சொக்கியின் “என் கருப்பழகி”
அத்தியாயம் – 10
“சுகிம்மா! இங்க பாரு அழுகாதடா. உன் மனசு சங்கடப்படும்னு தான் நான் இதெல்லாம் உங்கிட்ட சொல்லலை. ஷிவ் எப்படினு நமக்கு தெரியும். ஏன் வருத்தப்படனும்? உனக்கு பிடிக்கலைனா நாம விஷ்வாவோட இந்த வீட்ட விட்டு போயிடலாம்டா. இங்க நமக்கு வேண்டாம். ஷிவ் நம்ம கைவிட்டு ரொம்ப தூரம் போயிட்டான். திருப்பி வரது கஷ்டம்! உண்மையா சொல்லபோனா அது நடக்காத ஒன்னு. அவனுக்காக ஏன் நம்ம எல்லாரும் கஷ்டப்படனும். உனக்காக நம்ம சிவணா இல்லம் எப்பவும் காத்துட்டு இருக்கு. இப்ப கூட நாம கிளம்பலாம் வாடாமா” என்றார் ராஜேந்திரன்.
“என்னங்க சொல்லுறிங்க! ஷிவ் இப்படி ஆகிட்டானேனு எனக்கு வருத்தம் தான், இல்லைனு சொல்ல மாட்டேன். அதுக்காக அவன் செய்யுற தப்பை எல்லாம் என்னால பொறுத்துக்க முடியாதுங்க. பாருங்க இந்த பொண்ண எப்படி கேவலமா நடத்துறானு. நாம நமக்கு என்னனு சும்மா விட்டா அந்த பாவமெல்லாம் நமக்கு தான். அவன் நம்ம புள்ளங்க அவன் தப்பு செஞ்சா அவன திருத்தி அந்த தப்ப சரி பண்ண வேண்டியது நம்ம கடமைங்க. இந்த பொண்ணுதான் நம்மோட சின்ன மருமக. இவளுக்காகவாது நாம இங்க இருந்து தான் ஆகனும். இவளுக்கான நியாயம் கண்டிப்பா கிடைக்கணும். இந்த பொண்ணு மனசு கஷ்டப்பட்டா நம்ம தலைமுறைங்க நல்லபடியா இருக்க மாட்டாங்க. இவளுக்கு ஒரு நல்ல வழி காட்டாம நாம இந்த வீட்டைவிட்டு நகரக் கூடாதுங்க” என உறுதியாகக் கூறிவிட்டார் சுகுணா.
ராஜேந்திரன் முகத்தில் நிம்மதியுடன் கூடிய புன்சிரிப்பு படர்ந்தது. மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று அவர் பயந்து கிடக்கையில் புதிதாக வந்திருக்கும் மருமகளுக்காக ஆருயிர் மகனை எதிர்க்கத் துணிந்துவிட்ட அவளை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “சரிடா சுகி, நான் கூட அதான் யோசிச்சேன் நீ என்ன சொல்வியோனு தான் கொஞ்சம் பயந்தேன். இந்த பொண்ணு தான் நமக்கு மருமக. அவளுக்காக நாம யாரவேனா எதிர்க்கலாம். நம்ம ஷிவ்வா இருந்தாலும் சரி!” என்றார் குரலில் உறுதியுடன்.
“சரி சரி என்ன சமாதானப்படுத்தினது போதும் நம்ம மருமகளைப் பாக்கலாம் வாங்க. அவளுக்கு தாங்க இப்போ ஆறுதல் தேவை. பாவம் சின்ன பொண்ணு, முடியாத குழந்தை எப்புடி சுட்டுட்டான்! மனசே ஆறலை.” என்றவாறே இருவரும் ஷிவேந்திரனின் மனைவியின் அருகில் சென்றுவிட்டனர்.
“ஹம்ம்ம் பேரன் பேத்தி எடுத்ததுக்கு அப்புறமும் உங்க மகனும் மருமகளுக்கும் ஆசை குறையுதா பாருங்க! நடு ஹால்ல எல்லாரையும் வச்சிக்கிட்டு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கட்டிப்பிடிச்சிட்டு கொஞ்சிட்டு இருக்காங்க.” எனக் கேலியாகக் கூறினார் ரகுவரன். சுகுணாவின் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அழகின் மேல் எப்பொழுதும் ரகுவரனுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. ராஜேந்திரனுக்கு சுகுணா செய்யும் பணிவிடைகளைக் கண்டு ரகுவரனுக்கு பொறாமை தீ கொழுந்து விட்டு எரியும். வீடு அலுவலகம் இரண்டிலும் கணவனுக்கு பக்க பலமாக இருக்கும் அருமையான மனைவி. தனக்கும் ஒன்று வாய்த்திருக்கிறதே!!!! என எப்பொழுதும் பல்லைக் கடிப்பார்.
தர்மேந்திரன் ரகுவரனை நோக்கி மௌனமாக ஒரு பாசப் பார்வை பார்த்து வைத்தார். அரண்டு விட்டார். “கொஞ்சம் ஓவராதான் பேசிட்டோமோ. கிழவன் பார்வையே சரியில்லையே! டேய் ரகு உனக்கு நாக்குல சனி உக்காந்திட்டு நர்த்தனம் ஆடுது. கொஞ்சம் அடங்கினா நீ பொழச்சிக்கலாம்” என மனதினில் எண்ணியவாறே பார்வையை மனைவியை நோக்கித் திருப்பிவிட்டார்.
தர்மேந்திரன் ரகுவரன் “அற்ப பதரே” என்றதொரு பார்வை பார்த்துவிட்டு புகழினியை சூழ்ந்த கொண்ட மகனையும் மருமகளையும் பார்த்தார்.
அன்னம்மா அவர்களை பார்த்து எழுந்து நின்றார். அவரது கண்கள் கலங்கி இருந்தது. சுகுணா அழ வேண்டாம் எனக் கண் சாடை காட்டினார். பிறகு ராஜேந்திரனின் பார்வையைப் புரிந்து கொண்டு இருவரும் புகழினியை தூக்கி நிறுத்தினார். ராஜேந்திரன் ஒரு அலைபேசி அழைப்பு வரவே அதனை எடுத்துக் கொண்டு மனைவியிடம் தலையசைத்து நகர்ந்து சென்றுவிட்டார்..
சுகுணாவும் அன்னம்மாவும் புகழினியை கை தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர வைத்தனர். அவளுக்குக் குடிக்க பழசாறும் உண்ண பிரட் சாண்டவிச்சும் தருவிக்கப்பட்டது. அவளும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் உண்டாள்.
“ஏன் மம்மி, இது அமேசான் காடுகளில மட்டும் கிடைக்கும் அரிய உயிரினம் போல!! அத்தான் பெரிய பிஸ்னஸ் மேன் ஆச்சே அதான் ரேர் பீஸ்னு விடாம கட்டி தூக்கி கிட்டு வந்துட்டாறோ!!! லேப் பர்பஸுக்கு யூஸ் பண்ணுவாறு போல அதான் விடாம அத்தான் அலேக் பண்ணிட்டாறு.” என ஏற்ற இறக்கங்களோடு புகழினியின் தோற்றத்தை எள்ளி நகையாடினாள் விமன்யா. அதனைக் கேட்டு வசுந்தராவும், மேகவதியும் உரக்கச் சிரித்தனர்.
“விமன்யா” என அழுத்தமான குரலில் விளித்தார் சுகுணா. அங்கு உள்ளவர்களுக்கு அவரின் இந்தக் குரல் புதிது. என்றுமே அவர் தன் குரலை உயர்த்தியதில்லை. அவர்களின் வம்பள பேச்சில் சிக்காமல் ஒதுங்கிப் போய் விடுவார். இன்று தான் முதல் முறையாக அவரின் குரல் சுபிக்ஷத்தில் அழுத்தமாக எதிரொலித்துள்ளது.
“இவ என்னோட மருமக அதாவது இந்த வீட்டு சின்ன எஜமானி ஷிவ்வோட பொண்டாட்டி, அதை மனசுல வச்சுக்கிட்டு எல்லாரும் பேசினா நல்லாருக்கும்.” என ஆழ்ந்த குரலில் அந்த ஹாலில் குழுமியிருந்தவர்களை பார்வையால் அளந்தவாறேக் கூறினார்.
“சின்ன எஜமானியா! யாரு இந்த நொண்டி சின்ன எஜமானியா? இதுல ஷிவ்வோட பொண்டாட்டி வேற?? என்ன மாதிரி பொண்டாட்டி இவ!!! என் பேரன் சொன்னத கவனிச்சதானே! உன் மிடில் கிளாஸ் புத்தி உன்ன விட்டுப் போகுமா. யாரு சின்ன எஜமானி? நீயே இங்க ஒண்ட வந்தவ. உனக்கே இங்க அடையாளம் இல்லை. இதுல நீ இவளைச் சின்ன எஜமானினு சொல்ல வந்திட்ட!! கிரேசி லேடி..” என எகத்தாளமாகப் பேசினார் மேகவதி.
“ஹம்ம்ம்ம் ஒண்ட வந்தவ!! இந்த ஒண்ட வந்தவ காலில் விழுந்து கதறி தான் என் குடும்பத்த முப்பது வருஷத்துக்கு முன்னாடி இங்க வரவச்சிங்க, மறந்துடுச்சா?? என் புருஷங்கிட்ட வேணா நாம இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா? என்ன சொல்றிங்க? ம்ம்ம் என்னோட அடையாளம் என்னனு கேட்டிங்க.. நேர்மையா சுயமா உழைச்சி முன்னேறின சிவகாமி இண்டஸ்டிரீஸ் சேர்மன் அண்ட் எம்.டி ராஜேந்திரனோட மனைவி நான். சிவகாமி இண்டஸ்டிரீஸ் சி.ஒ.ஒ விஷ்வேந்திரன், எ.எ இண்டஸ்டிரீஸ் சி.ஃப்.ஒ ரூபா தேவி அண்ட் உலகம் முழுசும் கொடிக் கட்டிப் பறக்கிற பிஸ்னஸ் சாம்ராட் ஷிவேந்திரனோட அம்மா நான். இதோ இவளுக்கு நான் மாமியார். ஃபைனலி நான் சிவகாமி இண்டஸ்டிரீஸோட ஜெ.எம்.டி சுகுணா ராஜேந்திரன். என்னுடைய அடையாளங்கள் போதுமா??” என அவர்களின் முகத்தில் கருமையை பூசிவிட்டு கம்பீரமாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார் சுகுணா. மறந்தும் அவர் ஷிவேந்திரனை திரன் குரூப்ஸின் எம்.டி என்று உரைக்கவில்லை. அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன்னுடைய குடும்பத்தை தனி தன்மையுடன் விவரித்ததைக் கண்டு அவர்களின் முகங்கள் யாவும் கொடூரமாக மாறின. ஆனால் அது அவரைச் சற்றும் பாதிக்கவில்லை, தயங்காமல் அவர்களின் பார்வையை எதிர்கொண்டார். அதுவேறு அவர்களை அக்னி பிழம்பாக கொதிக்க வைத்தது.
அன்னம்மா அவர்களின் முகத்தில் ஜொலித்த வன்மத்தில் “அம்மாடியோவ் காலங்காலமா குடியழிச்ச கூனி கூட்டம்டா சாமி இது! சுகுணா அம்மா இப்பயாவது வாய் திறந்தாங்களே அந்த மட்டிலும் சந்தோசம். ஆனா இதுங்க சும்மா இருக்காதுங்களே உடனே சதி ஆலோசனை கூட்டத்தை நடத்தி மக்கள சாய்ச்சிட்டுதானே மறுவேலை பாக்குங்க” என மனதினுள் புலம்பினார்.
புகழினியின் தோளில் ஆதரவாக கைகளை போட்டு “என் மருமக கிட்ட மரியாதையா நடந்துக்கனும், நடக்கல? நான் நடக்காததையும் நடக்க வப்பேன். அன்னம்மா அந்த வாக்கிங் ஸ்டிக்ஸ கொண்டு வாங்க” என அழுத்தமான குரலில் இயம்பினார் சுகுணா.
மேகவதியும், வசுந்தராவும் சுகுணாவிடம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிட நினைக்கையில் ராஜேந்திரன் யாரோடு அலைபேசியில் உரையாடிவிட்டு வந்தார். அவர்களைப் புருவம் சுருங்கப் பார்த்தவாறே மனையாளை நெருங்கினார்.
மாமானாரின் முன் அமருவதற்கு புகழினி சங்கடப்பட்டு, எழுந்து கொள்ள முற்பட்டாள். சுகுணா லேசான கண்டிப்பான புன்னகையுடன் அவளின் தோளை அழுத்தி மறுபடியும் அமர வைத்தார்.“என்னடாம்மா, சாப்டியா இப்ப கொஞ்சம் தெம்பா இருக்கா? இன்னும் கொஞ்சம் எதாவது சாப்பிடிறியாமா” எனப் பாசத்துடன் தலையை வருடியவாறு கேட்டார் ராஜேந்திரன்.
“வேண்டாங்கெ மாமா, இப்பத்தேன் அன்னம்மா ஆத்தாவும், அத்தெயும் சூஸும், பன்னு ரொட்டியும் தந்தாய்ங்க.” என மண் மனம் மாறா தெக்கித்தி தமிழில் மெல்லிய குரலில் வெள்ளந்தியாக சிரித்தபடி பதில் கூறினாள்.
கணவனால் சூடுபட்டு, தள்ளுபட்டு, அவமானப்பட்டு அழுது கரைந்தவள் தான்! ஆனாலும் அதையல்லாம் நொடிப் பொழுதில் மறந்துவிட்டு வெள்ளந்தியாக சிரிக்கும் இந்த அப்பாவி பெண்ணையா தன் மகன் வஞ்சிக்கிறான். விடமாட்டேன் இன்னொரு சிவகாமியை இந்த சுபிக்ஷத்தில் உருவாக நான் விடமாட்டேன்! என மனதிற்குள் சூளுரைத்தார் ராஜேந்திரன்.
“உனக்கு என்ன வேணாலும் எங்ககிட்ட கேளுடா ராஜாத்தி, நீயும் எங்களுக்கு இன்னொரு மக தான்! உனக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு, எங்கள மீறி உன்னை யாரும் இனிமே எதுவும் செய்ய முடியாதடாமா. அப்படி யாராவது உன் மனச சங்கடப்படுத்தர மாதிரி பேசுனாலோ நடந்திக்கிட்டாலோ எங்ககிட்ட சொல்லுடா, நாங்க கவனிச்சுக்குறோம்.” என ஆதரவுடன் கூறினார். சுகுணா கணவனின் கூற்றை தலையசைத்து புன்னகையுடன் ஆமோதித்தார். அன்னம்மாவுக்கு மனது நிறைந்து விட்டது. கடவுள் புகழினிக்கு கொஞ்சம் கருணை காட்டவே செய்கிறார் என மனதினில் எண்ணி நிம்மதியுற்றார்.
புகழினி கண்களில் நீர் சுரக்க வெண் முத்த பற்கள் பளிரிட கள்ளமின்றி சிரித்து தலையாட்டினாள். ராஜேந்திரனும் சுகுணாவும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் நோக்கிக் கொண்டனர்.
“உன் பேரு என்னடாமா? உன் புருஷன் எதோ ஒரு பேரு சொன்னான், அதுவா உன் பேரு??” என சந்தேகத்துடன் வினவினார் ராஜேந்திரன்.
புகழினி “எல்லாரும் என்ன கருப்பின்னுதேன் அழைப்பாய்ங்க மாமா. ஆனா அது எம்பேரு இல்லெ. எம்பேரு புகழினி தெய்வமங்க” எனப் பெருமையுடன் முகம் விசுவிசிக்கச் சொன்னாள்.
“எவ்வளவு அழகானப் பெயரை எங்க சின்ன குட்டிக்கு வச்சிருக்காங்க. அதுவும் காரணப் பெயர் புகழினி தெய்வமங்கை. நீ நிச்சயம் தெய்வமங்கை தாண்டா! கண்டிப்பா பேரும் புகழோட இருப்படா கண்ணா நீ. நாங்க இனிமே உன்ன புகழினினு தான் கூப்பிடுவோம். எல்லாரும் அப்படிதான் உன்னை இனிமே கூப்பிடுவாங்க” என மனம் உவந்து வாழ்த்தினார் அந்த அன்பு மாமியார் சுகுணா.
“சரி சரி சுகிம்மா, புகழினிக்கு டையர்டா இருக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். காலையிலே சாவகாசமா அரட்டை அடிக்கலாம் உன் செல்ல மருமக பொண்ணுக்கிட்ட” எனக் கேலியுடன் தூங்குவதற்கு ஆயத்தமாகச் சொன்னார் ராஜேந்திரன்.
கணவரை பொய் கோபத்துடன் முறைத்துவிட்டு “நீ வாடா புகழ் நாம ரெண்டும் பேரும் உங்க மாமாவ ஓட்டிவிட்டுட்டு நாம ஜாலியா கதை பேசிட்டே தூங்கலாம்.” என எளிதாக புகழினிக்கு தான் துணையாக இருப்போம் என்று சுட்டிக்காட்டிவிட்டார் சுகுணா.
“பாத்தியாடா புகழ்மா! உன் அத்தை நீ வந்தோன என்னை கழட்டிவிட்டுட்டு உன் கூட கூட்டு சேர்ந்துட்டா! இனிமே உங்க அத்தைக்கிட்ட இருந்து ஒரு வாய் தண்ணி கூட எனக்கு கிடைக்காது, பின்ன எப்படி சோறு கிடைக்கும்!!! “ என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கண்களில் கேலியுடன் கூறினார் ராஜேந்திரன்.
“அத்தைய கோளாறு சொல்லாதிங்க மாமா, அவுக ரொம்ப நல்லவய்ங்க. உங்குளுக்கு என்ன என்ன வேணும்னு கேளுங்க மாமா, நாக்குக்கு ருசியா நான் வக வகயா ஆக்கி போடுறேன்! நான் ஐரமீனு கொழம்பு வச்சா ஊரே மணய்க்கும். நாந்தேன் எங்க வீட்டுல சமைப்பேன், ஒரு ஊருக்கே நிமிஷத்துல ஆக்கிப்புடுவேன் மாமா” என சிரிப்புடன் ஆற்பாட்டமின்றிக் கூறினாள் புகழினி.
“புகழும்மா ஆனாலும் நீ ரொம்ப விவரந்தான் ஒரே நேரத்தில எனக்கும் உங்க அத்தைக்கும் சேர்ந்து குல்லா போடுறியே!” எனக் கிண்டலடித்தார் ராஜேந்திரன்.
“என் மருமக சமத்துக் குட்டி..” எனச் செல்லம் கொஞ்சினார் சுகுணா.
“ஆமா ஆமா கண்டிப்பா சமத்து தான். நல்லா சமைக்கும் போலயே! ஹப்பாடி இனிமே நான் இந்த வீட்டில நல்ல சாப்பாடு சாப்புடலாம்! உன் அறுவை சாப்பிட்டிலிருந்து எனக்கு விடுதலை சுகி. புகழும்மா நீ நல்லா இருப்ப, உங்க அத்தைக்கிட்ட மட்டும் சமையலுக்கு எதுவும் ஐடியா கேட்டுடாதடா. உனக்கு புண்ணியமா போகும்!!!” எனக் கடைசி வாக்கியத்தை மட்டும் இரகசியம் கூறுவது போல் புகழினியின் அருகில் குனிந்து சத்தமாகச் சொல்லி மனைவியைச் சீண்டினார் ராஜேந்திரன்.
“ஓ அறுவ சாப்படா, சரி தான்! புகழ் குட்டி சில பேரு சுகிம்மா பால் பணியாரம் செஞ்சுத்தாயேன், அதிரசம் செஞ்சு தாயேன், மீன் கொழம்பு வச்சித்தாயேன், மட்டன் கோலா செஞ்சுத்தாயேன், கொத்து கறி செஞ்சுதாயேன், வெள்ள சீடை செஞ்சித்தாயேனு வாய சப்புக் கொட்டிட்டு வருவாங்கங்க இல்லை, அப்ப அடுப்புல காயவச்ச தோசை திருப்பியால சப்புக்கொட்டுற அந்த வாயிலயே ரெண்டு சூடு இழுத்துடலாம்! நீ என்னடா சொல்ற குட்டி??” எனக் கணவனை ஒரு மார்க்கமாக பார்த்துபடி புகழினியிடம் வினவினார் சுகுணா.
ராஜேந்திரன் மனைவி போட்ட போட்டில் வெளிப்படையாகவே தனது வாயை இரு கைகளாலும் மூடிக் கொள்ளவும் புகழினி பகிரங்கமாக வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.
குழந்தையன தனது மனக்கிலேசத்தை மறந்துவிட்டு கண்களில் நீர் வரச் சிரிக்கும் அந்த அப்பிராணிப் பெண்ணை கண்டு கண்கள் பனிக்க வாஞ்சையுடன் பார்த்தனர் ராஜேந்திரன் சுகுணா தம்பதியர்.