பகுதி 3
சித்தார்த் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நாள் சத்யாவும் மனோவும் அலுவலக கேன்டீனில் காப்பிக் கோப்பையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். தன் முன் இருந்த கோப்பையைக் கையில் எடுத்தபடி மனோவைப் பார்த்த சத்யா, “மனோ.. யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுவாயா? இதெல்லாம் பொய்யாக இருக்கலாமே!”
“இப்படி பொய்க்கதை பரப்புவதில் யாருக்கு என்ன லாபம் சத்யா?”
“சரி. அதைவிடு.இன்று எங்கள் டிபார்ட்மெண்டில் இருந்து மூன்று பேர் போய் சித்தார்த் சாரைப் பார்க்கப் போகிறோம்.. நீயும் வருகிறாயா?”
மறுப்பாக தலையசைத்தவளைப் பார்த்தவள், “ ஏன் மனோ?’ என்றாள்.
“அது.. நான் அங்கே வந்து சித்தார்த் சாரைப் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை சத்யா… அதுதான் பயமாக இருக்கின்றது” என்று பரிதாபமான பார்வையோடு சொன்னவள், ஒரு சிறு அமைதியின் பின், “இன்று முக்கியமான மீட்டிங் ஒன்று வேறு இருக்கின்றது.” என்று முடித்தாள்.
இவளை எந்த வகையில் சேர்ப்பதென்று சத்யாவுக்குத் தெரியவில்லை. காதலிக்கிறேன். என்று சொல்பவள், மருத்துவமனையில் போய் இன்னும் சித்தார்த்தைப் பார்க்கவேயில்லை. தனக்கே செய்தி தெரிந்ததும் பதறித் கொண்டுவர, எப்பொழுது பார்வையாளர்கள் அனுமதி தருவார்கள் என்று உலகநாதன் சாரிடம் விசாரித்து ஏற்கனவே ஒருமுறை போய் பார்த்து வந்து விட்டாள். இப்பொழுது தன் துறையின் சார்பாக மூன்று பேர் போவதாக முடிவு செய்ய அதற்கும் பெயர் கொடுத்திருக்கிறாள். இவளானால் மீட்டிங் இருக்கிறது என்கிறாள்.
ம்ஹூம்.. பாவம். தான் காதலிக்கும் ஒருவன் வேறு பெண்ணுக்காக உயிரையே கொடுக்க முனைந்திருக்கிறான் என்பதை யாரால் சாதரணமாக ஏற்றுக் கொள்ள முடியும். இவள் சொல்வது போல் அங்கே அழுது விட்டால் நன்றாக இருக்காதுதான். அதற்காகப் பார்க்க போகாமலே இருக்க முடியுமா?
அடுத்து வந்த இரண்டு வேலை நாட்களும் சோகமாகவே வளைய வந்த மனோ, விடுமுறை நாட்களிலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார அவளைப் பெற்றவர்களுக்குப் பொறுமை குறைந்தது.
கணேசன்- பூர்ணிமா மனோகரின் தந்தை தாய். இரண்டு தம்பிகள் 22 வயதில் செழியன். 19 வயதில் காவியன். பெயரை வைத்தே கண்டுபிடித்துவிட்டீர்கள்தானே!.. ஆம் கணேசன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். மாணவ மாணவியருடன் பல வருடங்கள் கழித்தவர், குழந்தை வளர்ப்பு பற்றி கூறும் முக்கிய வழிகாட்டுதல், பிள்ளைகளுக்கு பெற்றோரிடமிருந்து தோழமையும், கண்டிப்பும் சரிசமமாய்க் கிடைக்க வேண்டும் என்பதைத்தான்.. அந்த கொள்கையை வீட்டிலும் பின்பற்றுவதாய், தோழனாய் அவர் மாற, கண்டிப்பான தாயாக பூர்ணிமா இருந்தார்.
பூர்ணிமா வீட்டின் தலைமை நிர்வாகி. அதிகமாக பேச மாட்டார். ஆனால் பேசினால் மற்றவர்கள் அவரை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.
கணேசன் குடும்ப வகையிலும் சரி, பூர்ணிமாவின் குடும்ப வகையிலும் சரி, ஆண் குழந்தைகளே அதிகமாக இருக்க, வீட்டின் முதல் பெண் வாரிசாக பிறந்த மனோ, எல்லோருக்குமே செல்லப் பெண்.
அதுவும் அவளுடைய குழந்தைப் பருவத்தில் கணேசன், தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூரில் பணிசெய்ய, தாத்தா, பாட்டி, அண்டை வீடுகளில், பெரியப்பா, சித்தப்பா, சித்திகள், மாமாக்கள்,அத்தைகள் என்று சுற்றம் ஏராளம். கால்கள் கீழே படாமல் தூக்கிக் கொண்டு நடப்பதற்கும், பத்து வயது வரை ஊட்டுவதற்கும் யாராவது ஒருவர் இருப்பர்.
அது போல அவள் கேட்க கேட்க கதை சொல்வதற்கும் ஆட்களுக்கு பஞ்சமிருந்ததில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கதைகள் சொல்ல வேண்டும். அதுவும் இந்த பாட்டி வடை சு ட, அந்த வடையைக் காக்கா சுடும் கதை எல்லாம் கேட்கவே மாட்டாள். அரண்மனையில் இருக்கும் இளவரசியை இளவரசன் மீட்டெடுப்பது, சித்தியிடம் மாட்டிக்கொண்டு கஷ்டப்படும் இளவரசியை இளவரசன் கண்டடைவது, விலங்காய் மாறியிருக்கும் இளவரசனை இளவரசி தன் காதலால் காப்பாற்றுவது என்று ஃபேரி டேல்ஸ் தான். மாமா, சித்தப்பா,சித்தி, அத்தை என்று பாரபட்சமில்லாமல் எல்லோரையும் இந்த கதைகளைச் சொல்ல வைத்து, உணவு, பசி, தூக்கம் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள்.என்ன ரசனையோ என்றுதான் பூர்ணிமாவிற்கே கொஞ்சம் கடுப்பாக இருக்கும். வேலை மாற்றலாகி சென்னை வந்த பொழுது கதை கேட்பது நின்றுவிட அத்தோடு பூர்ணிமாவும் அதை விட்டுவிட்டார்.
தன் பதினைந்து வயதில்,
'நிலவை விலகாது நிலத்தோடு கட்டிவைக்கும் ஆற்றலை ஈர்ப்புவிசை என்பேன்..
கடலலைகளைக் கரையோடு கை கோர்க்கச் செய்யும் ஆற்றலை காற்றழுத்தம் என்பாய்..
இதோ என்னை உன்னோடு வந்து சேர்க்கும் ஆற்றலை நாம் காதல் என்போம்',
என்று தன் அறிவியல் அறிவையும் காதலையும் கலந்து கட்டி கவிதை எழுதிய போது கணேசன், ஆகா! ஓகோ! என்று மெச்ச பூர்ணிமா தலையிலடித்துக் கொண்டார்.
பதினெட்டு வயதில் வேலை ஏதும் செய்யாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு பையனோடு ஓரிரு முறை பார்த்ததாக யாரோ சொல்ல, கணேசன் தன் மகளை கூப்பிட்டு விசாரித்தார், “என்னம்மா?” என்றுு.
“என்னப்பா? நல்லா படி என்று அட்வைஸ் பண்ணினேன்? இது எல்லாம் காதலா?’
மகளின் சிறிய கோபம் கலந்த அலட்சியமான பதில் மனதிற்கு நிம்மதியைத் தர, தன் மகளை மேலும் அறிய முற்பட்டவராய், கொஞ்சம் தோண்டினார். “அப்போ.. எதும்மா காதல்?”
“ம்ம்ம்.. ஒரு கவிதை சொல்லவா அப்பா?”
சுவாரஸ்யத்துடன், “ம்.. சொல்லேன்.. “
“கோடை மழையின் மண்வாசம்;
மாலை வேளையின் செவ்வானம்;
பௌர்ணமி நிலவின் கீழ் பொங்கும் கடல் அலை;
பெயர் தெரியாத குழந்தையின் புன்னகை;
இதையெல்லாம் பார்க்கும்போது மனதில் வருமே ஒரு உணர்வு, ஒரு இதம், அந்த உணர்வு, அந்த இதம், அவனைப் பற்றி நினைக்கும்போதே மனதில் தோன்றும். அதுதான் காதல்.”
கண்கள் மின்ன கவிதை சொன்னவளை பார்த்தவர், ‘சரி.. இப்போதைக்கு நம்ம பொண்ணு லவ் பண்ண மாட்டாள்..’ என்று நிம்மதியடைய, பூர்ணிமா அருகில் வந்தார். “கவிதை நல்லா இருக்கு மனும்மா.. ஆனால் நிஜ வாழ்க்கை எப்பொழுதும் இப்படி கவிதை போல இருக்காது..” கண்ட கனவுகள் நிஜத்தில் நடக்கவில்லையேன்றால் தன் மகள் ஏமாறக் கூடாது என்ற தவிப்பு அந்த தாய்க்கு
“என்னமா இப்படி சொல்றீங்க? அப்பாவை பார்க்கும் போது உங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றும் தானே.. அதைத்தான் கவிதையாகச் சொல்கிறேன்.
மகள் பேசியதைக் கேட்டு நமட்டு சிரிப்போடு கணேசன் குனிந்துகொள்ள, அவரைத் திரும்பி பார்த்தார் பூர்ணிமா. ‘அப்படி இதம் எல்லாம் தோன்றாதே.. தொப்பை போட்டிருக்கிறார்.. நான்கு வாரங்களுக்கு பொறித்தது கொடுக்கக் கூடாது.. கண்களைச் சுற்றி கருவளையமிருக்கிறது.. தூக்கம் போதவில்லையோ என்றுதானே தோன்றும். ஆனால் அப்படி தோன்றுவதுதான் உண்மை நேசம் என்று இந்தப் பெண்ணுக்கு எப்படி புரிய வைப்பது.. “சின்னப் பெண் தானே பூர்ணி.. இந்த வயதில் இப்படித்தான் தோன்றும். வயது ஏற ஏற, புரிந்து கொள்வாள்”, கணேசன் தான் பூர்ணிமாவைச் சமாதானப்படுத்தினார்..
கல்லூரி காலம் சுமூகமாகச் செல்ல வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிய நிலையில் ஒரு வாரமாக ஏதோ சிந்தனையிலேயே இருந்த மனோ, ஒரு நாள் தன் தந்தை தாயிடம் வந்து, “அப்பா! நான் ஒருவரை விரும்புகிறேன்..” என்றாள்.
சோபாவின் அருகில் அமர்ந்து பரீட்சை பேப்பர் திருத்திக் கொண்டிருந்த கணேசனும், , காய்கறி அரிந்து கொண்டிருந்த பூர்ணிமாவும், தாங்கள் செய்த வேலையை அப்படியே நிறுத்தி நிமிர்ந்து பார்த்தனர். “என்னம்மா சொல்ற?”
அவர்களுக்கு எதிரே இருந்த சோபா இருக்கையில் அமர்ந்து, அவர்கள் முகம் பார்த்து சொன்னாள், “இப்போ செய்கிற வேலையை விட்டு விட்டு அவருடைய கம்பெனியில் வேலைக்கு சேரலாம் என்று இருக்கிறேன்.”
பூர்ணிமா கணவனைப் பார்க்க, கணேசன், “என்ன மனோம்மா! தெளிவாகச் சொல்லு.. யார் பையன்? உனக்கு எப்படி தெரியும்? என்ன வேலை செய்கிறான்?”
“ பெயர் சித்தார்த்; என் காலேஜ் சீனியர்”.
“காலேஜ் சீனியரா? நீ படித்து முடித்து, மூன்று வருடங்கள் ஆகி விட்டதேடி.. இப்போதென்ன திடீரென்று?”
“நான் அவரைப் பார்த்து ஐந்து வருடங்கள் ஆச்சும்மா.. நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் பொழுது அவர் ஃபைனல் இயர் படித்தார். அதற்குப்பின் யு.எஸ் போய் எம் பி ஏ படித்தவர், அங்கேயே வேலை பார்த்திருக்கிறார். சென்னை வந்து சில வாரங்கள்தான் ஆகிறதாம். இப்பொழுதுதான் கம்பெனியில் பொறுப்பெடுத்திருக்கிறார்..”
“ஆனால் இதை என்னிடம் சொல்லவே இல்லையே!” தோழியாய் நினைத்து பழகிய தன் மகள், தன்னிடம் கூட சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு.
“ என்ன சொல்லவில்லை?”, புரியாது பார்த்த மகளிடம், “நீங்கள்..” என்று ஆரம்பித்தவர், அத்தனை சகஜமாய் லவ் என்றெல்லாம் சொல்ல வராததால்,, சற்று நிறுத்தி, “நீங்க விரும்புறீங்க என்று காலேஜ் படிக்கும் போது என்னிடம் சொல்லவே இல்லையே?.
“ ‘நாங்க’ எல்லாம் விரும்பவில்லை அப்பா..”
“பின்னே?”
“நான் தான் காலேஜ் படிக்கும் போது அவரை விரும்பினேன். ஒரு க்ரஷ்!”
“ என்னது?..” இது பூர்ணிமா.
“க்ரஷ்மா.. க்ரஷ். அதாவது எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் அவருக்கு என்னைப் பிடிக்காது. சரியாகச் சொல்வதானால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்றே அவருக்குத் தெரியாது.”
மகளை முறைக்க ஆரம்பித்த மனைவியைப் பார்த்து பயந்து, “சரி.. இத்தனை நாள் கழித்து இப்போ என்னம்மா?” என்றார்.
“போன வாரம் ஃப்ரெண்சோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, சத்யா சொன்னாப்பா. சத்யா வேலை பார்க்கும் கம்பெனியே அவருடையதாம். அமெரிக்காவிலிருந்து வந்தவர் இப்போதுதான் நிர்வாகத்தில் பொறுப்பெடுத்திருக்கிறாராம். சத்யாவை அடையாளம் கண்டு விசாரித்தாராம். என்னைப் பற்றியும் விசாரித்திருக்கிறார். இதைக் கேட்டதிலிருந்து எனக்கு ஒரே யோசனை”. அப்பொழுதும் யோசிப்பது போல் மேற்கூரையைப் பார்த்தவள் சொன்னாள், “எங்களுக்குள் ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிணைப்பு இருக்கிறது. அதனால்தானே இத்தனை வருடங்கள் கழித்து அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.”
அப்போது மட்டும் சரியான நேரத்தில் கணேசன் பூர்ணிமாவின் கைகளைப் பிடித்திருக்காவிட்டால், மனோவின் தலையில் நச்சென்று ஒரு கொட்டு விழுந்திருக்கும்.
“மனோ.. அதற்காக செய்கின்ற வேலையை விட்டுவிட்டு போவதா?”
“ஆமாம்ப்பா.. எனக்கும் அதுதான் குழப்பமாக இருக்கிறது. அதற்காகத்தான் இப்பொழுது ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.”
மனைவியின் விரல்களை கெட்டியாக பற்றியவாறு, “என்ன?” என்றவரிடம் “இன்டர்வியூ அட்டன் பண்ணுகிறேன்பா.. வேலை கிடைத்தது என்றால் நிஜமாகவே எங்களுக்கு சந்திக்கணும் என்று இருக்கிறது என்று நினைத்து வேலையில் சேர்கிறேன்.. எப்படி என் ஐடியா?”
“ எப்போ இன்டர்வியூ?” அதுவரை மகளை முறைத்துக் கொண்டிருந்த பூர்ணிமா, தற்பொழுது திரும்பி, கணவனை முறைக்க ஆரம்பிக்க, “இன்னும் 2 வாரங்கள் இருக்கிறதுப்பா..”
“சரி.. அதற்குள் பையனை பற்றி விசாரிக்கிறேன்.. நான் சரி சொன்னால்தான், நீ அடுத்து உன் விருப்பப்படி செய்யலாம். ஓகேவா? ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால், ‘நோ’ சொல்லி விடுவேன்.
“ஓகேப்பா.. ஆனால் அந்த மாதிரி பழக்கம் இருந்தால், நீங்க கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னால் கூட, நான் ‘நோ’ சொல்லி விடுவேன்” என்று சொல்லி, காய்ந்து கொண்டிருந்த தன் தாயின் வயிற்றில் கொஞ்சமாய் பாலை பார்த்து விட்டு அவள் எழுந்து செல்ல, கணேசன் பூர்ணிமாவை ஒப்பொழுதும்போல் சமாதானப்படுத்தினார். “அவள் குழப்பத்தோடு இருக்கிறாள் பூர்ணி.. இப்போது நீ வேண்டாம் என்று மறுத்தால், அதற்காக வாதிட்டு குழப்பம் தெளியாமலேயே, கொண்ட எண்ணம் உறுதியாகி விடும். போய் பார்க்கட்டும்.. மனோ அறிவான பொண்ணுதான்..”
ஆனால் நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்கு சேர்ந்த பெண் ஏதோ அவள் படித்ததே இங்கு வேலை செய்வதற்குத் தான் போல ஆர்வத்துடன் வேலை செய்ய பெற்றோருக்கு அத்தனை கவலை இல்லை. அதுவும் அவளது மென்பொருள் துறை என்பதால், ஆட்டோமொபைல் பற்றி யாராவது பேசினால் சரியாகப் புரியவில்லை என்று அதற்கான புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்கும் மகளைப் பார்க்கையில் அவள் ஏன் இந்த வேலைக்குச் சேர்ந்தாள் என்பதை மறந்தது போலவே தோன்றியது.
அப்படி வேலை செய்த பெண் திடீரென்று ஒரு நாள் வந்து சித்தார்த் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு வாரமாக சோகமே உருவாக வளைய வர, கணேசனும் பூர்ணிமாவும் ஒரு சின்ன ஆலோசனைக் கூட்டம் போட்டு பேசி, அதன் முடிவாக கணேசன் மனோவின் அருகில் போய் அமர்ந்தார்.
“ மனோ.. ஏன்மா.. ஏன் இப்படி இருக்கிறாய்?”
“அப்பா!”
“சரி.. நடந்ததை விடு.. எதனால் அப்படி செய்தானோ? இப்பொழுது நன்றாகத்தானே இருக்கிறான். “
“அப்பா.. அவருக்குக் காதல் தோல்வியாம். அவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாம். அதில் மனமுடைந்து தான் இந்த தற்கொலை முயற்சியாம்.”
சோஃபாவில் முழங்கால் இரண்டையும் மடக்கி கைகளைக் கட்டி, குனிந்தபடி மனோ எந்த உணர்ச்சியுமற்ற குரலில் ஒரே சீராய்ச் சொல்ல கணேசனுக்கு அதிர்ச்சி. இங்கே ஒரு காதை வைத்தபடி சற்று தள்ளி நின்று துணி மடித்துக் கொண்டிருந்த தன் மனைவியிடம் ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு தன் மகளைப் பார்த்தவர், என்ன சொல்வதென்று தெரியாமல் அப்போதைக்கு அவளைத் தேற்றும் விதமாக, “எதனால் என்றால் என்னம்மா?இப்பொழுது சித்தார்த் நன்றாக இருக்கிறானே.. நீ கவலைப்படாமல் இரும்மா..”
“அப்பா.. உங்களுக்கு என்னை புரிகிறதா அப்பா.. என் வேலையை விட்டுவிட்டு ஒரு வருடமாக இங்கு வேலை செய்கிறேன். அவர் என்னை விரும்பவில்லை என்பதிருக்கட்டும். அவருக்கு மற்றோரு காதல் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியவில்லை யே. அப்போ இது எல்லாம் வீண்தானே?”
“மனோ உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை.. நீ ஒரு வருடம் அவனுக்காக மட்டும் தான் வேலைக்குப் போனாயா,. இல்லையே.. ஆர்வத்துடன் வேலை செய்தாய்.. மாதம் சம்பளம் பெற்றாய்.. நிச்சயம் நிறைய கற்றிருக்கிறாய். அப்புறம் எப்படி இந்த ஒரு வருடம் வீணானது ஆகும்?”
“இல்லைப்பா.. இன்னும் சில மாதங்களில் என் பழைய கம்பெனியில் என்னை ஆன்சைட் அனுப்புவதாக இருந்தார்கள். அதையெல்லாம் விட்டு வந்தேன். எல்லாமே வீண்..”
சோபாவின் மற்றொரு முனையில் அமர்ந்து கைப்பேசியில் நோண்டிக் கொண்டிருந்த காவ்யன் தன் தமக்கையிடம் திரும்பி, “அக்கா.. உன் பிரச்சினை என்ன? சித்தார்த் சார் தற்கொலை முயற்சி செய்தார் என்பதா? நீ ஆன்சைட் போகவில்லை என்பதா?
பக்கவாட்டில் திரும்பி தம்பியை முறைத்து, “ போடா ஸ்டுபிட்!” என்று சொல்லி மீண்டும் குனிந்த, தன் மகளைப் பார்த்தார் கணேசன். இன்னும் எத்தனை நாள் நடந்ததையே எண்ணி கவலைப்படப் போகிறாள்!
ஒரு முடிவுக்கு வந்தவராய், “நீ பேசாமல் இந்த வேலையை விட்டு விடம்மா.. தொடர்ந்து இங்கேயே வேலை பார்த்து கொண்டிருந்தால், இப்படி எதையாவது எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாய்..”
“வேலையை விடுவதா? அப்பா! நான் இருப்பது முக்கியமான ப்ராஜெக்ட்டில். இப்போது வேலையை விட்டால் ஆதி சாருக்கு கஷ்டம்பா..”
“நீ லவ் பண்ணுவது அந்த ஆதியையா? இல்லை சித்தார்த்தையா?” மறுபடியும் கைப்பேசியிலிருந்து தலையை நிமிர்த்தி இதைக் கேட்க, “.
“அப்பா.. இவனைப் பாருங்கப்பா!”
கணேசன் தன் மகனைப் பார்த்து, “நீ சும்மா இரேன்டா!” என்று சொல்ல, அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“ஏன் என்னிடம் கோபப்படுகிறீர்கள்? நீங்களும் அம்மாவும் கூட இரண்டு வாரங்களுக்கு முன்னால், இவள் அந்த ஆதி புராணம் பாடிய பொழுது பேசினீர்களே.. இவள் அந்த ஆதிக்காக வேலைக்கு சேர்ந்தாளா.. இல்லை சித்தார்த்திற்காக வேலைக்கு சேர்ந்தாளா என்று சமயத்தில் சந்தேகமாக இருக்கிறதென்று..”
மனோ நம்பமுடியாதவளாய் தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க, பூர்ணிமா இடையிட்டார், “டேய். நடு வீட்ல உட்கார்ந்து என்ன பேச்சுடா இது.. எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம்.. ஃப்ரெண்டாகப் பழகுகிறேன், ஃப்ரெண்டாகப் பழகுகிறேன் என்று சொல்லி எப்படி பேசுகிறான் பாருங்கள்… போங்க.. போய் வேலையைப் பாருங்கள்..” ஆபத்பாந்தவனாய் தன்னை சரியான சமயத்தில் வந்து காத்த தன் மனைவிக்கு கண்களால் நன்றி சொன்னவர், மறுவார்த்தை பேசாது கிளம்பினார். எழுந்து செல்லும் தன் தந்தையையேப் பார்த்து கொண்டிருந்த மனோ அடுத்த நாள் தன் ராஜினாமா கடிதத்தோடு அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.