All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளின் ஆதரவில்... மதிப்பிற்குரிய ஸ்ரீமாவின் வழி காட்டுதலில்.. எனது ஏழாவது கதை சொல்லும் முயற்சியாக இத்திரியை ஆரம்பிக்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
தூண்டல் பதிவு !!


நீலாம்பரி,
"பிரச்சனைகள் இல்லாம வாழ்க்கை இல்லையே ப்பா.. நம்ம வேலையை நாம பார்ப்போம்.. கவனமா இருக்கது நல்லது தான். அதுக்காக கவலப் பட்டுக்கிட்டே இருந்தா கூட நாலு முடி தான் நரைச்சுப் போகும்." என்றவாறு அவர் உண்ட தட்டை எடுத்துச் செல்ல உள்ளே நுழைந்தான் மகிழ் வேந்தன்..



"நீலு என்ன சமையல்?" என்றவாறே அமர்ந்தவன் கண்ணில் தேவ மஞ்சரி பட, "என்ன டீச்சரம்மா நாளைக்கு நடத்த வேண்டிய பாடமெல்லா படிச்சுட்டியா.. போன செமஸ்டர்ல ஒன் சப்ஜெக்ட்ல தான் நிறைய பேரு ஃபெயிலாமே..?" என்றவாறு தட்டெடுத்து இட்லிகளை வைத்துக் கொள்ள, அவனை முறைத்தவள்,

"ஆமா இவுரு தா மனோன்மணீயம் யுனிவர்சிடி.. வைஸ் சான்ஸிலர்.. ஸ்டேட்டிஸ்டிக்ஸ் ரிப்போர்ட் வந்திருக்கு , கையெழுத்து போடும் போது விசாரிக்கிறரு.. மொதல்ல சர்வீஸ் கமிஷன் பரீட்சை பாஸ் பண்ற வழி பாருங்க அப்புறமா எங்கிட்ட வம்பு வழக்குக்கு வாங்க." என எகிற..

" அட உண்மைய சொன்னா, நீலு , நீ வேணா அந்த எச்ஓடிட்ட விசாரிச்சு பாரு.. ஆமாவா இல்லியான்னு.. என்றவாறு இடக்கையை நீட்ட,

அவன் கையிலிருந்த பையை சிரித்தவாறே வாங்கினாள் நீலாம்பரி.

என்ன அத்தான்? வழக்கம் போல மருதாணியா.. என்றவாறே பிரிக்க

ஆமா சட்டுபுட்டுனு அரைச்சு கொண்டுவா.. இந்த பார்த்தீனியம் களை அழிக்க உப்புப் போட்டு கரை கரைன்னு கரைச்சனா.. கலர் போய்டுச்சு.. அதான் ஃப்ரெஷ்ஷா.. ஏ மஞ்சு.. அத்தான் சாப்பிடும் போது பாட்டு போடனும் தெரியதா? எனவும் உதட்டைச் சுழித்தவள்.. எழுந்து ப்ளூடூத் ஸ்பீக்கரை ஆன் செய்ய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது,
" ஏ தந்தனதந்தன தந்தன தந்தா.. சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரப் போல வருமா…. அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா..". என அலறத் தொடங்க.. காதுகளை பொத்திக் கொண்ட மஞ்சரி
மகிழ்வேந்தன்னு பேர் வச்சதுக்கு இராமராஜன்னு வச்சாருக்கலாம் என சொல்ல..

சிரிப்புடன் கெத்தாக காலரை பின்னால் தூக்கி விட்டவன், இட்லியை ரசித்து உள்ளிறக்கினான்.


***********

" பாரி.. இதான் நம்ம வாங்கிருக்க இடம்.. இந்த கண்மாய் தண்ணீர் இரண்டு பேருக்கு பாத்தியதை.. இந்த கிணறுகள் மூன்று நமக்கு சொந்தம்.. ஆனா அந்த நிலத்திலே இருக்கிற இரண்டு கிணறுகள் நிறைஞ்சாத்தான் இங்கே தண்ணீர் வரும்.. இந்த மண்ணில்.. என்ற தன் சகோதரனின் பேச்சில் காதுகள் கவனமாய் இருந்தாலும் கண்கள் சுற்றுப்புறத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.


அந்த லேண்ட் யாரோடது என சுட்டிக் காட்ட, அதான் சொன்னேனே.. சிவந்தியப்பர் அவர் குடும்பத்துக்கு சொந்தம். அவங்களே பாத்துக்கறதாலே நல்ல வெள்ளாமை.
இங்கே டேவிட் பல வருடங்களா ஏதும் பாக்கல , அதான் புதர் மண்டிக் கிடக்கு. நம்ம கைக்கு வந்திடுச்சுல்லா உன் ப்ளான்படி எல்லாம் பண்ணிடலாம்.. என்றவன் விசிலடித்தான்.. அவனின் பார்வை போன பக்கமாய் பார்வை திருப்பியவன் கண்கள் சுருங்கின..

சேறாய் இருந்த நிலத்தில் ட்ராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தாள் கருநீல உடையணிந்த ஒருத்தி..

என்னாமா ஓட்றா பாரு.. சிவந்தியப்பர் பொண்ணு நினைக்கிறேன். அக்ரி படிச்சுட்டு காடு கரை அவதான் பாக்கிறான்னு கேள்வி. என்றவன் அவளையே பார்த்தவாறு நிற்க,

அருகில் இருந்த கிணற்றை எட்டிப் பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கி , சுற்றுபுறம் நோக்கிய கண்கள் பசுமையாய் விரிந்து கிடந்த தோட்டம் நடுவில் உழவடிக்கும் நிலத்தைக் கூர்ந்தன..

முதல் பதிவு புதன் கிழமை தோழமைகளே!!
 

தாமரை

தாமரை
NPNN 1

" பாரி.. இதான் நம்ம வாங்கிருக்க இடம்.. இந்த கம்மாய் தண்ணீ இரண்டு பேருக்கும் பாத்தியதை.. இதில வரிசையா நிக்கற கிணறுங்க மூனும் நமக்கு சொந்தம்.. ஆனா அந்த மேற்காம இருக்க நிலத்திலே இருக்கிற இரண்டு கிணறுகள் நிறைஞ்சாத்தான், இங்கே தண்ணீர் வரும்.. இந்த மண்ணையும், அந்தா ஏத்தமா இருக்க நிலத்து மண்ணு நிறம் மாறிருக்கு பாரு அதனால, ஆங்காங்கே எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பிருக்கு." என்ற தன் சகோதரனின் பேச்சில் காதுகள் கவனமாய் இருந்தாலும் கண்கள் சுற்றுப்புறத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

. எதிரே பசுமை கம்பளமாய் விரிந்து கிடந்தன நெல் நாற்றுகள் வளர்ந்திருந்த வயல்கள். வேகமாக வீசிய ஆனி மாதக் காற்றில் அலையடித்தது போல அவற்றில் ஒரு சிலிர்ப்பும் ஓடியது.. வண்டி ஓடும் மண்பாதைகளில் தேக்கு மரங்கள் வரிசையாய் நேராய் நின்றன. தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் மண் வாசனை, பயிர் வாசனை , சாண எரு வாசனை, ஏதோ பழ வாசனை என்று எல்லாம் நாசியை நலம் விசாரித்தன .

எதிரே , பச்சையாய் கண்ணை குளிர்வித்த நிலத்தை காட்டி, " அந்த லேண்ட் யாரோடது?" என சுட்டிக் காட்ட,

"அதான் சொன்னேனே.. இந்த ஊரு பெரியாளு, சிவந்தியப்பரு அவர் குடும்பத்துக்கு சொந்தம். அவங்களே குடும்பமா பாத்துக்கறதாலே நல்ல வெள்ளாமை கெடைக்குது போல.." என்றவனின் கண்கள் அடுக்கி வைக்கபட்டிருந்த வாழைத்தார்களை மற்றும் பழக்கூடைகளை சுட்டிக் காட்ட,

"இந்த நிலத்துக்கார டேவிட் பல வருடங்களா ஏதும் பாக்கல , அதான் புதர் மண்டிக் கிடக்கு. நம்ம கைக்கு வந்திடுச்சுல்லா உன் ப்ளான்படி எல்லாம் பண்ணிடலாம் என்னா.! " என்றவன் விசிலடித்தான். அவனின் பார்வை போன பக்கமாய் பார்வை திருப்பியவனி கண்கள் சுருங்கின.

சேறாய் இருந்த ஒரு பகுதி நிலத்தில் ட்ராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தாள் கருநீல உடையணிந்த ஒருத்தி.. பெரிய சக்கரங்கள் உருண்டு களிமண் கட்டிகளாய் இருந்த மண்ணை மசிய வைத்துக் குழப்பிக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் மறைத்த சுடிதார் அணிந்து இருந்தாள். கழுத்து , தலையைச் சுற்றி இருந்தது துப்பட்டாத் துணி , கண்கள் மட்டுமே தெரிந்தன. மெல்லிய உடல்வாகு கொண்ட ஓரளவு உயரமான பெண். கியரில் கவனமாய், உழவு வேலையில் கவனமாய் இருந்தாள். பாதையில் புத்தம் புதிய கருப்பு நிற ஹோண்டா ஆஸ்ட்ரோ இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. லுங்கி அணிந்த ஒருவன் தலை தெறிக்க ஓடி வந்தான்.

" யம்மா யம்மா.. எப்பம்மா வந்தீக. இலைக்கட்டு அறுக்கச் சொல்லி ஆடரு வந்ததுன்னு நெல்லையப்பன் சொன்னான் அதா வாழக்காட்டுக்கு போனேன் மா. ஏம்மா வயல்ல ட்ராக்டரு.. இந்தப் பக்கமா வாங்கம்மா. வேந்தனுக்கு தெரிஞ்சா வம்பாப் போய்டும்.. கண்டபடி ஏசிடுவான்.. வாங்கம்மா" என்றான் சத்தமாய்.

அவன் அழைத்தது காதில் விழவில்லையோ.. அவள் போக்கில் ஓட்ட.. கை தட்டியவன்.. "யம்மா நீலாம்மா.. உங்களத்தா.. நா வந்துட்டேன். இங்க பாருங்க." என்று சத்தமிட..


வேகத்தை சற்றே குறைத்தவள், திரும்பி பார்த்து,
"ஆங்.. ஆங் கேட்குது. மண்ணு காயுது முத்து. நீ போய் காய்கறி, தேங்கா மூட்டைங்களை ஜீப்ல ஏத்து.. ஒரு மணிக்குள்ளாற பாவநாசம் மார்க்கெட் கொண்டு சேர்க்கனுமில்லா.. இங்கே தண்ணீ விட்டு நேரமாகிடுச்சு.. கட்டி தட்டிப் போச்சுன்னா ரெட்ட வேலையாகிப் போய்டும்.. போ போ.." எனவும்..

தலையைச் சொறிந்தவன்.. சிறிதாய் குழம்பி.. பின் எதிர்பக்கமாய் சென்றான்.

மீண்டும் ட்ராக்டர் வேகமெடுத்தது.

"என்னாமா ஓட்றா பாரு.. சிவந்தியப்பர் பொண்ணு நினைக்கிறேன். அக்ரி படிச்சுட்டு காடு, கரை அவதான் பாக்கிறான்னு கேள்வி." என்றவன் அவளையே பார்த்தவாறு நிற்க,



அருகில் இருந்த கிணற்றை எட்டிப் பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கி , சுற்றுபுறம் நோக்கிய கண்கள் பசுமையாய் விரிந்து கிடந்த தோட்டம் நடுவில் உழவடிக்கும் நிலத்தைக் கூர்ந்தன..

திரும்பிப் பார்த்தவன், இந்திரனின் பார்வை ட்ராக்டரின் பின் வலம் வருவது கண்டு, "அந்த வேந்தன்ங்காறாங்களே அவன் நமக்குப் போட்டியா நிலத்தை பேரம் பேசினவன் தானே.." என கேட்டவாறு அலைபேசியை எடுக்க, அவனிடமிருந்து பதில் வராதது கண்டு திரும்பி " டேய் இந்திரா, வந்த வேலைய விட்டு என்ன பாத்திட்டு இருக்க?" எனவும்,

"ப்ச் என்னடா , ஒரு பொட்டப்புள்ள என்னா லாவகமா ட்ராக்டர் ஓட்றா, வண்டில ஆயிரத்தில ஒர் பங்கு கூட வெயிட் இருக்க மாட்டான்னு பாத்திட்டு இருந்தா ? என்ன கேட்ட?"

" வேந்தன் யாரு? நம்ம நெலம் வாங்க போட்டி போட்டவன் தானேன்னு கேட்டேன்."

" ஆமா ஆமா, செவந்தியப்பரோட அக்கா புள்ளையோ தங்கச்சி புள்ளையோ.. இந்த அம்பத்தி ரெண்டு ஏக்கரா அவங்க குடும்பத்து ஆட்கள் எல்லார் பேர்லையும் தான் . நாம கொஞ்சம் யோசிச்சுருந்தா டேவிட்டு நிலமும் அவன் அந்த வேந்தன் தட்டிருப்பான்.. நாம தா வொயிட்டு ப்ளாக்குன்னு பணத்தைக் கொட்டி அந்த டேவிட்டு பையனை அசைச்சு, நெலத்தை தூக்கிட்டோம்ல.. " என,

"என்னத்த அசைச்சு.. தண்ணீர் எடுக்கவும் தோதில்ல, விவசாயமும் பாத்து பல காலம் ஆனது போல இருக்கு. எல்லா ஜீரோல இருந்து ஆரம்பிக்கனும்.. " என ,
டணார் கோயில் மணி ஓசை கேட்டது.


கண்மாயை ஒட்டியிருந்த ஊருணி காத்த அய்யனார் கோவிலில் இருந்து தான் வந்தது போலும். டணார், டணார் என்று மூன்று முறை ஒலித்து அடங்க..

ட்ராக்டர் ஓட்டிக் கொண்டிருந்த பெண் தன் மணிக்கட்டை திருப்பிப் பார்த்து விட்டு, வரப்போரம் பக்கமாய் ட்ராக்டரை திருப்பியவள், நிறுத்தி விட்டு ,படியில் கால் வைத்து இறங்கியவள் லாவகமாய் குதித்து வரப்பு மேட்டில் இறங்க,

"பார்றா.. " என்றான் இந்திரன் ரசனைப் புன்னகையுடன், "திருநெல்வேலி பொண்ணுன்னா சும்மாவா.. எப்படி தாண்டிக் குதிக்குது பாரூ.. " என்று சிலாகித்தவனை திரும்பி முறைத்த பாரி, "நீ மண்ணைப் பாக்க வந்தியா பொண்ணைப் பாக்க வந்தியா. கிளம்பு, இந்த ஏரியா அக்ரி ஆஃபீஸரைப் பாக்கனும். நம்ப ப்ளானுக்கு அந்தாள் சரி வருவானா செக் பண்ணனும் ." என

அவனையும் அறியாமல் பார்வை தன் முக்காட்டை நீக்கும் பெண்ணின் மேல் படிந்தது.


அலையாய் நெளியும் கூந்தல், காதில் கழுத்தில் கைகளில் அளவாய் நகைகள்.. எந்த முகப்பூச்சும் கண்டதில்லை என சருமம் சொல்லியது. இடை தாண்டிய நீண்ட பின்னலை பின்னுக்கு தள்ளியவள் , தனது வாகனத்தினின்று சிறிய பையை எடுத்தவள்,

"முத்தூ.. பச்சை முத்து என அழைக்க, ம்மா.." என எங்கிருந்தோ சத்தம் வந்தது.

"மோட்டார் ரூமில சாப்பாடு வச்சுட்டுப் போறேன். அத்தானை சாப்பிடச் சொல்லு." என சத்தமிட.. அவன் ஏதோ பதில் சொல்வது தெளிவற்றுக் கேட்டது.

"சரி சரி" என்றவள் வரப்பு பாதை தாண்டி இறங்கி, பார்வை விட்டு மறைந்து போனாள்.


தன் சகோதரன் நகரும் உத்தேசமே இல்லாமல் இருப்பது கண்டு எரிச்சலடைந்த பாரி, " கிளம்பலாம்னு சொன்னேன்.." என உரக்க சொல்ல,

"ஆங்.. அது அந்த ஆஃபீஸர்ட்ட வெவரம் கேட்கறது விட, இந்த பொண்ணு தா அக்ரி படிச்சுர்க்கே இதுட்டையே கேட்டுப் பாக்கலாமா..?" எனவும்,

புருவம் சுளிக்க, "பொட்டச்சி அதும் கத்துக்குட்டிட்ட என்ன கேட்க வேண்டிதிருக்கு..? கெளம்பு " எனக் கடுமையாய் சொல்லித் திரும்பிவன், தன் முன்னால் தெரிந்த பாதையில் வந்து நின்றவளைக் கண்டு திகைத்தாலும் சட்டென்று பாவனையற்ற முக பாவம் கொண்டு வந்தவன், பின் தொடருமாறு சகோதரனைக் கையசைத்து விட்டு, பாதையில் ஏறி கோவில் அருகே நிறுத்தியிருந்த தங்கள் வாகனத்தை நோக்கிச் சென்றான்.


**********************

கோடை வெயிலால் நீர் குறைந்து இருந்த குளத்தின் கரையில் கூட்டமாய் நின்ற சிறுவர்களைக் கண்ட பெரியவர்,

"என்னடே இங்க கும்பலா நின்னுட்டுருக்கிய.. ? எவனாச்சும் கொளத்துக்குள்ள எறங்கிறாதீக டே.. இந்த குளத்தில மொதல இருக்கு தெரியுமா.. " என்று பீடிப் புகையை வெளியே விட்டவாறே சொல்ல,

"என்னா மொதலையா.. எல்லாம் தெரியும் நீரு போரும்.. " என்று பதில் சொன்ன சிறுவனின் கண்கள் குளத்தில் பதிந்து இருந்தன.

அவனுக்கு பக்கத்தில் நின்ற இன்னொரு சிறுவன் தன் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்து விட்டு ,

"என்னாடா! அண்ணே தண்ணீல உள்ள போய் முளுசா இருவது நிமிஷம் ஆச்சு.. எப்புடிரா மூச்சடக்கி இருப்பாரு. ஒரு வேள கோயிலு மண்டபத்துக்கு அந்தப்பக்கமா நீஞ்சிட்டே போய் கரை ஏறிட்டாரோ ?"

பீடியை அவசரமாக வாயிலிருந்து எடுத்த பெரியவர், "ஏலே கோட்டிக்கார பயலுகளா! கசமான எடத்தில எவன்டா உள்ளே எறங்கினது ? இரண்டு நிமிசமே மூச்சடக்கி உள்ளாற இருக்கது கஷ்டம்.. இருவது நிமிஷமாச்சா சேத்துல மாட்டி, செத்துகித்து போயிறப் போறான்.. எவனாது நீச்சத் தெரிஞ்சவங்கள போய் கூட்டியாங்கடா.." என்று பதட்டமாய் சொல்லி குளத்தைப் பார்த்த நேரத்தில்.. பத்தடி தொலைவில் தண்ணீர் மட்டத்தில் அலைகள் அதிகமாக தெரிந்தன..

முதலில் கையும், அது பற்றியிருந்த கூடை மட்டுமே தெரிய..

"அண்ணே வந்திடுச்சு அண்ணே வந்திடுச்சு.."
என்று கூவிய சிறுவர்கள் தண்ணீர் கரை அருகில் சென்று பார்க்க.. கூடையில் ஏதோ அசைவு தெரிய.. அதனை தலைக்கு மேல் பிடித்து நீந்தி வந்தான் மகிழ்வேந்தன்.. அவன் கையில் இருந்த மூடி வைத்த அரிகூடையில் குளத்து மீன்கள்..

"ஹே .." என்று கூச்சலிட்ட சிறுவர்களை நோக்கி நீந்தி வந்தவன் , கரையேறி கூடையை கவனமாக அங்கிருந்த பெரிய பையனிடம் கொடுக்க,

"அண்ணே.. சூப்பருண்ணே.. சொன்னா மாரியே , கொரவை மீனு, நாலு நண்டுங்க கூட இருக்கு.. எப்படி எப்படிண்ணே பிடிச்சீங்க?" என,

பையனின் கையிலிருந்த தனது ஆடைகளை வாங்கி, சாரத்தை மேலிட்டுக் கொண்டு ஈர ஆடைகளை கழற்றியவன், உலர்வான ஆடைகளை போட்டுக் கொண்டவாறே, "நாளைக்கு லீவு தானேடா. வயல் பக்கம் இருக்க கம்மாய்க்கு வா, எப்படின்னு சொல்லித் தாரேன்.. இப்போ அடிச்சிக்காம நாலு பேரும் மீனுங்களை, நண்டைப் பங்கு போட்டுக்கங்க செரியோ?" " என்றுவாறு தனது அலைபேசியை வாங்க,

பீடியை வைத்திருந்த பெரியவர் ஆச்சரியத்துடன், "ஏலே வேந்தா நெசம்மா அது நீ புடிச்ச மீனாடே.. எப்புடிரே புடிச்ச. அதும் கொரவை மீனு சரியா ஆட்டங் காட்டுமே.." என்று எட்டிப் பார்த்து விட்டு..
" எப்படி முளுசா இருவது நிமிஷம் மூச்சுப் புடிச்சு உள்ளேருந்த.. ?" என் ஆச்சரயமாய் கேட்க.. அவரின் அருகில் வந்தவன்..

அவரின் கை பற்றி உயர்த்தி காட்டி, "இந்த பீடி கருமத்த குடிச்சா தரைலேயே உங்களுக்கு மூச்சு விடறது செரமம் தா.. இதுல தண்ணீல எங்க மூச்சு பிடிக்க? அப்படின்னு நான் சொன்னா கேட்டு இத விட்ருவீரா?? "
எனவும்..


"அட போப்பா.." என சொல்லிய அவர் இருமியவாறே அங்கிருந்து நகர..

"ஹூம் .." என்று உதடு பிதுக்கிப் புன்னகை செய்தவன். "பாத்துக்கிடுங்க டே.. இந்த எளவக் குடிச்சா இருமி இருமி தரைல நடக்கையிலேயே மூச்சு தெணறிட்டு கெடக்க வேண்டியது தா.. பத்தாததுக்கு அஞ்சு மணியானா ஊத்திக்கிடறது வேற.. "
என்றவனின் தோள் தட்டப்பட்டது..

"கருத்தெல்லா அப்புறமா சொல்லிக்கிடலா.. என்னிய கோவிலு வாசலுக்கு வர சொல்லிட்டு.. நீ என்னா டே குளத்தாங்கரைல நிக்கறவே.. ஃபோனுல கூப்பிட்டாலும் எடுக்கல.."

கிளுக்கிச் சிரித்தவாறு சிறுவன், தன் கையிலிருந்த அலைபேசியை நீட்டியவாறு "அண்ணே நீங்களான்னே கூப்பிட்டீங்க .. வாழைப்பழம் காலிங்னு வந்திச்சுண்ணே. உங்க பேரு செந்திலு தானே.. எப்பண்ணே வாழப்பழம்னு மாத்துனீங்க? " என்று சொல்லியவாறு ஃபோனைக் கொடுக்கவும்..

தன் நண்பனை முறைத்தவன்,
"ஏலே இநதக் கோரமை எம்புட்டு நாளா? என்னான்துக்குடே வாழைப்பழம்னு என் பேர மாத்தி வச்சிருக்கறவே? இரநூத்தி முப்பத்தி ஏழாவது தடவையா கரகாட்டக்காரன் படத்து வாழப்பழ காமெடி பாத்தியா டே?"

"ஆ.. அது எப்பவும் பாக்கது தானே.. இது , நேத்து உன்னிய என்னா வேல பாக்கச் சொன்னே.. ?" என நிதானமாய் கேட்கவும்,

திருதிருவென விழித்தவன், "என்னா மாப்பிள்ள? நீ சொன்ன வேலை எல்லா பண்ணிட்டேனே.. !"


"ஊத்தம் வச்சு பழுக்க வச்ச பழத்தை மார்க்கெட்டுக்கும், ஏற்கெனவே கனிஞ்சு போன பழத்தை தோட்டத்துக்கு ஒரம் தயாரிக்க எடுத்துப் போகச் சொன்னா , என்னலே பண்ணி வச்சிருக்க நீ..?" எனவும்


லேச்க ஜெர்க் ஆனவன், "அது அது.. நல்லாருக்க பழத்தை ஏன் மாப்பிள்ள வம்பாக்கனும். அதா பன்னெண்டு தாரையும் மார்க்கெட்டுக்கு தூக்கிட்டே. காசு கூட வாங்கி மாமாட்ட கொடுத்திட்டே லே. நாயமா என்னைய நீ பாராட்டனும்.. கேட்டியா?" என்றவாறு நகர முயல,

அவனின் கழுத்து பக்க சட்டையை கொத்தாக பற்றியவன் வண்டியின் புறமாய் திருப்பியவாறு, " வா வா.. கமிஷன் கடை கோனாரு ல்ல, உன்னிய பாராட்டத்தா கூப்பிட்டாரு , போய் அதை செமக்க வாங்கிட்டு வந்திடலாம். " என தள்ள,

எச்சில் விழுங்கியவன், தோளில் விழுந்த கையின் அழுத்தத்தில் மிரண்டு, " அது அது.. நல்லா பக்குவமா பழுத்து இருந்திச்சு பா. அதா ஏன் உரத்தில போட்டு வேஸ்ட்டு பண்ணனும்னு பழ வியாபாரிட்ட தள்ளச் சொன்னேன். என்னாச்சு.. சொதப்பிடுச்சா? "


"பக்க்குவம்.... ரொம்ப அறிஞ்சவே.. சரி சரி வா.. உன்னை வச்சே அதை பஞ்சாமிர்தம்.. பஞ்சகவ்யம் எல்லாம் பண்ண வைக்கிறேன்." என்று இழுத்துச் செல்ல ,

ஊப் என்று மூச்சைப் பிடித்தபடி அவனின் இழுப்பிற்கு சென்றான்.

****************


எட்டு மணியடித்த சத்தம் கேட்டு எழுதிக் கொண்டிருந்த போனாவை நிறுத்தி வைத்த நீலாம்பரி, சோர்வாய் உள்ளே நுழைந்து தன் முன் பணத்தை நீட்டும் தகப்பனை நிமிர்ந்து பார்த்தாள்.

"இந்தம்மா, ஆட்கள் சம்பளம் எல்லாம் கொடுத்தது போக இன்னிக்கு இவ்ளோ தா மிஞ்சனது.." எனவும் வாங்கி எண்ணிக்கை சரிபார்த்து ஏட்டில் குறித்தவள், சோர்வாய் நகர்ந்து கையைக் கழுவும் தந்தையைப் பார்த்து , வேகமாக சென்று சாப்பிட தட்டை எடுத்து வைத்தாள்.

"இன்னிக்கு நம்ப சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு கெழக்கால இருக்க குளத்து வண்டல் மண் எடுக்க டெண்டரு. இந்த க்ருஷ்ணா கோட்ஸ் காரனுங்க அதுலேயும் போட்டிக்கு வந்துட்டானுங்க. நெலத்தை தான் போட்டி போட்டு ரேட்டு ஏத்திவிட்டு அடிச்சிட்டு போனானுகன்னு பாத்தா, எல்லாத்திலேயும் போட்டிக்கு வாரனுக.. நீ அந்த மண்ணு போட்டாத்தா நம்ம பாசுமதி வெளைய வைக்க நல்லத்தன்னு சொன்னது னாலே , சண்ட போடாத கொறயா , ஏலம் பேசி எடுத்திருக்கு. அதிலேயும் பேர் பாதி அவனுங்க ஏதோ சூழ்ச்சி பண்ணி அவிங்க நிலத்துப் பக்கம் திருப்பிட்டானுங்க. பேரு தா பாரி.. இந்திரன்னு , எங்கடா அடிக்கலாம்னு இருக்கானுங்க " என சொல்லியவாறு இட்லியை உண்ணத் தொடங்க,

'பொட்டச்சி கத்துக்குட்டி' என்ற குரல் காதில் ஒலிக்க, புன்னகை சிந்தியவள், தண்ணீர் எடுத்து தட்டின் அருகில் வைத்தாள்.


உண்டவாறே, "கேரளாவில எல்லாம் ஆளுக்கு இத்தனை லோடுன்னு சொல்லிடுவாங்களாம், ஏத்துற, ஆள் கூலி மட்டும் பண்ணா போதும். இங்கே தா அதுக்கும் ஒரு வரி போடுதானுங்க. கொள்ளக்கார பயலுக.. இன்னும் இந்த புது பங்குக்காரனுங்க என்னென்ன பண்ண காத்திருக்கானுங்களோ, திரும்புன பக்கமெல்லா பிரச்சனையா கிடக்கு. " என பொறும,

"பிரச்சனைகள் இல்லாம வாழ்க்கை இல்லையே ப்பா.. நம்ம வேலையை நாம பார்ப்போம்.. அவங்கட்ட கவனமா இருக்கது நல்லது தான். அதுக்காக கவலப் பட்டுக்கிட்டே இருந்தா கூட நாலு முடி தான் நரைச்சுப் போகும்." என்றவாறு அவர் உண்ட தட்டை எடுத்துச் செல்ல உள்ளே நுழைந்தான் மகிழ் வேந்தன்.


"நீலு என்ன சமையல்?" என்றவாறே அமர்ந்தவன் கண்ணில் மாமனின் இரண்டாம் பெண்ணான தேவ மஞ்சரி பட, "என்ன டீச்சரம்மா நாளைக்கு நடத்த வேண்டிய பாடமெல்லா படிச்சுட்டியா.. போன செமஸ்டர்ல ஒன் சப்ஜெக்ட்ல தான் நிறைய பேரு ஃபெயிலாமே..?" என்றவாறு தட்டெடுத்து இட்லிகளை வைத்துக் கொள்ள, அவனை முறைத்தவள்,

"ஆமா இவுரு தா மனோன்மணீயம் யுனிவர்சிடி.. வைஸ் சான்ஸிலர்.. ஸ்டேட்டிஸ்டிக்ஸ் ரிப்போர்ட் வந்திருக்கு , கையெழுத்து போடும் போது விசாரிக்கிறரு.. மொதல்ல சர்வீஸ் கமிஷன் பரீட்சை பாஸ் பண்ற வழி பாருங்க. அப்புறமா எங்கிட்ட வம்பு வழக்குக்கு வாங்க." என எகிற..



" அட உண்மைய சொன்னா ஏன் குதிக்கற? நீலு , நீ வேணா அந்த எச்ஓடிட்ட விசாரிச்சு பாரு.. நான் சொன்னது ஆமாவா இல்லியான்னு.." என்றவாறு இடக்கையை நீட்ட,

அவன் கையிலிருந்த பையை சிரித்தவாறே வாங்கினாள் நீலாம்பரி.

"என்ன அத்தான்? வழக்கம் போல மருதாணியா.. ?" என்றவாறே பிரிக்க,


"ஆமா சட்டுபுட்டுனு அரைச்சு கொண்டு வா.. இந்த பார்த்தீனியம் களை செடிகளை அழிக்க உப்புப் போட்டு கரை.. கரைன்னு கரைச்சனா.. போன வாரம் வச்சது கலர் போய்டுச்சு.. அதான் ஃப்ரெஷ்ஷா பறிச்சிட்டு வந்தேன்.. ஏ மஞ்சு.. வாய் தான் இருக்கு. அத்தான் சாப்பிடும் போது பாட்டு போடனும் தெரியாதா? " எனவும் உதட்டைச் சுழித்தவள்.. எழுந்து ப்ளூடூத் ஸ்பீக்கரை ஆன் செய்ய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது,

" ஏ தந்தனதந்தன தந்தன தந்தா.. சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரப் போல வருமா…. அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா..". என அலறத் தொடங்க.. காதுகளை பொத்திக் கொண்ட மஞ்சரி

"மகிழ்வேந்தன்னு பேர் வச்சதுக்கு இராமராஜன்னு வச்சுருக்கலாம் ." என சொல்ல..



சிரிப்புடன் கெத்தாக காலரை பின்னால் தூக்கி விட்டு, இட்லியை ரசித்து உள்ளிறக்கியவன் , பாட்டு சத்தம் கேட்டு வந்து நின்ற தாயை நிமிர்ந்து பார்த்தான்.

" என்ன தாய்க்குலமே சாப்பிட்டீங்களா? சீரியலுல வெளம்பர இடவேளையா? எட்டியெல்லா பாக்குறீங்க.." என்றவாறு உணவுண்ண,

" இல்லைடா அந்த வில்லி மீனாட்சியம்மா இல்ல, அது ஸ்டெயிலா பாத்துட்டே இப்போ தான் படியிறங்க ஆரம்பிக்குது. அதான் அதுக்குள்ளாற அடுத்த ஈடு இட்லி ஊத்திட்டு, பொழக்கட பக்கமா , நாய்ங்கள அவுத்து விட்ரலாம்னு வந்தேன்." என்றவாறு வேகமாக சென்றார்.


"மொள்ளமா போங்க அத்த, அந்த மீனாட்சியம்மாக்கு ஒரு ஃபோன் கால் வந்தது, அத்தோட விளம்பர எடவேள விட்டுட்டானுங்க.." எனவும்.


"அட பாவிங்களா அந்த மாடிப்படி லொக்கஸனுலேயே இன்னிக்கு கதை முழுசாய் முடிச்சீருவானுங்க போலவே!" என அங்கலாய்த்தவாறு பின்புறமாய் சென்று வந்தவர்,

"அண்ணாச்சி நீங்க சாப்பிட்டு போட்டு, உறங்க போய்டாதீங்க உங்கட்ட ஒரு விசயம் பேசனும்னு உங்க மாப்பிள்ளை சொன்னாரு." என்று விட்டு அந்த பெரிய காம்பவுண்டுக்குள் இருந்த தன் வீடு நோக்கிச் சென்றார் .

தன் மகள் பாத்திரங்கள் எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கி செல்வதைக் கண்ணுற்று திரும்பி, தன் சின்ன மகள் தனது அறைக்குள் அமர்ந்து ஏதோ எழுதுவதைப் பார்த்தவர், " வேந்தா! வார ஆவணில ஒனக்கும் நீலாக்கும் நிச்சயம் போல வச்சிடலாமா? உன் பரீட்சை பாஸூ ஆகுறதெல்லா அப்புறமா பாத்துக்கிடலா" எனவும்,

ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தான், " ஏன் மாமா என்ன அவசரம், எனக்கு இருபத்தி ஏழாகட்டும், நீலுக்கும் வயசு இருவத்தி மூனு வந்திடும். என்று தானே சொன்னீங்க."


" ஆங். அது , நம்ம ஜோசியரு பாக்க போனேன். அவர் தா சொன்னாரு. நீலுக்கு கட்டாயக் கல்யாணம் ஆகற யோகம் இருக்காம். அது.. நாலாறு மாசம் கிரகம் வேற செரியில்லையாம்.. அதான் யோசனையா இருக்கு. "



நாயகன் ஆடுவான்..
 
Last edited:

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே நலமா! புதன் கிழமை வர்றேன் என்றுவிட்டு போனவள், வியாழன் நடு ராத்திரில நாயகனை ஆட விட்ருக்கேன்😁😁😁😁😁😁.. செவ்வாய் புதன் எழுதவே முடியலை.. இன்றுதான் ஓரளவு சமயம் வாய்த்தது.. இதோ பனனிரண்டு முப்பது வரை டைப் பண்ணி போட்டுருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.


வயலும் வயல் சார்ந்த மனிதர்களும் வச்சு , கிராமத்து பின்னணில கூட்டுக் குடும்பத்துக் கதை கொடுக்க தோனுச்சு. ஒன் லைன் செட் ஆச்சு , தொடங்கிட்டேன்.

உங்க அன்பின் ஆதரவும் ஆர்வத்தின் வழிகாட்டுதல்களும் என்னை செலுத்தி எழுத வைக்கட்டும் என்ற வேண்டுதல்களுடன் கதையை ஆரம்பித்துள்ளேன்.

குறை நிறை பகிர கருத்துத் திரி

வாரம் இரு பதிவுகள் கொடுக்க எண்ணியுள்ளேன். காலமும் சூழலும் அதை சாத்தியப் படுத்தட்டும். விரைவில் சந்திப்போம்.

லவ் யூ ஆல் 💕💕💝💝💝🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
உ ப்பா…

NPNN 2


"மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு… உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு.. "


ஜீப்பில் இணைக்கப்பட்ட ஒலி பெருக்கி தன்னால் இயன்றளவு சத்தமாய் பாடிக் கொண்டிருக்க, இலைக்கட்டுகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. எலுமிச்சை, நெல்லிக்காய் , கொய்யாப்பழங்கள் என நிரம்பிய மூட்டைகள் அடுக்கப் பட்டிருக்க , அவற்றைத் தன் கையில் இருந்த சீட்டில் குறித்தவாறு மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் மகிழ் வேந்தன்.

வாய் என்றவோ, மாங்குயிலே பூங்குயிலே பாடலுடன் இணைந்து சன்னமாய் பாடிக் கொண்டிருக்க.. மனமோ நேற்று வீட்டில் நடந்த நிகழ்வுகளில் லேசாக பரபரப்புற்று இருந்தது.

திடீரென மாமன் கல்யாணம் என்று சொன்னதும், அப்போது வந்த தாய் தகப்பன் அதையே ஆதரிப்பது போலப் பேசியதும், முழி பிதுங்கி விட்டது. அனுபவத்துடன் இணைந்த படிப்பறிவும் கை கொடுக்க தொழிலில் ஓடத்தொடங்க வேண்டிய வேளையில், கால்கட்டு போட்டு உட்கார வைக்கப் பார்க்கிறார்களே என்று யோசனையுடன் பார்க்க, நல்லவேளையாக அம்மச்சி உலக நாயகி வந்து போட்டாரே ஒரு போடு..

"ஏனய்யா! அதாம் ஆறு மாசம் நேரம் நல்லால்லங்கேல்ல, அப்புறம் இந்த நல்லது மட்டும் செஞ்சா சரிவருமா.. வெசனமா இருந்தா குல தெய்வம் கோயிலுக்கு ஒரு நடை போய்வா. நம்ம ஊருணி அய்யனாருக்கு ஒரு பொங்க வையி.. நல்ல நேரம் வந்தபின்னே நிச்சயமென்ன? கண்ணாலமே வச்சிடலாம்." எனவும்,

கல்யாணாமா.. என லேசாக அதிர்ந்தாலும், ஆமா என்றும் இல்லாமல் இல்லையென்றும் இல்லாமல் வட்டமாக தலையை ஆட்டி வைத்தான்.


'கல்யாணம்!!!
அவனின் ப்ரியமான நீலு.. இதுதான் அம்மா, அப்பா அம்மச்சி என்று சொல்லி வளர்க்கப்பட்டது போல, அவள் பிறந்ததிலிருந்தே பொண்டாட்டி என்று சொல்லி வைக்கப்பட்டவள்.. மிக இனிமையான தோழி. அவனின் கோமாளித்தனங்களை ரசிப்பவள், எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பவள். ஆனாலும் கல்யாணம்!! இரு குடும்பத்திலும் தலை மக்கள், பொறுப்பு, பொறுப்பு என்று ஊட்டி வளர்க்கப் பட்டவர்கள். பாசமும் நேசமும் வாஞ்சையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டாலும்… பாடலில் தலைவன் சிலாகிக்கும் அந்த வஸ்து, உணரப்படவே இல்லியே!' என்று எண்ணங்கள் பரவ,

சிறு முறுவலுடன்
"கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா,
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா..'" என்று பாடியவாறே , உரித்த தேங்காய்களை எண்ணியபட ஏற்றும் வண்டியை நோட்டமிட்டவன், லேசாக விரிசல் விட்டு கசிந்து இருந்த காய்களை எடுத்துத் தனியே எறிந்தான்.

"ஏ முத்து, அதையெல்லா ஒடச்சு, தேமோரு தயாரிக்க இடத்துக்கு அனுப்பு." என்றவாறு எலுமிச்சை மூட்டைகளை எடை பார்க்க தூக்கியவனின் காதுகள் பழக்கமான ஒலியினால் கவரப்பட எட்டிப் பார்த்தான்.

நீலாம்பரிதான்.


வழக்கம் போல பகல் நேர வயல் வேலைகளை மேற்பார்வையிட வந்து விட்டாள் போலும். மஞ்சள் நிறத்தில் சன்ன சரிகையிட்ட சுடிதாரில் கண்களைக் கொள்ளையடிக்க, அலட்டலின்றி நடந்து வந்து கொண்டிருந்தாள். கையில் அவனுக்கான உணவுக் கூடை.

'வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி.' என சரியாக பாடி உசுப்பேற்றினார் பாலு.

அவளோ இயல்பாய் தலையிலிருந்த துப்பட்டாவை எடுத்து தோளில் இட்டு சரி செய்தவாறு, இறைபட்டுக் கிடந்த பொருட்களைப் பார்த்து விட்டு,

"என்ன அத்தான் இன்னும் சந்தைக்கு வண்டி கெளம்பலையா? " என்றவாறே அவன் எலுமிச்சை மூட்டையை எடை பார்க்கும் பலகை மேல் ஏற்றுவதைக் கவனித்து வேகமாக வந்து மூட்டையின் அளவு பார்த்து, அனுமானமாய் எடைக்கல்லை எடுத்து வைத்தாள்.


தலையசைத்தவன், "இதோ நீலு.. இன்னும் ஒரு அரைக்கிலோ கல்லு வையி.. தோ.. இதெல்லாம் எடை பார்த்து ஏத்திட்டா அனுப்பிடலாம். " என்று சரிபார்த்து கணக்கை எழுதியவன்,


"ஏன் நீலூ திருநெல்வேலி போகனும்னியே வர்றியா எனக்கும் கலெக்டர் ஆஃபீஸ்ல வேல இருக்கு, அப்படியே சந்தைக்கு போயிட்டு வரலாம். இன்றைக்கு நாட்டு மாடுங்க விற்பனைக்கு வருதாம். " என்றவனை சிறு சிரிப்புடன் பார்த்தவள்,

"உள்ள மாடுங்களை பாக்கவே ஆளு கெடைக்காம திண்டாடிட்டு கெடக்கோம். இன்னும் மாடு எதுக்கு ? உங்க ஆளு பாடுன செண்பகம் போலவே மாடு, கன்னுக்குட்டினு தேடுனா கிடைக்குமா.. " எனவும் பற்கள் தெரிய சிரித்தவன்,

"ப்ச்.. அதுக்கா இல்ல, நிசம்மாவே பாவநாசம் சந்தைக்கு நல்ல ஃபார்ம்கள்ள வளர்த்த நாட்டு மாடுங்க வருதாம் . ஒனக்கு தெரியும் தானே. நம்ம ஆர்கானிக் ஃபெர்ட்டிலைசர்ஸ் தயாரிப்பில நாட்டு மாடுங்க தர்ற உரம் வேற ஏதும் தராது. மூனு மாசம் முன்னே அப்பா வாங்கின மாடு தோதில்ல கேட்டியா, பாலும் போடற தீனிக்கு தக்க இல்ல , ஈத்துக்கு(சினை பிடிக்க) விட்டும் ஒன்னும் தேறல.. " எனவும்


ஆமோதிப்பாய் தலையசைத்தவள், "நீங்க போயிட்டு வாங்க அத்தான், இங்கே கொடிக்காய்கறி பந்தலுக்குள்ள வேல இருக்கு. பிஞ்சு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. துணி போட்டு மூடறது, கவாத்து பண்றது கல்லு கட்டி விடறது பாக்கனும். இன்னைக்கு நம்ம கோழிங்களுக்கு தீவனத்துக்கு அஸோலா பெட் வேற ரெடி பண்ண போறேன். ஆங், தேங்கா மண்டில பணம் இன்னிக்கு தருவாங்க. நாம யோசிச்சது போலவே கருங்கோழி அஞ்சும் இரண்டு சேவலும் வாங்கியாங்க.. "

"ஓ இன்னிக்கா? அசோலா பெட் தனியா பண்ணிடுவியா. முத்துக்கு அவ்ளோ வெவரம் காணாது. நாளைக்கு பண்ணலாமே.. நா ஃப்ரீ தான்."

"ஆங் அப்படித்தா சொல்வீங்க. அப்புறம் வீஏஓ பாக்கனும், தாசில்தார்ட்ட கையெழுத்து வாங்கனும் கெளம்பீருவீங்க. செந்திலண்ணே இருக்காருல்லா.."


"இருக்கே இருக்கே.. செந்தில் இருக்க பயமேன்." என்று சொல்லியவாறு இளநீர் குலையை தொப்பென்று போட்டவன்,
"ஏலே முத்து! இந்த எளநீ நாலு வெட்டுடே.. தாகத்துக்கு குடிப்போம்.. எப்பா ஆனி மாசம் என்னா வெயிலூ... " எனவும்,

கையிலிருந்த துண்டால் ஒரு போடு போட்டவன், "என்னா வேல செஞ்சு சாச்சுட்புட்டவே, எளநீ குடிக்க கிளம்புத?"

அங்கே வந்த சொர்ணா, "நல்லா கேளுங்கண்ணே. கரும்புக்குள்ள களையெடுக்கற ஆட்களோட வாய்ச்சவடால் பேசி வேலையத்தா கெடுத்தாக.. ஊருணில சின்னப்பயலுவ மீனு புடிக்கானுங்க. அவங்களோட சத்த நேரம் ஆட்டம்.. ஒரு வேல பாக்கல. " என்றாள்.

அவளை முறைத்த செந்தில், "ஏம்மா சொர்ணாக்கா.. நீ களையா வெட்டுன? நீ பாக்க வேலைக்கி மூலிக தேத்திட்டு கிடந்த. வேந்தா, அங்கால பாரு, இரண்டு ஒரப்பையி நெறய சேத்தி வச்சிருக்கா.. நா ஒருத்தே இல்லைன்னா ஒன் நாலு வேலி வெள்ளாமைக் காட்ட ஆரு காபந்து பண்ணுவா.. இப்ப கூட அவசரமா நா ஒங்கிட்ட சொல்ல ஓடி வந்தே, அந்த க்ருஷ்ணா கேட்ஸ் பசங்க இல்ல, அய்யனார் கோயில் எடத்தில நிக்கிறானுவ.. என்னவோ புழுதி ஓட்டப் போறவனுங்க மாரி குறுக்கால நெடுக்கால நடந்துட்டு திரியறானுங்க. பாழடஞ்ச கெணத்த எட்டி எட்டிப் பாக்குறானுவ.. வா வந்து என்னான்னு கேளு. "


கண் மூடித் திறந்து ,ஹூம் என்று மறுப்பாய் தலையசைத்தவன், "இந்த வருசம் ஏலத்தில அவனுங்க தா அந்த இடத்தை எடுத்திருக்கானுங்க.. "

அதிர்ச்சியான செந்தில், "அப்படியா , இந்த கொடும எப்ப நடந்தது. இரண்டு வருசமா தண்ணியில்ல, இந்த வட்டம் கோட மழ பெஞ்சு கண்மால தண்ணீ வந்திருக்கு. கோவிலு ஒட்டி நெல்லு போடலாம்னு பேசினோமே , எல்லாம் போச்சா.."

நீலாம்பரி, "நான் கூட அக்ரி ஆஃபீஸ்ல இருந்து தக்கைப்பூண்டு வெத வாங்கிட்டு வந்தே அத்தான். இன்னிக்கு ஒரு உழவு போடச்சொல்லி வெதக்கனும்னு.. வரப்போரம் நட அகத்தி கீர வெத கூட.."

தலையசைத்தவன், "வேணாம் விடு நீலூ.. நம்ம பூர்விக நெலம் மேக்காம இருக்கில்ல , அதை ஒழவு போட்டு பண்ணிக்குவோம். சொர்ணம், நீ நீலு கூடமாட ஒத்தாசையா இரு, அசோலா பெட்டு போட.. இவன் ஏதும் சொதப்பாம பாத்துக்க.."

ஆச்சரியமான குரலில், "என்னா மாப்பிள்ள வெளாடுறே. காட்டுல எதுக்கடா பெட்டு?" என்றவனின் பொடனியிலேயே ஒரு அடி போட்டவன்.

"ஏ கூவ, சத்தமா பேசாதடா, கால்நடத் தீவனத்துக்கு அசோலா பாசி வளக்க, தார்ப்பாய் துணில கொளம் போல ரெடி பண்ணிப் போடனும். அதாம்லே பெட்டு.."


ஆங் என்று விழித்தவன், "அதா, அம்மாம் பெரிய கம்மா இருக்கே , எதுக்கு சின்னதா குளம் தோட்டத்தில கட்டனும், அந்த கம்மாயில போட்டா என்ன?"எனத் தலையைச் சொறிய,

"ஏலே.. அதுக்கு வெயிலு ஆவாதுடா.. ப்ச் ஒனக்கு பாடம் எடுத்து முடிக்காங்க காட்டியும் சந்தையே முடிஞ்சு போகும் போடா. எம்மா மூலிக ராணி சொர்ணா, இவனுக்கு கூறு வளருதுக்கு ஏதாச்சும் மூலிக இருந்தா அரச்சு ஊத்து.. எனக்கு சோலி கெடக்கு கிளம்புதேன்.." என்றவன் ஜீப்பின் ஓட்டுனர் இருக்கையில் தாவி ஏறியமர்ந்தான்.

மற்ற வண்டியின் ஓட்டுனர்களையும் பெயரிட்டு அழைத்தவன், நீலாம்பரியிடம் தலையசைத்து விட்டுக் கிளம்பினான்.


சுற்றுப்புறத்தையே கிடுகிடுக்க வைக்கும் ஒலி எழுப்பியபடி அந்த ஜீப் நகர,

" இந்த சவுண்டூ பார்ட்டீ ஜீப்பூ மாத்துன்னா கேக்க மாட்றான்.. எம்மா நீலாம்பரீ, உன்ட்ட ஒரு கேள்வியும் கேட்கலம்மா.. நீ காலால இட்ட வேல நா தலையால செய்யறே சொல்லு நா , என்னாம்மா செய்யனும். " என கேட்கவும்,

சொர்ணா வாய் பொத்தி சிரித்து,
"எப்படி நீலா, காலால சைக்கிள் ஓட்டுற வேல சொன்னா நீ தலையால நின்னு ஓட்டுவியா..?" எனவும்


முறைத்தவன், "ஏ மூலிக சிகாமணி, நீ போய் மருந்து தேத்துற வேல பாரு, இங்க எந்தங்கச்சி சொல்ற வேல எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும் . போம்மா.. போஓஓஓஓ.." என கை நீட்டி சொல்ல,

"அதா வேந்தண்ணே செல்லிட்டாகளே.. நீ சொதப்பாம பாத்துகறது தா, அதாவுது ஒன்னிய மேற்பார்வ பாக்கத்து தா என் வேலையே.." என சொல்லியவாறு கெத்தாக அங்கிருந்த மூட்டை மீது அமரப் போக,


நீலாம்பரி கையில் ஒரு பையை எடுத்தவாறு, "அண்ணே இந்த மூட்டைங்கள்ல தா அஸோலா பெட்டு போட பையிங்க இருக்கு.. எல்லாம் தூக்கிட்டு மேக்கால காட்டுக்கு போலாம்." எனவும்,


அவசரமாய் சொர்ணாவின் பக்கம் வந்தவன், "ஆங் மொதல்ல இந்த ஆவாத மூட்டைய இழுத்து கடாசுறேன்."என்றவாறு தூக்கச் செல்வது போல பாவனை செய்ய,

"ம்க்கும்.." என்று நொடித்தவள், சட்டென்று எழுந்து ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.


நீலாம்பரி, "ம்மோவ், நேராப் போ. அஸோலாக்கு நிழல் வேணும்னு.. கோழிப் பண்ணைல ஒரு குழி விட்டு வச்சிருந்தோம்ல அங்கன தா இடம் ஒதுக்க சொல்லிருக்கே,. முத்து வாங்க ஆளும் பேருமா எடுத்து போய்டலாம்."


செந்தில், "அட நீ எதுக்கு.. நானும் இந்த மூலிக ராணியும் இரண்டு நடையா எடுத்தாறோம். நீயி போய் ஒன் வழக்கம் போல சாமிய கும்பிட்டு, கோயிலுக்கு எதுக்கால உள்ள நிலத்துல கத்தரிக்கு தண்ணீ பாச்சீருக்கானுவாளான்னு மட்டும் ஒரு எட்டு பாத்திட்டும் வந்துடு." என்றவாறு மூட்டையினைத் தூக்கினான்.

"ஆ.. சரிதாண்ணே, இதோ பத்து நிமிஷத்தில வந்துடறேன், அங்கே கோயிலு நிலத்துப் பக்க கொடவுனுல தா விதைங்க இருக்கு , எடுத்துட்டு வந்திடறேன்.." என்றவாறு நடக்கத் தொடங்கினாள்.


கோவில் அருகே க்ரூஷ்ணா கோட்ஸ்காரர்களின் வாகனம் தெரிந்தது. எங்கே ஆட்களைக் காணோம் என்று சுழற்றிய பார்வையில் புங்கன் மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்த ஆட்கள் தென்பட்டனர்.

'அப்பா ஓரமாத் நிக்கிறானுங்க. மூஞ்சில முழிக்காத ஓடி போய் சாமி பாத்துட்டு நம்ப வேலைய பாக்கலாம்.' என்று எண்ணியவள் , கொண்டு வர வேண்டிய பொருட்களை யோசித்து பண்ணை வேலைகளுக்கான டிவிஎஸ் வாகனத்தை எடுத்தாள்.

பெடல் சுழற்றி வண்டியை கிளப்ப, உடலில் ஏனோ குறுகுறுப்பு தோன்றியது. சரிதான் எவனோ பார்க்கிறான் என்று முணங்கியவளாய் துப்பட்டாவை சரியாக இட்டவாறே, பார்வை கூட அப்புறம் திருப்பாமல், மெதுவாய் வாகனத்தை செலுத்தியவளிற்கு வேகமாக அடித்த காற்றில் சில வார்த்தைகள் காதில் வந்து விழுந்தன.

"பல மாசமா ஒழவில்ல, ஏக்கருக்கு இரண்டாயிரம். ஒரு வாரம், பத்து நாள் ஓட்டனும்பா.. அப்படியே ஓட்னாலும் உடனே எல்லாம் வெள்ளாம வைக்க முடியாது. செல மாதம் ஏதாச்சும் தழச்சத்து பயிரு போட்டு ஆறப் போடனும்.." என்று கூறும் ஒலியில் நின்று திரும்பிப் பார்த்தாள்.


'ஆருடா அந்தக் களவாணி.. பல மாசமா பொழங்கல, புழுதி ஓட்ட இரண்டாயிரம் கொரூவானு சாலடிக்கது?' என வியப்புடன் பார்த்தாள்.


'ஓ இந்தஆளா பாவநாசத்தை சேர்ந்த ஆள், வேலையும் சுத்தம் கிடையாது, ஆளும் சரி கிடையாது. ' என்று தகப்பன் திட்டி துரத்தியதை பார்த்திருக்கிறாள்.

பக்கத்தில் கை கட்டியவாறு அவன் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவனையும், திரும்பியதும் தன்னைப் பார்த்தும் புன்னகை மன்னனாக மாறும் ஒருவனையும் கண்டவள், சட்டென்று பார்வை விலக்கி கோவிலை நோக்கித் தனது வாகனத்தை செலுத்தினாள்.

வண்டியோடும் பாதை எனினும் ஏற்றமும் இறக்கமுமாய் இருந்த பாதையில் குதித்து குதித்து செல்வதைக் கண்டவனின் உதடுகள் ஏளனமாய் வளைந்தன.

"இருநூறடி தொலவு நடக்க ஏலாம , வண்டில குதிச்சு குதிச்சு போறதப் பாரு." என உதடு முணுமுணுக்க,

"ஒத்தையடிப் பாதையில என்னா அழகா வண்டியோட்றா, என்று அதையே வேறு மாதிரியாய் சொன்னவனை முறைத்த பாரி நடந்தவாறே,

"ப்ச்.. பெரிய சாதனை தாம்லே, ஆமா, இந்தாள எங்கே புடிச்ச? பாத்தா நம்பிக்கையா தெரியல ஏதோ ஆயிரம் வேலி கட்டிப் போரடிக்க ஆனையக் கூட்டி வரப்போறவேம் போல கூலி சொல்றான். டேவிட்டு கிட்ட சாரிக்கலாம். ஏதும் ஆள் பழக்கமிருக்கா எண்டு.. இவன போச் சொல்லுடே. நாம இங்கன மேற்பார்வைக்கு எவனாச்சும் அக்ரி படிச்சு ரிட்டையர் ஆன ஆள் கிடைக்கிறாங்களா பாப்போம்." என பேசியவாறே ஏறி பாதை நடுவில் வந்திருந்தனர் இரு சகோதரர்களும்.

"இல்ல நீ மொத சொன்ன ஐடியாதா கரெக்ட்டு டேவிட்டு கிட்ட வேல பாத்தவங்க இல்ல, இந்த இடம் வெள்ளாம பத்தி தெரிஞ்ச இந்தூருக்காரங்க தான் சரி வரும். " என்று இந்திரன் நேரத்தில் ஹாரன் ஒலி கேட்க, சிறு சினத்துடன் திரும்பிப் பார்த்தான் பாரி.

டிவிஎஸ் வாகனத்தின் முன்னாலும் பின்னாலும் ஏதோ மூட்டைகள் வைக்கப் பட்டிருந்தன. கால் கூட ஊன்ற இயலா நிலை.

அதனால் தான் நகரச் சொல்லி ஒலி எழுப்பி இருப்பாள் போலும்.

பாதை விட்டு சற்று நகர்ந்தவன், வரப்பு விட்டு இறங்காமல் ஓரமாகவே நிற்க,
அவனுக்கு ஒரு அடி முன்பே நிறுத்தித் தடுமாறி காலூன்றினாள்.

அவள் கடக்க முயன்றால், அவளின் பின்னால் இருக்கும் பொதி நிச்சயம் அவனை பதம் பார்த்திருக்கும்.. எரிச்சல் வந்தாலும் அமைதியாக, இறங்கியவள் , ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு மேலேயே வைத்திருந்த ஒரு பெரிய பையைத் தூக்கி கீழே வைத்தாள்.


பாரியின் முன் வந்தவள் ஒரு பெருமூச்சு விட்டு சீர் செய்தவளாய், தணிந்த குரலில்,

"காட்டை வாங்கிடலாம் வெள்ளாமைய வாங்க முடியாதுங்கறது சரிதான் போல.. அந்தாளு சொல்றாப்போல ஒழவும் தேவையில்ல, காத்திருக்கவும் வேணா. போன வாரந்தா ஒழவு அடிச்சோம். அடுத்து பெஞ்ச மழேல இறுகினாப் போல தெரியுது. இன்னும் இரண்டு முறை மட்டும் ஓட்டிட்டு இந்த தக்கைப்பூண்டு விதைங்களப் போட்டு விடுங்க.. இது இந்த குழிக்குன்னே வாங்கினது. நாளைக்கு மழை வரும். அதுக்குள்ளே இதை போட்டுட்டா நல்லா தளைச்சு வளர்ந்துடும் . அடுத்து அம்பதாவது நாள் மடக்கி உழுதுட்டா , அடுத்து இங்கே நீங்க நெல்லே போடலாம். அமோகமா விளையும். " என்றவள் சற்றே நிறுத்தி,
"கத்துக்குட்டி சொல்றத நாம ஏன் கேட்கனும்னு இருந்தா ஒங்க அக்ரீ ஆஃபீஸருட்ட கேட்டுட்டு கூட வெதைக்கது பண்ணுங்க. பக்கத்து காட்டுக்காரங்களா போயிட்டீங்க. ஒரு ஒதவியாத்தான் பண்றேன். விதைக்கு காசு கூட வேணாம்." என்றவள் நகர எத்தனிக்க


"இந்திரா.." என்று அழைத்தவன், "நாம ஒன்னும் சும்மா வாங்கற பரம்பரையில்ல.. விதைக்கு எவ்ளோன்னு கேட்டுக் கொடுத்திட்டு வாடே.. "
என்றுவிட்டு தம்பி கையில் ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றை கொடுத்து விட்டு தன் வாகனம் நிறுத்தி இருந்த கோவில் புறமாய் நடக்க,

"என்ன பாரி வள்ளல் பரம்பரையோ ஐநூறு ரூவா விதைக்கு , ஐம்பதாயிரம் கட்டு நீட்றாரு உங்க அண்ணாச்சி.." என சிறு சிரிப்புடன் கேடடாள்,

தன்னுடன் பேசியவளின் இயல்பில் குதூகலமானவனாய், "ஹய்யோ எப்படிங்க கரெக்டா சொன்னீங்க , அவர் பெயரு அதான்.. பாரி வேந்தன் .. நான் காரி இந்திரன்." என்று சொல்லவும் திரும்பி ஒரு முறை பார்த்தவள்,

"ஓ நா சொன்னாப் போல, வள்ளல் பரம்பரை தானோ நீங்க! " எனவும்,

ஹா ஹா என்று சிரித்தவன், "அது நிச்சயமா இல்ல, கிருஷ்ணா கோட்ஸ் தொடங்கும் முன்னே, விவசாயம் தா எங்களுக்கும்.. இந்த நெலமெல்லா ஒரு காலத்தில எங்களுது.. அப்போ விட்டத புடிக்க வந்திருக்க பரம்பரை." என்று சொல்லவும்,

"ஓ.." என்றவள், "விதைங்க ஐநூறு ரூபா தா, முன்னே பின்னே விவசாயம் பத்தி தெரிஞ்சவங்க யாரையாச்சும் பக்கத்தில வச்சிட்டு புடிங்க. சின்ன புள்ளைங்க வெள்ளாம வீடு வந்து சேராதுங்காப் போல ஆகிடாம.."
என்றவாறு தன் வாகனம் அருகில் சென்றவளைத் தொடர்ந்தவன்,

"அப்புடியெல்லா வுட்ர மாட்டோம், அதும் இது ஒரு சேலஞ்ச் வேற... ஆங் உங்க பேரு?" என்று இழுத்த நேரத்தில்,

"இந்தர்.. " என தமையனின் சத்தம் கேட்டதும்

"ஓகே , இனிமே இங்க தானே, அடிக்கடி பாக்கலாம்.." என்றுவிட்டு வேகமாக அழைப்பொலி வந்த திசையில் நடந்தான்.




நாயகன் ஆடுவான்..
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே!

கடல் தாகம்ல குறிஞ்சி நிலம். நீ வேறு நான் வேறுல நெய்தல் அந்த சீரிஸ்ல நீலப் பெருவெளியில் மருத நிலம் அதன் மாந்தர்கள் இயல்புகள் வச்சு ஆரம்பிச்சேன். கதை போக்கு பிடித்திருக்கிறதா? கதை மாந்தர்களை பற்றி புரிந்து கொள்ள முடியுதா.. கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..





ஓகே இப்போ எஸ்ஸே😁😁😁😁😁😁
இப்ப விட்டால் கதை எழுதறது இனிமே சாத்தியப் படாமலே போயிடுமோ என்ற பயத்தில் எழுத ஆரம்பிச்சேன். சூழ்நிலைகள் சூழ நின்னு கும்மியடிக்குது. இந்த ஒர் வருடத்தில நிறைய பொறுப்புக்கள் வேற கூடி போச்சுது.

தனியா உட்கார , யோசிக்க நேரமே கிடைக்காத சூழல். முன்பெல்லாம் இரவு ஒரு மணி வரை தொந்தரவேயில்லாம எழுதுவேன். இப்போ பத்தரைக்கெல்லா தூக்கம் வந்திடுது.😅😅😅😅😅😅
கொஞ்சம் கொஞ்சமா டைம் செட் பண்ணிட்டு இருக்கேன். அடுத்த அத்யாயம் புதன் கிழமை கொடுக்க முயற்சி பண்ணுவேன்.

லவ் யூ ஆல் 💕💕💕💕💝💝💝🥰🥰🥰🥰🥰
 

தாமரை

தாமரை
உ ப்பா…

NPNN 3

ம்மா… என்ற அழைப்புக் குரலுக்கு துணைக் குரலாய் இன்னோரு ம்ம்மோ…. என்று கேட்க,

சீரியல் பார்த்தவாறே இரவு உணவுக்கான காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருந்த வாசுகி, அவசரமாய் வெளியே வந்து பார்த்தார் .


அவர்களின் பிஞ்சையில் வேலை செய்யும் ஆட்கள் தான்.. ஒரு மாட்டையும் இரு கன்றுக் குட்டிகளையும் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தனர்.

இவரின் தலை தெரிந்ததும் பண்ணையாள்,
"இன்னிக்கு சந்தைல புடிச்சது. மாட்டுக் காடி தொறந்து வுடுங்கம்மா, கட்டனும் . " எனவும் ,

ஆணியில் மாட்டி இருந்த சாவியை எடுத்தவாறே, மாலை மங்கி இரவு வரத் தொடங்கிய வெளிச்சத்தில் உற்றுப் பார்த்து வாசுகி,
"என்னாது இது .. பசு இரட்டை குட்டிங்க போட்ருக்கா என்ன?" எனக் கேட்டவர், இன்னுமும் நன்றாக உற்றுப் பார்த்து, "இல்லையே சாயல் ஒன்னு போல இல்லியே.. " என்று சத்தமாய் கேட்க,

இரண்டவது கன்றைப் பிடித்து இருந்தவன், "ம்மா.. இதும் மாடுதான். இது சைசே இம்புட்டுத்தான். இந்த செவலைங்க காங்கேயம் போல இது புங்கனூர் நாட்டு ரகம், பாவநாசம் சந்தையில வேந்தன் புடிச்ச மாடுங்கம்மா.. எனவும் தலையிலடித்துக் கொண்டவர் ,

"எத்தனை பல் ( வயது கண்டு பிடிக்க), எத்தனாவது ஈத்து (பிரசவம்)?" என விசாரித்து பதில்கள் திருப்தியாய் வந்து விழுந்ததும், விலை பற்றி கேட்க, அவன் சொன்ன விலை கேட்டு அதிர்ந்தார்.


"என்ன இவனென்ன நாட்டு மாட்டுப் பண்ணை ஏதும் வைக்கப் போறானா.. எதுக்கு இவ்ளோ விலை கொடுத்து மாடு.."

"போறானா என்ன ??!! அதா ஏற்கனவே வச்சாச்சே.. மாட்டுக் காடில போய் எண்ணிப் பாருங்க அத்தே.. பதினைஞ்சு பதினெட்டு உருப்படி தேறும்." என்றவாறு வந்தாள் தேவ மஞ்சரி.


வந்தவள் அந்தி மாலை வெளிச்சத்தில், அவளின் இடுப்பளவு விட குறைவான உயரமே இருந்த மாட்டைக் கண்டு ஆச்சரியம் மிக அருகில் சென்றவள், "இதுக்கு மேல இது வளராதா?" என்றவாறு தொட்டுப் பார்க்க முயல, தலையை வேகமாக சுழற்றி அவளை மிரட்டியது.

"ஹூம் என்ன விட குள்ளமா இருந்துட்டு சிலுத்துக்கிற.." என்று ஒரு தட்டு தட்டினாள் .


பண்ணையாள், "ம்மா பாக்கத்தான் சிறிசு.. வயசு மூனு வருஸமாம்.. இதோ இந்த செவலப் பசுவும் கன்னுக்குட்டியும் உள்ள அதே வெல இது.. உசரம் இரண்டடி கூட இல்லை.. சுழி ஏதும் இல்ல.. ரொம்ப சுத்தம்.."

ஆங்.. என்றவாறு உற்று நோக்கியவள், அதன் கரிய நிறக் கண்களை பார்த்து "இது செம்ம அழகு வேற, அதான் போல.." என்றுவிட்டு லேசாக திமிலை வருடினாள்.


வாசுகி, "அழகா சோறு போடும்.. ஏன்டா இது பாக்க கிடா(காளை) போலருக்கே, ஒத்தையா என்னத்துக்கு வாங்கினான் அந்த பொச கெட்ட பய?" என்று சொல்லிய வேளையில்,

டுட் டுட் என்ற ஒலியெழுப்பும் ராக்கெட் சைலன்ஸர் அதிர வந்து வாகனத்தை நிறுத்தினான் மகிழ் வேந்தன்.

டுப் டுப் ஒலியில் ஊய்ங் என்ற காதை பொத்திக் கொண்ட மஞ்சரி, "எங்கே வந்தாலும் ஒரே கூப்பாடு தா.. நாய்ஸ் பொல்யூஷன் பண்ணிட்டு.. ச்சே." என்று சலித்தவாறு திரும்ப,


சாவியால் திருப்பி எஞ்சினை நிறுத்தியவன்,
"ஏ மஞ்சரி, சத்தமில்லாத போயிட்டு வர நா என்ன பூனைக்குட்டியா.. புலிக்குட்டி.. திருநெல்வேலி சீமைக்காரனாக்கும்.. " என்றவாறு மீசையை மேலேற்றியவன் கறுப்புக் கண்ணாடியை கழற்றி பாக்கெட்டில் வைக்க,

"புலியா.. யானைன்னு வேணா சொல்லலா.. அதும் வெங்கலக் கடைக்குள்ளே புகுந்த யானை.." என்று முனங்கியவள் நகரவும்,

அவனின் தோளில் தட்டிய வாசுகி, "ஏம் புலி, கொள்ள வெலைக்கு இந்த கன்னுக்குட்டி சைசு மாட்டுக்குட்டி எதுக்கு வாங்கினேன்னு முதல்ல சொல்லுலே. வர வர ஒஞ்சேட்டைக்கு அளவில்லாத போயிட்டுருக்கு கேட்டியா, அப்போ.. மாமா பாத்தா நல்லா திட்டு வாங்கப் போற.. "

"எம்மா, ஏன் திட்டு, இதெல்லா சேவைம்மா சேவை.. நாட்டு மாடுங்கள காங்கறதே இப்போல்லா முடியாத போயிடுச்சு.. அதெல்லா அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரு.. அவரு தானே பசு ப்ரியரான, காளையை பாட்டு பாடி அடக்குன நம்ப தலைவருக்கு மொதோ ஃபேனு.." எனவும்

தோளில் கிள்ளியவர், "ஏலே…அப்பா இல்லலே, மாமா.. "

"மாஆஆமா... அது அவரும் திட்ட மாட்டாரே.. " என்றவன் மஞ்சரி நகர்ந்து சென்றதை உறுதி செய்து கொண்டு, அன்னையின் அருகில் சென்றவன், "இந்த மாட்டு எரு போட்டாத்தா பாசுமதி நல்லா விளையும்னு ஏற்கனவே அவரிட்ட முடுக்கி விட்டாச்சு.." என்றுவிட்டு காலரை பின்னால் தூக்கி விட்டுக் கொண்டான்.


"என்ன போட்டா என்ன நல்லா வெளையும் மருமகனே " என்றவாறு திதிடுமென பின்னால் வந்து நின்ற பெரிய மாமா நெல்லையப்பரை கண்ட மகிழ் வேந்தன், அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாதவாறு,

"அது அது மாமா.. இந்த மாடு , மாடு இல்ல.. இது.. நாட்டு மாடு.. ஆங்.. நம்ப நந்திகேசர் மாறியே இருக்கு பாருங்களேன்.. சிவன் சன்னதில முன்னால இருக்க நந்திகேசுவரர் போலவே.. ஆங் அந்த மாட்டுக்காரன் கூடச் சொன்னான் மாமா.. திருப்பதில வெங்கடாஜலபதிக்கே இந்த ரக மாட்டுப் பால் வச்சுத்தா அபிஷேகம் பண்ணுவாங்களாம். இந்த மாடு வீட்டில இருந்தா பெரிய யோகமாம்.. நிறைய நல்லது நடக்குமாம். நம்ப சின்ன மாமா வேற, ஜாதகம் பாத்துட்டு வெசனமா இருந்தாரா.. அதா.. இது வந்த வேள நல்லாருக்கட்டும்னு வாங்கிட்டேன். " எனவும்


உடல் முழுதும் சிவ சின்னங்கள் அணிந்த பெரும் பக்திமானான நெல்லையப்பர் முன்னால் வந்து அண்ணாந்து வெள்ளெழுத்துக் கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தவர், "ஆமா.. நல்ல லட்சணமா என்னப்பன் வாகனம் போலத்தா இருக்கு," என்றவர் ஆமென்பது போல தலையசைத்த அதன் நெற்றி தொட்டு கும்பிட்டு விட்டு உள்ளே செல்ல,


'ஊஃப்..' என்று பெரு மூச்சு அம்மையும் மகனும் சேர்ந்து விட்டனர்.

கிசுகிசுத்த குரலில், "பெரிய அண்ணாச்சிட்ட மாட்டினேன்னே நினைச்சே, எப்படிரா மவனே.. ஆனாலும் நீ அறிவுக் கொழுந்து தான், போ.. " என்றவர்.. மசூதியிலிருந்து வந்த துவா ஒலியில், அய்யாய்யோ.. அஞ்சாச்சா, ******** போடற நேரமாச்சி." என்று ஒரு சீரியல் பெயரைச் சொல்லி விட்டு உள்ளே விரைய எத்தனிக்க,


"தாய்க்குலமே.. தொறவுகோலத் தந்துட்டு போங்க.. " என்று அலறியவனின் குரலில், திரும்பி, வழிந்தவாறு அவனின் நீட்டிய கையில் சாவியை வைத்து விட்டு விரைந்தார்.

தன் இடுப்பில் மெல்லமாக முட்டிய அந்தக் காளையின் தலையைப் பற்றியவன்,
"என்னாடா.. உனக்கு என்ட்ரி வாங்க எம்புட்டு பாடு பட்டுருகே.. என்னையவே முட்ற.. செரி வா" , என்றவாறு அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிறைப் பற்றித் திருப்பி மாட்டுக் காடி நோக்கி அழைத்துச் சென்றான்.


அவன் நினைத்திருந்த படியே செவலை கன்றுக் குட்டியோடு காங்கேய இன மாடும், போனஸாக இந்த புங்கனூர் ரக மாடும் வாங்கியது அத்தனை மகிழ்ச்சி.

விலை அதிகம் தான், ஆனால் மனதின் சில ஆசைகளுக்கும் தேடல்களுக்கும் விலை பொருட்டில்லையே..

உடன் சமர்த்தாக நடந்து வரும் கன்னுக்குட்டியை தொட்டு முன்னை தள்ளி வழிகாட்டியவன், "ஆமா உங்களுக்கெல்லா உங்க மொதலாளிங்க, ஏதோ பேருங்க சொன்னாங்களே.. அதெல்லா.. ஞாபகத்தில இல்ல, நா வேற நல்ல பேருங்க வைக்கிறேன் என்னா.." என்றவாறு நடந்தவனின் எதிரே வந்தாள் சாம்பிராணி போடும் பெரிய தூபக் கரண்டியோடு நீலாம்பரி..


சாயங்காலங்களில் வீ்ட்டில் மட்டுமல்லாது மாட்டுக்காடியிலும் விளக்கேற்றி, சாம்பிராணி தூபம் காட்டுவது அவர்களின் வழக்கம். நேர்மறை சக்தி பெருகும் என்பதோடு, பூச்சிகள் வராமல் இருக்க அது அவசியம் என்பதால் யாராவது ஒருவர் முறை வைத்துக் கொண்டு செய்து விடுவார்கள்.


இளம் சிவப்பு நிறத்தில் இருந்த செவலை கன்றினைப் பார்தது, "அட அத்தான் நிஜமாவே உங்க செண்பகம் கிடைச்சுடுச்சா?" என்று ஆச்சரியமாக கேட்டவள் அருகில் திமிலுடன் வந்த காளையினைக் கண்டு கண்கள் விரிய, "இதூ.. இந்த புங்கனூர் குட்ட ரக மாடு பற்றி படிச்சுருக்கேன். இன்றைக்குக் தான் நேர்ல பாக்கிறேன்.. க்யூட்.. அத்தான்." என பாராட்டும் குரலில் சொல்ல,


தனது செயல்களுக்கு எப்போதும் பாராட்டித் தாங்கும் மாமன் மகளின் பேச்சில் பற்கள் தெரிய சிரித்தவன், "வா... வா.. அப்படியே இவிங்களுக்கும் சாம்பிராணி காட்டு. நீயே நல்ல பேருங்களா வச்சிட்டு போ.." எனவும்.


அவளின் துப்பட்டாவை நாவால் சுழற்றி இழுக்க முயன்ற காளையிடம் இருந்து , துணியை காத்துக் கொண்டவளாய்,


"அய்யே அத்தான், பேரு அப்புறம்.. முதல்ல சோத்தைப் போடுங்க.. பில்லும் தண்ணியும் காட்டுங்க.."


"அதுவும் சரிதான். " என்றவன், நேராக புல் கிடக்கும் தொட்டிப் பக்கமாய் நகர்த்தி கூட்டிச் சென்றான்.

அந்த புங்கனூர் காளையோ அவன் இழுத்த இழுப்பிற்கு வராமல் சண்டித்தனம் செய்ய, கூட இருந்த பண்ணையாட்களும் சேர்ந்து இழுத்து சென்று , அங்கிருந்த முளையில் கட்டி வைத்தனர்.


மாடுகளுக்கு தீவனம் தயாரிக்கும் அடுப்பில் இருந்து கங்குகள் எடுத்தவள், புதிய செல்வங்களுக்கு புகை போட்டு ஆரத்தி எடுக்க..


தலையசைத்த காளை ம்மா என்று குரலெழுப்பியது.

"அத்தான், அந்த செவலை கன்னுக்கு செண்பகம் வச்சிடலாம், அதோட ஆத்தாவுக்கு பேச்சி.. இவனுக்கு மட்டும் முத்துமணி ஓக்கேயா.. "என..

"அட நல்லாருக்கே பேருங்க.. நா கூட இந்தப் பயலுக்குத்தா மணி வாங்கினேன்." என்றவாறு சிறிய மணியுடன் கூடிய சிவப்பு கழுத்துப்பட்டையினைக் கட்டி விட்டான்.


பண்ணை ஆட்களைப் பார்த்து, "சரிடே....கிளம்புங்க.. நீலூ! இவனுங்களுக்கு சம்பளம் போட்டு அனுப்பு, நா படுதா கட்டிட்டு வந்துடறேன்.." என்றவன் திரும்ப எத்தனிக்க,

நீலாம்பரியோ , "நீங்க அப்பாட்ட போய் கணக்கு சொல்லி வாங்கிக்கங்க அண்ணாச்சி, நா பின்னாடியே வாரேன்.. " என்றவள் அவர்கள் நகர்ந்ததும்,

"அத்தான், உங்கட்ட முக்கியமா பேசனும்."


"எனக்கு எப்படியும் இங்கன பத்து நிமிஷம் ஆகும்.. சொல்லு சொல்லு... "

லேசாக தயங்கியவள், "டேவிட்டு அண்ணாச்சி நிலத்தை வாங்கினவங்க.." எனவும் படுதா சாக்கு திரைகளை எடுத்துக் கொண்டிருந்தவன், அப்படியே வைத்து விட்டு திரும்பிப் பார்த்தான்.

"அவனுங்களுக்கு என்ன? " என நிதானமாய் கேட்க,

"இல்ல.. அவங்க தாத்தாவுக்கு தாத்தா நிலம்.. விட்டதை புடிக்க வந்திருக்கோம்னு, ஏதோ சொன்னாங்க ." எனவும்


கூர்மையாய் பார்த்தவாறு, "யாரு ,யாரைப் பார்த்தே பேசினே நீலு. இதெல்லா யாரு சொன்னா? தெளிவா சொல்லு." என்றான்.


"ப்ச்.. அந்த க்ருஷ்ணா கோட்ஸ் ஆக்கள் இரண்டு பேருதானே அத்தான் காட்டுப் பக்கம் வர்றாங்க. பேரு கூட காரி, ஓரி ச்சே இல்ல ஆங்.. பாரி.. பேரு தான் வள்ளல்கள் போல.. ஒருத்தன் பொண்ணுங்களையே பாக்காதவன் போல, ஒருத்தன் யாரையுமே மதிக்காதவன் போல.."எனவும் ,

அமைதியாக அவள் சொல்வதை கேட்டுக் கொள்ளும் பாவனையில் கைகட்டி நின்றான் வேந்தன்.

"அந்த சிரிப்பாணியா அள்ளி வழங்குற ஆள்தான் சொன்னான், இந்த நிலம் அவங்க பரம்பரை சொத்தாம். ஏதோ சேலஞ்சு, மீட்க தான் அப்படின்னு எல்லாம் ஏதோ சொன்னான்."


புருவம் சுருக்கி, " டேவிட் அண்ணாச்சி அப்பாருக்கே நம்ம தாத்தா தான் நிலம் வித்ததா சொல்லுவாங்க நீலு.. 1972 ல பெரிய பஞ்சம் வந்ததாம். அந்த நேரம் தான் வித்தது . அதற்கு முன்னே நம்ப கொள்ளுப் பாட்டன்ட்ட தான் இருந்தது. "


"ஓ.." என்றவள், "சரி, குளிச்சிட்டு சாப்பிட வாங்கத்தான், அப்பத்தாட்ட கேட்டா வெவரம் தெரியும்." என்றவள், வீடு நோக்கிச் செல்ல, யோசனையால் சுளித்த புருவங்களுடனேயே திரைகளை எடுத்து மாட்டினான்.

ஆனால் அவன் மாமன் வீட்டின் உள்ளே நுழைந்த நேரம், இரு மாமன்களும் பெரிய மாமனின் மகனான கார்த்திக்கின் பெண்ணிற்கு குல தெய்வ கோவிலில் முடி எடுப்பது தொடர்பாக பேசிக் கொண்டு இருந்தனர். யாரை அழைப்பது, விருந்தினரை எங்கு தங்க வைப்பது, என்ன விதமாக சீர் செய்வது , யார் யார் என்னென்ன வாங்க வேண்டும். என்று பட்டியலிட்டதில் அம்மச்சியிடம் கேட்க நினைத்திருந்த விஷயம் மறந்தே போயிருந்தது.


*************************



கேசி என்ற எழுத்துக்களை சங்கிலி வளையமிட்டிருந்த லோகோவைத் தாங்கியிருந்த கதவுகள் விரியத் திறக்க, உள்ளே அதிக சத்தமின்றி ஊர்ந்து சென்று போர்ட்டிகோவில் நின்றது பாரியின் கை வாகனம் .

அந்த இரவு நேரத்தில் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தாயைக் கண்ட பாரி முகம் கடுக்க முறைத்தவன், மெதுவாக கடந்து வீடு நோக்கிச் சென்றவளிடம்,

"உங்களுக்கு என்ன வேற பொழுது போக்கே தெரியாதா? எப்பவும் அங்கனயே நின்னுட்டு? அப்பா திட்றது சரிதான்." என்று இரைந்து கடிந்தவன் தன் அறை நோக்கிச் சென்றான்.

மூத்த மகனோ, பார்க்கும் போதெல்லாம் தகப்பனை போலவே திட்ட, இளைய மகனோ, அலைபேசியின் ஏதோ ஒளிப்படத்தினை கண்ணுற்றவாறே உள்ளே செல்வதைக் கண்ட ஜெயராணி , அமைதியாக சென்று இருவருக்கும் இரவுணவு எடுத்து வைக்கலானார்.

இந்த அசையா பொருட்களையும் , கணவர் பார்க்கும் ஒளிச்சித்திரங்களும் இயந்திரக் குரல்களும் ஆகாமல் தான் தோட்டத்தில் அமர்வது.. அது பொறுக்கலையா, என்று மகனைக் கேட்க எண்ணினாலும், வழக்கம் போல ஏதும் சொல்லத் துணிவற்று அமைதியாய் தன் வேலையை செய்து கோண்டிருந்தார். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் இங்கே பரிமாறுவது உபசரிப்பது இவரின் கடமை மட்டுமே..

மகன்கள் வந்த அரவம் கேட்டு தன் அறையிலிந்து வந்த கிருஷ்ண சேதுபதி , தானும் உணவு மேஜையின் ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

சில நிமிடங்களில் இலகு உடை மாறி வந்தவர்கள் அமர்ந்து உண்ணத் தொடங்க, வழக்கம் போல பேச்சு தொடங்கியது.

"பாரி போன காரியம் எப்படி? நெல்லையப்பர் சிவந்தியப்பர் யாரையாச்சும் பார்க்க முடிஞ்சதா?"


மறுப்பாய் தலையசைத்தவன், "அந்த வேந்தனும் ஒரு பொண்ணும் தான் அங்கே பாத்துக்கறாங்க போல.. மத்த எல்லாம் வேலக்கார, கூலிக்கார பசங்க.. இந்த பெரிய தலைங்க அங்கே தலகாட்றது இல்ல போல.. கணக்கு வழக்கு வெளி வேலைங்க பார்ப்பாங்களோ என்னவோ.. நீங்க பாவநாசம் மார்க்கெட்ல புடிக்க முயற்சி பண்ணா என்ன?"


"அதெல்லா நம்ப கவுரவத்திற்கு சரிப்படாது. நம்ம வேற எப்படியாச்சும் தான் அவங்களையே நம்மத் தேடி வந்து பாக்கும் படியா வைக்கனும். அதுக்கு என்ன பண்ணலாம்னு பாரு.."

ம் ம் என்றவாறு உணவினை உண்டான் பாரி.

"ஈஸி எடுத்து பாத்தாச்சு . அந்த நிலம் ஆறா சரிபங்கா பிரிச்சுருக்காங்க, ஒரு பங்கு பக்கத்திலேயே இருக்க பூர்வீக நிலம் நெல்லையப்பர் அவரு வாரிசு கார்த்திக், இரண்டு கிணறுங்க இருக்க நிலங்கள் வாசுகி அவங்க வாரிசு மகிழ் வேந்தன் அப்புறம் சிவந்தியப்பர் அவரு பொண்ணுங்க நீலாம்பரி, தேவ மஞ்சரி.. எப்படி இத்தனை பேரை ஒன்னா நிலத்தை தர வைக்க, யோசிக்கனும்." என

அப்போது வேலையாள் பெரிய மூட்டைகளைக் கொணர்ந்து வைக்க, மேலேயிருந்த பை கீழே விழுந்து சிதறின விதைகள்..


திரும்பிப் பார்த்த ஜெயராணி.. "ஏல பாத்து வைக்க மாட்டாயா? என்னது இது மணல் மாதிரி இருக்கு?"


"ஹூம் மணல் இல்ல விதைங்க.. நாம அவங்க விவசாயத்தை எப்படி நிறுத்தலாம்னு யோசிக்கப் போனா, ஒரு அண்டிக்(முந்திரி) கொட்டைக்காரி , நமக்கே ரோசனைங்க சொல்லி , விவசாயம் பண்ண காட்டைத் திருத்த விதைங்க எடுத்து நீட்டறா." என்றான்.


"ஓ அந்த காட்டுல வேல செய்யற பொண்ணா?" என்ற தந்தையின் கேள்விக்கு

அவசரமாய் பதிலளித்தான் இந்திரன், "இல்லப்பா அந்த சிவந்தியப்பர் பொண்ணு நீங்க கூட இப்போ சொன்னேங்களே, ஆங்.. அங்கே ஆட்கள் நீலாம்மானு தான் கூப்பிட்டாங்க.. நீலாம்பரி.. அக்ரி படிச்சுருக்காள். அவளும் அந்த மகிழ் வேந்தனும் சேர்ந்து தான் பாக்கிறாங்க.. "


"ஓ.. நெல்லையப்பர் பையன் ஏதோ வடநாட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான் போல.. பேங்கில பெரிய உத்யோகம், அதனால சொத்து எல்லாம் சிவந்தியப்பர் கண்ட்ரோல் தான். அவர் சொல்றது தான் நெல்லையப்பர், வாசுகி கேட்பாங்க. சீக்கிரமே மகிழ்வேந்தனுக்கு நீலாம்பரிக்கு கல்யாணம் பேசி சம்பந்தம் கலக்கி ஒன்னுக்குள்ள ஒன்னு ஆகிடுவாங்க போல.." எனவும்


"அய்யய்யோ.." என இந்திரன் கூவ,

பாரி வேந்தனின் கை அசைவற்று நின்றது..




நாயகன் ஆடுவான்..
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே!

நான் வந்துட்டேன்.. எனை எழுத தூண்டி , லேசா திட்டி கொட்டும் வச்ச வாசூ மா @Vasugii போட்டாச்சு ☺☺☺💕💕💕👍👍👍

கதை எப்படி போகுது தோழமைகளே? , சுவாரஸ்யமா என்றால் மகிழ்ச்சி.. என்னா 80'ஸ் படம் போல போகுது!! என்றால்.. ஹி ஹி அதும் மகிழ்ச்சி தான்🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 ஜாலியாவும், சுவாரஸ்யமாவும் கொண்டு போகனும் என்று குறிக்கோள்.. முயற்சி பண்ணுவேன்💪❤💪❤💪❤

உங்களின் அன்பான or
கழுவி ஊத்தறதானாலும்.. கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.. டியர்ஸ்😬😬😬😬




அடுத்த பதிவு ஞாயிறு கொடுக்கனும்னு இலக்கு..

புதன் கொடுக்கறேன்னு சொல்லிட்டு வியாழன் நடுராத்திரி வந்த ஆள்தானே என்று திட்றீங்களா? 😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫

திங்கள் ப்ளாங்கா இருந்தது , செவ்வாய் சீன் செட் ஆகிடுச்சு, ஆனா எழுத முடியல.. இன்று காலைல இருந்து போராடி நேரம் ஒதுக்கி எழுதிருக்கேன்.. ஸோ... ஏதாச்சும் பாத்து பண்ணுங்க மக்களே..


லவ் யூ ஆல் 💕💕💕💕💕💕💕💕
 
Status
Not open for further replies.
Top