Haani karthigan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20
சனா வரைய வேண்டியதை யோசித்து முடிக்க அவள் இதழ்களோ 'காட்டுப் பையலே' என்று முணுமுணுத்தது. அவள் வரைய வேண்டியதை நினைக்கும் போது அவள் இதழ்கள் குறும்புப் புன்னகையைச் சிந்தின. இறுதியாக கற்பனைக்கு வழங்கிய நேரம் முடிவடைய போட்டி ஆரம்பிக்கப்பட்டது. சனாவும் வரைய ஆரம்பித்தாள். இடையிடையே அவள் இதழ்கள் குறும்புப் புன்னகையை சிந்த மறக்கவில்லை. தூரத்தில் இருந்தே சாத்விக் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவள் முகத்தில் இடையிடையே தோன்றும் புன்னகையில் ஏதோ ஒரு விஷயம் இருப்பதாகத் தோன்றியது. வரைந்து முடித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவளையே இரசித்துக் கொண்டு இருந்தான். கூலர்ஸ் அணிந்து இருந்ததால் சாத்விக் யாரைப் பார்க்கிறான் என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது. நேரமும் கடக்க இறுதி நேரத்தை அனைவருமே நெருங்கிக் கொண்டு இருந்தனர்.
அனைத்து போட்டியாளர்களும் தங்கள் ஓவியங்களை வரைவதில் மூழ்கிப்போய் இருந்தனர். சனா வரைந்துக் கொண்டு, 'ஆனாலும் காட்டுப்பையல் அழகு தான் என் டிரோயிங்ல. சோ ஸ்வீட் காட்டுப் பையலே. உன்னால தான் எனக்கு இந்த ஐடியா கிடைச்சது. கிருஷ்ணா இந்த விஷயத்துக்காக காட்டுப் பையலுக்கு இப்படி மச்சத்தையும், உடம்பையும் கொடுத்ததுக்கு உன்னை பாராட்டனும் கிருஷ்ணா' என்று மானசீகமாக கிருஷ்ணனோடு உரையாடினாள்.
"ஹப்பா... இந்த பொண்ணு இன்னைக்கு தான் என்னை பாராட்டி இருக்கா. சாத்விக் சம்பந்தமா என்னை எப்போவுமே திட்றவ இன்னைக்கு பாராட்டினது நல்லா இருக்கே. நானும் கொஞ்சம் நல்ல கடவுள் தான்" என்று கிருஷ்ணனும் பெருமைப்பட்டுக் கொண்டார். அவரும் எத்தனை நாட்கள் தான் சனா சாத்விக்கை படைத்ததில் குறைக் கூறியும், திட்டியும், புலம்பியும் இருக்கிறாள். இன்று அல்லவா பாராட்டி இருக்கிறாள். தன் பக்தை வெகு நாட்களிற்குப் பிறகு அவரை பாராட்டியதில் கர்வமைடைந்தார்.
கவுன்ட் டவுன் ஆரம்பிக்க அவசரமாக அனைவருமே ஓவியத்தை நிறம் தீட்டி முடிப்பதில் மும்முரமானார்கள். முப்பதிலிருந்து ஆரம்பித்து ஒன்று முடியும் போது சனாவும் ஓவியத்தில் இருந்து கையெடுத்தாள். ஒரு முறை ஓவியத்தைப் பார்த்து நிறைவாகப் புன்னகைத்து, 'காட்டுப் பையலே சூப்பரா இருக்கியே' என்று கொஞ்சி சாத்விக்கை நினைத்து மற்றவர்களை ஈர்க்காமல் சிரித்தாள்.
அனைத்து ஓவியங்களையும் ஏற்பாட்டாளர்கள் சேகரித்து ஓவியர் கமலேஷிடம் எடுத்துச் செல்லப்பட்டது. கமலேஷ் அரை௱மணி நேரத்தில் ஓவியங்களை தெரிவு செய்தார். முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். ஐந்தாவது இடமும், நான்காவது இடமும் மும்பையில் உள்ள இரண்டு கல்லூரிகளுக்கும், மூன்றாம் இடம் பெங்களூரில் இருந்த கல்லூரிக்கும் இரண்டாம் இடம் மதுரையில் உள்ள கல்லூரிக்கும் வழங்கப்பட்டதோடு முதலாம் இடம் சனாவிற்கு வழங்கப்பட ஐவருக்குமான கரகோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
கமேலஷ் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்தார். ஐவரும் சென்ற பிறகு அவர்களுடைய ஓவியங்கள் அவர்களிடமே வழங்கப்பட்டது. கமலேஷ், "இந்த டிரோயிங்சை பத்தி நான் சொல்றதை விட நீங்களே சொல்லுங்க" என்றார். நான்கு மாணவர்களும் முடித்த பிறகு சனாவிற்கான வாய்ப்பு கிடைத்தது.
"இதுல நான் வரைஞ்சி இருக்கிற முதலாவது படம் அடர்ந்த நடுக் காட்டில் இருக்கிற ஒரு நபர் சூரிய ஒளிபடும் போது அவர் பார்க்கும் போது உள்ள வியூவும், அதே ஆள் வெளியே தூரமா இருந்து பார்க்கும் போது கிடைக்கிற இரண்டு வியூவையும் ஒரே படத்துல வரைஞ்சி இருக்கேன். இரண்டாவது இந்த ஒட்டுமொத்த படத்தையும் சேர்த்தால் ஒரு காட்டுவாசி தன் கையை மார்புக்கு குறுக்காக கையைக் கட்டி இருக்கிற படம்" என்றாள்.
"காட்டுவாசியோட டிரஸ்ஸை இரண்டு வியூவிலும் உள்ள காடாகவும், அவரோட மார்புப் பகுதியை மாலைநேர வானமாகவும், ஒரு புஜத்தில் இருக்கிற மணியை மலையாகவும் வரைஞ்சி இருக்கேன். கழுத்துப் பகுதியில் இருக்கிற அந்த குழிவு சூரியனாகவும் வரைஞ்சி இருக்கேன். மற்றைய புஜத்துல இருக்கிற மச்சம் ஒரு கறுப்பு நிற பறவைக் கூட்டமாகவும் வரைஞ்சி இருக்கேன். முகத்தை வரைய எனக்கு பிடிக்க இல்லை. அதனால் தொடைப் பகுதியிலிருந்து கழுத்துப் பகுதி வரைக்கும் வரைஞ்சு இருக்கேன்" என்றாள் விளக்கமாக.
"வட் அ கிரியேடிவிடி. சூப்பரப் திங்கிக்!!" என அனைவரும் சிலாகிக்க சனா, 'ஐயோ இதை கிரயேடிவிடின்னு சொல்லிட்டாங்களே.. ஐயோ நான் காட்டுப்பையலை இல்லையா யோசிஞ்சு வரைஞ்சேன். இவங்க தப்பா நினைச்சிட்டாங்களே. ஆனாலும் கிருஷ்ணா இதுவும் நல்லா இருக்கே' என தன்னுள்ளே நினைத்தவள் வெளியே சிரித்து வைத்தாள்.
இவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்த சாத்விக், "கண்ணுல தெரியிற நக்கலுக்கும், வெளியில சிரிக்கிற சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லையே" என்று யோசிக்க அவள் புஜத்தில் கூறிய மச்சம் நினைவு வந்தது. "நானும் அப்படி மச்சத்தை எங்கேயோ பார்த்து இருக்கேனே. எங்கே??" என்று யோசிக்க அவனுக்கு உடனே ஞாபகத்திற்கு வரவில்லை. 'சரி மாட்டாமலா போயிரும் அப்போ பாத்துக்குறேன்' என்று சனாவைப் பார்த்தான்.
வந்ததில் இருந்து தனக்கு நெருக்கமான ஒருவர் இங்கே இருப்பதாக உணர்த்தினாலும் கண்களுக்கு தெரியும் வரையில் எவரும் இருக்கவில்லை. சாத்விக் மேடையில் பின்னே இருந்ததால் சனாவிற்கு பார்க்க முடியவில்லை. அவளை மேடைக்கு அழைக்கும் போது எங்கும் பார்க்காமல் கமலேஷ் வரக் கூறிய இடத்தை மாத்திரமே பார்த்து சென்றதால், செல்லும் வழியில் இடப்புறமாக திரும்பியும் பார்க்காமல் சென்றதால் அவளால் பார்க்க முடியவில்லை.
முதல் ஐந்து மாணவிகளுக்கும் சாத்விக்கை பரிசைக் கொடுக்க அழைத்தனர். அப்போதே சாத்விக் பின்னிருந்து எழுந்து சனாவின் அருகில் நின்றான். இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளியே இருந்தது. சனா சாத்விக்கை அதிர்ந்து பார்க்க தனது கூலரை கழற்றி சேர்டில் மாற்றும் போது அவளைப் பார்த்து கண்சிமிட்டி ஒன்றுமே நடவாதது போல நின்றுக் கொண்டான்.
சனா அதிர்ச்சி தாங்காமல் இன்னும் தன் முட்டைக் கண்களை விரித்து சற்று நகர்ந்து நின்று வேறு புறம் திரும்பிக் கொண்டாள். 'காட்டுப் பையலே பப்ளிக் பிளேசுல எப்படி நடந்துக்குறான் பாரு. உன் தலையை பிடிச்சு அந்த சுவத்துல மோதினா தான் என்ன? காட்டுவாசி!!! காட்டுவாசி!!!' என்று திட்டித் தீர்த்தாள்.
மனசாட்சி, 'இரண்டாவது தடவை நீ வைலன்சுல இறங்குற சனா' என ஞாபகப்படுத்த, 'அச்சோ கிருஷ்ணா!! என்னால முடியல்லை. இவன் கூட சேர்ந்தால் நான் கெட்ட பொண்ணாகிருவேன். இந்த காட்டுப் பையல் கிட்ட இருந்து காப்பாத்தேன்' மறுபுடியும் புலம்ப ஆரம்பிக்க, "ஐயோ மறுபடியும் நானா " என்று அலறி கிருஷ்ணா ஓடிவிட்டார் அங்கிருந்து.
சனாவை அழைக்க தன்னை சமன்படுத்தி சாத்விக்கின் முன்னே நிற்க அவளுக்கான சர்டிஃபிகேர்ட்டையும், டிரோஃபியையும் பரிசையும் வழங்கினான். பின் தங்கப்பதக்கம் கொடுக்கப்பட்ட அதையும் அவனே அணிவிக்கும் போது, "இன்னும் கொஞ்ச நாள்ல இதே போல தாலியை உன் கழுத்துல கட்டுறேன்" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறி அவளிடம் இருந்து விலகி நின்றான்.
சனா அதைக் கேட்டு மீண்டும் அதிர, (அட போமா... கொஞ்சமாச்சும் உன் ரியெக்ஷனை மாத்துமா) சாத்விக் நமட்டுப் புன்னகையுடன் அவளை ஏறிட்டான். மாணவர்கள் கீழிறிங்க சனாவும் சாவி கொடுத்த பொம்மை கீழிறங்கினாள். மேடையில் அனைவரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தே அனுப்பி வைத்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் கீழேயும் வாழ்த்தை தெரிவிக்க அவள் முனையாமலேயே சாத்விக்கின் நினைவுகள் ஒதுங்கியது.
அநேகமானோரின் வாழ்த்துக்களைப் பெற்ற பின் சாத்விக் இல்லாமல் அவனுடைய காரை அழைத்துச் செல்ல டிரைவரை அனுப்பி வைத்திருந்தான். பிரதம அதிதியாக சென்று இருந்தமையால் சாத்விக்கால் உடனடியாக செல்ல முடியாமல் இருந்தது. அதனாலேயே சனாவை ஹோட்டலிற்கு அழைத்துச் செல்ல டிரைவரை அனுப்பி வைத்திருந்தான்.
சனா தனது கல்லூரியிலிருந்து போட்டியில் பங்கு பெற்ற மற்ற இருவரும் பேரிசிரியரும் இருந்த இடத்திற்குச் சென்றாள். ஸ்டாஃப், "வாழ்த்துக்கள் சனா" என்று கூற "தேங்கியூ சேர்" என்று புன்னகைத்து, "சேர் நான் இப்போவே சென்னை போயாகனும். அண்ணா கல்யாணம் நாளான்னைக்கு. சாத்விக் சேர் டிகெட் புக் பண்ணி இருக்காரு. அவருக்கும் மீடிங் இருக்குன்னு சென்னை போகனும்னு சொன்னாரு. இன்னைக்கு ஈவீனிங் டிகெட் புக் பண்ணி இருக்காரு. அண்ணாவும் வர சொன்னான். சோ நான் போறேன் சேர்" என்றாள்.
ஸ்டாஃப், "சாத்விக் சேர் என் கிட்ட காலையில சொன்னாரு மா. அவருக்கும் வேலை இருக்கிறதால போறாராம். உன்னையும் பத்துரமா கூட்டிட்டு போறதா சொன்னாரு. பயப்படாத. அவரு நல்ல மனிஷன். தைரியமா போ. அண்ணாவுக்கு விஷ் பண்ணதா சொல்லு" என்று புன்னகைக்க, "நம்ம அபி தான் பொண்ணு சேர். அவசரமா கல்யாணத்தை வைக்குற சிடுவேஷன் சேர். அதான் பெரிசா கல்யாணத்தை வைக்க இல்லை. ரிசப்ஷனை கிரேன்டா செய்வோம். கண்டிப்பா வந்துருங்க" என்று கூறி மற்றவர் இருவரிடமும் கூறி விடைப் பெற்றாள்.
டிரைவரோடு தனது அறையை அடைந்தவள் குளித்து அனைத்தையும் எடுத்து வைத்து சென்னைக்குச் செல்ல தயாராகி விசாலாட்சிக்கு அழைத்தாள். "சனா மா எப்படி டா இருக்க? சாப்பிட்டியா? கம்படிஷன்ல என்னாச்சு?" என்று அடுக்கடுக்காக கேள்விக் கனைகளைத் தொடுக்க, "அத்தை பொறுமை. ஒவ்வொரு கேள்வியா கேளுங்க" என்று சிரித்து, "நான் இப்போ சென்னைக்கு வர ரெடியாகிட்டு இருக்கேன். கம்படிஷன்ல ஃபர்ஸ்ட் பிரைஸ் எடுத்துட்டேன் அத்தை" என்றாள் குதூகலத்துடன்.
"வாழ்த்துக்கள் சனா மா. பாதுகாப்போட வரியா?" என்று தாயின் பரிதவிப்புடன் வினவ, "நான் யார் கூட வந்தேனோ அவங்க கூடவே வரேன். சேரோட லேடி ஸ்டாஃபும் வராங்க. மத்தவங்க நாளைக்கு மும்பையை சுத்தி பார்த்துட்டு நாளான்னைக்கு வந்து சேருவாங்க" என்று விளக்கமளிக்க அப்போதே நிம்மதியாய் மூச்சு விட்டார். அதன் பின் அபியும் பேசினாள். கார்த்திக்கிற்கு அழைத்து அவனிடமும் பேசிவிட்டு கண்களை மூடி சோஃபாவில் அமர்ந்து கண்களை மூடினாள்.
அப்போதே வயிற்றில் இரயில் ஓட இன்னும் உண்ணவில்லை என்பது அவளிற்கு நினைவு வந்தது. 'அச்சோ பசிக்குதே. என்ன பண்றது? கிருஷ்ணா!!!' என்று அதற்கும் அவரை அழைக்க, கடுப்பாகியவர், 'இதுக்கு அப்புறம் என்னை கூப்பிடாத. உன் கூட இருந்து நான் ரொம்ப டயடாகிட்டேன். அதனால நான் கொஞ்ச நாளைக்கு லீவ் எடுக்க போறேன். குட் பாய்' என்று சென்று விட்டார்.
அவர் கூறியது சனாவின் காதிற்கு எட்டவில்லை. அதனாலேயே இனிமேல் சென்னைக்கு சென்ற பிறகு வருகிற சம்பவங்கள் அனைத்துமே அவள் கையை மீறி உதவிக்கு கிருஷ்ணன் இல்லாமல் தத்தளிக்க போகிறாள் என்பதை அப்பேதை அறியவில்லை. தான் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல சம்பவங்கள் அங்கே நடந்தேற உள்ளன எனத் தெரியாமல் இருக்க விதியோ கைக் கொட்டி அவளைப் பார்த்துச் சிரித்தது.
சனா அறையில் அனைத்து இடங்களிலும் ஏதாவது சாப்பிட உள்ளதா என்று தேட, இடைக் கதவை திறந்து, "என்ன பேபி தேடுற?" என்று உள்ளே வந்தான் சாத்விக். "சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு பார்க்குறேன் சேர்" என்று குளிர்சாதனப் பெட்டியினுள் தலையைச் செலுத்தி திரும்பிப் பாராமலேயே கூறினாள். அவளை நெருங்கியவன், பின்னிருந்து அவளை இழுத்து கையில் ஏந்தினான்.
சனா, "ஐயோ சேர் என்ன பண்றிங்க? விடுங்கசேர். ஐயோ விடுங்க சேர்" என்று திமிறிக் கொண்டே கத்த அதை எதையுமே பொருட்படுத்தாமல் அவளை சோஃபாவில் அமர வைத்தான். சாத்விக், "நீ சாப்பிடாததை நானும் பார்த்துட்டு இருந்தேன் பேபி. அதான் சாப்பிட வாங்கிட்டு வந்தேன். லைட் ஃபுட் தான். அதனால டிரெவலிங் நேரம் பயப்பட தேவையில்லை. நானும் சாப்பிட இல்லை பேபி. சீக்கிரம் சாப்பிட்டு ஸ்டேஷனுக்கு போலாம்" என்றான்.
இருவரும் அமர்ந்து சாப்பிட்டு இன்னும் தேவையான சில உணவுப் பொருட்களையும், தண்ணீர் போத்தலையும் வாங்கி புகையிரத நிலையத்திற்குச் சென்று அவர்களது இருக்கைக்குச் சென்று அமர்ந்தனர். சனாவிற்கு இன்று ஏற்பட்ட களைப்பு, சற்று நேரத்திற்கு முன் உண்டது அனைத்துமே ஒரு வித மயக்கத்தைத் தர யன்னல் சீட்டில் அமர்ந்தவாறே கண்ணயர்ந்தாள்.
சாத்விக் தன் மடிக் கணனியில் வேலையில் மூழ்கியதில் இவளைப் பார்க்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு திடீரென்று ஏதோ ஒரு பாரம் அவன் இடது தோளை அதிகரிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்புறமாகத் திரும்பிப் பார்க்க சனா அவனது தோளில் சாய்ந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.
அதைப் பார்த்து அவனது இதழ்கள் விரிய தனது வேலையை நிறுத்தியவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்து சீட்டில் சாய்ந்தான். சென்னைக்கு சென்றால் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டான். புகையிரதம் சென்னையை நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்க இருவரின் வாழ்விலும் பல தரமான சம்பவங்களை நிகழ்த்த சென்னை காத்துக் கொண்டு இருந்தது.
சாத்விக், சனா இருவரையும் தேவைக்கு அதிகமாகவே புகைப் படங்களை எடுத்தவன் அதன் பின் இன்று மேடையில் வைத்து புகைப்படங்களை எடுத்து மர்ம நபரிற்கு அனுப்பி வைத்தான். அவற்றைப் பார்த்த மர்ம நபர் தனக்குத் தேவையான வகையில் புகைப்படங்கள் இருப்பதைப் பார்த்து திருப்தி உற்று உடனேயே அங்கிருந்து செல்லக் கூறிவிட்டான்.
மர்மநபர், "சும்மா சொல்லக் கூடாது ப்ரவீன். நல்ல ஸ்மார்டா தான் இருக்க. அதான் கோலேஜே உன் பின்னாடி சுத்திச்சே. உனக்குள்ள இருக்கிற ரெமோவை நான் இப்போ தான் கண்கூடாவே பார்க்குறேன். முன்னால் காதலிகிட்ட கிடைச்ச எக்ஸ்பீரியன்ஸ்ல இங்க போட் ஓட்ற. கொடுத்து வச்சவன் டா நீ. எங்க போனாலும் ஒரு ஃபிகர் மாட்டுது.
என்ன பண்றது? இந்த ஃபோடோவை வச்சு தானே அடுத்த விளையாட்டை விளையாட போறேன். அதுல கார்த்திக் உன்னை அடிக்கிறதுல நீ திரும்ப எழ கூடாது. இதெல்லாம் யாரு பண்றாங்கன்னு தெரியாமல் நீ தலையை பிச்சிகிட்டு பைத்தியமாகனும்டா நீ. தேவையில்லாமல் என் மேலே கையை வச்சி உன் வாழ்க்கையை நீயே அழிச்சிகிட்ட ப்ரவீன்" என்று கோபத்தில் கத்தினான்.
சில நினைவுகள் அவன் கண்முன் தோன்ற, "உன்னை இந்த முறை மீடியாவை வச்சு அவமானபடுத்தாமல் விட மாட்டேன் டா. அப்புறமா நீ வெளியில தலை காட்ட முடியாமல் இங்கிருந்து மறுபடியும் போகனும்" என்று கொக்கரித்து அங்கிருந்த மேசையில் ஓங்கிக் குத்தினான் அந்த மர்ம நபர். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் கடவுள் ஒருவன் எதற்கு???
வெகுநேரத்திற்குப் பிறகு சனா கண் விழிக்க சாத்விக் கையணைப்பில் இருந்து அவன் நெஞ்சில் சுகமாய் உறங்கி இருப்பதை உணர்ந்தாள். பதறி அவனிடம் இருந்து விலக முயற்சிக்க முயற்சியாய் மட்டுமே அது இருந்தது. அவளது திமிறலில் சாத்விக்கின் உறக்கமும் கலைந்தது. சனா அவன் முகத்தை பார்த்து விட்டு அவள் இடையைச் சுற்றி இருந்த அவனது வலிமையான கையை பாவமாய்ப் பார்த்தாள்.
அவனுக்கு அவளைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் இதழுக்குள் மறைத்து புரியாதது போல், "என்ன பேபி?" என்றான். "சேர் கையை கொஞ்சம் எடுக்குறிங்களா? நான் போய் பிரஷ்ஷாகிட்டு வரேன்" என்று தயங்கிக் கூற அவளை ஊன்றி ஒரு முறைக் கவனித்தவன், "சரி போ" என்று அனுப்பி வைத்தான். 'ஹப்பா!!' என்று பெருமூச்சை வெளியிட்டு தன் வேலைகளை முடித்து முகம் கழுவி வந்தாள்.
அதற்கு இடையில் சாத்விக்கும் சென்று தன்னைச் சுத்தப்படுத்தி வந்தான். இருவருக்கும் லேசான உணவுகளை வாங்கி இருந்ததால் அதை எடுத்து சாப்பிட்டனர். "பேபி எனக்கு உன் கிட்ட இருந்து ஒரு பதில் வேணுமே" என்று சாப்பிட்டவாறே அவளைப் பார்த்தான். 'இப்போ என்ன கலகம் வர போகுதோ. கிருஷ்ணா காப்பித்துப்பா' என்று வயிற்றில் புளியைக் கரைத்த உணர்வுடன் அவனைப் பார்த்தாள் சனா.
"எனக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிருச்சு. அப்புறமா எனக்கும் உன் அண்ணனுக்கும் சண்டை வருது. உன் அண்ணன் உன்னை அவன் கூட வர சொல்றான். நீ என்ன பண்ணுவ?" என்று கூர்மையாய் பார்த்தான். 'போச்சு போச்சு. இன்னைக்கு டேமேஜ் இல்லாமல் வீடு போய் சேர மாட்டேன் போல இருக்கே' என்று பீதியுடன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். சாத்விக், "என்ன பேபி யோசிக்கிறியா?" என்று அவளை உலுக்க தலையை எல்லாப் புறமும் சுற்றினாள்.
"ஒன்னு 'ஆமான்னு' தலையை ஆட்டு. இல்லை, 'இல்லைன்னு' தலையை ஆட்டு" என்று கண்டிப்புடன் கூற முதலில் 'ஆம்' என்று தலையாட்டியவள், அடுத்து 'இல்லை' என்று தலையை ஆட்டினாள். சாத்விக் இதைப் பார்த்து கடுமையாய் அவளை முறைக்க சனா மிரண்டு அவனைப் பார்த்தாள்.
சாத்விக், "நான் கேள்வி கேட்டு நீ பதிலை சொல்லாமல் அமைதியா இருந்தால் எனக்கு கெட்ட கோபம் வரும்னு உனக்கு தெரியும் பேபி. என்னை கோபப்படுத்தாமல் பதிலை சொல்லு" என்றான் கடுமையான குரலில். 'எனக்கு மட்டும் வெராய்டி வெராய்டியா குவஷ்ஷன்ஸ் கேட்குறாரு. இவரையெல்லாம் பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா?' என்று அதி முக்கிய கேள்வி மனதில் எழுந்தது.
மனசாட்சி, 'சனா இப்போ மட்டும் நீ பதில் சொல்ல இல்லை, இந்த காட்டுப் பையல் உன்னை கடிச்சு குதறிடுவான்' என்று எச்சரித்தது. சனா, "கல்யாணம் பண்ணா புகுந்த வீடும், பொறந்த வீடு இரண்டுமே அந்த பொண்ணுக்கு ஒன்னு தான் சேர். இரண்டுமே இரண்டு கண்ணைப் போல ஒன்னை இழந்தாலும் ரொம்ப வலிக்கும். ஆனால் அதுக்கும் மேலே அந்த பொண்ணுக்கு புருஷன் தான் ஃபர்ஸ்ட். ஹார்ட் மாதிரி. இதயம் இல்லைன்னா ஒன்னுமே பண்ண முடியாது" என்று கூறி வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
'இப்போ இவ என்ன சொல்ல வரா?' என்று யோசிக்க அப்போதே அவனுக்கு பல்ப் எரிந்தது. இதயம் இல்லாமல் ஒரு மனிதனுக்கு உயிர் வாழ முடியாது. ஆனால் கண்களை இழந்தாலும் உயிரோடு வாழலாம். அதே போல் கணவன் இன்றி இருக்க முடியாது. அவனுக்கே தன் வாழ்வில் முதலிடம் என்பதை மறைமுகமாக கூறி இருக்கிறாள் என்பதில் மனதில் பல வண்ண மத்தாப்பூ பூக்கள் பூத்துக் குலுங்கின
அதன் பிறகு சாத்விக் சனாவை தொந்தரவு செய்யவில்லை. அவள் வழியிலேயே விட்டான். சாத்விக்கும் தன் வேலையில் மூழ்கிப் போனான். இடையிடையே இருவரும் உறங்கியும், வேடிக்கைப் பார்த்தும், ஏதாவது ஒன்று பேசிக் கொண்டும் தங்கள் நேரத்தினைக் கடத்தினர். சனா சென்னையை நெருங்கும் போது உறங்கிக் கொண்டு இருக்க சாத்விக்கே அவளை எழுப்பினான்.
சனாவிற்கு சென்னையை நெருங்க மனம் ஏதோ நெருடிக் கொண்டு இருந்தது. இத்தனை நாட்களாக இல்லாத ஒரு தவிப்பு; ஏதோ தவறாக நடக்க உள்ளது என்பதை அச்சுறுத்தியது. சென்னையை நினைக்கும் போதே மனம் ஒரு நிலையில் இல்லாதது போன்று இருந்தது. அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து நேரத்தைப் பார்க்க அடுத்தநாளில் மாலை நான்கு ஐம்பதாக இருந்தது.
கார்த்திக்கிற்கு சனா அழைக்க, "சொல்லு பட்டு. எங்கே இருக்க?" என்று வினவ, "இன்னும் வன் ஹவர்ல சென்னை சென்டிரல் ரெயில்வே ஸ்டேஷனை ரீச் பண்ணிருவோம் அண்ணா. நீயா வருவ பிக்கப் பண்ண? இல்லை டிரைவர் வருவாரா?" என்றாள். "நான் வருவேன் பட்டு. நீ ரெடியா இரு" என்று சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கார்த்திக்கிற்கு இன்று இரவு நடக்க இருக்கும் பார்டியில் சாத்விக் கலந்துக் கொள்வதாக அவனுடைய பி.ஏ ராகவிடம் இருந்து தகவல் வந்திருந்தது. இன்றே சாத்விக் மும்பையிலிருந்து வருவதாகவும் தகவல் கிடைக்க சனாவுடன் சாத்விக் வருவானோ என்று நினைக்க ஒரு நிமிடம் மனம் பதறியது. சனாவை பழிவாங்கும் படலத்தில் இன்னும் இழுத்துவிடுவானோ என்ற ஒரு பயமும் அவன் மனதை அழுத்திக் கொண்டு இருந்தது.
இன்று சாத்விக் சனாவை தொந்தரவு செய்திருந்தால் அங்கேயே இரண்டு கன்னமும் பழுக்கும் வகையில் அடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தான். அதனாலேயே தானே சென்று அவளை அழைத்து வர நினைத்து இருந்தான். தன் உயிர்த் தங்கையை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக முடிவு எடுத்து இருந்தான். சாத்விக் ஏதாவது செய்தால் சனா தன்னிடம் மறைக்காது கூறியிருப்பாள்; இது வரை அவ்வாறு எதுவும் கூறவில்லை என்பதால் சாத்விக் சனாவை சந்திக்கவில்லை என்று தவறாகவே யூகித்தான்.
சென்டரல் புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிற்க சனா தனது பொருட்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல சாத்விக் அவளை பின் தொடர்ந்தான். சனா புகையிரதத்தின் கதவில் இருந்து இறங்க கார்த்திக் அவ்விடம் நோக்கி வருகை தந்தான். சாத்விக்கோ சனாவின் பின்னே நின்று இருந்தான்.