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றவர், மலர் கொண்டுவந்த பொருட்களைப் பார்க்கவும் தவறவில்லை.
அன்று சென்ற மேகநாதன், முழுதாகப் பத்து நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார். வந்தவர் கூடவே சுலோச்சனாவையும் அவள் மகன் ராஜாவையும் அழைத்துவந்தார்.
அதுவரை மகள் பற்றிய கவலையற்றுத் திரிந்த சிவகாமி கூட,
“சுலோ.... என்னடி இப்படி ஆகிடுச்சு...” என்று அழுது, புலம்பித் தள்ளினார். மகளைக் கட்டிக்கொண்டு அவர் அழ ஆரம்பித்ததும், சுலோவும் அழ ஆரம்பித்தாள்.
சற்று நேரம் இருவரும் அழுது ஓய்ந்ததும்,
“வாங்கண்ணி” என்று மலர் சென்று அழைத்தார்.
“என்னடி என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?” என்று சுலோ கத்திய கத்தில் ஒரு நொடி மலர் திகைத்து நின்றுவிட்டார்.
“அண்ணி” என்று அதிர்ந்து நின்ற மலரைக் காணாது, மேகநாதன் அக்காவிடம் ஓடினார்.
“என்ன அக்கா? என்னாச்சு?”
“உன் பொண்டாட்டிக்கு திமிர் அதிகம்டா... நான் இந்த நிலைமைக்கு வந்தத எண்ணி அவளுக்கு உள்ளுக்குள்ள சந்தோசம்டா...”
“என்னக்கா சொன்னா?”
“என்னத்தை சொல்லல? என் நிலைமை இப்படி ஆகிடுச்சே....” என்று அவர் அழ, மலருகுத்தான் ஒன்றும் புரியவில்லை.
“அக்கா... நீ முதல்ல அழறத நிறுத்து”
“என்னன்னு சொல்லுவேன்... ஏதுன்னு சொல்லுவேன்....என்னதான் பிறந்த வீடா இருந்தாலும், இப்ப என் வீடு இல்லையே”
“அக்கா... இப்ப எதுக்கு அழற? இது உன் வீடு தான். என்னிக்குமே”
“இல்லடா... என் வீடு இல்ல... சாவிக்கொத்து தொங்க தொங்க வீட்டைக் கட்டி ஆண்டனே! இங்க ஒத்த ரூவா காசுக்கு கூட கையேந்தி நிற்கணுமே” என்று ஒப்பாரி ராகம் வைத்து பாடப் பாட,
சிவகாமிக்கு நெஞ்சில் பயம் உருவானது.
சுலோ அழுது பாடப் பாட, அவர் பயத்தை மெய்ப்பிப்பது போலவே அக்காவிடம் இருந்து எழுந்த மேகநாதன், அன்னையின் இடுப்பில் தொங்கிய சாவிக்கொத்தைப் பிடுங்கி வந்து அக்காவின் கைகளில் வைத்தார்,
“அக்கா... இங்க பாரு... இது உன் வீடு... நீ தான் இங்க அதிகாரம் பண்ற... உனக்குத்தான் இங்க உரிமை இருக்கு... புரியுதா... நான் உட்பட யாரா இருந்தாலும் உன்கிட்ட தான் காசு கேட்போம். சரியா... அழாத... வா” என்று அவரை அவரது அறையில் விட்டு வந்தார்.
எண்ணிய காரியம் ஈடேற, சாவிக்கொத்தை இடுப்பில் சொருகியபடி அறைக்குச் சென்றார் சுலோ.
மனதளவில் நொந்து போன மலரிடம் வந்த சிவகாமி, “அவ அப்படித்தான் மலரு. என் மாமியார்க்கு அப்புறம் அவ தான் வீட்டு நிர்வாகம் பண்ணா. அதுவும் என் மாமியார் பார்த்த வேலை. கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல, இந்த ஐஞ்சு வருசமாத் தான் இந்த சாவி என் இடுப்புல தொங்குச்சு.. இப்ப அதுவும் போச்சு... உனக்கு அந்த கனவே வைச்சுக்காத... முடிஞ்சா உன் புருஷன் கூடப் போயி உன் அப்பாரு கூட இருந்துக்கோ” என்று மேலும் நோகடித்துவிட்டு அவர் அறைக்குச் சென்றார்.
மேகநாதனின் தந்தை கணேசனின் முதல் மனைவி அவரது தாயின் அண்ணன் மகள். அவர் தூக்கி வளர்த்த, மருமகள் மாதுரியையே மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இரண்டாவது முறை கருத்தரித்ததில் சிக்கல் ஏற்பட்டு ஐந்தாம் மாதத்தில் கருக்கலைப்பின் போது மாதுரி இறந்துவிட்டார்.
பிறந்தகம், புகுந்தகம் இரண்டிலும் செல்லமாக கோலோச்சிய மாதுரியின் குணங்களும், பாட்டியின் குணங்களும் சேரப் பிறந்த சுலோவைப் பார்த்துக்கொள்ள, மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்தனர்.
மேகநாதனின் தந்தை, அவருடைய தங்கை மகளைத் தான் மணமுடிப்பேன் என்று கூறி அதை செய்தும் காட்டினார். முதல் முறை அந்த பேச்சை தடுத்து மாதுரியை மணமுடித்து வைத்த சிவகாமியால், இரண்டாம் முறை வெற்றி பெற முடியவில்லை.
வழக்கம் போல, மருமகளை அடிமையாக்கி, பேத்தியை எஜமானியாக்கினார். ஆயிரம் இருந்தாலும் பேரன் என்ற வாரிசு சிவகாமியின் மூலம் வர பேரனை அக்கா பாசத்தில் மூழ்கடித்து, அன்னையைப் பின்னுக்கு நிறுத்தினார்.
மேகநாதன் உண்மையான பாசம் காட்டக் காட்ட சுலோவும் உண்மையான பாசத்தைக் கொட்டி தம்பியை வளர்த்தாள்.
வசதி குறைந்த வீட்டில் இருந்து வந்த சிவகாமிக்குப் பணம் பெரிசாகப் போக, அதற்கு மயங்கி, சுயமரியாதை இழந்து வாழத்தொடங்கிவிட்டார்.
அம்மா பிள்ளையான கணேசனும் எவற்றையும் கண்டுகொள்ளாது இருந்து கொண்டார். அதே போல மேகநாதனின் தாய், தன் மறைவின் போது, வீட்டின் கொத்து சாவியை பேத்தியிடம் தந்து, பொறுப்பை அளித்துவிட்டு இறந்தார், மறக்காமல் போதித்தும் விட்டிருந்தார்.
திருமணம் ஆகிச் சென்ற போது வேண்டா வெறுப்போடு தான் சுலோ அதைத் தியாகம் செய்தாள். ஆனாலும் வீட்டிற்கு வந்தால், அவள் அதிகாரம் தான் பெரிதாக இருக்கும்.
நிரந்தரமாகத் தங்க வந்த அன்றே செயலில் இறங்கி, காரியம் சாதித்துக் கொண்டாள் சுலோச்சனா. நடந்த அதிரடி நிகழ்வுகளில் மனம் குழம்பி, கலங்கித் தவிக்க ஆரம்பித்தாள் மலர்.
மேகநாதனோ அவள் கலக்கத்தைச் சற்றும் உணராமல், மலரின் கரம் பற்றி அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றார்.
மலர் வனம் பூக்கும்....