இதயம் 1:
காக்கா குருவிகள் கூட தங்கள் இணையோடு உறவாடிவிட்டு அகமகிழ்ந்து ஆழ்ந்த நித்திரையில் விழுந்து கிடந்த அந்த அர்த்த ஜாமத்தில் நான்கு விழிகள் மட்டும் உறங்காமல் எதற்காகவோ காத்துக் கொண்டிருந்தது.
‘இராம் நகர் 3வது குறுக்கு சந்து’ என்ற பெயர் பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அந்த இரு ஜோடி விழிகளுக்கும் சொந்தக்காரர்கள் அந்த தெருவில் யாரேனும் வருகிறார்களா என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.
யாரும் வரவில்லை இது தான் சரியான சமயம் என நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டு திரும்பினாள் அவள் - பிக்பாக்கெட் பத்மா, நம் கதையின் நாயகி!
அப்போது அவள் முதுகு பக்கம் ஏதோ ஊர்வது போல் இருக்க, என்னவென்று திரும்பி பார்க்க அவள் முதுகில் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கோலம் போட்டுக் கொண்டிருந்தான் அவளின் கூட்டாளி.
“ச்சு என்ன டா குண்டா” என மிக மெல்லிய குரலில் அவள் கேட்டாலும், அதில் அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது.
அவனோ தன் கையில் இருந்த சுவீங்கம்மை தெறி விஜய் போல் வாயில் போட்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டே, “என் பேர் குண்டன் இல்லை கான்!!! அபிஷேக்கான்னு எத்தனை முறை சொல்றது உனக்கு” என கேட்டுக்கொண்டே தவறி கீழே விழுந்த சுவீங்கத்தை எடுக்க அவன் குனிய,
கடுப்பில் பற்களை கடித்த பத்மா அவன் குனிந்த சமயம் அவன் முதுகில் தன் இடது புறங்கையை வைத்து குத்தியவள் அவன் கத்தாமல் இருக்க, அவன் பாக்கெட்டில் வைத்திருந்த பன்னை இன்னொரு கையால் எடுத்து அவன் வாயில் திணித்திருந்தாள்.
“இதான் இப்போ ரொம்ப முக்கியமா.. மரியாதையா வா.. இதான் கரெக்ட் டைம் எல்லாரும் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புறப்படுத்து குறட்டை விட்டுன்னு இருப்பானுங்க.. நம்ம இப்போ போனா தான் கரெக்டா இருக்கும் அதுனால என் பின்னாலையே வா.. சொதப்புன கோண் ஊசியை எடுத்து பின்னாடி குத்திருவேன்..” என மெதுவாக அவனுக்கு ஆணையிட்டவள் பூனை நடையிட்டு அந்த பங்களாவின் பின்புற காம்பவுன்டிற்கு அருகில் வந்து நின்றாள்.
அவள் பின்னோடே பாப்கார்ன் பாக்கெட்டை பிரிக்க போராடிக் கொண்டே வந்த அபிஷேக் அவள் நின்று விட்டது தெரியாமல் அவள் மீது மோதிவிட, அதற்குள் கையிலிருந்து பிரித்த பாப்கார்ன் கீழே விழுந்து அந்த இடமெங்கும் சிதறி போக,
அதையே பார்த்தவன், “ஷ்!!! பாப்கார்ன் போச்சே” என வருந்த அவன் தலையிலே நங்கென கொட்டியவள், “பேசாம ஒழுங்கா என் பின்னாடி வா” என்றவள் அந்த காம்பவுன்டுக்கும் அங்கிருந்த மரத்துக்கும் உள்ள தூரத்தை கணக்கெடுத்துக் கொண்டாள்.
அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்த அபிஷேக்கிற்கு அவள் திட்டம் புரிந்துவிட பக்கென்று இருந்தது, “ஹேய் இதோ பாரு நீ ஏதோ கடவுள் புண்ணியத்துல ஒல்லியா பிறந்துட்டேன்ற திமிர்ல இப்படியெல்லாம் மரம் விட்டு மரம் தாவுற திட்டம் போடாத.. வீ ஆர் ஹியூமன்ஸ் நாட் மங்கிஸ்.. ஓகே.. ஒழுங்கா என் பாடி கண்டிசனுக்கு எது செட் ஆகுமோ அதை மட்டும் யோசி” என்று கூறியவன் ஸ்டைலாக தன் அரைக்கால் ட்ரவுசர் பாக்கெட்டுக்குள் கையை விட்டு நிற்க,
பத்மா மெதுவாக திரும்பி அவனை மேலும் கீழும் பார்த்து, பத்துமாத நிறைவயிருடன் இருக்கும் சிலிண்டர் போன்ற அவன் உருவத்தைக் கண்டு,
“உனக்கு ஏத்த மாதிரி நான் ப்ளான் பண்ணனும்னா ஒரு பாதாள சுரங்கம் தோண்டி உன்னை அது வழியா உருட்டி தான் விடனும்... இது ஒன்னும் ரொம்ப பெரிய காம்பவுன்ட் எல்லாம் இல்லை.. அதுனால மரியாதையா அந்த மரத்துல ஏறி வா.. அதோட கிளை இந்த வீட்டுக்குள்ள வரைக்கும் போகுது.. அப்படியே மெதுவா குதிச்சிரலாம்” என தன் யோசனையை கூற,
“ஓய் நான் என்ன வனமகன் ஜெயம்ரவியா அப்படியே ஏறி ஏறி குதிக்க?? உன்னை நம்பி வந்தேன் பாரு... மரியாதையா வேற ஐடியா சொல்லு” என அபிஷேக் கடுப்படித்தான்.
“நீ வந்தா வா வரலைன்னா கம்முனு இங்கனயே குந்தின்னு கெட.. ஆனா மவனே நான் அடிச்சுட்டு வந்த பின்னாடி சோத்துல கையை வச்ச அதை உடைச்சு அடுப்புல போட்டு எழும்பை எடுத்து நாய்க்கு போட்டிருவேன் ஜாக்கிரதை” என மிரட்டியவள் சடுதியில் அங்கிருந்த மரத்தில் விடுவிடுவென ஏற,
‘இவ குடும்பம் ஒருவேளை தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிச்சுப்போடுற குடும்பமா இருக்குமோ, என்னாமா ஏறுறா?? சரி கான் நமக்கு சோறு தான் முக்கியம் அதுனால அவ பின்னாடியே ஏறிரு டா’ என தனக்குத் தானே கூறியவன் அங்கிருந்த மரத்தில் ஏற முனைந்தான்.
முன்னால் சென்றவள் இவன் எப்படியும் வருவான் என நினைத்து அங்கிருந்த ஒரு கிளையில் கயிறை கட்டியவள் அதை அவனிடம் தூக்கிப்போட,
மேலே அவளைப் பார்த்து ஒரு ப்ளையிங்க் கிஸ்ஸை பறக்க விட்டவன், “ஹா தேங்க் யூ யா” என கூறிவிட்டு கயிற்றின் துணையோடு மிகவும் சிரமத்திற்கு பின் மேலே ஏறினான்.
அதற்குள் தொப்பென்று உள்ளே குதித்த பத்மா, அடுத்து எவ்வழியாக உள்ளே நுழைவது என அந்த வீட்டை தன் லேசர் கண்களால் ஸ்கேன் செய்ய, அவளுக்கு பின்னாலே ஒருவழியாக தட்டுத் தடுமாறி குதித்த அபிஷேக் அவளின் ஆராய்ச்சி பார்வையைக் கண்டு அவள் அருகில் வந்தவன், “ஆமா நீ பெரிய விஜய் பாரு?? நீ பார்த்ததும் இந்த வீட்டோட ப்ளூ ப்ரின்ட் அப்படியே டொன்டொட டொன்டொடட டொன்டொடன்னு மியூசிக்கோட 3டில தெரிய.. ச்சீ கம்முனு வா பால்கனி வழியா தான எப்போவும் போவோம்” என அவளை கலாய்த்து விட்டு முன்னே நடந்தான்.
“டேய் குண்டா என் கடுப்பைக் கிளப்பாம ஒழுங்கா வந்து சேரு” என கூறியவள் முன்னே நடக்க, அவள் பின்னாலே அவனும் சென்றான்.
அவள் அங்கிருந்த பைப் வழியாக மேலே ஏறிச்செல்ல, அவன் பின்னால் வருகிறானா என திரும்பி பார்த்தாள்.
அவனோ அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே தலையில் அடித்தவன் அங்கு கீழே கிடந்த ஏணியை எடுத்து வாகாக வைத்தவன் முட்டுக் கொடுக்க அங்கிருந்த பூந்தொட்டியை எடுத்து வந்து வைத்து அதன் மேலே ஏறினான் அதே நக்கல் புன்னகையோடு.
“பார்த்து டா.. பூசணிக்காய் கீழ விழுந்தா வெடிச்சு துண்டு துண்டா சிதறிருமாம்” என நக்கல் குரலில் கூறியவள்... கிடுகிடுவென மேலே ஏற,
ஒரு நிமிடம் அவள் சொன்னதை கேட்டு ஜெர்க் ஆனாலும், தன்னை சமாளித்துக் கொண்டு ஜாக்கிரதையாக அதில் ஏறினான்.
இருவரும் பால்கனிக்கு வந்து நிற்க, நல்லவேளையாக அது திறந்து வைக்கப்பட்டிருந்தது. அது மூடியே இருந்தாலும் அதை தன் சாமர்த்தியத்தால் பத்மா திறந்து விடுவாள் என்பது வேறு கதை.
இருவரும் பூனை நடையிட்டு அந்த பால்கனியை ஒட்டி இருந்த படுக்கையறைக்குள் நுழைய, அது காலியாக இருப்பதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டு அங்கிருந்த பீரோவிற்கு அருகில் செல்ல,
“டேய் டேய் டேய் அவனுங்க வந்துட்டானுங்க டா” என சப்தமாக கேட்ட ஆண் குரலில் இருவரும் நடுங்கிப் போய் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்க,
அங்கே யாரும் இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.
இன்னும் பயம் தெளியாமலே ‘சீக்கிரம் இந்த கதவை தொற கிடைக்கிறதை அள்ளிட்டு போய்ருவோம் வேகமா’ என மெதுவாக அபிஷேக் கூற,
எப்பேற்பட்ட பூட்டையும் அசால்ட்டாக திறந்துவிடும் திறமை படைத்த பத்மாவும் அதை மெதுவாக தான் கொண்டு வந்திருந்த சிறிய கம்பி போன்ற ஒன்றை வைத்து திறக்க, சரியாக அதே சமயம், “டேய் துப்பாக்கி எடுத்து ஒரே போடா போட்டுத்தள்ளுடா அப்போ தான் இனிமேல் நம்ம இடத்துக்குள்ள வரமாட்டானுங்க” என முன்பை விட சப்தமாகவும் ஆங்காரமாகவும் கேட்ட குரலில் இருவருக்கும் சப்தமும் அடங்கியது.
மெதுவாக யார் அது என அந்த அறையில் தேட, அங்கு யாருமில்லாமல் போக, பயந்து கொண்டே அந்த கதவின் துவாரம் வழியாக பார்க்க, அங்கே வெளியே ஒரு வாலிபன் அமர்ந்து காதில் பெரிய ஹெட்போன் மாட்டிக் கொண்டு தன் போனை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.
“அட சனியன் பிடிச்சவனே PUBG விளையாடுறதுக்கு தான் இந்த அக்கப்போறா... ஒரு நிமிஷம் எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல நீ..” என அபிஷேக் புலம்ப,
அவளோ அவனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த பீரோவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சில நகைகளை எடுத்து தன் பைக்குள் நிரப்பியவள், பின் அங்கிருந்த சில ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப முற்பட, அவனோ அந்த அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன் அழகை இரசித்துக்கொண்டு அங்கிருந்த ஃபாரின் வாசனை திரவியத்தை தன் உடலெல்லாம் தெளித்துக் கொண்டிருந்தான்.
‘எனக்குன்னு வந்து வாய்க்கிது பாரு’ என சலித்துக் கொண்ட பத்மா அவன் சட்டையைப் பிடித்து தரதரவென்று பால்கனிக்கு இழுத்துச் சென்றாள்.
அவன் மறக்காமல் அந்த சென்ட் பாட்டிலை கையோடு எடுத்துக் கொண்டு வந்ததால் அவளை திட்டாமல் தான் வந்த வழியே இறங்க ஆரம்பித்தான்..
அப்போது அறைக்குள் வந்த அந்த வாலிப இருவரையும் பார்த்துவிட்டு, “டாட் அந்த இரண்டு பேரையும் துப்பாக்கியை எடுத்து சுடுங்க” என கத்த,
“அட இவனுக்கு வேற வேலை இல்லை.. இப்போ அவங்க நைனா கூட சேர்ந்துகின்னு விளையாட ஆரம்பிச்சுட்டான் போல, கருமத்தை அவனுக்கு துப்பாக்கி குடுத்து ஒருத்தனையாச்சும் சுட சொல்லுங்க டா.. காதுக்குள்ளையே வந்து கத்திக்கின்னு கிடக்கான்” என அபிஷேக் சலித்துக் கொள்ள,
“யூ கல்ப்ரிட்ஸ்... ஐ அம் கோன்னா ஷூட் யூ” என நரைத்த தாடியுடன் வெள்ளை ஜிப்பா போட்ட ஒருவன் இவர்களை பார்த்து கையில் துப்பாக்கியுடன் கத்திக் கொண்டிருக்க,
‘ஆத்தி அப்போ இவன் நம்மளை தான் சுட சொன்னானா’ என அவன் பயத்தில் படியில் கால் வைக்காமல் கால் தவறி அப்படியே மல்லாக்க விழுந்துவிட,
அவனை முறைத்த பத்மா, சட்டென்று மேலிருப்பவன் சுதாரிக்கும் முன் அபிஷேக்கின் கையில் இருந்த சென்ட் பாட்டிலை பறித்து சரியாக குறிபார்த்து அந்த துப்பாக்கியை நோக்கி எரிய, அது அவரின் கைகளில் பட்டு அங்கிருந்த துப்பாக்கி கீழே ஓர் மூலையில் போய் விழுந்தது.
அவர்கள் தடுமாறிய அந்த சிறிய இடைவெளியில் அபிஷேக்கை இழுத்துக் கொண்டு அவள் வாசலுக்கு ஓட,
“ஏய் வாசல்ல வாட்ச் மேன் இருப்பான் என்ன பண்ற” என அவன் கேட்க,
ஓடிக்கொண்டே, “இப்போ காம்பவுண்டை நீ முக்கி முக்கி ஏறுறதுக்குள்ள அவனுங்க உன்னை கோழி அமுக்குற மாதிரி அமுக்கிறுவானுங்க.. ஒழுங்கா பேசாம என் கூட வா” என கூறிக்கொண்டே பத்மா வாயிலை நெருங்கிவிட,
அவனும் அவள் பின்னாலே ஓடினான்.
அதற்குள் அந்த ஜிப்பா போட்ட மனிதர், “ஹேய் வாட்ச்மேன் கேட்ச் தெம்” என சத்தம் போட, தூங்கி வழிந்து கொண்டிருந்த வாட்ச்மேன் அடித்து பிடித்து எழுந்து, “யெஸ் சார்” என சல்யூட் அடிக்க, இவர்கள் அதற்குள் கதவை திறந்து கொண்டிருந்தனர்.
அப்போது தான் இவர்களைக் கண்ட வாட்ச்மேன் தன் கையில் வைத்திருந்த பெரிய துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி, “ஒழுங்கா இந்தப்பக்கம் வந்திருங்க இல்லை குருவி சுடுற மாதிரி சுட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன்” என மிரட்டினார்.
பத்மாவோ சற்றும் அசராமல், “யோவ் பேன்ட் ஜிப்பை போடுயா முதல்ல” என கூற, “அய்யய்யோ பொம்பளை பிள்ளை முன்னாடி அசிங்கமா போச்சே” என அவர் குனிந்த சமயம் அபிஷேக்கை இழுத்துக் கொண்டு அவள் வெளியே ஓடி இருந்தாள்.
‘பேன்ட் ஜிப்பெல்லாம் போட்டு தான் இருக்கே’ என நிமிர்ந்தவர் அங்கு அவர்களை காணாமல் திகைக்க, தன் முன் வீராசாமியை போல் நின்றிருந்த தன் முதலாளியை பார்த்து அதிர்ந்தார்.
“யூ ப்ரையன்லெஸ் மங்கி...யூ ஆர் டிஸ்மிஸ்ட்.. கெட் அவுட் நவ்” என கத்தியவர் அங்கிருந்து சென்று அவர்கள் தென்படுகிறார்களா என தேட, ஆளவரமற்ற சாலையே அவரை வரவேற்றது.
“ஷிட்!!!!!” என தன் கால்களை ஓங்கி தரையில் உதைத்து அங்கேயே தலையை பிடித்திக்கொண்டு அமர்ந்து விட்டார் அந்த வெள்ளை ஜிப்பா.
***********************************
“பைய்யா பைய்யா!!!” என பின்னங்கால் பிடரியில் அடிக்க, அரக்கப்பறக்க அந்த குடோனுக்குள் ஓடி வந்தான் ஒருவன்.
“டேய் என்ன டா எதுக்கு இப்போ இப்படி ஓடி வர?? அப்படி என்ன தலை போற காரியம்??” என பீடாவை வாயில் திணித்துக் கொண்டே தலைவன் போல இருந்த ஒருவன் கேட்க,
“பைய்யா நி..நிஜமாவே இன்னும் க்..க்கொ..கொஞ்ச நேரத்துல நம்ம தலை எல்லாம் உ..ருள போகுது..அதர்வா நம்ம இருக்க இடத்தை கண்டுபிடிச்சுட்டான்.. இங்க தான் வந்துகிட்டு இருக்கான்” என மூச்சு வாங்க அவன் கூற,
‘அதர்வா’ என பெயரைக் கேட்டதுமே அங்கிருந்த அனைவருக்கும் சர்வமும் ஒடுங்கிப் போக, அந்த தலைவன் போல் இருந்தவன் “டேய் எல்லாரும் கிளம்புங்க டா அவன் வர்றதுக்குள்ள இங்க இருந்து எப்படியாச்சும் தப்பிச்சிருக்கனும்” என பயத்தை மறைத்துக் கொண்டு கூறியவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான்,
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் ஓட, அப்போது அவர்கள் வழியை மறைப்பது அங்கிருந்த மரக்கதவை உடைத்துக் கொண்டு வந்தது அந்த போலீஸ் ஜீப்.
எமதர்மராஜா அதர்வாவின் ரூபத்தில் மாருதி எர்டிகாவில் வந்திருப்பதை புரிந்துகொண்ட அந்த உளவாளி அவனிடமிருந்து தப்புவது கடினம் என எங்கே ஒளியலாம் என இடத்தை தேட ஆரம்பித்தான்.
அந்த எர்டிகாவில் இருந்து கதவை திறந்து ஒற்றைக் காலை அவன் வெளியில் வைக்கும் போதே இங்கிருந்த பலருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.
காரினுள் இருந்த ஆறடி உயரத்தில் கருநீல ஜீன்ஸ் அணிந்து, கருப்பு டீசர்ட் அந்த முறுக்கேறிய புஜங்களை இறுக்கி பிடித்திருக்க, கண்ணில் தீப்பொறியுடனும் உதட்டில் எள்ளல் புன்னகையோடும் கம்பீரத்தின் மொத்த உருவமாய் இறங்கினான் அதர்வநவ்தீபன் IPS நம் கதையின் நாயகன்.
இறங்கியவன் மிடுக்காக ஒற்றைக் காலை மடக்கி கதவில் சாய்ந்தவாறே அங்கிருந்தவர்களை ஒவ்வொருவராக நோட்டமிட, அவனின் துளைக்கும் பார்வையைக் கண்டு வெளிப்படையாகவே சிலர் நடுங்க ஆரம்பித்தனர்.
அந்த தலைவன் எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்து விடும் நோக்கோடு,
“இதோ பாரு அதர்வா எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்” என வெள்ளைக் கொடியை பறக்கவிட,
அவன் கண்களை நேராக பார்த்துக் கொண்டே தன் பேன்ட் பாக்கெட்டில் இருகைகளையும் நுழைத்துக் கொண்டு அழுத்தமான காலடியோடு அவனை நெருங்கினான் அதர்வா,
பயத்தில் அவனுக்கு வேர்த்துக் கொட்ட, உதட்டின் ஓரத்தில் தோன்றிய லேசான சிரிப்புடன், “எனக்கு எப்பவுமே தீர்த்துட்டு பேசுறது தான் வழக்கம்” என கூறியவனின் கண்களில் இருந்த வெறியைக் கண்டு அவர் இரண்டு அடி பின்னால் எட்டு வைக்க,
அப்போது தன் பின்னால் குத்த வந்த ஒரு தடியனை கையை மடக்கி முன்னால் இழுத்தவன், தன் முட்டியால் அவன் அடிவயிற்றில் பலமாக முட்டி அவனை சட்டையை பிடித்து அப்படியே தூக்கி அந்த தலைவனின் காலடியில் வீசினான் அதர்வா.
நொடிப்பொழுதில் நடந்துவிட்ட இந்த நிகழ்வை நம்பமுடியாமல் அனைவரும் திகைத்து நிற்க, கீழே விழுந்து கிடந்தவனின் முனகலில் நினைவிற்கு வந்து மீத மிருந்தவர்கள் அவனை தாக்கப்போக,
தன் கழுத்திற்கு மிக அருகே வந்து கொண்டிருந்த கத்தியைக் கண்டு தலையை பின்னால் சாய்த்து அதிலிருந்து தப்பித்த அதர்வா, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை சரியாக குறிபார்த்து சுட்டான்.
தன் கையைப் பிடித்துக் கொண்டு போராடிய இருவரையும் தன் ஒரு கை, மற்றும் கால்களை பயன்படுத்தி அடித்து துவம்சம் செய்தவன், இன்னொரு கையால் அங்கிருந்தவர்களை சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடத்தில் அந்த இடமே இரத்த வெள்ளத்தில் காட்சி அளிக்க, மொத்தம் எத்தனை சடலங்கள் கிடக்கின்றன என கண்காளாலே எண்ணியவன், 14இல் ஒன்று குறைவது கண்டு தன் கண்களை சுழலவிட,
அதுவரையில் அங்கு நடப்பதை ஏதோ தெலுங்கு பட ஃபைட் சீன் போல் பார்த்துக் கொண்டிருந்த உளவாளி, அவன் தன்னைத் தான் தேடுகிறான் என்று புரிந்த அடுத்த நிமிடமே அவன் காலில் வந்து சாஷ்டாங்கமாக விழுந்திருந்தான்.
“சார் நான் பாவம் சார் என்னை விட்டிருங்க சார்.. நிஜமாவே நான் ஒன்னுமே பண்ணலை சார்.. இவங்களுக்கு வெளிய ஹடக்குறதை தெரிஞ்சுட்டு வந்து மட்டும் சொல்லுவேன் சார்.. இனிமேல் அது கூட சொல்ல மாட்டேன் சார்.. என்னை விட்டுருங்க சார்” என அவனின் காலைக் கட்டிக் கொண்டு கதற,
தன் காலை அவனிடமிருந்து பிரித்து எடுத்தவன், அவன் சட்டையை பிடித்து மேலே தூக்கி,
அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டே நடந்தவன், “என்ன தம்பி நான் வரேன்னு உனக்கு முன்னாடியே நியூஸ் கொடுத்த அந்த இன்ஸ்பெக்டர், என்னோட என்கவுன்டர் லிஸ்ட்ல உன் பேர் தான் முதல்ல இருக்குன்னு சொல்லாம விட்டுட்டாரா.. ஹய்யோ பாவம்” என அவனுக்காக பரிதாபப்படுபவன் போல் நடித்தவன் அவனைச் சுற்றி போட்டிருந்த கையில் வைத்திருந்த துப்பாக்கியை அவன் இதயத்தில் வைத்து ட்ரிக்கரை அழுத்தியிருந்தான்.
இரத்தம் பீறிட திறந்த வாயுடன் அந்த உளவாளி அப்படியே மல்லாக்க சரிய, அனைவரையும் பார்த்து ஒரு திருப்தியான புன்னகையை சிந்தியவன்,
தன் பாக்கெட்டில் வைத்திருந்த கருப்பு கூலர்ஸை ஒற்றைக்கையில் ஸ்டைலாக எடுத்து மாட்டிக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.
அதர்வநவ்தீபன் நேர்மையான ஐபிஎஸ் ஆபிசர், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என மக்களால் செல்லப்பெயரோடு அழைக்கப்படுபவன்.. தன் வேலையில் சேர்ந்த இந்த் ஆறு வருடங்களில் 40 முறை ட்ரான்ஸ்ஃபர் வாங்கிய ஒரே அதிகாரி இவன் தான்.
இப்போது கூட மும்பையிலிருந்து நாளை சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி செல்ல இருப்பதற்கு முன் தன் கடைசி வேலையாக, தனக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கி கொடுத்தவர்களுக்கு பரிசாக ப்ரீயாக அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு தன் பயணத்தை தொடங்க கிளம்பிவிட்டான் அந்த ஆறடி ஆண்மகன்.
“பத்து என்ன நேத்து நைட் செம கலெக்ஷனாமே எங்களுக்கும் கொஞ்சம் பார்த்து செய்யுறது” என வாயில் ப்ரஷை வைத்துக் கொண்டே கோணலான சிரிப்புடன் கோபாலு கேட்க,
தன் கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்து சோகமாக உட்கார்ந்திருந்த பத்மா அருகே தன்னைக் கண்டு வாயை மூடிக்கொண்டு நகைத்துக் கொண்டிருந்த அபிஷேக்கின் தலையில் தட்டியவள், “இவனுக்கு எப்படி டா மேட்டர் தெரிஞ்சுச்சு.. உண்மையை சொல்லு நீ தான சொன்ன” என மிரட்ட,
“ஆமா ஏதோ தெலுங்கு படத்துல வர மாதிரி பில்ட் அப் குடுத்து என்னை மரம் ஏற விட்டு கூட்டிட்டு போய் கடைசில கவரிங்க் நகையை அடிச்சுட்டு வந்தா எரியுமா எரியாதா??? அதான் குடிச்சுட்டு இருக்கப்போ உளறிட்டேன்” என அபிஷேக் கூற,
அவளும் அதை நினைத்து தான் வருந்திக் கொண்டு இருந்ததால் வேறெதுவும் பேசாமல் இருக்க, மீண்டும் “இப்போ குடுப்பியா குடுக்க மாட்டியா பத்து.. எங்காத்தா வேற நாளைக்கு ஏதோ கல்யாணத்துக்கு போய் செயின் அறுக்க போவுது..நீ அடிச்சுட்டு வந்த செயினை கொடுத்தா அது கெத்தா போட்டுட்டு போய்ட்டு வரும்ல” என கோபாலு ராகம் பாட,
அங்கிருந்த கல்லை எடுத்து அவன் காலிலே எரிந்த பத்மா, “டேய் டோமர் தலையா... மரியாதையா ஓடிப்போயிறு என் கையால அடிவாங்கி சாவாத” என எச்சரிக்க,
“ஒரு நகையை ஒழுங்கா அடிக்க துப்பில்லை.. சும்மா என்னையை போட வந்துட்டா “என அவன் கிண்டல் செய்து கொண்டே அங்கிருந்து நகர, பத்மாவிற்கு அவமானமாக இருந்தது.
சரேலென்று எழுந்தவள்,
“டேய் குண்டா இங்க வா டா..இன்னைக்கு நான் ப்ளேட் போட்டு அந்த கோவாலோட ஆத்தா அந்த செயின் சரோஜாவை விட துட்டு அதிகமா அள்ளிட்டு வரலை என் பேர் பிக்பாக்கெட் பத்மா இல்லை... கெளம்பு டா” என சவாலிட்டவள் வேகமாக அங்கிருந்து நகர,
“இதுக்கு வேற வேலையே இல்லை.. இப்போ எந்த பிஞ்சு போன பர்ஸை அடிச்சுட்டு வரப் போறாளோ... எல்லாம் என் தலையெழுத்து இது கூட சுத்த வேண்டியதா இருக்கு” என புலம்பிக் கொண்டே அவள் பின்னால் சென்றான்.
இருவரும் நேராக சென்றது சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு, அங்கிருந்த கூட்ட நெரிசலைக் கண்டு இருவரும் சில்மிஷமான புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.
“டேய் நான் ஈசியா ப்ளேட் போட்டு அடிச்சுட்டு வந்துருவேன்... நீ குழந்தைங்க கையில இருக்க முட்டை பப்ஸை பிடுங்கி தின்னு எங்கேயும் மாட்டிக்காத ஓகே வா.. ஒன்னும் அடிக்க முடியலைனா ப்ளாட்பாரத்துல கம்முனு உட்கார்ந்திரு.. நான் சீக்கிரம் முடிச்சுட்டு வந்துருறேன்” என அவள் சீரியசாக கூற,
“வாட் ஆர் யூ டாக்கிங் நான்சென்ஸ்.. நான் உன்னை மாதிரி சில்லரை தனமாலாம் அடிக்க மாட்டேன்.. ஒன்லி பல்க் தான்.. இப்போ எப்படி முடிச்சுட்டு வரேன்னு வெய்ட் அன்ட் வாட்ச்” என ஸ்டைலாக கூறிய அபிஷேக், தன் கையில் இருந்த பத்து ரூபாய் கலர் கண்ணாடியை சுழற்றியபடியே விலகிச் செல்ல,
“எங்கேயும் அடி வாங்காம வந்தா சரி” என நினைத்தவள் அந்த கூட்டத்திற்குள் புகுந்து தன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தாள்.
பிக்பாக்கெட் அடிப்பதில் பெயர் போன பத்மாவிற்கு இது மிகவும் சுலபமாக இருக்க அரை மணி நேரத்தில் பதினைந்து பர்ஸ்களை அடித்துக் கொண்டு வந்தவள் அபிஷேக்கை தேட, அவன் ப்ளாட்பாரத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தான்.
‘இந்த லூசு என்ன பண்ணுது’ என அவன் அருகே சென்று தோளைத் தொட, “எவன் டா அவன் முதுகை சொரண்டுறது” என திரும்பி பார்க்க, பத்மாவைக் கண்டு, “ஓ நீயா என்ன எத்தனை கிழிஞ்ச பர்ஸ் பொறுக்கிட்டு வந்த” என எள்ளலாக கேட்டான்.
“நான் வரது இருக்கட்டும் நீ எதுக்கு இங்க அரகேற்றம் பண்ணிகிட்டு இருக்க?? வா கிளம்பலாம் லேட் ஆச்சு..அந்த சோத்துமூட்டைங்க(போலீஸ்) அப்பறம் மாமூல் கேட்க வந்துருவானுங்க” என அவனை இழுக்க,
“ஹேய் நான் ஒரு பெரிய பார்ட்டியை புடிச்சு வச்சிருக்கேன்... அவன் பெட்டியை ரொம்ப நேரமா பொத்தி பொத்தி வச்சுக்குன்னு இருக்கான் அதை அடிக்க தான் ப்ளான் போட்டுட்டு இருக்கேன் பொறு” என அவன் கூற,
கடுப்பான பத்மா, “ஆள் யாருனு சொல்லித்தொலை டா” என கேட்க, அவன் தூரத்தில் நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒரு சேட்டு பையனை நோக்கி அவன் கையைக் காண்பித்து,
“நல்லா பனைமரத்துல பாதி வளர்ந்து நிக்கிறான்ல அவன் தான்” என கூற,
அவளோ அவனுக்கு பின்னால் அவனை விட வாட்ட சாட்டமாக இருந்த அதர்வாவை தான் காண்பிக்கிறான் என தவறாக புரிந்து கொண்டு,
“சரி என் கூடவே வா.. நான் அப்படியே நைசா அடிச்சுட்டு வரேன்.. எஸ் ஆய்ரலாம்” என கூறியவள் அவனை நோக்கி முன்னேறினாள்.
அன்று தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்தவன் அப்போது வந்திருந்த ட்ரையினிலிருந்து இறங்கி சென்னையில் உள்ள தன் நண்பன் விஷ்ணுவிற்கு அழைத்து தான் வந்ததை தெரிவித்து விட்டு அவன் எங்கே என விசாரித்துக் கொண்டிருந்தான் அதர்வா.
என்ன தான் போனில் உரையாடிக் கொண்டிருந்தாலும் கண்கள் நாலா பக்கமும் சுழன்று ஆராய்ச்சி பார்வையை வீசிக் கொண்டிருக்க, தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த பத்மாவையும், அவள் பின்னால் வந்து கொண்டிருந்த அபிஷேக்கையும் கண்டு அவன் புருவ மத்தியில் முடிச்சுகள் விழுந்தது.
இதற்கு முன் அவர்களை எங்கோ பார்த்தது போல் தோன்ற எங்கே என தன் நினைவடுக்குகளில் தேட ஆரம்பித்தான்.
அந்த சேட் பையனை பத்மா தாண்டி நடக்க, “ஹேய் நான் சொன்னது இந்த வீங்கிப் போன மூஞ்சிக்காரனை.. நீ எங்க டி தாண்டி போற” என அபிஷேக் கத்தி விட,
அதற்குள் அதர்வாவின் அருகில் நெருங்கியிருந்த பத்மா நொடி நேரத்தில் அவன் கைகளில் தன் கையில் வைத்திருந்த ப்ளேடை வைத்து கோடு போட முயற்சித்த சமயம் சுதாகரித்த அவன் அவள் கையை எட்டி பிடித்தான். அவளோ பயத்தில் பிளேடை கீழே போட்டு விட்டு கையை உதற முன்னமே அவளது கையை அவன் விட்டிருந்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவள் ஓட, அவள் பின்னால் வேறு வழியில்லாமல் அபிஷேக்கும் ஓடினான்.
அவள் கையை பிடிக்கும் போது உண்டான இனம் புரியாத சிலிர்ப்பை உணர்ந்தவன் ஒரு கணம் அதிர்ந்து தான் போனான். “என்னாச்சு எனக்கு?” என்று தன்னை தானே கேட்டபடி தலையை உலுக்கி தன்னை சமநிலைப்படுத்தியவனுக்கு, இவர்கள் இருவரையும் சென்னைக்கு வந்த போது விஷ்ணுவின் ஸ்டேஷனில் உள்ள குற்றவாளி பட்டியலில் பார்த்தது நினைவு வந்து விட, தனது கவலையீனத்தை நினைத்து தன் மேல் கொண்ட கோபம் அவர்கள் இருவர் மேலும் திரும்ப அவனுக்கு கை முஷ்டிகள் இறுகியது.
வேகமாக அவன் அவளை பின் தொடர்ந்து போய், அந்த கூட்ட நெரிசலுக்குள் ஒரு வழியாக அவளை நெருங்கியவன் அவள் கழுத்தில் இருந்த செயினைப் பற்றி இழுக்க, அது கையோடு வந்துவிட்டது.
ஒரு நொடி நின்று அவனை திரும்பி பார்த்தவள், பின் இப்போது அவனிடம் இருந்து தப்பிச் செல்வதே முக்கியமாக பட, அவ்விடம் விட்டு மின்னலென அந்த கூட்டத்திற்குள் புகுந்து மறைந்திருந்தாள்.
அதன் பின் அதர்வா எங்கு தேடியும் அவள் கிடைக்காமல் போக, தன் கையில் இருந்த அவளின் செயினை வெறித்து பார்த்தான்.
தேடல் தொடங்கும்!!!