ஆன்லைனில் வராத நேரடி புத்தகம் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ இப்போது அமேசானில்… படிக்க விரும்புகிறவங்க படிங்க… படிச்சிட்டு அப்படியே கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
India :
ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!: AALI AALINGANAMAI AARATHI AARUYIRE (Tamil Edition) eBook : SRIKALA, ஶ்ரீகலா: Amazon.in: Kindle Store
www.amazon.in
US :
Amazon.com: ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!: AALI AALINGANAMAI AARATHI AARUYIRE (Tamil Edition) eBook : SRIKALA, ஶ்ரீகலா: Kindle Store
www.amazon.com
சிறு முன்னோட்டம் :
ஸ்கந்தபிரசாத் மனைவி உள்ளே வந்ததைக் கண்டு அவளை உறுத்து விழித்தவனின் பார்வை பின்பு அவளது இரு கரங்களிலும் அடுக்கப்பட்டு இருந்த கண்ணாடி வளையல்கள் மீது அழுத்தமாய்ப் பதிந்தது. அவள் தனது வளைகரங்களைப் பின்னே மறைத்து கொண்டாள். போகும் போது இருந்த தைரியம் இப்போது சுத்தமாய் அவளை விட்டு சென்று இருந்தது.
"எங்கே போயிட்டு வர்ற?" வெகுநாட்களுக்குப் பிறகு தன்னுடன் பேசிய கணவனைக் கண்டு சந்தோசப்படுவதா? இல்லை அவன் கேள்வி கேட்ட தொனியை கண்டு அச்சம் கொள்வதா? என்று தெரியாது அவள் விழித்திருந்தாள்.
"சொல்லுடி, எங்கே போயிட்டு வர்ற?"
"அது வந்து..."
"அதான் போயிட்டு வந்துட்டியே... பொறவு என்ன? சொல்லு..."
அவள் அச்சத்தில் மென்று விழுங்கியபடி நின்றிருந்தாள்.
"அக்காக்காரி வளைகாப்புக்குத் தங்கச்சி போய்ச் சீர் செஞ்சிட்டு வாரியளோ?"
"உங்களுக்கு எப்படித் தெரியும்?" அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.
"நீ என்ன பண்ணினாலும் எனக்குத் தெரிய வரும்."
"என்னை வேவு பார்க்க ஆளு வச்சிருக்கீங்களா?"
"அடச்சீ, நிறுத்துடி... வேவு பார்க்கிறாங்களாம் வேவு... நீ என்னோட பொஞ்சாதி. நீ என்ன பண்ணினாலும் எனக்குத் தெரிய வரும். நம்ம சொந்தக்காரங்க வளைகாப்பு வீட்டுல உன்னைய பார்த்ததை எங்கிட்ட ஃபோன் போட்டு சொல்லிப்புட்டாங்க."
'அடப்பாவிங்களா... விசேசத்துக்கு வந்தோமா? விருந்தை சாப்பிட்டோமான்னு இருக்காம... என்னங்கடா பண்ணுறீங்க? நல்லா வருவீங்கடா...' அவள் மனதிற்குள் சொந்தக்காரங்களைத் தாளித்துக் கொண்டு இருந்தாள்.
"ஆக, என் சொல் பேச்சு கேட்க கூடாதுன்னு நீ முடிவு பண்ணிட்ட... அப்படித்தானே?"
"நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்கணும்ன்னு கிடையாது. எனக்குன்னு சில விருப்பங்கள் இருக்கும்."
"ஓஹோ... அந்தளவுக்கு ஆகி போச்சா... அடிமைக்கு வாயே இருக்கக் கூடாது. அதுல எதிர்த்து வேற பேசுறியா?" அவன் ஆத்திரத்துடன் அவளை நெருங்கி வந்தான்.
அமிர்தவர்ஷினி திகைத்தபடி பின்னால் நகர்ந்தாள். ஸ்கந்தபிரசாத்தோ விரைந்து அவளருகில் வந்து அவளது இரு கரங்களையும் இறுக பிடித்துக் கொண்டான். அவள் தனது கரத்தினை அவனது பிடியில் இருந்து விடுவிக்க வேண்டி அவனிடம் போராடினாள். அவனோ அசையாது அவளது கரத்தினை இரும்பாய் இறுக பற்றியிருந்தான்.
"விடுங்க..." அவள் அவனது பிடியில் இருந்து கைகளை விடுவித்துக் கொள்ளப் போராடினாள்.
அப்போது தான் ஸ்கந்தபிரசாத் அந்தக் காரியத்தைச் செய்தான். அவளது இரு கரங்களையும் ஒன்றோடு ஒன்று மோதி கண்ணாடி வளையல்களை உடைக்க ஆரம்பித்தான். அவளது கரங்களைக் கொண்டே அவளது கரத்தில் இருந்த கண்ணாடி வளையல்களை உடைத்தான்.
கணவனது செயலில் அமிர்தவர்ஷினி அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
***********************
அமிர்தவர்ஷினி திக்பிரம்மை பிடித்தார் போன்று நின்றிருந்தாள். அப்போது கணவன் வெளியில் செல்வதைக் கண்டு என்ன நினைத்தாளோ! சாமி மாடம் நோக்கி விரைந்து சென்றவள் அங்கிருந்த விபூதியை தனது வலக்கை நிறைய அள்ளி எடுத்து கொண்டவள் அவனை நோக்கி ஓடினாள்.
"நில்லுங்க..." என்று அவள் குரல் கொடுக்க...
வாசல்படியை தாண்ட போனவன் நின்றான்... ஆனால் அவளைத் திரும்பி பார்க்கவில்லை. அவள் அதைக் கண்டு கொள்ளாது உரிமையோடு அவளது தோள் தொட்டு தன் பக்கம் திருப்பியவள்,
"வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி அபசகுனமா பண்ணி வச்சிருக்கீங்க... எனக்கு மனசு பதைபதைக்குது. உங்களுக்கு ஒண்ணுமாகக் கூடாது. நீங்க நூறு ஆயுசு நல்லாயிருக்கணும்." என்று கூறியபடி தனது இடது கையால் அவனது முன்னுச்சி முடியை விலக்கி பிடித்துக் கொண்டு தனது வலக்கையால் அவனது நெற்றியில் விபூதியை பட்டை போல் பூசி விட்டாள்.
தாயும், தாரமும் தன்னலமற்ற அன்பு காட்டுவதில் ஒன்று தான் போலும்! அதற்குத் தான் தாய்க்குப் பின் தாரம் என்று சொன்னார்களோ!!! அவனது அத்தனை புறக்கணிப்பையும், உதாசீனத்தையும் கண்டு கொள்ளாது அவள் அவனது நலனை மட்டுமே நாடினாள்.
ஸ்கந்தபிரசாத் ஒன்றும் பேசாது அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
"என்ன?" அவள் அவனைக் கேள்வி கேட்க... அதில் தனது தலையை உலுக்கி கொண்டவன்,
"எனக்கு ஏதாவது ஒண்ணு ஆனா நீ சந்தோசம் தானே படணும். எதுக்குப் பதட்டப்ப்படுற?" என்று நக்கலாய் கேட்க...
"ஏன் இப்படிப் பேசுறீங்க?" அவளது விழிகளில் கண்ணீர் கோர்த்தது.
"அப்படியாவது விடுதலை கிடைச்சா உனக்குச் சந்தோசம் தானே... எதுக்கு இப்படி நடிக்கிற?" என்று அவன் அவளை உயிரோடு குத்தி கிழிக்க... அவளோ செய்வதறியாது திகைத்தாள். அவன் அவளது திகைப்பினை கண்டு கொள்ளாது செல்ல...
"என்னங்க?" அவள் மீண்டும் அவனை அழைக்க...
"ப்ச்..." என்று சலித்தபடி அவன் திரும்பி பார்த்தான்.
"ரத்தம்..." அவள் அவனது நெற்றியை சுட்டுக்காட்டி சொன்னாள். அவளது இடக்கையில் இருந்து வழிந்த இரத்தம் அவனது நெற்றியில் திலகம் போல் விழுந்திருந்தது.
"இருக்கட்டும்..." என்றவன் அவளது கையைத் தட்டிவிட்டு விட்டு சென்று விட்டான். அவள் ஓய்ந்து போய் நின்று இருந்தாள்.
கணவன் சென்ற சிறிது நேரத்தில் வடிவேலுவும், ராசாத்தியும் தங்களது மகனுடன் அங்கு வந்தனர். அமிர்தவர்ஷினி கையில் போட்டு இருந்த கட்டினை மறைக்க முடியாது திருதிருவென விழித்தாள். வடிவேலு, ராசாத்திக்கு புரிந்து போனது, கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏதோ தகராறு என்று...
"காலையிலேயே உன்னைத் தேடி வந்தேனே... எங்கே போன தங்கச்சி?" வடிவேலு எதையும் வெளிக்காட்டி கொள்ளாது கேட்டான்.
"அக்காவுக்கு வளைகாப்பு... அதான் போயிருந்தேன்." என்றவளை அவன் இரக்கமாய்ப் பார்த்தான்.
"அக்காவுக்கு வளைகாப்புன்னு போனியே... ஆனா இன்னைக்கு என்ன நாள்ன்னு மறந்துட்டியே?"
"அண்ணா..." அவள் புரியாது விழித்தாள்.
"இன்னைக்கு உங்க கல்யாணநாள்ன்னு கூடவா உனக்குத் தெரியாது." வடிவேலு சொல்லவும் தான் அவளுக்குக் கணவனின் கோபத்திற்கான காரணம் புரிந்தது.
"ஐயோ மறந்து போயிட்டேனே..." அவள் வேதனையுடன் அரற்றினாள்.
அதனால் தான் அவள் திருநீறு பூசி விடும் போது கணவன் தன்னைக் குறுகுறுவெனப் பார்த்தானோ! ஐயோ, அபிராமி கூட இன்று அவளுக்குத் திருமணநாள் என்று சொன்னாளே! அப்போது கூட அவளுக்குத் தனது திருமணநாள் ஞாபகம் வரவில்லையே! கணவனது கோபம் நியாயமானதே என்றே அவளுக்குத் தோன்றியது.
மீதி கதையைப் அமேசானில் படித்துத் தெரிவியுங்கள்